வெள்ளி, 13 மார்ச், 2020

திவாலாகிறாரா அம்பானி ?


பங்குச்சந்தையில் ரத்தக் களரி. அநேகமாக எல்லா நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்து கொண்டே போகிறது. பிரதமர் மோதியின் செல்லப் பிள்ளைகள் என்று இதுவரை போராளிகளால் தூற்றப்பட்ட அம்பானி மற்றும் அதானியின் நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்துள்ளன. அவர்கள் திவாலாகப் போகிறார்கள், அவர்களையே இந்த அரசு காப்பாற்ற முடியவில்லை என்று வழக்கம் போல நமது போராளிகள் கூக்குரல் போடத் தொடங்கி இருக்கிறார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்தப் பங்குகள் ஏறத்தாழ 634 கோடி. அதில் 49% பங்குகள் அம்பானியின் வசம் உள்ளது. அதாவது 300 கோடிக்கும் சற்று அதிகமான பங்குகள் அவர் வசம் உள்ளது. அம்பானியின் சொத்து மதிப்பு என்பது அன்றய தினம் ஒரு பங்கின் மதிப்பை 300 கோடியால் பெருகினால் வரும் தொகைதான்.

கடந்த 52 வார காலத்தில் 1,600 ரூபாய் அளவில் விற்பனையான பங்கு இன்று 1,060 ரூபாய்க்கு கிடைக்கிறது. எனவே அம்பானியின் சொத்து மதிப்பு மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது என்று போராளிகள் சொல்கிறார்கள்.

நேற்றுவரை பாரத நாட்டுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த அம்பானி ( அதானியும் ) ஓட்டாண்டியானால் இவர்களுக்கு என்ன பிரச்னை ? எதற்கு இப்படியான பெரும் பணக்காரர்களுக்கு இவர்கள் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் ?

வேறு ஒன்றும் இல்லை, மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் விதவையானால் போதும் என்ற பரந்த மனப்பான்மையின் விளைவுதான் இது.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்று காகிதத்தில் எழுதி நக்கிப் பார்த்தால் அது இனிக்காது. அதை அங்கே நெல்லையப்பர் கோவில் எதிரில் மாலை ஆறு மணிக்கு மேலே வரிசையில் இன்று வாங்கி சாப்பிட்டுப் பார்த்தால்தான் அதன் சுவை தெரியும்.

அதுபோல பங்கு மதிப்பை கைவசம் உள்ள பங்குகளின் எண்ணிக்கை கொண்டு பெருக்கி சொத்து மதிப்பை கணக்கிடுவது சிறிய முதலீட்டாளர்களுக்கு வேண்டுமானால் சரியாக வரும், பெரும்தொழிலதிபர்களின் சொத்தை அப்படி கணக்கிடுவது சரிவராது.

ஏன்னென்றால் ஒருவேளை பங்கு ஓன்று 1,600 ரூபாய்க்கு விற்பனையான சமயத்தில் தனது 300 கோடி பங்குகளை விற்பனை செய்ய அம்பானி முடிவு செய்தால், உடனடியாக பங்கின் விலை அதள பாதாளத்தில் விழுந்து விடும்.

நாம் வைத்திருக்கும் நூறு அல்லது இருநூறு பங்குகளை விற்பதால் எந்த நிறுவன பங்கின் விலையும் பெரிய அளவில் மாறாது, ஆனால் பெரிய அளவில் பங்குகள் விற்பனைக்கு வந்தால் விலை வீழ்ச்சி அடையும் என்பது பொருளாதாரத்தின் பால பாடம்.

தொழில்செய்பவருக்கு லாபம் மிக அவசியம், ஆனால் தொழில் நடத்துவதில் உள்ள சவால்தான் பணத்தைக் காட்டிலும் அவர்களை தூண்டுவது.

ஆகவே போராளிகளே ! அம்பானியும், அதானியும் அவர்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.

https://www.ril.com/ar2018-19/ril-annual-report-2019.pdf

2018 - 19ஆம் ஆண்டுக்கான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையை இதோடு இணைத்து இருக்கிறேன். படித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். 

புதன், 29 ஜனவரி, 2020

கிண்டில் மொழியா கிண்டிலின் மொழியா ?

கடந்த பத்தாண்டுகளாக இணையத்தில் உலாத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு பரிச்சியமானவர்தான் ஜோதிஜி. ஒரு புறம் பெரியாரைப் பிடிக்கும், ஒரு புறம் விடுதலைப்புலிகளும் பிரபாகரனும் ஆதர்சம். ஒரு புறம் மோதியையும் பிடிக்கும் என்று கலந்து கட்டிய சராசரி தமிழனுக்காக சரியான உதாரணம். என்ன ஈ வே ராவைப் முகப்புப் படமாக வைத்ததால் ஒரு சாராராலும், மோதியைப் பிடிக்கும் என்று சொல்வதால் முகமூடி சங்கி ஓன்று மற்றவர்களாலும் தள்ளி வைக்கப்பட்டு தனியாக இயங்குபவர்.


பல்வேறு புத்தகங்களைப் படித்து அதன் தாக்கத்தால் எழுதுபவர்கள் ஒருபுறம், தான் கண்ட, அனுபவித்த வாழ்க்கையை முன்வைத்து அதனை எழுதுபவர்கள் ஒருபுறம். ஜோதிஜி இதில் .இரண்டாம் வகை.

செட்டிநாட்டுப் பகுதியைச் சார்ந்த இவர், வேலை நிமித்தமாக திருப்பூருக்கு குடிவந்து ஏறத்தாழ முப்பத்தாண்டுகாலம் திருப்பூர்வாசியாகவே மாறிவிட்டனர். பின்னலாடைத் தொழிலின் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நிலைகளில் வேலை செய்து இன்று தொழில்முனைவோராக வளர்ந்து இருப்பவர்.

மின்புத்தகங்களுக்கான சந்தையை விரிவாக்க, அமேசான் நிறுவனம் சில ஆண்டுகளாக புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யும் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. எழுத்தாளர்கள் என்று தங்களைத் தாங்களே அங்கீகாரம் செய்யும் யார்வேண்டுமானலும் புத்தகங்களை எழுதி, அதனை மின்புத்தகங்களாக உருவாக்கி, இணையத்தில் வெளியிட்டு இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

அதன் பின், நம் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும். பெரியோர்களே ! தாய்மார்களே ! நான் எழுதிய புத்தகத்தை தரவிறக்கம் செய்து, பக்கங்களைப் புரட்டி, புத்தகத்திற்கு உங்கள் விமர்சனங்களை எழுதி, கூடவே தரமதிப்பீட்டில் நட்சத்திர குறியீடு செய்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று எழுத்தாளர்கள் இணையமெங்கும் மின்னல் வேக பிரச்சாரத்தை செய்தனர்.

ஏற்கனவே கவிஞர்களாலும் போராளிகளாலும், செயல்பாட்டாளர்களாலும் நிரம்பியுள்ள தமிழ் கூறும் நல்லுலகு இப்போது மிக அதிகமான எழுத்தாளர்களையும் இனம் கண்டுகொண்டுவிட்டது. வழக்கம் போல நம் திராவிட இனமான சிங்கங்கள் களத்தில் குதித்து, 150க்கும் மேலான புத்தகங்களை வெளியிட்டு, இணைய அணியின் பிரச்சாரத்தின் மூலம் எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்து, அனைவருக்கும் ஐந்து நட்சத்திர மதிப்பு அளித்து, வெற்றிக்கோட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்றனர்.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. இதுதான் போட்டியின் வரைமுறை என்றால் அதனை கைவசம் செய்வதற்கு ஒரு திறமை வேண்டும். இலக்குதான் வழிமுறை முக்கியம் இல்லை என்ற நினைப்பு எனக்கு இருப்பதால் நான் இதனை குறைகூறவில்லை. என்ன செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதி பாட்டுக்கே மூன்றாம் இடம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று பரிசு பெற்ற முதலிரண்டு பாடல்களைக் காணவே இல்லை. எங்கள் படைப்பு காலத்தை வென்று நிற்கும், என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

இந்தப் போட்டிக்கு ஜோதிஜி ஐந்து முதலாளிகளின் கதை என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அவரது நீண்ட நெடிய தொழில் பயணத்தில் அவர் சந்தித்த அவர் பணிபுரிந்த தொழில் நிறுவங்களின் அதன் உரிமையாளர்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இந்த நூல் அளிக்கிறது. வெற்றி பெற்றவர்கள், வெற்றியை நழுவ விட்டவர்கள், பெற்ற வெற்றியை தக்க வைத்தவர்கள், தக்க வைக்காமல் போனவர்கள் என்று நாம் தினம்தோறும் பார்த்த, பார்த்துக்கொண்டு இருக்கும், பார்க்கப் போகும் மனிதர்களின் வாழ்க்கையைத்தான் எழுதியுள்ளார்.

ஓன்று வாங்கினால் இன்னொன்றும் கூடவே கிடைக்கவேண்டும் என்ற தமிழனின் தணியாத தாகத்தை தீர்க்கும் பொருட்டு, ஐந்து முதலாளிகளின் கதையை எழுதியது பற்றியும், அமேசான் நிறுவனம் நடத்திய போட்டி பற்றியும், அதில் நடந்த அரசியல் பற்றியும், அந்தப் போட்டியை எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றியும் கிண்டில் மொழி என்ற அடுத்த புத்தகத்தையும் சுடச் சுட வெளியுட்டுளார்.

தன்னளவில் எந்தப் படைப்பும் மிகச் சிறந்தது என்று கூறிவிட முடியாது. அது அந்தப் படைப்பு வாசகனை எப்படி பாதிக்கிறது என்பதைப் பொறுத்துதான் அது  முடிவாகும். வெவ்வேறு பின்னணியில் இருக்கும் வாசகர்கள் ஒரு படைப்பை வெவ்வேறு விதமாகத்தான் எடை போடுவார்கள். அதன் படி முதலில் விமர்சித்தவர் இந்தப் புத்தகத்திற்கு மூன்று நட்சத்திர தரவரிசையைத்தான் அளித்தார். பாவம், அவருக்கு இந்தப் போட்டியைப் பற்றியோ அல்லது தனக்கு நெருக்கமானவர்களின் படைப்புக்கு ஐந்து நட்சத்திர தரவரிசையை அளிக்க வேண்டும் என்றோ தெரியவில்லை.

தனிப்பட்ட பழக்கம் என்பது வேறு, கட்சி சார்ந்த நிலைப்பாடு என்பது வேறு என்பதில் தெளிவாக இருந்த அவரின் நண்பர்கள் அவரின் புத்தகத்தைப் பற்றி பேசுவதை தெளிவாக தவிர்த்தார்கள். சொக்கா, அமேசான் கொடுக்கிற ஐந்து லட்ச ரூபாய் பரிசும் என் கட்சிக்காரருக்கே கிடைக்கணும் என்ற தருமியின் நிலைதான்.

இதுபோன்ற அரசியல் பற்றி, நாளை யாராவது இந்தப் போட்டியில் கலந்து கொள்ள நினைத்தால் எப்படி கூட்டம் சேர்த்து, இந்தப் புத்தகம் போன்ற ஓன்று இதுவரை வெளிவரவே இல்லை, மனிதகுலத்தை உய்விக்க இதுவே இறுதி புத்தகம் என்று எப்படி சந்தைப்படுத்துவது என்பது பற்றி இதில் ஜோதிஜி தெளிவாக எழுதியுள்ளார்.

கூடவே ஏற்கனவே எழுதியதை மின்புத்தகமாக மாற்றத் தெரிந்தவர்களுக்கு பணம் சம்பாதிக்க ஒரு புது வாய்ப்பு தயாராக உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதைவிட முக்கியம் ஜோதிஜி எழுதிய திருப்பூர் பற்றிய பல்வேறு நூல்களை திரட்டி, கறாராக பிழை திருத்தி, நேர்த்தியாக எடிட் செய்து வெளியிட்டால், அது கடந்த ஐம்பதாண்டு கால திருப்பூரின், பின்னலாடைத் தொழிலின் வளர்ச்சியை, அதனால் ஏற்பட்ட பொருளாதார, சமூக, சுற்றுப்புறசூழல் மாறுபாட்டை விவரிக்கும் கண்ணாடியாக இருக்கும். அப்படியான முயற்சியை ஜோதிஜி முன்னெடுக்கட்டும். 

செவ்வாய், 28 ஜனவரி, 2020

ஆட்டத்தின் விதிகள் ஐந்துதானா ?

வாழ்வின் முதிரா இளம்பருவத்தில் எதை செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்ற புரிதல் இல்லாத காலத்திலேயே விற்பனைத்துறையில்தான் இருக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுத்துவிட்டேன். ஒரே இடத்தில நீண்ட நேரம் இருக்க முடியாத தன்மையா அல்லது பலரோடு பழகி பேசுவதில் எனக்கு இருந்த ஆர்வமா எது அந்த முடிவை எடுக்க என்னைத் தூண்டியது என்பது இன்னும் எனக்கு சரியாகப் புலனாகவில்லை. விற்பனையால் கிடைக்கும் லாபமோ அல்லது அந்த விற்பனையை முடித்துக் கொடுப்பதால் கிடைக்கும் ஊக்கத்தொகையோ அல்ல, விற்பனையில் பொதிந்துள்ள சவால்தான் என்னை எப்போதும் இயக்குகிறது என்பதை இப்போது நான் தெளிவாக அறிந்து வைத்துளேன்.


நான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும் விற்பது என்ற போர்வையில் கனவுகளை விற்பனை செய்வது என் தொழில். கடைசியாக நீங்கள் எதை வாங்கினீர்கள் நண்பர்களே ? அதை ஏன் வாங்கினீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். எதோ ஒரு தேவையை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில்தான் நீங்கள் எதையுமே வாங்கி இருக்க முடியும். தேவையில்லாத பொருளை யாரும் அநேகமாக வாங்கமாட்டார்கள். மனிதனின் அடிப்படை தேவை என்பது உணவு மட்டும்தான். அதைத் தவிர்த்த எதுவும் மனிதனுக்குத் தேவையே இல்லை. ஆனாலும் மக்கள் எதையெல்லாமோ வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எதோ ஒரு தேவையை உருவாக்கி, அல்லது இருப்பதாக நம்பவைத்து அந்த தேவையை பூர்த்தி செய்யும் பொருள் என்னிடம் உள்ளது, அதனை வாங்கிக்கொள்ளுங்கள் என்று விற்பனை செய்வது என்பது அடிப்படையில் கனவுகளை விற்பனை செய்வதுதான்.

இப்படியான கனவுகளை விற்பனை செய்பவர்களைப் பயிற்றுவிற்கும் துறையில் இருப்பவர் இந்த நூலின் ஆசிரியரும் சகோதரருமான ராஜகோபால். காப்பீட்டுத் துறை முகவர்களை பயிற்றுவிக்கும் துறையில் பதினேழு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அந்த அனுபவத்தின் முதிர்ச்சியே  இந்த புத்தகம். மற்ற பொருள்களை விற்பனை செய்வதுபோல அல்ல காப்பீடு விற்பனை செய்வது. மற்றப் பொருட்கள் நீங்கள் அளிக்கும் பணத்திற்கு ஏற்ப கூடுதலான தரத்தோடும், வடிவமைப்போடும் இருக்கும். ஆனால் நீங்கள் என்ன பணம் கொடுத்தாலும் உங்களுக்குக் கிடைக்கபோவது வெறும் காகிதம்தான். அதிலும் பெரும்பாலான நேரங்களில் அந்த காகிதம் தனது உறுதிமொழியை செயலாக்கும் போது, அதை வாங்கியவர் அதனை காணவோ அல்லது அனுபவிக்கவோ முடியாது என்பதுதான் உண்மை. இந்தப் பொருளை நீங்கள் வாங்கினால் மனமகிழ்ச்சியோடு இருக்கலாம் என்று கூறுவதற்கும், ஒரு வேளை நீங்கள் இறந்து போனால் இந்தப் பொருள் உங்கள் குடும்பத்தின் பொருளாதாரநிலை ஆட்டம் காணாமல் இருக்க உதவும் என்று கூறி விற்பதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது, சரிதானே நண்பர்களே.

புதிதாக விற்பனைத்துறையில் இணைபவர்களுக்கு அவர்கள் விற்பனை செய்ய இருக்கும் பொருள்கள் அல்லது சேவைகள் பற்றி, அதன் பயன்கள் பற்றி, அவற்றின் சிறப்பியல்புகள் பற்றி முதலில் கற்றுக் கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து அந்த பொருளையோ அல்லது சேவையைவோ யாரிடம் விற்பனை செய்ய முடியும், அந்த வாடிக்கையாளர்களை எங்கே கண்டுபிடிக்கலாம், அவர்களை எப்படி அணுக வேண்டும், அவர்களோடு எப்படி உரையாட வேண்டும், அவர்களின் ஆவலை எப்படித் தூண்டி, அந்தப் பொருளை வாங்க வைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்படும். இது வரை எல்லாம் சரியாகத்தான் இருக்கும். ஆனால் வாடிக்கையாளரை சந்தித்து, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எதிர்கொண்டு பலநேரங்களில் நிராகரிக்கப்படுவது என்பது விற்பனையாளர்கள் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிதான்.

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு விதம், அவர்களின் தேவைகள் ஒன்றுபோல் இருக்காது. எனவே அவர்களின் கேள்விகளும் சந்தேகங்களும் ஒன்றுபோல இருக்க முடியாது. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப, வாடிக்கையாளருக்கு ஏற்ப பதில் கூறி அவர்களை சம்மதிக்க வைக்க முழுமையாக நூறு சதவிகிதம் விற்பனையில் முடிவது போன்று எந்த பயிற்சியாளலாரும் விற்பனையாளரை தயாரித்து அனுப்ப முடியாது.

பயிற்சி வகுப்பில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்கள் நிஜ வாழ்வில் பயன்படவில்லை என்ற உண்மை எந்தப் பயிற்சியாளரையும் நிலைகுலைய வைத்துவிடும். அப்படியான சவாலில் இருந்து எப்படி திரு ராஜகோபால் மீண்டுவந்தார் என்பதையும், விற்பனையாளரின் கண்கள் வழியாக பார்ப்பதை விட்டு விட்டு வாங்குபவர் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினால் தென்படும் காட்சிகள் எப்படி மாறி வரும் என்பதையும், மாறிய அந்த சூழலில் எப்படி வாடிக்கையாளர்களை எதிர்கொள்வது என்பது பற்றியும் அவரின் அனுபவமே இந்த நூலாக வெளியாகி உள்ளது.

விற்பனைப் பற்றியும், மேலாண்மை பற்றியும், சுய முன்னேற்றம் பற்றியும் உள்ள பல நூல்கள் மேற்கத்திய சிந்தனைப் போக்கை அடிப்படையாகக் கொண்டவை, அதனாலே அவை பாரதம் போன்ற கீழைநாட்டுச் சிந்தனைக்கு ஒத்துவராமலே உள்ளது. அவைகளைப் படித்து, அதனை நமது பாரம்பரிய மரபிற்கு, சிந்தனைப் போக்குக்கு மாற்றி செயல்படுத்த வேண்டி உள்ளது. இப்போதுதான் நமது வேர்களைப் பற்றி, நமது சிந்தனை மரபை ஒட்டி இதுபோன்ற நூல்கள் வெளியாகத் தொடங்கி உள்ளது. அந்த வகையில் ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இந்த நூல் நல்லதொரு தொடக்கமாக இருக்கிறது. பல்வேறு நூல்களைப் படித்து அதனைத் தொகுத்து எழுதுவது என்று இல்லாமல், தனது அனுபவத்தின் மீது எழுதப்பட்ட நூல், விற்பனையாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஆளுமைத் திறனை வளர்த்துக்கொள்ள நினைக்கும் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.

திரு ராஜகோபால் பார்வையில் ஆட்டத்திற்கு ஐந்து விதிகள் என்று இருந்தாலும், பழக்கத்தில் கொண்டு வருபவருக்கு ஐந்தாம் விதியை முதலாவதாகவும், அதோடு முதல் விதியை இணைத்து செயல்படுத்தத் தொடங்கினால் அதுவே போதும் என்று நினைக்கிறேன். 

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

புரட்சிவீரர் சூர்யா சென் - ஜனவரி 12

“மரணம் என் வாழ்க்கையின் வாசற் கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெல்லப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழி மூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன்.

அதுதான் ‘சுதந்திர இந்தியா’ என்ற என் பொற்கனவு.

தோழர்களே! இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்க முயல வேண்டாம். நம் தேசத்தின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள், அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்”


நாற்பதே வயதான அந்த ஆசிரியருக்கு தூக்குத் தண்டனை என்று தீர்ப்பு எழுதப்பட்டு இருந்தது. தூக்குக் கயிற்றை முத்தமிடும் வேளையில் அந்த இளைஞன் தன் நண்பர்களிடம் கூறிய வார்த்தைகள் இவை.

தாயநாட்டின் அடிமை விலங்கை அறுத்தெறிய ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நாடெங்கிலும் பல்வேறு இளைஞர்கள் முன்னெடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். தாயின் காலடியில் தங்கள் உயிரை ஆகுதியாக அளிக்க அவர்கள் ஒருபோதும் தயங்கியதே இல்லை. அப்படியான தியாக இளைஞர்கள் படையைக் கட்டமைத்து அவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்திய சூர்யா சென் அவர்களின் பலிதானதினம் இன்று.

இன்றய பங்களாதேஷில் உள்ள துறைமுக நகரம் சிட்டகாங். அந்த நகரில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்த ரமணிரஞ்சன் சென் அவர்களின் மகனாகப் பிறந்தவர் சூர்யா சென். பெர்ஹாம்பூர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தனது ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார் சூர்யா சென்.  கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ஆங்கில வழி கல்விக்கு மாற்றாக தேசிய சிந்தனைகளின் வழி பாடத் திட்டத்தை அமைத்து மாணவர்களுக்கு கல்வி புகட்டும் பணியில் ஈடுபடலானார். எனவே மக்கள் இவரை மாஸ்டர் தா என்று மரியாதையாக அழைக்கத் தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் அகிம்சா வழி முறையை சூர்யாசென் ஏற்கவில்லை. காந்தியடிகளின் திட்டம் தோல்வியைத் தழுவியது என்று சூர்யாசென் அறிவித்தார். சிட்டகாங்கை தளமாகக் கொண்டு செயல்பட்ட சூர்யாசென்னின் புரட்சிப் படையில் கணேஷ் கோஷ், சுபோத் சௌத்ரி, லோக்நாத் பால், ஆனந்த் குப்தா, பணீந்திர நந்தி, ஆனந்த் சிங், சகாய்ராம் தாஸ், பக்கீர் சென், லால்மோகன் சென், சுகேந்து தஸ்தகீர், ரணதீர் தாஸ் குப்தா, அணில் பந்து தாஸ், நந்திசின்ஹா, சுபோத்ராய், தாரகேஸ்வர் தஸ்தகீர், பிரசன்ன தாலுக்தார், சுபேந்திர தாஸ் முதலிய படித்த இளைஞர்களும், பிரிதிலதா வடகேர், கல்பனா தத் முதலிய வீராங்கனைகளும் சேர்ந்தனர். அந்த இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சியும், துப்பாக்கிச் சுடும் பயிற்சியும், வெடிகுண்டு தயாரித்தல் மற்றும் உபயோகப்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. சூர்யாசென் அமைத்த புரட்சிப் படையில் பயிற்சி பெற்ற நூற்று ஐம்பது இளைஞர்கள் இணைந்து செயல்பட்டனர்.

அஸ்ஸாம்-பெங்கால் ரயில்வே’யின் கருவூலத்தை பட்டப்பகலால், சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சத்தில் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் தமது புரட்சிப்படை தோழர்களுடன் தாக்கிச் சூரையாடினார். சூர்யா சென் போலீசியிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். ஆனால் சூர்யா சென் 1926ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் 1928ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

சிட்டகாங் துறைமுகப் பட்டிணத்தில் பிரிட்டிஷ் அரசு ஆயுதக் கிடங்கு ஒன்றை அமைத்திருந்தது. வங்கப் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு அங்கிருந்துதான் பிரிட்டிஷ் போலீசாருக்கும், இராணுவத்தினருக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு வந்தது.

அந்த ஆயுதக் கிடங்கை கைப்பற்றி சிட்டகாங் நகரை சுதந்திர நகராகப் பிரகடனப்படுத்த வேண்டுமென்று, ‘இந்துஸ்தான் குடியரசு இராணுவம்’என்ற புரட்சிப் படையின் தளபதியை சூர்யாசென்னும் அவரது தோழர்களும் திட்டமிட்டனர்.

சிட்டகாங்க ஆயுதக் கிடங்கை கைப்பற்றும் திட்டம் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி செயல்படுத்தப்பட்டது. புரட்சித் தளபதி சூர்யா சென் தலைமையில் 125 புரட்சி வீரர்கள் ஆயுதக் கிடங்கை முற்றுகையிட்டனர்.

பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். எதிர்த்துப் போரிட்ட பிரிட்டிஷ் இராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கினார்கள். வாள் வீச்சால் பலரை பலி கொண்டனர். புரட்சிப் படையின் ஒரு பிரிவு ஆயுதக் கிடங்கை சுற்றி வளைத்தது. மற்றொரு பிரிவு தொலைபேசி நிலையத்தை தகர்த்தெறிந்து தகவல் தொடர்பை துண்டித்தது. இன்னொரு பிரிவு இரயில் தண்டவாளங்களைத் தகர்த்து போக்குவரத்தைத் தடுத்தது. நான்காவது பிரிவு துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஆயுதக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் மூட்டைகளாக் கட்டி எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை தீ வைத்து கொளுத்தினர். ஆயுதக் கிடங்கின் பிரிட்டிஷ் தளபதி மேஜர் பெர்ரோல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆயுதக் கிடங்கு சூரையாடப்படுவதை கேள்வியுற்ற பிரிட்டிஷ் அரசு, கூர்க்கா படைப் பிரிவின் தளபதி ஜான்சன் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவம் விரைந்த வந்தது. தாக்குதல் தீவிரமடைந்தது. பிரிட்டிஷ் இராணுவத்தினர் 75 பேர் கொல்லப்பட்டனர். புரட்சியாளர்கள் 42 பேர் வீரமரணமடைந்தனர். சூர்யசென் தலைமையிலான புரட்சிப்படை ஆயுத மூட்டைகளுடன் சிட்டகாங் நகரைக் கடந்து, ஜலாலாபாத் மலைப் பகுதிக்கு தப்பிச் சென்றது. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 முதல் 22 ஆம் தேதிவரை நடைபெற்ற போரில் தேவி குப்தா, மனோரஞ்சன் தாஸ், ரஜத்சென், சுதேஷ்ராய், அமரேந்திர நந்தி முதலிய புரட்சிப் படையின் வீரர்களும் களப்பலியானார்கள். புரட்சிப் படையின் வீரர்கள் சிலரை பிரிட்டிஷ் படையினர் கைது செய்தனர்.

சூர்யா சென் தலைமையில் தப்பிச் சென்ற புரட்சிப் படையினர் ‘காலகட்டம்’ என்ற கிராமத்தில் சாவித்திரியம்மாள் என்ற விதவைத்தாயின் குடிசையில் தங்கி தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சூர்யாசென் தலைமறைவு வாழ்க்கையில் விவசாயக் கூலியாகவும், பால்காரராகவும், புரோகிதராகவும், வீட்டு வேலைக்காரராகவும் வேடமிட்டு பல பணிகளைச் செய்தார்.

சூர்யா சென் தலைக்கு பிரிட்டிஷ் அரசு பத்தாயிரம் ரூபாய் விலை வைத்தது. ஆனால், பணத்துக்கு ஆசைப்பட்டு கிராம மக்கள் யாரும் காட்டி கொடுக்க முன்வரவில்லை. மாறாக பாதுகாப்பு அளித்தனர்.

பிரிட்டிஷ் அரசின் காவல்துறை எப்படியோ மோப்பம் பிடித்து, புரட்சித் தளபதி சூர்யா சென்னும் அவரது தோழர்களும் ‘காலகட்டம்’ கிராமத்தில் தலைமறைவாகத் தங்கியுள்ளனர் என்பதை தெரிந்து கொண்டனர்.

பிரிட்டிஷ் இராணுவ கேப்டன் கெம்சன் என்பவனின் தலைமையில் இராணுவம் புறப்பட்டு, மறைந்திருந்த புரட்சியாளர்களை சுற்றி வளைத்தது. சூர்யா சென்னும் அவரது புரட்சித் தோழர்களும் வீரமுடன் போரிட்டனர். புரட்சியாளர்கள் வீசிய வெடிகுண்டுக்கு கேப்டன் கெம்சன் பலியானான். சூர்யா சென்னும், அவரது புரட்சித் தோழர்களும் தப்பிச் சென்றனர்.

தலைமறைவான சூர்யா சென், கைராலா என்ற கிராமத்தில் தமது உறவினராக நேத்ரா சென் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். பிரிட்டிஷ் அரசு அறிவித்த பத்தாயிரம் ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு நேத்ரா சென் பிரிட்டிஷ் அரசின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டான். துரோகி கேப்டன் கேமரான் தலைமையில் பிரிட்டிஷ் போலீஸ் படை கணப்பொழுதில் வீட்டைச் சுற்றி வளைத்து சூர்யா சென்னை கைது செய்தது. ஒரு துரோகி காட்டிக் கொடுத்ததால் பிரிட்டிஷ் அரசு சூர்யா சென்னை கைது செய்து சிறையிலடைத்தது,

நேத்ரா சென்னின் துரோகத்தை அவனுடைய மனைவி சாவித்திரி தேவியால் ஏற்க முடியவில்லை. ஒருநாள் மாலைப் பொழுதில் தனது கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது சூர்யா சென்னின் புரட்சிப் படையின் வீரன் ஒருவன் வீட்டிற்கு வந்து காட்டிக் கொடுத்த துரோகி நேத்ரா சென்னின் தலையை வெட்டி வீசினான். சாவித்திரி தேவி அதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரிட்டிஷ் அரசின் போலீஸ் சாவித்திரி தேவியிடம், நேத்ரா சென்னை வெட்டிக் கொன்றது யார் என விசாரணை மேற்கொண்டது. அப்போது அவள், “கொலையாளியைத் தெரியும், ஆனால் கூற முடியாது”, என்றாள் துணிச்சலுடன். நேத்ரா சென் என்ற ஒரு தேசச் துரோகிக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டதற்காக நான் வருந்துகிறேன். என் கணவன் இந்த சிட்டகாங் கண்டெடுத்த நாயகனைக் காட்டிக் கொடுத்த கயவன். அதன் மூலம் இந்தியத் தாயின் முகத்தில் மாறாத வடுவை உருவாக்கிவிட்டான். அதனால், அந்த நீசனைக் கொன்றவனின் பெயரை நான் கூற விரும்பவில்லை. எங்கள் ‘மாஸ்டர்தா’ சூர்ய சென்னை நீங்கள் தூக்கிலிடுவீர்கள் என்பதை நான் அறிவேன். நாங்கள் அவரை நேசிக்கிறோம். அன்பு ததும்ப எங்கள் நெஞ்சத்தில் வைத்து வணங்குகிறோம். “சூர்யா’ என்றால் சூரியன். ஆம், எங்கள் சூரியனின் புகழ் என்றும் மறையாது. இந்திய வரலாற்றில் சூர்யா சென் பெயர் என்றும் நீங்காது, சுடர் ஒளியாக பரவும்”- என்று அறிவித்தாள் சாவித்திரி தேவி.

சிட்டகாங் சதி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 1930 ஆம் ஆண்டு ஜீலை மாதம் தொடங்கியது. 29 மாதங்கள் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்றது. புரட்சிக்காரர்கள் தமக்காக வாதாட வழக்கறிஞர்களை அமர்த்தவில்லை. குற்றத்தை மறுக்கவில்லை. முhறாக அதை நியாயப்படுத்தி வாதாடினார்கள்.

சூர்யா சென் கட்டளைப்படி, 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று, பிரிதிலதா வடேகர் சில புரட்சித் தோழர்களை அழைத்துக் கொண்டு பஹார்தலி என்ற இடத்தில் உள்ள ‘அய்ரோப்பியர் கிளப்’பை தாக்கினார்.

ஆங்கிலேய உயர் அதிகாரிகள் கிளப்பில் மாலை நேரத்தில் மது அருந்தி, சீட்டாடி, நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரே இடத்தில் கூடியுள்ள ஆங்கிலேய அதிகார வெறிபிடித்தவர்கள் அனைவரையும் வெடிகுண்டு வீசிக் கூண்டோடு கொன்றழிக்க வேண்டும் என்று பிரிதிலதாவிற்கு கட்டளையிட்டார் சூர்யாசென்.

திட்டமிட்டபடி, இரண்டு புரட்சித் தோழர்கள் கோச் வண்டியில் கிளப்புக்குள் முன்புற வழியாக நுழைந்தனர். மற்ற தோழர்கள் பின்புற வழியாக நுழைந்தனர். பிரிதிலதா கரம் உயர்த்தி ஆணையிட்டதும், கிளப்புக்குள் வெடிகுண்டுகளை சரமாறியாக வீசினார்கள். வெடிகுண்டு வீச்சில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மது மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டு, பயந்து பீதியில் மூலைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். ‘ஒருவனைக் கூட உயிர் தப்பவிடாமல் சுட்டுத் தள்ளுங்கள்’ என்று பிரிதிலதா உத்தரவிட்டார். தானும் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் பிரிட்டிஷ் அதிகாரிகளை சுட்டுத் தள்ளினார். பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர்.

பிரிதிலதாவை பிரிட்டிஷ் காவலர்கள் சுற்றி வளைத்தனர். இனிமேல் தப்ப முடியாது என்ற நிலையில் தமது இடுப்பில் செருகியிருந்த ‘பொட்டாசியம் சயனைட்’ டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரிதிலதா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு “இதோ என் துப்பாக்கி. இதை எடுத்துச் சென்று நம் தலைவரிடம் கொடுங்கள். போகும் வரை முடிந்த மட்டும் வெள்ளை நாய்களை சுட்டுப் பொசுக்குங்கள், இதுதான் என் கடைசி விருப்பம். அனைவரும் தப்பி விடுங்கள். தலைவருக்கு என் இறுதி வணக்கம்” என்று முழங்கினார்.

பிரிட்டிஷ் காவல்படையினர் பிரிதிலதாவின் பிணத்தைத்தான் கைப்பற்ற முடிந்தது. இறுதிவரை அந்த புரட்சி வீராங்கனையின் நிழலைக் கூடத் தொடமுடியவில்லை.

சிட்டகாங் ஆயுதக் கிடங்கு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமது தீர்ப்பை வெளியிட்டது. அத்தீர்ப்பில் அனந்த சிங் மற்றும் 12 புரட்சியாளர்கள் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும், மற்ற புரட்சியாளர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. சூர்யா சென் மற்றும் தாரகேஸ்வர் தஸ்தகீர் இருவருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.

சிட்டகாங் மத்திய சிறையில் 1934 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் நாள் சூர்யா சென்னும், தாரகேஸ்வர் தஸ்தகீரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட சூர்யாசென், தாரகேஸ்வர் ஆகிய இருவரும் சிட்டகாங் சிறைச் சாலையில் சித்ரவதை செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர் என்றும், அவர்கள் பிணத்தைத்தான் ஆங்கிலேய ஆட்சியினர் தூக்கிலிட்டனர் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் சடலங்களை பிரிட்டிஷ் போர்க்கப்பலில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வீசியெறிந்து தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.

இந்திய விடுதலைக்காக புரட்சிப்படை அமைத்து பிரிட்டிஷ் அரசின் இராணுவத்துடன் நேருக்கு நேர் நின்று போரிட்ட வீர வரலாறு சூர்யா சென்னுக்கு மட்டுமே உண்டு. ஆண்களோடு, பெண்களும் புரட்சிப் படையில் இணைந்து போராடிய வரலாறு சூர்யா சென்னின் புரட்சிப் படைக்கே உண்டு.


வரலாற்றின் பக்கங்களில் இன்று புதையுண்டு இருக்கும் வீரர்களின் தியாகத்தை என்றும் மனதில் வைப்போம்.  பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம். 

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

கண்ணன் வருகின்ற நேரம் - ஜன்மாஷ்டமி - 23 ஆகஸ்ட்

இன்று கோகுலாஷ்டமி திருநாள். நாடுமுழுவதும் வீடுகள் எல்லாம் வாசலைப் பெருகி, நீரிட்டு மெழுகி, கோலம் இட்டு வாசலில் இருந்து கண்ணனின் காலடித் தடத்தை வரைந்து வெண்ணையும் அதிரசமும் அக்கார அடிசிலும் தயாரித்து கண்ணன் வருகைக்காக மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் பெருநாள்.



பாரத மண்ணின் இதிகாச நாயகன் சந்தேகமே இல்லாமல் நடையில் நின்று உயர் நாயகன் ராமன்தான். ஆனாலும்  மக்களின் உள்ளம் கவர்ந்தவன் கண்ணன்தான். ஆதியும் அந்தமும் இல்லாத இறைப் பொருள் மனிதனாக தோன்றி மக்கள் வாழும் வழியைச் சொல்லிச் சென்றதுதான் கண்ணனின் கதை.

ஒரு மனிதனுக்கு எப்படியெல்லாமோ துன்பங்கள் வரலாம், ஆனால் எல்லாவற்றையும் புன்முறுவலோடு எதிர்கொள்வது எப்படி என்பதையும், மகனாக, சகோதரனாக, நண்பனாக, அரசனாக, ராஜதந்திரியாக, நல்லாசானாக எப்படியெல்லாம் சமுதாயத்தோடு பழக வேண்டும் என்பதையும், இந்த சூழல் எந்த நேரத்திலும் கட்டுப்பட்டு விடாமல் தனித்திருப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்தவன் கண்ணன்.

பிறப்பதற்கு முன்னமே அவனை அழிக்க எதிரி காத்துகொண்டு இருந்தான். ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்த இளமைப் பருவம், வளரும் பருவத்தில் வீசும் இடமெல்லாம் குளுமையைத் தரும் தென்றல் போன்ற செயல்கள், எப்போதும் நண்பர்கள் பட்டாளம் சூழ வாழும் வாழ்க்கை, இசையே வாழ்வா இல்லை இசையோடு வாழ்வா என்று பிரித்து அறியாதபடி குழல் ஊதி மனமெல்லாம் கொள்ளை கொண்டாடும் திறமை, அழைப்பு வந்த உடன் அதனை மறுக்காமல் மதுரா நகருக்குச் சென்று மாமன் கம்சனை வென்ற வீரம், வெற்றி பெற்று அதனால் தனக்கு உரிமையான அரசை ஏற்காமல் அதனை உக்ரசேன மஹாராஜாவிற்கே அளித்த பெருந்தன்மை, கம்சனின் மாமனாரான ஜராசந்தனின் தாக்குதலுக்கு நாட்டு மக்களை பலியிடாமல் மத்திய பாரதத்தில் இருந்து மேற்கு கடற்கரை நகரமாம் துவாரகா நகருக்கு மாறிச் சென்ற யதார்த்தவாதி, அதே ஜராசந்தனை பாண்டவர்களைக் கொண்டு அழித்த புத்திசாலித்தனம், பாண்டவர் தூதுவனாய் அமைதிப் பேச்சுவார்தையை முன்னெடுத்த அமைதியின் தூதுவன், அது முடியாமல் போக பார்த்தனுக்கு சாரதியாக அமர்ந்து, இலக்குகள்தான் முக்கியம் தனிமனிதனலல்ல என்று பாடம் நடத்திய கடமை வீரன், போர்க்களத்தில் சோர்வுற்று இருந்த அர்ஜுனனுக்கு கடமையை செய்ய உத்வேகம் ஊட்டிய மனோதத்துவ நிபுணன். கண்ணனின் பல்முக ஆளுமை என்பது நாம் எல்லோருமே அறிந்ததுதான்.

இன்றய காலத்தில் நாட்டிற்கு கண்ணன் கூறும் செய்தி என்ன ?

பிரச்சனைகளும் பின்னடைவுகளும் எல்லோர் வாழ்விலும் ஒரு தவிர்க்க முடியாத பகுதிதான். அதற்காக புலம்பிக் கொண்டு இருப்பதில் பயனில்லை. வாழுவது ஒரு வாழ்க்கை, அதை ஆனந்தமாக வாழுவது எப்படி என்பது கண்ணன் காட்டும் ஒரு  பாடம்.

இசையை ரசிக்கத் தெரியாத அல்லது இலக்கியத்தில் பரிச்சியம் இல்லாத தலைமுறைக்கு வாழ்க்கையை வாழத் தெரியாது. எனவே இவைகளில் குறைந்த பட்ச பரிட்சயமாவது இருக்க வேண்டும், இது கண்ணனின் கையில் உள்ள புல்லாங்குழல் இசைக்கும் பாடம்.

தேங்கிக் கிடக்கும் நீர் கெட்டுவிடும், வில்லில் இருந்து புறப்படாத அம்பு எந்த இலக்கையும் அடையாது. எல்லா மனிதர்களுக்கும் பயணம் என்பது மிக அவசியம். மதுரா நகரில் இருந்து கோகுலத்திற்கு, அங்கிருந்து மீண்டும் மதுரா நகருக்கு, அங்கிருந்து துவாரகாபுரிக்கு, பிறகு  அஸ்தினாபுரத்திற்கும் குருஷேத்திர படுகளத்திற்கும் என்ற கண்ணன் நடந்த பாதை காட்டும் வழி நமக்கு இதுதான்.

வேடிக்கையும் விளையாட்டும் குறும்புத்தனமும் என்று இருந்த கண்ணன் நல்லாசிரியனாக வழிகாட்டியாக ஜகதகுருவாக தன்னை வெளிகாட்டிக் கொண்டது குருஷேத்திர படுகளத்தில். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் பிறந்த மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்த கீதையை அங்கேதான் கண்ணன் கூறுகிறான். எழுநூறு ஸ்லோகங்களின் சாரம் என்ன ?

"ஆரியனுக்கு அடுக்காததும் புகழைக் கெடுக்கக் கூடியதுமான மனச் சோர்வை விட்டொழி. செயல் செய். செயல் புரிவது என்ற கடமைக்காக செயலைப் புரி. பலனின் மீது பற்றில்லாமல் செயல் செய். பெருந்தோளா ! பாரதா ! எழுந்து நில், செயல் புரி" இது தான் கண்ணன் நமக்கு காட்டும் வழி.

வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் நாடு இருக்கிறது, இந்த நாட்டிற்கான நமது பங்களிப்பை செய்ய நாம் செயல் பட வேண்டும். தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும் தேசத்தின் நன்மைக்கே என்ற அர்ப்பண உணர்வோடு செயல் செய்யவேண்டும் என்பதுதான் நமக்கு கண்ணனின் அறைகூவல்.

நம்மில் உள்ள கண்ணனை கண்டறிவோம், கண்ணனைக் கண்டடைவோம்.

நண்பர்களுக்கு ஒரே இந்தியா தளத்தின் ஜென்மாஷ்டமி வாழ்த்துகள். 

வியாழன், 27 டிசம்பர், 2018

பூனைக்கதை

பூனை பேசுமா ? அதன் போக்கில் ஒரு நெடுங்கதையை அது சொல்லுமா ?  அதுவும் காலத்தைக் கடந்து அல்லது காலத்தை வென்று ஒரு பூனை இருக்குமா ? அப்படி இருந்தாலும் அது தான் தேர்ந்தெடுக்கும் மக்களோடு உரையாடுமா ?

ஏன் நடக்காது. பேசும் மிருகங்களை நாம் புராணங்களில் பார்க்கிறோம், நீதிக்கதைகள் முழுவதும் அவை வந்துகொண்டேதானே இருக்கிறது. ஆனால் ஒரு நவீன நாவலில் பேசுகின்ற மிருகத்தை இப்போது பல ஆண்டுகளாக நாம் பார்ப்பதே இல்லையே. அந்த வகையில் இது ஒரு புதுவிதமான முயற்சி.

ஒரு படைப்பாளிக்கு சுதந்திரம் உண்டுதான், ஆனால் இருவேறு காலகட்டங்களை இணைப்பதற்கு ஒரு பூனையைப் பயன்படுத்தும் சுதந்திரம் உண்டா என்று எனக்கு திட்டவட்டமாகத் தெரியவில்லை. இருவேறு காலகட்டமா, இல்லையே புத்தர் காலத்தில் தொடங்கி ராமானுஜர் காலத்தைத் தொட்டு, பாபரின் அந்திமக்காலத்தில் கைவைத்து - மன்னிக்கவும் கதையை நகர்த்துவது பூனை என்பதால் கால்வைத்து என்பதுதான் சரியாக இருக்கும் - அவுரங்கசீப் காலத்தில் நடக்கும் முதல்பாகம். அங்கே இருந்து எந்த உயரத்தில் இருந்து விழுந்தாலும் அடிபடாமல் விழும் வித்தை தெரிந்த பூனை போல மெகாசீரியல் காலமான நிகழ்காலத்திற்கு வந்துவிடுகிறது கதை.




முகலாயப் படைகள் தக்காண சுல்தான்களைத் தாக்கத் தொடங்கும் காலத்தில் ஆரம்பமாகிறது கதை. வரப்போகும் பேரழிவில் இருந்து கலைகளைக் காக்கும் பொருட்டு ஆறு கலைஞர்களை அவர்களின் ஞானத்தை பின்னெப்போதோ வரவிருக்கும் மக்களுக்காக பாதுகாக்க எண்ணிய ஒரு ஜமீன்தார். அறிவு என்பது தகுதியான அனைவருக்கும் என்பது மாறி பிறப்பின் அடிப்படையிலேயே அளிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் நடக்கிறது கதை.

ஆனால் அதற்கும் அடங்காமல் தானாகவே உருவான - சுயம்புவாகக் கற்றுத் தேறிய  கலைஞர்கள், தங்களின் கலையை பதிவு செய்ய அவர்களின் முயற்சி  மரணத்தின் வாயிலில் நிற்கும்போதும் சுயநலத்தினால் துரோகம் செய்யத் தூண்டும் மனித மனதின் விசித்திரப் போக்கு. இது முதல் பாகம்.

அநேகமாக இதுவரை பதிவுசெய்யப்படாத தொலைக்காட்சி நெடுந்தொடர் தயாரிப்பின் பின்புலம் இரண்டாம் கதையின் களம் கனவுத்தொழிச்சாலைக்கு நுழையும் வழியாகவோ அல்லது அங்கே நுழைய முயன்று அது முடியாதவர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தனியான உலகம், அதன் சவால்கள், துரோகங்கள், வலிகள், ஏமாற்றங்கள் அதன் நடுவே சிலச் சில சந்தோஷங்கள் என்று கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் வாழ்க்கையின் வழியாக நகர்கிறது இது.

இருக்க இடமும்,  வாழ்க்கையை நடத்தும் பணத்திற்கு யோசிக்க வேண்டிய தேவையும் இல்லாமல் கலைக்காகவே தனது நேரத்தை செலவு செய்யும் யோகம் முதல்பாகத்தில் வரும் கலைஞர்களுக்கு கிடைத்து விடுகிறது. இரண்டாம் பாகத்தில் வரும் பாத்திரங்களுக்கு அவர்களின்  நம்பிக்கை மட்டுமே ஊன்றுகோலாக இருக்கிறது.

பதினேழாம் நூற்றாண்டில் நடந்த கதையை இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் பாராவுக்கு பூனையே விவரிக்கிறது. அதை ஆவணப்படுத்த ஆசிரியரை அது வேண்டிகொள்கிறது. ஆசிரியர் பாரா இதில் ஒரு பாத்திரமாகவே வருகிறார்.கதையை தனது விருப்பப்படி நகர்த்த இது ஒரு நல்ல யுக்திதான். சில இடங்களில் அவரது சுயவாக்குமூலம்களும் தென்படுகின்றது

"அவனுக்கு அந்தத் தயாரிப்பாளர் ஒரு தொகையை முன்பணமாகக் கொடுத்தார். அதுநாள் வரை அவன் பார்த்திராத தொகை. பெரும் பணம். அருமை. கிள்ளிக் கொடுக்கவும் யோசிக்கும் கலைகளுக்கு இடையே அள்ளிக்கொடுக்க ஒரு கலை வடிவம். இதை விடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டான். தனது நாவலை முற்றிலும் மறந்துவிட்டு அந்தத் தொடருக்கு அவன் கதை வசனம் எழுத ஆரம்பித்தான்." 

ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை தொலைகாட்சி நெடுந்தொடருக்கு ஏன் செலவிடுகிறார் என்ற கேள்வியை எழுப்பும் மக்களுக்கு போகிறபோக்கில் பதில் சொல்லிச் செல்கிறார்.

கலைஞர்களைப் பராமரிக்கும் தனியார்கள் இல்லாமல் நிறுவனங்கள் வழியேதான் கலைகளை முன்னெடுக்கவேண்டும் என்ற இன்றய நடைமுறை உண்மையை " இது சரியாக வரும். அமைதியாக இருந்து வேடிக்கை பார். நிறுவன பலமில்லாமல் எந்தக் கலை வடிவமும் மக்களிடம் போய்ச் சேரக் காலம் இப்போதெல்லாம் இடம் தருவதில்லை" என்று பதிவு செய்கிறார். அப்படியான நிறுவனங்களை நடத்துபவர்களின் நம்பிக்கையைப் பெற பல நேரங்களில் கலைஞர்கள் தங்கள் சுயமதிப்பை இழக்கத்தான் வேண்டியுள்ளது. வெளிநாட்டுச் சாராயம் குடிக்கும் பூனை. அதனை " சார்" என்று மரியாதையாக அழைக்கவேண்டியுள்ள மனிதர்கள். பலருக்கு கொடுமையாத்தான் இருக்கிறது வாழ்க்கை.

பூனையின் கண்களின் வழியே புலனாகும் உலகமும், மனிதர்கள் பார்க்கும் உலகமும் ஒன்றாக இருக்கவில்லை. சரிதானே நாம் அனைவரும் வெவ்வேறு உலகங்களைத்தானே பார்த்துக்கொண்டு இருக்கிறோம். தொட்டும் தொடாமலும் விரியும் கதைக்களத்தின் நடுவே உருவாகும் கேள்விகள் இந்தப்படைப்பை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது. வறுமையும் பசியும் பல மனிதர்களின் கனவுகளைக் கலைத்துப்போடும் இரக்கமற்ற முகத்தையும் வாழ்க்கை தன்வசம் வைத்துள்ளது. எந்தத் துறையானாலும் வெற்றிபெற்ற ஒவ்வொரு மனிதர்க்குப் பின்னால் ஆயிரமாயிரம் தோல்விக்கதைகள், நிறைவேறாத கனவுகள், ஏமாற்றத்தினால் சின்னாபின்னமான உறவுகள். ஆனாலும் எதோ ஒரு நம்பிக்கை எல்லார் வாழ்க்கையையும் நகர்த்திக்கொண்டு செல்கிறது. கனவுகள் கலைந்து வயிற்றுப் பிழைப்புக்காக எதோ ஒன்றை அது பிடிக்கிறதோ இல்லையோ உயிர் வாழ செய்யத்தான் வேண்டியுள்ளது.

வழக்கம் போல பாராவிற்கே உரித்தான மெலிதான நகைச்சுவை ஊடும் பாவுமாக இந்தப் படைப்பு முழுவதும் வருகிறது.

" நான் எழுதி முடித்ததும் இந்த நாவலை ஒரு பூனைக்கு சமர்ப்பணம் செய்யப்போகிறேன் " என்று கூறும் பாரா இந்த நாவலை கொஞ்சம் பூசினாற்போல உள்ள, மாத்வ ஹிந்துத்துவ  பூனையான நண்பர் ஹரன் பிரசன்னாவுக்கு சமர்ப்பித்து உள்ளார்.

நல்ல படைப்பு - நன்றி பாரா )))  

சனி, 11 நவம்பர், 2017

விதி சமைப்போர் வருக

பல்லாண்டுகளுக்கு முன் நாம் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். . அரைகுறையாக அல்ல முழுமையாக அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் காலம் இன்று கனிந்து இருக்கிறது. நள்ளிரவு நேரத்தில், உலகமே உறங்கிக்கொண்டு இருக்கும்போது இந்தியா உயிர் துடிப்போடு விடுதலைக்காக விழித்து எழுந்து இருக்கிறது. வரலாற்றின் பக்கங்களில் மிக அரிதாகவே நடக்கக்கூடிய நிகழ்ச்சி இது. பல்லாண்டுகளாக அடக்கப்பட்ட ஒரு நாட்டின் ஆன்மா இன்று விழித்தெழுகின்றது. ஒரு யுகத்தின் முடிவாக பழமையில் இருந்து புதுமைக்கு நாம் நடக்க இருக்கிறோம். இந்த நேரத்தில் இந்தியாவுக்காகவும், அதன் மக்களுக்காகவும் அதைவிட மானுட சமுதாயத்திற்க்காகவும் நாம் நம்மை அர்பணித்துக்கொள்வோம். 

வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த வாசகங்கள் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேருவால் இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது கூறப்பட்ட வாசகங்கள். ஆனால் நேருவின் இந்தக் கனவு நனவாக இந்தியா ஏறத்தாழ அறுபத்தி ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.

2014ஆம் ஆண்டு மே மாதம் ஒரு புது யுகத்தின் தொடர்ச்சியாக அமைந்தது. எந்த கூட்டணியும் இல்லாது அறுதிப் பெரும்பான்மையோடு திரு நரேந்திரதாஸ் மோதி அவர்களின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி  ஆட்சியை அமைத்தது. மூன்றாண்டுகளில் பாஜகவின் சாதனைகள் என்ன என்றும், அதைவிட இன்னும் எதையெல்லாம் செய்யவேண்டும் என்பதையும் சற்றே பார்ப்போம்.

நெடுஞ்சாலைத்துறை : 

ஒரே இடத்தில் தேங்கி நிற்காமல், பயணங்களை மேற்கொண்ட மனிதர்களே நாகரிகத்தை உலகெங்கும் பரப்பினார்கள். பயணம் மேற்கொள்ள முக்கியமான தேவை நல்ல சாலைகள். அதனால்தான் இரண்டாயிரம் வருடங்கள் கழிந்த பின்னரும் அசோகரைப் பற்றியும் இன்ன பிற சிறந்த அரசர்களைப் பற்றியும் படிக்கும் போது அவர்கள் பயணிகள் செல்ல சாலைகளை அமைத்தார்கள், அதில் நிழல் தரும் மரங்களை நட்டனர் என்று படித்துக்கொண்டு இருக்கிறோம்.

இந்தியா முழுவதையும் நான்குவழிச் சாலைகளால் இணைக்க வேண்டும் என்று யோசிக்க அதனை உருவாக்க பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய் ஆட்சிக்கு வரவேண்டி இருந்தது. 1980 ஆண்டில் 29,23 கிலோமீட்டர் அளவில் இருந்த தேசிய நெடுஞ்சாலை 2012ஆம் ஆண்டு முடிவில் 76, 818 கிலோமீட்டராக உயர்ந்தது. ஏறத்தாழ 47,000 கிலோமீட்டர் என்ற அளவில் புதியதாக தேசிய நெடுஞ்சாலை முப்பத்தி இரண்டு ஆண்டுகளில் அமைக்கப்பட்டது. அதில் 23,800 கிலோமீட்டருக்கான சாலை 1997 - 2002 காலகட்டத்தில், அதாவது வாஜ்பாய் பிரதமராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அமைக்கப்பட்டது. அதாவது ஆறில் ஒரு பங்கு காலமே ஆட்சி செய்த வாஜ்பாய் ஐம்பது சதவிகிதமான சாலைகளை அமைத்தார். ( 1 ) இது யாரோ சங்கிகளோ அல்லது பக்தர்களோ தரும் தகவல் அல்ல. உச்சநீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு தாக்கல் செய்த தகவல் இது.

மோதி தலைமையிலான அரசு நாள் ஒன்றுக்கு 41 கிலோமீட்டர் சாலை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு தொடங்கி நாள் ஒன்றுக்கு 22 கிலோமீட்டர் என்ற அளவில் சாலைகளை அமைத்து இருக்கிறது. 2016 - 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 8,200 கிலோமீட்டர் அளவில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது ( 2 )


துறைமுகங்கள் : 

நளி இரு முந்நீர் நாவாய் ஒட்டி 
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக !  ( புறம் 66 ) 

காற்றின் ஆற்றலை வென்று அதனை அடக்கி ஆண்டு அலைக்கடலில் கப்பல் ஒட்டியவர்களின் வாரிசே என்று கரிகால்பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடும் பாடல் இது. அப்படி திசையெங்கும் கப்பல் ஒட்டவும், அதன்மூலம் வாணிபத்தைப் பெருக்கவும் பாஜக அரசு புதியதாக 12 துறைமுகங்களை உருவாகும் பணியில் இருக்கிறது ( 3)
 அதோடு இணைந்து 14 கடற்கரை பொருளாதார மண்டலங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன ( 4 ). சரக்குகளை கையாளும் செலவு சீனாவை ஒப்பிடும்போது இந்தியாவில் 35% அதிகமாக உள்ளது. இதனால் நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களின் விலைகளும் அதிகமாக உள்ளது. சாகர்மாலா என்ற இந்த திட்டத்தினால் பொருள்களைக் கையாளும் செலவு கணிசமான அளவிற்கு குறைக்கப்படும்.

விமானப் போக்குவரத்து: 

இந்தியாவில் 499 விமானநிலையங்களும், விமானம் ஏறி இறங்க வசதியான ஓடுதளங்களும் உள்ளன. அதில் 80 விமானநிலையங்களே இன்று பயன்பாட்டில் உள்ளன. பயன்பாட்டில் இல்லாத பல விமான நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் பாஜக அரசு ஈடுபட்டு உள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக அதாவது 500 கிலோமீட்டர் தொலைவுக்கான பயணத்தை ரூபாய் 2,500/- என்ற அளவில் பயணிக்கும் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது ( 5 )

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவையில் சர்வதேச விமான நிலையங்களும் ஓசூர், நெய்வேலி, சேலம், தூத்துக்குடி, வேலூர் ஆகிய நகரங்களில் உள்நாட்டு விமான நிலையங்களும் உள்ளன. ( 6 ) சரியான திட்டமிடல் இருந்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வேலைக்காக தலைநகர் சென்னைக்கு பயணிக்கும் நேரமும், அங்கே தங்கி இருக்கும் செலவும் இல்லாமலேயே போய் விடும்தானே.

மோதி அரசில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது ரயில்வே துறை என்றால் அது மிகை அல்ல. 2009 - 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக 1500 கிலோமீட்டர் அகல ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் 2015 - 2016ஆம் ஆண்டில் மட்டும் 2,800 கிலோமீட்டர் அளவில் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இதே காலகட்டத்தில் சராசரியாக 1184 கிலோமீட்டர் அளவில் நடைபெற்றுவந்த மின்மயமாக்கல் ( Electrification ) 1730 கிலோமீட்டராக உயர்ந்து உள்ளது. சமுதாய வலைத்தளங்கள் மூலம் பயணிகள் தெரிவிக்கும் குறைகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. பல்லாண்டுகளாக இணைக்கப்படாமல் இருந்த வடகிழக்கு மாநிலங்களுக்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ( 7 )



உள்கட்டுமானப் பணிகள் 

குஜராத் மாநிலத்தில் தொடங்கி ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் வழியாக  உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பிஹார், மேற்கு வங்காளம் என்று தொடர்ந்து சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம் என்று கடந்து மணிப்பூர் மிசோரம் வரை சாலை வழியாக இணைக்கும் பாரதமாலா திட்டம் என்றும்



இந்தியாவின் துறைமுகங்களை நவீனமயமாக்கி, புதிய துறைமுகங்களை அதோடு இணைந்த கடல்சார் பொருளாதார மண்டலங்களையும் உருவாகும் சாகர்மாலா திட்டம் எனவும் இந்தியாவின் உள்கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டு இருக்கின்றன.



சேது பந்தனம் என்ற பெயரில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ரெயில்வே பாதைகளில் மேம்பாலம் மற்றும் 1500 இடங்களில் உள்ள பழைய மேம்பாலங்களை விரிவாக்கும் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

இந்தியாவில் உள்ள நதிகளின் வழியாக சரக்கு மற்றும் ஆட்கள் போக்குவரத்தை முன்னெடுக்கும் முயற்சிகளும் ஆரம்பமாகி உள்ளது. ( 8 )


அனைவருக்குமான வங்கி சேவை : 

பல்லாண்டுகளாக இந்தியாவின் ஏழை எளிய மக்கள் நெருங்காமலே இருந்த நிலையை மாற்றி அவர்களையும் வங்கி சேவைக்குள் கொண்டு வந்தது மோதி அரசின் மிகப்பெரும் சாதனை. இன்றய தேதியில் ( 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பது கோடி மக்கள் வங்கி சேவைக்குள் வந்து உள்ளனர். அவர்கள் மூலம் ஏறத்தாழ 67 ஆயிரம் கோடி ரூபாய்கள் சேமிக்கப்பட்டு உள்ளது. அநேகமாக இன்றய நிலைமையில் வங்கி கணக்கு இல்லாத குடும்பமே இல்லை என்று கூறி விடலாம் ( 9 )




முத்திரை பாதிக்கும் முத்திரா திட்டம் : 

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லாத ஓன்று. அதுபோக நமது பொருளாதாரம் என்பதே சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களை நம்பியே உள்ளது. அப்படிப்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கவும் அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவவும் உருவானதே முத்திரா திட்டம். இதன்படி ரூபாய் ஐம்பதாயிரம் முதல் ரூபாய் பத்து லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மூன்றரைக் லட்சம் கோடி ரூபாய்கள் கடனாக வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலமாக ஐந்தரை கோடி வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கிறது ( 10 )

அதிலும் தமிழகத்தில் மட்டும் ஐம்பத்திமூன்று லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு ரூபாய் பதினெட்டாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேலாக கடன் வழங்கப்பட்டு உள்ளது. ( 10 a ) \




சமையல் எரிவாயு : 

இந்தியாவில் உள்ள 24 கோடி குடும்பங்களில் ஏறத்தாழ 10 கோடி குடும்பங்கள் தங்களின் உணவைத் தயாரிக்க விறகு, கரி போன்றவற்றையே நம்பி உள்ளனர். அவர்களுக்கு சமையல் எரிவாயு உருளை தரும் திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு உள்ளன ( 11 ) இதனால் புதிதாக 5000 எரிவாயு உருளைகள் விநியோகஸ்தர்களும் உருவாகி உள்ளனர்


மோதி ஆட்சிக்கு வரும்வரை சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் என்பது எல்லோருக்கும் வழங்கப்பட்டு வந்தது. மோதி வசதி படைத்த மக்களை அந்த மானியத்தை வேண்டாம் என்று விட்டுக் கொடுக்குமாறு கோரினார். அதோடு மானியவிலையில் வாங்கி அதனை உணவுவிடுதி / தொழில் செய்ய என்று பயன்படுத்தி வந்ததை தடுத்து நிறுத்தினார். இதனால் பொதுமக்கள் பணம் 21,000 கோடி ரூபாய்க்கும் மேலாக சேமிக்கப்பட்டு உள்ளது


சூரிய ஒளியின் மூலமாக மின் உற்பத்தி :

நாடு வளர்ச்சி அடையும் போது அதோடு இணைந்தே மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். அதனை சமாளிக்கவும் வேண்டும், அதே நேரத்தில் அதற்காக நிலக்கரியையோ அல்லது பெட்ரோலையோ இறக்குமதி செய்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக மாற்று வழிகளில் மின்சார உற்பத்தி என்பது முன்னெடுக்கப்பட்டு உள்ளது. சூரிய ஒளியைப் பயன்படுத்தி இன்று பன்னிரெண்டாயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்தப்படுகிறது. மோதி பதவியேற்கும் ஆண்டில் இது இரண்டாயிரத்து அறுநூறு மெகாவாட்டாக இருந்தது. அதாவது மூன்று ஆண்டுகளில் ஆறு பங்கு வளர்ச்சி. ( 12 )

அதுமட்டுமல்ல தூய்மையானதும், செலவு குறைவானதுமான மாற்று வழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் மோதி அரசு நிலக்கரியால் இயங்கும் பதினாலாயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்ட மின் நிலையங்களை தேவை இல்லை என்று நிறுத்தி விட்டது. ( 13 ) இதன் மூலமாக தேவையில்லாத நிலக்கரி இறக்குமதியும் அதனால் ஏற்படும் நமது பணம் வெளிநாடுக்குச் செல்வதும் தடுக்கப்பட்டு உள்ளது.


மின்சேமிப்பு :

மின்சார உற்பத்தியைப் பெருக்குவது என்பது ஓன்று, அதே நேரத்தில் மின்சாரத்தை சரியாக பயன்படுத்தி, அதனால் மின்சாரத்தை சேமிப்பது என்பது இன்னொரு வழி. அதற்கான உத்திதான் LED பல்புகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் திட்டம். இதன்படி நாடெங்கும் 25 கோடிக்கும் மேலான LED பல்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பதினாலாயிரம் கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் பணம் சேமிக்கப்பட்டு உள்ளது. ( 14 )



சுகாதாரம் :

தான் பதவியேற்ற ஆண்டிலேயே மோதி தனது குறிக்கோளாக குறிப்பிட்டது நாடு முழுவதும் கழிப்பறைகள் இல்லாத வீடுகளே இருக்கக்கூடாது என்பதுதான். ஸ்வட்ச் பாரத் திட்டத்தின்கீழ் இரண்டரை கோடிக்கும் மேலான கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. ( 15)



இதுமட்டும் அல்ல நாட்டுமக்கள் அனைவருக்கும் ஆதார் எண் கொடுத்தாலும், அதனை அவர்கள் வங்கி கணக்கோடு இணைத்ததாலும், மக்களுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கே செலுத்துவதன் மூலம் மூன்றாண்டுகளில் பாஜக அரசு ஏறத்தாழ ஐம்பதினாயிரம் கோடி ரூபாயை முறைகேடாக செல்வதைத் தடுத்து இருக்கிறது. ( 16 ) மானிய விலையில் யூரியாவை வாங்கி அதனை வெளிச்சந்தையில் விற்பதை தடுக்கும் விதமாக விவசாயத்திற்குப் பயன்படும் யூரியாவில் வேப்பெண்ணெய்யை கலப்பதன் மூலம், அதனை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைமையை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது. தேவையில்லாதவர்களுக்கு மானியங்கள் செல்வதைத் தடுக்கும் இந்த முயற்சியும் மிகச் சிறந்த பலனை உருவாக்கி உள்ளது.

இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் எவையெல்லாம், அதில் எதெல்லாம் நிறைவேறி உள்ளது, எவையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றது. எவை எல்லாம் இன்னும் சிறப்பாக செய்யப்படவேண்டும், எவை முன்னெடுக்கப்படவில்லை என்ற தகவல்கள் இந்த இணையத்தளத்தில் உள்ளன. ( 17 )

இவை எல்லாவற்றையும்விட முக்கியமான முன்னேற்றம் என்பது இந்த மூன்றாண்டு காலத்தில் இந்த அரசின்மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பதுதான்.

அதைவிட முக்கியானது என்று நான் கருதுவது இந்த மூன்றாண்டில் இணையதளங்களின் புழங்கும் பலரை மிகக்குறுகிய காலத்தில் பொருளாதார நிபுணர்களாக, அரசியலமைப்பு வல்லுனர்களாக, கல்வியாளர்களாக, வெளியுறவுத்துறை வித்தகர்களாக, பாதுகாப்புத்துறை அறிஞர்களாக, சுற்றுப்புறச்சூழல் வல்லுனர்களாக அதைவிட முக்கியமாக கேலிச்சித்திரங்கள் ( மீம்ஸ் ) உருவாக்குபவர்களாக மாற்றியதுதான்.

இந்த அரசு இன்னும் என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் தனிப்பட்ட முறையில் வருமானவரி வரம்பு குறைந்தபட்சம் வருடம் ஒன்றுக்கு ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்தப்படவேண்டும். சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படவேண்டும் அல்லது சுங்கம் குறைக்கப்பட வேண்டும். பயன்படாமல், அழுகிப்போகும் உணவுப்பொருள்களை பத்திரப்படுத்தும் குளிரூட்டி நிலையங்கள் எல்லா தாலுகா அளவிலும் நிறுவப்படவேண்டும்.இதுபோன்ற செயல்களை இந்த அரசு செய்யும் என்று நான் நம்புகிறேன்.

விதி சமைக்கும் வழியில் உள்ள பிரதமருக்கு நமது நல்வாழ்த்துகளை, ஆதரவை வழங்குவோம். ஒருவேளை தவறு செய்வதுபோல் தெரிந்தால் அதனை சுட்டிக்காட்டுவோம். நாட்டின் முன்னேற்றம் என்பது நம் எல்லோரின் பொறுப்பும்தான். அதனைவிட்டுவிட்டு வெறும் வெறுப்பை உமிந்துகொண்டு இருப்பதில் எந்தப்பயனும் இல்லை.


தரவுகள்


சாலைகள்

1, https://timesofindia.indiatimes.com/india/NDA-regime-constructed-50-of-national-highways-laid-in-last-30-years-Centre/articleshow/20869113.cms

2 (a) http://www.hindustantimes.com/india-news/government-constructs-22-km-of-roads-per-day-misses-target-of-41-km-by-half/story-nLLJazVO6TZlzgx7lIu7iO.html

2 (b) http://www.thehindu.com/business/Industry/pace-of-laying-of-roads-rises-to-22-km-daily-in-2016-17/article18113295.ece

துறைமுகம்

3, https://www.joc.com/international-trade-news/infrastructure-news/asia-infrastructure-news/indian-port-development-program-makes-strides_20170110.html

4, http://www.firstpost.com/india/sagarmala-project-proposes-14-coastal-economic-zones-across-india-3130866.html

4 ( a ) http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=159037

விமானப் பயணம் 

5, http://www.india.com/news/india/udan-scheme-list-of-45-new-airports-over-70-new-routes-announced-today-5-airlines-make-the-cut-1976363/

6, https://en.wikipedia.org/wiki/List_of_airports_in_India#Tamil_Nadu

ரயில்வேத்துறை

7, http://trak.in/info/2790-indian-railways-suresh-prabhu-achievements/

உள்கட்டுமானம் :

8 ( a ) http://www.financialexpress.com/india-news/narendra-modis-top-10-signature-infrastructure-projects-to-power-new-india/613121/

8 ( b ) https://www.macquarie.com/cn/about/newsroom/2016/infrastructure-improvement-in-india

8 ( c ) https://www.bloomberg.com/news/articles/2017-02-01/modi-plans-59-billion-rail-road-push-as-bombardier-ge-invest

அனைவருக்குமான வங்கி சேவை : 

9 ( a ) https://www.pmjdy.gov.in/account

9 ( b ) http://www.livemint.com/Opinion/wfertnZlyGRTmGiyGnJLrI/The-admirable-success-of-the-JanDhan-Yojana.html

முத்திரா திட்டம் 

10,  https://economictimes.indiatimes.com/news/economy/policy/narendra-modis-mudra-yojana-generates-5-5-crore-jobs-says-report/articleshow/60435774.cms

10 ( a ) http://www.newindianexpress.com/states/andhra-pradesh/2017/oct/09/at-10th-rank-andhra-pradesh-lags-in-mudra-loan-disbursal-1668849.html


சமையல் எரிவாயு : 

11 ( a )  http://www.livemint.com/Industry/cTycVe4kwGtmRNjvowf8BO/Ujjwala-scheme-for-LPG-connections-now-has-25-crore-benefic.html

11 ( b ) https://timesofindia.indiatimes.com/business/india-business/plugging-lpg-subsidy-leaks-leads-to-rs-21000-crore-savings/articleshow/57022255.cms


சூரிய ஒளியின் மூலமாக மின் உற்பத்தி 

12,  http://www.newindianexpress.com/business/2017/apr/10/indias-solar-power-generation-capacity-crosses-12-gw-energy-minister-1592126.html

13, http://www.independent.co.uk/environment/india-solar-power-electricity-cancels-coal-fired-power-stations-record-low-a7751916.html

மின்சேமிப்பு 

14,  https://economictimes.indiatimes.com/industry/energy/power/over-25-crore-led-bulbs-distributed-under-ujala-scheme-eesl/articleshow/59635515.cms

சுகாதாரம் 

15, http://swachhindia.ndtv.com/httpswachhindia-ndtv-com5-year-report-card-shows-massive-growth-indias-sanitation-coverage-6232-6232/

16, https://economictimes.indiatimes.com/news/economy/finance/direct-benefit-transfer-leads-to-rs-50000-crore-savings-for-government-in-3-years/articleshow/57240387.cms

17, http://www.electionpromisestracker.in/governments/central-government/