சனி, 9 மே, 2020

மஹாராணா பிரதாப் பிறந்த நாள் - மே 9


வரலாறு பதிவுசெய்யப்பட்ட காலத்தில் இருந்து பொதுயுகம் 1700 வரை பாரதம் உலகப் பொருளாதாரத்தில் 25% மேலான பங்கை வகித்து வந்தது. நீண்ட நெடிய நிலப்பரப்பும், வற்றாத நதிகளும், வளமையான நிலங்களும், உழைக்க அஞ்சாத மக்களும் என்று உலகத்தின் முக்கியமான நாடாக விளங்கியது. செல்வம் இருக்குமிடத்தை கொள்ளையடிக்க மற்றவர்கள் வருவது இயற்கைதானே. அப்படிதான் பல்வேறு நாடுகளிலில் இருந்து இந்தியாவின்மீது படையெடுக்க பலர் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருந்தனர். அலையலையாக வந்த ஆக்கிரமிப்பாளர்களை மீண்டும் மீண்டும் எதிர்த்து இந்தியர்கள் போரிட்டுக்கொண்டே இருந்தனர்.

தாயகம் காக்க தன்னலம் கருதாது தலைமையேற்ற மாவீரர்களில் மிக முக்கியமானவர். மஹாராணா பிரதாப்சிங் அவர்கள். இன்றய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மேவார் பகுதியை ஆண்ட சிசோடியா வம்சத்தின் வாரிசு ராணா பிரதாப். மேவார் நாட்டின் தலைநகரான சித்தூர் நகரை முகலாய மன்னர் அக்பர் தாக்கி கைப்பற்றினார். சித்தூரை கைவிட்டு ராஜா உதய்சிங் தனது தலைநகரை மாற்றிக்கொண்டார். அப்படி அவர் நிறுவிய நகர்தான் உதய்பூர்.

ராஜ உதய்சிங் மறைவிற்குப் பின்னர் மேவார் நாட்டின் மன்னராக மஹாராஜா பிரதாப்சிங் பதவி ஏற்றுக்கொண்டார். அநேகமாக எல்லா ராஜபுத்திர அரசர்களும் முகலாய மன்னர் அக்பரோடு நெருக்கமாகி, அவருக்கு கட்டுப்பட்டு நடக்க ஒத்துக்கொண்டனர். பலர் தங்கள் மகள்களை, சகோதரிகளை அவருக்கு திருமணமும் செய்து வைத்தனர். ஆனால் எந்த உடன்படிக்கைக்கும் வர மறுத்து எதிர்த்து நின்றவர் ராணா பிரதாப் மட்டுமே.

அக்பர் அனுப்பிய தூதுகள் எல்லாம் பயனற்றுப் போக, அக்பர் மஹாராஜா பிரதாப் மீது படையெடுக்க முடிவு செய்தார். மொகலயப் படைக்கு தலைமை ஏற்றவர் சக ராஜபுத்திர மன்னரான ராஜா மான்சிங். முகலாயப்படை ராணா பிரதாப்பின் படையைப் போல நான்கு பங்கு பெரியது. ஆனாலும் ராஜ்புத்திரர்களின் வீரம் என்று மீண்டு உறுதிசெய்யப்பட்டது. தனது பட்டத்து குதிரையான சேட்டக் மீது ஏறி ராணா பிரதாப் தனது படையை வழிநடத்தினார். குதிரைக்கு செயற்கையான தும்பிக்கையை மாட்டி மான்சிங்கின் யானையை குழப்பமடையச் செய்தார். மிக அருகில் இருந்து தனது ஈட்டியை மான்சிங் மீது ஏவினார். ஆனால் அந்த ஈட்டிக்கு இரையாகி மான்சிங்கின் யானைப்பாகன் மான்சிங்கை காப்பாற்றினார்.

போரில் காயமடைந்த மஹாராணா பிரதாப்பை அவரது குதிரை சேட்டக் பல மைல் தொலைவுக்கு சுமந்து சென்று காப்பாற்றி தனது உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்து. மேவார் நாட்டின் வளமையான கிழக்குப் பகுதி முகலாயர் வசமானது. மலையும் காடுகளுமான பகுதி மட்டும் ராணா ப்ரதாபின் ஆளுமைக்கு கீழ் இருந்தது.

அங்கிருந்து முகலாயர் மீதான தனது தாக்குதலைத் தொடங்கினார் ராணா பிரதாப். கொரில்லா போர் முறையை முழுமையாக இந்தியாவிற்கு அறிமுகம் செய்தவர் என்று ராணா பிரதாப் போற்றப்படுகிறார். கடைசி வரை ராணா பிரதாப்பை முகலாயர்களால் வெற்றிகொள்ளவோ அல்லது அவர்களின் ஆளுமையை ஏற்றுக்கொள்ளவோ வைக்கவே முடியவில்லை. சிறுது சிறிதாக இந்த உண்மையை முகலாயர்கள் ஏற்றுக்கொள்ள, தனது ராஜ்யத்தின் பல பகுதிகளை ராணா பிரதாப் மீட்டெடுத்தார்.
ஏழு அடி ஐந்து அங்குல உயரமும் நூறு கிலோவிற்கு அதிகமான எடையும் கொண்ட தோற்றம், தலைக்கவசம், கேடயம், ஈட்டி, வாள் என்று இருநூறு கிலோவிற்கும் அதிகமான ஆயுதங்களைத் தாங்கிய வீரன், சொந்த ராஜபுத்திர மன்னர்கள் எதிர்த்து நின்றபோதும் அடிபணிய மறுத்த மன்னன், பின்னாளில் சத்ரபதி சிவாஜி மஹராஜ் போன்றவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய இந்தியாவின் முதல் விடுதலை வீரன் மஹாராணா பிரதாப்சிங்கின் வாழ்க்கை நம் அனைவருக்கும் லட்சியப் பாதையில் செல்ல உதாரணமாக இருக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக