ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 10 - இந்தியப் புலிகளின் காவலன் பாதேஹ் சிங் ரத்தோர் பிறந்ததினம்

ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இந்திய புலி வகைகளை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த பாதேஹ் சிங் ராத்தோரின் பிறந்ததினம் இன்று.



ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்புர் மாவட்டத்திலுள்ள சோரடியா கிராமத்தைச் சார்ந்தவர் ரத்தோர். இவரது தாத்தா ஒரு ராணுவ வீரர். இவர் தந்தை காவல் அதிகாரி. டெஹ்ராடூனில் பள்ளிப்படிப்பையும் ராஜ்புதான பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார் திரு ரத்தோர். படிப்பைக் காட்டிலும் நாடகத்திலும் விளையாட்டிலும் மனதை பறிகொடுத்தார் ரத்தோர். கல்லூரி படிப்பை முடித்த ரத்தோர் ராஜஸ்தான் மாநில வனத்துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

இங்கிலாந்து அரசி எலிசபெத் மஹாராணியும் அவர் கணவர் இளவரசர் பிலிப்பும் 1961ஆம் ஆண்டு பாரதம் வந்திருந்தபோது அவர்கள் வேட்டையாட ரத்தம்பூர் காடுகளுக்கு வந்தனர். அவர்களை உபசரிக்கும் பொறுப்பு ராத்தோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதுதான் முதன்முதலில் ஒரு புலியை ரத்தோர் நேரில் பார்த்தார். அதன் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்வேறு காடுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார் ரத்தோர்.

தொடர்ச்சியான வேட்டைகளால் இந்திய புலிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது. அரசு இந்திய காடுகளில் வேட்டையாடுவதை தடை செய்தது. புலிகளைக் காக்கும் Project Tiger என்னும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. ஒரு காட்டில் புலி இருக்கிறது என்றால் அங்கே பல்லுயிர் பெருக்கம் சரியாக உள்ளது என்று பொருள். அடர்ந்த காடுகளில்தான் பொதுவாக புலிகள் வசிக்கும். Ecological Pyramid என்னும் சுற்றுச்சூழல் அமைப்பின் உச்சியில் புலி உள்ளது. புலிகளை பாதுகாப்பது என்பது மொத்த சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது என்பதே ஆகும்.

பாரத நாட்டின் ஒன்பது வனப்பகுதிகளை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. ரத்தம்பூர் சரணாலயமும் அதில் ஓன்று. அந்த சரணாலயத்தின் பொறுப்பாளராக ரத்தோர் நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த வனப்பகுதிக்குள் மக்களின் வசிப்பிடங்களும் இருந்தது. விவசாயத் தேவைக்காக மக்கள் காட்டு மரங்களை வெட்டியும், அங்கே உள்ள நீர்நிலைகளை தூர்த்தும் வந்தனர். பதினாறு கிராமங்களில் வசித்துவந்த ஏறத்தாழ பத்தாயிரம் குடும்பங்களை வனப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் பொறுப்பு ராத்தோரிடம் வந்தது. பரம்பரை பரம்பரையாக ஒரே இடத்தில வசித்து வந்த மக்களை வேறு இடத்திற்கு மாறிச் செல்லுமாறு செய்வது என்பது மிகக் கடினமான செயல். அது மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் வேலை. கடினமான இந்த வேலையை மிகத் திறமையாக ரத்தோர் செய்து முடித்தார்.

மக்கள் நடமாட்டம் குறைந்த பின்னர், காடு தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளத் தொடங்கியது. மரங்கள் வளர ஆரம்பித்தன. புலிகளின் காலடித்தடங்கள் தெரியத் தொடங்கின. ஒரு நாள் ஒரு எருமைமாடு கொல்லப்பட்டு இருந்ததை ரத்தோர் பார்த்தார். அது ஒரு புலியாலதான் வேட்டையாடப்பட்டு இருக்கும் என்று கணித்த ரத்தோர் ஒரு மரத்தின்மீது அமர்ந்து புலிக்காக காத்துக் கொண்டு இருந்தார். ஒரு பெண்புலி தன் குட்டிகளோடு அந்த எருமையை உண்ண வந்தது. மீண்டும் மீண்டும் பல்வேறு நேரங்களில் அதே பெண் புலியை ரத்தோர் பார்க்க நேர்ந்தது. அந்தப் புலிக்கு அவர் தனது மகளின் பெயரான பத்மினி என்று பெயர் சூட்டினார். அந்த வனப்பகுதியில் இருந்த எல்லாப் புலிகளையும் அவரால் தனித்தனியே அடையாளம் கண்டுகொள்ள முடியும். பத்தாயிரம் புலிகளுக்கு நடுவே என் புலிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று அவர் பெருமையாகக் கூறுவது வழக்கம்.

வனவிலங்குகளின் உடலுறுப்புகள் அகில உலக கள்ளச் சந்தையில் பெருமதிப்பு உடையவை. எனவே சட்டத்தை மீறி வேட்டையாடுவது இன்றும் தொடர்கிறது. அதுபோன்ற கயவர்களால் பலமுறை ரத்தோர் தாக்கப் பட்டதும் உண்டு. பொதுவாக நாடோடிகளாகவும், வேறு தொழில் எதுவும் தெரியாதவர்காளாகவும் உள்ள மக்களே வேட்டைக்காரர்களுக்கு உதவி செய்வது வழக்கம். எனவே அப்படியான இனக்குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கு வேறு வருமானம் வரும் கைத்தொழில்களைக் கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தால் சட்ட விரோதமான வேட்டைகளைக் குறைக்கலாம் என்று கருதிய ரத்தோர் தனது சேவை அமைப்பின் மூலம் அதனை முன்னெடுத்தார். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நாட்டில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த திட்டமும் முறையாக செயல்படுத்த முடியாது. எனவே வனவிலங்கு பாதுகாப்பில் பொதுமக்களையும்   பங்குதாரர்களாக ரத்தோர் இணைத்துக் கொண்டார்.

தனது நீண்ட ஐம்பதாண்டு கால வனப்பாதுகாப்பு சேவைக்காக புலி பாதுகாப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை அன்றய பிரதமர் குஜரால் ரத்தோர் அவர்களுக்கு வழங்கினார்.  இந்திய புலிகளை நேசித்த, அவைகளை பாதுகாக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட திரு ரத்தோர் 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி காலமானார். 

சனி, 9 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 9 - அறிவியலறிஞர் அல்லாடி ராமகிருஷ்ணா பிறந்ததினம்

சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிவியலறிஞரும் சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தின் நிறுவனருமாகிய அல்லாடி ராமக்ரிஷ்ணாவின் பிறந்ததினம் இன்று. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்களில் ஒருவரான வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணஸ்வாமி அவர்களின் மகனாக 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் பிறந்தவர் திரு அல்லாடி ராமகிருஷ்ணா அவர்கள்.



தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள பி எஸ் உயர்நிலைப்பள்ளியில் முடித்த ராமகிருஷ்ணா,   இயற்பியல்துறையில் இளங்கலை பட்டத்தை சென்னை மாநிலக் கல்லூரியில் பெற்றார். வழக்கறிஞர் பட்டத்தைப் பெற்ற திரு ராமாகிருஷ்ணாவிற்கு அறிவியல் மீதான ஈர்ப்பு குறையவே இல்லை. அவர்  திரு சர் சி வி ராமன் அவர்களின் வழிகாட்டுதலினால் தத்துவார்த்த இயற்பியலிலும் ( Theoretical Physics ) சிறப்பு சார்பியல் துறையிலும் ( Special Relativity ) ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்தார். மும்பை நகரில் உள்ள அடிப்படை ஆராய்ச்சிக்கான டாட்டா நிறுவனத்தில் ( Tata Institute of Fundamental Research ) ஹோமி பாபா அவர்களின் வழிகாட்டுதலில் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அல்லாடி ராமகிருஷ்ணா தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அப்பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. மேலைநாடுகளில் பல்வேறு அறிவியலறிஞர்களோடு அவருக்கு தொடர்பும் நெருங்கிய நட்பும் உருவானது. அமெரிக்காவில் உள்ள பிரின்செஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள உயர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ( Institute of Advance Studies ) சென்ற திரு ராமகிருஷ்ணா அதுபோன்ற அமைப்பை இந்தியாவிலும் ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தார். புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் அந்த நிறுவனத்தில் மாணவர்களோடு உரையாடுதல் வழக்கம். புது கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும், மாணவர்களை ஆராய்ச்சியின் பக்கம் தூண்டிவிட்டு திசைதிருப்பவும் இந்த உரையாடல்கள் பயன்பட்டன.

சுதந்திரம் அடைந்து பத்தே ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. பொருளாதாரத்தில் நாடு கடினமான பாதையில் முன்னேறிக்கொண்டு இருந்த நேரம் அது. அரசின் உதவியை எதிர்பாராது திரு ராமகிருஷ்ணா சென்னையில் உள்ள தனது வீட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக பல்வேறு அறிவியலாளர்களால் நடத்தப்படும் தொடர் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.

அல்லாடி ராமகிருஷ்ணாவின் பரந்துபட்ட தொடர்புகளால் பல்வேறு அறிஞர்கள் ராமகிருஷ்ணாவின் வீட்டுக்கு வந்து ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய உரைகளை நிகழ்த்தினார்கள். அன்றய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அழைப்பினை ஏற்று புகழ்பெற்ற அணு விஞ்ஞானி நீல்ஸ் போர் 1960ஆம் ஆண்டு பாரதம் வந்தார். சென்னையில் உள்ள அல்லாடி ராமகிருஷ்ணாவின் வீட்டிற்கு வந்து அவரும் மாணவர்களோடு உரையாடினார். அந்த மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ச்சியுற்ற நீல்ஸ் போர் அந்த சந்திப்பைப் பற்றி பிரதமர் நேருவிடம் தெரிவித்தார். பிரதமரை நேரில் சந்திக்க வருமாறு அல்லாடி ராமகிருஷ்ணாவிற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. அந்த சந்திப்பில் அறிவியல் முன்னேற்றங்களை முன்னெடுக்க சென்னையில் Institute of Mathematical Science - தொடங்கப்பட்டது. அறிவியலின் பெரும்பான்மையான கோட்பாடுகளை கணித சமன்பாடுகள் மூலம் நிரூபிப்பதே பல்வேறு ஆராய்ச்சிகளின் முதற்படியாகும். இந்த நிறுவனம் கணிதம், இயற்பியல், கணினிதுறை ஆகியவைகளில் ஆராய்ச்சி செய்து வருகிறது. அல்லாடி ராமகிருஷ்ணா இந்த நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெறும்வரை ஏறத்தாழ இருபத்தி ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பதவியில் இருந்து இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை வழிநடத்தினார்.

இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின்னும் பல்வேறு உயர்கல்வி நிறுவங்களில் அறிவியல் முன்னேற்றங்கள் பற்றி உரை நிகழ்த்தியவாறே இருந்தார். பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அவர் சென்னையில் இருக்கும் போது அவரை நேரில் சந்தித்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கமாக இருந்தது.

தந்து எண்பத்தி ஐந்தாவது வயதில் 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் நாள் அல்லாடி ராமகிருஷ்ணா தனது மகன் வீட்டில் அமெரிக்காவில் காலமானார்.  

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 7 - இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை M S ஸ்வாமிநாதன் பிறந்ததினம்

மேவிய ஆறுகள் பல ஓடி மேனி செழித்த நாடு என்றாலும் ஆங்காங்கே பஞ்சம் மண்டிய நாடும்தான் பாரதம். முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்பியல் இழந்து நடுங்கு துயருறுத்து பாலை என்று படிமம் கொள்ளுமாம் என்று சிலப்பதிகாரம் வரையறை செய்கிறது. ஆனாலும் பதினேழாம் நூற்றாண்டுவரை பசியாலும் பஞ்சத்தாலும் கொத்து கொத்தாக பாரத மக்கள் இறந்ததாக வரலாறு இல்லை. ஆனால் ஆங்கில ஆட்சியினால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் பல லட்சம் மக்கள் மடிந்தனர். தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக் கெட்டிருந்த நாட்டின் கடைக்கோடியில் இருந்த ஒரு மாணவன் தனது படிப்பின் மூலம் இந்த நிலைமையை மாற்றவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டான்.



கும்பகோணத்தைச் சார்ந்த அந்த இளைஞன் மான்கொம்பு சாம்பசிவம் ஸ்வாமிநாதன், சுருக்கமாக எம் எஸ் ஸ்வாமிநாதன். எம் கே சாம்பசிவம் - பார்வதி தங்கம்மாள் தம்பதியினரின் இரண்டாவது மகனாக 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் கோவில்நகரமான கும்பகோணத்தில் பிறந்தவர் இவர். இவர் தந்தை ஒரு மருத்துவர். காந்தியவழியில் அந்நிய துணி புறக்கணிப்பு, எல்லா மக்களும் கோவிலில் நுழையும் போராட்டம் என்று தேசிய சிந்தனையோடு இருந்தவர் அவர். கும்பகோணம் பகுதியில் யானைக்கால் நோயை இல்லாமல் ஆக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தந்தை. சமுதாயசேவை என்பது இதனால் ஸ்வாமிநாதனுக்கு பரம்பரை சொத்தாகவே வந்தது. தனது பதினோராம் வயதில் தந்தையை இழந்த ஸ்வாமிநாதன் தனது தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தார். மருத்துவ குடும்பத்தில் பிறந்தாலும் 1942 - 43ஆம் ஆண்டுகளில் உருவான வங்காள பஞ்சம் இவர் மனதை உலுக்கியது. மருத்துவப் படிப்பை புறக்கணித்து உணவு ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள மன்னர் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படிப்பையும் பின்னர் சென்னையில் உள்ள விவசாயக் கல்லூரியில் விவசாய இளங்கலை பட்டத்தையும் பெற்றார். அதன் பின்னர் டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் முதுகலைப் பட்டத்தையும், பின்னர் நெதர்லாண்ட்ஸ் நாட்டிலும் அதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். வெளிநாடுகளில் வந்த வேலைவாய்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு ஸ்வாமிநாதன் பாரதம் திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் அவர் களமானது. இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தின் ஆசிரியர், ஆராய்ச்சியாளர், ஆய்வு நிர்வாகி, இயக்குனர் என்று படிப்படியாக ஸ்வாமிநாதன் உயர்ந்தார்.

1960களில் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று பாரத அரசு முடிவு செய்தது. உருவானது பசுமைப்புரட்சி திட்டம். உயர் விளைச்சல் தரும் வீரிய விதை ரகங்கள், மேம்பட்ட உரப் பயன்பாடு, முறையான நீர்ப்பாசனம், பூச்சிக்கொல்லி மருந்து நிர்வாகம் என்ற கலவையான திட்டங்களின் செயல்பாட்டினால் நாட்டில் தேவையை விட விவசாய உற்பத்தி அதிகரித்தது. இதனை மத்திய அமைச்சராக இருந்த சி சுப்பிரமணியமும், அதிகாரவர்க்கத்தின் சார்பில் எம் எஸ் ஸ்வாமிநாதனும் செயல்படுத்தினர்.

தேசிய வேளாண் ஆணைய உறுப்பினர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கூட்டமைப்பின் தலைவர், மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மை செயலாளர், மத்திய திட்டக்குழு உறுப்பினர் தேசிய உயிரித் தொழில்நுட்ப வாரியத்தின் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

நாட்டின் ராஜ்யசபையின் நியமன உறுப்பினராக ஸ்வாமிநாதனை ஜனாதிபதி நியமித்தார். தேசிய விவசாயிகள் நல ஆணையத்தின் தலைவர், தேசிய வேளாண் அறிவியல் அகாடமி தலைவர் என்று பொறுப்புகளையும் இவர் வகித்தார்.

பாரத நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இவருக்கு 1989ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

தனியொருவனுக்கு உணவில்லை என்ற நிலையை மாற்றிய காரணத்தால் ஸ்வாமிநாதன் பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

அவரது பிறந்தநாளில் அவரை ஒரே இந்தியா தளம் வணங்கி வாழ்த்துகிறது.

புதன், 6 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 6 - நீர் மேலாண்மை நாயகன் ராஜேந்திரசிங் பிறந்ததினம்

நீரின்றி அமையா யாக்கைக்கெல்லாம் 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 
உண்டி முதற்றே உணவின் பிண்டம் 
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே   - புறம் 18. 

வாழும் உயிர்களுக்கு எல்லாம் மிக மிக அத்தியாவசியமானது தண்ணீர். ஆனாலும் பூமிப்பந்தில் இருக்கும் நீரில் 90% மேலான நீரை குடிதண்ணீராகப் பயன்படுத்த முடியாது. எனவே இருக்கும் நீரை, அதோடு மழைநீரை மிகச் சரியாகப் பயன்படுத்தி, அதனை காப்பாற்றினால்தால் மனிதர்கள் குடிக்கவும், பிற தேவைகளுக்கு பயன்படுத்தவும், விவசாயத்திற்கும், மாற்ற கால்நடைகள் பயன்படுத்தவும் உபயோகிக்க முடியும். அப்படியான ஒரு சேவையில் பல்லாண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒருவரைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரின் அருகில் உள்ள பாக்பட் மாவட்டத்தைச் சார்ந்த ஒரு வசதியான குடும்பத்தில் முதல் மகனாக 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாள் பிறந்தவர் ராஜேந்திரசிங். அவர் தந்தை அறுபது ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த செல்வந்தர். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் காலத்தில் இவரது கிராமத்திற்கு ரமேஷ் ஷர்மா என்ற காந்தியவாதி வருகை புரிந்தார். அவரது தொடர்பு ராஜேந்திரசிங்கை சமுதாயப் பணியில் ஈடுபட வைத்தது. நெருக்கடி நிலையை எதிர்த்து ஜெயப்ரகாஷ் நாராயணன் தொடங்கிய சத்தியாகிரக போராட்டமும், கல்லூரி ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் இவரை இன்னும் ஆற்றுப்படுத்தியது. ஹிந்தி இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், ஆயுர்வேத மருத்துவர் பட்டமும் என்று இரண்டு பட்டங்களை ராஜேந்திரசிங் முடித்தார்.

பட்டப்படிப்பை முடித்த டாக்டர் ராஜேந்திரசிங்  ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப்பணியில் சேர்ந்தார். அங்கே அவர் தருண் பாரத் சங்கா ( இந்திய இளைஞர் அமைப்பு ) என்ற தொண்டு நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மூன்றே வருடத்தில் அந்த அமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பல்வேறு திசைகளில் அமைப்பு செயலாற்றிக்கொண்டு இருக்கிறது, அதனால் ஒரு நீடித்த மாறுதலை உருவாக்க முடியவில்லை என்று அவர் கருதினார். அதனை மற்ற அமைப்பாளர்களோடு விவாதித்தார். அமைப்பின் முழுப் பொறுப்பையும் ராஜேந்திரசிங் வசம் ஒப்படைத்து விட்டு மற்ற அமைப்பாளர்கள் விலகிக் கொண்டனர். அரசாங்க வேலையில் சலிப்படைந்த ராஜேந்திரசிங்  தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் நண்பர்கள் நால்வருடன் ஒரு பேருந்தில் ஏறி அது செல்லும் கடைசி கிராமத்திற்கு பயணம் மேற்கொண்டார். அவர் சென்றடைந்த இடம் ஆல்வார் மாவட்டத்தின் கிஷோரி கிராமம்.



ராஜேந்திரசிங்கும் அவர் நண்பர்களும் அங்கே மக்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியிலும், மருத்துவத்திலும் ஈடுபட்டனர். பொதுவாகவே ராஜஸ்தான் மாநிலம் ஒரு வறண்ட பிரதேசம், அங்கே பெய்யும் மழையின் அளவு மிகக் குறைவு. மக்கள் தண்ணீர்க்குக்காக பல மைல் தூரம் நடக்க வேண்டி இருக்கும் இடம் அது. பெய்யும் மழையை குளங்களிலும், கசிவுநீர் குட்டைகளிலும் சேமிக்கும் பழக்கம் மறைந்து, ஆழ்துளை கிணறுகளை மக்கள் பயன்படுத்தத் தொடங்கி இருந்த காலம் அது. குளங்கள் தூர்வாரப்படாமல், அதனால் மழைநீர் சேமிக்கப்படாது, எனவே நிலத்தடிநீர் இன்னும் இன்னும் கீழே சென்று கொண்டு இருந்தது. "குடிநீர் என்பது இப்போது கல்வியை விட முக்கியம்" என்று ஒரு கிராமத்துவாசி சொன்னது ராஜேந்திரசிங்கை உலுக்கியது. அருகில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த அவர் முடிவு செய்தார். ஆனால் கடினமான உடலுழைப்புக்கு தயாராக இல்லாத அவரது நண்பர்கள் ராஜேந்திரசிங்கை விட்டு விலகிச் சென்று விட்டனர்.

உள்ளூர் இளைஞர்களின் துணையோடு ராஜேந்திரசிங் ஒரு குளத்தை தூர்வாரி அதன் கரைகளை உயர்த்தினார். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தருமல்லவா, அதுபோல மழைக்காலம் வந்தது, குளமும் நிரம்பியது, மெல்ல மெல்ல அருகில் உள்ள நிலத்தடிநீரின் மட்டமும் உயரத் தொடங்கியது. அருகிலுள்ள கிராம மக்கள் இந்த விளைவைப் பார்த்து தங்கள் கிராமங்களிலும் மழைநீர்  சேமிப்பைத் தொடங்கினர். வறட்சியான மாவட்டங்கள் என்று அரசு குறிப்பிட்டிருந்த இடங்கள் வளமையான பகுதிகளாக மாறத் தொடங்கின.

அருகிலுள்ள கிராமங்களில் எல்லாம் சென்று மக்களிடம் பேசிப் பேசி ராஜேந்திரசிங் பெரும் மாற்றத்தை உருவாக்கினார். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீரோட்டம் இல்லாமல் இருந்த ஆர்வரி நதியை மீட்டெடுக்கும் முயற்சி ஆரம்பமானது. மழைநீரை சேமிக்கவும், தொடர்ச்சியான தடுப்பணைகளை கட்டியும் என்ற முயற்சிகளின் மூலம் இன்று ஆர்வரி நதியில் வருடம் முழுவதும் நீரோட்டம் உள்ளது.

அரசாங்கத்தோடு இணைந்து சரிஸ்கா வனவிலங்கு சரணாலயத்தில் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை ராஜேந்திரசிங் உருவாக்கினார். அந்த சரணாலயத்தில் வெளிப்பகுதியில்தான் இன்று தருண் பாரத் சங்காவின் அலுவலகம் செயல்பட்டுக் கொண்டு உள்ளது. இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ராஜேந்திரசிங் உருவாக்கி வருகிறார்.

தன்னலமற்ற சேவைக்காக இவருக்கு மகாசாய் விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது, என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. திரு ராஜேந்திரசிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் ஒரே இந்தியா தளம் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது. 

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 3 - சோதனைகளை வென்று சாதனை அனு ஆகா பிறந்ததினம்



அடுக்கடுக்கான பிரச்சனைகள் சூழும்போதுதான் சாதாரண மனிதர்களுக்கும் சாதனையாளர்களுக்குமான வித்தியாசம் தெரிய வரும். இது ஒரு குடும்பத்தலைவியின் கதை. ஒரு மத்தியதர பார்சி குடும்பத்தைச் சார்ந்தவர் அவர்.  அவரின் தந்தை சிறிய அளவில் ஒரு தொழில்சாலையை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தார். இவரோ மும்பை  நகரில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரமும் அதன் பின்னர் டாடா சமுதாய சேவைக்கான கல்லூரியில் ( Tata Institute of Social Science ) சமுதாய சேவை துறையில் மருத்துவமும் மனநலமும் பற்றிய உயர்கல்வியை முடித்திருந்தார். தந்தையின் தொழில்கூடத்தில் வேலை பார்த்துவந்த ரோஹின்டன் ஆகாவை திருமணம் செய்துகொண்டு, தங்கள் குழந்தைகளை பராமரித்துக்கொண்டு, கூடவே சமுதாயசேவைகளையும் செய்து கொண்டு இருந்தார். அவர்தான் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் நாள் பிறந்த அனு ஆகா அவர்கள்.

தனது மாமனாரின் தொழிலை நல்லமுறையில் விரிவு செய்த ரோஹின்டனுக்கு  1982ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை நடக்கும்போது அவர் பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். எண்களை, எழுத்துக்களை ஏன் மனைவி குழைந்தைகளைக் கூட அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலை உருவானது. ஆனால் தொடர்ந்த பயிற்சியினால் அவர் அந்த தடைகளை உடைத்துக் கொண்டு நலமடைந்து மீண்டும் தொழிலை நடத்தத் தொடங்கினார். கணவனுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தால் அனு ஆகா தங்கள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையில் தன்னை இணைத்துக் கொண்டார். 1995ஆம் ஆண்டு அந்த நிறுவனம் தனது பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட்டு முதல் திரட்டியது.

தனது மகளின் பிள்ளைபேறுக்கு உதவி செய்ய அமெரிக்கா சென்று இருந்த அனு 1995 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பூனாவில் இருந்து மும்பை நகருக்கு சென்று அவரை வரவேற்க வந்துகொண்டு இருந்த அவரது கணவர் அடுத்த மாரடைப்பால் மரணமடைந்தார். தெர்மாக்ஸ் நிறுவனம் இப்போது பங்குதாரர்களாக பொதுமக்களுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்ட ஓன்று. அந்த நிறுவனத்தின்  பங்குகளின் விலை ரூபாய் நானூற்றில் இருந்து ரூபாய் முப்பத்தி ஆறாகச் சரிந்தது. ஏற்கனவே மனிதவள மேம்பாட்டு துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்த அனு ஆகாவை தெர்மாக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினர்.இந்திய தொழில்துறைக்கு அது ஒரு சோதனையான காலகட்டம். பல்லாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அரண்கள் விலக்கப்பட்டு, இந்திய தொழில்கள் நரசிம்மராவ் அறிமுகம் செய்த புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டி போடும் சூழலில் இருந்த நேரம் அது.

தனது கடின உழைப்பாலும், சரியான ஆலோசகர்களின் அறிவுரையை செயல்படுத்தியதாலும் அனு தனது நிறுவனத்தை மீண்டும் லாபகரமாக மாற்றிக் காட்டினார். ஆனாலும் விதியின் கை அவரின் வாழ்க்கையோடு மீண்டும் விளையாடியது.கணவன் இறந்த ஒரே வருடத்தில் அனு ஆகாவின் மகன் குருஷ் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். அடுக்கடுக்கான பிரச்சனைகள் சூழும்போதுதான் சாதாரண மனிதர்களுக்கும் சாதனையாளர்களுக்குமான வித்தியாசம் தெரிய வரும்.. தொடர்ந்த தனிப்பட்ட துயரங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்காமல் இருக்கும்படி அனு ஆகா பார்த்துக்கொண்டார். தொடர்ந்து அவரது தலைமையில் அவர் நிறுவனம் திறமையாகச் செயல்பட்டு இன்றும் லாபகரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பாரத அரசு இவருக்கு 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.  2012ஆம் ஆண்டு இவர் நாட்டின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தற்போது அனு ஆகா Teach for India என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குழந்தைகளின் கல்விக்கு இந்த நிறுவனம் உதவி செய்து வருகிறது.

பாரத நாட்டின் பெண்களின் சக்திக்கு உதாரணமாக விளங்கும் அனு ஆகாவிற்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

சனி, 2 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 2 - மக்களிடம் இருந்து மகோன்னதத்தை நோக்கி பங்கர்ராய் பிறந்ததினம்




மிகப்பெரும் அளவில் தேசிய கல்விக்கொள்கைக்கான ஆதரவான குரல்களும், எதிர்கருத்துகளைம் ஓங்கி ஒலித்துத்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் இதுதான் கல்வியா என்ற கேள்வியையும் சேர்த்தே கேட்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு கல்விமுறை இன்றும் நமது நாட்டில் வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிறது. நமது நாட்டின் சவால்களும் பிரச்சனைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. அதற்கான தீர்வுகளை முதலில் நமது மண்ணின் வேர்களில் இருந்துதான் தேடவேண்டும். நமது சவால்களின் விடைகள் இறக்குமதியான சித்தாந்தங்களில், கருத்துக்களில் இல்லை என்று நினைப்பவர்கள், அப்படி தேடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் பங்கர்ராய்.

ராஜிவ் காந்தி போன்ற உயர்வர்கத்தினர் பயிலும் டூன் பள்ளியில், டெல்லியின் ஸ்டீபன் கல்லூரியில் படிப்பு, ஸ்கவாஷ் விளையாட்டில் தேசிய அளவிலான வெற்றிகள், அந்த விளையாட்டில் உலக அளவிலான போட்டிகளில் பாரத நாட்டின் பிரதிநிதி என்று இருந்த இளைஞரின் கதை இது. அடுத்தபடியாக இந்திய ஆட்சிப் பணியிலோ அல்லது வெளிநாட்டில் படிப்பு அங்கேயே வேலை என்று சென்றிருக்க வேண்டிய வாழ்க்கை. ஆனால் நினைத்தது போல நடக்காமல் இருப்பதால்தான் வாழ்வின் சுவையே இருக்கிறதல்லவா !.

1967  ஆம் ஆண்டு பங்கர்ராய் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் பிஹாரில் பெரும் பஞ்சம் வந்தது. சமுதாய பணிக்கு வருமாறு இளைஞர்களை ஜெயப்ரகாஷ் நாராயணன் அழைத்தார். சிறிது காலம் அங்கே சென்று ஏதாவது செய்யலாம் என்று பங்கர் கிளம்பியபோது அந்த அனுபவம் தன் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் என்று நினைத்திருக்கவே மாட்டார். பஞ்சமும் பட்டினியும், மரணங்களும் அவரை உலுக்கி விட்டது.

பிஹார் - எப்படிப்பட்ட இடம். செழிப்பான கங்கை நதி பாயும் பிரதேசம், மாபெரும் மகத சாம்ராஜ்யம் உருவான நிலம். உலகின் செழிப்பான பாடலிபுத்திர நகரம் இருக்கும் மாநிலம். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து கல்விபெற மாணவர்கள் தேடி வந்த நாலந்தா பல்கலைக்கழகம் இருந்த இடம். ஆனால் தொடர்ந்த சுரண்டலால் வளம் இழந்து, தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டு நின்ற மாகாணம் பங்கர்ராயின் போதிமரமானது. தனது வாழ்வின் குறிக்கோளை  அவர் அங்கே கண்டுகொண்டார். வசதியான அதிகாரமிக்க வாழ்க்கை என்ற எண்ணம் மாறி, மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவானது.

நாட்டின் கிழக்கு பகுதியில் உருவான எண்ணம் செயலானது மேற்குப் பகுதியில் உள்ள ராஜஸ்தானில். வறட்சி புரட்டிப் போடும் பாலைவனப் பிரதேசம். பெண்கள் தண்ணீருக்கே பல மைல் தூரம் நடக்க வேண்டி இருக்கும் இடம், இதில் படிக்க எங்கே நேரம் ? கடுமையான சவால்களுக்கு புதுமையான தீர்வுகள்தான் சரியாக இருக்கும். தண்ணீர் எடுக்கவும் ஆடு மாடு மேய்க்கவும் மட்டுமே  செய்து கொண்டு இருந்த குழந்தைகளை, அதிலும் பெருவாரியானவர்கள் தாழ்த்தப்பட்ட பொருளாதாரரீதியில் சங்கடப்படும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அவர்களுக்காக இரவில் நடைபெறும் பள்ளிகள் உருவாகின. வெளிச்சத்திற்கு சூரிய ஒளியைச் சேமித்து வைத்து இரவில் ஒளி கொடுக்கும் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான விளக்குகளை உருவாகும் தொழில்நுட்பம் மக்களுக்கு கற்பிக்கப்பட்டு அவர்கள் தயாரிக்கும் விளக்குகளே பயன்படுத்தப்படுகின்றன.

இந்தப் பள்ளிகளில் வாழ்க்கைக்கான கல்வி கற்பிக்கப்படுகிறது. அடிப்படை அறிவியல், ஆரம்ப சுகாதாரம், கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு போன்றவை. இதில் கற்ற மாணவர்கள் தங்கள் மேற்படிப்புக்கு மற்ற பள்ளிகளுக்கோ அல்லது கல்லூரிகளுக்கோ அனுப்பி வைக்கப் படுகிறார்கள். இந்தப் பள்ளிகள் இங்கே படிக்கும் மாணவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது. ஒரு பிரதமர், அவருக்கு துணையாக அமைச்சர் குழு என்று மாணவர்களின் பிரதிநிதிகளே பள்ளி நிர்வாகத்தை நடத்துகிறார்கள்.

மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு சூரிய ஒளியின் மூலம் இயங்கும் விளக்குகளும், அடுப்புகளும் அளிக்கப் படுகிறது. அதாவது அதனை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமங்களில் இருக்கும் மூதாட்டியை கண்டறிந்து அவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. குறுகிய காலத்தில் இதனை கற்றுக்கொள்ளும் தாய்மார்கள், பின்னர் தங்கள் கிராமங்களில் சூரிய விளக்குகளை தயாரித்து மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்.

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா என்று உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து எண்பத்தி ஐந்து நாடுகள் தங்கள் குடிமக்களை இங்கே அனுப்பி இந்த தொழில் நுட்பத்தில் பயிற்சி பெற வைத்துளார்கள்.

இந்தக் கல்லூரி எந்த விதமான சான்றிதழ்களை அல்லது பட்டங்களை அளிப்பதில்லை, ஆனால் வாழ்கைக்குத் தேவையான திறன்களை அளிக்கிறது. அதனால் தான் பங்கர்ராய் தனது கல்வி நிலையத்தை வெறும்பாத கல்லூரி என்று அழைக்கிறார்.

சற்றே நாம் கண்களை அகல விரித்துப் பார்த்தால் நமக்கு மிக அருகிலேயே யாரோ ஒருவர் எந்த பலனையும் எதிர்பாராமல் சமுதாயத்திற்கு உழைத்துக் கொண்டுதான் இருப்பார்.

இன்று எழுபத்தி ஐந்தாம் வயதை எட்டிப் பிடிக்கும் பங்கர்ராய் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இன்னும் ஆயிரம் ஆயிரம் பங்கர்ராய்கள் பாரத தாயின் சேவைக்கு உருவாகட்டும்.


வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 1 - ராஜரிஷி புருஷோத்தமதாஸ் டான்டன் பிறந்ததினம்

உத்திரப்பிரதேசத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர், உத்திரப்பிரதேச மாகாணத்தின் சட்டசபையின் நீண்டகால சபாநாயகர், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர், அரசியலமைப்பு நிர்மாண சபையின் உறுப்பினர், வழக்கறிஞர், பாரதரத்னா விருது பெற்றவர் என்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன் அவர்களின் பிறந்த தினம் இன்று 

1982ஆம் ஆண்டில் ப்ரயாக்ராஜ் நகரில் திரு சாலிக்ராம் டான்டன் அவர்களின் மகனாகப் பிறந்தவர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன். வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டமும் அதனோடு சட்டப் படிப்பையும் முடித்து விட்டு ப்ரயாக்ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத்  தொடங்கினார்.முன்னணி வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தேஜ் பகதூர் சப்ருவின் வழிகாட்டுதலில் புருஷோத்தமதாஸ் டான்டன் தனது வழக்கறிஞர் சேவையை நடத்தினார். 1906ஆம் ஆண்டில் தனது வழக்கறிஞர் சேவையைத் தொடங்கிய டான்டன் 1921ஆம் ஆண்டு அந்தத் தொழிலில் இருந்து விலகி முழுநேர மக்கள் பணிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார். 



மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்ட டான்டன் ஜாலியன்வாலாபாக் படுகொலையை விசாரிக்க காங்கிரஸ் கட்சி நியமித்த குழுவில் பணியாற்றினார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரஹம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். 1937ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகள் உத்திரப்பிரதேச சட்டசபையின் சபாநாயகர் பொறுப்பில் பணியாற்றனார்.

1948ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் - ஆமாம் அப்போதெல்லாம் ஆண்டுதோறும் தேர்தல் வைத்து தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது - பட்டாபி சீதாராமையாவை எதிர்த்துப் போட்டி இட்டார். ஆனால் அந்த ஆண்டு அவர் வெற்றி பெற முடியவில்லை. பின்னர் 1950ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆச்சாரிய கிருபளானியை எதிர்த்துப் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். ஆனால் நேரு அவர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நாடு பிளவுபடுவதை கடுமையாக எதிர்த்தார். பிரிவினை என்பது உறுதியான பிறகு இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் உள்ள எல்லா ஹிந்துக்களை இந்தியாவிற்கும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராக தேர்வானார்.  1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகவும் பின்னர் 1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

இந்தியாவின் தேசிய மொழியாக காந்தி பரிந்துரைத்த ஹிந்தியும் உருதுவும் கலந்த ஹிந்துஸ்தானி மொழிக்கு பதிலாக தேவநாகரி எழுத்தில் உள்ள ஹிந்தியைத்தான் நாட்டின் தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாதாடினார்.

மதமாற்ற தடுப்பு சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் புருஷோத்தமதாஸ் டான்டனும், குலபதி முன்ஷியும் பரிந்துரைத்தனர்.

இவரது சேவைகளைப் பாராட்டும் விதமாக பாரத அரசு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை இவருக்கு வழங்கி மரியாதை செலுத்தியது.

தனது எழுபத்தி ஒன்பதாவது வயதில் 1962ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் டான்டன்  காலமானார்.