புதன், 13 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 13 - பெண்மையின் சக்தி காமா அம்மையாரின் நினைவுதினம் -

இந்திய விடுதலை வேள்விக்கு ஆண்கள் மட்டுமல்ல ஏராளமான பெண்களும் ஆகுதியானார்கள். அதில் முக்கியமானவர் காமா அம்மையார். இந்திய மண்ணுக்கு வெளியே சுதந்திரக் கனலை பாதுகாத்தவர் அவர்.

1861ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் மும்பையைச் சார்ந்த பார்சி வகுப்பைச் சார்ந்த சொரப் பிரேம்ஜி படேல் என்பவரின் மகளாகப் பிறந்தவர் காமா அம்மையார். 1885ஆம் ஆண்டு ருஸ்தம் காமா என்ற வழக்கறிஞரை இவர் மணந்தார். ருஸ்தம் காமா ஆங்கிலேயர்களோடு இணைந்து அதன் மூலம் செல்வாக்கு பெறவேண்டும் என்று எண்ணியவர். ஆனால் காமா அம்மையாரே ஆங்கில ஆட்சியை அகற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர். அதனால் இவர்களது மணவாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை.



1896ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சமும் உடனடியாக அதனைத் தொடர்ந்து பிளேக் நோயும் மும்பையைத் தாக்கியது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் குழுவில் காமா அம்மையாரும் தன்னை இணைத்துக் கொண்டார். அதனால் அவரும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்காக 1902ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார்.

மண் மாறினாலும் மனம் மாறாது. இந்திய விடுதலை இயக்கத்தை காமா அம்மையார் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் தலைநகரத்தில் தொடர்ந்தார். லண்டன் நகரத்தில் லண்டன் ஹவுஸ் என்ற பெயரில் இந்திய மாணவர்களுக்கு தங்கும் விடுதியை அமைத்து, அந்த மாணவர்களிடம் தேசபக்தி கனலை ஏற்றிக் கொண்டிருந்த ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா, தாதாபாய் நௌரோஜி ஆகியோருடன் இணைந்து கொண்டார். அங்கே வீர சாவர்க்கர், வ வே சு ஐயர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

அதனால் அவர் பாரதம் திரும்பவேண்டும் என்றால் இனி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி அளிக்கவேண்டும் என்று ஆங்கில அரசு உத்தரவிட்டது. அதனை அளிக்க மறுத்து காமா அம்மையார் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு குடியேறினார். அங்கிருந்து வந்தே மாதரம் மற்றும் தல்வார் என்ற பத்திரிகைகளை நடத்தினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட அந்த பத்திரிகைகளை பாண்டிச்சேரி வழியாக பாரதத்திற்குள்ளும் தேசபக்தர்கள் கொண்டு வந்தனர்.

1907ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற சோசலிச மாநாட்டில் காமா அம்மையார் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றினார். மேலே பச்சை நிறமும் அதோடு எட்டு தாமரை மலர்களும், நடுவில் காவி நிறமும் அதில் வந்தே மாதரம் என்ற தேசபக்தி மந்திரமும், கீழே சிகப்பு நிறமும் அதில் ஒரு புறம் பிறைச் சந்திரனும், மறுபுறம் சூரியனும் பொறிக்கப்பட்டு இருந்தது.

" பாருங்கள், சுதந்திர பாரதத்தின் கொடி இங்கே ஏற்றப்பட்டு உள்ளது. இதன் பெருமையைக் காப்பதற்காக பல்லாயிரம் இளைஞர்கள் தங்கள் குருதியை சிந்தி உள்ளனர். இந்தக் கொடியின் பெயரால் நான் அழைப்பு விடுக்கிறேன், உலகில் உள்ள சுதந்திரத்தை விரும்புபவர் அனைவரும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருக" என்று காமா அம்மையார் முழங்கினார்.

நெடுங்காலம் வெளிநாட்டிலேயே வசித்து வந்த காமா அம்மையார் 1935ஆம் ஆண்டு பாரதம் திரும்பினார். 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் நாள் அவர் காலமானார்.

எட்டும் அறிவினிலில் மட்டுமல்ல தியானத்திலும் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை என்று வாழ்ந்து காட்டிய காமா அம்மையாரின் தியாகமும் வீரமும் நம்மை வழிநடத்தட்டும்.  

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 12 - விண்ணை அளந்த பாரதியன் விக்ரம் சாராபாய் பிறந்த தினம்

வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்,
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்.

சுதந்திர பாரதம் எந்தெந்த துறைகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்று மஹாகவி பாரதி கனவு கண்டானோ, அந்த துறைகளில் எல்லாம் இன்று பாரதம் கோலோச்சி நிற்கிறது. கவிஞனின் கனவை நனவாக்கி வானை அளக்க, சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிய பாதை அமைத்த விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் பிறந்த தினம் இன்று.



1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் நாள் குஜராத்தைச் சார்ந்த அம்பாலால் சாராபாய் - சரளாதேவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் விக்ரம் சாராபாய். சாராபாய் குடும்பம் பல்வேறு தொழில்களில் அன்று முன்னணியில் இருந்த குடும்பம். அம்பாலால் பல்வேறு தேசிய தலைவர்களோடு நெருங்கிய நட்பில் இருந்தவர். தனது ஆரம்ப கல்வியை வீட்டிலும், கல்லூரி படிப்பை அஹமதாபாத் நகரில் உள்ள குஜராத் கல்லூரியிலும் முடித்த விக்ரம் மேற்படிப்புக்காக இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.

அப்போது இரண்டாம் உலகப்போர் மூண்டதால் மீண்டும் தாயகம் திரும்பிய விக்ரம், சர் சி வி ராமன் மற்றும் ஹோமி பாபா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பெங்களூரு நகரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ( Indian Institute of Science ) தனது ஆராய்சியைத் தொடர்ந்தார். போர் முடிந்த பிறகு மீண்டும் இங்கிலாந்து சென்று தனது ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து முனைவர் பட்டம் பெற்றார். பாரதம் விடுதலை அடைந்திருந்த சமயம் அது. தனது அறிவு நாட்டிற்கு பயன்பட வேண்டும் என்று முடிவு செய்து விக்ரம் நாடு திரும்பினார்.

விக்ரம் அறிவியல் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல, அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கியவர். சந்தையின் மாறுதல்களை அளவிடும் Operations Research Group, நெசவுத்துறையின் முன்னேற்றத்திற்காக Textile Research Institute, அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் ( Indian Institute of Management - Ahamadabad ) போன்ற பல நிறுவனங்களை விக்ரம் சாராபாய் உருவாக்கினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியிலும் விக்ரம் சாராபாய் பெரும்பங்கு வகித்தார். இன்று சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் ஆய்வு செய்ய செயற்கைகோள்களை பாரதம் ஏவுகிறது என்றால், மிகக் குறைந்த செலவில் பல்வேறு செயற்கைகோள்களை பல்வேறு நாடுகளுக்கான விண்வெளியில் நிலைநிறுத்தும் திறமையை பாரதம் பெற்றுள்ளது என்றால் அதற்கான அடிக்கல் விக்ரம் சாராபாயால் தொடங்கப்பட்ட முன்னெடுப்புகள்தான் காரணம். இன்று தும்பாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு விக்ரம் சாராபாயின் பெயர்தான் சூட்டப்பட்டு உள்ளது.

விக்ரம் சாராபாயின் பங்களிப்பை மரியாதை செய்யும் வகையில் அரசு அவருக்கு பத்மவிபூஷண் விருதை வழங்கியது.

இன்னும் பல முன்னேற்றங்களை உருவாக்க தகுதியான விக்ரம் சாராபாய் 1971ஆம் ஆண்டு  டிசம்பர் 30ஆம் நாள் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தது இந்தியாவை உலுக்கியது. புகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஹோமி பாபா விமான விபத்தில் இறந்தார். பல்வேறு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் மரணித்ததும், நம்பி நாராயணன் போன்ற அறிஞர்கள் பொய் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறைப்பட்டதும் பாரதம் அறிவியல் துறையில் முன்னேறுவதை தடுக்க முயலும் அந்நிய நாடுகளின் சதியாக இருக்கும் என்று நம்ப எல்லா காரணங்களும் இருக்கின்றன.

நாட்டுக்கு உழைப்பது என்பது ராணுவத்தில் பணியாற்றி எல்லையை காப்பது மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் நாட்டை முன்னேற்றுவதும் அதே தான்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

குதிராம் போஸ் பலிதான தினம் - ஆகஸ்ட் 11

ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில்தான் பேசவேண்டும், வெடிகுண்டுகளும், துப்பாக்கி உமிழும் தோட்டாக்களும்தான் அவர்களுக்குப் புரியும் என்றால் அதனை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று முடிவெடுத்து ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாரதநாட்டில் ஏராளம். அதில் மிகமுக்கியமானவர் குதிராம் போஸ். பதினெட்டு ஆண்டுகளே  வாழ்ந்து தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பாரதத்தாயின் மிக இளைய வீரன் இவர்.  




வங்காள மாநில மித்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஹாப்பிபூர் கிராமத்தில் த்ரிலோகநாத் போஸ் - லக்ஷ்மிப்ரியா தம்பதியினரின் நான்காவது மகனாக 1889ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாள் பிறந்தவர் குதிராம். இவருக்கு முன்னர் பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் இளைய வயதில் இறந்து போனதால், இவரை தானியத்திற்கு ஈடாக கொடுத்துவிட்டால் காப்பாற்றிவிடலாம் என்று நம்பிய இவர் தாயார் இவரது சகோதரிக்கு மூன்று கைப்பிடி தானியத்திற்கு தத்து கொடுத்துவிட்டார். குதி என்ற வங்கமொழி சொல்லுக்கு தானியம் என்று பொருள். அதனால் இவர் பெயர் குதிராம் என்று ஆனது.

மிகச் சிறுவயதில் பெற்றோர் இருவரையும் இழந்த குதிராமை அவர் சகோதரியும் சகோதரி கணவரும் ஆதரித்து படிக்க வைத்தனர். பள்ளிப்பருவத்திலேயே அரவிந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோரின் சொற்பொழிவுகளை கேட்டு குதிராம் நாட்டுப்பற்றாளராக உருவானார்.

1905ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிளந்தார். பின்னர் நாடு பிரிவினையாக இதுவே தொடக்கமாக அமைந்தது. வங்காளப் பிரிவினையை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் தொடங்கின. வங்காளத்திலும் பஞ்சாபிலும் ஆயுதப் போராட்டம்தான் சரி என்று எண்ணிய இளைஞர்கள் பலர் பல்வேறு குழுக்களாக இணைந்தார்கள். புரட்சியாளர்கள் பலர் இருந்த அனுசீலன் சமிதி  என்ற குழுவில் குதிராம் தன்னை இணைத்துக் கொண்டார். இதனைத் தலைமையேற்று நடத்தியவர் மகரிஷி அரவிந்தரின் சகோதரர் பரிந்த்ரகுமார் கோஷ்

மித்னாபூர் மைதானத்தில் சத்யன் போஸ் எழுதிய தங்க வங்கம் என்ற துண்டுப்பிரசுரத்தை விநியோகம் செய்யும் போது காவலர் ஒருவர் இவரை பிடிக்க முயன்றார். ஆனால் காவலரைத் தாக்கிவிட்டு குதிராம் தப்பியோடி விட்டார். ஆனால் மீண்டும் ஆங்கில காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். மிக இளவயது என்பதால் நீதிபதி இவரை விடுதலை செய்தார்.

அந்தக்காலத்தில் கொல்கத்தா நீதிமன்றத்தில் கிங்ஸ்போர்ட என்ற நீதிபதி பணியாற்றிவந்தார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மிக கொடூரமான தண்டனைகளை வழங்குவதில் அவர் பெயர் போனவர். ஒரு வழக்குக்காக பிபின் சந்திரபால் நீதிமன்றம் வந்தபோது சுஷில் சென் என்ற பதினான்கு வயது சிறுவன் ஒருவன் வந்தேமாதரம் என்று கோஷமிட்டான். அதற்காக அவனை பதினைந்து கசையடி அளிக்குமாறு நீதிபதி கிங்ஸ்போர்ட உத்தரவிட்டார். ஒவ்வொரு அடிக்கும் சுஷில் சென் வந்தேமாதரம் என்று முழங்கியவாறு இருந்தார்.

விடுதலைப் போராட்ட வீரர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் நீதிபதியை கொலை செய்வது என்று அனுசீலன் சமிதி என்ற அமைப்பு முடிவு செய்தது. அதன் முதல் முயற்சியாக புத்தகத்துக்குள் வெடிகுண்டை வைத்து நீதிபதியின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் சந்தேகமடைந்த நீதிபதி அதனை காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார். காவலர்கள் அந்த குண்டை செயலிழக்க வைக்க நீதிபதி கிங்ஸ்போர்ட் உயிர் தப்பினார்தொடர்ந்த கொலை மிரட்டல்களால் ஆங்கில அரசு நீதிபதி கிங்ஸ்போர்டை பிஹார் மாநிலத்தின் முசாபர்பூர் நகரத்திற்கு இடமாற்றம் செய்தது. இடம் மாறினாலும் குறி மாறவில்லை. முசாபர்பூர் நகரத்திற்குச் சென்று நீதிபதியை கொலை செய்வது என்று அனுசீலன் சமிதி முடிவு செய்ததுஅதனை செய்து முடிக்க குதிராம் போஸ் முன்வந்தார். பிரபுல்ல சாகி என்ற இளைஞர் குதிராமின் துணைக்கு வந்தார்.  குதிராம் போஸும் பிரபுல்ல சாகியும் பிஹார் சென்றனர்.

அங்கே ஒரு சத்திரத்தில் தங்கி இருந்து அவர்கள் தொடர்ந்து நீதிபதியை கண்காணித்து அவரை எப்படி கொலை செய்வது என்ற திட்டத்தை முடிவு செய்தனர். பொதுவாக நீதிபதிகள் மக்களோடு கலந்து பழக்கமாட்டார்கள். அதிலும் கொலைமிரட்டலுக்கு உள்ளான நீதிபதி கிங்ஸ்போர்ட் வெளியில் எங்குமே செல்வதில்லை. நீதிமன்றத்திற்குச் சென்று தனது பணிகளை முடித்துவிட்டு பின்னர் நாள்தோறும் இரவு ஆங்கிலேயர்கள் கூடும் கிளப் ஒன்றுக்குச் சென்று சிறிது நேரம் அங்கே தங்கிவிட்டு வீடு திரும்புவது கிங்ஸ்போர்டின் பழக்கம். வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவரது வண்டியின் மீது வெடிகுண்டு வீசுவது என்று முடிவானது. ஒருவேளை அதில் நீதிபதி தப்பிவிட்டால் அவரை சுட்டுக் கொல்ல துப்பாக்கிகளும் கைவசம் இருந்தது.

1908ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் நாள் நீதிபதியைக் கொலைசெய்வது என்று குதிராம்போஸும் பிரபுல்ல சாக்கியும் நாள் குறித்தார்கள். அன்று அந்த கிளப்பிற்கு  நீதிபதிக்குத் தெரிந்த கென்னடி என்பவரின் மனைவியும் மகளும் வந்திருந்தார்கள். நீதிபதி கிங்ஸ்போர்ட் அவர்கள் இருவரையும் இரவு உணவுக்கு தனது வீட்டிற்கு அழைத்தார். தனித்தனியான ஒரே மாதிரியான சாரட் வண்டிகளில் அவர்கள் கிளம்பினார்கள். வெளியில் காத்துகொண்டு இருந்த குதிராம்போஸ் முதலில் வந்த வண்டி மீது கையெறி குண்டுகளை வீசினார். சாரட் வண்டி சுக்குநூறாக உடைந்து சிதறியதுபெருத்த சத்தத்தோடு பெரும் புகை மண்டலமாக அந்த இடம் காட்சி அளித்தது. ஆனால் அந்த வண்டியில் வந்தது நீதிபதி கிங்ஸ்போர்ட அல்ல, துரதிஷ்டவசமாக திருமதி கென்னடியும் அவர் மக்களும்தான் அந்த வண்டியில் இருந்தார்கள். குண்டு வீச்சில் அவர்கள் இருவரும் பலியானார்கள்இறந்தது நீதிபதி அல்ல என்பதை அறியாமல் சம்பவ இடத்தை விட்டு போராட்ட வீரர்கள்அகன்று  விட்டனர். தனித்தனியாக பயணம் செய்து வங்காளத்தை அடைவது என்பது அவர்களின் முடிவு.

 மே 1ஆம் நாள் பிரபுல்ல சாகியை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்ய முயற்சி செய்தபோது, அவர் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபுல்ல சாக்கியை கைது செய்ய முயன்றவர் இன்ஸ்பெக்டர் நந்தலால் பானர்ஜீ. இந்த சேவைக்காக ஆங்கில அரசு பானர்ஜீக்கு ரூபாய் ஆயிரத்தை ஊக்கத்தொகையாக வழங்கியது. ஆனால் மற்றொரு ஊக்கப்பரிசை அவருக்கு அளிக்க போராளிகள் முடிவு செய்தார்கள். அதே ஆண்டு  நவம்பர் 9ஆம் நாள் மாலை வீட்டில் இருந்து வெளியே வந்த பானர்ஜீமீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. தடுமாறி கீழே விழுந்த பானர்ஜீ அருகில் வந்த இரண்டு போராளிகள் நிதானமாக அவர் மீது இன்னும் சில துப்பாக்கி குண்டுகளைப் பாய்ச்சி விட்டு அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்து கொண்டு அங்கே இருந்து விலகிச் சென்றார்கள். கடைசி வரை இந்தக் கொலையைச் செய்தது யார் என்பதை ஆங்கில அரசால் கண்டு பிடிக்க முடியவில்லை

இரவு முழுவதும் நடந்தும் ஓடியும் களைப்பாக இருந்த குதிராம் வைனி நகரை அடைந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை கைது செய்ய முயற்சித்தனர். அவர்களைத் துப்பாக்கியால் சுட குதிராம் முயற்சி செய்தார். ஆனால் அதில் வெற்றிபெறாமல் அவர் கைது செய்யப்பட்டார்கைவிலங்கு இடப்பட்டு குதிராம் மே மாதம் ஒன்றாம் நாள் முசாபர்பூர் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டார். வழக்கு விசாரணை தொடங்கியது. குதிராம் கொலைக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். குறி வைக்கப்பட்டது நீதிபதிக்குத்தான், தவறுதலாக இரண்டு பெண்கள் இறந்து விட்டார்கள், அதற்காக வருந்துகிறேன், அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

குதிராமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எந்த விதமான சலனமும் இல்லாமல் சிரித்த முகத்தோடு குதிராம் அதனை எதிர்கொண்டார். ஏதாவது சொல்லவேண்டுமா என்ற நீதிபதியின் கேள்விக்கு " நேரமும், உங்களுக்கு ஆர்வமும் இருந்தால் உங்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறேன் என்று குதிராம் பதில் சொன்னார்.

தனது வழக்கறிஞர்களின் வற்புறுத்தலால் குதிராம் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அங்கேயும் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. தண்டனைக்கான நாளாக ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் நிர்ணயிக்கப்பட்டது.

12 - 8 - 1908 அமிர்த பஜார் பத்திரிகை குதிராமின் முடிவுஎன்ற தலைப்பிட்டு, பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. “மகிழ்ச்சி யோடும் புன்னகையோடும் அவன் மரணமடைந்தான்இறுதிச் சடங்கு அமைதியாய் நடந்ததுகாலை 6 மணிக்கு அவனைத் தூக்கிலேற்றினார்கள். அவன் கையில் பகவத்கீதையை ஏந்திக்கொண்டு தூக்கு மேடையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றான்தலையில் கறுப்புத்துணியை மூடும் வரை அவன் மரணத்தை அலட்சியப்படுத்தும் புன்னகையோடு நின்றான்என்று அப்பத்திரிகை, செய்தி வெளியிட்டது

 இந்தக் கொலை சம்பந்தமாக அனுசீலன் சமிதியின் பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். இந்த விசாரணை அலிப்பூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது. கைதானவர்களில் முக்கியமானவர்கள் அரவிந்த கோஷும் அவர் சகோதரர் பைரேன் கோஷும். அரவிந்தருக்காக வழக்காட வந்தவர் சித்தரஞ்சன்தாஸ். ஏற்கனவே ஐ சி எஸ் தேர்வை வேண்டுமென்றே அரவிந்தர் புறக்கணித்ததும், பரோடாவில் இருந்தும் கொல்கத்தாவில் இருந்து அவர் எழுதிய கட்டுரைகள் மூலமாகவும் அரவிந்தருக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு உண்டு என்று அரசு நம்பியது. ஆனால் அதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க அவர்களுக்கு போதுமான சாட்சியங்கள் இல்லை. அனுசீலன் கட்டமைப்பின்படி அமைப்பின் மேல்மட்டத் தலைவர்களோடு உறுப்பினர்களுக்கு எந்த தொடர்பும் இருக்காது

 எனவே தொடர்ச்சியான மிரட்டல்கள்மூலமும் பின்னர் அரவிந்தருக்கு எதிராக சாட்சி சொன்னால் மன்னித்துவிட்டுவிடுவதாகவும் சொல்லி நரேன் கோஸ்வாமி என்பவரை அரசின் சாட்சியாக காவல்துறை மாற்றியது. இதற்கிடையில் சிறையில் இருந்து தப்பிக்க போராளிகள் திட்டம் தீட்டினர். ஆனால் நரேன் கோஸ்வாமியின் வாக்குமூலம் அரவிந்தருக்கு எதிராக ஆகிவிடும் என்பதால் தப்பிக்கும் முயற்சிக்கு பதிலாக கணிலால் தத்தா, சத்யேந்திரநாத் பாசு ஆகிய இருவரும் ஏற்கனவே சிறைக்குள் கடத்தி வரப்பட்ட கைதுப்பாக்கிகள் மூலம் நரேன் கோஸ்வாமியை சுட்டுக் கொன்றனர். பழி வாங்கும் நடவடிக்கையாக குதிராம் போஸை கைது செய்த காவல் அதிகாரியை அனுசீலன் சமிதி உறுப்பினர்கள் சுட்டுக் கொன்றனர்

அலிப்பூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியவர் ஆஷு பிஸ்வாஸ் என்பவர். போராளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதற்காக அவர் தன்னாலான எல்லா வேலைகளையும் செய்து வந்தார். இப்படிப்பட்ட துரோகியை களையெடுப்பது என்று போராளிகள் முடிவு செய்தார்கள். இதைச் செய்ய முன்வந்தவர் சாருசந்திரபாஸு என்ற இளைஞர். பிறவியிலேயே இவருக்கு வலதுகை மணிகட்டுக்கு கீழே கிடையாது. பிப்ரவரி 10ஆம் நாள் தனது ஊனமான வலதுகையில் துப்பாக்கி ஒன்றை கட்டி வைத்துக்கொண்டு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஆஷு பிஸ்வாஸை அவர் சுட்டுக் கொன்றார். நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ளாமல், வேறு எந்தப் போராளிகளையும் காட்டிக்கொடுக்காமல் "வழக்கறிஞர் ஆஷு பிஸ்வாஸ் பாரதநாட்டின் எதிரி, எந்த குற்றமும் செய்யாத நிரபராதிகளை தண்டனை அடைய வைத்ததற்காக நான் அவரைக் கொன்றேன்" என்று மட்டும் சாருசந்திரபாஸு கூறினார். 1909ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் நாள் சாருசந்திரபாஸு தூக்கிலிடப்பட்டார். புன்முறுவலோடு அந்த இளைஞன் பாரதத்தாயின் பாதத்தில் அர்ப்பணமானார்

அலிப்பூர் சதிவழக்கின் தீர்ப்பு வெளியானது. அரவிந்தரின் சகோதரர் பைரேன் கோஷுக்கும் உல்லாஸ்கர் தத்துக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டில் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அவர்கள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்கள்உபேந்திரநாத் பானர்ஜீ, இந்துபூஷன்ராய் உள்ளிட்ட பதின்மூன்று பேரை நாடு கடத்தவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், மூன்று பேருக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை என்றும் அடுத்த மூன்று பேருக்கு ஏழாண்டு சிறை தண்டனை என்றும் தீர்ப்பானதுஅரவிந்தர் உள்ளிட்ட பதினேழு பேர் மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 10 - இந்தியப் புலிகளின் காவலன் பாதேஹ் சிங் ரத்தோர் பிறந்ததினம்

ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இந்திய புலி வகைகளை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த பாதேஹ் சிங் ராத்தோரின் பிறந்ததினம் இன்று.



ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்புர் மாவட்டத்திலுள்ள சோரடியா கிராமத்தைச் சார்ந்தவர் ரத்தோர். இவரது தாத்தா ஒரு ராணுவ வீரர். இவர் தந்தை காவல் அதிகாரி. டெஹ்ராடூனில் பள்ளிப்படிப்பையும் ராஜ்புதான பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார் திரு ரத்தோர். படிப்பைக் காட்டிலும் நாடகத்திலும் விளையாட்டிலும் மனதை பறிகொடுத்தார் ரத்தோர். கல்லூரி படிப்பை முடித்த ரத்தோர் ராஜஸ்தான் மாநில வனத்துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

இங்கிலாந்து அரசி எலிசபெத் மஹாராணியும் அவர் கணவர் இளவரசர் பிலிப்பும் 1961ஆம் ஆண்டு பாரதம் வந்திருந்தபோது அவர்கள் வேட்டையாட ரத்தம்பூர் காடுகளுக்கு வந்தனர். அவர்களை உபசரிக்கும் பொறுப்பு ராத்தோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதுதான் முதன்முதலில் ஒரு புலியை ரத்தோர் நேரில் பார்த்தார். அதன் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்வேறு காடுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார் ரத்தோர்.

தொடர்ச்சியான வேட்டைகளால் இந்திய புலிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது. அரசு இந்திய காடுகளில் வேட்டையாடுவதை தடை செய்தது. புலிகளைக் காக்கும் Project Tiger என்னும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. ஒரு காட்டில் புலி இருக்கிறது என்றால் அங்கே பல்லுயிர் பெருக்கம் சரியாக உள்ளது என்று பொருள். அடர்ந்த காடுகளில்தான் பொதுவாக புலிகள் வசிக்கும். Ecological Pyramid என்னும் சுற்றுச்சூழல் அமைப்பின் உச்சியில் புலி உள்ளது. புலிகளை பாதுகாப்பது என்பது மொத்த சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது என்பதே ஆகும்.

பாரத நாட்டின் ஒன்பது வனப்பகுதிகளை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. ரத்தம்பூர் சரணாலயமும் அதில் ஓன்று. அந்த சரணாலயத்தின் பொறுப்பாளராக ரத்தோர் நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த வனப்பகுதிக்குள் மக்களின் வசிப்பிடங்களும் இருந்தது. விவசாயத் தேவைக்காக மக்கள் காட்டு மரங்களை வெட்டியும், அங்கே உள்ள நீர்நிலைகளை தூர்த்தும் வந்தனர். பதினாறு கிராமங்களில் வசித்துவந்த ஏறத்தாழ பத்தாயிரம் குடும்பங்களை வனப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் பொறுப்பு ராத்தோரிடம் வந்தது. பரம்பரை பரம்பரையாக ஒரே இடத்தில வசித்து வந்த மக்களை வேறு இடத்திற்கு மாறிச் செல்லுமாறு செய்வது என்பது மிகக் கடினமான செயல். அது மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் வேலை. கடினமான இந்த வேலையை மிகத் திறமையாக ரத்தோர் செய்து முடித்தார்.

மக்கள் நடமாட்டம் குறைந்த பின்னர், காடு தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளத் தொடங்கியது. மரங்கள் வளர ஆரம்பித்தன. புலிகளின் காலடித்தடங்கள் தெரியத் தொடங்கின. ஒரு நாள் ஒரு எருமைமாடு கொல்லப்பட்டு இருந்ததை ரத்தோர் பார்த்தார். அது ஒரு புலியாலதான் வேட்டையாடப்பட்டு இருக்கும் என்று கணித்த ரத்தோர் ஒரு மரத்தின்மீது அமர்ந்து புலிக்காக காத்துக் கொண்டு இருந்தார். ஒரு பெண்புலி தன் குட்டிகளோடு அந்த எருமையை உண்ண வந்தது. மீண்டும் மீண்டும் பல்வேறு நேரங்களில் அதே பெண் புலியை ரத்தோர் பார்க்க நேர்ந்தது. அந்தப் புலிக்கு அவர் தனது மகளின் பெயரான பத்மினி என்று பெயர் சூட்டினார். அந்த வனப்பகுதியில் இருந்த எல்லாப் புலிகளையும் அவரால் தனித்தனியே அடையாளம் கண்டுகொள்ள முடியும். பத்தாயிரம் புலிகளுக்கு நடுவே என் புலிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று அவர் பெருமையாகக் கூறுவது வழக்கம்.

வனவிலங்குகளின் உடலுறுப்புகள் அகில உலக கள்ளச் சந்தையில் பெருமதிப்பு உடையவை. எனவே சட்டத்தை மீறி வேட்டையாடுவது இன்றும் தொடர்கிறது. அதுபோன்ற கயவர்களால் பலமுறை ரத்தோர் தாக்கப் பட்டதும் உண்டு. பொதுவாக நாடோடிகளாகவும், வேறு தொழில் எதுவும் தெரியாதவர்காளாகவும் உள்ள மக்களே வேட்டைக்காரர்களுக்கு உதவி செய்வது வழக்கம். எனவே அப்படியான இனக்குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கு வேறு வருமானம் வரும் கைத்தொழில்களைக் கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தால் சட்ட விரோதமான வேட்டைகளைக் குறைக்கலாம் என்று கருதிய ரத்தோர் தனது சேவை அமைப்பின் மூலம் அதனை முன்னெடுத்தார். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நாட்டில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த திட்டமும் முறையாக செயல்படுத்த முடியாது. எனவே வனவிலங்கு பாதுகாப்பில் பொதுமக்களையும்   பங்குதாரர்களாக ரத்தோர் இணைத்துக் கொண்டார்.

தனது நீண்ட ஐம்பதாண்டு கால வனப்பாதுகாப்பு சேவைக்காக புலி பாதுகாப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை அன்றய பிரதமர் குஜரால் ரத்தோர் அவர்களுக்கு வழங்கினார்.  இந்திய புலிகளை நேசித்த, அவைகளை பாதுகாக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட திரு ரத்தோர் 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி காலமானார்.