திங்கள், 1 டிசம்பர், 2025

டிசம்பர் 1 - காகா காலேல்கர்பிறந்ததினம்

இந்த மனிதனை எந்த வரையறையில் சேர்க்க ? சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் சீடர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று பல்வேறு திசைகளில் ஒளிவீசும் ரத்தினமாகத் திகழ்ந்த தாத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்ற காகா காலேல்கரின் பிறந்ததினம் இன்று.

மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் பிறந்து, பூனா பெர்கூசன் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்று, பரோடா நகரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர உணர்ச்சியை தூண்டும் இடமாக அந்த பள்ளி விளங்கியதால் ஆங்கில அரசு அந்த பள்ளியைத் தடை செய்த பிறகு பத்திரிகையாளராகப் பணியாற்றி, பின்னர் கால்நடையாகவே இமயமலை பகுதிகளில் சுத்தித் திரிந்து, ஆச்சாரிய கிருபளானியோடு தொடர்பு ஏற்பட்டு, அவரோடு பர்மா சென்று, பின்னர் காந்தியைக் கண்டு, அவரின் சீடராக மாறி, சபர்மதி ஆசிரமத்தில் தங்கி, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று என்று அநேகமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பலரின் வாழ்க்கை போலத்தான் இவரின் வாழ்வும் இருந்தது.

இவரின் கைத்தடியைத்தான் தண்டி யாத்திரியையின் போது காந்தி பயன்படுத்தினார். எனவே தான் காந்தியின் கைத்தடி என்று காலேல்கர் தன்னை அறிமுகம் செய்து கொள்வது உண்டு. காந்தியின் ஆணைக்கேற்ப ஹிந்தி மொழியை பரப்பும் செயலிலும் காலேல்கர் ஈடுபட்டு இருந்தார். சென்னையில் உள்ள தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக சபாவின் முதல் பட்டமளிப்பு விழா இவரின் தலைமையில்தான் நடைபெற்றது. 1952 ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை இவர் பாரத நாட்டின் ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றினார். நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வாழ்க்கை நிலையை ஆராய்ந்து அவர்கள் முன்னேற்றத்திற்காக அரசுக்கு பரிந்துரை செய்ய என்று நிறுவப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுக் குழுவின் தலைவராகவும் காலேல்கர் பணியாற்றினார். 


மராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காலேல்கர் காந்தியின் தூண்டுதலின் பேரில் குஜராத்தி மொழியைக் கற்றுக்கொண்டு ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம்  ஆகிய மொழிகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதிலும் முக்கியமானது லோக மாதா அதாவது உலகின் தாய் என்ற தலைப்பில் குஜராத்தி மொழியில் அவர் எழுதி தமிழில் ஜீவன் லீலா என்ற பெயரில் மொழிபெயராக்கப்பட்ட பாரத நாட்டின் நதிகளை நேரில் பார்த்து அவர் எழுதிய பயணக் கட்டுரைகளின் தொகுப்பு.


பள்ளிக்கல்வியும் பாடப்புத்தகங்களும் கற்றுக்கொடுக்காத பாடத்தை மனிதர்களுக்கு  பயணம் கற்றுக்கொடுக்கிறது. எதையோ தேடி வரலாறு முழுவதும் மனிதன் பயணம் செய்துகொண்டேதான் இருக்கிறான். பொருள் தேடியோ போர் நிமித்தமாக தலைவன் பிரிவதை பாலைத்திணை என்று தமிழ் வரையறை செய்கிறது. பத்திரிகைப் பணிக்காகவும் தேச விடுதலைக்கான இயக்க வேலைக்காகவும் காலேல்கர் பாரதநாடு முழுவதும் பயணம் செய்தார். எதனாலோ அவருக்கு நீர்நிலைகள்மீது ஒரு தணியாத ஆர்வம் இருந்தது. தான் தேடிதேடிப் பார்த்த நதிகளைப் பற்றி கட்டுரைகளாக அவர் பதிவு செய்து இருக்கிறார்.   


நதிக்கரைகள்தான் மனித நாகரிகத்தின் தொட்டிலாக உள்ளது. மலைகளில் சிறுதுளியாகத் தொடங்கி வழியில் பல்வேறு ஓடைகளை இணைத்துக் கொண்டு நீர்வீழ்ச்சியாக குதித்து, நின்று நிதானமாக ஓடி, தான் செல்லும் இடத்தையெல்லாம் குளிர்வித்து, செழிப்பாக்கி, பாலைவனங்களைச் சோலையாக்கி, விவசாய பூமியாக்கி, இறுதியில் கடலில் சங்கமிக்கும் இடங்கள் வரை காலேல்கர் தேடித்தேடி சென்று பார்த்தார். 


பாரதநாட்டின் பண்பாடு என்பது நதிகளை தெய்வமாக எண்ணித் தொழுவது. காலேல்கரின் தனது பயணங்களில் வெறும் கேளிக்கைக்காக கடல்களையும் நதிகளையும் காணச்  செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை இந்தப் பயணங்கள் என்பது ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதை ஒத்தது. இந்தக் கட்டுரைகளில் நீர்நிலைகள் மீதான அவரது நெருக்கமும் பக்தியும் தென்படுகிறது.  நாட்டின் ஒவ்வொரு இடத்தைப் பற்றித் தனக்குத் தெரிந்திருக்க வேண்டும், அவற்றோடு தனக்கு ஒரு நெருக்கமான உறவு இருக்கவேண்டும் என்ற அவரின் விருப்பமும் தவிப்பும் நமக்குப் புலனாகிறது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை அவர் " நின்று, கரம்குவித்துத் தொழுதல்" என்று தலைப்பிட்டிருப்பதை நோக்கினால் நீர்நிலைகளை அவர் தெய்வமாக எண்ணுவதை, ஆறுகளைத் தேடிச் செல்லும் பயணங்களை அவர் ஆன்மீக அனுபவத்தை நாடிச் செல்லும் ஒரு பக்தனின் பயணமாக கருதுவதை உணர்ந்து கொள்ள முடியும் 


இந்த நூலில் உள்ளவை வெறும் பயணம் பற்றிய தகவல்களோ அல்லது நதிகளைப் பற்றிய குறிப்புகளோ மட்டும் அல்ல. மனிதனின் வாழ்க்கைக்கும் நதிகளுக்கு இடையேயான ஒரு உணர்வுபூர்வமான இணைப்பின் ஒரு ஆய்வு இது. இந்த நாட்டின் எல்லா நதிகளைப் பற்றி எதோ ஒரு புராணக்கதை உள்ளது. எதோ ஒரு தெய்வத்தோடு அல்லது ஒரு முனிவரோடு இந்த நதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. 


புத்தகத்தின் முதல் கட்டுரை பெல்காம் பகுதியில் வைத்தியனாத மலையிலிருந்து உற்பத்தியாகி பெலகுந்தி கிராமத்தை நோக்கி ஓடிவரும் மார்க்கண்டி நதியைப்பற்றியதாகும். இது 1928-ல் எழுதப்பட்டது. எழுபதாவது கட்டுரையான ‘மழைப்பாட்டு’ கார்வார் கடற்கரையில் பெய்யும் மழையனுபத்தை முன்வைத்து எழுதப்பட்டது. இது 1952-ல் எழுதப்பட்டது. இடைப்பட்ட முப்பத்திநான்கு ஆண்டு காலத்தில், தேசம் முழுதும் அலைந்து கங்கை, யமுனை, பிரம்மபுத்திரை, ஜீலம், இரவி, கிருஷ்ணா, தபதி, கோதாவரி, துங்கபத்திரை, காவேரி, நர்மதை, ஷராவதி, ஐராவதி, பினாகினி, லவணவாரி, அகநாசினி, தூத்கங்கா, ராவி, கடப்பிரபா, கூவம், அடையாறு என எண்ணற்ற ஆறுகளையும் நீர்நிலைகளையும் பார்த்து நெஞ்சை நிறைத்துக்கொண்ட அனுபவங்களை வெவ்வேறு தருணங்களில் தனித்தனி கட்டுரைகளாக எழுதினார். அதற்குப் பின்னரே அவை நூல்வடிவம் கண்டன.


மார்க்கண்டி நதி அவர் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றி ஓடும் நதி சிவனின் அருளால் எமனின் பாசக்கயிறிலிருந்து பிழைத்து என்றென்றும் பதினாறு வயதுடையவனாகவே வாழ்ந்த மார்க்கண்டேயனின் பெயரால் அந்த நதி அழைக்கப்படுகிறது. அதைத் தன் குழந்தைப்பருவத் தோழி என்று குறிப்பிடுகிறார். தம் குடும்பத்துக்குச் சொந்தமான வயல்வெளியைத் தொட்டபடி ஓடும் அந்த நதிக்கரையில் மணிக்கணக்கில் நின்று வேடிக்கை பார்த்த அனுபவங்களை அதில் விவரிக்கிறார். கார்வார் கடற்கரையில் பெய்யும் மழைத்தாரைகளை கடலைத் வெட்டும் ஆயுதங்கள் என கவித்துவம் ததும்ப  எழுதுகிறார். 


பாரதநாட்டின் எல்லா மக்களின் நினைவிலும் இருப்பது கங்கை நதி. அந்த நதியின் ஓட்டத்தை மூன்று கட்டங்களாக வகுத்துரைக்கிறார் காலேல்கர்.  கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரியிலிருந்து ஹரித்துவார் வரையிலான கங்கையின் ஓட்டம் முதல் கட்டம். இது நதியின் குழந்தைப் பருவம். ஹரித்துவார் முதல் பிரயாகை வரையிலான கங்கையின் ஓட்டம் இரண்டாவது கட்டம். இது கங்கையின் குமரிப் பருவம். பிரயாகையிலிருந்து கடலுடன் சங்கமமாகும் வரையிலான கங்கையின் ஓட்டம் மூன்றாவது கட்டம். அவற்றை ’திரிபதகா’ என்னும் சொல்லால் மூன்று அவதாரங்கள் என்றே குறிப்பிடுகிறார் காலேல்கர். மூன்று கட்டங்களில் ஹரித்துவாரிலிருந்து பிரயாகை வரைக்குமான கங்கையின் ஓட்டத்துக்கு உலக மதிப்பு மிகுதி. கோவிலுக்கு அருகில் உள்ள துறைகள், அவற்றையொட்டி ஓடும் மடுக்கள் எல்லாமே கங்கையின் அழகை பல மடங்காகப் பெருகவைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமானது அங்கு வீசும் காற்று. இமயத்தின் பனிச்சிகரத்திலிருந்து வீசும் காற்று முதன்முதலாக மானுடரையும் அவர்களுடைய குடியிருப்பையும் இந்த இடத்தில்தான் தொட்டுக் கடந்து செல்கிறது. கங்கையைச் சகுந்தலையாகவும் யமுனையை திரௌபதி என்றும் மாற்றி அவர் குறிப்பிடுகிறார். அயோத்தி நகர் வழியாக பாயும் சரயுநதி, ராஜா  ரத்திதேவனோடு தொடர்புடைய சம்பல் நதி, கஜேந்திர மோட்ஷம் நடைபெற்ற சோணபத்ரநதி, கண்டகி நதி என்று பல்வேறு நதிகளைப் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார். 

தண்டால் மலைப்பகுதியில் கங்கையும் யமுனையும் சந்திப்பது போல நெருங்கி வந்து பிறகு சங்கமிக்காமல் பிரிந்து போய்விடும். தண்டால் மலையருகில் யமுனையின் கரையில் வாசம் செய்தபடி தினமும் கங்கையில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஒரு முனிவர். வயதான காலத்தில் அவரால் தன் இருப்பிடத்திலிருந்து கங்கைக்கரை வரையிலான தொலைவை நடக்கமுடியாமல் போய்விட்டது. நீராடாமல் பூசைகளில் ஈடுபட முடியாமல் அவர் தவிப்பதைப் பார்த்து, கங்கை தன் ஓட்டத்தையே சற்று மாற்றிக்கொண்டு அவர் வசிக்குமிடத்துக்கு அருகிலேயே ஒரு சிற்றருவியாகப் பாய்ந்து வந்தது. முனிவர் மறைந்துபோனாலும் அச்சிற்றருவி இன்றும் பெருக்கெடுத்துப் பாய்ந்தபடி இருக்கிறது. இந்தத் தொன்மக் கதையையும் காலேல்கர் பதிவு செய்து இருக்கிறார். 

காந்தி ஒருமுறை தன் பிரயாணத்தின் ஒரு பகுதியாக சாகர் என்னும் இடத்தில் தங்கியிருக்கிறார். அங்கிருந்து நாற்பது ஐம்பது மைல்கள் தொலைவில் இருக்கும் ஜோக் நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு வரலாம் என்னும் திட்டத்தை காந்தியிடம் முன்வைத்தார் காலேல்கர். காந்தியோ தனக்கு நேரமில்லை என்றும் “நீ வேண்டுமானால் சென்று வா. நீ போய்வந்தால் மாணவர்களுக்கு ஒரு சில பாடங்களைச் சொல்ல வசதியாக இருக்கும்” என்று சொல்லி மறுத்துவிட்டார். ”ஜோக் உலகத்தின் அற்புதக்காட்சிகளில் ஒன்று” என்றெல்லாம் சொல்லி காந்தியைக் கரைக்க முற்பட்டார் காலேல்கர். காந்தியோ அவரிடம் மீண்டும் “960 அடி என்பதெல்லாம் ஒரு உயரமா? மழைத்தண்ணீர் அதைவிட உயரமான இடமான ஆகாயத்திலிருந்து விழுகிறது தெரியுமா? அது எவ்வளவு பெரிய அதிசயம்?” என்று சொல்லி மேலும் வாதத்துக்கு வழியின்றி முடித்துவிட்டார். பிறகு வேறு வழியில்லாமல் மேலும் சிலரைச் சேர்த்துக்கொண்டு காலேல்கர் ஜோக் அருவியைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். ஷராவதி ஆற்றங்கரை வரைக்கும் நீண்டிருக்கும் காட்டை நடந்து கடப்பது ஒரு பயணம். பிறகு அருவிக்கரை வரைக்கும் படகுப்பயணம். ஒவ்வொரு கட்டத்தையும் நேர்த்தியான சொல்லோவியங்களென தீட்டி வைத்திருக்கிறார் காலேல்கர். ரோரர், ராகெட், லேடி ஆகிய அருவிக்கிளைகளுக்கு அவர் ருத்ர, வீரபத்ர, பார்வதி என்னும் புதிய பெயர்களைச் சூட்டி அப்பெயர்த்தேர்வுகளுக்கான காரணங்களையும் சுவாரசியமாகச் சொல்கிறார்.

கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி, கோமதி ஆகிய நதிகளில் நீராடுவதைப்பற்றியும் அவற்றின் கரைகளில் செய்யப்படும் தானதர்மங்களைப் பற்றியும் ஏராளமாகச் சொல்லப்பட்ட போதிலும் அந்நதிகளை வலம்வருவதைப்பற்றி எக்குறிப்பும் புராணங்களில் இல்லை. அதற்கு விதிவிலக்கு நர்மதை. அந்த நதியை வலம்வருவது இன்றளவும் ஒரு சடங்காக உள்ளது. அதற்கு பரிகம்மா என்பது பெயர். முதலில் நர்மதை உற்பத்தியாகும் இடத்திலிருந்து தொடங்கி தென்கரை வழியாக கடலில் சங்கமமாகும் இடம்வரைக்கும் செல்லவேண்டும். பிறகு படகின் மூலம் வடகரையைத் தொடவேண்டும். அங்கிருந்து கால்நடையாக அமர்கண்டக் செல்லவேண்டும். வலம்வரும் போது எங்கும் நதியைக் கடக்கக்கூடாது. நதியின் பிரவாகத்தைவிட்டு வெகுதொலைவு செல்லவும் கூடாது. நீர் அருந்தவேண்டுமானால் நர்மதையின் நீரையே அருந்தவேண்டும். இப்படி நர்மதையை வலம்வந்த  காலேல்கரின் அனுபவம் அவரோடு சேர்ந்து நாமும் நடப்பதுபோல உள்ளது. தன் விழிகளால் கண்ட ஒவ்வொரு காட்சியையும் காலேல்கர் நம்மையும் காண வைத்துவிடுகிறார். ஜபல்பூருக்கு அருகில் பேடாகாட் என்னும் இடத்தில் நர்மதையின் ஓட்டத்துக்குக் காவலாக இருபுறங்களிலும் ஓங்கி உயரமாக நின்றிருக்கும் சலவைக்கல் மலைகளை முழுநிலவில் காண்பது மகத்தானதொரு அனுபவம். நிலவின் ஒளி முதலில் சலவைக்கல் மலையில் பட்டு பிரதிபலிப்பதையும், பிறகு ஆற்றின் மேற்பரப்பில் பிரதிபலிப்பதையும் பார்ப்பது மயக்கத்தையும் திகிலையும் ஊட்டும் ஒரு பேரனுபவம்.

டேராடூனுக்கு அருகில் உள்ள நதியின் பெயர் தீஸ்தா. அதாவது த்ரி- ஸ்ரோத்ரா. தனித்தனியாக நதிகள் மூன்று இடங்களில் உற்பத்தியாகி பிறகு அனைத்தும் இணைந்து ஒரே நதியாக ஓடுகிறது. கஞ்சன் ஜங்கா சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசூங் சூ என்பது ஒரு நதி. பாவ்ஹூன்ரீ சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசேன் சூ என்பது இரண்டாவது நதி. தாலூங் சூ என்பது மூன்றாவது நதி. இம்மூன்றும் இணைந்து தீஸ்தா என்னும் பெயருடன் ஓடத் தொடங்குகிறது. சிறிது தொலைவிலேயே இத்துடன் திக்சூ, ரோரோசூ, ரோங்கனீசூ, ரங்க்போசூ, ரங்கீத்சூ போன்ற ஆறுகள் வந்து இணைந்துகொள்கின்றன. எங்கெல்லாம் இரு ஆறுகள் கலக்கின்றனவோ, அங்கெல்லாம் கோம்போ எனப்படும் புத்தர் கோவில் காணப்படுகிறது.

வேத காலத்தில் விதஸ்தா என்று அழைக்கப்பட்ட நதியின் இன்றைய பெயர் ஜீலம். ‘உலகில் எங்காவது சொர்க்கம் இருக்குமெனில் அது இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது’ என அழுத்தம் திருத்தமாக ஒன்றுக்கு மூன்று முறை முகலாயச் சக்கரவர்த்தியான ஜஹாங்கீர் சொன்ன வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்றும் ஜீலம் நதிக்கரையில் வீற்றிருந்து அதன் அழகை சொல்லாமல் சொன்னபடி உள்ளது. ஆறு இங்குமங்கும் சுற்றிக்கொண்டு மெதுவாக ஓடுவதால் அது அசைவதே தெரிவதில்லை. வராஹமூலம் என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட பாராமுல்லா என்னும் இடத்தைக் கடந்தபிறகே ஜீலம் வேகம் கொள்கிறது.

கார்வார் அருகில் தேவ்கட் என்னுமிடத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தைக் காணச் சென்ற அனுபவமும் கார்வாரிலிருந்து கோகர்ணத்தைக் காணச் சென்ற அனுபவமும் சாகசப்பயணங்களுக்கு நிகரான சித்தரிப்புகளைக் கொண்டிருக்கின்றன. கோதாவரியின் சரித்திரத்தோடு ராமர்-சீதை கதையையும், சந்த ஞானேஸ்வரரின் கதையையும் இணைத்துச் சித்தரிப்பது வாசிப்பில் ஒருவித ஆர்வத்தையே தூண்டுகிறது. கல்கத்தாவிலிருந்து பர்மாவுக்குச் செல்லும் வழியிலும் ஆப்பிரிக்கப் பயணப் பாதைகளிலும் கண்ட பலவிதமான ஆறுகளைப்பற்றிய தகவல்களை காலேல்கர் தொகுத்துச் சொல்லும் விதமே, அவற்றை நாமும் உடனே சென்று பார்த்துவிடவேண்டும் என்னும் ஆவலை உருவாக்குகிறது. நேபாளத்தில் பாக்மதியையும் டேராடூனில் சஹஸ்ரதாராவையும் அசாமில் பரசுராமகுண்டத்தையும் பார்க்கச் சென்ற அனுபவங்கள் அனைத்தும் ஒரு சிறுகதைக்குரிய அனுபவங்களைப்போல உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் வசீகரம் நிறைந்த ஒரு சொல்லோவியம். காலேல்கரின் முயற்சியை ஒருவகையில் சொல்லோவியங்களால் நம் தேசத்தின் வரைபடத்தைத் தீட்டும் முயற்சி என்றே சொல்லலாம். பி.எம்.கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கிட்டும் அனுபவம் காஷ்மீரிலிருந்து தனுஷ்கோடி வரைக்கும் பயணம் செய்த அனுபவத்துக்கு நிகரானது. 

இலக்கியத்திற்க்காக சாஹித்ய அகாடமி விருதும் பொது சேவைக்காக பத்ம விபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 


 

ஞாயிறு, 30 நவம்பர், 2025

நவம்பர் 30 - ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்தநாள்

பாரத நாட்டின் புகழ்மிக்க அறிவியல் அறிஞர்கள் பெயர்களைக் கூறு என்று சொன்னால் அநேகமாக அனைவரும் முதலில் கூறும் பெயர் ஜெகதீஷ் சந்திர போஸ் என்றுதான் இருக்கும். இயற்பியல், உயிரியல், தாவிரவியல், உயிர் இயற்பியல் என்று அறிவியலின் பல்வேறு துறைகளில் வல்லுநராகவும், அதோடு வங்காள மொழியில் அறிவியல் சார்ந்து புனைகதைகளை எழுதும் துறையின் ஆரம்பகால எழுத்தாளராகவும் விளங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்ததினம் இன்று. 


வங்காள காயஸ்தா பிரிவைச் சார்ந்த பகவான் சந்திர போஸ் இந்திய ஆட்சிப்பணியில் துணை ஆணையாளராகவும் துணை நீதிபதியாகவும் பணியாற்றிக்கொண்டு இருந்தவர். அவர் ப்ரம்மசமாஜத்தின் முக்கியமான உறுப்பினராகவும் இருந்தவர். 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் பிறந்தவர் ஜெகதீஷ் சந்திர போஸ் அவர்கள். தாய் மொழியில்தான் குழந்தைகள் தங்கள் ஆரம்பக்கல்வியை பயிலவேண்டும் என்ற எண்ணம் தந்தைக்கு இருந்ததால் ஜெகதீஷ் சந்திர போஸ் வங்காள மொழியில்தான் தனது ஆரம்பிக் கல்வியை முடித்தார். சமுதாயத்தின் பல்வேறு படிநிலையில் உள்ள மாணவர்களோடு சேர்ந்து படித்ததால், போஸின் சிந்தனை விசாலமாக உருவானது. 

இதனைத் தொடர்ந்து சவேரியார் பள்ளியிலும், சவேரியார் கல்லூரியிலும் தனது படிப்பைத் தொடர்ந்தார் போஸ். அருள் தந்தை யூகினே லபோர்ட் என்பவரின் வழிகாட்டுதல் உயிரியல் துறையில் போஸுக்கு ஈடுபாடு அதிகமானது. இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுத லண்டன் செல்லவேண்டும் என்பது ஜெகதீஸ் சந்திர போஸின் விருப்பம். ஆனால் தன் மகன் பிறரால் கட்டுப்படுத்தப் படாது சுயேட்சையாக இருக்கவேண்டும் என்பது அவர் தந்தையின் ஆசை. எனவே லண்டன் சென்று மருத்துவம் படிக்கலாம் என்று போஸ் முடிவு செய்தார். ஆனால் உடல்நலம் இல்லாத காரணத்தால் மருத்துவத்தை கைவிட்டு விட்டு உயிரியல் துறையில் சேர்ந்து படித்து முனைவர் பட்டம் பெற்றார் போஸ். 

பாரதம் திரும்பிய போஸ், கல்கத்தா நகரில் உள்ள மாநிலக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களின் நிறவெறியும், அதனால் போஸின் ஆராய்ச்சிகளுக்கு போதுமான பொருளாதார உதவி கிடைக்காததும் என்று பல்வேறு சவால்களை போஸ் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் செயல் வீரர்கள் இந்த பிரச்சனைகளை ஒருநாளும் பொருள்படுத்துவது இல்லை. 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி என்பது அறிவியல் பல்வேறு துறைகளில் பெரும் முன்னேற்றத்தை அடைந்த காலம். முதலில் ஒரு அறிஞர் ஒரு கருத்தை கோட்பாடாக முன்மொழிவார். பிறகு ஆராய்ச்சிகள் மூலம் அது சரியா இல்லை தவறா என்று வேறு யாராவது கண்டுபிடித்து உலகுக்கு அறிவிப்பார்கள். இப்படி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் என்ற அறிஞர் மின்காந்த அலைகள் பற்றிய கோட்பாட்டை அறிவித்தார். ஹென்ரிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகள் இருப்பதை அதிகாரபூர்வமாக கண்டைந்து சொன்னார். மின்காந்த அலைகளின் அலைவரிசையை குறுக்குவதன் மூலம் சுவர்களைத் தாண்டி அந்த அலைகளை அனுப்ப முடியும், அதன் மூலம் கம்பி இல்லாமலே தந்தியை அனுப்பலாம் என்பதை போஸ் நிரூபித்துக் காட்டினார்.  படைப்போ அல்லது கண்டுபிடிப்போ இயற்கை ஒரு தனி மனிதன் மூலம் வெளிப்படுத்துவதுதான் என்ற பாரத எண்ணத்தின் படி வாழ்ந்த போஸ் தனது கண்டுபிடிப்புகளுக்கு எந்தவிதமான காப்புரிமையையும் கோரவில்லை. வானொலிப் பெட்டியில் இருந்து கைபேசி வரை, கணினி வரை இன்று செயல்படும் பல்வேறு சாதனங்களின் பின்னால் போஸின் பங்கு உள்ளது என்பது பாரத மக்களான நமக்கு பெருமையான ஓன்று. 

தாவரங்களுக்கு உயிர் உண்டு, வலி உண்டு என்பதையும் தன் ஆராய்ச்சி மூலம் போஸ் நிரூபித்தார். போஸின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு பொருளாதார உதவிகளைத் திரட்டவும், அவரது கட்டுரைகளை மொழி பெயர்க்கவும் ஸ்வாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா பேருதவி செய்தார். அறிவியல் சார்ந்து சில சிறுகதைகளையும் போஸ் எழுதி உள்ளார். 

ஒரு நல்ல ஆசிரியரின் பெருமை என்பது சிறந்த மாணவர்களை உருவாக்குவது. அப்படி சத்யேந்திரநாத் போஸ், மேகநாத் சாகா, பி சி மஹலனோபிஸ் சிசிர் குமார் மித்ரா போன்ற புகழ்பெற்ற அறிஞர்களை போஸ் வார்த்தெடுத்தார். 

பல்துறை விற்பன்னராக விளங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ் தனது எழுபத்தி எட்டாம் வயதில் 1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் காலமானார். 

வெள்ளி, 28 நவம்பர், 2025

நவம்பர் 28 - மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதான தினம்

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள், பாரத மக்களால் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத நாள். நேரடியாக மோதத் துணிவில்லாத பாகிஸ்தான் கையளவே உள்ள தீவிரவாதிகளை மும்பைக்கு அனுப்பி, அப்பாவி மக்களைக் கொன்று வெறியாட்டம் போட்ட நாள் அது. இருபத்தி ஆறு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நூற்று எழுபத்தி நான்குபேர் இந்த கோழைத்தனமான தாக்குதலில் மரணமடைந்தார். தீவிரவாதிகளை முறியடிக்கும் பணியில் நாட்டின் வீர மகன்கள் தங்களை ஆகுதி ஆகினார்கள். கடினமான இந்தப்பணியில் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதானியான தினம் இன்று.


கேரளத்தைச் சார்ந்த திரு உன்னிகிருஷ்ணன் தனது வேலை நிமித்தமாக பெங்களூர் நகருக்கு குடியேறுகிறார். அவர் மனைவி திருமதி தனலக்ஷ்மி. இந்தத் தம்பதியரின் மகனாக 1977ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் பிறந்தவர் சந்தீப். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ராணுவத்தில்தான் பணியாற்றவேண்டும் என்ற ஆசை சந்தீப்புக்கு துளிர் விடுகிறது. தேசிய பாதுகாப்பு நிலையத்தில் இணைந்து தனது இளங்கலை படிப்பை மேற்கொள்கிறார். படிப்பு முடிந்தபின்பு பாரத ராணுவத்தின் பிஹார் படைப் பிரிவில் பிரிகேடியர் பதவியில் சேர்கிறார். பணியின் நிமித்தமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தனது திறமையை நிரூபித்துக் காட்டினார் சந்தீப்.

அதனைத் தொடர்ந்து பாரத ராணுவத்தின் சிறப்பு மிக்க தேசிய பாதுகாப்பு அணியில் ( National Security Guards ) தனது சேவையைத் தொடர்கிறார் சந்தீப். சிறிது காலத்திலேயே அந்த அணியின் அதிரடிப் படையில் சேருமாறு சந்தீப்புக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. கார்கில் போரில் மிகச் சிறிய அணியைத் தலைமையேற்று முக்கியமான ராணுவ தளங்களை நாட்டுக்காக மீட்டுத் தந்தார்.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள் ஒரே நேரத்தில் மும்பை நகரின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கினார்கள். ஓப்ராய் மற்றும் தாஜ் ஹோட்டல்களில் புகுந்த தீவிரவாதிகள் அங்கே தங்கியுள்ள பயணிகளை பயணக்கைதியாக வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். அங்கே இருந்து தீவிரவாதிகளை உயிரோடு அல்லது பிணமாகவோ அகற்றி, பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆணை சந்தீப்புக்கு அளிக்கப்படுகிறது. பத்து அதிரடிப்படை வீரர்களோடு டெல்லியில் இருந்து மும்பைக்கு விரைகிறது அதிரடிப்படை.

எந்த தளத்தில், எந்த அறையில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பது தெரியாது. எனவே ஒவ்வொரு அறையாக கைப்பற்றவேண்டும். எந்த ஒரு அறையிலும் பயணியாக வந்த பொதுமக்களில் யாராவது இருக்கலாம், தீவிரவாதி இருக்கலாம், அல்லது தீவிரவாதி பொதுமக்களோடு இருக்கலாம், அல்லது அந்த அறையே காலியாக ஆளே இல்லாமல் இருக்கலாம். இப்படி ஒரு தளத்தை கைப்பற்றியபின், அங்கே மீண்டும் தீவிரவாதிகள் வந்து விடாமல் இருக்க அதிரடிப்படையின் வீரர்கள் காவல் இருக்க வேண்டும். குறைந்த படையோடு அடுத்த தளத்தை கைப்பற்றவேண்டும். இப்படி ஒவ்வொரு அறையாக, ஒவ்வொரு தளமாக கைப்பற்றி காக்கவேண்டும். நினைக்கவே சங்கடமான வேலை இது. இதனை பாரதத்தின் அதிரடிப்படை வெற்றிகரமாக செய்து காட்டியது. உலகத்தின் பல்வேறு ராணுவங்கள் இந்த அனுபவத்தை, வெற்றியை தங்கள் பாடத் திட்டத்தில் ஒரு பகுதியாக வைத்துள்ளன என்றால், இந்த வேலையின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த கடினமான செயலை பத்து வீரர்களோடு முன்னெடுத்தவர் மேஜர் சந்தீப். மூன்றாவது தளத்தில் ஒரு அறையில் சில பெண் பயணிகளோடு தீவிரவாதி இருக்கலாம் என்று கணித்து, சுனில் யாதவ் என்ற அதிரடிப்படை வீரர் அந்த அறையின் கதவை உடைத்துத் திறந்தார். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுனில் யாதவ் காயமடைந்தார். தனது சகாவை காப்பாற்றி அந்த இடத்தில இருந்து அப்புறப்படுத்த சந்தீப் உன்னிகிருஷ்ணன் தீவிரவாதிமீதான தாக்குதலைத் தொடர்ந்தார். அந்த சண்டையில் துப்பாக்கி குண்டு பட்டு மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதானியானார்.

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் உடல் பெங்களூர் நகருக்கு கொண்டு வரப்பட்டது. ஆயிரமாயிரம் மக்கள் அந்த வீரருக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவிக்க அவர் வீட்டுக்கு வந்தார்கள். முழு ராணுவ மரியாதையோடு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

பெங்களூர் நகரின் முக்கியமான சாலைக்கு மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ராமமூர்த்தி நகர் பகுதியில் அவரது மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அமைதிகாலத்தில் அளிக்கப்படும் மிக உயரிய ராணுவ விருதான அசோக சக்ரா விருது அவருக்கு மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்டது.

மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம்தனிலே நிலைக்கின்றார் என்ற வரிகளுக்கு ஏற்ப மக்கள் மனதில் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நாட்டைக் காக்க இன்னும் ஆயிரமாயிரம் உன்னி கிருஷ்ணன்கள் வருவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

வியாழன், 27 நவம்பர், 2025

நவம்பர் 27 - நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் கணேஷ் மாவலங்கர் பிறந்தநாள்

தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், கல்வியாளர், பாராளுமன்றவாதி என்ற பல்முக ஆளுமையாகத் திகழ்ந்த கணேஷ் வாசுதேவ மாவலங்கரின் பிறந்தநாள் இன்று.


மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தைச் சார்ந்த மாவலங்கர் 1888 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் பரோடா நகரில் நாள் பிறந்தவர். தனது ஆரம்ப கல்வியை அன்றய பம்பாய் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முடித்த மாவலங்கர் மேற்படிப்புக்காக இன்றய குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் நகருக்கு குடிபெயர்ந்தார். 1908ஆம் ஆண்டு குஜராத் கல்லூரியில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தைப் பெற்று அதனைத் தொடர்ந்து 1912ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். அதனைத் தொடர்ந்து அஹமதாபாத் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

அந்த காலகட்டத்தில் நாட்டில் சூறாவளியாக வீசிக்கொண்டு இருந்த சுதந்திர வேட்கை மாவலங்கரையும் பற்றிக் கொண்டது.  குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்ததால், காந்தி, வல்லபாய் படேல் ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டது. அஹமதாபாத் நகராட்சியின் உறுப்பினராக 1919ஆம் ஆண்டு தேர்வானார். 1919 - 1922, 1925 - 1928, 1930 - 1933, 1934 - 1937  ஆகிய காலகட்டத்திலும் அவர் அஹமதாபாத் நகராட்சியின் உறுப்பினராக பணியாற்றினார்.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும் மாவலங்கர் நியமிக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டதால் குஜராத் மாநிலத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாவலங்கர் அறியப்படலானார். பல்வேறு  போராட்டங்களில் கலந்து கொண்டு ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

1934ஆம் ஆண்டு பம்பாய் மாநிலத்தின் சட்டசபைக்கு தேர்வான மாவலங்கர் 1937 ஆம் ஆண்டு பம்பாய் சட்டசபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உருவான அரசியல் சாசன சபையின் சபாநாயகராகவும் அவர் பணியாற்றினார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுதேர்தலில் அஹமதாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மாவலங்கர் முதல் நாடாளுமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றிகரமான வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் தகுதியான பாராளுமன்றவாதியாகவும் இருந்த மாவலங்கர், குஜராத் மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றினார். அஹமதாபாத் கல்விச் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரான இவர், அதன் தலைவராகவும் இருந்தார். குஜராத் வித்யாபீடத்தின் சட்டதுறை பேராசிரியராக பணியாற்றனார். குஜராத் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக இருந்தார். காந்தியோடு தனது அனுபவங்கள், சிறையில் தான் சந்தித்த பல்வேறு கைதிகள் பற்றி, தனது வழக்கறிஞர் வாழ்க்கையைப் பற்றி என்று பல்வேறு புத்தகங்களையும் மாவலங்கர் எழுதி உள்ளார்.

1956ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் அவதிப்பட்ட மாவலங்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1946ஆம் ஆண்டில் இருந்து தற்காலிக நாடாளுமன்றம், அரசியலமைப்பு சபை, சுதந்திர பாரதத்தின் முதல் நாடாளுமன்றம் ஆகியவற்றை பத்தாண்டுகள் வழிநடத்திய கணேஷ் வாசுதேவ மாவலங்கர் 1956ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் காலமானார். எத்தனையோ பிரச்சனைகள் இருந்தும் ஜனநாயக வழியில் பாரதம் நடைபோடுகிறது என்றால் அது மாவலங்கர் போன்ற அறிஞர்கள் அமைத்துக் கொடுத்த அடிப்படைகளே காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம். 

புதன், 26 நவம்பர், 2025

நவம்பர் 26 - பாரதத்தின் பால்காரர் - வர்கீஸ் குரியன்

எனக்கும் ஒரு கனவு இருந்தது - அந்த மனிதரின் சுயசரித்திரத்தின் பெயர் இதுதான். ஆனால் அவருக்கு சிறுவயதில் இருந்த கனவு அல்ல அது. வேண்டா வெறுப்பாக ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு, பாஷை தெரியாத ஒரு குக்கிராமத்தில் தனது பயணத்தைக் தொடங்கி, ஆனால் இந்த தர்மக்ஷேத்திரத்தை தனது குருஷேத்திரமாக ஏற்றுக் கொண்டு, அந்த மக்களின் வாழ்க்கைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தனி மனிதரின் கதை அது. தனி மனிதனாக ஒரு பெரும் வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கி, ஆனாலும் அதில் தான் ஒரு வேலையாள் மட்டும்தான், நான் இதற்கு உரிமையாளன் அல்ல இது எனது சுதர்மம் என்ற மனப்பாங்கோடு கீதை காட்டிய வழியில் நடந்த மனிதரின் கதை. 


கேரளாவைச் சார்ந்த சிரியன் கிருஸ்துவ குடும்பத்தில் 1921ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் பிறந்தவர் வர்கீஸ் குரியன். அவரது தந்தை ஒரு மருத்துவர், தாயாரும் கல்வி கற்றவர். தந்தை பணிபுரிந்த கோபிச்செட்டி பாளையத்தில் பள்ளி கல்வியையும், அதனைத் தொடர்ந்து சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டத்தையும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பட்டத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து சிறிது காலம் டாடா குழுமத்தில் பணி புரிந்தார். 

இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த சமயம் அது, நாடு வெகு விரைவில் சுதந்திரம் அடைந்து விடும் என்ற நம்பிக்கை எல்லா இடங்களிலும் பிரகாசமாக இருந்தது, பொருளாதாரரீதியாக இரண்டு நூறாண்டுகளாக சுரண்டப்பட்டு இருந்த தேசத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும், அதற்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்த இளைஞர் பட்டாளம் தேவை என்பதால் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று படித்து நாட்டுக்கு தனது திறமையை அர்ப்பணம் செய்யத் தயாராக உள்ள இளைஞர்களை கண்டறிந்து அவர்களின் கல்விக்கான பொருளாதார உதவியை அரசு செய்ய முடிவெடுத்தது. அதில் தேர்வான குழுவில் வர்கீஸ் குரியனும் ஒருவர். பால் பதனிடும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வருமாறு அரசு அவருக்கு உதவித்தொகை அளித்தது. ஆனால் குரியன் உலோகவியலும், அணு அறிவியலையும் கற்றுத் தேர்ந்தார். கூடவே பால் பதனிடும் நுட்பத்தையும் கற்றுக் கொண்டார். நாடு திரும்பிய குரியனை குஜராத் மாநிலத்தின் கைரா  மாவட்டத்தின் ஆனந்த் என்ற ஒரு சிறு கிராமத்தில் பணியாற்ற அரசு பணித்தது. வேண்டா வெறுப்பாக அந்த வேலையை  ஏற்றுக்கொண்டார். எப்போது அந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குப் போகலாம் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தார். 

காலம் குரியனுக்கு வேறு ஒரு பாதையை தீர்மானித்து வைத்திருந்தது. தேசபக்தரும் கூட்டுறவு இயக்கத்தில் பெரும் நம்பிக்கை கொண்ட திரிபவன்தாஸ் படேல் என்பவரின் அறிமுகம் குரியனுக்கு கிடைத்தது. பால் வியாபாரம் செய்யும் பலர் ஏழ்மை நிலையில் இருப்பது குரியனின் மனதைப் பாதித்தது. அவர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று அவர் முடிவு செய்தார். அன்று தொடங்கிய அவரது பயணம் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அந்த மக்களோடு தொடர்ந்தது. பல லட்சம் ஏழை விவசாயிகளின் பொருளாதார நிலைமையை முன்னேற்றி, பாரத நாட்டை பால் உற்பத்தியில் உலகின் முக்கியமான  நாடாக மாற்றி, பெரும் நிறுவனங்களை உருவாக்கி என்று அவரின் வாழ்க்கையே பலருக்கு உதாரணமாகத் திகழ்கிறது. 

ஆண்டில் எல்லா நாட்களிலும் ஒரே அளவில் பால் கிடைப்பது இல்லை. அதிகமாக பால் கிடைக்கும் நேரங்களில் அதை விற்க முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்தனர். இதனை மாற்ற கூட்டுறவு முறையில் பாலை வாங்கி அதனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முறையை குரியன் அறிமுகம் செய்தார். பால் மீதமாகும் நேரங்களில் அதனை பால் பவுடராக மற்றும் நுட்பத்தை குரியன் அறிமுகம் செய்தார். அதுவும் எருமைப்பாலில் இருந்து பால் பவுடர் தயாரிக்கும் நுட்பம் என்பது அதுவரை உலகில் எங்கும் இல்லாத ஓன்று. பிரச்சனைக்கு தீர்வுகளை சமுதாயத்தோடு இணைந்த தொழில்நுட்பதின் மூலம் கண்டறியும் குரியனின் செயல்திறனால் குஜராத்தில் உள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உருவானது. 

ஆனந்த் பகுதியில் குரியன் செயல்படுத்திய முறையை நாடு முழுவதும் முன்னெடுக்க அரசு அவரைக் கேட்டுக்கொண்டது. வெண்மைப் புரட்சி என்ற பெயரில் நாடு முழுவதும் பால் உற்பத்தியைப் பேருக்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. தட்டுப்பாடு என்ற நிலைமையில் இருந்து பால் பொருள்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பால் உற்பத்தியை அவர் அதிகப்படுத்தினார். அதோடு இணைந்து பல்வேறு நிறுவனங்களை குரியன் உருவாக்கினார். குஜராத் பால் உற்பத்தியார்கள் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு ( Gujarat Cooperative Milk Manufacturer Federation ), தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ( National Dairy Development Board ) என்று பால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும்,  அதோடு இணைந்து அறிவியல் முறையில் தொழில்நுட்பத்தை இணைந்து கிராம முன்னேற்றத்திற்காக மேலாண்மை கல்லூரியையும்  கிராம மேலாண்மை நிறுவனம் ( Institute of Rural Management - Anand ) அவர் உருவாக்கினார். 

எல்லாக் காலத்திலும் பால் உற்பத்தியாளர்கள்தான் இந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள், தான் வேலைக்காரன் மட்டும்தான் என்ற எண்ணத்தில் இருந்து குரியன் மாறவே இல்லை. குரியனின் சேவைக்கு பல்வேறு இடங்களில் இருந்து அங்கீகாரம் வந்து சேர்ந்தது. 1965ஆம் ஆண்டு  பத்மஸ்ரீ, 1966ஆம் ஆண்டு பத்மபூஷன் அதனைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை பாரத அரசு அளித்தது. 1963ஆம் ஆண்டு மகாசாய் விருது, 1986ஆம் ஆண்டு க்ரிஷி ரத்னா ஆகிய விருதுகள் அவரை வந்தடைந்தன. ஆனால் இவை அனைத்தையும் விட அவருக்கு நெருக்கமாக இருந்தது மக்கள் அவருக்கு அளித்த பாரத நாட்டின் பால்காரர் - Milkman of India - என்ற பட்டம்தான். 

வாழ்க்கையில் பாலே குடிக்காத அந்த தேசத்தின் பால்காரர் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் காலமானார். வாழ்க்கை முழுவதும் ஆனந்த் கிராமத்திலேயே வாழ்ந்து அந்த  மக்களுக்காகவே யோசித்த குரியனின் இறுதிச் சடங்குகள் அதே பால் உற்பத்தியாளர்கள் கூடி நிற்க ஆனந்த் கிராமத்திலேயே நடந்தது. தனி ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்யலாம் என்று யாராவது கேட்டால் அதன் பதில் வர்கீஸ் குரியனின் வாழ்க்கையில் இருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம். 

செவ்வாய், 25 நவம்பர், 2025

நவம்பர் 24 - தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்கடே பிறந்ததினம்

கன்னட மாநிலத்தின் தெற்குப் பகுதியில் மங்களூர் நகருக்கு 75 கிலோமீட்டர் தொலைவில் நேத்ராவதி நதியின் கரையில் அமைந்துள்ள சிறு நகரம் தர்மசலா. மஞ்சுநாத ஸ்வாமி என்ற பெயரில் சிவபெருமான் குடிகொண்டு இருக்கும் நகரம் அது. அந்த கோவிலின் பரம்பரை அறங்காவலராக, தர்மாதிகாரியாக எட்டு நூறாண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வரும் சமண சமயத்தைச் சார்ந்த  பெர்கடே குடும்பத்தின் வாரிசாக ஹெக்கடே என்ற பட்டதோடு இருபத்தியோராம் தர்மாதிகாரியாக இருக்கும் திரு வீரேந்திர ஹெக்கடே அவர்களின் பிறந்ததினம் இன்று.


திரு ரத்னவர்ம ஹெக்கடே -  திருமதி ரத்னம்மா ஹெக்கடே தம்பதியரின் முதல் மகனாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் பிறந்தவர் திரு வீரேந்திரா. தந்தையின் மறைவுக்குப் பிறகு  தர்மசாலாவில் இருபத்தியோராம் தர்மாதிகாரியாக 1968ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் திரு வீரேந்திரா நியமிக்கப்பட்டார். அது முதல் அவர் வீரேந்திர ஹெக்கடே என்று அழைக்கப்படத் தொடங்கினார்.

தர்மத்தின் இருப்பிடத்தின் அதிகாரி என்பதால், பெர்கடே குடும்பத்தினர் பசியில் இருந்து, பிணையில் இருந்து, பயத்தில் இருந்து அறியாமையில் இருந்து விடுதலை என்ற சேவையை எட்டு நூற்றாண்டுகளாகச் செய்து வருகின்றனர். மாறிவரும் சமுதாயத்தின் தேவைங்களை இனம் கண்டு வீரேந்திர ஹெக்கடே இந்த சேவைகளை கடந்த ஐம்பதாண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்.

மஞ்சுநாத ஸ்வாமி கோவிலுக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது. கேரள மற்றும் கர்நாகத்தில் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் இயல்பான ஒன்றுதான் இது. ஆனால் முழுவதும் மரபு சாரா எரிசக்தியைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பதிலும், உணவு பரிமாறப்படும் இலைகள் முதல் அனைத்து உணவுப் பொருள்களையும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உருவாக்குவதிலும் தர்மசாலா கோவில் தனித்து விளங்குகிறது. வீரேந்திர ஹெக்கடே பொறுப்புக்கு வந்த பிறகு பக்தர்கள் உணவருந்த பிரமாண்டமான உணவுக்கூடத்தை உருவாக்கினார். நாள் ஒன்றுக்கு சராசரியாக முப்பதாயிரம் பக்தர்களும் பண்டிகை தினங்களில் எழுபதாயிரம் பக்தர்களும் இங்கே உணவு உண்கிறார்கள்.

கர்நாடகத்தின் தெற்குப் பகுதி என்பது மலைப் பிரதேசம். அங்கிருந்து மருத்துவ உதவிக்காக நகரங்களுக்குச் செல்ல முடியாத கிராமவாசிகளுக்காக வீரேந்திர ஹெக்கடே நடமாடும் மருத்துவமனைகளை அமைத்துள்ளார். தேவையான மருந்து மற்றும் உபகாரணங்களோடு மருத்துவர்கள் கிராமப்புற மக்களைத் தேடிச் சென்று சேவை புரிகின்றனர். தர்மசாலாவில் அருகில் உள்ள உஜிரி  நகரில் 100 படுக்கை கொண்ட மருத்துவமனை, மங்களூர்  நகரில் கண்மருத்துவமனை, தார்வாத் நகரில் ஒரு பல் மருத்துவமனை மற்றும் 400 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தனி கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அழிப்பது என்று மருத்துவத் துறையிலும் ஹெக்கடேயின் சேவை மகத்தானது.

மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களையும் ஹெக்கடே தொடங்கி உள்ளார். ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள், கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டப் படிப்பு, மருத்துவம், மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் உயர் கல்விக்கான நிறுவனங்களை ஹெக்கடே நடத்தி வருகிறார்.

பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற முன்னேற்றம், கிராமப்புற சுயசார்பு, கைத்தொழில் வளர்ச்சி,  நலிவடைந்த கோவில்களை சீரமைப்பு செய்தல் என்று பல்வேறு துறைகளில் வீரேந்திர ஹெக்கடே செயலாற்றி வருகிறார். இது போக பல்வேறு வழக்குகளைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகவும் அவர் உள்ளார். அவரது தீர்ப்பை பொதுவாக மக்கள் மீறுவது இல்லை.

பலனில் பற்று வைக்காமல் கடமையை கடமைக்காகவே செய் என்று கீதை கூறுகிறது. எந்த செயலுக்கும் அதற்கான பலன் வந்தே சேரும் ஆனால் பலனுக்காகவே செயல் செய்வது தவறு என்பது கீதை காட்டும் பாதை. நீண்ட காலம் சமுதாய சேவையை தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட வீரேந்திர ஹெக்கடே அவர்களுக்கு பல்வேறு பட்டங்களும் விருதுகளும் தானாகவே வந்து சேர்ந்தது. 2009ஆம் ஆண்டு  கர்நாடக அரசு அவருக்கு கர்நாடக ரத்னா என்ற விருதை வழங்கியது. பாரத அரசு 2000ஆம் ஆண்டில்  பத்ம பூஷன் விருதையும் பின்னர் 2015ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது மதிப்பு மிக்க விருதான பத்மவிபூஷண் விருதையும் வழங்கி அவரை சிறப்பித்தது.

அறம் காக்க அறம் நம்மைக் காக்கும் என்ற மொழிக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் திரு வீரேந்திர ஹெக்கடே அவர்களுக்கு  ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
வீரேந்திர ஹெக்கடேயின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக என்றும் இருக்கும். 

திங்கள், 24 நவம்பர், 2025

நவம்பர் 24 - குரு தேஜ் பகதூர் பலிதானதினம்

சீக்கியர்களின் குரு பரம்பரையின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூரின் பலிதான தினம் இன்று. தர்மத்தின் வழி நிற்பதா இல்லை மரணத்தைத் தழுவுவதா என்ற கேள்வி எழுந்த போது, அழியும் உடலுக்காக அழியாத தர்மத்தை விடக்கூடாது என்று செயலில் காட்டியவர் குரு தேஜ்பகதூர்.


சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் அவர்களின் மகனாக 1621ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள் அமிர்தசர் நகரில் பிறந்தவர் குரு தேஜ் பகதூர். இவரின் இயற்பெயர் தியாகாமால் என்பதாகும். தேஜ் பகதூர் என்ற பெயருக்கு வாள் சண்டையில் விற்பன்னர் என்று பொருள். இவரது வீரத்தினால் குரு இந்தப் பெயரில் அறியப்பட்டார். அன்று அமிர்தசர் நகரம் சீக்கியர்களின் அறிவிக்கப்படாத தலைநகரமாக விளங்கியது. சீக்கிய குருமார்களின் இருப்பிடமாக அது இருந்தது, குதிரையேற்றத்திலும், பல்வேறு தற்காப்பு பயிற்சியிலும் சிறந்து விளங்கிய தேஜ் பகதூர் வேதங்களையும் உபநிஷதங்களையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்திருந்தார். மாதா குஜிரி என்பவரை குரு திருமணம் செய்திருந்தார்.

தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் குரு ஹர்கோவிந்த் அம்ரித்சர் நகரின் அருகில் உள்ள பக்கலா என்ற சிறுநகருக்கு  குடிபெயர்ந்தார். தேஜ் பகதூரும் அங்கேயே வசிக்கத் தொடங்கினார். குரு ஹர் ராய், குரு ஹர் கிருஷ்ணன் ஆகியோரைத்  தொடந்து சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக குரு தேஜ்பகதூர் 1664ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

பெரும் வீரராக மட்டுமல்லாது குரு தேஜ் பகதூர் சிறந்த கவிஞராகவும், தத்துவ ஞானியாகவும் விளங்கினார். வட இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்து சீக்கிய தர்மத்தைப் பரப்பவும், பல்வேறு மக்களை நல்வழிப் படுத்தவும் என்று அவர் செயலாற்றிக்கொண்டு இருந்தார். அவரது முயற்சியால் பல்வேறு இடங்களில் சீக்கியர்கள் குடிநீர் குளங்களை அமைத்தும் லங்கர் என்று அழைக்கப்படும் இலவச உணவு வழங்கும் நிலையங்களையும் அமைத்தனர். கிழக்கே அசாம் முதல் மத்திய பாரதத்தில் பிலாஸ்பூர், மேற்கே வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் வடக்கே காஷ்மீர் என்று பல்வேறு இடங்களுக்கு குரு விஜயம் செய்தார். மதுரா, ஆக்ரா வாரணாசி என்று பல்வேறு நகரங்களுக்கு சென்று குரு தர்மப் பிரச்சாரம் செய்து வந்தார். பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரமாக விளங்கும் அனந்தபூர் சாஹிப் நகரம் குரு தேஜ் பகதூர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த  சாஹிப்பில் குரு தேஜ் பகதூர் இயற்றிய எழுநூற்று எண்பதுக்கும் மேலான பிரார்த்தனை பாடல்கள் இடம்பெற்று உள்ளன.

சீக்கிய குருமார்களின் காலம் பாரத நாட்டில் முகலாய அரசு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலம். ஹிந்து தர்மத்தின் ஒரு பகுதியாகத்தான் குரு நானக் முதல் குரு தேஜ் பகதூர் வரை சீக்கிய நம்பிக்கைகளை வடிவமைத்துக் கொண்டு இருந்தனர். ஆலயங்களை அழிப்பதும், பசுக்களை கொல்வதும், உருவ வழிபாட்டை  தடை செய்வதும், மக்களை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றுவதும் என்று பல்வேறு முகலாய அரசர்கள் ஈடுபட்டு வந்தனர். அதிலும் அவுரங்கசீப் காலத்தில் இந்த கொடுமைகள் அளவே இல்லாமல் இருந்தது. காஷ்மீரத்தில் உள்ள பண்டிதர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்ற அரசு நெருக்கடி கொடுத்தது. குரு தேஜ் பகதூரிடம் காஷ்மீர  பண்டிதர்கள் அடைக்கலம் நாடி வந்தனர். குரு தேஜ் பகதூரை  மதமாற்ற முடிந்தால் மற்றவர்களும் மாறுவார்கள் என்று குரு முகலாய அரசுக்கு பதில் அனுப்பினார்.

முகலாய அரண்மனைக்கு வருமாறு ஆணை பிறந்தது. எது நடக்கும் என்று உணர்ந்த குரு தேஜ் பகதூர் ஒன்பது வயதான தனது மகன் கோவிந்தசிம்மனை பத்தாவது குருவாக நியமித்து விட்டு டெல்லிக்கு பயணமானார். அவரோடு பாய் சதிதாஸ், பாய் மதிதாஸ், பாய் தயாள்தாஸ் ஆகியோரும் இணைந்து கொண்டனர். 1675ஆம் ஆண்டு 12 ஆம் நாள் டெல்லிக்கு அருகே குருவும் அவரது நண்பர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த அவர்கள் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளானார்கள். பாய் சதிதாஸ் உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். பாய் மதிதாஸ் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார். பாய் தயாள்தாஸ் கொதிக்கும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த குரு பார்க்கும் வகையில் நடந்தது. இறுதியாக இஸ்லாம் மதத்திற்கு மாறினால் விடுதலை செய்யப்படுவீர்கள் என்று குருவிற்கு சொல்லப்பட்டது. தர்மத்தை கைவிடுவதைக் காட்டிலும் உயிரை விடுவது மேல் என்று குரு பதிலளிக்க, குருவின் தலையை வெட்டி அவரை கொலை செய்தனர் முகலாயர்கள்.

குரு அர்ஜான்சிங்கின் பலிதானம் சீக்கியர்களை ஒன்றிணைத்தது. குரு தேஜ் பகதூரின் பலிதானம் சீக்கியர்களை  இறுதிவரை தனிமனிதர்களின் வழிபாடு உரிமைக்கு போராடும் இனமாக மாற்றியது. குரு தேஜ் பகதூரின் மகனும் சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்தசிம்மன் போராட்ட குணமுடைய இனமாக சீக்கிய இனத்தை வார்த்தெடுத்தார். குரு தேஜ் பகதூரின் பலிதானத்தைத் தொடர்ந்து பல காஷ்மீர பண்டிதர்கள் சீக்கியர்களாக மாறி, கல்சா அமைப்பில் இணைந்து இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள்.

வெறும் உபதேசங்களால் அல்லாது உதாரணத்தால் வாழ்ந்து காட்டிய குருவின் வாழ்வும் பலிதானமும் நம்மை வழிநடத்தட்டும்.