ஞாயிறு, 22 மார்ச், 2015

ஆயுள் காப்பீடு - இன்னும் கொஞ்சம்

ஆமாம், ஒரு லட்ச ரூபாய் மாத வருமானத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யவேண்டும் என்றால், அதற்கான ப்ரீமியம் எவ்வளவு இருக்கும் ?
உங்கள் வயது முப்பத்தி ஐந்து என்றால், நீங்கள் காப்பீடு செய்யும் காலம் முப்பது வருடங்கள் என்றால் நீங்கள் செலுத்தும் தொகை வருடம் ஒன்றுக்கு ஏறத்தாழ ஐந்து லட்சம் வரை வரும்.

வருட வருமானம்               : பனிரெண்டு லட்சம்
உங்கள் செலவு                    : முன்றரை லட்சம்
காப்பீடுக்கான தொகை     : ஐந்து லட்சம்.

சம்பாதிக்கும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு, காப்பீடு செய்ய என்று எடுத்து வைத்துவிட்டால் அப்புறம் எப்படி மற்றச் செலவுகளைச் செய்ய ? கணக்கு இடிக்கிறது இல்லையா. இதைச் சற்றே ஒரு பக்கமாக வைத்து விட்டு காப்பீடு நிறுவனங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

பலரிடம் இருந்து பணம் பெற்று, சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடு செய்வதுதான் காப்பீடு நிறுவனங்களின் வேலை என்று முன்னர் பார்த்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த சேவையைச் செய்ய காப்பீடு நிறுவனங்கள் ஆள்களை வேலைக்கு வைக்க வேண்டும், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், அதற்கான அலுவலகம், அதற்கான வாடகை, மற்றச் செலவுகள் இவை எல்லாம் இருக்கிறது அல்லவா. இந்தச் செலவுகளை அந்த நிறுவனம் எவ்வாறு ஈடுகட்டும் ? அந்தச் செலவுகளையும் நாம்தான் கொடுக்கிறோம்.

இருபது வருடங்கள் நீங்கள் பணம் கட்டினால், அந்தக் காலம் முடிந்தபின் நீங்கள் கட்டிய பணம் வட்டியோடு திரும்பி வரும் என்றுதானே காப்பீடு நிறுவனத்தின் முகவர்கள் உங்களுக்கு சொல்லிருக்கிறார். உங்களுக்கு மீண்டும் திரும்பி வரும் அந்தப் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா ?

இருபது வருடங்களுக்கு நீங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு காப்பீடு செய்து கொண்டால், நீங்கள் வருடம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய்க்குக் குறைவாகத்தானே பணம் கட்ட வேண்டி இருக்கும். நீங்கள் வருடாவருடம் அளிக்கும் பணத்திற்கு வட்டியைக் கணக்கிட்டால் நீங்கள் செலுத்தும் தொகை இன்னும் குறைவாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் செலுத்தும் தொகை அதிகமாகத்தானே இருக்கிறது. அது ஏன் ?

இங்கேதான் நீங்கள் காப்பீடு நிறுவனங்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் கட்டும் ப்ரீமியம் தொகை மூன்று பிரிவுகளைக் கொண்டது.

1. காப்பீடுக்கான தொகை
2. நிறுவனத்தின் செலவுகளுக்கான தொகை
3. முதலீடு செய்யப்படும் தொகை.

யாரோ சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை இந்தக் காப்பீடுக்கான தொகையில் இருந்தே நிறுவனங்கள் திருப்பித் தருகின்றன. நிறுவனத்தின் செலவுகள் அதற்காக  ஒதுக்கப் படும் தொகையில் இருந்து செய்யப்படுகிறது.

முதலீடு செய்வதற்காக ஒதுக்கப் படும் தொகையும் அந்த முதலீட்டினால் கிடைக்கும் வருவாயும்தான் காப்பீடு முதிவடையும்போது வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்கப் படுகிறது. பொருளாதார பயன்பாடு உள்ள ஒரு பொருளுக்கு எந்த வகையில் எல்லாம் இழப்பு வரலாம் என்பதை கணித முறையில் கணிக்கும் வல்லுனர்கள் எந்த அளவு பணம் பெற்றுக் கொண்டால் இழப்பை ஈடுகட்டி, வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட கால முடிவில் பணம் திருப்பித் தரமுடியும் என்பதை முடிவு செய்கிறார்கள். இந்த வல்லுனர்களுக்கு அக்சோரியல்கள்  என்று பெயர். மிக அதிகமான வருமானம் தரும் துறைகளில் இதுவும் ஓன்று.

நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை என்றால்
காப்பீடு என்பது எதிர்பாராமல் ஏற்ப்படும் இழப்பை ஈடுசெய்ய மட்டுமே தவிர காப்பீடு என்பது சேமிப்புக்கான வழிமுறை இல்லை.

அநேகமாக ஆயுள் காப்பீடு முகவர்கள் பேசாத ஒரு காப்பீடுத் திட்டம் ஓன்று உள்ளது. முழுவதும் இழப்பை மட்டுமே ஈடு கட்டும் திட்டம் அது. ஆங்கிலத்தில் அதனை TERM INSURANCE என்று சொல்லுவார்கள். நான் என் உயிரை குறிப்பிட்ட தொகைக்கு காப்பீடு, குறிப்பிட்ட கால அளவிற்கு காப்பீடு செய்து கொள்ளலாம். அந்தக் குறிப்பிட்ட காலம் வரை நான் ப்ரீமியம் செலுத்தி வர வேண்டும். அந்தக் கால அளவிற்கு உள்ளாக நான் உயிர் இழக்க நேர்ந்தால் காப்பீடு நிறுவனம் அந்தப் பணத்தை நான் ஏற்க்கனவே நியமித்து உள்ள என் உறவினருக்கு அளிக்கும். ஆனால் ஒப்பந்த காலம் தாண்டி நான் உயிரோடு இருந்தால் நான் கட்டிய பணம் எதுவும் எனக்குத் திரும்பிக் கிடைக்காது.


ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அல்லவா ?
சரி நமது வண்டிக்கு வருடாவருடம் காப்பீடு செய்கிறோம், ஏதாவது விபத்து நடந்தால் மட்டும்தானே இழப்பீடு கிடைக்கிறது. இல்லை என்றால் நாம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அடுத்த வருட பிரீமியத்தை கட்டத்தானே செய்கிறோம். அப்போது அதே எண்ணத்தை ஏன் ஆயுள் காப்பீடுக்கும் கொண்டு செலுத்தக் கூடாது ?

இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம் (Life Insurance Corporation of India) உருவாக்கப்பட்ட போது, அதாவது பல ஆயுள் காப்பீடு நிறுவனங்களை தேசியமயமாக்கி ஒன்றாக இணைத்த போது, பொதுமக்களின் சேமிப்பை ஊக்குவித்து, அதை அரசாங்கத்தின் வசம் சேர்த்து, அதனை வைத்து பல்வேறு கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டி இருந்தது. அது போக காப்பீடு செய்துகொண்டவர் இறந்து போனால் அதற்க்கு இழப்பீடு கிடைக்கும் என்பதனை நேரடியாகச் சொல்ல இயலாத நிலை இருந்தது. எனவே ஆயுள் காப்பீடு என்பது ஒரு சிறந்த சேமிப்பாக மட்டுமே மக்களிடம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.

மாதம் ஒன்றிக்கு ஐம்பதாயிரம் தேவைப் படும் ஒரு குடும்பத்திற்கு, அந்தக் குடும்பத்தின் சம்பாதிக்கும் உறுப்பினர் இழப்பால் பத்து லட்சம் ரூபாய் காப்புத்தொகையாகக் கிடைத்தாலும், அந்தப் பணம் அக்குடும்பத்தின் இரண்டு வருடத்தேவையைக் கூட பூர்த்தி செய்யாது.

பொருளாதாரத்தில் சுயசார்ப்பு அடையநினைப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, சரியான அளவில் தங்களைக் காப்பீடு செய்து கொள்வதுதான். இதனை சிறுவயதில் ( முப்பது வயதிற்கு உள்ளாக) செய்து கொண்டால் ப்ரீமியம் தொகை மிகக் குறைவாகவே இருக்கும்.

மற்றைய அசையும் அசையாச் சொத்துகள் போலல்லாது மனித உயிரின் மதிப்பு வயது ஏற ஏறக் கூடும். உங்கள் வருடவருமானதைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்ததுபோல உங்கள் ஆயுள் காப்பீட்டை உயர்த்திக் கொள்ளுங்கள்.

வீடு கட்டுவது போன்ற பெரும் முதலீட்டில், பெரிய அளவு கடன் வாங்கும் போது, அந்தக் கடனின் அளவிற்கு தனியாகக் காப்பீடு செய்து கொள்ளுங்கள். 

சனி, 21 மார்ச், 2015

ஆயுள் காப்பீடு - எது சரியான அளவு ?

ஒரு சமுதாயத்தில் அல்லது  ஒரு குழுவில் உள்ள மிகச் சிலருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை அந்தக் குழுவில், சமுதாயத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்ளும் முறைதான் காப்பீட்டின் உட்கருத்து.

உதாரணமாக ஒரு கிராமத்தில்  நூறு  வீடுகள் இருக்கின்றன என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு வீடும் ஆயிரம் ரூபாய் மதிப்பு உடையவை. எதோ ஒரு காரணத்தால் ஒவ்வொரு  வருடமும் இரண்டு வீடுகள் வசிக்க இயலாமல் போய் விடுகிறது. அந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு என்பது ரூபாய் இரண்டாயிரம். இதனை அந்த நூறு வீட்டின் உரிமையாளர்களும் பகிர்ந்து கொள்வது என்றால் அவர்கள் அனைவரும் இருபது ரூபாய் பங்களிப்பு செய்தால் போதும் அல்லவா. இப்படிதான் காப்பீடு நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல மக்களின் பங்களிப்பைக் கொண்டு சிலருக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டும் பணியே காப்பீடு நிறுவனங்களின் பணி.

மனித வாழ்வில் இரண்டு பிரச்சனைகள் வரலாம்.
                       1. மிகச் சிறிய வயதில் ஒருவர் இறக்கநேரிடலாம்
                       2. மிக அதிகமான ஆயுளோடு ஒருவர் உயிர்வாழலாம்.

முதல் நிலையில் அவரது குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியில் உதவி தேவைப்படலாம். இரண்டாவது நிலையில் அவருக்கே வாழ்க்கையைக் கொண்டு செல்லப் பணம் தேவைப்படலாம். இதற்கு ஆயுள் காப்பீடு எவ்வாறு உதவும் என்பதைப் பார்ப்போம்.

அநேகமாக நம் அனைவருக்கும்  ஒரு இரண்டு சக்கர வண்டியோ இல்லை நான்கு சக்கர வண்டியோ வாங்கிய அனுபவம் இருக்கும். அப்போது அந்த வண்டிக்கு காப்பீடு செய்து இருப்போம். அந்தக் காப்பீடு என்பது அந்த வண்டியின் விற்பனை விலைக்கே செய்வோம்.எந்தப் பொருளுக்கும் அதிகபட்சமான காப்பீடு என்பது அதன் விற்பனை விலைதான்.

அப்படி என்றால் மனித உயிருக்கு விலை என்ன ? அதனை எப்படி நிர்ணயம் செய்வது. இந்தக் கேள்விக்கான பதிலை காப்பீடு செய்யப்படும் மனிதரின் வருமானத்தை வைத்து நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.

நாம் உரிய முறையில் காப்பீடு செய்து கொண்டு இருக்கிறோமா என்பதனை எப்படிக் கண்டுகொள்வது. இதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது.

உதாரணமாக நான் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். இதில் உத்தேசமாக எழுவது சதவிகிதம்தான் என் குடும்பத்திற்கு வந்து சேரும். மீதி உள்ள முப்பது சதவிகிதம் பணம் பொருளீட்ட செலவாகிவிடும். வருமான வரியாகவோ, நான் பணிசெய்யும் நிறுவனத்திற்கு போய் வரும் போக்குவரத்து செலவாகவோ, என் வேலைக்காக நான் அணியும் உடைகள் என்று இந்தப் பணத்தை நான் செலவு செய்து விடுகிறேன்.

ஒரு வேலை நாளை நான் இல்லை என்றால், இந்த எழுவது சதவிகித அளவிலான பணம் என் குடும்பத்திற்கு மாதாமாதம் வரும் என்றால், அவர்கள் பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் இருப்பார்கள் அல்லவா ?

எவ்வளவு ஒரு தொகையை முழுவதும் பாதுகாக்கப் பட்ட முதலீட்டில் இட்டு, அதன் வட்டி வருமானம் இந்த எழுவது சதவிகித வருமானத்தை அளிக்குமோ அந்தத் தொகையே என் உயிரின் மதிப்பாக இருக்க முடியும், அந்த அளவிற்கு நான் ஆயுள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக

மாத வருமானம்                                     1,00,000
என் செலவுகள்                                           30,000
குடும்பத்திற்கு கிடைப்பது                70,000

இன்றைய நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிடைக்கும் வட்டி விகிதம் 8%.

என் குடும்பத்தின் தேவை ஒரு ஆண்டிற்கு       8,40,000
ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் என் குடும்பத்திற்கு என்று வங்கியில் முதலீடாக இருந்தால் இந்த அளவு பணம் அவர்களுக்குக் கிடைக்கும்.

ஆக, ஏறத்தாழ சரியான அளவிலான ஆயுள் காப்பீடு என்பது  குறைந்தபட்சமாக வருடவருமானத்திற்கு பத்து மடங்கு. ஆனால் உலக அளவில் நோக்கும்போது 8% வருட வட்டி என்பது மிக அதிகம். இது நிச்சயமாகக் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. மேலும் பணவீக்க விகிதத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், குறைந்த பட்சமாக உங்கள் வருட வருமானத்திற்கு இருபது மடங்கு காப்பீடு தேவை என்று வல்லுனர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

உங்கள் வருட வருமானம் என்ன ?
உங்களின் மொத்த ஆயுள் காப்பீடு எவ்வளவு ?  

வியாழன், 19 மார்ச், 2015

காப்பீடு, காப்பீடு, காப்பீடு

நாள்தோறும் பல மனிதர்கள் இறப்பதைப் பார்த்தபின்னரும், தான் நிரந்தரமாக இருப்போம் என்று மனிதன் எண்ணுவதுதான் உலகின் ஆச்சரியமான விஷயம் 

யக்ஷப்ப்ரச்னம் - மகாபாரதம்


பணத்தை சேமிக்கும் வழியைக் கேட்டால், காப்பீடில் சேர்ந்து செலவழிக்கும் வழியை ஏன் பேச ஆரம்பிக்கிறோம் என்ற கேள்வி வருகிறது அல்லவா ? எப்படி அஸ்திவாரம் இல்லாமல் ஒரு கட்டடம் கட்ட முடியாதோ அது போலவே காப்பீடு இல்லாமல் முதலீட்டைப் பற்றி பேச முடியாது.

நீங்கள் சமீபத்தில் எப்போது ஆயுள் காப்பீடு செய்து கொண்டீர்கள் ? அப்போது அந்த காப்பீடு நிறுவனத்தின் முகவர் என்ன சொல்லி உங்களிடம் கையெழுத்து வாங்கினார் ?

வரியை சேமிக்கலாம் என்றா ? இல்லை உங்கள் குழந்தையின் பெயரில் காப்பீடு செய்யுங்கள், அந்தக் குழந்தை வளர்ந்து சரியான வயதில் படிக்க வைக்க, திருமணம் செய்து கொடுக்க பணம் கிடைக்கும் என்றா ? இல்லை வருடம் ஐந்தாயீரம் வீதம் முதலீடு செய்தால் இருபது வருடங்கள் கழித்து உங்களுக்கு நீங்கள் செலுத்திய ஒரு லட்ச ரூபாய் இரண்டு லட்சமாக கிடைக்கும் என்றா ? வாருங்கள், உங்களுக்காகத்தான் இந்தப் பகுதி.

காப்பீடு என்பது ஒருபோதும் வாங்கப் பட மாட்டாது 
அது எப்போதும் விற்கப்படவே வேண்டும் 

காப்பீடு நிறுவன முகவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் முதல் பாடமே இதுதான். அதனாலே பல முகவர்கள் வாடிக்கையாளர்கள் தலையில் அமர்ந்து காப்பீடை விற்கிறார்கள். 

இறப்பு என்பது உறுதி, ஆனால் அது நமக்கு வரவே வராது என்பது தான் பொதுவாக மனித மனதின் நம்பிக்கை. அதுவும் நீங்கள் இறந்து போனால் உங்கள் குடும்பத்திற்கு பணம் கிடைக்கும் என்று பேச ஆரம்பித்தால், ஒரு சராசரி இந்தியனால் கோபப்படாமல் இந்தப் பேச்சை கேட்கவே முடியாது. 

உங்களைச் சுற்றிப் பாருங்கள், சராசரி இந்தியனின் ஆயுள் அதிகமாகி இருக்கிறது. ஆனால் முப்பதுகளின் மத்தியில், நாற்பதின் ஆரம்பத்தில், ஐம்பதின் அருகில் நமக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பல நேரங்களில் வெளி உலகம் தெரியாத மனைவி, படிப்பை முடிக்காத பிள்ளைகள், வயதான பெற்றோர்கள், கட்டி முடிக்கப்படாத வீட்டுக் கடன் இத்தோடு முடிவையாத கனவுகள் என்று அவர்கள் குடும்பம் சந்திக்கும் சவால்களை நினைத்துப் பாருங்கள். அநேகமாக உங்கள் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் உறுப்பினராக நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்.

கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பே சிதைந்து போய் இருக்கும் இன்றைய காலகட்டதில் நீங்கள் இல்லை என்றால் உங்கள் குடும்பம் என்ன நிலைமைக்கு ஆளாகும் என்பதை ஒரு நிமிடம் யோசியுங்கள். 

நெருப்பென்றால் வாய் வெந்து விடாது நண்பர்களே, ஆனால் நாம் சற்றே சுதாரிப்பாக இருப்பதில் தவறு இல்லை அல்லவா. காப்பீட்டின் பல் வேறு வடிவங்களை நாம் சற்றே உற்று நோக்குவோம்.  

புதன், 18 மார்ச், 2015

ஒரு கோடி ரூபாய்க் கனவு


எவ்வளவு பணம் கையில் இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக உணருவீர்கள் என்று கேட்டால், அநேகமாக ஒரு கோடி ரூபாய் என்ற பதில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருக்கும். 




அப்படி அந்த ஒரு கோடி ரூபாயை எப்படி சேமிப்பது என்பதைப் பற்றிய எனது கருத்துக்களை இங்கே பதியலாம் என்று நினைக்கிறேன். 

உலகின் மிகப் பெரும் உண்மைகள் எல்லாம் எப்போதும் மிக எளிமையாகவே இருக்கிறது, நாம்தான் அதனை மிகக் கடுமையாக முயன்று கடினமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். சிறுவயதில் நாம் அனைவரும் படித்த ஓன்று தான் "சிறுதுளி பெருவெள்ளம்" என்று,  அப்படி சிறுகச் சேமித்து  சரியாக முதலீடு செய்வதைப் பற்றிதான் நாம் இதில் பேசப் போகிறோம். 

மிக நிச்சயமாக பணம் சம்பாதிப்பதைப் பற்றி இதில் எதையும் நாம் பேசப் போவது இல்லை. அதிலும் லாட்டரி அடிப்பதையோ இல்லை முறையற்ற, சட்டத்திற்கு புறம்பான, தார்மீக வழிக்கு மீறிய வழியைப் பற்றி நாம் இதில் பேசப் போவது இல்லை. மல்டி லெவல் மார்கெட்டிங், நிலத்தை வாங்கி விற்பது, அல்லது பகுதி நேர வேலை என்ற எத்தனைப் பற்றியும் நாம் இதில் பேசப்போவது இல்லவே இல்லை.

முறையான வழியில் சம்பாத்தித்து, அதில் குறையில்லாமல் வசதியாக வாழ்ந்து, சம்பாதிக்கும் பணத்தை சரியாக சேமிப்பது பற்றி, அந்தச் சேமிப்பை முதலீடு செய்வதைப் பற்றி, அந்த முதலீடு செய்வதில் கவனம் கொள்ள வேண்டிய விசயங்களைப் பற்றியே இதில் பேசப் போகிறோம்.

பணம் ஒன்றே எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளும் போது, பணம் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பதையும் நான் ஒத்துக் கொள்கிறேன். தேவையான அளவிற்கு உலகில் பொருள்களும் வாய்ப்புகளும் நிறைந்து இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நினைவில் கொள்க : இதில் எழுத இருக்கும் விஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொருந்தி வரும் என்று ஆகாது. உங்கள் கனவுகள், உங்கள் தேவைகள், உங்கள் முதலீட்டின் மேல் நீங்கள் எதிர்நோக்கும் வட்டி அல்லது வருமானம், அதற்காக நீங்கள் சந்திக்கத் தயாராக இருக்கும் இடர்கள் (ரிஸ்க்) என்பது எல்லோருக்கும் ஓன்று போலவே இருக்காது. இங்கே ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தாது. எனவே இந்தத் தொடரை ஒரு ஆரம்பநிலை வழியாட்டியாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். 

வியாழன், 22 ஜனவரி, 2015

குறிப்புகளின் குறிப்புகள்

ஒருபுறம் பலகோடி ரூபாய்கள் புரளும் போட்டியும் சவாலும் நிறைந்த துறையில் மிக முக்கியப் பதவி, மறுபுறம் குடும்பத்தோடு போதிய நேரம் அளிக்கும் பொறுப்பான குடும்பத்தலைவன். மீதி இருக்கும் நேரத்தில் கடினமான பல விசயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் ஒரு தீவிரமான பதிவர். இப்படிப் பல அவதாரம் எடுக்கும் நண்பர் ஜோதிஜியின் அடுத்த படைப்பு ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்ற மின்னூல்.

ஜோதிஜி பொழுதுபோக்காக எழுதுவது இல்லை, அப்படிப் படிப்பவர்களுக்காக அவர் எழுதுவதும் இல்லை. அவர் எழுதுவது எல்லாம் மிகுந்த ஆராய்ச்சியும், கடுமையான உழைப்பையும் கேட்கின்ற களங்கள்.

அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட களம்தான் - திருப்பூரும், ஆயத்த ஆடைகள் சார்ந்த உலகமும். டாலர் நகரத்தின் தொடர்ச்சி என்றே இந்த நூலை எடுத்துக் கொள்ளலாம். குடிசைத் தொழில் போல ஆரம்பித்து, இன்று பல்லாயிரம் கோடி புழங்கும் அளவிற்கு வளந்த தொழில், அதோடு வளர்ந்த நகரம், பணப் பரிமாற்றம் நடக்கும் போது மாறும் மனித மனம், அதில் நடக்கும் நாடகங்கள் என்ற பலவிதப் பரிணாமங்களைக் காட்டிச் செல்கிறார் ஜோதிஜி.

அளவுக்கு மீறிய பணம் புழங்கும்போது, ஏற்படும் கலாசார அதிர்வுகள், வாழ்க்கைமுறையின் மாற்றங்கள், அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் இவை எல்லா இடத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான பாதிப்பு. வளரும் பருவத்தில் சரியான முறையில் வளர்க்கப்படுபவர்கள் இந்தச் சிக்கல்களை எளிதாக எதிர்கொண்டு வென்று விடுகின்றனர். ஆனால் பலர் இந்தச் சூழலில் சிக்கி வரைமுறை இல்லாது மாட்டி சீரழிந்து சின்னாப்பின்னம் ஆகிவிடுகின்றனர்.

எத்தனை எத்தனை மனிதர்கள், அதில் அவர்கள் காட்டும் முகங்கள் - எல்லாப் பெருமையையும் தனக்கென ஆக்கி, எல்லாத் தோல்விக்கும் அடுத்தவர்களைப் பலிஆடாக்கும் மனிதர்கள், கிடைக்கும் இடத்தில எல்லாம் வழிமுறை பற்றிய சிந்தனையே இல்லாது பணத்தை மட்டுமே துரத்தும் ஆட்கள், எப்போதோ அடைந்த வெற்றியின் வரலாற்றில் வாழும் மனிதர்கள் - அநேகமாக நாம் தினம் தினம் காணும் மனிதர்கள் தான். இவர்களை ஆவணப் படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்து இருக்கிறார் நூலாசிரியர்.

நான் அறிந்து தொழில் சாம்ராஜ்யங்களின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது. வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு தொழில்நகரின் வரலாறு என்று பார்த்தால் அநேகமாக அதன் முதல்ப்பெயராக ஜோதிஜியின் பெயர்தான் இருக்கும் போல.

வாழ்த்துகள் ஜோதிஜி 

சனி, 10 ஜனவரி, 2015

வெற்றிக்கான நூறு விதிகள்



புகழ்பெற்ற தனிமனித மேம்பாட்டு பயிற்சியாளரான  ப்ரைன் டிரஸி எழுதியது இந்தப் புத்தகம். வெற்றி அடைவதற்கான நிச்சயமான நூறு மாற்றவியலாதா விதிகளைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. மிக முக்கியமாக ஆசிரியர், படிக்கவும் புரிந்து கொள்ளவும் கடினமான சொற்களையோ அல்லது வாக்கியங்களையோ இந்த நூலில் பயன் படுத்தவில்லை.

புரிந்து கொள்ள எளிதாக இந்த விதிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

                          1. வாழ்க்கைக்கான விதிகள் 
                          2. வெற்றிக்கான விதிகள் 
                          3. வணிகத்திற்கான விதிகள் 
                          4. தலைமைப்பண்புக்கான விதிகள் 
                          5. பொருளாதார விதிகள் 
                          6. விற்ப்பனைக்கான விதிகள் 
                          7. பேரம் பேசுவதற்கான விதிகள் 
 8. நேர மேலாண்மைக்கான விதிகள் 

மனிதன் என்பவன் சிந்தனைகளின் தொகுப்பு. அதனால் சிந்தனைகளைச் சீர் செய்வதன் மூலம், மனிதன் தன வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதே ஆசிரியர் மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகத்தில் சொல்லும் கருத்து. எந்த நிகழ்ச்சியும் தற்செயலாக நடப்பதில்லை. எல்லா நிகழ்ச்சிக்குப் பின்னும் எதோ ஒரு காரணம் இருக்கிறது, அநேகமாக அது நமது செயலாகவே இருக்கிறது என்பதே இந்தப் புத்தகத்தின் அடிநாதம்.

உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துப் புரிந்து கொண்டால் தங்கள் வாழ்கையில் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்ளும் பாடங்களை காலவிரயம் இல்லாமலே கற்றுக் கொண்டு முன்னேறிவிடலாம். 

வெள்ளி, 2 ஜனவரி, 2015

5. பழங்கால நாகரீகம்

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பு 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

1931 ஜனவரி 9

வாரம் இருமுறை உலகச் செய்திகளைச் சுமந்துவரும் பாரத் என்ற ஹிந்தி இதழில் உன் தாயாரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றும் அதலால் அரசாங்கம் அவளை மலாக்கா சிறையில் இருந்து லக்னோ சிறைக்கு மாற்ற உத்தரவிட்டிருக்கிறது என்றும் படித்தேன். ஒரு வேளை இந்தச் செய்தி வதந்தியாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தச் சந்தேகம் கூட மன அமைதியைக் குலைக்கிறது. தனிப்பட்ட முறையில் நம்மால் துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் நமக்கு நெருக்கமானவர்களுக்கு ஏற்படும் துயரங்கள், அதிலும் அவர்களுக்கு நம்மால் எந்த உதவியும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் போது நம்மைத் தாங்கவொண்ணா துயரில் தள்ளி விடுகிறது.

அதனால்தான் அந்தச் செய்தி உன் தாயாரைப் பற்றிய கவலையை உண்டாக்கி விட்டது. உன் தாயார் சிங்கம் போன்ற மன உறுதி கொண்டவள்தான். அவள் தைரியசாலி ஆனால் உடலளவில் பலவீனமானவள், மெலிந்தவள். இன்னும் அவள் நலிவடைவதை நான் விரும்பவில்லை. உள்ளம் உறுதியாக இருந்தாலும் உடல் வலிமையாக இல்லாவிட்டால் என்ன பயன் ? எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்து முடிக்க நமக்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியமான ஓன்று.

அவள் லக்னோ சிறைக்கு மாற்றப்படுவதும் ஒருவிதத்தில் நல்லதுதான். மலாக்காவில் அவள் தனியாக இருந்தால். லக்னோ சிறையில் அவளது தோழியர்கள் இருப்பதால் அவள் சற்றே மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். எனக்கும் அவள் அருகிலேயே இருப்பாள். இங்கே இருந்து லக்னோ வெறும் ஐந்து மைல் தொலைவுதான். இது ஒரு பொருளற்ற சிந்தனைதான். ஐந்து மைலோ நூற்றைம்பது மைலோ, இரு சிறைக்களின் உயர்ந்த மதில்சுவர்களை எண்ணிப் பார்த்தால் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தாத்தா (மோதிலால் நேரு) இன்று அலகாபாத் திரும்பிவிட்டார் என்பதையும் அவர் இப்போது உடல்நிலை தேறி ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதையும் அறிந்தேன். அவர் மலாக்கா சிறையில் உனது தாயாரைக் கண்டு வந்தார் என்பதை அறிந்த உடன் மகிழ்ச்சி அடைந்தேன். கொஞ்சம் நல்லூழ் இருந்தால், உங்கள் அனைவரையும் நாளை நான் சந்திக்க முடியும். நாளை சிறையில் பார்வையாளர் நாள். சிறையில் இருப்பவர்களுக்கு அது ஒரு கொண்டாட்ட தினம். நான் உன் தாத்தாவை ஏறத்தாழ இரண்டு மாதங்களாகப் பார்க்கவில்லை. அவரை நேரில் சந்தித்து, அவர் உடல் நிலையைப் பற்றி அறிந்து கொண்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். உன்னையும் நீண்ட இருவாரங்களுக்குப் பின் நான் பார்க்கலாம். உன்னைப் பற்றியும், உன் தாயாரைப் பற்றியும் என்னிடம் சொல்ல உனக்கும் பல செய்திகள் இருக்கும் அல்லவா !

ஆஹா ! உனக்கு வரலாற்றை எழுத ஆரம்பித்து, வேறு எதையெல்லாமோ எழுதிக் கொண்டு இருக்கிறேன். நான் நிகழ்காலத்தை சற்றே மறந்து விட்டு, ஒரு மூவாயிரம் வருடத்திற்கு பின்னே செல்வோம்.

என் முந்தய கடிதங்களில் எகிப்து மற்றும் க்ரெட நகரத்தில் உள்ள  க்நோசஸ்  பற்றி உனக்கு சொல்லி இருந்தேன். மனித நாகரீகம் இந்த இரண்டு இடங்களிலும், இன்று ஈராக் என்று அழைக்கப்படும் மெசபடோமியாவிலும், சைனா, இந்தியா மற்றும் கிரேக்க நாட்டிலும் தான் ஆரம்பமானது. கால அளவில் கிரேக்கம் சற்றே இளைய நாகரீகம். இந்த நாகரீகங்கள்  இப்போது என்ன   நிலையில் இருக்கிறது ? கநோச்ஸ் நாகரீகம் இப்போது இல்லவே இல்லை. கிரேக்கம் அதனை அழித்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டு செழித்து வளர்ந்த எகிப்திய நாகரீகம் இன்று பிரமிடு, பதப்படுத்தப் பட்ட சடலங்கள் மற்றும் அழிவுற்ற கோவில்களாக மட்டுமே எஞ்சிஉள்ளது. அங்கே நைல் நதி இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது, மக்கள் வசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களது பழங்கால நாகரீகத்தில் இருந்து முழுதாக வேறுபட்டுத்தான் இருக்கிறார்கள்.

இராக்கிலும் பெர்சியாவிலும் எத்தனையோ பேரரசுகள் தோன்றி மறைத்து போயின. மகத்தான பாபிலோன் நகரைப் பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாடில் விரவி இருக்கிறது. இந்தப் பழைய நகரில் எத்தனையோ அரசுகள் தோன்றி மறைந்து இருக்கிறது. மன்னர்களும் சக்கரவர்த்திகளும் குறைந்த கால அளவில் ஆட்சி செய்து உலகை விட்டு விலகிச் சென்று உள்ளார்கள். ஆனால் மனித நாகரீகம் இன்றும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அரேபிய இரவு கதைகளின் களமான பாக்தாத் நகரம் இன்றும் துடிப்போடு இருக்கிறது. ஆனால் பெர்சியாவிலும், இராக்கிலும் இன்று உள்ள மக்கள் தங்கள் பழைய நாகரீகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இன்றும் மக்கள் வியப்போடு கற்கும் வரலாறு கிரேக்க வரலாறு. கிரேக்த்தின் இலக்கியமும் பளிங்குச் சிலைகளும் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இன்றைய ஐரோப்பா புகழ்மிக்க அந்தப் பழைய கிரேக்கத்தின் குழந்தை. ஆனால் இன்றுள்ள கிரேக்கம் ஐரோப்பாவின் தென்கிழக்கில் உள்ள ஒரு சிறிய நாடு மட்டுமே.

எகிப்து, கிரேக்கம், ஈராக், பெர்சியா - இந்த எல்லாப் பழைய நாகரீகங்களும் இன்று வரலாற்றின் பக்கங்களாகவே குறிக்கப்படுகிறது. இவைகளோடு சமமாகக் குறிக்கப்படும் மற்றைய இரண்டு நாகரீகங்கள் - சைனா மற்றும் இந்தியாவின் நிலை இன்று என்ன ? இங்கும் பேரரசுகள் தோன்றின, மறைந்தன. பெரும் படையெடுப்புகளும், கொள்ளைகளும், பெரிய அளவிலான அழிவும் நடந்தன.

ஆனால் மற்றைய நாடுகள்போல் இல்லாமல், இந்த இரு நாடுகளில் மட்டும் இன்னும் அந்தப் பழைய நாகரீகம் அறுபடாமல் தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த இரண்டு நாடுகளும் தங்கள் தொட்ட உயரத்தில்  இருந்து விழுந்து விட்டன. கால ஓட்டத்தில் கசடுகளும், அழுக்குகளும் அதில் மண்டியுள்ளது. ஆனால் அதனைத் தாண்டியும் அவை உயிர்த்துடிப்போடு விளங்குகின்றன. இன்றைய இந்திய மக்களின் வாழ்க்கைமுறை என்பது அந்தப் பழைய நாகரீகத்தின் தொடர்ச்சிதான்.

உலகம் இன்று எவ்வளவோ மாறிஇருக்கிறது. புகைவண்டிகளும், பெரும்கப்பல்களும், தொழிற்சாலைகளும் இன்று உலகத்தின் பார்வையையும், போக்கையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது. இந்தியாவின் போக்கையும் இந்த மாற்றங்கள் பாதிக்கவே செய்துகொண்டு உள்ளது. ஆனால் வரலாற்றின் கால ஓட்டத்தையும் தாண்டி, இன்றும் தொடர்ந்துவரும் இந்திய நாகரீகம் அனைவரையும் வியப்பிலாழ்த்தும் ஒரு அதிசயம்தான். நாம் புகழ் வாய்ந்த அந்த நாகரீகத்தின் வாரிசுகள். வடமேற்குக் கணவாய் வழியாக ஹிந்துஸ்தானம் என்றும் ஆரியவர்தனம் என்றும் பரதகண்டம் என்றும் இன்று குறிக்கப்படும்  இந்தப் பரந்த நிலப்பரப்பிற்கு வந்த அந்த மக்களின் நேரடி வாரிசு நாம். கடினமான மலைதொடர்களைத் தாண்டி முன்பின் தெரியாத அந்த நிலத்திற்கு அவர்கள் வருவதை உன்னால் காண முடிகிறதா?

எது வரும் என்ற அச்சம் இல்லாமல் மிகுந்த துணிச்சலோடும், சாகச உணர்வோடும் அவர்கள் முன்னேறிச் சென்றனர். இறப்பையும் அவர்கள் புன்முறுவலோடு எதிர்கொண்டனர். அவர்கள் வாழ்க்கையைக் காதலித்தனர். வாழும் வழி என்பது வாழ்க்கையை, அதன் சவால்களை எதிர்கொள்வது மட்டும்தான் என்று அவர்கள் உணர்ந்து இருந்தனர். அவர்களைத் தோல்வியோ பின்னடைவுகளோ கலங்க வைக்கவில்லை. நம்முடைய அந்த முகம் தெரியாத முதாதையர்கள் புகழ்வாய்ந்த கங்கை நதிக்கரையை அடைந்தனர். கங்கையின் பிரவாகம் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும். அவர்கள் கங்கையை வணங்கி தங்கள் இனிமையான மொழியில் அந்த நதியைப் போற்றிப் பாட ஆரம்பித்தனர்.

அவர்களின் வாரீசு நாம் என்பதை என்னும் போது நாம் பெருமிதம் அடைகிறோம். ஆனால் கால ஓட்டத்தின் நன்மைக்கும், தீமைக்கும் நாம் பொறுப்பெடுக்க வேண்டும். இன்றைய இந்தியாவில் தவறுகள் பல உள்ளன. உலகநாடுகள் பலவற்றின் கீழே நம்மைத் தள்ளிய தவறுகள் உள்ளன. வறுமையின் கோரத் தாண்டவமும், அன்னியர் கைகளில் பகடைக்காய் என்று நாம் இன்று உருண்டுகொண்டு இருக்கிறோம்.

ஆனால் இந்த இழிநிலை இன்னும் நீடிக்கக்கூடாது என்ற நினைப்பும் உறுதியும் இன்று நம்மிடையே உள்ளது.