வியாழன், 11 டிசம்பர், 2025

டிசம்பர் 11 - சர்சங்கசாலக் பாலாசாஹேப் தேவரஸ் பிறந்தநாள்

குருஜி கோல்வாக்கருக்குப் பிறகு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தை சர்சங்கசாலக்காக இருந்து வழிநடத்திய பரமபூஜ்யனிய மதுக்கர் தத்தாத்திரேய தேவரஸ் என்ற பாலாசாஹேப் தேவரஸ் அவர்களின் பிறந்ததினம் இன்று. 



மஹாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்த தத்தாத்திரேய க்ரிஷ்ணாராவ் தேவரஸ் - பார்வதிபாய் தம்பதியினரின் எட்டாவது மகனாக 1915ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள் பிறந்தவர் பாலாசாஹேப் தேவரஸ். மிக இளமைக் காலத்திலேயே சங்கத்தில் இணைந்து கொண்ட தேவரஸ் டாக்டர் ஹெட்கேவார் மற்றும் குருஜி கோல்வாக்கரால் பட்டை தீட்டப்பட்டார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற தேவரஸ், சங்கத்தின் முழுநேர பிரச்சாரகராகச் சேர்ந்தார். தேவரஸின் இளைய சகோதர் முரளிதர் தேவரஸும் சங்கத்தின் முழுநேர பிரச்சாரகர்தான். 

சங்கத்தின் பணியை முன்னெடுக்க பாலாசாஹேப் வங்காளத்திற்கு அனுப்பப்பட்டார். வெற்றிகரமாக வங்க மண்ணில் சங்கத்தை நிறுவி விட்டு நாக்பூர் திரும்பி சங்கத்தின் மராத்தி மொழி பத்திரிகையான தருண்பாரத் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியான யுகதர்மா ஆகிய பத்திரிகைகளின் பொறுப்பை தேவரஸ் ஏற்றுக்கொண்டார். சங்கம் ஒருபோதும் நேரடி அரசியலில் ஈடுபடுவது இல்லை. அதனால்தான் டாக்டர் ஹெட்கேவார் காந்தியின் சத்தியாகிரஹப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்ற போது, சங்கத்தின் பிரதிநிதியாக இல்லாமல் தனிப்பட்ட முறையிலேயே கலந்துகொண்டார். ஆனால் தவிர்க்கமுடியாமல் நேரடி அரசியல் பணியை சங்கம் முன்னெடுக்கவேண்டிய கட்டாயம் தேவரஸ் அவர்களுக்கு ஏற்பட்டது. 

1973ஆம் ஆண்டு சங்கத்தின் பொறுப்பு தேவரஸ் வசம் வந்தது. சிறிது காலத்திலேயே இந்திரா நெருக்கடி நிலையை அமுல் செய்தார். உடனடியாகத் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சங்கமும் இருந்தது. நாக்பூரில் கைது செய்யப்பட்ட தேவரஸ் பூனா நகரின் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். பலர் தலைமறைவானார்கள். ஸ்வயம்சேவகர்களின் வீடுகள் பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் சரணாலயமானது. இருபத்திமூவாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடைபெற்ற தொடர்ந்த போராட்டங்களில் நாற்பத்தியையாயிரம் சங்க தொண்டர்கள் கைதானார்கள். 

சர்வாதிகாரத்தை எதிர்த்த சங்கத்தின் பங்களிப்பைப் பற்றி 1976ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதியிட்ட The Economist பத்திரிகை இப்படி எழுதியது. 

“The underground campaign against Mrs Gandhi claims to be the only non-left wing revolutionary force in the world, disavowing both bloodshed and class struggle. Indeed, it might even be called right wing since it is dominated by the Hindu communist party, Jan Sangh and its ‘cultural’ (some say paramilitary) affiliate the RSS. But its platform at the moment has only one non-ideological plank; to bring democracy back to India. The ground troops of this operation (the underground movement), consist of tens of thousands of cadres who are organized to the village level into four men cells. Most of them are RSS regulars, though more and more new young recruits are coming in. The other underground parties which started out as partners in the underground have effectively abandoned the field to Jan Sangh and RSS.”

நெருக்கடி நிலையை விலக்கிக்கொண்டு திடீர் என்று இந்திரா தேர்தலை அறிவித்தார். எல்லா எதிர்கட்சிகளையும் ஒரு குடைக்குள் கொண்டுவந்து இந்திராவை எதிர்க்க நானாஜி தேஷ்முக் தலைமையிலான ஸ்வயம்சேவகர்கள் ஈடுபட்டனர். குறுகிய கால இடைவெளிக்குள் நாடெங்கும் இந்திராவைத் தோற்கடிக்க ஸ்வயம்சேவகர்கள் உழைத்தனர். 

தேர்தல் முடிந்தபிறகு மீண்டும் சங்கம் தனது தேச புனர்நிர்மாணப் பணிக்கு திரும்பியது. எண்பதுகளின் இறுதிப் பகுதியில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுலாக்க வி பி சிங் முடிவு செய்தார்.  இந்த முடிவு நாடெங்கும் பெரும் சூறாவளியைக் கிளப்பியது. இந்த முடிவை எப்படி எதிர்கொள்ள என்று சங்கத்தின் அனைத்து நிலைகளிலும் விவாதங்கள் நடந்தன. ஏற்கனவே தீண்டாமை குற்றம் இல்லையென்றால் எதுவுமே குற்றமாகாது என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு இருந்த தேவரஸ், பெருவாரியான மக்களின் முன்னேற்றத்திற்காக இதனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார். 

தேவரஸ் காலத்தில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிபட்ட போது மீண்டும் சங்கம் தடை செய்யப்பட்டது. அதில் இருந்தும் மீண்டும் பொலிவோடு முன்னெழ தேவரஸ் அவர்களின் பங்களிப்பு மிக அதிகம். 

1993ஆம் ஆண்டு தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சர்சங்கசாலக் பொறுப்பில் இருந்து தேவரஸ் விலகிக் கொண்டார். அடுத்த தலைவராக ராஜுபையா என்ற பேராசிரியர் ராஜேந்திரசிங் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இருபது ஆண்டுகள் சங்கத்தை மிக சிக்கலான காலகட்டத்தில் வழிநடத்திய பாலாசாஹேப் தேவரஸ் 2003ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் நாள் பாரததாயின் தாளில் அற்பணமானார். 

சங்கத்தின் புகழ்வாய்ந்த தலைவருக்கு ஒரே இந்தியா தளம் தலை வணங்கி தனது மரியாதையைச் செலுத்துகிறது. 

புதன், 10 டிசம்பர், 2025

டிசம்பர் 10 - சக்ரவர்த்தி திருமகன் - ராஜாஜி பிறந்தநாள்

புகழ் பெற்ற வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் மனசாட்சி என்று அறியப்பட்டவர், கருத்தியல் எதிரிகளால் மூதறிஞர் என்று போற்றப்பட்டவர், சமூக சீர்திருத்தவாதி, மேற்கு வங்க ஆளுநர், பாரதத்தின் கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், சென்னை மாகாணத்தின் முதலமைச்சர், எதிர்க்கட்சியை இல்லாமல் இருந்த காலத்தில் காங்கிரசுக்கு எதிராக சுதந்திரா கட்சியை கட்டமைத்தவர், முதல்முதலாக தமிழகத்தில் மதுவிலக்கை அமுல் செய்தவர், விற்பனை வரி என்ற புதிய வரியை அறிமுகம் செய்தவர் என்றெல்லாம் அறியப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்கு எழுத்தாளர் என்ற ஒரு முகமும் உண்டு.


டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதங்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த ராஜாஜி, வெளியே வந்ததும் `சிறையில் தவம்' எனும் நூலை எழுதி எழுத்தாளரும் நூலாசிரியரும் ஆனார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 40 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, கதை, நாவல் என எல்லா வடிவங்களிலும் எழுதினார். சமய, இதிகாச, தத்துவ எழுத்தில் ஒரு புதிய பாணியைப் படைத்தார்.

ஏராளமான சிறுகதைகள் எழுதிய ராஜாஜிக்கு, கதைக்கொள்கையைப் பொறுத்தவரையில் தெளிவான சிந்தனையும் கோட்பாடும் உண்டு. சிறுகதை வேறு, நாவல் வேறு என்பதையும் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் அவர் மிகக் கச்சிதமாக அறிந்துவைத்திருந்தார். 

"சிறுகதை நெடுங்கதையைப்போல் நீடித்த ஒரு காலப்போக்கையோ அல்லது ஒரு கதாநாயகனுடைய வாழ்க்கை முழுவதையுமோ சித்திரிக்காது. தனிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை மட்டிலும் எடுத்துக்கொண்டு சித்திரிப்பது சிறுகதை. சிறுகதையில் நிகழ்ச்சிச் செறிவு அதிகமாகக் காணப்பட மாட்டாது. சம்பவங்கள் குறைந்த எண்ணிக்கையாய்த்தான் இருக்கும். ஆனால், கதைக்கட்டு சாமர்த்தியமாகப் பதிந்திருக்கும். பாத்திரங்கள் பளிச்செனத் தூக்கிக்காட்டும் குண விசேஷங்களுடன் இருக்கும். நல்ல சிறுகதைக்கு அடையாளம் ஒன்றே. அதைப் படித்து முடிக்கும்போது நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும். இந்தக் கதைகளெல்லாம் நான் வெறும் பொழுதுபோக்காக எழுதவில்லை. என் நாட்டு மக்களுக்கு என்னுடைய எந்தக் கருத்து நன்மைபயக்குமோ, மக்களின் முன்னேற்றத்துக்கு எந்த அனுபவ உண்மை பயன்படுமோ அதைக் கதைபோலச் சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். வெறும் கதையழகு, கலையழகுக்காக நான் இவற்றை எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட சில உண்மைகளை என் நாட்டு மக்களுக்குச் சொல்கிறேன், அவ்வளவே.” " இது தனது கதைகளைப் பற்றி ராஜாஜியே செய்த திறனாய்வு.

மதுவிலக்குப் பிரசாரம், தீண்டாமை ஒழிப்பு போன்ற அன்றைய காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்குத் துணையாகப் பிரசாரம் செய்யும் நோக்குடன் நிறைய கதைகள் எழுதியவர் ராஜாஜி. அவர் எப்போதுமே ஓர் ஒழுக்கவாதி. ஆகவே, சிறுகதை உள்ளிட்ட எந்தப் படைப்பானாலும் அவசியம் ஒரு நீதி இருக்க வேண்டும் என்பதை அவர் வற்புறுத்துவார். அதனால் அவருடைய கதைகளில் பிரசார தொனி சற்றுத் தூக்கி நிற்கும். ஆனால், அத்தகைய பிரசாரம் ஏதுமில்லாத வாழ்க்கைக் கதைகளையும் அவர் சுவைபட எழுதியிருக்கிறார். ராஜாஜி வக்கீலாக இருந்ததாலோ என்னவோ, அவருடைய பெரும்பாலான கதைகளில் ஒரு வக்கீல் வந்து நின்றுவிடுகிறார்.

ராஜாஜி கதைகள்', `பாற்கடல்', `பிள்ளையார் காப்பாற்றினார்', `நிரந்தரச் செல்வம்' ஆகிய தொகுதிகளிலும் தனியாகவும் என 60-க்கு மேற்பட்ட சிறுகதைகளை ராஜாஜி எழுதியிருக்கிறார். மணிக்கொடியும், ஆனந்த விகடனும் சிறுகதைக்கு இடம் கொடுக்கத் தொடங்கும் முன்னரே ராஜாஜி கதை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1929-ம் ஆண்டில் மதுவிலக்குப் பிரசாரத்துக்காகவே அவர் தொடங்கிய `விமோசனம்’ இதழில் அவர் கதைகள் எழுதினார்.

ராஜாஜியின் அறிவு முதிர்ச்சிக்கு மக்களிடத்தில் இருந்த செல்வாக்கே அவரது எழுத்துகளுக்கு மதிப்பைக்கொடுத்தது. அரசியலில் இருந்த புகழால் இலக்கியத் துறையில் பெரும்பெயர் பெற்ற ராஜாஜி, தமது எழுத்துத்திறனால் இலக்கியத் துறையிலும் தமக்கு நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்றுக்கொண்டார். `சமீபகால இலக்கிய வரலாற்றில், அரசியலை இலக்கியத்துக்குள் கலந்தோருள் ராஜாஜி முதன்மையானவர்.

1954-ம் ஆண்டில் சென்னை முதலமைச்சர் பதவி காமராஜிடம் கைமாறியபோது, ராஜாஜிக்கு வயது 76. அதன் பிறகு ராமாயணத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். . `கல்கி' வார இதழில் 23 மே 1954 முதல் 6 நவம்பர் 1955 வரை `சக்கரவர்த்தித் திருமகன்' எனும் பெயரில் ராமாயணச் சுருக்கத்தைத் தொடராக எழுதினார். ராஜாஜியின் தந்தை பெயர் சக்கரவர்த்தி வேங்கடார்யா ஐயங்கார். ஆகவே, `சக்கரவர்த்தித் திருமகன்' எனும் தலைப்பு ஒருவகையில் ராஜாஜிக்கேகூடப் பொருத்தமானதுதான். அந்தத் தொடர் மலிவுப் பதிப்பாக 1956 மார்ச் மாதம் ஒரு ரூபாய் விலையில் நூலாக வந்தபோது, தொடர்ந்து 33 பதிப்புகள் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தமிழ்ப் புத்தக விற்பனையில் சரித்திரம் படைத்தது. அதுமட்டுமன்று, அதற்கு சாகித்திய அகாடமி பரிசும் 1958-ம் ஆண்டில் கிடைத்தது.

`குழந்தைகளுக்கான கதைகளும் எழுதினார் ராஜாஜி. சிறுவர்களை ஒன்றும் அறியாதவர்கள், அவர்களுக்குப் பெரியவர்களின் உபதேசம் தேவை என்ற எண்ணத்தை, முற்றிலும் இந்தக் கதைகளில் உடைத்துவிட்டார் ராஜாஜி. நன்கு புரிந்துகொள்ளக்கூடிய பக்குவமுடையவர்களை வைத்துக்கொண்டே கதைகளைச் சொல்லியிருக்கிறார்' என்று ராஜாஜியைப் பற்றி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நூல் எழுதிய ஆர்.வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.

சேலத்தில் இலக்கிய வளர்ச்சிக்காக சேலம் இலக்கியச் சங்கத்தை நிறுவி, அதன்மூலம் தொடர்ந்து கூட்டங்களை நடத்தியவர் ராஜாஜி. Tamil Scientific Terms Society என்ற அமைப்பை நிறுவி தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்க காரணமாக இருந்தார்.

மஹாபாரதத்தை வியாசர் விருந்து என்ற பெயரிலும், கண்ணன் காட்டிய வழி என்று பகவத் கீதையை, திருமூலர் திருமொழி, சோக்கிரதர், உபநிடதப் பலகணி, குடி கெடுக்கும் கள், திக்கற்ற பார்வதி, ராஜாஜி கதைகள், ராஜாஜி கட்டுரைகள் என்று பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ராஜாஜி-கல்கி-சதாசிவம்-எம்.எஸ்.சுப்புலட்சுமி-ரசிகமணி ஆகியோர் நட்சத்திர நண்பர்களாக அன்றைய நாள்களில் மதிக்கப்பட்டவர்கள். ராஜாஜி கவிஞர் அல்லர். ஆனால், சில பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதி இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு பாடல் `குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற பக்திப்பாடல்.

ராஜாஜி, தம் 37-ம் வயதில் மனைவி அலர்மேல்மங்கையை இழந்தார். அப்போது அவருடைய கடைசி மகள் லட்சுமிக்கு மூன்று வயது. மூத்த மருமகன் வரதாச்சாரி இறந்தபோது, மகள் நாமகிரிக்கு 26 வயது. இளைய மருமகன் தேவதாஸ் காந்தி மறைந்தபோது, மகள் லட்சுமிக்கு 45 வயது. இத்தகைய இழப்புகளையும் வாழ்க்கையில் பல இடர்களையும் சோதனைகளையும் சந்தித்தவண்ணம் இருந்த அவரால், `குறை ஒன்றும் இல்லை...' என்று எப்படிப் பாட முடிந்தது என்பது அதிசயம்தான்.

சில பத்தாண்டுகளைத் தாண்டிப் பார்க்கும் அறிவாற்றல் மிக்க தலைவரை இன்று மரியாதையுடன் ஒரே இந்தியா தளம் நினைவு கொள்கிறது.

செவ்வாய், 9 டிசம்பர், 2025

டிசம்பர் 9 - விடுதலை வீரர் ராவ் துலாராம்

அந்த விடுதலை வீரர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தவர். பலமுறை ஆங்கிலேயர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பித்துச் சென்றவர். பிறகு பாரதத்தை விட்டு விலகி வெளிநாட்டு ஆட்சியாளர்களின் உதவியுடன் ராணுவத்தை உருவாக்கியவர். ஆனால் தனது கனவு நிறைவேறும் முன்னால், வெளிநாட்டிலேயே மரணம் அடைந்தவர். நாம் சுபாஷ் சந்திரபோஸைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கவில்லை. அவருக்கு எண்பதாண்டுகளுக்கு முன்னம் அதே போல இருந்த ஒரு வீரரைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்.


இன்றய தெற்கு ஹரியானா முதல் வடகிழக்கு ராஜஸ்தான் வரை உள்ள இடம் அஹிர்வால் பிரதேசம் என்று அறியப்படும் நாடாக இருந்தது. ரேவாரி அதன் தலைநகர். அதனை யது குலத்தைச் சார்ந்த மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். டெல்லிக்கு எண்பது கிலோமீட்டர் தொலைவில் இந்த நாடு இருந்தது. இந்த நாட்டை ஆண்டுகொண்டு இருந்த ராஜா ராவ் புரன் சிங் - ராணி ஞான் கவுர் தம்பதியினரின் மகனாக 1825ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் பிறந்தவர் துலா சிங் அஹிர். நாடாளுவதற்கு தேவையான ஆயுதப் பயிற்சி, ராணுவ வியூகங்கள் அமைத்தல் ஆகியவற்றை சிறுவயதில் இருந்தே மேற்கொண்டார் துலா சிங். அதோடு அவர் ஹிந்தி, பாரசீகம், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்று இருந்தார். தனது பதினாலாம் வயதில் தந்தையை இழந்த துலா சிங் ராஜா ராவ் துலா ராம் என்ற பெயரோடு 1839ஆம் ஆண்டு அரியணை ஏறினார்.

பாரதம் கொந்தளிப்பான காலத்தில் இருந்த நேரம் அது. வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் சிறிது சிறிதாக பாரதத்தை தங்கள் கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அதனை எதிர்த்து முதலாம் சுதந்திரப் போர் தொடங்கியது. அதில் ராஜா ராவ் துலாராமும் கலந்துகொண்டார். கடைசி முகலாய அரசராக இருந்த பகதுர் ஷா ஜாபர் அவர்களின் உதவிக்கு ஐயாயிரம் வீரர்கள் கொண்ட படையோடு அவர் சென்றார். ஏற்கனவே ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவி இருந்ததால், பல்வேறு ஆயுதங்களும் துலாராம் வசம் இருந்தது.

டெல்லிக்கு சற்று தொலைவில் உள்ள நசிபிபூரில் நடந்த சண்டையில் ஆங்கிலேயர்களை துலாராம் படைகள் தோற்கடித்தன. கர்னல் ஜான் ஜெரார்ட் மற்றும் கேப்டன் வாலஸ் ஆகியோர் இதில் கொல்லப்பட்டனர். ஆனால் பாட்டியாலா, கபூர்தலா போன்ற நாடுகளின் படைகள் ஆங்கிலேயர்களின் உதவிக்கு வர துலாராம் படைகள் பின்னடையவேண்டி இருந்தது. எப்படியும் ஆங்கிலேயர்கள் தன்னைப் பின்தொடருவார்கள் என்பதை அறிந்த துலாராம், தாந்தியா தோபேயின் துணையோடு மீண்டும் போராட்டத்தை தொடங்கினார். முழுமையான ஆதரவு இல்லாததால் முதல் சுதந்திரப் போர் வெற்றியில் முடியவில்லை.

சரணடைய விரும்பாத துலாராம், ஈரானுக்குச் சென்று அன்றய மன்னர் ஷாவைச் சந்தித்தார். ஷா அவருக்கு ராணுவ உதவி அளிப்பதாக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வந்த துலாராம் அந்த நாடு எமிரையும் சந்தித்து உதவி கோரினார். அவரும் உதவி செய்ய ஒத்துக்கொண்டார். ஆப்கானிஸ்தானத்தில் இருந்தே ரஷிய மன்னரோடு துலாராம் தொடர்பு கொண்டார். ஏற்கனவே இவர்கள் அனைவரோடும் ஆங்கிலேயர்களுக்கு நல்ல உறவு இல்லை. அதனால் இவர்கள் அனைவரும் துலாராமிற்கு உதவி செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 1863ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் துலாராம் தனது முப்பத்தி எட்டாம் வயதில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் மரணமடைந்தார்.

வீரர்கள் மரணமடையலாம், ஆனால் வீர வரலாறு மரணிக்காது. ராஜா ராவ் துலாராம் உள்ளிட்ட வீரர்களுக்கு நமது நன்றியும் வணக்கங்களும் என்றும் உரித்தாகுக. 

வியாழன், 4 டிசம்பர், 2025

டிசம்பர் 4 - பொம்மைகள் வழியாக விஞ்ஞானம் அரவிந்த்குப்தா

நாம் உணர்கிறோமோ இல்லையோ, நாம் வசிக்கும் பிரபஞ்சம் திட்டவட்டமான அறிவியல் விதிகளின்படியே இயங்குகிறது. ஆனால் பயனாளிகளுக்கு அறிவியல் விதிகள் சொல்லிக்கொடுக்கப்படுவது இல்லை. பொதுமக்களுக்கும் கல்விச்சாலைகளுக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கின்றது. மனப்பாடம் செய்து, கேள்விகளுக்கு பதில் சொல்லும்படிதான் நமது மாணவர்கள் பயிற்றுவிற்கப் படுகிறார்கள். பதில்கள் மீது கேள்வி கேட்கும் மாணவர்களை நமது கல்விமுறை ஊக்குவிப்பதில்லை. இந்த இடைவெளியை இல்லாமல் செய்ய பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் அரவிந்த் குப்தா. நாம் குப்பைகள் என்று ஒதுக்கும் பொருள்களில் இருந்து பொம்மைகளைச் செய்து அதன் மூலம் அறிவியலை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் இவர்.


அர்விந்த் குப்தா, பரேலி என்னும் ஊரில், மிக அதிகம் படிக்காத, ஆனால், கல்வியின் முக்கியத்துவம் அறிந்த பெற்றோருக்கு நான்காவது மகனாக 1953ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் நாள் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த அரவிந்த் குப்தா 1972 ஆம் ஆண்டு, கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் படிக்கச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஒரு நாள், கான்பூர் ஐஐடியில், கல்வியாளார் அனில் சட்கோபால் என்பவர் ஒரு உரை நிகழ்த்தினார். அனில் சட்கோபால், இந்திய வேளாண் கழகத்தில் முதுகலைப் பட்டமும், கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

வேளாண்மை, சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் கிஷோர் பாரதி என்ற சேவை நிறுவனத்தை அனில் சட்கோபால் 1971ஆம் ஆண்டு துவங்கி இருந்தார். 1972 ஆம் ஆண்டு, ஹோஷங்காபாத் அறிவியல் கல்வித் திட்டம் (Hoshangabad Science Teaching Programme – HSTP) என்னும் திட்டத்தைத் துவங்கினார். இது துவக்கத்தில், 5-8 வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியற் கல்வியைக் கற்பிப்பதற்காகத் துவங்கப்பட்டது. அவரின் உரை அரவிந்த் குப்தாவிற்கு புதிய திறப்பை அளித்தது.

படிப்பை முடித்தபின் அரவிந்த் குப்தா டாடா மோட்டார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு ஹோஷங்காபாத் சென்றார். சைக்கிளின் வால் ட்யூப்பையும், தீக்குச்சிகளையும் வைத்துக் கொண்டு, பல்வேறு விதமான வடிவங்களை அமைத்தார். அவற்றை வைத்துக் கொண்டு, கணித வடிவங்கள், வேதியியல் மூலக்கூறு அமைப்புகள், வீடுகள், கட்டுமானங்கள் முதலியவற்றைக் குழந்தைகளே செய்து, அறிந்து கொள்ளுமாறு பயிற்றுவித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அங்கிருந்து திருவனந்தபுரம் சென்று, கட்டிடக்கலை வல்லுநர் லாரி பேக்கரிடம் பணிபுரிந்தார.

மீண்டும் வேலைக்குத் திரும்பிய அரவிந்த் குப்தாவிற்கு, தான் மேற்கொள்ள வேண்டிய பணி எது என்பது தீர்மானமாகத் தெரிந்ததால், வேலையை விட்டு விட்டு கல்வி கிடைக்காத குழந்தைகளுக்கு பொம்மைகள் மூலம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் பணியில் ஈடுபட முடிவு செய்து, வேலையை உதறினார். அந்தச் சமயத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலராக இருந்த பேராசிரியர் யாஷ்பால் அவர்கள் மூலமாக, ஒரு புத்தகம் எழுத ஒரு ஃபெல்லோஷிப் கிடைத்தது. “தீக்குச்சி மாதிரிகளும் மற்ற அறிவியல் பரிசோதனைகளும்”, என்னும் ஒரு புத்தகத்தை எழுதினார். இரண்டு ஆண்டுகளில், அந்தப் புத்தகம் 12 மொழிகளில் வெளியாகி, கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அனில் சடகோபனின் ஏகலைவா நிறுவனத்துக்காக, அர்விந்த் குப்தா பல அறிவியல் நூல்களை எழுதினார். தரங்க் (சிற்றலைகள்) என்னும் தலைப்பில், 25 வருடங்களில், 125 நிகழ்ச்சிகளைத் தயாரித்து, தேசியத் தொலைக்காட்சிக்காக (தூர்தர்ஷன்) வழங்கினார். இதன் மூலமாக, மிகப் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கும், எளிமையான அறிவியல் பரிசோதனைகளை அவர் பள்ளி மாணவர்களிடையே கொண்டு செல்ல முடிந்தது. தரங்க், தூர்தர்ஷனின் மிக வெற்றிகரமான நிகழ்ச்சிகளுள் ஒன்று.

பெரும் பொருள்செலவில் பள்ளிகளில் அறிவியல் சோதனைச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதாலேயே, பல பள்ளிகளில் அவை இல்லாமலேயே ஆகி விடுகிறது. ஆனால் மிக எளிய முறையில், அதிகம் பொருள் செலவு இல்லாமலேயே அதே சோதனைகளை செய்து காட்டியும், குழந்தைகளே அந்த சோதனைகளைச் செய்ய வைப்பதன் மூலம் அவர்களின் அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதும் பெரும் பலனை அளிக்கும் என்பதை அரவிந்த் குப்தா நிரூபித்து உள்ளார்.

பல்வேறு பொம்மைகளின் மூலம் அறிவியல் சோதனைகளைச் செய்வது பற்றிய அவரின் செயல்முறை விளக்கங்களும், அது பற்றிய புத்தகங்களும் என்று அவரது வலைத்தளம் தேடுதல் உடையவர்களுக்கு ஒரு தங்கச் சுரங்கம்.

தனது கல்வியை, திறமையை சமுதாயத்தின் வளர்ச்சிக்கு என்று அர்ப்பணித்த அரவிந்த் குப்தாவிற்கு பல்வேறு விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. அதில் முக்கியமானது பாரத அரசு 2018ஆம் ஆண்டு அவருக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதாகும்.

நாட்டின் சிறப்புமிக்க அறிவியல் ஆசிரியருக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 

புதன், 3 டிசம்பர், 2025

டிசம்பர் 3 - தொழிலதிபர் நவ்ரோஜி கோத்ரேஜ் பிறந்தநாள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பார்சி இனத்தைச் சார்ந்த இரண்டு சகோதர்கள் பூட்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் பட்டம் பெற்ற அர்தேஷிர் கோத்ரேஜும் அவர் சகோதரர் பிரோஷா கோத்ரேஜும் 1897ஆம் ஆண்டு தொடங்கிய அந்த முயற்சி இன்று பூட்டுகள், இரும்புப் பெட்டிகள், சோப் தயாரிப்பு, கால்நடைகளுக்கான உணவுவகைகள், விண்வெளி ஆராய்ச்சிக்கான உபகரணங்கள், நிறுவனங்களுக்கான மேசை, நாற்காலி என்று பல்வேறு துறைகளில் தங்கள் தரத்தினால் தனி இடத்தைப் பிடித்துள்ள கோத்ரேஜ் குழுமமாக மாறி உள்ளது. கோத்ரேஜ் குழுமத்தின் இரண்டாம் தலைமுறை வாரிசான நவ்ரோஜி கோத்ரேஜ் என்று அறியப்பட்ட நேவல் பிரோஷா கோத்ரேஜ் அவர்களின் பிறந்தநாள் இன்று. 

பிரோஷா கோத்ரேஜின் இளைய மகனாக 1916ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் பிறந்தவர் நவ்ரோஜி கோத்ரெஜ். தனது மூன்றாம் வயதிலேயே தாயாரை இழந்த நவ்ரோஜி மற்றும் அவர் சகோதர்களை கராச்சி நகரில் வசித்து வந்த அவரது பாட்டி பராமரித்து வளர்த்து வந்தார். சிறுவயதிலிருந்தே இயந்திரங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்த நவ்ரோஜி, பள்ளிப் படிப்பை முடித்த உடனேயே தந்தையின் தொழில்சாலைக்கு தொழில் கற்க வந்துவிட்டார். வருங்கால முதலாளியாக குளிர்பதன அறையில் அமர்ந்து கொண்டிருக்காமல், தொழிலாளிகளில் ஒருவராக பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் தளத்தில் அதிகநேரம் செலவிட்டதால் இயல்பாகவே நவ்ரோஜிக்கு உழைப்பின் மரியாதை தெரிந்ததோடு, பணியாளர்களை நிறுவனத்தின் வளர்ச்சியின் பங்குதாரர்களாகப் பார்க்கும் பக்குவமும் கைவசமானது. 

பல்வேறு இயந்திரங்களோடும் கருவிகளோடும் தன் மனதைப் பறிகொடுத்த நவ்ரோஜி, சுதேசித் தயாரிப்பில் தட்டச்சு இயந்திரத்தை ( Manual Typewriter ) தயாரிக்க முடிவு செய்தார். அன்றய காலகட்டத்தில் ஆசிய கண்டத்திலேயே எந்த நாட்டிலும் தட்டச்சு இயந்திரம் தயாரிக்கப்படவில்லை. ஆயிரத்திற்கும் அதிகமான உதிரிபாகங்களை இணைத்து தட்டச்சு இயந்திரத்தைத் தயாரிப்பது எனப்து மிகச் சவாலான வேலை. அதனை வெற்றிகரமாக செயலாக்கிக் காட்டியவர் நவ்ரோஜி கோத்ரேஜ். 1955ஆம் ஆண்டு ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்  பாரதம் சோசலிஸ பாதையில் செல்லும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மாநாட்டில்தான் முதல்முதலாக பாரதத்திலேயே தயாரான கோத்ரெஜ் தட்டச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை நேரு பார்வையிடும் படத்தை  இன்றும் பல்வேறு கோத்ரெஜ் அலுவலங்கங்களில் நாம் காணலாம். 


1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை கோத்ரெஜ் நிறுவனம் தயாரித்து வழங்கியது. பின்னர் முதல் இந்திய குளிர்சாதனப் பெட்டியை ( Refrigerator ) 1958ஆம் ஆண்டு கோத்ரெஜ் உருவாக்கியது. இதற்கெல்லாம் நவ்ரோஜியின் இயந்திரங்கள் மீதான புரிதல் பெரும் பங்காற்றியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்காக பல்வேறு துணைக்கருவிகளையும் 1976ஆம் ஆண்டு முதல் கோத்ரெஜ் தயாரித்து வருகிறது. இதற்கான தனிப் பிரிவையே நவ்ரோஜி உருவாக்கினார். 

தொழில் செய்வது, அதையும் சிறப்பாக, லாபகரமாகச் செய்வது என்பது ஓன்று. ஆனால் அதனை தர்மகர்த்தா முறையில் செய்வது என்பது வேறொன்று. கோத்ரெஜ் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கு மூலதனம் கோத்ரெஜ் குழுமத்தின் அறக்கட்டளைகள் வசம் உள்ளன. ஆண்டுதோறும் நிறுவனம் ஈட்டும் லாபத்தில் இருந்து பல்வேறு சேவைகளை அவை செய்து வருகின்றன. மக்கள்தொகை கட்டுப்பாடு, இயற்கை வளங்களை காப்பாற்றுதல் ஆகியவை அறக்கட்டளையின் முக்கியப் பணிகளாக உள்ளன. தங்களுக்கு சொந்தமான விக்ரோலி பகுதியில் உள்ள சதுப்பு நிலக் காடுகளை அழிக்காமல் இன்றும் கோத்ரேஜ் நிர்வாணம் பராமரித்து வருகிறது. அநேகமாக இன்று மும்பை நகரின் நுரையீரலாக இந்தக் காடுகள் செயல்பட்டு வருகின்றன. 

சுத்தமும் சுகாதாரமும் வசதிகளும் கூடிய பணியாளர் குடியிருப்பை நவ்ரோஜி உருவாக்கினார். அவரின் தந்தை பெயரில் பிரோஷாநகர் என்ற பெயரில் அது  உருவானது.தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க உதயச்சால் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று பெருவாரியாகப் பேசப்படும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு, தொழிலாளர் மனித வள மேம்பாடு என்ற சொற்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னமே அவற்றை செயலாகிக் காட்டியவர் நவ்ரோஜி கோத்ரேஜ் அவர்கள். 

தொழில்துறை வளர்ச்சிக்கு நவ்ரோஜியின் பங்களிப்பை மரியாதை செலுத்தும் விதமாக அரசு அவருக்கு 1976ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. 

பாரத நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான நவ்ரோஜி பிரோஷா கோத்ரேஜின் பங்களிப்பை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

செவ்வாய், 2 டிசம்பர், 2025

டிசம்பர் 2 - அம்புலிமாமாவின் மாமா - B நாகி ரெட்டி


இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளுக்கு முன்னர் தங்கள் பாலியத்தை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அது ஒரு சுகமான காலம் என்று. தொலைபேசியும் இணையத் தொடர்போடு கூடிய கைபேசியும் இல்லாத காலம் அது. குழந்தைகள் பிறந்த உடனேயே படிக்கவேண்டும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கவேண்டும், கணினித் துறையில் வேலைக்குச் சேரவேண்டும், உடனே வெளிநாடு செல்லவேண்டும் என்ற அழுத்தம் இல்லாமல் இருந்த காலம். வீடுகளில் தாத்தாவும் பாட்டியும், மாதத்தில் பாதி நாட்கள் தங்கி இருக்கும் உறவினர்களும் என்று பேசவும் பகிரவும் ஆள்கள் எப்போதும் இருந்த காலம். ஆங், அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்தினபாலா,  லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என்று பாடத்தைத் தாண்டியும் படிக்க புத்தகங்கள் இருந்த காலம் அது. சிறுவர்களுக்கான நூல்களில் முன்னோடியும், அறுபதாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலத்தோடு சேர்த்து பதின்மூன்று மொழிகளில் வெளியான அம்புலிமாமா என்ற பத்திரிகையை நடத்தி வந்த திரு நாகி ரெட்டியின் பிறந்தநாள் இன்று.

இன்றய ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தைச் சார்ந்தவர் திரு நாகி ரெட்டி அவர்கள். இவரின் தந்தை சென்னையில் தங்கி இருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்துகொண்டு இருந்தார். நாகி ரெட்டியின் மூத்த சகோதரர் நரசிம்ம ரெட்டி. திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்த நரசிம்ம ரெட்டியைப் பின்தொடர்ந்து நாகி ரெட்டியும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடலானார். நாகி ரெட்டி தனது நண்பரான சக்ரபாணி என்பவரோடு இணைந்து தமிழிலும், தெலுங்கிலும் பல்வேறு வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற வெற்றிப்படங்களை நாகி ரெட்டி தயாரித்து வெளியிட்டார். சென்னையின் முக்கியமான திரைப்படத் தளமாக விளங்கிய விஜயா வாகினி ஸ்டுடியோவும் இந்த இரட்டையர்களுக்கு சொந்தமானதுதான். கன்னடம், மற்றும் ஹிந்தி மொழியிலும் இந்த நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து உள்ளது. ஸ்டுடியோவில் இருந்து திரைப்படங்கள் வெளியேறி திறந்தவெளிகளில் படமாக்கப்பட்டன. நான்கு தென்மாநிலப் படங்களும் சென்னையில் தயாரித்து குறைந்து அந்தந்த மாநிலங்களில் தயாரிக்கும் நிலை உருவானது. நாகிரெட்டி சென்னை வடபழனியில் நடைபெற்று வந்த தனது ஸ்டுடியோவை மருத்துவமனையாக மாற்றினார். 

ஆனால் இது அனைத்தையும் விட நாகி ரெட்டியின் மகத்தான பங்களிப்பு என்பது ஏறத்தாழ அறுபதாண்டு காலத்திற்கும் மேலாக சந்தமாமா என்ற சிறுவர் பத்திரிகையை பல மொழிகளிலும் நடத்தியதுதான். 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாந்தாமாமா என்று தெலுங்கிலும் அம்புலிமாமா என்று தமிழிலும் ஒரே நேரத்தில் சிறார் பத்திரிகையை நாகி ரெட்டி தொடங்கினார். 


1949ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கன்னட மொழியில், 1949 ஆகஸ்ட் மாதம் ஹிந்தியில், 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மராத்தி மற்றும் மலையாள மொழியில், 1954ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில், 1955ஆம் ஆண்டு ஆங்கிலத்தில், 1956ஆம் ஆண்டு ஒரிய மற்றும் சிந்தி மொழியில், 1972ஆம் ஆண்டு வங்காள மொழியில், 1975ஆம் ஆண்டு பஞ்சாபி மொழியில், 1976ஆம் ஆண்டு அஸ்ஸாமிய மொழியில், 1978ஆம் ஆண்டு சிங்கள மொழியில், 1984ஆம் ஆண்டு ஸமிஸ்க்ரித மொழியில், சந்தாலி மொழியில் 2004ஆம் ஆண்டு என்று பாரதத்தின் முக்கிய மொழிகளில் எல்லாவற்றிலும் இந்தப் பத்திரிகை வெளிவந்தது.

பாரத நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் கதைகள், பல்வேறு மொழிகளில் உள்ள நீதிக்கதைகள் என்று பாரதத்தின் பாரம்பரியத்தை சிறுவர்களிடம் எடுத்துச் சென்றதில் சந்தமாமா பத்திரிகை பெரும் பங்காற்றியது.

இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு நாகி ரெட்டியின் குடும்பத்தினர் பத்திரிகையின் பங்குகளை வேறு சிலரோடு பகிர்ந்து கொண்டார்கள். தொழிலாளர் பிரச்னை காரணமாக ஓராண்டு இந்தப் பத்திரிகை வெளிவராமல் இருந்தது. மீண்டும் வெளிவரத் தொடங்கிய சந்தமாமா பத்திரிகை இன்று வெளிவருவது இல்லை. ஆனாலும் அறுபதாண்டுகளாக கலாச்சாரத்தை சிறுவர்களுக்கு போதித்த ஒரு பெரும் பங்களிப்பு எல்லாக் காலத்திலும் திரு நாகி ரெட்டியை நம் மனதில் நீங்காத இடத்தில் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

திரைத்துறையில் நாகி ரெட்டியின் பங்களிப்பை பல்வேறு மாநில அரசாங்கங்கள் அங்கீகரித்து பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளன. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, கன்னட மொழியின் சிறந்த திரைப்படத்திற்கான விருது, பிலிம்பேர் விருதுகள் என்று பல விருதுகள் இவரை வந்தடைந்தன. அனைத்திலும் சிகரம் போல பாரத அரசு திரைதுறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நாகி ரெட்டிக்கு 1986ஆம் ஆண்டு வழங்கியது.

எங்களின் இளமைப் பருவத்தை இனியதாக மாற்றிய திரு நாகி ரெட்டி அவர்களை இன்று நாங்கள் நன்றியோடு நினைவு கூறுகிறோம். 

திங்கள், 1 டிசம்பர், 2025

டிசம்பர் 1 - காகா காலேல்கர்பிறந்ததினம்

இந்த மனிதனை எந்த வரையறையில் சேர்க்க ? சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் சீடர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று பல்வேறு திசைகளில் ஒளிவீசும் ரத்தினமாகத் திகழ்ந்த தாத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்ற காகா காலேல்கரின் பிறந்ததினம் இன்று.

மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் பிறந்து, பூனா பெர்கூசன் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்று, பரோடா நகரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர உணர்ச்சியை தூண்டும் இடமாக அந்த பள்ளி விளங்கியதால் ஆங்கில அரசு அந்த பள்ளியைத் தடை செய்த பிறகு பத்திரிகையாளராகப் பணியாற்றி, பின்னர் கால்நடையாகவே இமயமலை பகுதிகளில் சுத்தித் திரிந்து, ஆச்சாரிய கிருபளானியோடு தொடர்பு ஏற்பட்டு, அவரோடு பர்மா சென்று, பின்னர் காந்தியைக் கண்டு, அவரின் சீடராக மாறி, சபர்மதி ஆசிரமத்தில் தங்கி, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று என்று அநேகமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பலரின் வாழ்க்கை போலத்தான் இவரின் வாழ்வும் இருந்தது.

இவரின் கைத்தடியைத்தான் தண்டி யாத்திரியையின் போது காந்தி பயன்படுத்தினார். எனவே தான் காந்தியின் கைத்தடி என்று காலேல்கர் தன்னை அறிமுகம் செய்து கொள்வது உண்டு. காந்தியின் ஆணைக்கேற்ப ஹிந்தி மொழியை பரப்பும் செயலிலும் காலேல்கர் ஈடுபட்டு இருந்தார். சென்னையில் உள்ள தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக சபாவின் முதல் பட்டமளிப்பு விழா இவரின் தலைமையில்தான் நடைபெற்றது. 1952 ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை இவர் பாரத நாட்டின் ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றினார். நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வாழ்க்கை நிலையை ஆராய்ந்து அவர்கள் முன்னேற்றத்திற்காக அரசுக்கு பரிந்துரை செய்ய என்று நிறுவப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுக் குழுவின் தலைவராகவும் காலேல்கர் பணியாற்றினார். 


மராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காலேல்கர் காந்தியின் தூண்டுதலின் பேரில் குஜராத்தி மொழியைக் கற்றுக்கொண்டு ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம்  ஆகிய மொழிகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதிலும் முக்கியமானது லோக மாதா அதாவது உலகின் தாய் என்ற தலைப்பில் குஜராத்தி மொழியில் அவர் எழுதி தமிழில் ஜீவன் லீலா என்ற பெயரில் மொழிபெயராக்கப்பட்ட பாரத நாட்டின் நதிகளை நேரில் பார்த்து அவர் எழுதிய பயணக் கட்டுரைகளின் தொகுப்பு.


பள்ளிக்கல்வியும் பாடப்புத்தகங்களும் கற்றுக்கொடுக்காத பாடத்தை மனிதர்களுக்கு  பயணம் கற்றுக்கொடுக்கிறது. எதையோ தேடி வரலாறு முழுவதும் மனிதன் பயணம் செய்துகொண்டேதான் இருக்கிறான். பொருள் தேடியோ போர் நிமித்தமாக தலைவன் பிரிவதை பாலைத்திணை என்று தமிழ் வரையறை செய்கிறது. பத்திரிகைப் பணிக்காகவும் தேச விடுதலைக்கான இயக்க வேலைக்காகவும் காலேல்கர் பாரதநாடு முழுவதும் பயணம் செய்தார். எதனாலோ அவருக்கு நீர்நிலைகள்மீது ஒரு தணியாத ஆர்வம் இருந்தது. தான் தேடிதேடிப் பார்த்த நதிகளைப் பற்றி கட்டுரைகளாக அவர் பதிவு செய்து இருக்கிறார்.   


நதிக்கரைகள்தான் மனித நாகரிகத்தின் தொட்டிலாக உள்ளது. மலைகளில் சிறுதுளியாகத் தொடங்கி வழியில் பல்வேறு ஓடைகளை இணைத்துக் கொண்டு நீர்வீழ்ச்சியாக குதித்து, நின்று நிதானமாக ஓடி, தான் செல்லும் இடத்தையெல்லாம் குளிர்வித்து, செழிப்பாக்கி, பாலைவனங்களைச் சோலையாக்கி, விவசாய பூமியாக்கி, இறுதியில் கடலில் சங்கமிக்கும் இடங்கள் வரை காலேல்கர் தேடித்தேடி சென்று பார்த்தார். 


பாரதநாட்டின் பண்பாடு என்பது நதிகளை தெய்வமாக எண்ணித் தொழுவது. காலேல்கரின் தனது பயணங்களில் வெறும் கேளிக்கைக்காக கடல்களையும் நதிகளையும் காணச்  செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை இந்தப் பயணங்கள் என்பது ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதை ஒத்தது. இந்தக் கட்டுரைகளில் நீர்நிலைகள் மீதான அவரது நெருக்கமும் பக்தியும் தென்படுகிறது.  நாட்டின் ஒவ்வொரு இடத்தைப் பற்றித் தனக்குத் தெரிந்திருக்க வேண்டும், அவற்றோடு தனக்கு ஒரு நெருக்கமான உறவு இருக்கவேண்டும் என்ற அவரின் விருப்பமும் தவிப்பும் நமக்குப் புலனாகிறது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை அவர் " நின்று, கரம்குவித்துத் தொழுதல்" என்று தலைப்பிட்டிருப்பதை நோக்கினால் நீர்நிலைகளை அவர் தெய்வமாக எண்ணுவதை, ஆறுகளைத் தேடிச் செல்லும் பயணங்களை அவர் ஆன்மீக அனுபவத்தை நாடிச் செல்லும் ஒரு பக்தனின் பயணமாக கருதுவதை உணர்ந்து கொள்ள முடியும் 


இந்த நூலில் உள்ளவை வெறும் பயணம் பற்றிய தகவல்களோ அல்லது நதிகளைப் பற்றிய குறிப்புகளோ மட்டும் அல்ல. மனிதனின் வாழ்க்கைக்கும் நதிகளுக்கு இடையேயான ஒரு உணர்வுபூர்வமான இணைப்பின் ஒரு ஆய்வு இது. இந்த நாட்டின் எல்லா நதிகளைப் பற்றி எதோ ஒரு புராணக்கதை உள்ளது. எதோ ஒரு தெய்வத்தோடு அல்லது ஒரு முனிவரோடு இந்த நதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. 


புத்தகத்தின் முதல் கட்டுரை பெல்காம் பகுதியில் வைத்தியனாத மலையிலிருந்து உற்பத்தியாகி பெலகுந்தி கிராமத்தை நோக்கி ஓடிவரும் மார்க்கண்டி நதியைப்பற்றியதாகும். இது 1928-ல் எழுதப்பட்டது. எழுபதாவது கட்டுரையான ‘மழைப்பாட்டு’ கார்வார் கடற்கரையில் பெய்யும் மழையனுபத்தை முன்வைத்து எழுதப்பட்டது. இது 1952-ல் எழுதப்பட்டது. இடைப்பட்ட முப்பத்திநான்கு ஆண்டு காலத்தில், தேசம் முழுதும் அலைந்து கங்கை, யமுனை, பிரம்மபுத்திரை, ஜீலம், இரவி, கிருஷ்ணா, தபதி, கோதாவரி, துங்கபத்திரை, காவேரி, நர்மதை, ஷராவதி, ஐராவதி, பினாகினி, லவணவாரி, அகநாசினி, தூத்கங்கா, ராவி, கடப்பிரபா, கூவம், அடையாறு என எண்ணற்ற ஆறுகளையும் நீர்நிலைகளையும் பார்த்து நெஞ்சை நிறைத்துக்கொண்ட அனுபவங்களை வெவ்வேறு தருணங்களில் தனித்தனி கட்டுரைகளாக எழுதினார். அதற்குப் பின்னரே அவை நூல்வடிவம் கண்டன.


மார்க்கண்டி நதி அவர் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றி ஓடும் நதி சிவனின் அருளால் எமனின் பாசக்கயிறிலிருந்து பிழைத்து என்றென்றும் பதினாறு வயதுடையவனாகவே வாழ்ந்த மார்க்கண்டேயனின் பெயரால் அந்த நதி அழைக்கப்படுகிறது. அதைத் தன் குழந்தைப்பருவத் தோழி என்று குறிப்பிடுகிறார். தம் குடும்பத்துக்குச் சொந்தமான வயல்வெளியைத் தொட்டபடி ஓடும் அந்த நதிக்கரையில் மணிக்கணக்கில் நின்று வேடிக்கை பார்த்த அனுபவங்களை அதில் விவரிக்கிறார். கார்வார் கடற்கரையில் பெய்யும் மழைத்தாரைகளை கடலைத் வெட்டும் ஆயுதங்கள் என கவித்துவம் ததும்ப  எழுதுகிறார். 


பாரதநாட்டின் எல்லா மக்களின் நினைவிலும் இருப்பது கங்கை நதி. அந்த நதியின் ஓட்டத்தை மூன்று கட்டங்களாக வகுத்துரைக்கிறார் காலேல்கர்.  கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரியிலிருந்து ஹரித்துவார் வரையிலான கங்கையின் ஓட்டம் முதல் கட்டம். இது நதியின் குழந்தைப் பருவம். ஹரித்துவார் முதல் பிரயாகை வரையிலான கங்கையின் ஓட்டம் இரண்டாவது கட்டம். இது கங்கையின் குமரிப் பருவம். பிரயாகையிலிருந்து கடலுடன் சங்கமமாகும் வரையிலான கங்கையின் ஓட்டம் மூன்றாவது கட்டம். அவற்றை ’திரிபதகா’ என்னும் சொல்லால் மூன்று அவதாரங்கள் என்றே குறிப்பிடுகிறார் காலேல்கர். மூன்று கட்டங்களில் ஹரித்துவாரிலிருந்து பிரயாகை வரைக்குமான கங்கையின் ஓட்டத்துக்கு உலக மதிப்பு மிகுதி. கோவிலுக்கு அருகில் உள்ள துறைகள், அவற்றையொட்டி ஓடும் மடுக்கள் எல்லாமே கங்கையின் அழகை பல மடங்காகப் பெருகவைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமானது அங்கு வீசும் காற்று. இமயத்தின் பனிச்சிகரத்திலிருந்து வீசும் காற்று முதன்முதலாக மானுடரையும் அவர்களுடைய குடியிருப்பையும் இந்த இடத்தில்தான் தொட்டுக் கடந்து செல்கிறது. கங்கையைச் சகுந்தலையாகவும் யமுனையை திரௌபதி என்றும் மாற்றி அவர் குறிப்பிடுகிறார். அயோத்தி நகர் வழியாக பாயும் சரயுநதி, ராஜா  ரத்திதேவனோடு தொடர்புடைய சம்பல் நதி, கஜேந்திர மோட்ஷம் நடைபெற்ற சோணபத்ரநதி, கண்டகி நதி என்று பல்வேறு நதிகளைப் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார். 

தண்டால் மலைப்பகுதியில் கங்கையும் யமுனையும் சந்திப்பது போல நெருங்கி வந்து பிறகு சங்கமிக்காமல் பிரிந்து போய்விடும். தண்டால் மலையருகில் யமுனையின் கரையில் வாசம் செய்தபடி தினமும் கங்கையில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஒரு முனிவர். வயதான காலத்தில் அவரால் தன் இருப்பிடத்திலிருந்து கங்கைக்கரை வரையிலான தொலைவை நடக்கமுடியாமல் போய்விட்டது. நீராடாமல் பூசைகளில் ஈடுபட முடியாமல் அவர் தவிப்பதைப் பார்த்து, கங்கை தன் ஓட்டத்தையே சற்று மாற்றிக்கொண்டு அவர் வசிக்குமிடத்துக்கு அருகிலேயே ஒரு சிற்றருவியாகப் பாய்ந்து வந்தது. முனிவர் மறைந்துபோனாலும் அச்சிற்றருவி இன்றும் பெருக்கெடுத்துப் பாய்ந்தபடி இருக்கிறது. இந்தத் தொன்மக் கதையையும் காலேல்கர் பதிவு செய்து இருக்கிறார். 

காந்தி ஒருமுறை தன் பிரயாணத்தின் ஒரு பகுதியாக சாகர் என்னும் இடத்தில் தங்கியிருக்கிறார். அங்கிருந்து நாற்பது ஐம்பது மைல்கள் தொலைவில் இருக்கும் ஜோக் நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு வரலாம் என்னும் திட்டத்தை காந்தியிடம் முன்வைத்தார் காலேல்கர். காந்தியோ தனக்கு நேரமில்லை என்றும் “நீ வேண்டுமானால் சென்று வா. நீ போய்வந்தால் மாணவர்களுக்கு ஒரு சில பாடங்களைச் சொல்ல வசதியாக இருக்கும்” என்று சொல்லி மறுத்துவிட்டார். ”ஜோக் உலகத்தின் அற்புதக்காட்சிகளில் ஒன்று” என்றெல்லாம் சொல்லி காந்தியைக் கரைக்க முற்பட்டார் காலேல்கர். காந்தியோ அவரிடம் மீண்டும் “960 அடி என்பதெல்லாம் ஒரு உயரமா? மழைத்தண்ணீர் அதைவிட உயரமான இடமான ஆகாயத்திலிருந்து விழுகிறது தெரியுமா? அது எவ்வளவு பெரிய அதிசயம்?” என்று சொல்லி மேலும் வாதத்துக்கு வழியின்றி முடித்துவிட்டார். பிறகு வேறு வழியில்லாமல் மேலும் சிலரைச் சேர்த்துக்கொண்டு காலேல்கர் ஜோக் அருவியைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். ஷராவதி ஆற்றங்கரை வரைக்கும் நீண்டிருக்கும் காட்டை நடந்து கடப்பது ஒரு பயணம். பிறகு அருவிக்கரை வரைக்கும் படகுப்பயணம். ஒவ்வொரு கட்டத்தையும் நேர்த்தியான சொல்லோவியங்களென தீட்டி வைத்திருக்கிறார் காலேல்கர். ரோரர், ராகெட், லேடி ஆகிய அருவிக்கிளைகளுக்கு அவர் ருத்ர, வீரபத்ர, பார்வதி என்னும் புதிய பெயர்களைச் சூட்டி அப்பெயர்த்தேர்வுகளுக்கான காரணங்களையும் சுவாரசியமாகச் சொல்கிறார்.

கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி, கோமதி ஆகிய நதிகளில் நீராடுவதைப்பற்றியும் அவற்றின் கரைகளில் செய்யப்படும் தானதர்மங்களைப் பற்றியும் ஏராளமாகச் சொல்லப்பட்ட போதிலும் அந்நதிகளை வலம்வருவதைப்பற்றி எக்குறிப்பும் புராணங்களில் இல்லை. அதற்கு விதிவிலக்கு நர்மதை. அந்த நதியை வலம்வருவது இன்றளவும் ஒரு சடங்காக உள்ளது. அதற்கு பரிகம்மா என்பது பெயர். முதலில் நர்மதை உற்பத்தியாகும் இடத்திலிருந்து தொடங்கி தென்கரை வழியாக கடலில் சங்கமமாகும் இடம்வரைக்கும் செல்லவேண்டும். பிறகு படகின் மூலம் வடகரையைத் தொடவேண்டும். அங்கிருந்து கால்நடையாக அமர்கண்டக் செல்லவேண்டும். வலம்வரும் போது எங்கும் நதியைக் கடக்கக்கூடாது. நதியின் பிரவாகத்தைவிட்டு வெகுதொலைவு செல்லவும் கூடாது. நீர் அருந்தவேண்டுமானால் நர்மதையின் நீரையே அருந்தவேண்டும். இப்படி நர்மதையை வலம்வந்த  காலேல்கரின் அனுபவம் அவரோடு சேர்ந்து நாமும் நடப்பதுபோல உள்ளது. தன் விழிகளால் கண்ட ஒவ்வொரு காட்சியையும் காலேல்கர் நம்மையும் காண வைத்துவிடுகிறார். ஜபல்பூருக்கு அருகில் பேடாகாட் என்னும் இடத்தில் நர்மதையின் ஓட்டத்துக்குக் காவலாக இருபுறங்களிலும் ஓங்கி உயரமாக நின்றிருக்கும் சலவைக்கல் மலைகளை முழுநிலவில் காண்பது மகத்தானதொரு அனுபவம். நிலவின் ஒளி முதலில் சலவைக்கல் மலையில் பட்டு பிரதிபலிப்பதையும், பிறகு ஆற்றின் மேற்பரப்பில் பிரதிபலிப்பதையும் பார்ப்பது மயக்கத்தையும் திகிலையும் ஊட்டும் ஒரு பேரனுபவம்.

டேராடூனுக்கு அருகில் உள்ள நதியின் பெயர் தீஸ்தா. அதாவது த்ரி- ஸ்ரோத்ரா. தனித்தனியாக நதிகள் மூன்று இடங்களில் உற்பத்தியாகி பிறகு அனைத்தும் இணைந்து ஒரே நதியாக ஓடுகிறது. கஞ்சன் ஜங்கா சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசூங் சூ என்பது ஒரு நதி. பாவ்ஹூன்ரீ சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசேன் சூ என்பது இரண்டாவது நதி. தாலூங் சூ என்பது மூன்றாவது நதி. இம்மூன்றும் இணைந்து தீஸ்தா என்னும் பெயருடன் ஓடத் தொடங்குகிறது. சிறிது தொலைவிலேயே இத்துடன் திக்சூ, ரோரோசூ, ரோங்கனீசூ, ரங்க்போசூ, ரங்கீத்சூ போன்ற ஆறுகள் வந்து இணைந்துகொள்கின்றன. எங்கெல்லாம் இரு ஆறுகள் கலக்கின்றனவோ, அங்கெல்லாம் கோம்போ எனப்படும் புத்தர் கோவில் காணப்படுகிறது.

வேத காலத்தில் விதஸ்தா என்று அழைக்கப்பட்ட நதியின் இன்றைய பெயர் ஜீலம். ‘உலகில் எங்காவது சொர்க்கம் இருக்குமெனில் அது இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது’ என அழுத்தம் திருத்தமாக ஒன்றுக்கு மூன்று முறை முகலாயச் சக்கரவர்த்தியான ஜஹாங்கீர் சொன்ன வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்றும் ஜீலம் நதிக்கரையில் வீற்றிருந்து அதன் அழகை சொல்லாமல் சொன்னபடி உள்ளது. ஆறு இங்குமங்கும் சுற்றிக்கொண்டு மெதுவாக ஓடுவதால் அது அசைவதே தெரிவதில்லை. வராஹமூலம் என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட பாராமுல்லா என்னும் இடத்தைக் கடந்தபிறகே ஜீலம் வேகம் கொள்கிறது.

கார்வார் அருகில் தேவ்கட் என்னுமிடத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தைக் காணச் சென்ற அனுபவமும் கார்வாரிலிருந்து கோகர்ணத்தைக் காணச் சென்ற அனுபவமும் சாகசப்பயணங்களுக்கு நிகரான சித்தரிப்புகளைக் கொண்டிருக்கின்றன. கோதாவரியின் சரித்திரத்தோடு ராமர்-சீதை கதையையும், சந்த ஞானேஸ்வரரின் கதையையும் இணைத்துச் சித்தரிப்பது வாசிப்பில் ஒருவித ஆர்வத்தையே தூண்டுகிறது. கல்கத்தாவிலிருந்து பர்மாவுக்குச் செல்லும் வழியிலும் ஆப்பிரிக்கப் பயணப் பாதைகளிலும் கண்ட பலவிதமான ஆறுகளைப்பற்றிய தகவல்களை காலேல்கர் தொகுத்துச் சொல்லும் விதமே, அவற்றை நாமும் உடனே சென்று பார்த்துவிடவேண்டும் என்னும் ஆவலை உருவாக்குகிறது. நேபாளத்தில் பாக்மதியையும் டேராடூனில் சஹஸ்ரதாராவையும் அசாமில் பரசுராமகுண்டத்தையும் பார்க்கச் சென்ற அனுபவங்கள் அனைத்தும் ஒரு சிறுகதைக்குரிய அனுபவங்களைப்போல உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் வசீகரம் நிறைந்த ஒரு சொல்லோவியம். காலேல்கரின் முயற்சியை ஒருவகையில் சொல்லோவியங்களால் நம் தேசத்தின் வரைபடத்தைத் தீட்டும் முயற்சி என்றே சொல்லலாம். பி.எம்.கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கிட்டும் அனுபவம் காஷ்மீரிலிருந்து தனுஷ்கோடி வரைக்கும் பயணம் செய்த அனுபவத்துக்கு நிகரானது. 

இலக்கியத்திற்க்காக சாஹித்ய அகாடமி விருதும் பொது சேவைக்காக பத்ம விபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.