செவ்வாய், 6 ஜனவரி, 2026

ஜனவரி 6 - கௌரவ கேப்டன் பானாசிங் பிறந்ததினம்

காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயம் செய்து வரும் அந்த முதியவர் வருடம் தோறும் ஜனவரி மாதம் தனது ராணுவ உடுப்புகளைகளையும் தான் பெற்ற விருதுகளையும் நெஞ்சில் தரித்துக் கொண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில் கலந்துகொண்டு குடியரசுத் தலைவருக்கு ராணுவ முறைப்படி வணக்கம் வைத்து மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்புவது வழக்கம். 

அந்த எளிய மனிதரின் பெயர் பானாசிங். வீர சாகசச் செயலுக்காக பாரத ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றவர் அவர். அந்த வீரரின் பிறந்ததினம் இன்று.  பானாசிங் சீக்கிய சமயத்தைச் சார்ந்தவர். அவரது குடும்பம் காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்தது. 1949ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் பிறந்த பானாசிங், தனது இருபதாம் வயதில் பாரத ராணுவத்தில் காஷ்மீர் படைப்பிரிவில்  தன்னை இணைத்துக்கொண்டார். இமயமலைப் பகுதிகளைக் காப்பாற்ற நடைபெறும் போர்களில் பங்குகொள்ளும் வீரர்களைத் தயார்படுத்தும் சிறப்பு பயிற்சி இவருக்கு அளிக்கப்பட்டது. 

ஆப்கானிஸ்தான் தஜகிஸ்தானில் தொடங்கி பாகிஸ்தான் வழியாக பாரதநாட்டைக் கடந்து சீனா வரை ஏறத்தாழ ஐநூறு கிலோமீட்டர் அளவிலான  மலைத்தொடர் காரகோரம் மலைத்தொடர். துருவப்பகுதிகளுக்கு வெளியே பனிப்பாறைகள் அமைந்துள்ள இடம் இது. உடலை உருகவைக்கும் குளிர் பிரதேசமான இந்த மலைத்தொடரில் கடல்மட்டத்தில் இருந்து 18.875 அடி உயரத்தில் அமைந்துள்ளது  சியாச்சின் பகுதி. 

சியாச்சின் என்பது ஒரு தனி உலகம். அங்கே செல்லாதவர்களுக்கு அதன் அழகையோ  அல்லது அதனை காத்து நிற்கும் வீரர்கள் படும் துன்பங்களையோ புரிந்துகொள்ள முடியாது. உலகத்தின் கூரையாக பார்க்கும் இடங்களில் எல்லாம்  பனிப்பாறைகளும் பனிக்கட்டிகளும் நிறைந்திருக்கும் இடம் அது. கொஞ்சும் அழகோடு கவனமாக இல்லாவிட்டால் உயிரைப் பறிக்கும் அபாயகரமான இடம் அது.  பூஜ்யத்திற்கு கீழே நாற்பது  டிகிரி செல்சியஸ் குளிரும், அதோடு நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் உறைய வைக்கும் குளிர் காற்றும் வீசும் இடம் இது. 

இங்கே போரில் இறந்தவர்களை விட உறைய வைக்கும்  குளிரால், கடினமான காலநிலையால் மலைச்சரிவால் பனிப்பொழிவால்  என்று இயற்கைப் பேரிடர்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். உலகின் மிக உயரமான இந்தப் பகுதியைக் கைப்பற்றவும், காப்பாற்றித் தக்கவைக்கவும் பல பாரத வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இடமும் இதுதான். உலகின் மிக உயரமான மற்றும் கடினமான போர்க்களம் இது. 

1987ஆம் ஆண்டு நடைபெற்ற  ஊடுருவல் மூலம் பாகிஸ்தான் சால்டோரா மலைத்தொடரில் பிலாபோண்ட் கணவாய் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை உருவாக்கியது.  அதற்கு காயித் இ ஆசம் தளம் என்று பெயர் சூட்டியது. காயித் இ ஆசம் என்ற பெயர் பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னாவின் பெயர். இங்கிருந்து பாகிஸ்தான் படைகளால் பாரதத்தின் பாதுகாப்பு நிலையங்களையும், ராணுவ ஹெலிகாப்டர்கள் வருவதையும் கண்காணிக்க முடியும். மலை உச்சியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பாரத ராணுவத் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுக்கத் தொடங்கியது. தரைமட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் இந்தப் பகுதி உள்ளது. 457 மீட்டர் உயரமுள்ள பனிப்பாறைகள் இதனைச் சுற்றி உள்ளது. ஏறக்குறைய செங்குத்தான பாறைகள் இவை. மேலே உள்ள எதிரியை கண்களில் படமால் இங்கே வந்து சேர்வது என்பது நடக்கவே முடியாத ஓன்று. எதிரிப் படைகளை அங்கே இருந்து அகற்றி, அந்தத் தளத்தைக் கைப்பற்றாமல் விட்டால் காஷ்மீரின் பல இடங்களை பாரதம் இழக்க வேண்டியிருக்கும். ஆனால் இந்தத் தாக்குதல் என்பது அநேகமாக மரணத்தைத் எதிர்கொள்வதாதான் இருக்கும். ஆனால் இந்த சவாலை பாரத ராணுவம் எதிர்கொண்டது.

 1987ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் காலாள்படைப் பிரிவைச் சார்ந்த செகண்ட் லெப்ட்டினென்ட் ராஜிவ் பாண்டே தலைமையில் எட்டு வீரர்கள் கொண்ட படை பனிமலையில் எறத் தொடங்கியது. ஆபரேஷன் மேகதூத் என்று இந்தத் தாக்குதலுக்குப் பெயரிடப்பட்டது. மலையுச்சியை அடைவதற்கு முப்பது மீட்டரே இருக்கும்போது அவர்களை பாகிஸ்தான் படை கண்டுகொண்டு துப்பாக்கியால் சுடச் தொடங்கியது. அதில் ராஜிவ் பண்டேயும் ஐந்து வீரர்களும் வீரமரணம் அடைந்தார்கள். ராஜிவ் பாண்டேவுக்கு வீர் சக்ரா விருது வழங்கி நாடு மரியாதை செலுத்தியது. 

காயித் இ ஆசாம் தளத்தைக் கைப்பற்றவும் ராஜிவ் பாண்டே மற்றும் அவரது அணியின் வீர மரணத்திற்குப் பழி வாங்கவும் அடுத்த தாக்குதலை நடத்த பாரத ராணுவம் தயாரானது. இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் ராஜிவ் என்று பெயர் சூட்டப்பட்டது. மேஜர் வரீன்தர்சிங் இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். கேப்டன் அணில்சர்மா உள்ளிட்ட அறுபத்தி இரண்டு வீரர்கள் இந்தத் தாக்குதலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

இரண்டு முறை முயற்சி செய்தும் அவை வெற்றியாடாததால் ஒரு இறுதித் தாக்குதலை நடத்த வரீன்தர்சிங் முடிவு செய்தார். எட்டு வீரர்களது வரீன்தர்சிங் ஒரு பக்கத்தில் இருந்தும் ஐந்து பேர் கொண்ட படையோடு மறுபக்கமாக பானாசிங் தலைமையில் மற்றொரு படையும் மலை ஏறவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

நீண்ட கடினமான பாதையின் வழியாக மலையுச்சியை சென்றடைய பானாசிங் முடிவு செய்தார். இருளைப் பயன்படுத்தி செங்குத்தான மலையை பானாசிங் படை சென்றடைந்தது. பதுங்குகுழியில் இருந்த பாகிஸ்தான் ராணுவவீரர்கள்மீது கையெறிகுண்டை எறிந்து  அதோடு அந்தக் குழியின் கதவையும் பூட்டி அவர்களை பானாசிங் அழித்தொழித்தார். மீதி இருந்த பாகிஸ்தான் வீரர்களோடு நேருக்குநேரான சண்டையில் மீதம் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். இமயத்தின் உச்சியில் மீண்டும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது. 

காயித் இ ஆசம் முனைக்கு பானாசிங் முனை என்று பெயரிட்டு அந்த வீரனை பாரத ராணுவம் மரியாதை செலுத்தியது. மிகவும் கடினமான சூழ்நிலையில் தலைமைப் பண்பையும் மகத்தான வீரத்தையும் வெளிப்படுத்தியதற்காக பானாசிங்கிற்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஆபரேஷன் ராஜீவில் பங்குகொண்ட வீரர்களுக்கு  ஒரு பரம்வீர் சக்ரா, ஒரு மஹாவீர் சக்ரா, ஏழு வீர் சக்ரா, ஒரு சேனா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. 

முப்பதாண்டு ராணுவ சேவைக்குப் பிறகு பானாசிங் 2000ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு கௌரவ கேப்டன் பதவி கொடுத்து ராணுவம் மரியாதை செய்தது. பானாசிங்கின் மகன் ராஜிந்தர்சிங்கும் 2008ஆம் ஆண்டு முதல் பாரத ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக