புதன், 1 ஜூலை, 2020

ஹவில்தார் அப்துல் ஹமீத் பிறந்தநாள் ஜூலை 1.

பாரத நாட்டின்  சேவைக்காக ராணுவத்தில் சேர்ந்து எல்லையைக் காக்கும் பணியில் தன் உயிரையே பலிதானமாகத் தந்த ஹவில்தார் அப்துல் ஹமீதின் பிறந்தநாள் இன்று.  ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அளித்து நாடு அப்துல் ஹமீதைக் கௌரவித்தது.


இன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காஜிபூர் மாவட்டத்தின் தமுப்பூர் என்ற கிராமத்தில் தையல் கலைஞராக தொழில் செய்து வந்த மொஹம்மத் உஸ்மான் என்பவரின் மகனாக 1933ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் பிறந்தவர் அப்துல் ஹமீத். இவர் தாயார் பெயர் சகினா பேகம். இவருடன் பிறந்தவர்கள் நான்கு சகோதர்களும் இரண்டு சகோதிரிகளும். சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் சேரவேண்டும் என்பதே அப்துல் ஹமீதின் கனவாக இருந்து வந்தது.

1954ஆம் ஆண்டு இறுதியில் ஹமீது பாரத ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்தார். க்ரெண்டியர்ஸ் என்று அழைக்கப்படும் காலாள்படை பிரிவில் ஹமீது பணியாற்றினார். தனது படைப்பிரிவொடு ஆக்ரா, அருணாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அமிர்ஸ்தர், டெல்லி என்று பல்வேறு இடங்களில் இவர் வேலை பார்த்து வந்தார். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப் போரிலும் ஹமீது கலந்து கொண்டார்.

1965ஆம் ஆண்டு பாகிஸ்தான் மீண்டும் ஒரு முறை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தது. பாகிஸ்தான் ராணுவம் 30,000 தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து காஷ்மீரில் ஊடுருவியது. வழக்கம் போல அது மக்கள் புரட்சி என்று கூறி அவர்களுக்குத் துணையாக ராணுவம் களமிறங்கியது என்று கூறுவதுதான் அவர்கள் திட்டம்.

பஞ்சாப் மாநில எல்லையைக் காக்கும் பொறுப்பு செம்பருந்துப் படை என்று அழைக்கப்படும் காலாள்படையின் நான்காம் பிரிவுக்கு அளிக்கப்பட்டது. இந்தப் படையின் ஒரு பகுதிதான் க்ரெண்டியர் படை.  1965ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் நாள் இரவில் க்ரெண்டியர் படை பஞ்சாப் மாநில எல்லையைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.  விமானம் மூலமாகவும், பீரங்கிகளைக் கொண்டும் பாரத எல்லையை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. அமெரிக்க நாடு அளித்திருந்த பட்டன் பீரங்கிகளைக் கொண்டு இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது.

அதுவரை அன்றய நிலையில் உலகத்தின் மிகச் சிறப்பான பீரங்கி என்ற பெருமை பட்டன் பீரங்கிக்கு இருந்தது. ஆனால் தனது ராணுவ ஜீப்பில் பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு இரண்டு நாள்களில் எட்டு பட்டன் பீரங்கிகளை அப்துல் ஹமீது அழித்தொழித்தார். பட்டன் பீரங்கி பற்றிய பிம்பம் வெற்றிகரமாகக் கலைக்கப்பட்டது. உயர்தர தளவாடங்களால் அல்ல, நாட்டுப் பற்றும் வீரமும் கொண்ட வீரர்களாலதான் போர்கள் வெல்லப்படுகின்றன என்ற உண்மையை ஹவில்தார் அப்துல் ஹமீது உறுதியாக்கினார்.

இந்தப் போர்முனையில் நாட்டைக் காக்கும் பணியில் அப்துல் ஹமீது தனது உயிரை ஆகுதியாக்கினார். நாட்டின் கௌரவத்தையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணியில் உயிரையும் கொடுப்பேன் என்று பாரத ராணுவத்தில் சேரும்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை தன் இன்னுயிரைக் கொடுத்து அப்துல் ஹமீது உண்மையாக்கினார்.

போர்க்களத்தில் மிகப் பெரும் வீர சாகசத்தை நடத்திக் காட்டி, பலிதானியான அப்துல் ஹமீது அவர்களுக்கு பாரத ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அவர் நினைவாக அவர் போரிட்ட பஞ்சாபில் உள்ள அசல் உத்தார் கிராமத்தில் செப்டம்பர் மாதம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அப்துல் ஹமீதின் பிறப்பிடமான தமுப்பூர் கிராமத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டு உள்ளது.

மாவீரர் அப்துல் ஹமீது அவர்களின் பிறந்தநாளான இன்று ஒரே இந்தியா தளம் அவர்க்கு புகழஞ்சலி செலுத்துகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக