வெள்ளி, 29 மே, 2020

முன்னாள் பிரதமர் சரண்சிங் நினைவு தினம் - மே 29


விடுதலைப் போராட்ட வீரரும், உத்தரபிரதேசத்தில் நெடுங்காலம் அமைச்சராகவும், காங்கிரஸ் அல்லாத கட்சியின் சார்பாக முதல்முதலில் முதல்வராகவும், இந்திய நாட்டின் மிகக் கூறிய கால பிரதமராகவும், வட இந்திய விவசாயிகளின் தன்னிகரில்லா தலைவராகவும் விளங்கிய சவுத்திரி சரண்சிங் நினைவுதினம் இன்று.

ஹரியானவைச் சார்ந்த முதல் விடுதலைப் போரின் முன்னணி தலைவராக இருந்த பாலாபாக் அரசர் ராஜா நாகர்சிங் பரம்பரையில் பிறந்தவர் சரண்சிங் அவர்கள். விடுதலைப் புரட்சியின் முடிவில் ராஜா நாகர்சிங் ஆங்கில அரசால் மரணதண்டனை விதிக்கப்பட, அவர் குடும்பம் ஹரியானாவில் இருந்து உத்திரபிரதேசத்திற்கு குடி பெயர்ந்தது. அந்தப் பரம்பரையில் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் சரண்சிங் பிறந்தார்.
அறிவியலில் முதுகலைபட்டமும், சட்டப் படிப்பும் முடித்த சரண்சிங் கசியாபாத் நகரில் தனது வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். தனது 34ஆவது வயதில் உத்திரபிரதேச சட்டசபைக்கு தேர்வானார்.
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறை தண்டனை அனுபவித்தார்.

1937, 1946, 1952, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார். இந்த காலகட்டங்களில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். முதல் முறை தேர்வானபோதே விவசாயிகளின் நலன்களை காக்கும் பல்வேறு திட்டங்கள் உருவாக வாதாடினார். அவைகளில் பலவற்றை இன்று பல்வேறு மாநிலங்கள் சட்டமாக்கி உள்ளது.

இந்திய மனப்பான்மைக்கு சோவியத் வழிமுறையிலான கூட்டு விவசாயம் சரிவராது, விவசாய நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமை என்பது அவர்களின் சுயமதிப்பு சார்ந்தது என்று நேரு முன்வைத்த கூட்டு விவசாய முறையை எதிர்த்துப் பேசியதால் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

பின்னர் தனிக் கட்சியை உருவாக்கி உத்திர பிரதேச முதல்வராக தேர்வானார். காங்கிரஸ் கட்சி அல்லாத முதலாவது முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சரண்சிங், பல்வேறு பதவிகளில் இருந்தாலும் ஊழலை ஏற்றுக்கொள்ளாத, உறுதியான, அரசு செலவழித்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சரியானபடி விளக்கம் கேட்கும் நேர்மையாளராக இருந்தார்.
இந்திரா கொண்டுவந்த நெருக்கடி நிலையின் போது பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களோடு சரண்சிங்கும் கைதானார். அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் உருவான ஜனதா கட்சி அரசில் உதவிப் பிரதமராக பதவி வகித்தார்.

உள்கட்சி பூசலால் மொரார்ஜி தேசாய் பதவி விலகியபோது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அவருக்கான ஆதரவை இந்திரா விலக்கிக் கொள்ள சரண்சிங் பதவி விலகினார்.

1985ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சரண்சிங் 1987ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் காலமானார்.

லக்னோ விமான நிலையம், மீரட் பல்கலைக்கழகம் ஆகியவைகளுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இவரது பிறந்த தினம் விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக