சேமிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேமிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஏப்ரல், 2015

பங்குச் சந்தை

நம்மிடம் உள்ள முதலீட்டுக்கான வழிகளில் மிக அதிகமான வளர்ச்சியைக் கொடுக்கக் கூடியது பங்குகளில் முதலீடு செய்வது மட்டுமே. மிகக் கவர்ச்சிகரமானதும் மிக அபாயமான சந்தை முதலீட்டைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நமக்கு காய்கறிச் சந்தை, மீன் சந்தை இவைகளைப் பற்றித் தெரியும். சந்தை என்பது வாங்குபவர்களும் விற்ப்பவர்களும் அதோடு வேடிக்கை பார்பவர்களும் கூடும் இடம். பண்டமாற்று முறையிலோ அல்லது பணப் பரிமாற்றம் மூலமாகவோ பொருள்களும் சேவைகளும் கைமாறும் இடம்.

பங்குச் சந்தை என்பதும் அதுபோல பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யப்படும் இடமாகும். முன்பெல்லாம் நாம் காய்கனி வாங்க அவைகள் விற்பனை செய்யப் படும் இடத்திற்க்குச் சென்றாக வேண்டும். அதுபோல பங்குகள் வாங்க, விற்க பங்குச் சந்தைக்குச் செல்லவேண்டும். இன்று அறிவியல் முன்னேற்றம் காரணமாக காய்கனிகளை தொலைபேசி மூலமாகவோ இல்லை இணையதளம் மூலமாகவோ வாங்குவது போலவே பங்குகளையும் தொலைபேசி மூலமாக, இணையம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியும்.

பங்குகள் - ஒரு அறிமுகம். 
ஒரு தொழிலைத் தொடங்கவும், காலப் போக்கில் அது வளர்ச்சி அடையும்போதும் அதற்க்கு முதலீடு தேவைப்படும். தொழில்முனைவர் பொதுவாக தங்கள் கைவசம் உள்ள பணத்தை அவர் தொழிலில் முதலீடு செய்வார். அதற்க்கு மேலும் பணம் தேவைப்பட்டால் பங்குதாளர்களைச் சேர்த்துக் கொண்டோ, இல்லை வங்கிகளில்/தனியாரிடம் கடன் வாங்கியோ அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வார். கடன் வழங்குபவர்களுக்கு தொழிலின் லாப நட்டதைப் பற்றி பெரிய அளவில் கவலை இருக்காது. அவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணம் வட்டியோடு திரும்பி வருமா என்ற கேள்விதான் முக்கியமாக இருக்கும். ஆனால் பங்குதாளர்களுக்கு நிறுவனத்தின் லாபத்திலும் நட்டத்திலும் பங்கு உண்டு.

பெரும் அளவில் பணம் தேவைப்படும் தொழில்களில் பொதுமக்களையும் பங்குதாளர்களாக சேர்த்துக் கொள்வது உண்டு. அப்போது அந்த முதலீட்டாளர்கள் தொழிலில் உள்ள லாப நட்டத்தையும் பகிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு தொழிலைத் தொடங்க எனக்கு ஐந்து கோடி ரூபாய் தேவைப்படுகிறது. என்வசம் இரண்டு கோடி ரூபாய்தான் இருக்கிறது என்றால், மீதி மூன்று கூடி ரூபாய்க்கு நான் பங்குகளை விற்கலாம். என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் (அப்படி யாரேனும் இருந்தால்) அந்தப் பங்குகளை வாங்கிக் கொண்டு நான் தொடங்கும் தொழிலில் பங்கெடுத்துக் கொள்வார்கள். பொதுவாக பங்குகளின் முகமதிப்பு பத்து ரூபாயாக இருக்கும். அப்போது இந்தத் தொழிலுக்காக நான் அம்பது லட்சம் பங்குகளை வெளியிட்டு, அதில் இருபது லட்சம் பங்குகளை வைத்துக் கொண்டு, முப்பது லட்சம் பங்குகளை வெளியீடு செய்வேன். நிறுவனத்தின் லாப நட்டதை ஒட்டி, இந்தப் பங்குகளின் விலை மாற்றம் அடையும். இப்படி வெளியிடப் படும் பங்குகள் தான் பங்குச் சந்தையில் விற்பனையாகிறது.

ஒருவேளை நான் ஏற்க்கனவே லாபகரமாக நடத்திக்கொண்டு இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய எனக்குப் பணம் வேண்டி இருந்து அதற்காக நான் பங்குகளை வெளியிட்டால், முகமதிப்பான பத்து ரூபாய்க்கு மேல் ஒரு தொகையை (Premium) அதிகமாக வைத்து வெளியிடலாம். புதிதாக ஆரம்பிக்கும் தொழில் லாபமடைய கொஞ்ச நாட்கள் பிடிக்கும். ஆனால் நடந்து கொண்டு இருக்கும் தொழில் உடனடியாக லாபம் தருவதால் இந்த அதிகப் பணம் கொடுக்கப்படுகிறது.

தொழில்முனைவோரின் பின்னணி, அவரது அனுபவம், ஏற்க்கனவே அவர் நடத்தி வரும் தொழில்கள், அவர் தொடங்க / விரிவாக்கம் செய்ய உள்ள தொழில், அதற்க்கான சந்தை இவைகளைப் பொருத்து முதலீட்டாளர்கள் அந்தப் பங்கை வாங்க முன்வருவார்கள்.

மும்பை பங்குச் சந்தை 
இந்தியாவில் மும்பையிலும் அதுபோன்ற பெருநகரங்களிலும் பங்குச் சந்தைகள் இயங்கி வருகின்றன. அவைகளில் மிகவும் பழமையானதும், அளவில் பெரியதும் மும்பை பங்குச் சந்தைதான். மும்பை பங்குச் சந்தை ஆசியாவின் மிகப் பழமையான ஒரு நிறுவனம். இது 1875ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் ஐயாயிரத்திற்கும் அதிகமான நிறுவங்களின் பங்குகள் பரிமாற்றம் ஆகின்றன.

மும்பை பங்குச் சந்தை இணையத்தளம் 

பங்குச்சந்தை குறியீடு ( Sensex ) 
இந்த நிறுவனங்களில் இருந்து வெவ்வேறு துறையில் இருந்து, அளவில் பெரிய முப்பது நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பங்குச் சந்தை குறியீடு எண் நிர்ணயம் செய்யப் படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி அன்று இந்த குறியீடு எண் 100 என்று எடுத்துக் கொண்டு, நாள்தோறும் இந்த முப்பது பங்குகளின் விற்பனை விலையை வைத்து இது நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த முப்பது நிறுவனங்கள் என்பது நிலையான ஓன்று இல்லை. இவை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுவது. 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி இந்த எண் 27,957.49 என்று குறிக்கப்பட்டு உள்ளது.

அதாவது  36 வருடங்களில் சந்தையின் மதிப்பு 280 மடங்கு அதிகரித்து உள்ளது. ஏறத்தாழ வருடாவருடம் சந்தையின் மதிப்பு இரட்டிப்பாகிறது என்று கொள்ளலாம்.

எல்லாப் பங்குகளும் இதே அளவில் கூடி இருக்கிறது என்பது இல்லை, சில பங்குகள் இந்த அளவைத் தாண்டியும் கூடி இருக்கலாம். சில பங்குகள் விலை குறைந்தும் இருக்கலாம். குறியீட்டு எண் என்பது ஒரு கைகாட்டி மரம் போலத்தான் என்பதை நினைவில் வையுங்கள்.

கடந்துவந்த பாதை 





சந்தை முதல் பத்து வருடத்தில் பத்து மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் நாலாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் வளர்ச்சி அடைய ஏறத்தாழ எழு வருடங்களும், அதில் இருந்து ஏழாயிரம் எண்ணிக்கையைத் தொட ஆறு வருடங்களும் ஆகி இருக்கிறது. குறியீட்டு எண் இருபதாயிரத்தில் இருந்து இருபத்தி இரண்டாயிரம் வர எழு வருடங்கள் ஆகி உள்ளது. ஆனால் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக ஒரே வருடத்தில் இருபத்தி இரண்டாயிரத்தில் இருந்து முப்பதாயிரம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. போதுமான கால அவகாசம் கொடுத்து இருந்தால் பங்குச் சந்தையில் கிடைக்கும் வளர்ச்சி வேறு எந்த முதலீட்டிலும் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.

தொடக்கம் முதல் இந்த வருடம் வரை சந்தையின் போக்கு.


1979 முதல் 1989 வரையான முதல் பத்து வருட வளர்ச்சி.

1989 முதல் 1999 வரையான இரண்டாவது பத்து வருட வளர்ச்சி


1999 முதல் 2009 வரை

2009 முதல் 2015 வரை

குறைந்த பட்சம் எழு வருடங்களுக்குக் குறையாமல் கால அவகாசம் தருவது உங்கள் பணத்தைப் பெருக்கும் வழியாக இருக்கும்.

காளையும் கரடியும் 
பங்குகளின் மதிப்பு என்பது எல்லா நேரத்திலும் நிறுவனங்களின் அடிப்படையை வைத்து இருப்பது இல்லை. எதிர்பார்ப்புகளை, கணிப்புகளை வைத்தே முதலீட்டாளர்கள் பங்குகளின் விலைகளை நிர்ணயம் செய்கிறார்கள். உதாரணமாக தற்போதைய அரசாங்கத்தின் மீது உள்ள நம்பிக்கை பங்குகளின் விலையை ஏற்றிவைத்து உள்ளது. ஒரு வேளை சந்தையின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப தற்போதைய அரசு செயல்படவில்லை என்றால் இந்த விலைகள் கீழே போகவும் கூடும். சந்தை ஏறுமுகமாக இருந்தால் அது காளையின் பிடியில் உள்ளது என்றும், இறங்குமுகமாக இருந்தால் அது கரடியின் பிடியில் உள்ளது என்றும் கூறுவார்கள். காளை அதன் கொம்புகளால் முட்டித் தூக்குவதாலும், கரடி தன் கைகளால் பிடித்து அழுத்துவதாலும் இந்தப் பெயர்கள் குறிக்கப்படுகின்றன.



1979ஆம் வருடம் உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் இருந்து, நீங்கள் அதனை எங்கேயும் முதலீடு செய்யாமல் உங்கள் கையிலேயே வைத்து இருந்தீர்கள் என்றால், உங்களிடம் அதே ஒரு லட்ச ரூபாய் இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அந்தப் பணத்தின் வாங்கும் சக்தி ரூபாய் ஆறாயிரமாக இருக்கும். அதே பணத்தை நீங்கள் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் (Fixed Deposit) முதலீடு செய்து இருந்தால் அந்தப் பணம் பதினேழு லட்சமாக வளர்ந்து இருக்கும், ஆனால் பணவீக்கவிகிதத்தால் அதன் வாங்கும் மதிப்பு ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாயாகத்தான் இருக்கும்.

இதே பணத்தை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்து இருந்தால் அதன் மதிப்பு இன்று முப்பத்தி ஆறு லட்சமாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தைக் கணக்கில் எடுத்தால், அதன் மதிப்பு 2.3 லட்ச ரூபாயாக இருக்கும்.

இதே ஒரு லட்ச ரூபாயை அன்று நீங்கள் சந்தை குறியீடு எண்களைக் குறிக்கும் பங்குகளில் முதலீடு செய்து இருந்தால், அதன் மதிப்பு இன்று 2.32 கோடி ரூபாயாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அதன் மதிப்பு பதினான்கு லட்ச ரூபாயாக இருக்கும். இதில் சந்தை குறியீட்டு எண்களாக இருக்கும் நிறுவனங்கள் நிலையாக இருப்பதில்லை என்பதை நினைவில் வைக்கவும்.

( அதாவது 1979ஆம் வருடத்தில் 14 லட்ச ரூபாய்க்கு எதை வாங்க முடியுமோ அதைதான் 2015ஆம் வருடத்தில் உங்கள்வசம் இருக்கும் 2.32 கோடி ரூபாயால் வாங்க முடியும் )

 மாற்றம் ஒன்றே மாறாதது. சந்தை எப்போதும் ஏறுமுகமாகவோ இல்லை இறங்குமுகமாகவோ நிலையாக இருப்பது இல்லை. குறைந்த விலையில் வாங்கி, விலை அதிகமாகும்போது விற்றால் லாபம் கிடைக்கும். மிக எளிதாகத் தோன்றினாலும், பலர் பங்குச்சந்தையில் பணத்தை இழக்கவே செய்கின்றனர். இதற்க்கு இரண்டு காரணங்கள், ஓன்று அடிப்படை தெரியாமல் பங்கு வர்த்தகத்தில் இறங்குவது, இரண்டாவது இன்னும் இன்னும் மேலே விலை உயரும் என்ற பேராசை.

 இந்த இரண்டு காரணங்களால் பணத்தை இழந்தவர்கள், சூடு பட்ட பூனை பாலைப் பார்த்து பயந்து ஓடுவது போல பங்குச் சந்தையை சூதாட்டம் என்று மற்றவர்களைப் பயமுறுத்துகின்றனர்.

அப்படி என்றால் பங்குச் சந்தை முதலீடு புதையலா இல்லை புதைகுழியா ? வாருங்கள் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

தொடர்புடைய பதிவுகள் 
1. முதலீட்டுக்கான சில வாய்ப்புகள் 
2. எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை
3. பணவீக்கம் ஒரு எளிய அறிமுகம்   

வியாழன், 2 ஏப்ரல், 2015

முதலீட்டுக்கான சில வாய்புகள்

சரியான அளவில் ஆயுள் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் செய்து கொண்டு, அவசரக்கால தேவைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கான தொகையையும் பாதுகாப்பாக சேமித்துவைத்து விட்டீர்கள். அதனைத்தாண்டியும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களால் சேமிக்க முடியும், அதனை சரியாக முதலீடு செய்ய நினைகிறீர் என்றால் வாருங்கள் உங்களுக்காகத்தான் இந்தத் தொடர்.

இது நீங்கள் சம்பாதித்த பணம், அதற்காக நீங்கள் கடுமையாக உழைத்து இருப்பீர்கள். ஆகவே மற்ற எவரைக்காட்டிலும் அந்தப் பணத்தை பாதுகாப்பதில் உங்களுக்குத்தான் கவனம் அதிகமாக இருக்கவேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். மிக முக்கியமாக இந்தப் பதிவு முதலீட்டுக்கான ஒரு ஆரம்பநிலை தகவல்கள்தானே தவிர உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் இங்கே பதில் இருக்கும் வாய்ப்பு இருக்கமுடியாது. உங்கள் தேடல்கள்தான் உங்களுக்கான பாதையை உருவாக்கிகொடுக்கும்.

சேமிப்பு, முதலீடு இவைகளுக்கான வேறுபாடுகளை நாம் ஏற்க்கனவே பார்த்தோம் அல்லவா. உங்கள் சேமிப்பை பணமாகவோ இல்லை தங்க நாணயங்களாகவோ மாற்றி உங்கள் வீட்டில் வைத்துக் கொண்டு இருப்பது சேமிப்பு. திருட்டுப் போவதைத்தவிர இந்த சேமிப்பு உங்களை விட்டுப் போகும் அபாயம் வேறு எதுவும் இல்லை. ஆனால் உங்கள் வீட்டில் நீங்கள் வைத்து இருக்கும் பணம் பொதுவாக வளர்ச்சி அடையாது. அதனால் நாம் இங்கே இதுபோன்ற சேமிப்புகளைப் பற்றி இல்லாது, வளர்ச்சி அடையும் முதலீடு பற்றிதான் பேசப் போகிறோம். ஆனால் வளர்ச்சி விகிதம் கூடும்போது பணத்தை இழக்கும் வாய்ப்பும் சேர்ந்தே இருக்கிறது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு இருக்கும் முதலீட்டுக்கான சில வாய்புகள் என்ன என்று பார்த்தோம் என்றால்


1. வங்கி நிரந்தர வைப்புக் கணக்கு ( Fixed Deposit in Banks )
2. நிதி நிறுவங்களின் வைப்புக் கணக்கு ( Non Banking Finance Company - Deposits )
3. சீட்டு நிறுவனங்கள் ( Chit Funds )
4. தனியார் நிறுவனங்களில் பணம் முதலீடு ( Investment in other commercial business )
5. தங்க நகைகள், தங்க நாணயங்கள் ( Gold Coins, Ornaments )
6. நிலம், வீடு, விவசாய நிலம் ( Land and Property )
7. பங்குச் சந்தை ( Share Market )
8. பரஸ்பர நிதித் திட்டங்கள் ( Mutual Funds )
9. கலைப் பொருள்கள் ( Art Collections )

இவைகளில் வங்கிகளில் நீண்டகால வைப்புக் கணக்கில் அநேகமாகப் பணம் பறிபோகும் வாய்ப்பு இல்லை, ஆனால் வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும். தேவைப்படும் போது மிகக் குறைந்த காலத்தில் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி உண்டு.

வங்கி சாரா நிதி நிறுவனங்களில் வங்கிகளைக் காட்டிலும் வட்டி கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும். இந்த நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பை ஏற்ப்படுத்தும் வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். குறுகியகாலத்தில் பணத்தைப் பெறுவது கொஞ்சம் கடினம்.

சிட்டு நிறுவனங்கள் குறுகிய கால சேமிப்பு என்ற பார்வையில் சிறந்தவை, ஆனால் அதிகம் நெறிமுறைப்படுத்தப் படாத தொழில். இழப்பின் வாய்ப்பு அதிகம்.

தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்களின் தொழிலில் முதலீடு செய்வது வருமானம் அதிகம் வரும் ஆனால் இழப்பின் வாய்ப்பு மிக அதிகம். கவனம் தேவை.

தங்க நகைகள், தங்க நாணயங்கள் - அநேகமாக மனித சமுதாயம் தொடங்கிய உடனே ஆரம்பித்த சேமிப்பு. நம் எல்லோருக்கும் மனம் கவர்ந்த சேமிப்பு. உடனடியாக விற்கவோ அல்லது அடகு வைக்கவோ முடியும். எல்லாக் காலத்திலும் எல்லா நாட்டிலும் செல்லக்கூடிய பொருள். ஆனால் சேமிப்பு என்றால் நகையைக் காட்டிலும் தங்க நாணயங்கள் இன்னும் மேல். நகைகளை வாங்கும்போதும் விற்கும்போதும் கூலி சேதாரம் என்று இழக்க நேரிடும். பொது ஆண்டு 2000க்குப் பின்னர் அதிகமாக விலை ஏறியது. ஆனால் நீண்ட கால நோக்கில் லாபகரமான முதலீடாக வல்லுனர்கள் பரிந்துரை செய்வதில்லை.

நிலத்தில் சேமிக்க கைவசம் மிக அதிகமான பணம் வேண்டும். விற்பனை செய்வது கடினம். உடனடியாகப் பணமாக மாற்றமுடியாது. சட்டச் சிக்கல்களும், காப்பாற்றக் கடினமானதும் கூட.

பங்குக்சந்தை நீண்ட கால நோக்கில் மிக அதிகமான வருமானத்தைத் தரக்கூடியது. ஆனால் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளையும், அவர்கள் நடத்தும் தொழிலின் சர்வதேச மாற்றத்தையும் உன்னிப்பாகக் கவனித்துவர வேண்டும். நிபுணர்கள் துணை அவசியம். உங்கள் முதலீட்டை இழக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் - பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மிகச் சிறந்த வழி. நிறுவனங்களின் நிபுணர்கள் வழிகாட்டலில் முதலீடு நடப்பதால் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பானது. தொடர்ச்சியான நீண்டகால முதலீடிற்கு சிறந்த வழி. முதலீட்டை இழக்கும் வாய்ப்பு நேரடியான முதலீட்டை விடக் குறைவு.

கலைப் பொருள்களில் முதலீடு செய்வது இன்னும் இந்தியாவில் வளர்ச்சி அடையாத துறை. சரியான, உண்மையான கலைப் பொருள்களைக் கண்டு அறியப் பயிற்சி தேவை. போலிகள் பல நடமாடும் துறை. சாதாரண முதலீட்டாளர்கள் இதனைத் தவிர்த்து விடுவது நலம்.

உதாரணமாக அஞ்சல் துறை சேமிப்பு, காப்பீட்டில் சேமிப்பு என்று, இங்கே கூறியதைத் தாண்டியும் முதலீடு செய்யப் பல வழிகள் இருக்கலாம்.  நாம் இங்கே பொதுவாக மக்கள் தங்கள் பணத்தை சேமிக்கும் துறைகளைப் பற்றித்தான் பேசி இருக்கிறோம்.

ஓரளவிற்கு பல்வேறு சேமிப்புக்கான வழிகளையும், அதில் உள்ள சாதக பாதகங்களையும் இப்போது நாம் புரிந்துகொண்டு இருப்போம். அதிகமான வருமானத்திற்கு ஆசைப்பட்டு கைவசம் இருக்கும் பணத்தை இழந்து விடாதீர்கள். அதுபோல உங்கள் முதலீடுகளை ஒரே இடத்தில் குவிக்காமல், பல்வேறு இடங்களில் பரவலாக்குங்கள். வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்யும்போது பணம் பறிபோகும் வாய்ப்பு மிகவாகக் குறைகிறது.



உங்களின் ஆசைகளைக் கனவுகளை இப்போது வரிசைப்படுத்தி எழுதுங்கள். இன்றிலிருந்து எந்த காலகட்டதில் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கணக்கிடுங்கள். உதாரணமாக நீங்கள் வசிக்க ஒரு வீடு வாங்க எண்ணினால், எந்த வருடம் வாங்கப் போகிறீர்கள், அதற்க்கு எத்தனை பணம் தேவைப் படும் என்று யோசியுங்கள். உங்கள் குழைந்தைகளின் மேற்ப்படிப்பு, அவர்கள் திருமணம் இவைகளுக்கு எந்த வருடம் எவ்வளவு தேவைப்படும், உங்களுக்கான ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு தேவைப்படும் என்பதை எழுதிப் பார்த்தல், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எங்கே செல்ல நினைக்கிறீர்கள், அதற்க்கான கால அவகாசம் உங்களிடம் எவ்வளவு உள்ளது என்பது தெரிந்து விடும். அப்போது நீங்க செல்ல நினைக்கும் இடத்திற்கு எப்படிப் போவது, அதற்க்கு எங்கே சேமிப்பது சரியாக இருக்கும் என்பதை மிக எளிதாகத் திட்டம் இட்டுவிடலாம்.


தொடர்புடைய பதிவுகள் 

எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை 
பணவீக்கம் - ஒரு எளிய அறிமுகம் 
அவசரக்காலத் தேவைகளுக்கு 

செவ்வாய், 31 மார்ச், 2015

எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை

சேமிப்புக்கான முதல் விதி என்ன என்றால் ஒருபோதும் வருமானத்திற்கு மேலாகச் செலவு செய்யக்கூடாது என்பதுதான். வரவு எட்டணா ஆனால் செலவு பத்தணா என்றால் கடைசியில் துந்தணாதான். நம்மில் பலருக்கு வருமானம் என்பது நிலையானதாகவே இருக்கும், ஆனால் செலவுகள்தான் நிலையானதாக இருக்காது.

நமது செலவுகளை திட்டமிட்ட செலவுகள் என்றும் திட்டமிடாக திடீர் செலவுகள் என்றும் பிரிக்கலாம். வீட்டு வாடகை அலது வீட்டுக் கடனுக்கான மாதாந்திரத் தவணை, நாம் பயன்படுத்தும் வண்டிக்கான தவணை, அதற்கான எரிபொருள், பராமரிப்புச் செலவு, வீட்டில் பயன்படுத்தும் மின்சாரதிர்க்கான கட்டணம், குழந்தைகளுக்கான கல்விக்கான செலவு, பால், அரிசி, மலிகைச்சாமான்கள் இன்னபிற உணவுப் பொருள்களுக்கான தேவை என்பவை திட்டமிட்டச் செலவுகளில் அடங்கும்.

எதிர்பாராமல் வரும் உடல்நலக் குறைவு, சந்தையில் புதிதாக அறிமுகமாகி உள்ள கைபேசி, தொலைகாட்சி ஆகியவற்றை வாங்குவது இவை எல்லாம் திட்டமிடாத செலவுகளில் வரும். உறவினர்கள் வீட்டு விசேச நிகழ்சிகள், நாம் கொண்டாடும் பண்டிகைகள் இதற்க்கான செலவுகள் ஒரு தனி அணியாக இருக்கும்.

சேமிப்பு என்றால் சாதாரணமாக நாம் அனுபவிக்கவேண்டிய விசயங்களைக் கூட அனுபவிக்காமல் கஞ்சத்தனமாக இருப்பது இல்லை. ஆனால் தேவைற்ற செலவுகளைக் குறைப்பதும் முடிந்தால் அவற்றை அறவே நிறுத்துவதும்தான் வாழ்கையை வாழும் வழி. வாழ்க்கை என்பது ஒருமுறைதான் நமக்குக் கிடைப்பது, அதை முறையோடு அனுபவிக்காமல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பட்ட மனிதர்களைப் பற்றி ஔவை

பாடுபட்டுத் தேடித் பணத்தைப் புதைந்து வைத்துக் 
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டு இங்கு 
ஆவிதான் போனபின்பு யாரோ அனுபவிப்பார் 
பாவிகாள் அந்தப் பணம் ?  
என்று வினவுகிறார்.


ஆனால் அதே நேரத்தில் முதலுக்குமேல் செலவு செய்தால் என்ன நடக்கும் என்றால்
ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை 
எல்லோருக்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் 
நல்லோர்க்கும் பொல்லனாம் நாடு 

ஆகவே, உங்கள் செலவுக் கணக்கை முறையாக எழுத ஆரம்பியுங்கள். எழுதிப் பார்க்கும்போது எவை எல்லாம் தேவையான செலவுகள், எவை எல்லாம் தேவையற்ற தவிர்க்கக்கூடிய செலவுகள் என்பதனை நாம் கண்டுகொள்ள முடியும். சந்தையில் கிடைக்கும் பொருள்களில் பல நமக்கு தேவை இல்லாத பொருள்களே. எந்தப் பொருளை வாங்குமுன்பும் ஒருமுறைக்கு இருமுறை அந்தப் பொருள் நமக்குத் தேவைதான என்பதை யோசித்துப் பாருங்கள். 75% தள்ளுப்படி, அடக்கவிலைக்கே விற்பனை, ஓன்று வாங்கினால் ஓன்று இலவசம் என்ற விளம்பரங்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை தங்கள்வசம் இழுக்க விற்பனையாளர்கள் கையாளும் யுக்தி. அதில் மயங்கி தேவையற்ற பொருள்களை வாங்காதீர்கள்.

கடன் அட்டையை உபயோகப்படுத்தி, அதையும் தவணை முறையில் அல்லது குறைந்த அளவிலான பணத்தைச் செலுத்துவது என்பது மீளமுடியாத குழியில் விழுவதற்குச் சமம். குறிப்பிட்ட காலஅளவை தாண்டினால் கடன் அட்டைகளின் வட்டிவிகிதம் ஏறத்தாழ 30% மேல் போகும்.

உங்களிடம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதனை விட  பலரிடம் அதிகமான பொருள்கள் இருக்கும். உங்களிடம் எவ்வளவு குறைவாக இருந்தாலும்  பலரிடம் அதனைவிட குறைவான பொருள்களே  இருக்கும்.  ஒருபோதும் மற்றவர்களைப் பார்த்தோ அல்லது பிறர் உங்களைப் புகழவேண்டும் என்றோ தேவையற்ற பொருள்களை வாங்காதீர்கள். மற்றவர்களுக்காக பகட்டாகக் காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்க்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருள்களை வாங்காமல் இருந்தால் அதுவும் சேமிப்புதான்.

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

தொடர்புடைய பதிவுகள் 
பணவீக்கம் ஒரு எளிய அறிமுகம் 
அவசரக்கால தேவைகளுக்கு   

ஞாயிறு, 29 மார்ச், 2015

பணவீக்கவிகிதம் - ஒரு எளிய அறிமுகம்

இதுவரை நாம் சரியான அளவில் ஆயுள் காப்பீடு செய்து கொள்வதைப் பற்றியும், மருத்துவக் காப்பீடு பற்றியும், அவசரத் தேவைக்கு தேவைப்படும் அளவிற்கு பணத்தைத் தனியாக வைத்துக் கொள்வது பற்றிப் பார்த்தோம்.

இதை எல்லாம் சரியாக முடித்த பின்னரே நாம் முதலீடு பற்றி யோசிக்க வேண்டும். நம்மில் பலர் முதலீட்டையும் சேமிப்பையும் ஓன்று என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. சேமிப்பு என்பது பணத்தைச் சேகரித்து அதனைப் பாதுகாப்பாக வைத்து இருப்பது. ஆனால் முதலீடு என்பது அப்படிச் சேமித்த தொகையில் இருந்து வருமானம் வரும் வகையில் சரியாகப் பயன்படுத்தும் வழியாகும். பொதுவாக சேமிப்பு என்று வரும் போது அதில் பணத்தை இழக்கும் சந்தர்ப்பம் இருக்காது. ஆனால் முதலீடு என்று வரும்போது, பணத்தை இழக்கும் வாய்ப்பு உண்டு. பணத்தை முதலீடு செய்யும் போது அதிக வருமானம் என்றால் இழக்கும் வாய்ப்பு அதிகமாகவும், வருமானம் குறையும் போது இழக்கும் வாய்ப்பு குறைவாகவும் இருக்கும்.

இதுபோக, சேமிப்போ அல்லது முதலீடோ பணவீக்க விகிதத்தைப் பற்றி நாம் அறிந்து இருக்க வேண்டும். பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்துக் கொண்டு நாம் வாங்கும் பொருளின் அளவு. உதாரணமாக 1985ல் ஒரு லிட்டர் பெட்ரோல் எட்டு ரூபாய்க்குக் கிடைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் 2015ல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் அறுபத்தி இரண்டு ரூபாய் கொடுக்கிறோம். அதாவது ஒரே பொருளுக்கு ஏறத்தாழ எட்டு மடங்குக்கு மேலே நாம் இன்று செலவு செய்ய வேண்டியுள்ளது. அதாவது அந்த அளவிற்கு இந்திய ரூபாய் தனது வாங்கும் சக்தியை இழந்து உள்ளது என்று பொருள்.

வல்லுனர்கள் கணிப்பின்படி இந்தியாவில் பணவீக்க விகிதம் என்பது எட்டு சதவிகித அளவில் இருக்கிறது. அப்படி என்றால் சென்ற வருடம் நீங்கள் நூறு ரூபாய் செலவில் வாங்கிய பொருளுக்கு இன்று நூற்றி எட்டு ரூபாய் செலவு செய்யவேண்டி இருக்கும். விலைவாசி அதிகரித்துவிட்டது என்று நாம் பேசுவது இந்தப் பணவீக்க விகிதத்தைப் பற்றிதான்.

பணவீக்கவிகிதம் எட்டு சதவிகிதம் என்றால் எல்லாப் பொருள்களும் ஒரே போன்று விலை ஏறியிருக்க வேண்டியது இல்லை. காய்கறிகள் ஐந்து சதவிகிதமும், உணவுப் பொருள்கள் பத்து சதவிகிதமும், வாடகை பதினைந்து சகவிகிதமும் கூடி, இது போன்று சராசரியாக எட்டு சதவிகிதம் என்று ஆகி இருக்கலாம்.

மத்திய நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைத்து இந்தப் பணவீக்க விகிதம் மிகப் பெரிய அளவில் கூடாமலும் குறையாமலும் இருக்கும் வழிகளைக் கையாண்டு வருகின்றன. வங்கிகளில் வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பதின் மூலமும், சந்தையில் புழங்கும் பணத்தின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமும் பணவீக்க விகிதத்தை அவை சமன் செய்கின்றன.

சேமிப்போ அல்லது முதலீடோ, உங்கள் பணம் வளர்ச்சி அடையும்  அளவு என்பது இந்தப் பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் உண்மையில் உங்கள் கைவசம் இருக்கும் பணம் அதன் மதிப்பை இழந்துகொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குறைந்தபட்சமாக  ஆரம்பநிலைப் பொருளாதார தகவல்களைப் பற்றிய புரிதல்களை கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் சேமிப்பு பணவீக்க விகிதத்தைத் தாண்டி வளர்ச்சி காண்கிறதா என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


தொடர்புடைய பதிவுகள் 

அவசரக்காலத் தேவைகளுக்கு 
நினைவில் வைக்க 

செவ்வாய், 24 மார்ச், 2015

மருத்துவக் காப்பீடு - சில சிந்தனைகள்

வருடம் 1990. வரலாற்று காணாத பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கி இருந்தது. இறக்குமதி செய்யப் பட்ட பொருள்களுக்கு தருவதற்கு அரசிடம் பணம் இல்லை. அரசின்வசம் இருந்த தங்கத்தை அடகு வைத்து, அதன் மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு அரசு அந்த நிலையைச் சமாளித்து. பொதுவுடைமை, சோசலிசம் என்ற நிலை மாறி, உலகமயமாக்கல், தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற பொருளாதாரக் கொள்கைக்கு நாடு தன்னை மாற்றிக் கொண்டது. அதனால் ஏற்ப்பட்ட விளைவுகளைப் பற்றி விவாதிக்கும் இடம் இது இல்லை. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஏற்ப்பட்ட சில மாறுதல்கள் நாம் பேசும் பொருளையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதால் அதனைப் பற்றி மட்டும் நாம் பேசுவோம்.

உலகமயமாக்கலைத் தொடர்ந்து இரண்டு முக்கியமான மாறுதல்கள் ஏறப்பட்டது. ஓன்று கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை அநேகமாக இல்லாமல் போனது. திரும்பும் இடமெல்லாம் முதியோர் இல்லங்கள் உருவாக ஆரம்பித்தன. வயதான காலத்தில் தன் பிள்ளைகள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லாமலே போய், உயிர்வாழும் காலம் வரைக்கும் தேவையான பணத்தைக் கையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனை உருவாகத் தொடங்கியது.

கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சை என்ற சேவைகளில் இருந்து அரசுகள் மெல்ல மெல்ல வெளியேறி, அங்கே தனியார்கள் உள்ளே வரத்தொடங்கினார்கள். தரமான கல்வியும், தரமான கனிவான மருத்துவச் சேவையும் சாதாரண மக்களுக்கு எட்டாத விசயங்களாக மாறத் தொடங்கின.

இதோடு இணைந்து மக்களின் சிந்தனையில் ஒரு மாற்றம் வர ஆரம்பித்தது. நமது பெற்றோர்கள் அநேகமாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கி, அங்கேயே இருபது அல்லது முப்பது வருடங்கள் பணியாற்றி, அங்கேயே ஓய்வு பெற்றுக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது நம்மில்பலர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறுவனம் விட்டு நிறுவனம் மாறிக் கொண்டு இருக்கிறோம். இதனால் ஓய்வுக்கான சேமிப்பு நிதி ( Pension &Provident Fund ) என்பன அநேகமாக இல்லாமலே போய்விடுகிறது. மாறிவிட்ட இந்தச் சூழ்நிலையில் ஒரே ஒரு அறுவைச் சிகிச்சை என்பது பல குடும்பங்களைத் தாங்கமுடியாத பொருளாதாரச் சிக்கல்களில் தள்ளிவிடுகின்றது.

மாறிவிட்ட வாழ்க்கைமுறை, தொற்றாத பல உடல்நலக்குறைவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீண்ட பயணம், வேலையில் உருவாகும் மன அழுத்தம், நேரம் கடந்த உணவு, உணவில் உள்ள ரசாயனங்கள் இவை எல்லாம் இந்தச் சிக்கல்களை இன்னும் விரைவுபடுத்துகின்றன. முப்பது வயது தாண்டிய பலரும் இன்று இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இதயநோய், எலும்பு தேய்மானம் என்ற பல உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பல அலுவலங்கள் தங்கள் ஊழியருக்கு மருத்துவக் காப்பீடைச் செய்து தந்து இருக்கின்றன. ஆனாலும், வேலை மாற்றம் என்று வரும்போது, சேருகின்ற புதிய நிறுவனத்தில் மருத்துவக்காப்பீடு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் இன்றைய நிலையில் பல நிறுவனங்கள் நாற்பது வயதிற்கு மேலே உள்ள ஊழியர்களை பணியில் இருந்து அனுப்பிவிட்டு, அந்த இடத்தைப் புதியவர்களை வைத்து நிரப்பும் போக்கும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. அந்த நிலையில் கிடைக்கின்ற வேலையை எடுத்துக் கொள்ளவோ அல்லது தனியாகப் பணியாற்றவேண்டிய சூழலோ பலர் இன்று சந்திக்கும் யதார்த்தமாக இருக்கின்றது.

எனவே சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே, தனியாக நமக்காக ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது புத்திசாலிதனமான இருக்கும். சிறுவயதில் மருத்துவக் காப்பீடு செய்யும்போது, பொதுவாக பெரும் உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பதால் காப்பீடு அளிக்கப்படுவதில் கேள்விகள் எதுவும் இருக்காது.

இன்றைய நிலையில் மிகச் செலவு வைக்கும் மருத்துவச் சிகிச்சை இதயநோயக்கான சிகிச்சைதான். எனவே அதனைச் சமாளிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஐந்துலட்ச ரூபாய் அளவில்லாவது காப்பீடு செய்துகொள்ளுங்கள்.

சில காப்பீடு நிறுவனங்கள் FLOATER POLICY என்ற முறையில் காப்பீடு வழங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட அளவிற்கான மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீடைக் குடும்பத்தில் உள்ள யாரும் பயன்படுத்திக்கொள்ளும் திட்டம் இது. குடும்ப உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக காப்பீடு செய்வதை விட, இந்தத் திட்டம் சிறப்பானது.

இதுவரை மருத்தவக் காப்பீடு செய்துகொள்ளவில்லை என்றால் உடனே செய்துவிடுங்கள்.

தொடர்புடைய  பதிவுகள்
1. ஒரு கோடி ரூபாய்க் கனவு. 
2. காப்பீடு, காப்பீடு, காப்பீடு 
3. ஆயள் காப்பீடு - எது சரியான அளவு ?
4. ஆயுள் காப்பீடு - இன்னும் கொஞ்சம்   

புதன், 18 மார்ச், 2015

ஒரு கோடி ரூபாய்க் கனவு


எவ்வளவு பணம் கையில் இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக உணருவீர்கள் என்று கேட்டால், அநேகமாக ஒரு கோடி ரூபாய் என்ற பதில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருக்கும். 




அப்படி அந்த ஒரு கோடி ரூபாயை எப்படி சேமிப்பது என்பதைப் பற்றிய எனது கருத்துக்களை இங்கே பதியலாம் என்று நினைக்கிறேன். 

உலகின் மிகப் பெரும் உண்மைகள் எல்லாம் எப்போதும் மிக எளிமையாகவே இருக்கிறது, நாம்தான் அதனை மிகக் கடுமையாக முயன்று கடினமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறோம். சிறுவயதில் நாம் அனைவரும் படித்த ஓன்று தான் "சிறுதுளி பெருவெள்ளம்" என்று,  அப்படி சிறுகச் சேமித்து  சரியாக முதலீடு செய்வதைப் பற்றிதான் நாம் இதில் பேசப் போகிறோம். 

மிக நிச்சயமாக பணம் சம்பாதிப்பதைப் பற்றி இதில் எதையும் நாம் பேசப் போவது இல்லை. அதிலும் லாட்டரி அடிப்பதையோ இல்லை முறையற்ற, சட்டத்திற்கு புறம்பான, தார்மீக வழிக்கு மீறிய வழியைப் பற்றி நாம் இதில் பேசப் போவது இல்லை. மல்டி லெவல் மார்கெட்டிங், நிலத்தை வாங்கி விற்பது, அல்லது பகுதி நேர வேலை என்ற எத்தனைப் பற்றியும் நாம் இதில் பேசப்போவது இல்லவே இல்லை.

முறையான வழியில் சம்பாத்தித்து, அதில் குறையில்லாமல் வசதியாக வாழ்ந்து, சம்பாதிக்கும் பணத்தை சரியாக சேமிப்பது பற்றி, அந்தச் சேமிப்பை முதலீடு செய்வதைப் பற்றி, அந்த முதலீடு செய்வதில் கவனம் கொள்ள வேண்டிய விசயங்களைப் பற்றியே இதில் பேசப் போகிறோம்.

பணம் ஒன்றே எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளும் போது, பணம் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பதையும் நான் ஒத்துக் கொள்கிறேன். தேவையான அளவிற்கு உலகில் பொருள்களும் வாய்ப்புகளும் நிறைந்து இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நினைவில் கொள்க : இதில் எழுத இருக்கும் விஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொருந்தி வரும் என்று ஆகாது. உங்கள் கனவுகள், உங்கள் தேவைகள், உங்கள் முதலீட்டின் மேல் நீங்கள் எதிர்நோக்கும் வட்டி அல்லது வருமானம், அதற்காக நீங்கள் சந்திக்கத் தயாராக இருக்கும் இடர்கள் (ரிஸ்க்) என்பது எல்லோருக்கும் ஓன்று போலவே இருக்காது. இங்கே ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தாது. எனவே இந்தத் தொடரை ஒரு ஆரம்பநிலை வழியாட்டியாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.