வியாழன், 1 ஜனவரி, 2026

ஜனவரி 1 - காந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் பிறந்ததினம்



நாடு சுதந்திரம் அடைய மிகச் சரியாக ஐந்தாண்டுகள் இருந்தது. 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் அது. ஐம்பது வயதான அந்த மனிதர் உயிரற்ற உடலாக ஆகாகான் மாளிகையில் கிடத்தப்பட்டு இருந்தார். எழுபத்தி மூன்று வயதான முதியவர் "மஹாதேவ், மஹாதேவ்" என்று குரல் கொடுத்து அவரை எழுப்ப முயற்சி செய்துகொண்டிருந்தார். " இருபத்தி ஐந்தாண்டுகளாக எனது எந்த ஆணையையும் இவன் மீறியதே இல்லை, இன்றுதான் பதில் சொல்லாமல் இருக்கிறான்" என்று கூறியபடி உயிரற்ற அந்த உடலை குளிப்பாட்டி, தன் மகனைப் போல இருந்தவனுக்கு அந்த முதியவர் தந்தைக்கு மகன் செய்வது போல இறுதிச் சடங்குகளை முன்னின்று செய்தார். தந்தை இருக்கும்போது மகன் இறக்க நேரிடும் இல்லங்களில் நாம் காணும் காட்சிதான் இது. ஆனால் அங்கே இறந்து கிடந்தவர் மஹாதேவ தேசாய், இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தியவர் காந்தி.

காந்தியின் செயலாளராக, அவரின் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சராக, காந்தியின் வாழ்வின் முக்கியமான கட்டத்தைப் பதிவு செய்தவராக, பல நேரங்களில் காந்தியின் சமையல்காரராக, காந்தியின் மகனாக  இருந்த மஹாதேவ தேசாயின் பிறந்ததினம் இன்று. இன்றய குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியைச் சேர்ந்த ஹரிபாய் தேசாய் - ஜம்னாபென் தம்பதியரின் மகனாக 1892ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் பிறந்தவர் மஹாதேவ் தேசாய். எளிய குடும்பத்தில் பிறந்த தேசாய், தனது ஆரம்ப கல்வியை சூரத்தில் முடித்து பின்னர் மும்பை எலிபென்டைன் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், பின்னர் சட்டப் படிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராகப் பணியில் அமர்ந்தார். இதற்கிடையில் அன்றய வழக்கத்தின்படி தனது பதின்மூன்றாம் வயதில் மஹாதேவ தேசாய் துர்காபென் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

தென்னாபிரிக்காவில் இருந்து காந்தி அப்போதுதான் பாரதம் திரும்பி இருந்தார். 1915ஆம் ஆண்டு முதல்முறையாக மஹாதேவ தேசாய் காந்தியை சந்திக்கச் சென்றார். ஜான் மோர்லே என்பவர் எழுதிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றை அவர் அப்போது குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்திருந்தார். அதனைப் பிரசுரம் செய்வது பற்றி காந்தியின் ஆலோசனையை அவர் கேட்க விரும்பினார். அந்த சந்திப்பு பின்னர் பலமுறை காந்தியை நேரில் கண்டு பழகும் வாய்ப்பை தேசாய்க்கு அளித்தது. 1917ஆம் ஆண்டு தேசாயை தன்னோடு தங்கி இருக்கும்படி காந்தி கேட்டுக்கொண்டார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் நாள், அதாவது தான் இறப்பதற்கு முன்தினம் வரை முழுமையாக தேசாய் பதிவு செய்துள்ளார்.

காந்தியோடு இணைந்த பிறகு தேசாய் முதன்முதலாக பிஹார் மாநிலத்திற்கு காந்தியோடு சென்றார். அநேகமாக தேசாய் இல்லாது காந்தி யாரையும் சந்தித்ததே இல்லை என்று சொல்லலாம். காந்தி இங்கிலாந்து சென்றபோது, அன்றய பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தார், அந்த சந்திப்பில் உடனிருந்த ஒரே ஒருவர் தேசாய்தான் என்றால் காந்தியின் மனதில் தேசாயின் இடம் என்ன என்பது நமக்குப் புரியும். சொல்லப்போனால் விடுதலைப் போரில் காந்தியின் முக்கியத் தளபதிகளாக இருந்த நேரு, படேல் இவர்களைக் காட்டிலும் தேசாய் காந்திக்கு நெருக்கமாக இருந்தார். காந்தியோடு இருப்பது என்பது எந்த நேரத்திலும் சிறை செல்லத் தயாராக இருப்பது என்றுதான் பொருள். தேசாயும் பலமுறை சிறை செல்ல வேண்டி இருந்தது. தான் எழுதிய கட்டுரைக்காக 1921ஆம் ஆண்டு முதன்முதலில் சிறையான தேசாய், பின்னர் உப்பு சத்தியாகிரஹம், சட்ட மறுப்பு போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தார்.

மஹாதேவ தேசாய் ஒரு சிறந்த எழுத்தாளருமான இருந்தார். குஜராத்தி, ஆங்கிலம், வங்காள மொழிகளில் அவர் பல கட்டுரைகளை எழுதி உள்ளார். நவஜீவன், எங் இந்தியா, ஹரிஜன், ஹிந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஆனந்த பஜார் பத்திரிகா ஆகிய பத்திரிகைகளில் அவரது கட்டுரைகள் வெளியாகி உள்ளது. பர்தோலி சத்தியாகிரஹம் பற்றிய புத்தகம் ஒன்றை அவர் எழுதினார். காந்தி தனது தாய்மொழியான குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரித்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தேசாய்தான். கீதை பற்றி காந்தி பல்வேறு இடங்களில் பேசியதையும் எழுதியதையும் தொகுத்து காந்தியின் பார்வையில் கீதை என்ற நூலை அவர் எழுதினார். வல்லபாய் படேல், கான் அப்துல் கபார் கான் ஆகியோர் பற்றிய வரலாற்று நூல்கள், வங்கத்தின் புகழ்பெற்ற நாவலாசிரியர் சரத்சந்திர சட்டோபாத்யாய எழுதிய பல்வேறு சிறுகதைகள், மற்றும் ஜவஹர்லால் நேருவின் சுயசரிதம் ஆகியவற்றை தேசாய் குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து உள்ளார்.

காந்தியோடு அவர் இருந்த காலத்தில் எழுதிய நாள்குறிப்புகள் இருபத்தி இரண்டு தொகுதி கொண்ட மஹாதேவபாய் டைரி என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இது தேசாயின் மரணத்திற்குப் பிறகு பிரசுரமானது. காந்தியின் வாழ்வைப் பற்றியும், பாரத நாட்டின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் பல முக்கியமான தகவல்கள் கொண்ட களஞ்சியமாக இது விளங்குகிறது. இந்த நூலுக்காக சாஹித்ய அகாடமி விருது தேசாய்க்கு அவரின் மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது. 

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி தொடங்கினார். செய் அல்லது செத்து மடி என்று மக்களுக்கு அறிவுரை பிறந்தது. இந்த நாட்டை யாரிடம் கொடுப்பது என்று கேட்கிறார்கள்,யாரிடம் வேண்டுமானாலும் கொடுங்கள், திருடனிடமோ, கொள்ளைக்காரனிடமோ யாரிடம் வேண்டுமானாலும் கொடுங்கள் ஆனால் நீங்கள் வெளியேறுங்கள் என்று ஆங்கிலேயர்களிடம் கூறப்பட்டது. முழு பலத்தோடு ஆங்கில அரசு போராட்டத்தை ஒடுக்க முடிவு செய்தது. நாட்டின் பல்வேறு தலைவர்கள் உடனைடியாகக் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் 9ஆம் நாள் காந்தி கைதானார். மஹாதேவ தேசாயும் அவரோடு கைது செய்யப்பட்டார். அவர்கள் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். ஆறே நாட்களில் மாரடைப்பால் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் தேசாய் காலமானார்.

நாட்டின் முக்கியமான தேசபக்தர்களில் ஒருவரான மஹாதேவ தேசாயின் பிறந்ததினத்தில் ஒரே இந்தியா தளம் அவருக்கு தன் மரியாதையை செலுத்துகிறது. 

புதன், 31 டிசம்பர், 2025

டிசம்பர் 31 - அறிவியல் தமிழ் வளர்த்த பெ நா அப்புஸ்வாமி பிறந்தநாள்

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர். 
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் 
என்று முழங்கிய பாரதியின் கனவை நிறைவேற்றும் வண்ணம் எளிய தமிழில் அறிவியலை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்த அறிஞர் பெருங்குளம் யக்ஞ நாராயண அப்புஸ்வாமி என்ற பெ நா அப்புஸ்வாமியின் பிறந்ததினம் இன்று.


இன்றய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, நவதிருப்பதி திவ்ய தேசங்களில் ஒன்றான பெருங்குளம் கிராமத்தைச் சார்ந்த நாராயண ஐயர் - அம்மாகுட்டி ஆகியோரின் மகனாக 1891ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் பிறந்தவர் பெ நா அப்புஸ்வாமி அவர்கள். சட்டப் படிப்பை முடித்த அப்புஸ்வாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவந்தார். இவரது நெருங்கிய உறவினரும், தமிழ் புதினத்தில் முன்னோடியான அ மாதவையாதான் அப்புஸ்வாமியை எழுதத் தூண்டியவர். நான் முறையாகத் தமிழ் படித்தவன் அல்ல,  என் மனைவிக்குக் கூட இதுவரை ஒரு காதல் கடிதம் எழுதியவன் அல்ல, நான் எப்படி தமிழில் எழுத என்று அப்புஸ்வாமி குழம்பி நின்றபோது, " உங்கள் வீட்டில் தமிழ் புத்தகங்கள் பல உண்டு, நீ அதனைப் படித்திருக்கிறாய், தமிழ் அறிஞர்கள் பலர் உன் நண்பர்கள், தயங்காமல் எழுது, தேவையென்றால் அதனை நான் திருத்திக் கொள்கிறேன்" என்று கூறி அப்புஸ்வாமியை ஆற்றுப்படுத்தியவர் அ மாதவையாதான்.

இப்படித் தயங்கி நின்ற அப்புஸ்வாமிதான் நூற்றுக்கும் மேலான புத்தகங்களை, ஐயாயிரத்திற்கும் மேலான கட்டுரைகளை எழுதிக் குவித்தார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் என்று பல்வேறு கட்டுரைகளை மொழிபெயர்த்து பிரசுரித்தார்.  இவரது கட்டுரைகள் கலைமகள், கலைக்கதிர், ஆனந்த விகடன், வீரகேசரி, தினமணி ஆகிய இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தன. கலைமகள் இதழின் ஆரம்ப காலத்தின் பொறுப்பாசிரியராகவும் இவர் இருந்தார்.

கா சுப்ரமணிய பிள்ளை, கே ஏ நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை, பி ஸ்ரீ ஆச்சாரியா ஆகிய அறிஞர்கள் அப்புஸ்வாமியின் உடன் பயின்றவர்கள். அதுபோக உ வே சாமிநாத ஐயருடனும் அப்புஸ்வாமிக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. ஒவ்வொரு வாரமும் இவரது இல்லத்தில் ராஜாஜி, டி.கே.சி, கல்கி, எஸ்.வையாபுரிப்புள்ளை, வாசன், ஏ.என்.சிவராமன், கி.வா.ஜ.,  ராகவ அய்யங்கார், ரா.பி.சேதுபிள்ளை. அ.சீனிவாசராகவன், கி.பட்சிராஜன், ஆர்.ராகவ அய்யங்கார், டி.எல்.வெங்கட்ராம அய்யங்கார், நாராயணசாமி அய்யங்கார் ஆகியோர் கூடி தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ஆராய்ச்சி பற்றிய கருத்துகளையும் பரிமாறிக்கொள்வார்கள்.

தனது  இருபத்தி ஆறாம் வயதில் எழுதத் தொடங்கிய பெ நா அப்புஸ்வாமி தனது தொன்னூற்றி ஐந்தாம் வயதில் அதாவது 1986ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் நாள் இறக்கும் வரை எழுதிக்கொண்டு இருந்தார். தான் எழுதிய ஒரு கட்டுரையை ஹிந்து பத்திரிகைக்கு அஞ்சலில் சேர்த்து விட்டு வரும் போதுதான்  இறந்தார்.

அற்புத உலகம், மின்சாரத்தின் கதை, வானொலியும் ஒலிபரப்பும், அணுவின் கதை, ரயிலின் கதை, அறிவியல் கதைகள்  என்று ஐம்பதுகளில் அறுபதுகளில் எளிய மொழியில் அறிவியலை தமிழர்களுக்கு அறிமுகம் செய்த  பெருமை அப்புஸ்வாமிக்கே சேரும். சிறுவர்களுக்காக சித்திர விஞ்ஞானம், சித்திர வாசகம், சித்திர கதைப் பாட்டு என்ற நூல்களையும் இவர் எழுதி உள்ளார். அதுமட்டுமல்ல நாம் வாழும் உலகம் கம்ப்யூட்டர் மயமாகி வருகிறது என்று எழுபதுகளின் தொடக்கத்திலேயே அப்புஸ்வாமி சரியாக கணித்து கூறுகிறார்.

அணுப்பிளவு (Atomic Fission), துணைக்கோள் (Satellite), நுண்ணணு, மின்னணு (Electron) , புத்தமைப்பு (Invention), மூலகம் (Element), வார்ப்படச்சாலை (Foundry), நுண்ணோக்கி (Microscope), கதிரியக்கம் (Radiation), உந்து கருவி (Rocket), அங்கக ரசாயணம் (Organic Chemistry), துரிதகாரி (Accelerator), கணையம் (Pancreas), பொங்கியெழு கேணி (Artesian Well),  அறிவிக்குறி எண் (Intelligent Quotient) என்று மிக இயல்பாக அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை அப்புஸ்வாமி பயன்படுத்தி உள்ளார்.

ஆங்கிலத்திலும் புலமை பெற்ற அப்புஸ்வாமி பல்வேறு சங்கப் பாடல்களையும், பாரதியின் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார். இவ்வளவு எழுதிக் குவித்த பெ நா அப்புஸ்வாமி பெருமளவில் அங்கீகாரம் அடையவில்லை. அவரின் அறிவை ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் மதிக்கவில்லை. ஆனாலும் பலனின் மீது பற்று வைக்காமல், தனது பணியை வாழ்வின் இறுதிநாள்வரை செய்து கொண்டே இருந்தார் திரு பெ நா அப்புஸ்வாமி அவர்கள்.

அப்புஸ்வாமியின் மகள் திருமதி அம்மணி சுப்பிரமணியம் திருநெல்வேலி காந்திமதி அம்பாள் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரின் மருமகன் வழக்கறிஞர் திரு எஸ் ஜி சுப்பிரமணியம் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட சங்கசாலக்காக இருந்தவர்.

செவ்வாய், 30 டிசம்பர், 2025

டிசம்பர் 30 - குலபதி முன்ஷி பிறந்தநாள்

வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், நாடாளுமன்ற உறுப்பினர், பாரத அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த குழுவின் உறுப்பினர், எழுத்தாளர், பாரதிய வித்யா பவன் கல்வி நிறுவனத்தைத் தொடங்கியவர் என்று பல்முக ஆளுமையாக விளங்கிய கனையாலால் மனேக்லால் முன்ஷி என்ற குலபதி முன்ஷியின் பிறந்தநாள் இன்று.



குஜராத் மாநிலத்தின் பரூச் பகுதியைச் சேர்ந்த முன்ஷி 1887ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் பிறந்தவர். பரோடா கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியத்திலும், பின்னர் மும்பை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்த முன்ஷி மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பரோடாவில் இவரது ஆசிரியராக இருந்தவர் மஹரிஷி அரவிந்த கோஷ் அவர்கள். முன்ஷியின் மனதில் தேசபக்தியை விதைத்தது அரவிந்தரே ஆவார்.

மும்பையில் பணியாற்றிக்கொண்டு இருந்த போது முன்ஷி, ஹோம் ரூல் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1920ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு அதன் பின்னர் காங்கிரஸ் இயக்கத்திலும் பணியாற்றினார். 1927ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பம்பாய் ராஜதானியின் சட்டசபை உறுப்பினராக முன்ஷி தேர்ந்ததெடுக்கப்பட்டார். பர்தோலி சத்தியாகிரஹப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்ஷி அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

சட்ட மறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாகிரஹம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு பல்வேறு முறை சிறையானார். அன்றய ஐக்கிய மஹாராஷ்டிரா பகுதியின் முக்கியமான தலைவராக காங்கிரஸ் கட்சியால் இனம் காணப்பட்ட முன்ஷிக்கு பல்வேறு கட்சிப் பொறுப்புகள் வரத் தொடங்கின. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் செயலாளர் என்ற பொறுப்புகளும், மஹாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பதவியும் முன்ஷியைத் தேடி வந்தது. சிறிதுகாலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்த முன்ஷியை, காந்தி வற்புறுத்தி மீண்டும் கட்சியில் இணைய வைத்தார்.

நாடு சுதந்திரம் அடையும் சமயத்தில், முன்ஷி அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய ஏழு உறுப்பினர் அடங்கிய குழுவின் உறுப்பினராகவும் முன்ஷி பணியாற்றனார். நாட்டின் அலுவல் மொழியாக தேவநாகரி எழுத்தில் எழுதப்படும் ஹிந்தி இருக்கும், பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் இணைப்பு மொழியாக இருக்கும்  என்று வரையறை செய்த அரசியலமைப்பின் 17ஆவது பிரிவு என்பது முன்ஷி - கோபால்சாமி ஐயங்கார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமைந்த ஒன்றாகும். அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கும் அடிப்படை உரிமைகள் பற்றிய பகுதிகள் முன்ஷியால் முன்னெடுக்கப்பட்டவைதாம்.

அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் இடிக்கப்பட சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் புதுப்பிக்க சர்தார் வல்லபாய் படேல் முடிவு செய்தார். ஆனால் அந்தப் பணி முடியும் முன்னரே படேல் இறந்து போக, அந்தப் பணியை முன்ஷி தொடர்ந்தார், இன்று சோமநாதபுரத்தில் சிவனின் ஆலயம் எத்தனை முறை ஆக்கிரமிக்கப்பட்டாலும் மீண்டும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் பாரத ஆன்மாவின் குறியீடாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

1950 - 1952 ஆண்டுகளில் இடைக்கால அரசின் விவசாயம் மற்றும் உணவுத்துறை மந்திரியாக முன்ஷி நியமிக்கப்பட்டார். நாடெங்கும் நடைபெறும் மரம் நடு விழாவான வனமஹோஸ்தவம் முன்ஷியின் திட்டமே ஆகும். 1952 முதல் 1957ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேசத்தின் ஆளுநராகவும் முன்ஷி பணியாற்றினார். நாட்டின் முன்னேற்றம் சோசலிசத்தின் மூலமாகவே நடைபெறும் என்று நேரு எண்ணினார். ஆனால் தாராள பொருளாதாரத் கொள்கைதான் பலன் அளிக்கும் என்று எண்ணிய முன்ஷி, ராஜாஜி தொடங்கிய ஸ்வதந்தரா கட்சியில் இணைந்து கொண்டார். ராஜாஜியின் மறைவுக்குப் பின்னர் ஸ்வதந்திரா கட்சி செயல்படாமல் போக, முன்ஷி ஜனசங் கட்சியில் இணைந்து செயல்பட்டார். சங்கத்தின் முக்கியமான சகோதர அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனர்களில் முன்ஷியும் ஒருவர்.

நெடுங்காலம் அரசியலில் இருந்தாலும், கல்விப் புலத்திலும், இலக்கியத்திலும் முன்ஷியின் பங்களிப்பு மகத்தானது. மும்பை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும், பல்வேறு கல்வி நிறுவனங்களின் வழிகாட்டியாகவும் முன்ஷி செயல்பட்டார். அவர் தொடங்கிய பாரதிய வித்யா பவன் நிறுவனம் இன்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் பல்வேறு புத்தகங்களை முன்ஷி எழுதி உள்ளார். கிருஷ்ணாவதார் என்ற ஏழு பகுதிகள் கொண்ட மஹாபாரதம் பற்றிய தொகுப்பு அவர் எழுதியதில் முக்கியமான ஒன்றாகும்.

பல்வேறு ஆசிரியர்களைக் கொண்டு பல்லாயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் குருமார்களை குலபதி என்று பெருமையாக அழைப்பது நமது வழக்கம். அப்படியான கல்வி சேவையைச் செய்ததால் முன்ஷியை நாடு குலபதி முன்ஷி என்று கொண்டாடுகிறது.

எண்பத்தி மூன்று ஆண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு பெரும் சேவையாற்றிய குலபதி முன்ஷி 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் காலமானார். சோமநாதபுர ஆலயம் உள்ளவரை, பாரதிய வித்யா பவன் கல்வி நிறுவனங்கள் உள்ளவரை முன்ஷியும் இருப்பார் என்பதில் ஐயமில்லை. 

திங்கள், 29 டிசம்பர், 2025

டிசம்பர் 29 - உமேஷ் சந்திர பானெர்ஜி பிறந்ததினம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரத நாட்டின் சிந்தனைப் போக்கை வங்காள மாநிலமே வடிவமைத்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தா நகரம் இருந்தது. பாரத சிந்தனையை மேற்கத்திய அறிவுப் புலத்தோடு இணைத்து நாட்டில் மறுமலர்ச்சியைத் தொடங்கிய அறிஞர்கள் பலர் வங்காளத்தில் தோன்றினார்கள். இயல்பாகவே அந்த சிந்தனை தேச முன்னேற்றத்திலும், தேச விடுதலைக்கும் வித்திட்டது. அப்படி வங்காளத்தில் தோன்றிய தலைவர்களில் முக்கியமானவரான திரு உமேஷ் சந்திர பந்தோபாத்தியா  அவர்களின் பிறந்ததினம் இன்று.


1844ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் நாள் பிறந்த உமேஷ் சந்திரா தனது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தனது பதினெட்டாம் வயதில் 1862ஆம் ஆண்டு W P கிலாண்டர்ஸ் என்ற வழக்கறிஞரின் உதவியாளராகச் சேர்ந்தார். பணிபுரிந்த இரண்டு ஆண்டுகளில் சட்டம் பற்றிய புரிதல் அவருக்கு ஏற்பட்டது. 1864ஆம் ஆண்டு சட்டம் படிக்க உமேஷ் சந்திரா இங்கிலாந்து சென்றார். 1867ஆம் ஆண்டு தனது சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து அவர் இங்கிலாந்து நாட்டில் சட்டத்துறையில் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். 1868ஆம் ஆண்டு நாடு திரும்பிய உமேஷ் சந்திரா கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்தில் கொல்கத்தா நகரின் முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவராக உமேஷ் சந்திரா அறியப்படலானார். 1882 ஆம் ஆண்டு அவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட முதல் பாரத வழக்கறிஞர் உமேஷ் சந்திராதான். உமேஷ் சந்திரா கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவராகவும், அன்றய சட்டசபையின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

பொதுவாகவே சட்டத்துறையில் இருப்பவர்கள்தான் அரசியலில் ஈடுபாடு காட்டுவார்கள். உமேஷ் சந்திராவும் அதில் விலக்கல்ல. கிழக்கிந்திய கம்பனியின் கொடுமை தாங்காது பாரத மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாரத நாட்டின் ஆட்சியை ஆங்கில அரசு நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது. மீண்டும் ஒரு புரட்சி வெடித்து விடாமல் இருக்கவும், மக்களின் எண்ணத்தை கோரிக்கை மூலம் ஆங்கில அரசுக்குத் தெரியப்படுத்தவும் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு உருவானது. காங்கிரஸின் முதல் மாநாடு 1885ஆம் ஆண்டு மும்பை நகரில் நடைபெற்றது. அதன் தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இருபதே ஆண்டுகளில் நாட்டின் விடுதலையை முன்னெடுக்கும் இயக்கமாக காங்கிரஸ் மாறியது.

காங்கிரஸ் அமைப்பின் இரண்டாவது மாநாடு 1886ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்றது. அதன் தலைவராக தாதாபாய் நௌரோஜி தேர்வானார். இந்த மாநாட்டில் மாகாணவாரியாக காங்கிரஸ் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை உமேஷ் சந்திர பானர்ஜி தெரிவித்தார். காங்கிரஸ் அரசியல் சார்ந்து மட்டுமே இயங்கவேண்டும், சமுதாய சீர்திருத்தங்களை மற்ற அமைப்புகள் செயல்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறினார். 1892ஆம் ஆண்டு ப்ரயக்ராஜ் நகரில் ( அன்றய அலஹாபாத் ) நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகவும் உமேஷ் சந்திரா செயல்பட்டார்.

பின்னர் இங்கிலாந்து நாட்டில் வசிக்கத் தொடங்கிய உமேஷ் சந்திரா அங்கே ப்ரிவி கவுன்சில் அமைப்பில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதே தேர்தலில் தாதாபாய் நௌரோஜி வெற்றி பெற்று ஆங்கில நாடாளுமன்றத்தின் முதல் இந்திய உறுப்பினர் என்ற பெருமையை அடைந்தார்.

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தின் முக்கிய தலைவராக விளங்கிய உமேஷ் சந்திர பானெர்ஜி 1906ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இங்கிலாந்து நாட்டில் காலமானார்.

நாட்டின் முதுபெரும் தலைவருக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

டிசம்பர் 28 - ஒரு கனவின் கதை திருபாய் அம்பானி பிறந்தநாள்

ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு நிறுவனத்திற்கு என்ன பங்கு இருக்க முடியும் ? அரசாங்கங்களை உருவாக்கவும், கவிழ்க்கவும், அரசின் கொள்கை முடிவுகளை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கவும், கொள்கை முடிவு எடுக்கவேண்டிய அரசு அதிகாரிகளை வளைக்கவும், தங்களுக்கு தேவையான அதிகாரிகளை தேவைப்படும் பதவியில் அமர்த்தவும் ஒரு நிறுவனத்தால் முடியுமா ?


ஒருபுறம் பார்த்தால் மிக எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, ஆரம்பகாலத்தில் எதோ ஒரு வெளிநாட்டில் ஒரு சாதாரண வேலையில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, நூல் மற்றும் துணி விற்பனையில் நுழைந்து, தனது ஆயுள்காலத்தில் ஒரு மகத்தான வணிகசாம்ராஜ்யத்தைக் கட்டிக் காட்டிய தனிமனிதன்

மறுபுறமோ, எந்தவிதமான  நெறிமுறைகளுக்கும் அடங்காது, எல்லாச் சட்டத்தையும் தனக்கு சாதகமாக வளைத்த பேராசை படைத்த, தனக்குப் போட்டியாக வருவார்கள் என்று தோன்றிய பிற  தொழில் செய்பவர்களை அரசின் துணையோடு மீள முடியாத சிக்கல்களில் தள்ளிய இரக்கமற்ற ஒருவன்.

மற்றொருபுறம், மிகப் பெரிய அளவில்  இந்திய மத்தியத்தர மக்களை பங்குச்சந்தையில் பணம் உருவாக்க முடியும் என்று காட்டிய ஆசான்.

இப்படி பார்ப்பவர் கோணத்திற்கு ஏற்ப அமைந்த வாழ்வின் கலவைதான் திருபாய் அம்பானி. 1932ஆம் ஆண்டு பிறந்து எழுபது ஆண்டுகள் வாழ்ந்து 2002இல் மரணமடைந்த திருபாய் அம்பானியின் மிக முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் அவரது வாழ்க்கையின்  கடைசி முப்பது ஆண்டுகளில் நடந்தன, அந்தக் காலகட்டத்தில் அவர் விஸ்வரூபம் எடுத்தார்.

திருபாய் என்று அன்புடன் அழைக்கப்படும், தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி 28.12.1932 அன்று குஜராத் மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடாவில் 28 டிசம்பர், 1932 அன்று நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென்னுக்கும் மகனாய்ப் பிறந்தார்.

ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராய் இருந்தார். 16 வயதானபோது, அம்பானி ஏமனுக்கு சென்று விட்டார். அங்கு 300 ரூபாய் சம்பளத்தில் ஏ.பெஸி & கோ. நிறுவனத்தில் வேலை பார்த்தார். இரண்டு வருடங்களுக்குப் பின், ஏ. பெஸி & கோ. நிறுவனம் ஷெல் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக ஆகினர். ஏடன் துறைமுகத்தில் நிறுவனத்தின் நிரப்பும் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு திருபாய் அம்பானி உயர்த்தப்பட்டார். சாதாரண மனிதர்கள் படிப்படியாக உயர்ந்து தான் வேலை செய்யும் நிறுவனத்தில் முக்கியப் பதவிக்கு வரவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அம்பானியோ தான் இதுபோன்ற ஒரு என்னை சுத்திகரிக்கும் ஆலையை நிறுவவேண்டும் என்று நினைத்தார். கனவு காண்பதில், அதிலும் மிகப் பிரமாண்டமான கனவுகளைக் காண்பதிலும், அதனை நினைவாக்கிக் காட்டுவதிலும் அம்பானியைப் போன்ற ஒருவரை இனம் காணுவது மிகக் கடினம்.

தனது உறவினர் ஒருவரோடு இணைந்து மும்பை நகரில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியையும், மிளகாய் ஏற்றுமதியையும் செய்யத் தொடங்கிய அம்பானி பின்னர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தைத் தனியாகத் தொடங்கினார். தனது அண்ணன் மகனின் பெயரால் விமல் என்ற துணி விற்பனையை ஆரம்பித்தார் அம்பானி. தனது விற்பனையாளர்கள் லாபம் அடைவதை எப்போதும் உறுதி செய்ததால், அம்பானியின் தொழில் கூட்டாளிகள் இன்றும் ரிலையன்ஸ் குழுமத்தோடு இணைந்தே உள்ளனர்.

துணிக்குப் பிறகு பாலிஸ்டர் இழைகளை உருவாக்குவதிலும், அதன் பின்னர் பாலிஸ்டர் இழையின் மூலப்பொருளான பெட்ரோலியத் துறையிலும் அம்பானி கால் பதித்தார். தான் உருவாக்கும் எந்தப் பொருளுக்கும் இன்றய தேவை என்ன ? அதில் தன் நிறுவனம் எந்த அளவு பங்கு வகிக்க வேண்டும் என்று எண்ணாமல், இன்னும் பத்தாண்டுகள் இருபதாண்டுகள் கழித்து என்ன தேவை இருக்கும் என்று எண்ணி அந்த அளவு தயாரிப்புக்கான ஆலைகளை நிறுவுவது அம்பானியின் பழக்கம். அதனால்தான் ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கிய பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளது.

பெரும் வெற்றி, பெரும் பிரச்சனைகளையும் கொண்டு வருவது வாடிக்கைதான். திருபாய் அம்பானிக்கு பாம்பே டையிங் நிறுவன தலைவர் நூஸி வாடியாவிற்கும் இடையே நடைபெற்ற துணி தயாரிக்கும் துறையில் யார் முதன்மையாக இருப்பார்கள் என்ற யுத்தம் எண்பதுகளில் பெரும் புயலைக் கிளப்பியது. கட்டுமானத்துறையிலும் பொறியியல்துறையிலும் புகழ்பெற்று விளங்கும் எல் அண்ட் டி நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திருபாய் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருபாய் மீது தொடுத்த தாக்குதல்கள் எண்பதுகளில் முக்கியமான செய்திகள்.

எழுபதுகளின் நடுவில் பாரதம் தொழில் செய்ய உகந்த நாடாக இல்லை. சோஷலிச சித்தாந்தம் என்பது ஆளுபவர்களின் விருப்பமாக இருந்தது. வங்கிகள் தொழில்முனைவோருக்கு கடன் வழங்க பல்வேறு இடர்பாடுகள் இருந்த நேரம் அது. எனவே திருபாய் நேரடியாக மக்களிடம் சென்று தனது தொழிலுக்கு பங்குச்சந்தை வழியாக முதலீட்டைத் திரட்டினார். அதற்கு முன்புவரை பங்குகள் பற்றிய ஆர்வம் பொதுமக்களிடம் இல்லாமல் இருந்தது. பங்குகளில் வரும் ஈவுத்தொகை மட்டுமே முதலீட்டாளர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் பங்குகள் தங்கள் மதிப்பில் உயரும், அதனால் லாபம் வரும் என்பதைக் காட்டி பொதுமக்களைப் பங்குச்சந்தைக்கு வரவைத்ததில் திருபாய் அம்பானிக்கு பெரும்பங்கு உண்டு.

1986 ஆம் ஆண்டு திருபாய் அம்பானியை மாரடைப்பு தாக்கியது. அதனால் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது கை செயலிழந்து இருந்தார். மீண்டும் 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் பாதிக்கப்ப திருபாய் அம்பானி 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் நாள் காலமானார். சிறு வணிகராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி 75,000 கோடி வியாபாரம் செய்யும் குழுமத்தின் தலைவராக உயர்ந்த திருபாயின் நினைவுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் குவிந்தனர்.

சர்ச்சைகளின் நாயகராகவும் சாதனைகளின் நாயகராகவும் ஒரே நேரத்தில் திகழ்ந்த திருபாய் அம்பானியை விட்டு விட்டு பாரத வரலாற்றின் தொழில் வரலாற்றை எழுத முடியாது என்பதுதான் உண்மை. 

சனி, 27 டிசம்பர், 2025

டிசம்பர் 27 - லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா பிறந்ததினம்

இன்றய ஜார்காலாந்து மாநிலத்தில் ராஞ்சி நகருக்கு அருகே உள்ள கும்லா மாவட்டத்தில் ஜாரி கிராமத்தில் வசித்து வந்த ஆதிவாசி வகுப்பைச் சார்ந்த ஜூலியஸ் எக்கா - மரியம் எக்கா தம்பதியரின் மகனாக 1942ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் நாள் பிறந்தவர் ஆல்பர்ட் எக்கா. மலையும் காடுகளும் சூழ்ந்த நிலத்தில்  வசித்து வந்த காரணத்தால் பொதுவாகவே ஆதிவாசிகள் வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். ஆல்பர்ட் எக்காவும் அதில் விதிவிலக்காக இல்லை. துணிச்சலும் வீர சாகசங்களிலில் நாட்டமும் இருந்த ஆல்பர்ட் ராணுவத்தில் சேருவதில் மிகவும் விருப்பமாக இருந்தார். தனது இருபதாவது வயதில் ஆல்பர்ட் பாரத ராணுவத்தில் இணைந்தார். பின்னர் அவர் Brigade of the Guards - காவலர்களின் படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  

Brigade of the Guards படைப்பிரிவானது பாரத நாடு முழுவதிலும் உள்ள எல்லா இனக்குழுக்களிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படைப்பிரிவு. பொதுவாக பாரத ராணுவத்தில் சீக்கியர்கள் படை, கூர்க்கா படை, மராட்டா படை என்று இனக்குழுவாரியாக வீரர்களை இணைத்து படைப்பிரிவுகளை உருவாக்குவதே வழக்கம். எல்லாப் பகுதி மக்களும் இணைந்து உருவான முதல்படைப்பிரிவு இதுதான். ஜெனரல் கரியப்பா உருவாக்கிய படைப்பிரிவு இது. பஞ்சாப் ராணுவப்பிரிவு, ராஜ்புதான துப்பாக்கிப்படை மற்றும் கையெறி குண்டுகள் வீசும் கிரான்டியர் படை ஆகியவற்றில் இருந்து படைகளை இணைத்து இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. 

இதப்படையின் குறிக்கோள் பஹலா ஹமேஷா பஹலா அதாவது முதலில் எப்போதும் முதலில் என்பதாகும். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போர், 1965 மற்றும் 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர்கள், சீக்கிய தீவிரவாதிகள் வசம் இருந்த பொற்கோவிலை விடுவிக்க நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூஸ்டார் மற்றும் ஐக்கிய நாடுகள் சார்பாக அமைதிப்படையாக வியட்நாம், கம்போடியா, லாவோஸ், அங்கோலா மற்றும் காசா பகுதிகளில் பணியாற்றி உள்ளது. பல்வேறு களங்களில் பணியாற்றி இரண்டு அசோகா சக்ரா, எட்டு பரம் விஷிஸ்ட சேவா பதக்கங்கள், எட்டு மஹாவீர் சக்ரா, நான்கு கீர்த்தி சக்ரா, நாற்பத்தி ஆறு வீர் சக்ரா, எழுபத்தி ஏழு சேனா பதக்கங்கள், பத்து அதி விஷிட்ட சேவா பதக்கங்கள், மூன்று யுத்த சேவா பதக்கங்கள், பதினாறு விஷ்ட்ட சேவா பதக்கங்கள் என்று பல்வேறு பதக்கங்களை இந்தப் படை பெற்றுள்ளது. அதெற்கெல்லாம் சிகரம் வைத்தது போல இந்தப் படைப் பிரிவுக்கு ஆல்பர்ட் எக்கா பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றுத் தந்துள்ளார்.

வில்லையும் அம்புகளையும் வைத்து வேட்டையாடுவதில் ஆல்பர்ட் எக்காவிற்கு இருந்த தேர்ச்சி அவரை துப்பாக்கி சுடுவதில் திறமையானவராக ஆக்கியது. குறி தவறாமல் சுடும் அவரின் திறமையை அவரது மேலதிகாரிகள் எப்போதும் பாராட்டுவது வழக்கம். ராணுவத்தில் சேர்ந்த பிறகு வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலகங்களை அடக்குவதில் எக்கா ஈடுபட்டு இருந்தார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பாரத ராணுவம் ஒரே நேரத்தில் மேற்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் போரிட வேண்டிய நிலைமை உருவானது. பங்களாதேஷ் நாட்டை விடுவிப்பதில் கங்காசாகர் பகுதியில் நடைபெற்ற போர் முக்கிய பங்கு வகித்தது. அந்தப் பகுதி டாக்கா நகரை இணைக்கும்  முக்கியமான ரயில் பாதையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியைக் கைப்பற்றி அங்கிருந்து அஹாவுரா பகுதியைக் கைப்பற்றினால்தான் டாக்கா நகரில் நுழையமுடியும்.  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி வைத்திருந்தது. பாரத படைகள் முன்னேறுவதைத் தடுக்க சாலையெங்கும் கண்ணிவெடிகளை பாகிஸ்தான் ராணுவம் புதைத்து வைத்திருந்தது. அங்கேதான் டிசம்பர் 3ஆம் நாள் Brigade of the Guards படையின் 14ஆம் பிரிவு தங்கள் தாக்குதலைத் தொடங்க வேண்டும். கேப்டன் கோலி தலைமையில் படைகள் அங்கே அணி வகுத்து இருந்தது. கடினமான இந்தப் பணியை மேற்கொள்ள துணிச்சலுடனும் உறுதியுடனும் ஆல்பர்ட் எக்கா தயாராகிக்கொண்டு இருந்தார்.  தனது உயிரைப் பணயம் வைத்து தனியொருவனாக எக்கா எதிரிப்படையை அழித்தார். 

பாகிஸ்தான் படைகள் ரயில்வே தண்டவாளங்களுக்கு நடுவே நடந்து செல்வதை பாரத ராணுவம் பார்த்தது. அந்தப் பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து பாரத ராணுவம் தங்கள் தாக்குதலைத் தொடங்கியது. எதிரிகள் இருக்கும் இடத்திற்கு 100 மீட்டர் அருகே வரும் நேரத்தில் கடுமையான எதிர் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியது. பதுங்குகுழியின் மேலே அமைக்கப்பட்டு இருந்த இயந்திரத் துப்பாக்கி மூலம் தொடர்ச்சியான துப்பாக்கிச் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது. பாதுகாப்பான இடத்தில இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்குவதும், அதோடு நேருக்கு நேராக அவர்களை எதிர்கொள்வதன் மூலமாக மட்டுமே அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்று எக்கா தீர்மானம் செய்தார். பாக்கிஸ்தான் ராணுவம் அமைத்திருந்த சுவரில் ஏறி அவர் பதுங்குகுழியில் வெடிகுண்டுகளை வீசினார். அதோடு இரண்டு வீரர்களை தன் துப்பாக்கியில் பொருத்தப்பட்டு இருந்த கத்தியால் குத்திக் கொன்றார். எதிர் தாக்குதலில் காயமடைந்த நிலையிலும் எக்கா மற்றொரு பதுங்குகுழியையும் தனது குண்டுவீச்சால் அழித்தார். தனது கடமையை முடித்த நிம்மதியில் எக்கா போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தார். 

அவரது அச்சமற்ற தன்மை, தனது கடமையின் மீது அவரின் பக்தி ஆகியவை இந்தப் போரின் வெற்றியில் பெரும் பங்காற்றின. அவரது வீரத்தைப் பாராட்டும் விதமாக ஆல்பர்ட் எக்காவிற்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. 

வெள்ளி, 26 டிசம்பர், 2025

டிசம்பர் 26 - உத்தம வீரன் உத்தம்சிங் பிறந்தநாள்

எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது இயக்கவியலின் விதி. அந்த எதிர்வினை எப்போது நடைபெறும் என்பதுதான் வரலாற்றின் வினா. பாரத மண்ணில் நடைபெற்ற வினைக்காக இருபத்தி ஒரு ஆண்டுகள் காத்திருந்து லண்டன் மாநகரத்தில் எதிர்வினையாற்றிய மாவீரன் உத்தம்சிங்கின் பிறந்தநாள் இன்று.


அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து ஆயுதம் எதுவும் இல்லாமல் கூடிய பாரத மக்களை " சுட்டேன் சுட்டேன் குண்டு தீரும்வரை சுட்டேன்" என்று படுகொலை செய்த பாதகன் ஜெனரல் ரெஜினால்ட் டயர். அவனுக்கு அனுமதி அளித்து இந்த படுகொலைக்கு பின்புலமாக இருந்தவன் அன்றய பஞ்சாப் ஆளுநர் மைக்கேல் ஓ டயர். இந்த வினைக்கு எதிர்வினையாக சிந்திய பாரத ரத்தத்திற்கு பதிலாக லண்டன் நகரில் மைக்கெல் டயரை சுட்டுக் கொன்ற உத்தம்சிங்கின் பிறந்தநாள் இன்று.

1889 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தின் சுனாம் கிராமத்தில் சர்தார் முக்தாசிங் - ஆஷாகபூர் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஷேர்சிங் என்பதாகும். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஷேர்சிங்கையும் அவர் சகோதரரையும் சீக்கிய மத குருமார்கள் தாங்கள் நடத்தும் விடுதியில் அடைக்கலம் கொடுத்து வளர்த்தனர். அங்கேதான் இவருக்கு உத்தம்சிங் என்று பெயரிடப்பட்டது. நாடெங்கும் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கருத்து உருவாக்கிக்கொண்டு இருந்த காலம் அது. வீரத்திற்கும், தியாகத்திற்கும், நாட்டுப் பற்றுக்கும் பேர் போன சீக்கிய இனக்குழுவில் பிறந்து வளர்ந்தவர் உத்தம்சிங். அவரும் தியாக சீலராக வளர்வதில் வியப்பென்ன இருக்க முடியும் ?

அப்போதுதான் சீக்கியர்களின் முக்கியமான பண்டிகையான பைசாகி திருநாள் அன்று ஜாலியன்வாலாபாகில் கூடிய மக்களை ஜெனரல் டயர் சுட்டுக் கொன்றான். நாடெங்கும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கிய படுகொலை இது. இந்தக் கொலைக்கு பழிவாங்கிய தீரவேண்டும் என்ற முனைப்பு பல தேசியப் போராட்ட வீரர்களுக்கும் உருவானது. அதில் உத்தம்சிங்கும் ஒருவர். இந்த கனல் அவரை பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட வைத்தது. தென்னாபிரிக்கா, நைரோபி ஆகிய நாடுகளில் பல்வேறு பணிகளில் இருந்து விட்டு பின்னர் உத்தம்சிங் அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் இருந்து பாரத சுதந்திரத்திற்கு லாலா ஹர்தயாள் போன்றவர்கள் செயல்பட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் கதர் இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெற்ற உத்தம்சிங் 1927ஆம் ஆண்டு பாரதம் திரும்பினார். காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைப்பட்ட உத்தம்சிங் சிறையில் பகத்சிங் முதலான வீரர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தார். சிறையில் இருந்து விடுதலையான பிறகும் காவல்துறை அவர்மீது கண் வைத்தபடியே இருந்தது. எனவே காஷ்மீர் சென்று ஜெர்மன் வழியாக உத்தம்சிங் லண்டன் சென்று சேர்ந்தார். நாட்டின் எதிரியை அவன் நாட்டிலேயே கொன்று பழி தீர்ப்பதுதான் அவரின் லட்சியமாக இருந்தது.

1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் நாள் கூட்டம் ஒன்றில் மைக்கெல் டயர் பேச வருவதாகத் தகவல் கிடைத்தது. ஏற்கனவே லண்டன் நகருக்குள் தான் கடத்தி வந்த கைத்துப்பாக்கியோடு உத்தம்சிங்கும் அந்த கூட்டத்திற்கு சென்றார். கூட்டத்தில் நேருக்கு நேராக உத்தம்சிங் மைக்கேல் டயர் மீது குறிபார்த்துச் சுட்டார். டயரின் நெஞ்சை ஒரு குண்டு துளைக்க, இரண்டாயிரம் பாரத மக்களைப் படுகொலை செய்யக் காரணமாக இருந்த ஆங்கிலேயன் அங்கேயே மரணமடைந்தான். இருபது ஆண்டுகளும், உலகமெங்கும் சுற்றி, பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு நாட்டின் கறையை ஆங்கில குருதிகொண்டு துடைத்தார் உத்தம்சிங்.

ஆளுநர் டையரின் கொலை இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. மக்கள் மைக்கேல் ஓ டையரின் கொடும் செயலை மறக்கவில்லை. வழக்கம் போல் காந்திஜி அவரது செயலைக் கண்டித்தார். ஜெர்மனி வானொலி ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும் இந்தியர்கள் யானையைப் போல எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் 20 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது. பெர்லின் பத்திரிக்கை உத்தம் சிங் இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி என்று கூறியது. இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு பகத் சிங் மற்றும் உத்தம் சிங்கின் செயல் குறித்த காந்திஜியின் விமர்சனத்தைக் கண்டித்தது

லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. தன்னை ராம் முஹம்மது சிங் ஆசாத் என்று அறிமுகம் செய்துகொண்டார் உத்தம்சிங். பாரத நாட்டின் முக்கியமான மதத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது விடுதலை என்ற பொருளில் இந்தப் பெயரை அவர் பயன்படுத்தினார். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட உடனே உத்தம்சிங் வெடித்தார். “பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நீதிமன்றத்திற்குத் என்னை விசாரிக்கும் உரிமையோ தகுதியோ கிடையாது. மைக்கேல் ஓ.டயரைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. இந்த தண்டனை  அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டியதே. நான் மரணத்திற்குப் பயப்படவில்லை. என் தாய் நாட்டை விடுவிக்க உயிர் துறப்பதற்காக பெருமைப்படுகிறேன். நான் போனபிறகு என்னுடைய இடத்திற்கு  என் தேசத்தின் மக்கள் வருவார்கள்.   உங்களை அவர்கள் விரட்டுவார்கள். நீங்கள் இந்தியாவிற்கு வருவீர்கள். பிறகும் பிரிட்டனுக்குத் திரும்பி பிரபு ஆவீர்கள். நாடாளுமன்றத்திற்குப் போவீர்கள்.  நாங்கள் பிரிட்டனுக்குள் வந்தால் தூக்கில் போடுவீர்கள். ஆனால் நீங்கள் பாரத தேசத்திலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்படுவீர்கள். உங்கள் பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியம் சுக்குநூறாக உடைந்து சிதறும்.” என்று முழங்கினார்.

உத்தம்சிங்கை ‘சாகும்வரை தூக்கில் போடவேண்டும்’ என்று தீர்ப்பெழுதிப் பேனாவை முறித்தார் வெள்ளைக்கார நீதிபதி ஹட்கின்ஸன். நீதிமன்றத்திலிருந்து உடனே அவரை இழுத்துச் செல்லுமாறும் உத்தரவிட்டார். ‘வந்தேமாதரம்! ‘ என்று நீதிமன்ற  அறையே அதிரும் வகையில் முழங்கிச் சென்றார் உத்தம்சிங். 1940 ஜூலை 31ந்தேதி தூக்குத்தண்டனைக்கான நாளாகக் குறிக்கப்பட்டது. லண்டனில் உள்ள பென்டோவில் சிறையில்  அடைக்கப்பட்டிருந்த உத்தம்சிங் புன்னகை ததும்பிய முகத்துடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார். வந்தேமாதரம் சொல்லி பாரதமாதாவை வாழ்த்தினார். பிரிட்டிஷ் வழக்கப்படி வெண்ணிற துணியைப் போட்டு முகத்தை மூடி தூக்கிலிட்டனர். சொந்த தேசத்து மக்களைக் கொன்றவனை ஒரு வேள்வியைப் போல 21 ஆண்டுகள் காத்திருந்து பழிதீர்த்து விடுதலை வீரரின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது.

லண்டன் பென்டோவில் சிறை வளாகத்தில் உத்தம்சிங் புதைக்கப்பட்டு இந்திய மாவீரன் உடலால் ஆறடிமண் இங்கிலாந்தில் ஆக்கிரமிக்கப்பட்டது வரலாற்றின் மைல்கல். முப்பது ஆண்டுகளுக்குப் பின் அவரது  உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது  சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவரது  தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.

நாட்டின் சேவைக்காக பலிதானியான தியாகிகளை என்றும் நினைவில் கொள்வோம். அவர்கள் வழியில் நடப்போம்.