சனி, 20 ஜூலை, 2019

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட தினம் - ஜூலை 19.


பாரத நாட்டில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு இன்று. 1969ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாம் அரசு 14 பெரும் வங்கிகளை தேசியமயமாகியது. அரசாங்கம் ஒரு முன்னெடுப்பைச் செய்கிறது என்றால் அதன்பின் உள்ள சமூக, பொருளாதார காரணிகளை மட்டுமல்லாது அரசியல் பின்புலத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.



நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு 1964ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை அடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி 1966ஆம் ஆண்டு சந்தேகத்திற்கு இடமான முறையில் தாஷ்கண்ட் நகரில் மரணமடைந்தார். நாடு இரண்டு பெரும் போர்களை சந்தித்து இருந்தது. சீனாவுடனான போரில் தோல்வியும், அதன் பின்னர் பாகிஸ்தானுடனான போரில் வெற்றியும் பெற்றிருந்தது. கம்யூனிச, சோசலிஸ சித்தாந்தங்கள் கவர்ச்சியாக தோன்றிய காலம் அது. ஆனால் அதற்கு நேரெதிராக வலதுசாரி சிந்தனைகளை முன்னிறுத்தும் ஸ்வதந்த்ரா மற்றும் பாரதிய ஜன சங்கம் ஆகிய கட்சிகளும் வலுவோடு இருந்தன. அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட்டுவிட்டால் பெருமளவு வறுமைநிலை மாறிவிடும் என்று நினைத்துக்கொண்டு இருந்த மக்கள் ஏமாற்றத்தில் இருந்த காலம்.

சாஸ்திரிக்குப் பிறகு யார் ? சங்கடமான இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் பொறுப்பு காமராஜரிடம் வந்தது. அவரது தேர்வு இந்திரா பிரியதர்சினி காந்தியாக இருந்தது. மொரார்ஜி தேசாய்க்குப் பதிலாக காங்கிரஸ் இந்திரா காந்தியை தேர்ந்தெடுத்தது. அப்போது இந்திராவிற்கு வயது நாற்பத்தி ஒன்பது மட்டுமே. நேருவின் மகள் என்பதைத் தவிர வேறு எந்த பின்புலமும் இல்லாதவர், அதனால் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார் என்று மக்கள் நினைக்க, இந்திராவிற்கு வேறு எண்ணங்கள் இருந்தன. வலிமைவாய்ந்த மாநிலத்தலைவர்கள் ஆட்டிவைக்கும் பொம்மையாக அவர் இருக்க விரும்பவில்லை. கவர்ச்சிகரமான கோஷங்கள், அதிரடியான செயல்கள் மூலம் அவர் மக்களுக்கு நெருக்கமாக இருக்க விரும்பினார். மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கல், வலிமையான மாநில தலைவர்களை இல்லாமல் ஆக்கி, அங்கே தனக்கு கட்டுப்பட்ட ஆட்களை நியமித்தல் என்று அவர் திட்டமிடத் தொடங்கினார்.

இன்றய வடிவிலான வங்கி சேவை என்பது 1770ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹிந்துஸ்த்தான் வங்கி என்ற நிறுவனத்தின் மூலம் பாரத நாட்டில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 1796ஆம் ஆண்டு ஜெனரல் பேங்க் ஆப் இந்தியா தொடங்கப்பட்டது. 1806ஆம் ஆண்டு பேங்க் ஆப் கல்கத்தா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி பேங்க் ஆப் பெங்கால் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1840ஆம் ஆண்டு பேங்க் ஆப் பாம்பே மற்றும் 1843ஆம் ஆண்டு பேங்க் ஆப் மதராஸ் ஆகிய வங்கிகள் உருவானது. 1921ஆம் ஆண்டு இந்த மூன்று வங்கிகளும் இணைந்து இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா என்று ஆனது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு 1955ஆம் ஆண்டு இந்த வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாக உருவெடுத்தது. 1959ஆம் ஆண்டு அன்றய சமஸ்தானங்கள் நடத்திவந்த வங்கிகள் ஸ்டேட் பாங்கின் துணை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன. 1935ஆம் ஆண்டுதான் ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியா உருவாக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்த போது பல்வேறு வங்கிகளை தேசியத்தலைவர்கள் உருவாக்கினார்கள். 1894ஆம் ஆண்டு லாகூர் நகரில் பஞ்சாப் நேஷனல் பேங்க் நிறுவப்பட்டது. கத்தோலிக் சிரியன் பேங்க், கார்பொரேஷன் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க் இந்தியன் பேங்க், பேங்க் ஆப் பரோடா ஆகியவை இன்றுவரை இயங்கிக் கொண்டு உள்ளன. ஆனால் இதற்கிடையே பல்வேறு வங்கிகள் திவாலானதும் நடந்தது.

பல்வேறு வங்கிகள் வெவ்வேறு தொழில்நிறுவங்களால் நடத்தப்பட்டன. பொதுமக்கள் சேமிக்கும் பணத்தை வங்கி நிர்வாகம் தங்களின் முதலாளிகளாக தொழிலதிபர்களுக்கு கடனாகக் கொடுத்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எதனாலோ பெரும்தொழிலதிபர்கள் மீது இந்திராவுக்கு ஒரு ஒவ்வாமை இருந்தது. கடுமையான சோசலிஸ பொருளாதாரத்தை அவர் முன்னெடுத்தார். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளியைக் குறைக்க அனைவரையும் ஏழைகளாக மாற்றும் திட்டம்தான் செயலில் இருந்தது.

வங்கி சேவை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும், விவசாயம், சிறுதொழில்கள் போன்ற அரசின் முக்கியமான திட்டங்களுக்கு கூடுதல் கடன் அளிக்கப்படவேண்டும். இதற்க்கு வங்கிகள் தனியார்வசம் இருந்தால் சரிப்படாது, அவை அரசின் கைவசம் இருக்கவேண்டும் என்று இந்திரா நினைத்தார்.

1966இல் இந்திரா பதவியேற்றத்தில் இருந்து 1969 ஜூலை மாதத்திற்குள் என்ன நடந்தது என்பதையும் நாம் இங்கே பார்க்கவேண்டும். அதில் மிக முக்கியமானது 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைக்கான நான்காவது பொது தேர்தல். முதல் மூன்று பொதுத்தேர்தல்களை காங்கிரஸ் கட்சி நேருவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வெற்றி பெற்று இருந்தது. 1962ஆம் ஆண்டு தேர்தலில் அது 361 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் 1967ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 283 தொகுதிகளில்தான் வெற்றி பெற்று இருந்தது. நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனசங், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரஜா சோசலிஸ்ட் கட்சி, ஸ்வதந்திரா கட்சி, திமுக ஆகிய கட்சிகள் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருந்தன. அதோடு ஆறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து இருந்தது.

கல்வியாளரும்  நாட்டின் மூன்றாவது குடியரசுத்தலைவருமான ஜாகிர் ஹுசைன் எதிர்பாராத விதமாக 1969ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் நாள் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் வி வி கிரி குடியரசின் தாற்காலிகத் தலைவராக பதவி ஏற்றார். குடியரசுத்தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி நீலம் சஞ்சீவ ரெட்டியை கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நிறுத்தியது. ரிசெர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் என்ற பெருமையைப் பெற்ற திரு சி டி தேஷ்முக்கை எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளராக அறிவித்தன. சுயேச்சை வேட்பாளராக வி வி கிரி களமிறங்களினார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தங்கள் மனச்சாட்சியின்படி ஓட்டளிக்குமாறு இந்திரா கேட்டுக்கொண்டார்.

ஜூலை 20ஆம் தேதி கிரி, குடியரசின் தாற்காலிகத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்தினம் ஜூலை 19ஆம் தேதி வங்கிகள் தேசியமாகும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். பதினான்கு பெரும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. மீண்டும் 1980ஆம் ஆண்டு ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. அதில் நியூ பேங்க் ஆப் இந்தியா பஞ்சாப் நேஷனல் பாங்கோடு இணைக்கப்பட்டது.

பல்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இயங்கி வந்த சிறிய தனியார் வங்கிகள் அரசு வங்கிகளோடு இணைக்கப்பட்டன. உதாரணமாக மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய பாண்டியன் வாங்கி கனரா பாங்கோடும், தஞ்சாவூரைச் சார்ந்த பேங்க் ஆப் தஞ்சாவூர் இந்தியன் பாங்கோடும், நெல்லையைச் சார்ந்த பேங்க் ஆப் தமிழ்நாடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியொடும் இணைக்கப்பட்டன.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதால் வங்கி சேவைகள் நாடெங்கும் பரவியது. கிராமங்களில் கூட வங்கிகளின் கிளைகள் திறக்கப்பட்டன. அதுவரை வங்கி சேவைகளை உள்வாங்காத மக்களுக்கு சேவைகள் அளிக்கப்பட்டன. விவசாயம், சிறுதொழில் போன்ற அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கு குறிப்பிட்ட அளவில் கடன் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையால் பெரும் மாற்றங்கள் உருவானது. வங்கி பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, அதனால் வேலைவாய்ப்பு பெருகியது.

அதே நேரத்தில் வங்கியில் உள்ள மக்களின் பணத்தை அரசியல் லாபத்திற்காக கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு அள்ளி விடுவதும் நடந்தது. 1980இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திராவின் அமைச்சரவையில் இருந்த ஜனார்தன் பூஜாரி  கடன் திருவிழாக்களைத் தொடங்கி வைத்தார். வங்கி கடன்களை வழங்குவதன் மூலம் அரசியல்வாதிகள் தங்கள் வாக்குவங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் பழக்கம் உருவானது.

சக்கரம் சுழன்றது. 90களில் உருவான பொருளாதார தாராளமயமாக்கல் தனியார் வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. குறைவான பணியாளர்கள், தொழில்நுட்ப வசதிகள் மூலம் துரிதமான சேவை, அதிக கட்டணம் என்ற புதிய போக்கு உருவானது.

இன்று பல்வேறு வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதன் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டு, பலரும் அந்தப் பங்குகளை வர்த்தகம் செய்யும் நிலையில் உள்ளது.

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை, வங்கிகளின் தேசியமயமாக்கலும் அதுபோன்றதுதான். நாம்தான் வரலாற்றில் இருந்து பாடம் படித்து, நல்லவற்றை அதிகரித்து தீமைகளை கூடியவரை குறைத்து செயல்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக