சனி, 20 ஜூலை, 2019

மறக்கடிக்கப்பட்ட மாவீரன் படுகேஸ்வர் தத் - நினைவுநாள் ஜூலை 20.

பாரதநாட்டின் சுதந்திரம் என்பது எதோ ஒரு சில தனிமனிதர்களின் முயற்சியாலோ அல்லது சில குடும்பங்களின் தியாகத்தாலோ மட்டுமே கிடைத்துவிடவில்லை. ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் குருதியால், அவர்களின் விடாத முயற்சியால், அவர்களின் பலிதியாகத்தால் கிடைத்த விடுதலை இது. தெளிவாக திட்டம் போட்டு அப்படிப்பட்ட தியாகிகள் இந்த மண்ணில் மறக்கடிக்கப் பட்டனர். அதனால்தான் தேசபக்தியை இல்லாத மூன்று தலைமுறைகளை நாம் உருவாக்கி உள்ளோம். அப்படி வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறக்கடிக்கப்பட்ட ஒரு மாவீரனின் நினைவுநாள் இன்று.



எந்த ஒரு பாரதியரும் இல்லாமல் உருவான சைமன் குழுவை நாடு புறக்கணிக்க முடிவு செய்தது. சைமன் குழுவை புறக்கணித்து லாகூர் நகரில் நடந்த அமைதியான ஊர்வலத்தை பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் தலைமையேற்று நடத்தினார். அன்றய ஆங்கில காவல் அதிகாரி ஜேம்ஸ் ஸ்காட் கண்மூடித்தனமாகத் தாக்கினான். குண்டாந்தடிகளின் அடியை உடல்முழுதும் ஏந்திய லாலா லஜபதி ராய் மருத்துவமனையில் மரணமடைந்தார். " என்மீது விழுந்த அடிகள் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியை மூடும் ஆணிகள்" என்று அவர் கூறினார்.

தலைவரின் மரணத்திற்கு பழிவாங்க இளைஞர் பட்டாளம் கிளம்பியது. 1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி காவல் அதிகாரி சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்திரசேகர ஆசாத் தலைமையில் இயங்கிய  இந்திய சோசலிச குடியரசு ராணுவத்தைச் ( Hindustan Socialist Republic Army ) சார்ந்த பகத்சிங்கும் அவர் நண்பர்களும் இந்த பழிவாங்குதலை செய்துமுடித்தார்கள்.

காது கேளாத அரசுக்கு கேட்கவேண்டுமானால் நாம் உரக்கத்தான் பேசவேண்டும் என்று முடிவு செய்த இளைஞர் படை நாட்டின் பாராளுமன்றத்தின் உள்ளே வெடிகுண்டை வீச முடிவு செய்தது. அது 1929ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி.  பாராளுமன்ற கூட்டம் தொடங்க இருந்த நேரத்தில் பார்வையாளர்கள் இடத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் எழுந்தனர். தங்கள்வசம் இருந்த வெடிகுண்டுகளை ஆட்களே இல்லாத இடத்தை நோக்கி வீசினார். யாரையும் கொல்ல வேண்டும் என்று நினைக்காததால், அந்த குண்டு பெரும் சத்தத்தையும் புகையையும் மட்டுமே வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் குண்டு வீசிய இளைஞர்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. " புரட்சி ஓங்குக, ஏகாதிபத்தியம் ஒழிக" என்றே அவர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர். அந்த இளைஞர்களில் ஒருவர் பகத்சிங். இன்னொருவர் படுகேஸ்வர் தத். பகத்சிங்கை மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்க முடியாதவர்களால் படுகேஸ்வர் தத் பெயரை மறைக்க முடிந்ததுதான் இந்த தேசத்தின் சோகம்.

1910ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் இன்றய மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்த தத், கான்பூர் நகரில் கல்வி கற்றார். அபோது சந்திரசேகர ஆசாத் போன்ற புரட்சியாளர்களின் அறிமுகம் கிடைத்தது. கையெறி குண்டுகள் தயாரிப்பதில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

பாராளுமன்றத்தில் குண்டு வீசிய வழக்கில் தத்தும் பகத்சிங்க்கும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபோது அரசியல் கைதிகளை முறையாக நடத்தவேண்டும் என்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தோழர்கள் தொடங்கினார்கள். ஓரளவுக்கான வசதிகளும் சலுகைகளும் அரசியல் கைதிகளுக்கு வழங்க ஆங்கில அரசு ஒத்துக்கொண்டது.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். படுகேஸ்வர் தத் நாடு கடத்தப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரை காசநோய் பற்றியது. விடுதலையான படுகேஸ்வர் தத் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

நாடு விடுதலை அடைந்த பின்னர், அரசின் உதவிக்காக விண்ணப்பித்த அந்த வீரனுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. வறுமையிலும் காசநோயால் வாடிய அந்த வீரன் 1965ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரோஸ்ப்பூர் நகரின் அருகே உள்ள ஹுசைனிவாலா என்ற கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சகாக்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் உடல்கள் எரிக்கப்பட்ட இடுகாட்டில் அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது. வீரத்தையும், தேசபக்தியையும் விதைத்த அந்த மாவீரனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

குறைந்தபட்சம் போற்றப்படாத, பாராட்டப்படாத, சொல்லப்படாத அந்த தியாகிக்கு ஒரு துளி கண்ணீரை நாம் இன்று காணிக்கையாகச் செலுத்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக