வியாழன், 3 ஜூலை, 2025

ஜூலை 3 - சர்வாதிகாரத்தை எதிர்த்த தனி ஒருவன் நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா


பாரத வரலாற்றில் ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட பக்கங்கள் என்று பல உண்டு. அதில் மிக முக்கியமானது 1975ஆம் ஆண்டு இந்த நாட்டின் சட்டதிட்டங்கள் அனைவற்றையும் கிழித்து எறிந்துவிட்டு, இந்த நாட்டை சர்வாதிகாரப் போக்கில் கொண்டு சென்ற அன்றய பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடிநிலை பிரகடனம். நீதிமன்றம் மூலமாக மக்களவை வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்திராவின் நெருக்கடி இந்தியாவின் நெருக்கடியானது. அவசரச் சட்டத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் கடுமையான தணிக்கைக்கு உள்ளானது. எந்தவிதமான எதிர்ப்பு எழுந்தாலும் அது கடுமையான முறையில் அடக்கப்பட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒரு குரல் நெருக்கடி நிலையை எதிர்த்து ஒலித்தது. அரசியலமைப்பு சட்டத்தின்படி எது சரி எது தவறு என்பதை அந்தக் குரல் தெளிவுபடுத்தியது. உண்மையின் பக்கத்தில் இருந்ததால் அந்தக் குரலுக்கு சொந்தக்காரருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. ஆனாலும் வரலாற்றைப் படிக்கும் மாணவர்களின் மனதில் அவருக்கு தனி இடம் கிடைத்தது. அந்தக் குரலின் சொந்தக்காரர் ஒரு நீதிபதி. அம்ரித்ஸர் நகரில் பிறந்த அவரின் பெயர் நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையறை செய்த பல்வேறு வழக்குகளில் நீதிபதி கன்னாவின்  தீர்ப்புகள் இன்றும் முக்கியமான ஒன்றாக உள்ளன.

1912ஆம் ஆண்டு அம்ரித்ஸர் நகரில் திரு ஷரப்தயாள் கன்னாவின் மகனாகப் பிறந்தவர் இவர். திரு ஷரப்தயாள் வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமாவார். அவர் அம்ரிஸ்தர் நகரின் மேயராகவும் பணியாற்றினார். தனது கல்வியை DAV பள்ளியிலும், பின்னர் கல்சா கல்லூரியிலும் முடித்தார். லாகூர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து அம்ரித்ஸர் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
தனது நாற்பதாவது வயதில் ஹன்ஸ்ராஜ்கன்னா மாவட்ட குற்றவியல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பெரும் தொழிலதிபரான ராமகிருஷ்ன டால்மியாவை பண மோசடி வழக்கில் சிறைத்தண்டனை வழங்கினார். பஞ்சாப் உயர்நீதிமன்றத்திலும் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட டெல்லி உயர்நீதிமன்றத்திலும் திரு கன்னா பணியாற்றினார். 1971ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக திரு ஹன்ஸ்ராஜ் கன்னா புகழ்பெற்ற பல தீர்ப்புகளை எழுதினார்.

கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசாங்கம் : 
எடநீர்  மடத்தின் சொத்துக்களை நிர்வகிக்க கேரள அரசு கொண்டுவந்த சட்டங்களை எதிர்த்து அந்த மடத்தின் மடாதிபதி தொடுத்த வழக்கு இது. 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தனது பதவியை பலப்படுத்திக் கொள்ள இந்திரா கொண்டுவந்த பல்வேறு சட்டங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. வங்கிகள் தேசியமயமாக்கம், மன்னர் மானிய ஒழிப்பு போன்றவைகளை நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது. அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதன் மூலம் நீதிமன்ற உத்தரவை இந்திரா ரத்து செய்தார். ஜனநாயகத்தின் இரண்டு தூண்களும் ஒன்றோடு ஓன்று முட்டிக்கொண்ட சமயம் இது.
இந்த வழக்கோடு, பல்வேறு அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் பற்றிய விவாதங்களும் தொடுக்கப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தை திருத்த அரசுக்கு அதிகாரம் உண்டா என்ற கேள்வி எழுந்தது. ஆறு நீதிபதிகள் அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் ஆறு நீதிபதிகள் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு எழுதினார்கள்.

நீதிபதி ஹன்ஸ்ராஜ்கன்னா அரசியலமைப்பு சட்டத்தை திருத்த அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் ஆனால் அதே சமயம் அரசுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் கிடையாது என்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை அரசு மாற்ற முடியாது என்றும் தீர்ப்பு சொன்னார்.

ஆள் கொணர்வு மனு வழக்கு : 
நெருக்கடிநிலை சமயத்தில் சட்டத்திற்கு புறம்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள சிறையானவர்களின் உறவினர்களால் பல ஆள்கொணர்வு மனுகள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத்தின் மாட்சிமை பற்றிய கேள்வி எழுந்தது. இதனை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உருவாக்கப் பட்டது.
எந்த காரணமும் இல்லாமல் சிறைபிடிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஆள்கொணர்வு மனுவை எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்றும் மற்ற நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்க, நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா அதனை மறுத்து தீர்ப்பு சொன்னார். "உயிர் வாழும் உரிமையை அரசின் பிடியில் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கவில்லை. இங்கே கேள்விக்குள்ளாகி இருப்பது சட்டத்தின் மாட்சிமை. விசாரணை இல்லாது சிறையில் அடைப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது" என்று அவர் தீர்ப்பளித்தார்.

சர்வாதிகாரத்திற்கு எதிராக எழுந்த குரலை இந்திரா விரும்பவில்லை. நீதிபதி கன்னாவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. அவருக்கு இளையவரான நீதிபதி பைக் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி கன்னா உடனடியாகப் பதவி விலகினார். அவருக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர். ஆனால் அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அரசிடம் இருந்து நீதிமன்றங்கள் பறித்துக் கொண்டன.

நெருக்கடி நிலை விலக்கிக் கொண்ட பிறகு 1978ஆம் ஆண்டு அவர் பணியாற்றிய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாம் எண் நீதிமன்றத்தில் நீதிபதி கன்னாவின் முழு உருவ ஓவியம் நிறுவப்பட்டது. உயிரோடு இருக்கும் போதே இந்தப் பெருமையை இதுவரை யாரும் அடையவில்லை.
1999ஆம் ஆண்டு பாரத அரசு நீதிபதி கன்னாவிற்கு பத்மவிபூஷண் விருது அளித்து கவுரவித்தது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை அளித்தன.

மனசாட்சிக்கும் நீதிக்கும் உண்மையாக இருந்த நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் நாள் தனது 95ஆவது வயதில் காலமானார்.  

புதன், 2 ஜூலை, 2025

ஜூலை 2 - விண்வெளிக்கு பாதை அமைத்த மயில்சாமி அண்ணாதுரை பிறந்தநாள்


தமிழகத்திற்கு புகழ் சேர்த்த அறிவியல் அறிஞர்களுள் முக்கியமான திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாள் இன்று.

1958ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி அருகே உள்ள கொத்தவாடி கிராமத்தில் பிறந்தவர் இந்த அறிஞர். தனது கல்வியை தமிழ்வழி மூலம் அதே கிராமத்தில் முடித்த திரு அண்ணாதுரை தனது பொறியியல் இளங்கலை படிப்பை கோவை அரசு பொறியியல் கல்லூரியிலும், முதுகலை படிப்பை கோவை PSG கல்வி நிலையத்திலும் முடித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்ற திரு அண்ணாதுரை தனது 24ஆவது வயதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைத்தார். தந்து நெடிய பணிக்காலத்தில் அவர் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு தலைவராகப் பணியாற்றினார்.

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்று மஹாகவி பாரதி முரசு கொட்டியது போல, சந்திரனுக்கும் பின்னர் செவ்வாய் கிரகத்திற்கும் ஆராய்ச்சிப் பணிக்காக செயற்கைகோள்களை அனுப்பும் பணியில் திரு அண்ணாதுரையின் பங்கு மகத்தானது.

2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சீறிப் பாய்ந்த சந்திராயன் I, நவம்பர் 8ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டது. 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் நாள் சந்திரனில் இறங்கிய ஆராய்ச்சி விண்கலம் வான்வெளியை வெற்றிகொள்வதில் யாருக்கும் பாரத விஞ்ஞானிகள் சளைத்தவர்கள் இல்லை என்று அறிவித்தது. சந்திரனில் இறங்கிய நான்காவது தேசம் என்ற பெருமை நாட்டிற்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சந்திராயன் II என்ற விண்வெளி ஆராய்ச்சி முயற்சியும் வெற்றிகரமாக நிறைவேறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை வெற்றிகொள்ளும் பணிக்கு அரசு அனுமதி அளித்தது. 2013ஆம் வருடம் அக்டோபர் 28ஆம் தேதி  ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கிளம்பிய மங்களாயன், ஏறத்தாழ ஒருமாத காலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்தது. அதன் பின்னர் ஏழு நிலைகளில் வெவ்வேறு நீள்வட்டப் பாதைகளுக்கு தன்னை உயர்த்திக்கொண்டு 2014ஆம் செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த முதலாவது ஆசிய நாடு மற்றும் முதல் முறையிலேயே வெற்றி அடைந்த முதல் நாடு என்ற பெருமையை நாடு அடைந்தது.

வறுமைக்கோட்டுக்கு கீழே மக்கள் வசிக்கும் நாட்டிற்கு இவையெல்லாம் தேவையா என்று  சில போராளிகள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் விண்ணை வெற்றிகொள்வதன் மூலம் அடையும் பலங்கள் பல. தொலைத்தொடர்பு, மழை, புயல் ஆகியவற்றை அறிந்துகொள்ளுதல் போன்ற மக்களுக்கு பயன்படும் பல்வேறு துறைகளுக்கு விண்வெளி ஆராய்ச்சி பயன்படுகிறது.

திரு அண்ணாதுரையின் பங்களிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

இந்திய அரசு அண்ணாதுரைக்கு 2016ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி சிறப்பு செய்துள்ளது.

அறிஞர்களின் வாழ்வு நமது மாணர்வர்களை பல்வேறு ஆராய்ச்சி துறையில் ஈடுபடுத்தும், மேலும் பலப்பல திறமைசாலிகளை உருவாக்க பயனாகும் என்பதில் ஐயமில்லை.  

செவ்வாய், 1 ஜூலை, 2025

ஜூலை 1 - ஹவில்தார் அப்துல் ஹமீத் பிறந்தநாள்

பாரத நாட்டின்  சேவைக்காக ராணுவத்தில் சேர்ந்து எல்லையைக் காக்கும் பணியில் தன் உயிரையே பலிதானமாகத் தந்த ஹவில்தார் அப்துல் ஹமீதின் பிறந்தநாள் இன்று.  ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அளித்து நாடு அப்துல் ஹமீதைக் கௌரவித்தது.


இன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காஜிபூர் மாவட்டத்தின் தமுப்பூர் என்ற கிராமத்தில் தையல் கலைஞராக தொழில் செய்து வந்த மொஹம்மத் உஸ்மான் என்பவரின் மகனாக 1933ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் பிறந்தவர் அப்துல் ஹமீத். இவர் தாயார் பெயர் சகினா பேகம். இவருடன் பிறந்தவர்கள் நான்கு சகோதர்களும் இரண்டு சகோதிரிகளும். சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் சேரவேண்டும் என்பதே அப்துல் ஹமீதின் கனவாக இருந்து வந்தது.

1954ஆம் ஆண்டு இறுதியில் ஹமீது பாரத ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்தார். க்ரெண்டியர்ஸ் என்று அழைக்கப்படும் காலாள்படை பிரிவில் ஹமீது பணியாற்றினார். தனது படைப்பிரிவொடு ஆக்ரா, அருணாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அமிர்ஸ்தர், டெல்லி என்று பல்வேறு இடங்களில் இவர் வேலை பார்த்து வந்தார். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப் போரிலும் ஹமீது கலந்து கொண்டார்.

1965ஆம் ஆண்டு பாகிஸ்தான் மீண்டும் ஒரு முறை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தது. பாகிஸ்தான் ராணுவம் 30,000 தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து காஷ்மீரில் ஊடுருவியது. வழக்கம் போல அது மக்கள் புரட்சி என்று கூறி அவர்களுக்குத் துணையாக ராணுவம் களமிறங்கியது என்று கூறுவதுதான் அவர்கள் திட்டம்.

பஞ்சாப் மாநில எல்லையைக் காக்கும் பொறுப்பு செம்பருந்துப் படை என்று அழைக்கப்படும் காலாள்படையின் நான்காம் பிரிவுக்கு அளிக்கப்பட்டது. இந்தப் படையின் ஒரு பகுதிதான் க்ரெண்டியர் படை.  1965ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் நாள் இரவில் க்ரெண்டியர் படை பஞ்சாப் மாநில எல்லையைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.  விமானம் மூலமாகவும், பீரங்கிகளைக் கொண்டும் பாரத எல்லையை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. அமெரிக்க நாடு அளித்திருந்த பட்டன் பீரங்கிகளைக் கொண்டு இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது.

அதுவரை அன்றய நிலையில் உலகத்தின் மிகச் சிறப்பான பீரங்கி என்ற பெருமை பட்டன் பீரங்கிக்கு இருந்தது. ஆனால் தனது ராணுவ ஜீப்பில் பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு இரண்டு நாள்களில் எட்டு பட்டன் பீரங்கிகளை அப்துல் ஹமீது அழித்தொழித்தார். பட்டன் பீரங்கி பற்றிய பிம்பம் வெற்றிகரமாகக் கலைக்கப்பட்டது. உயர்தர தளவாடங்களால் அல்ல, நாட்டுப் பற்றும் வீரமும் கொண்ட வீரர்களாலதான் போர்கள் வெல்லப்படுகின்றன என்ற உண்மையை ஹவில்தார் அப்துல் ஹமீது உறுதியாக்கினார்.

இந்தப் போர்முனையில் நாட்டைக் காக்கும் பணியில் அப்துல் ஹமீது தனது உயிரை ஆகுதியாக்கினார். நாட்டின் கௌரவத்தையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணியில் உயிரையும் கொடுப்பேன் என்று பாரத ராணுவத்தில் சேரும்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை தன் இன்னுயிரைக் கொடுத்து அப்துல் ஹமீது உண்மையாக்கினார்.

போர்க்களத்தில் மிகப் பெரும் வீர சாகசத்தை நடத்திக் காட்டி, பலிதானியான அப்துல் ஹமீது அவர்களுக்கு பாரத ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அவர் நினைவாக அவர் போரிட்ட பஞ்சாபில் உள்ள அசல் உத்தார் கிராமத்தில் செப்டம்பர் மாதம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அப்துல் ஹமீதின் பிறப்பிடமான தமுப்பூர் கிராமத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டு உள்ளது.

மாவீரர் அப்துல் ஹமீது அவர்களின் பிறந்தநாளான இன்று ஒரே இந்தியா தளம் அவர்க்கு புகழஞ்சலி செலுத்துகிறது. 

ஜூலை 1 - வெங்கையா நாயுடு பிறந்தநாள்

பாஜகவின் மூத்த தலைவரும் பாரதநாட்டின் 13ஆவது குடியரசு துணைத்தலைவருமாகிய திரு வெங்கையா நாயுடு அவர்களின் பிறந்தநாள் இன்று.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1949 ஆம் ஆண்டு பிறந்தவர் திரு நாயுடு. தனது பள்ளிப்படிப்பையும், அரசியல் அறிவியல் துறையில் பட்டபடிப்பையும் நெல்லூரில் முடித்த நாயுடு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். சிறுவயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட திரு நாயுடு அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆந்திர பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1972ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெய் ஆந்திரா போராட்டத்திலும் அதன் பின்னர் 1974ஆம் ஆண்டு ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டங்களிலும் முன்னிலை வகித்தார். பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்றார்.

1978 மற்றும் 1983ஆம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற தேர்தல்களில் ஆந்திராவின் உதயகிரி தொகுதியில் இருந்து தேர்வானார். கடுமையான உழைப்பும், அற்புதமான பேச்சாற்றலும் கொண்ட திரு நாயுடு பாஜகவின் முன்னணி தலைவராக உருவாகத் தொடங்கினார்.

1998, 2004 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் ராஜ்யசபைக்கு தேர்வானார். 2016ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபை உறுப்பினரானார். வாஜ்பாய் தலைமையிலான அரசின் கிராமப்புற வளர்ச்சித்துறையின் அமைச்சராகப் பணியாற்றினார். மோதி தலைமையிலான அரசின் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, ஏழ்மை ஒழிப்பு ஆகிய துறைகளிலும் பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறையிலும் , செய்தி மக்கள் தொடர்பு துறையிலும் அமைச்சராகப் பணியாற்றினார்.

2003ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய தலைவராகப் பொறுப்பேற்ற திரு நாயுடு 2004ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின்னர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். பல்லாண்டுகள் பாஜகவின் மூத்த உதவி தலைவராகவும், செய்தி தொடர்பாளராகவும் அவர் பணிபுரிந்தார்.

2017ஆம் ஆண்டு பாஜக சார்பில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவரை டாக்டர் ராதாகிருஷ்னன் மற்றும் முகமத் ஹமீத் அன்சாரி ஆகிய இருவரும் இரண்டு முறை குடியரசு துணைத்தலைவர் பதவியை வகித்துள்ளார். 2022ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் நாயுடு அவர்களே பாஜகவின் வேட்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுவாக குடியரசு துணைத்தலைவரையே அடுத்த தேர்தலில் குடியரசு தலைவராக முன்மொழிவது பழக்கம் என்பதால் இந்தியாவின் மிக உயரிய பதவியை திரு நாயுடு வகிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

திங்கள், 30 ஜூன், 2025

ஜூன் 30 - பாரத ரத்னா C N R ராவ் பிறந்தநாள்


சி வி ராமன், அப்துல்கலாம் ஆகியோரைத் தொடர்ந்து அறிவியல் துறைக்கான பங்களிப்புக்கு பாரத நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது இந்தியரான திரு சிந்தாமணி நாகேஸ ராமச்சந்திர ராவ் அவர்களின் பிறந்தநாள் இன்று

பெங்களூரு நகரைச் சார்ந்த ஹனுமந்த நாகேஸ ராவ் - நாகம்மா தம்பதியினருக்கு 1934ஆம் ஆண்டு பிறந்தவர் திரு ராவ். ஒரே மகனான அவருக்கு தாய் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தையும் தந்தை ஆரம்பநிலை அறிவியல் மற்றும் ஆங்கிலத்தை வீட்டில் இருந்தவாறே கற்பித்தனர். நேரடியாகவே ஆறாம் வகுப்பில் சேர்ந்த திரு ராவ் 1947ஆம் வயதில் தனது பதின்மூன்றாம் வயதில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

தனது பதினேழாம் வயதில் வேதியல்துறையில் இளங்கலை பட்டத்தை மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்தும், முதுகலைப் பட்டத்தை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் இருந்தும் அதன் பின்னர் தனது இருபத்தி நான்காம் வயதில் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து தனது முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

அதன் பிறகு பாரதம் திரும்பிய ராவ் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ( Indian Institute of Science - Bangalore ) விரிவுரையாளராகவும் அதன் பின்னர் கான்பூர் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ( Indian Institute of Technology - Kanpur ) பேராசிரியராகவும், பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சிறப்பு அழைப்பாளராகவும் பணியாற்றிவருகிறார்.

பல்வேறு அறிஞர்களோடு இணைந்து திரு ராவ் ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளையும் ஐம்பதிற்கும் மேலான நூல்களையும் எழுதி உள்ளார். பாரத பிரதமரின் அறிவியல் ஆலோசகராகவும் திரு ராவ் பணியாற்றியுள்ளார். இவரது பங்களிப்புக்காக ஐம்பதிற்கும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன.

1968ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாயக் விருது, 1974ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 1985ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருது ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது.  இவை அனைத்துக்கும் மகுடம் வைத்தது போல 2014ஆம் ஆண்டு பாரதத்தின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது திரு ராவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இன்றய காலகட்டத்தில் நாட்டிற்கு பல்வேறு துறை விற்பன்னர்களின் தேவை மிக அதிகமாக உள்ளது. திரு ராவ் போன்று திறமையான அறிஞர்கள் நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் வரட்டும். அவர்களுக்கு ராவ் போன்றவர்களின் வாழ்கை உந்துசக்தியாக இருக்கட்டும். 

ஞாயிறு, 29 ஜூன், 2025

ஜூன் 29 - அணுசக்தி விஞ்ஞானி P K ஐயங்கார் பிறந்தநாள்


பாரத நாட்டின் முக்கியமான அணுசக்திதுறை விஞ்ஞானியான திரு பத்மநாப கோபாலகிருஷ்ண ஐயங்காரின் பிறந்தநாள் இன்று.

1931ஆம் ஆண்டில் பிறந்த திரு ஐயங்கார் இயற்பியல்துறையில் தனது முதுகலைப் படிப்பை கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் முடித்தார். Tata Institute of Fundamental Research நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய ஐயங்கார், இந்திய அணு சக்தி துறை தொடங்கப்பட்ட உடன் அதில் இணைத்தார். கனடா நாட்டின் புகழ்பெற்ற புரூக்ஹவுஸ் என்ற அறிஞரோடு இணைத்து பணியாற்ற நாட்டின் சார்பாக அனுப்பப்பட்டார்.

பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்பியல்துறை தலைவராகவும் பின்னர் அதே நிறுவனத்தின் தலைவராகவும் திரு ஐயங்கார் பணியாற்றினார். 1974ஆம் ஆண்டு முதல் முதலாக பாரதம் அணுகுண்டு வெடிப்பு சோதனையை நிகழ்த்தியபோது அதில் முக்கிய பங்கு வகித்தார். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு 1975ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு இந்திய அணுசக்திதுறையின் ( Atomic Energy Commission of India ) மத்திய அரசின் அணுசக்தித்துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையின்கீழ் அணுசக்தித்துறையில் பல்வேறு புதிய ஆராச்சிகளும் முன்னெடுப்புகளும் தொடங்கப்பட்டன. ஆராய்ச்சிசாலையில் இருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டு உடனடியாக மக்களுக்கு பயன்படும் தொழில்நுட்பங்கள் தகுதியான தொழில்சாலைகளுக்கு வழங்கப்பட தனியான பிரிவை அவரை நிறுவினார்.

ஹோமிபாபா, விக்ரம் சாராபாய், ராஜாராமண்ணா என்ற வரிசையில் நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானியான திரு ஐயங்கார் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள் தனது எண்பதாவது வயதில் காலமானார்.  

சனி, 28 ஜூன், 2025

ஜூன் 28 - தாராளமயமாக்கலின் நாயகன் பிரதமர் நரசிம்மராவ் பிறந்தநாள்

நேரு குடும்பத்தைச் சேராத முதல் காங்கிரஸ் பிரதமர், தென்னிந்தியாவைச் சார்ந்த முதல் பிரதமர், தனது  பதவிக்காலத்தை முழுவதும் பூர்த்தி செய்த நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர், வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர்,   பத்திரிகையாளர்பல்மொழி விற்பன்னர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பிரதமர் என்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் திரு நரசிம்மராவ் அவர்கள். 

1921ஆம் ஆண்டு அன்றய ஹைராபாத் நிஜாமின் ஆளுகைக்கு உள்பட்ட இன்றய தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர் திரு ராவ். சிறுவயதிலேயே உறவினர் குடும்பத்தினருக்கு தத்து கொடுக்கப்பட்டார். தனது ஆரம்ப கல்வியை கரீம்நகர் மாவட்டத்திலும் பட்டப்படிப்பை உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் முடித்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை பூர்த்தி செய்தார்.

தெலுங்கு, மராட்டி, ஹிந்தி, சமிஸ்க்ரிதம், தமிழ், ஒரிய மொழி, வங்க மொழி, குஜராத்தி, கன்னடம், உருது ஆகிய பாரதீய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்சு, அரபி, பெர்சியன், ஸ்பானிஷ், ஜெர்மன் ஆகிய உலக மொழிகளிலும் புலமை பெற்றவர் நரசிம்மராவ்.

படிக்கும் காலத்திலேயே ஹைதெராபாத் நிஸாமின் ஆட்சியை எதிர்த்து கொரில்லா முறையில் போரிடும் ஒரு குழுவை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக தனது வாழ்வின் இறுதி வரை பணியாற்றினார். 1957, 1962, 1967, 1972 ஆகிய நான்கு சட்டமன்ற தேர்தல்களில் மந்தானி தொகுதியில் வெற்றி பெற்று ஆந்திர சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1977,1980 மற்றும் 1991ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல்களில் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், 1984 மற்றும் 1989 தேர்தல்களில் மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும் 1996ஆம் ஆண்டு ஒடிஷா மாநிலத்தில் இருந்தும் நாடாளுமன்றத்துக்கு தேர்வானார்.

1971ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் 4ஆவது முதல்வராக பதவி ஏற்றார். நில உச்சவரம்பு திட்டம் போன்ற நில சீர்திருத்த சட்டங்களை கடுமையாக அமுல் படுத்தினார். 1977ஆம் ஆண்டு நாடு முழுவதும் இந்திராவுக்கு எதிரான அலை வீசிய போதும் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வானார்.

1980ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரான இந்திராவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ராவ், மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றினார். மத்திய உள்துறை, வெளியுறவு துறை, பாதுகாப்பு போன்ற துறைகளில் அவர் தனது பங்களிப்பை அளித்தார்.

கட்சி அவரின் திறமைகளை பயன்படுத்தாத காலங்களில் அவர் கட்சி தலைமையை குறைகூறுவதற்கு பதிலாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள முன்னேற்றங்களை பற்றி தெரிந்து கொண்டார். அதுபோன்ற காலகட்டங்களில் சில நூல்களை எழுதினார், பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்தார். எண்பதுகளின் ஆரம்ப காலங்களிலேயே அவர் கணிப்பொறியை உபயோகிப்பது பற்றி கற்றுக்கொண்டார். ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறுபது வயதில் கற்றுக்கொள்வது என்பது எவ்வளவு கடினம் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே

1991ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் அநேகமாக அரசியலில் இருந்து விலகும் எண்ணத்திலேயே நரசிம்ம ராவ் இருந்தார். ஆனால் காலத்தின் கணக்கு வேறுமாதிரியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜிவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆனால் நாடாளுமன்றத்தில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருந்தது. சோனியா தலைமை ஏற்கவேண்டும் என்று ஒரு சாரார் கூற, நேரு குடும்பத்தின் தலையீடு இனி வேண்டாம் என்று சிலர் கூற, பாரதம் முழுவதும் தெரிந்த தலைவர்கள் எவரும் காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் போக, வயதானவரும், பெருமளவு ஆதரவாளர்கள் இல்லாதவரும், அடுக்கு மொழி வசனங்களால் பொதுமக்களை உணர்ச்சிவசப் படுத்தும் மொழி ஆளுமை இல்லாதவரும், தற்காலிக தலைவராக மட்டுமே இருப்பார் என்ற கருத்தில் சமரச தலைவராகவும், பிரதமராகவும் நரசிம்மராவை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தது. 

ஆந்திர மாநிலத்தின் நந்தியால் தொகுதியில் இருந்து ராவ் மக்களவைக்கு தேர்வானார். வாமனரூபம் என்று தவறாக எடை போடப்பட்ட நரசிம்மம் ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாக தனது ஆளுமையை காட்டியது

அதிக எண்ணிக்கையிலான கட்சி என்ற நிலையில் இருந்து அவர் அறுதி பெரும்பான்மை கொண்ட கட்சி என்ற நிலைக்கு மாறினார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்களுக்கு அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஏழைகளுக்கு உதவுவது என்பது நல்ல எண்ணம்தான். ஆனால் உதவ வேண்டும் என்பதற்காகவே மக்களை ஏழைகளாக வைத்திருப்பது என்பது சரியல்ல. முதல் பிரதமர் நேருவிற்கு இருந்த அதீத சோசலிச சிந்தாந்த விருப்பு என்பது இந்திரா காலத்தில் தொழிலதிபர்கள் மீதான வெறுப்பாக மாறியது. நூறு ரூபாய் சம்பாதித்தால் தொண்ணூற்று ஐந்து ரூபாயை அரசுக்கு வரியாக அளிக்கவேண்டும் என்ற திட்டங்கள் இந்த நாட்டில் இருந்தன. ஒரு தொழிலதிபர் என்ன தயாரிக்க வேண்டும், எப்படி தயாரிக்கவேண்டும், அதை எங்கே எப்படி, எந்த எண்ணிக்கையில் தயாரித்து  எந்த அளவு லாபத்தில் விற்கவேண்டும் என்பதை டெல்லியில் அமர்ந்துகொண்டு சில அதிகாரிகள் தீர்மானித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு தொலைபேசி இணைப்பு கிடைக்க ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்த காலம், இரு சக்கர வாகனம் வேண்டும் என்றால் அதன் விலையைப் போல ஒரு மடங்கு பணத்தை லஞ்சமாக அளிக்க வேண்டும் அல்லது அந்நிய நாடு செலவாணி கொடுத்து வாங்க வேண்டும். நான்கு சக்கர வாகனம் என்றால் அது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்று இருந்த காலம். தவறான பொருளாதார கொள்கையால் நாடு திவாலாகும் நிலையில் இருந்தது. வெளிநாட்டு இறக்குமதி கூடி, ஏற்றுமதி குறைந்து, அந்நிய செலவாணி என்பது இல்லாமலேயே இருந்தது. ரிசர்வ் வங்கியின் கையில் இருந்த தங்கம் அடகு வைக்கப்பட்டு, அந்நிய செலவாணி கடனாகப் பெறப்பட்டது.

பொருளாதார சீர்குலைவு, கடந்த மூன்று ஆண்டுகளாக நிலையான மத்திய அரசு இல்லாததால் உருவான குழப்பம், பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜிவ் காந்தியின் கொடூரமான மரணம் என்று எல்லா திசையிலும் பிரச்சனைகள், இதற்க்கு நடுவில் பாரத நாட்டில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவையிலும் உறுப்பினராக இல்லாத 70 வயதான ராவ் நாட்டின் ஒன்பதாவது பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். நிலைமையை புரிந்து கொண்ட ராவ் துணிச்சலான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். அதிகாரியாக மட்டுமே பணி புரிந்த மன்மோகன்சிங்கை மத்திய நிதியமைச்சராக நியமித்தார். பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டது. தொழித்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப் பட்டன. இந்திய நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது. வருமானவரி, சுங்கவரி உள்பட பல்வேறு வரிவிகிதங்கள் குறைக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டன. குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர மற்ற தொழில்களில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப் பட்டது. அரசின் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அடக்கி வைக்கப்பட்டு இருந்த தேசத்தின் ஆன்மா விழித்துக் கொண்டது. மிகக் குறுகிய காலத்தில் பாரத பொருளாதாரம் பல்வேறு முனைகளில் பெரும் முன்னேற்றத்தை அடைந்தது.

ராவின் ஆட்சி காலத்தில் பாரதம் அணுகுண்டு சோதனை செய்யும் நிலைமைக்கு வெகு அருகில் இருந்தது. ஆனால் புத்தர் மீண்டும் ஒரு முறை சிரிக்க இன்னும் கொஞ்ச காலம் காத்துக் கொண்டு இருக்க வேண்டி இருந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய கும்மட்டம் உடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து நாடெங்கும் கலவரம் வெடித்தது. மும்பை நகரில் தொடர் குண்டுவெடிப்பு, லத்தூர் நகரில் நிலநடுக்கம் என்று பல்வேறு இன்னல்கள் உருவானது.

மும்பை பங்குச்சந்தையின் தரகர் ஹர்ஷத் மேத்தா பிரதமருக்கு தான் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். பரபரப்பான திருப்பங்களும், பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்தாலும் நரசிம்மராவ் தனது பதவிக்காலத்தை முழுவதுமாக பூர்த்தி செய்தார். ஆனாலும் 1996ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வெற்றியைப் பெற முடியவில்லை. முதன் முதலாக வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு பதவி ஏற்றது. அவரும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவி விலக தேசிய முன்னணியின் சார்பில் தேவ கௌடா பதவி ஏற்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை சீதாராம் கேசரிக்கும் அவர் பின் சோனியா காந்திக்கும் சென்றது. காங்கிரஸ் கட்சி ராவைப் புறக்கணிக்கத் தொடங்கியது. அவர் கொண்டு வந்த பொருளாதா சீர்திருத்தங்களின் பெருமையை அது ராஜிவ் காந்திக்கு சொந்தமானது என்று கூறத் தொடங்கியது.

பொதுவாழ்வில் இருந்து மெல்ல மெல்ல விலகிய ராவ் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் டெல்லியில் காலமானார். அவரது உடலைக் கூட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் வைத்து மரியாதை செலுத்த சோனியா காந்தி சம்மதிக்கவில்லை. அவரது இறுதிச் சடங்குகள் அவர் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக ஆந்திராவில் நடத்தப் பட்டது. பாரத தேசம் என்பதும் அதன் தலைமைப் பதவி என்பதும் நேரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது, வேறு யாருக்கும் அதற்கான தகுதியோ பெருமையோ இல்லை என்ற நேரு குடும்பத்தின் கருத்து மிகவும் தெளிவாக வெளியானது.

மிகவும் கடினமான காலகட்டத்தில் இந்த நாட்டை வழிநடத்திச் சென்று, இன்று கிடைத்திருக்கும் பல்வேறு வசதிகளுக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமான திரு நரசிம்மராவை அவரது பிறந்தநாள் அன்று நினைவு கூர்ந்து அவரது சேவைகளுக்காக நன்றி செலுத்துகிறோம்.