திங்கள், 29 பிப்ரவரி, 2016

மதிப்பிற்குரிய காம்ரேட் மருதன் அவர்களே

விகடன் வார இதழில் உங்கள் கட்டுரையைப் படிக்கும் பேறு பெற்றேன். வழக்கம் போலவே, வாயில் நுழையாத பெயர்களைச் சுட்டி, எட்டடுக்கு மாளிகையின் உச்சியில் அமர்ந்துகொண்டு, மற்றவர்களை எள்ளி நகையாடி, அவர்கள் அறிவிலிகள் என்று முடித்து இருக்கிறீர்கள்.

அதிலும் ஜவஹர்லால் நேருவை வெறுக்கவும், அவர் பெயரால் நடைபெறும் பல்கலைக்கழகத்தை மூடவும் துடிப்பவர்களைப் புரிந்து கொள்ளமுடியும் என்று கூறி இருக்கிறீர்கள். கம்யூனிஸ்ட் மக்களுக்கு எப்போது இருந்து இந்த மனமாற்றம் வந்தது ? உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கிறதே, ஒரு வேளை மோடி பதவி ஏற்றதால் நீங்கள் சகிப்புத்தன்மையோடு இருக்கலாம் என்று மாறிவிட்டீர்களா என்ன ?

முன்றரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த ஜான் காட்டன் பாதிரியாரைப் பற்றிப் பார்பதற்கு முன்னால், ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் தோழர் ஸ்டாலின் ஆட்சியில் சைபீரியச் சிறையில் எத்தனை பேர் கம்யுனிச வழியில் பொன்னுலகை அடைந்தனர் என்று பார்க்கலாமே ?

சரி அது வேண்டாம், சென்சீனத்தில் தினாமென் சதுக்கத்தில் உரிமைக்காகப் போராடிய மாணவர்களை எப்படி உங்கள் பொன்னுலக அரசு நடத்தியது என்பது மறந்து போய் இருந்தால், உங்கள் பார்வைக்காக இந்தப் படம்



சரி, இதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது, இப்போதாவது மாறிவிட்டீர்களா என்று பார்த்தால், இன்று பத்திரிகைகள் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று தலைவர் சொல்லுவது இங்கே இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டோடு நடைபெறும் செய்து நிறுவனங்களின் கட்டுப்பாடு எது என்று பார்க்க வேண்டுமா ? இங்கே பாருங்கள்.

தேசம் என்பது வெறும் கற்பிதம், தேசபக்தி தேவை இல்லை என்று கூறுவதற்கு முன்னால், உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று சீனா வழிகாட்டும் நிலை இங்கே இருக்கிறது

சரி இது எல்லாம் வெளிநாட்டு நிகழ்சிகள், மண் சார்ந்த மார்சியமே எங்கள் கருத்து என்று கூடச் சிலர் சொல்லலாம். ஐநாவிற்கான இந்திய தூதுவரை ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள வந்த போது உங்கள் மாணவ அணியினர் தந்த அன்பான வரவேற்பு என்ன என்று தெரிந்து கொள்ள இங்கே பாருங்கள்.

கலாசாரப் புரட்சி என்றும், ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்றும் மாற்றுக் கருத்து கூறுபவர்களை அழிப்பதையே கொள்கையாகக் கொண்ட சித்தாந்தம் என்பதை இங்கே நிருபிக்கிறார்கள் பாருங்கள்.

கோல்வார்கர், சவர்கார் பற்றி மட்டும் அல்ல, தெனிந்தியாவில் உள்ள பலருக்கு சந்திரசேகர ஆசாத், கோவிந்த வல்லபபந்த், ஆச்சாரிய கிருபளானி, விபின் சந்திரபால், தேசபந்து ஆண்டருஸ், ஏன் காந்தியின் குரு கோபால கிருஷ்ண கோகுலே பற்றிக்கூடத் தெரியாது. கக்கனைப் பற்றி, ஜீவாவைப் பற்றி, பி ராமமூர்த்தி பற்றி எத்தனை வட இந்தியர்களுக்குத் தெரியும் ? நெருக்கடி நிலையைப் பற்றி, அதை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணனைப் பற்றி எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும் ? மக்களிடம் மறைக்கப்பட்டதால் இவர்கள் தியாகங்கள் இல்லை என்றா ஆகிவிட்டது ?  ஏன் இவர்களைப் பற்றிய குறிப்புகள்கூட பாடப்புத்தகங்களில் இல்லை என்று இந்த அறிவாளிகள் என்றாவது கேள்வி எழுப்பியது உண்டா ?

கோசாம்பியைத் தெரிந்தவர்களைக் காட்டிலும், ராகுல்ல சங்க்ரஹ்ரித்யாயனைத் தெரிந்தவர்களைக் காட்டிலும் பண்டிட் தீனதயாள் உபாத்தியாவைத் தெரிந்தவர்கள் அதிகம் தான் தோழரே. ஹிந்துவர்களில் அறிஞர்கள் இல்லையா ? ராம் ஸ்வரூப், சீதாராம் கோயல் இவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? தரம்பாலின் சிந்தனைகளை இன்றுவரை உங்களால் மறுக்க முடியவில்லை என்பதுதானே உங்களுக்குக் கசப்பான உண்மை.

நீங்கள் நீட்டி முழங்கும் பல்கலைக்கழத்தின் நிலை என்ன என்று உண்மையில் உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் இடமாகவல்லவா, இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக் கழகம் இருக்கிறது, உங்கள் பார்வைக்கு இரண்டு செய்தி இணைப்புகள்.

இதுநாள் வரை மேடையில் முழங்கவும், பத்திரிகையில் எழுதவும் உங்களைப் போன்ற சில அறிவாளிகளுக்கு மட்டுமே இடம் இருந்தது, என்ன உங்கள் போதாத நேரம் என்னைப் போன்ற மூடர்கள் சிலரும் இப்போது பொதுவெளியில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள், அது  பத்திரிக்கைகாரர்கள் என்று கூறிக் கொள்ளும் பலருக்குப் பொறுக்க முடிவவில்லை. அவர்கள் இப்போது அரசாங்கத்தில் யார் அமைச்சராக வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதை முடிவு செய்துகொண்டு இருந்தார்கள், இப்போது அது முடியவில்லை. அதனால் கம்பன் சொல்வது போல " திகைத்தனர் போலும் செய்கை" என்று ஆகிவிட்டார்கள் போல.

ஊடகங்களின் நேர்மையைப் பற்றி, சன் தொலைகாட்சி நிறுவனரின் வாக்குமூலம் இங்கே இருக்கிறது. இவர்களையா நீங்கள் மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பப் போகிறார்கள் என்று சொல்கிறீர்கள் ?

எந்த வயதுவரை ஒரு மாணவன் கல்லூரியில் / பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் என்று கருதப்படலாம் ? 2002இல் பள்ளிப்படிப்பை முடித்த ஒருவர் 2005இல் பட்டப்படிப்பை முடித்து, 2007இல் முதுகலைப் படிப்பையும் முடித்து இருப்பார், அப்படி என்றால் எட்டு வருடங்களாக ஆராய்ச்சி மாணவராகவா இருக்கிறார் ? அதுவும் ஆப்ரிக்கா பற்றிய ஆராய்ச்சியில் ? இந்த நாட்டு மக்களின் வரிப்பணம் இந்த மாணவர்களின் கல்விக்கு மட்டுமே தவிர, அவர்களின் அரசியலுக்கு அல்ல, அப்படி அரசியல் செய்ய வேண்டும் என்றால் அதை அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சி கொடுக்கட்டும், பொதுமக்களின் பணத்திற்கு வேறு நல்ல பணிகள் இருக்கின்றன.

அது சரி ரோஹித் வெமுலாவின் சந்தேகத்திற்கு இடமான தற்கொலையை நீங்கள் சொல்லும் அறிவாளிகள் எப்படி வர்ணமடிதார்கள் ? மாணவன் தற்கொலை என்றா இல்லை ஒரு தலித் மாணவன் தற்கொலை என்றா ? அப்போது அவர் தலித்தா இல்லையா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதானே ?  நான் என்ன ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை என் எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள், நான் சொல்லவில்லை இதை, செஞ்சட்டைப் போராளி ஒருவர் சொன்னது இது.



இவை மாணவர் அமைப்பு வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா ? இதைப் பேச்சுரிமை என்றா சொல்லுவீர்கள் ? வரைமுறை அற்ற உரிமை என்பது எங்குமே கிடையாது, எல்லா உரிமையும் கடமைகளோடு இணைந்தே உள்ளது. எங்கும் நடக்கும் உரிமை உள்ளது என்று புகைவண்டிப் பாதையில் நடந்தால் என்ன ஆகும் ?

நீங்கள் ஏன் கார்ல் மார்க்ஸ் போல புத்தகம் எழுதவில்லை என்ற கேள்வி காந்தியிடம் கேட்கப்பட்ட போது, அவரைப் போன்று எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கவில்லை என்று காந்தி சொன்னார். அரசாங்கப் பணத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் நாங்கள் கருத்தரங்குகள் நடத்திக்கொண்டு இருக்கவில்லை. இந்தியா எங்கும் ஓராசிரியர் பள்ளிகளும், ஏகல் வித்யாலைகளும், வித்யா பாரதி நடத்தும் பள்ளிகளும் என்று பரவி இருப்பதை நீங்கள் அறிவீர்களா ? ஒரே ஒரு நானாஜி தேஷ்முக் செய்த பணியை நீங்கள் கூறும் எந்த அறிஞர்களும் செய்யவில்லை. மந்தாகினி நதிக்கரையில், சித்திரகூடத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி கிராமியப் பல்கலைக்கழகம் அவர் உருவாக்கியது. நாங்கள் நிறுவனங்களை உருவாக்குபவர்கள், இடதுசாரி அறிவிஜீவிகள் போல மற்றவர் பணத்தில் நீச்சல் அடிப்பவர்கள் அல்ல.

ஏறக்குறைய பதினாறு வருடத்தில் இந்த நாட்டுக்குள் ஏழைகளுக்கு சேவை செய்ய என்ற போர்வையில் வந்த பணம் ஏறத்தாழ தொண்ணுற்று ஐந்தாயிரம் கோடி ரூபாய்கள்.  எதுவுமே செய்யாமல் எல்லா இந்தியர்களுக்கும் இந்தப் பணத்தைப் பிரித்துக் கொடுத்து இருந்தாலே, தலைக்கு அறுநூறு கோடி ரூபாய்கள் வந்து இருக்குமே ? எங்கே போனது இவ்வளவு பணமும், அது என்ன ஆனது என்று கேட்டால், கேட்பவர்கள் அறிவிலிகளா ?

இந்த நாடு உடையவேண்டும் என்று நீங்கள் கூட்டம் போட்டு, கோசம் எழுப்பிக்கொண்டு இருக்கும்போது, 1947இல் காஷ்மீரத்தில் உயிரைப் பணயம் வைத்து ராணுவத்திற்கு உதவியது யார் ? 1962இல் கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தபோது, ராணுவத்திற்கு உதவியது யார் ? எதற்க்காக நேரு ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களைக் குடியரசு அணிவகுப்பில் கலந்து கொள்ளக் கேட்டுக்கொண்டார் ?

எங்கே உங்கள் ஜேஎன் யு என்று கேட்கிறீர்களே, இந்த நாட்டில் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்விக்கூடம் நடத்தக் கூடாது என்று சட்டம் மட்டும்தான் இல்லை, அதற்கான தடைகள் என்னவெல்லாம் என்று தெரியுமா ? சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்விக்கூடத்தில் அரசின் பல சட்டங்களே செல்லாது என்பதையும் நீங்கள் சுட்டிக் காட்டி இருக்கவேண்டும். ஏன் சமூகநீதி என்று குரல் குடுப்பவர்கள், சிறுபான்மைக் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடே கிடையாது என்பதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் கேட்டுச் சொல்லுங்கள்.

எல்லாவற்றிலும் சமத்துவம் பேசும் நீங்கள், கல்விக்கூடங்கள் நடத்துவதிலும் சமத்துவ நிலைமைக்காகப் போராடுங்கள், பின்னர் கேள்விகளைக் கேளுங்கள்.

நேர்மையாளர்கள் அதைதான் செய்வார்கள்.

இன்னொன்று கம்யுனிச தத்துவம் என்பது உலகம் முழுவதும் தோல்வி அடைந்த ஓன்று என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அன்புடன்
இராமச்சந்திரன்  

சனி, 20 பிப்ரவரி, 2016

நண்பரிடம் சில கேள்விகள்

எனது கெழுதகை நண்பரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடமாநிலத் தளகர்த்தர்களில் ஒருவரும், தனியார் பொறியியல் கல்லூரித் தலைவருமான ஒருவர் தனது நிலைத் தகவலில் இவ்வாறு பகிர்ந்து இருந்தார்.


// தேசபக்தி
1. நம் தேசத்தின் இறையாண்மையை மனதார ஏற்றுக்கொள்வது.
2. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களின், நீதிமன்றங்களின் மாண்பை மனதார ஒப்புக் கொள்வது.
3. நம் அளவில் சட்டத்தை மதிக்கும் முழுமையான குடிமகனாக வாழ்ந்து மடிவது.
இதுதான் தேசபக்திக்கு நான் கொண்டிருக்கும் வரையறை.
இத்தனை ஆண்டுகளாக இதில் யாரும் சந்தேகம் எழுப்பியதில்லை. எனக்கு நானே எனது இந்த நம்பிக்கைக் குறித்து ஒருபோதும் ஐயம் கொண்டதில்லை.
இப்போது, முதன்முறையாக தேசபக்திக்கு எங்கிருந்தோ, யார் யாரெல்லாமோ விளக்கமும், அறிவுரையும் நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தேசபக்தி மீது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஜனாதிபதி அப்துல்கலாம் ஆனாலும், சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் ஆனாலும் இந்திய முஸ்லீம்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் தத்தம் தேசபக்தியை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஒரு கட்டாயம் இங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு தலைமுறையாக இந்த நாட்டில் பிறந்து வாழும் பல கோடி இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் தேசபக்தி மீதான இந்த ஐயப்பாடுகளைக் கண்டு உள்ளம் குமுறிக் கொண்டு இருப்பதை, நான் மிகவும் வேதனையுடன் பார்த்து வருகிறேன்.
ஒரு அரசியல் அமைப்பின் மீது யாருக்கும், எந்தக் கருத்தும் இருக்கலாம்! ஆனால், அதன் தேசபக்தியின் மீது கேள்வி எழுப்புவது என்பது, அந்தக் கட்சியை அங்கீகரித்து இந்த ஜனநாயகத்தில் இடமளிக்கும் நம் அரசியல் அமைப்பின் மீது கேள்வி எழுப்புவது ஆகும். இதை, நாம் எந்த விதத்திலும் சகித்துக் கொள்ளவே கூடாது.
எது தேசபக்தி? என்று நமக்கு உபதேசிக்கும் அருகதையற்றது இப்போதைய அதிகார வர்க்கம் என்பது நாம் அறிவோம்.
எனது இந்தப் பதிவின் மீது விமர்சனமும், எதிர்கேள்விகளும் வைக்கப் போகும் நண்பர்களிடம் ஒரே ஒரு கேள்வி!
தேசவிரோதச் செயல் என sedition குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் அந்த மாணவன், நிரபராதி என நீதிமன்றத்தில் விடுதலை ஆனால், இந்த அதிகாரவர்க்கத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியான பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்வாரா?
இந்த நாட்டின் இறையாண்மை மீதும், நீதிமன்றங்களின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்களான உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
வன்முறை தவிர்த்து, நம் நாட்டின் இறையாண்மையின் மீது ஒரு துளி நம்பிக்கை இருந்தாலும் எனது இந்தக் கேள்வியின் நியாயத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.
நான் எப்போதுமே சொல்வதுதான்!
சரித்திரம் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
அது ஈவிரக்கமற்றது.//

நண்பருக்கு என் கேள்விகள் 

 // 1. நம் தேசத்தின் இறையாண்மையை மனதார ஏற்றுக்கொள்வது. 
2. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக நாடாளுமன்ற, சட்டமன்றங்களின், நீதிமன்றங்களின் மாண்பை மனதார ஒப்புக் கொள்வது.
3. நம் அளவில் சட்டத்தை மதிக்கும் முழுமையான குடிமகனாக வாழ்ந்து மடிவது.
இதுதான் தேசபக்திக்கு நான் கொண்டிருக்கும் வரையறை.//

இது தேசபக்தி பற்றிய உங்கள் வரையறை, நல்லது இதன்படி இந்த நாடு துண்டாடப்பட வேண்டும் என்று கோஷம் எழுப்புவது மற்றும் அரசியலமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர்கள் கூடி இருந்த நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவது, அந்தக் குற்றத்தை நிருபித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை அளித்த நீதிமன்றத்தை அவதூறு செய்வது இதில் அடங்காது அல்லவா, இல்லை கருத்துரிமை என்ற பெயரால் இதனை அனுமதிப்பது பற்றிய தங்கள் நிலைப்பாடு என்ன ? 

// இத்தனை ஆண்டுகளாக இதில் யாரும் சந்தேகம் எழுப்பியதில்லை. எனக்கு நானே எனது இந்த நம்பிக்கைக் குறித்து ஒருபோதும் ஐயம் கொண்டதில்லை.//
நல்லது, இதுவரை உங்கள் தேசபக்தியை யாரும் கேள்வி கேட்கவில்லை, இனியும் கேட்காத அளவில் நம் ( எல்லோரின் ) நடத்தையும் இருக்கட்டும். 

//இப்போது, முதன்முறையாக தேசபக்திக்கு எங்கிருந்தோ, யார் யாரெல்லாமோ விளக்கமும், அறிவுரையும் நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.//

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்போம், இதுதான் நமது வழிமுறை நண்பரே. 

// இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தேசபக்தி மீது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஜனாதிபதி அப்துல்கலாம் ஆனாலும், சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் ஆனாலும் இந்திய முஸ்லீம்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் தத்தம் தேசபக்தியை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஒரு கட்டாயம் இங்கே நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு தலைமுறையாக இந்த நாட்டில் பிறந்து வாழும் பல கோடி இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் தேசபக்தி மீதான இந்த ஐயப்பாடுகளைக் கண்டு உள்ளம் குமுறிக் கொண்டு இருப்பதை, நான் மிகவும் வேதனையுடன் பார்த்து வருகிறேன்//

மிகத் தவறான புரிதல், எந்த சாதாரண இஸ்லாமியர் மீதும் இப்படிக் குற்றச்சாட்டு சூட்டப்படவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மதத்தின் பின்னும், ஜாதியின் பின்னும் ஒளிந்துகொண்டு தாங்கள் அதனாலே பழிவாங்கப் பட்டதாகச் சொல்கிறார்கள். நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால் இன்று இந்த தேசத்தில் எந்த  இஸ்லாமியரும்  முதல் குடிமகன் என்ற அளவு வரை உயர்ந்து இருக்க முடியாது. இந்த நாட்டின் எத்தனை முதலமைச்சர்கள், எத்தனை ஆளுநர்கள், எத்தனை ராணுவத் தளபதிகள், எத்தனை உயர்நீதிமன்ற / உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ற பொறுப்புகளை வகித்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அல்ல, அவர்களின் தகுதியால், திறமையால் இந்தப் பதவிகளை அலங்கரித்து உள்ளனர். இன்னும் இதுபோன்ற பதவிகளுக்கு பலப்பல இஸ்லாமிய சகோதரர்கள் வருவார்கள், தங்கள் பங்களிப்பை இந்த நாட்டுக்குத் தருவார்கள்.

உதாரணமாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவராக திரு அசாருதீன் தேர்ந்தெடுக்கப்பட்டது அவர் திறமையால். ஆனால் கிரிக்கெட் சூதாட்டக் குற்றச்சாட்டு அவர் மீது நிருபிக்கப்பட்டபோது தான் இஸ்லாமியர் என்பதால் பழிவாங்கப்பட்டேன் என்ற அவரது பேச்சை இந்த நாட்டின் இஸ்லாமியர்கள் யாரும் ஏற்கவில்லை. ஆனால் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்தது உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் என்பது வரலாறு.

ஆக இல்லாததையும் பொல்லாததையும் கூறி இந்த மண்ணின் மக்களைப் பிரித்துவிடாதீர்கள் நண்பரே. 

// இப்போது, அந்தக் கொடிய கரங்கள் கம்யூனிஸ்டுகள் மீதும் நீண்டிருக்கிறது.
கம்யூனிஸ்டுகளின் தேசபக்தி மீது இந்தோ-சீனப் போரின் போது கேள்வி எழுப்பியவர்கள் கூட பின்னாளில் ஒவ்வொருவராக அதற்கு வருத்தம் தெரிவித்தது வரலாறு.//
கேள்வி எழுப்புவதே தவறு அல்ல நண்பரே, சீனப் போரின் போது நடந்தவைகளைச் சற்றே படித்துப் பாருங்கள். 

// எது தேசபக்தி? என்று நமக்கு உபதேசிக்கும் அருகதையற்றது இப்போதைய அதிகார வர்க்கம் என்பது நாம் அறிவோம்.//

இது உங்கள் கருத்து, இதை வெளிப்படையாகச் சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு. 

//எனது இந்தப் பதிவின் மீது விமர்சனமும், எதிர்கேள்விகளும் வைக்கப் போகும் நண்பர்களிடம் ஒரே ஒரு கேள்வி!
தேசவிரோதச் செயல் என sedition குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் அந்த மாணவன், நிரபராதி என நீதிமன்றத்தில் விடுதலை ஆனால், இந்த அதிகாரவர்க்கத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியான பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்வாரா?
இந்த நாட்டின் இறையாண்மை மீதும், நீதிமன்றங்களின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்களான உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
வன்முறை தவிர்த்து, நம் நாட்டின் இறையாண்மையின் மீது ஒரு துளி நம்பிக்கை இருந்தாலும் எனது இந்தக் கேள்வியின் நியாயத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.//

 நமது நாட்டின் குற்றவியல் சட்டங்கள் நூறு நிரபராதி தப்பிக்கப்படலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற முறையில்  நடைபெறுபவை. சட்டத்திற்கு தேவை சாட்சிகள், முழுமையான ஆதாரங்கள். " சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளித்து, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்"  என்ற வாக்கியத்தை நீங்கள் அடிக்கடி கேட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 

சட்டத்தின்படி சரி என்பதற்கும் - தர்மத்தின்படி / அறநெறிகளின் படி சரி என்பதற்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  

ஒரு அரசு தான் தொடுத்த வழக்கில் வெற்றியடையவில்லை என்றால் அந்த அரசின் பிரதமர் அதற்குப் பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள். சரி, ஆனால் உங்கள் கட்சி அரசு தான் தொடுத்த எல்லா வழக்கிலும் வெற்றி அடைந்துவிட்டதா ? அப்படி இல்லாத நிலையில் உங்கள் கட்சியின் சார்பாக முதல்வராக இருந்தவர் எந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்பதைத் தெளிவு படுத்த முடியுமா ? 

நீங்கள் எடுத்த நிலைப்பாட்டையே இன்றைய பிரதமர் எடுக்கலாம் அல்லவா ? கோபாலபுரம் கைகாட்டித்தானே டெல்லி செயல்படுகிறது என்று நீங்கள் பெருமையோடு பேசலாம் அல்லவா ? 

இறுதியாக எனக்கு ஒரே ஒரு ஐயம் - நீங்கள் தலைவராக இருந்து நடத்தும் கல்லூரியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த உங்கள் மாணவர்கள் முடிவு செய்தால், அதில் பாராளுமன்றத் தாக்குதலை சரி என்று கூறி, இந்தியா துண்டாடப்படவேண்டும் என்ற முழக்கங்களை எழுப்ப விரும்பினால்  உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும் ? 
கருத்து சுதந்திரம் என்ற நிலையில் அனுமதிப்பீர்களா அல்லது உங்கள் தேசபக்தி என்ற நிலையில் மறுப்பீர்களா ? உங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறலாமா ? 

அன்புடன் 
இராமச்சந்திரன்  


புதன், 23 செப்டம்பர், 2015

அறிஞரின் சொல்

எனது இனிய நண்பரும், பட்டயக்  கணக்காளருமான    திருசெந்துறை ராமமூர்த்தி சங்கர் தனது முகநூலில் எழுதிய பதிவு.

முதலீடு

அறிவுரை சொல்பவர்கள் தாங்கள் அதைப் பின்பற்றுகிறோம் என்று உறுதிமொழி கொடுக்கவேண்டும் என்பது முக்கியம். நான் எனது முதலீடுகளை அரசுடைமை வங்கிகளில் மட்டும் வைத்திருக்கிறேன். தனியார் வங்கிகளில் சில இணைய வசதிகளுக்காகவும் , கல்லூரி, பள்ளி ஃபீஸ் தேவைகளுக்கும். இன்னும் போஸ்ட் ஆஃபீஸ் , ஓய்வூதிய சேமிப்பு தொடங்க மட்டுமே ஆசை. பங்குச்சந்தையில் முதலீடுகள் இல்லை. அதிகபட்சம் , முதலீட்டின் மேல் 10% .....அதற்குமேல் எந்த முதலீடும் கிடையாது.

1. 10 அதிகபட்சம் 12 சதவிகித வட்டிக்கு மேல் எந்த ஒரு வியாபாரமும் கொடுக்கமுடியாது. பத்தாண்டு சராசரியில் அதற்குமேல் வர வாய்ப்பே இல்லை. எனவே 18 , 21 என்று தர எந்தத் தொழிலும் கிடையாது. அப்படி ஆசை காட்டும் மனிதர்கள் நிச்சயம் சட்டபூர்வமான தொழில்களையோ அல்லது முழுதும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் தொழில்களையோ செய்ய முடியாது. இன்றைய வளர்ச்சி என்பது எதிர்காலத்திடமிருந்து வாங்கப்பட்ட கடன் என்பது பொருளாதாரத்தின் ஒரு விதி.

2. பேராசையோ , பெண்ணாசையோ ஒரு க்ஷண நேர சபலம். தாண்டுங்கள். பணத்திற்கு யாராவது ஆசை காட்டினால் ஒரு நிமிடம் அனுபவ், திருமகள், ஆர்.பி.எஃப் போன்ற நிறுவனங்களை நினைத்துக் கொள்ளூங்கள். இந்த அசல் தொகை போனால் உங்கள் உழைப்பும், குடும்ப எதிர்காலமும் கேள்விக்குறி என்ற விஷயத்தை யோசியுங்கள். இயல்பாகவே அந்த ஆசை காட்டும் நபர்கள் இனிக்க இனிக்கப் பேச்சுத் திறன் உடையவர்களாக இருப்பார்கள். ஓடுமீனாவதும், உறுமீனாவதும் உங்கள் கையில் . 13 வருடங்களுக்கு முன் ஓரு மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனியில் மனைவி, நண்பர்கள் பணம் போடச்சொன்னபோது நான் சொன்னது " இது என் முதலீடு இல்லை. செலவு. நான் இதை என் பணமாக மற்ந்துவிட்டேன். உங்கள் முதலீடாக வாழ்த்துகள்!" அது என் மனைவிக்கு அறிவு முதலீடானது. அதுவே எங்களுக்கு ஒரே அனுபவ்!

3. முதலீடு செய்யுமுன் மனைவி, பெற்றவர்கள் , வளர்ந்த குழந்தைகள் போன்றவர்களிடம் விவாதியுங்கள். தவறுகள் பெருமளவு குறையும். பரஸ்பர நம்பிக்கைகள் வளரும். அவர்களுக்காகச் செய்யும் முதலீடுகளில் அவர்களின் நியாமும் இருக்கச் செய்யவேண்டியது கடமை. விவாதிக்கும் போது உங்களுக்குத் தெரியாத பல நிறைகுறைகள் தெளிவாகும்.

4. பங்குச்சந்தையிலும் அதிக நல்ல தரமான ஆலோசனையாளர்களையே அணுகுங்கள். கட்டைவிரல் விதியாக 65:35 என்று பாதுகாப்பை வாரந்தோறும் உறுதி செய்யச் சொல்லுங்கள். அதிலும் 15 % உச்சவரம்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

5. வரி ஏய்ப்புக்கு திட்டம் சொல்லும் யாரையும் சேர்க்காதீர்கள். வரி ஏய்ப்பிற்கும் , வரி திட்டமிடுதலுக்கும் உள்ள வேறுபாட்டை படித்து, கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது உங்கள் முதலீட்டு ஆலோசனைகளைச் செம்மையாக்கும். ஓழுங்காக வரி கட்டும்போதே , சில விதிமுறைகளப் புரிந்துகொண்டு செயல்படாததால் அபராதம் கட்டிய அனுபவம் எங்களுக்கு உண்டு.

6. அடிப்படையாக இலவசம் என்று எதுவும் கிடையாது. ஒரு ஹாண்ட் பேக் , விமான டிக்கெட் இலவசமாகத் தர அவர்களுக்கு நீங்கள் பாசக்காரத் தம்பியோ அண்ணனோ இல்லை என்று உணருங்கள். அவர்களுக்கு உங்களிடமிருக்கும் பணமோ, அல்லது பேராசையோ மோப்பம் பிடிக்கும் திறன் இருக்கிறது என்று பாராட்டிவிட்டு உருப்படியான வேறு வேலைகளைப் பார்க்கச் செல்லுங்கள்.

7. இது சற்று வித்தியாசமானது. உறவினர்களின் எந்தத் தொழிலிலும் முதலீடு செய்யாதீர்கள். உறவு, பணம் இரண்டையும் இழக்க நேரும்.

8. உங்கள் குழந்தைகளிடம் சிறுசேமிப்பை, 10 வயதிலிருந்தே வளருங்கள். அவர்களுக்கு வங்கிகளின் செயல்பாட்டை புரியவைப்பது மிகவும் பயனுள்ளது. என் மகனுக்குத் தெரிய வைத்தேன். மகளுக்கு இனிதான்...இங்கு அதற்கான வசதிகள் இல்லை.

நாங்கள் விளையாட்டாய்ச் சொல்வதுண்டு. புத்தரே பணத்தை ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில் போட்டிருந்தார். பணம் போனதும் " கயா" ( போச்சு) என்ற ஞானம் வந்தது புத்தகயாவில் ஆசையே அழிவிற்கு வித்து என்று உலகிற்குச் சொன்னார். (அந்த மாமுனிக்கு நமஸ்காரம்)

பணத்தை இழந்தபின் " நான் தான் சொன்னேனே ! " என்று வருபவர்கள் அவர்கள் அதைவிடப் பெருந்தொகையை இழந்தவர்களாக இருப்பார்கள். தங்களை ஆறுதல் படுத்திக்கொள்ள இதுபோல் சொல்வதுண்டு. அவர்களை மன்னித்து விடுங்கள்.



https://www.facebook.com/T.R.Sankar/posts/10153117932356451



திரு சங்கர் அவர்களுக்கு நன்றி 

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

பரஸ்பர நிதி - சாதகங்கள்

இன்றைய நிலையில் தென்னைமரத்தில் தேள் கொட்டினால், பனைமரத்தில் நெறி கட்டுவது போல, உலகின் எதோ ஒரு முலையில் எதோ ஒரு நாட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி உலகின் பல இடங்களில் எதிரொலிக்கிறது. இவைகளை எல்லாம் அறிந்து, அதனால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை யூகிக்கும் மதி நுட்பம் எல்லோருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பரஸ்பரநிதி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பொருளாதார வல்லுனர்கள் நம்மைக் காட்டிலும் இந்தத் துறையில் தேர்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள். எனவே பரஸ்பரநிதி மூலமாக முதலீடு செய்வதன் முக்கியமான பலன் என்பது துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனை என்பதே ஆகும். இந்த ஆலோசனைக்காக நிறுவனம் வாடிகையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணம் என்பது மிகக் குறைவு.

அடுத்தபடியாக நேரடியாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் பெரிய அளவிலான பணம் தேவைப்படும். சிறந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை மிக அதிகமாக இருக்கும். மேலும் முதலீட்டாளர் நட்டம் அடைவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் தனது முதலீட்டைப் பரவலாக்கவேண்டும். இது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே முடிந்த செயலாக இருக்கும். பல நிறுவனங்களில் ரூபாய் ஐநூறு அல்லது ரூபாய் ஆயிரத்தில் நமது முதலீட்டைத் தொடங்கலாம். வங்கிக் கணக்கும், வருமானவரித்துறை வழங்கும் நிரந்தரக் கணக்கு எண் இவை இரண்டும் இருந்தால், முதலீட்டை ஆரம்பித்து விடலாம். 

மேலும், முதலீட்டாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்றார்ப்போல உள்ள முதலீட்டைத் தேர்வு செய்யும் வசதி மற்றும் மிகக் குறைவான கால அவகாசத்தில் தங்கள் முதலீட்டைப் பணமாக மாற்றிக்கொள்ளும் வசதி ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை மாதாமாதம் பரஸ்பரநிதியில் சேமிக்கும் போது, Rupee - Cost Average என்கிற முறையில் நீண்ட கால நோக்கில் கிடைக்கும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு நமக்குக் கிடைப்பது UNITS என்று அழைக்கப்படும் அலகுகள். இந்த அலகுகளின் விலை அதிகமாக இருக்கும் போது, நமக்குக் கிடைக்கும் அலகுகளின் எண்ணிக்கை குறைவாகவும், அவைகளின் விலை குறைவாக இருக்கும் போது நமக்குக் கிடைக்கும் அலகுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது, ஒரே தவணையாக முதலீடு செய்வதைவிட, மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதுதான் சரியான வழிமுறை. 

உதாரணமாக இந்தப் படங்களப் பாருங்கள்

இரண்டு வருட கால அளவில் மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வீதம் ஒரு பரஸ்பரநிதி நிறுவனத்தில் ஒருவர் முதலீடு செய்து வந்தார். ஒவ்வொரு மாதம் முதல் தேதி அன்று அந்த நிதியின் Net Asset Value மற்றும் அவருக்குக் கிடைக்கும் அலகுகளின் எண்ணிக்கை இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

இரண்டு வருடம் முடிவில் அவர் சேமித்த தொகை ரூபாய் இருபத்தி நான்காயிரம். அவர் வசம் இருக்கும் அலகுகளின் எண்ணிக்கை 1451.65. அந்த அலகுகளின் மொத்த மதிப்பு ரூபாய் 35,404.27. அவருக்குக் கிட்டிய வளர்ச்சி 46.44%. 

ஆனால் அவர் அதே இருபத்தி நான்காயிரத்தை 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே தடவையாக முதலீடு செய்து இருந்தால் அவரிடம் 2133.72 அலகுகள் இருந்து இருக்கும். அவைகளின் மொத்த மதிப்பு ரூபாய் 52,041.43
ஆக இருந்து இருக்கும்.

ஆனால் இந்த இரண்டாண்டு காலகட்டத்தில் பங்குச்சந்தை பெரிய அளவில் பின்னடைவைச் சந்திக்கவில்லை. இதே நிதியில் ஒருவர் 2011 ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு வருட காலத்திற்கு இதே ஆயிரம் ரூபாயை சேமித்து வந்தால் கிடைத்து இருக்கும் வளர்ச்சியை இந்தப் படங்கள் காட்டுகிறது.

இந்தக் காலகட்டத்தில் அவருக்குக் கிடைத்து இருக்கும் அலகுகளின் எண்ணிக்கை 2233.20 என்றும் அவரது அலகுகளின் மதிப்பு 26,356.24 என்றும் இருக்கும். அதாவது அவரது சேமிப்பின் வளர்ச்சி என்பது 10.1% இருக்கும்.

ஒருவேளை அவர் 2011 ஆகஸ்ட் மாதம் முதல் இன்று வரை ( 2015 ஆகஸ்ட்) வரை தனது மாதாந்திர சேமிப்பை ரூபாய் ஆயிரம்வீதம் இதே நிதியில் சேமித்து இருந்தார் என்றால் அவர் வசம் 3684 அலகுகளும், அதன் மதிப்பாக ரூபாய் 89,877/- இருந்து இருக்கும். அதாவது அவர் சேமிப்பின் வளர்ச்சி என்பது 33.89% ஆக இருக்கும்.

முன்னமே  சொன்னதுதான், சிறிய அளவிலான சேமிப்பு, அதுவும் நீண்ட கால நோக்கில், நடுவில் முறிக்காமல் சேமிப்பை வளரவிட்டால் கிடைக்கும் வளர்ச்சி என்பது மிக அதிகமாக இருக்கும்.

எல்லா நிதித் திட்டங்களும் இந்த அளவு வளர்ச்சியைத் தருமா என்றால் தராது என்பதுதான் பதில். உதாரணமாக இதே காலகட்டத்தில் மற்றொரு நிதித் திட்டம் எந்த அளவு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று பார்ப்போம்.


அதே ஆயிரம் ரூபாய் மாத முதலீடு, அதே கால அளவு, ஆனால் அவர் செலுத்திய நாற்பத்தி எட்டாயிரம் என்பது ஐம்பத்தி ஐந்தாயிரத்து நூற்றி ஐம்பது நான்காக மட்டுமே உயர்ந்து உள்ளது. அதாவது பணவீக்கவிகிதத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால் இது ஒரு நல்ல சரியான லாபகரமான முதலீடு இல்லை. 

எல்லா முதலீடும் ஒரே போன்ற வளர்ச்சியைக் காண்பதில்லை என்பதை நிருபிக்கவும், எல்லா முதலீட்டிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்பதைக் காட்டவுமே இதைப் பகிர்ந்தேன். 

எதோ ஒரு பரஸ்பரநிதித் திட்டம் என்று முடிவு செய்யாமல், சரியான நிர்வாகம் உள்ள, ஏற்கனவே சந்தையில் அறிமுகம் உள்ள அனுபவசாலிகள் இருக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதே சரி. 

சனி, 11 ஜூலை, 2015

பரஸ்பர நிதி - ஒரு அறிமுகம்

சேமிப்பு என்பதும் முதலீடு என்பதும் பல நேரங்களில் ஒரே பொருளைத் தரும்படி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் அவை இரண்டும் வேறு வேறானவை.

சேமிப்பு என்பது குறுகியகால அளவில் பயன்படுத்தும் வகையில் இருப்பது. அடுத்தவருடம் போக நினைக்கும் சுற்றுலாவிற்க்கோ, அல்லது இன்னும் பத்து மாதத்தில் வரும் பண்டிகைக்கால செலவுகளுக்கோ என்று அறுதியிட்டு அதற்காக சேமிப்பது. அநேகமாக, உடனடியாக பணமாக மாற்றும் அளவில் வங்கியில் அல்லது சீட்டு நிறுவனங்களில் பாதுகாக்கப் படுவது. மாதாந்திர நகை சேமிப்புத் திட்டங்கள் இதற்க்கான ஒரு உதாரணம். இது போன்ற சேமிப்பில் நமது பணத்தை இழக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும், அல்லது இல்லாமலே இருக்கும். சேமிக்கும் பணத்திற்கு நமக்குக் கிடைப்பது வட்டி வருமானம் மட்டுமே.

ஆனால் முதலீடு என்பது பொதுவாக நீண்டகால கனவுகளை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும். குழந்தைகளின் படிப்பு, அவர்களுக்கான திருமணம், ஓய்வு காலத்தில் பயன்படுத்த இப்படி முதலீட்டுக்கான கால அளவு எப்போதும் அதிகமாகவே இருக்கும். முதலீட்டை உடனடியாகப் பணமாக மாற்றுவது கொஞ்சம் கடினமான செயல். முதலீட்டில் நமது பணத்தை இழக்கும் வாய்ப்பு சற்றே அதிகம். முதலீட்டின் மதிப்பு கூடுவதே நாம் அடைகின்ற பயனாக இருக்கும். அந்த மதிப்பு எந்த அளவில் கூடும் என்பதைக் கணிப்பது கொஞ்சம் கடினமான ஓன்று.

முதலீடு செய்வது என்பது சூதாடுவது அல்ல என்பதை நாம்  புரிந்து கொள்ள வேண்டும். சூதாடுவது என்பது என்ன நிகழும் என்பதைக் கணிக்க முடியாத நிலையில் நமது பணத்தை அதில் ஈடுபடுத்துதல். ஆனால் முதலீடு என்பது போதுமான அளவு தகவல்களுடன், என்ன நடக்கும் என்பதைக் கணித்து அதன் பின் அதில் பணம் முதலீடு செய்தல்.

இந்த உலகில் எப்படி எல்லா மனிதர்களுக்கும் வெவ்வேறு குணங்களும், சிந்தனைகளும் இருக்கிறதோ அதுபோலவே அவர்களுக்கு வெவ்வேறு அளவிலான சவால்களைச் சந்திக்கும் மனப்பாங்கும் இருக்கும். அவர்களின் முதலீடுக்கான காரணங்களும் ( INVESTMENT OBJECTIVES), அந்தக் காரணங்களை அடைய அவர்கள் வசம் இருக்கும் கால அளவும் வெவ்வேறாகவே இருக்கும்.

எனவே, ஒரே வழியான முதலீட்டு ஆலோசனைகள் என்பது அல்லது எல்லோருக்கும் பொருந்தி வரக்கூடிய ஆலோசனைகள் என்றோ ஓன்று கிடையாது. உங்கள் கனவுகள், நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் காரணங்கள், அந்தக் கனவை நினைவாக்க உங்கள் வசம் இருக்கும் கால அளவு இவைகளை வைத்து உங்களுக்கான முதலீட்டு வழியை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். வல்லுனர்களின் அறிவுரை என்பது உங்களுக்கான கைகாட்டி மரமாக  இருக்கலாமே அன்றி அவைகளே முழுவதும் உங்கள் பாதையாக இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவே ஆகும்.

எப்படி உங்கள் உடல்நலத்திற்கான ஆலோசனைகளை ஒரு மருத்துவர் அளிக்கிறாரோ அதுபோல உங்கள் முதலீட்டுக்கான ஆலோசனைகளுக்கு, அதற்கான தேர்ச்சி பெற்ற ஆலோசகர்களும் இருக்கிறார்கள்.

சேமிப்பு என்பதும் முதலீடு என்பது வேறு வேறு என்பதை நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள். முதலீடு என்பது பணத்தைப் பெருக்குவதும், நம்மிடம் உள்ள பணத்தை நமக்காக வேலை பார்க்க வைப்பதும் ஆகும்.இன்றைய நிலையில் நீண்ட கால அளவில் லாபகரமான முதலீடு என்பது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதே ஆகும்.

ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் பலர் தயாராக இருப்பது இல்லை. ஏன் என்றால்
1. பணத்தை இழக்கும் வாய்ப்பு பற்றிய நமது  அச்சம்
2.  இழப்பின் வாய்ப்பைக் குறைக்கும் அளவிற்கு பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் அளவிற்கு பலரிடம் பணம் இருப்பது இல்லை.
3.  பங்குகளின் விலைகளைத் தினப்படி பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
4. சந்தையின் போக்கை  கணிக்கும் துறைசார்ந்த திறமை இல்லை.

ஆனால் என்னால் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு முதலீடு செய்ய முடியும், அதையும் நான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறேன், இந்த நிலையில் நான் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்கிறீர்களா ? உங்களுக்காக உள்ளதுதான் பரஸ்பர நிதிகள் (Mutual Funds) 

உதாரணமாக உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் இருக்கிறது. இதை நீங்கள் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைக்கிறீர்கள். இதுபோல இன்னும் பலரிடம் பணம் இருக்கிறது. நூறு தனிநபர்களிடம் மொத்தமாக ஒரு கோடி ரூபாய் இருக்கிறது, அனைவரும் சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் மேலே குறிப்பிட்டது போன்ற சந்தேகங்களும் பயங்களும் இருக்கிறது. என்ன செய்யலாம் ? பங்குச் சந்தையில் விற்பனர் ஒருவருக்குச் சம்பளம் கொடுத்து உங்கள் அனைவரின் பணத்தையும் அவரைக் கொண்டு நிர்வாகம் செய்யச் சொல்லலாமா? எப்படிப் பட்ட பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்று நீங்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவின்படி, அதாவது உங்கள் விருப்பப்படி / ஆணைப்படி அவரை முதலீடு செய்யச் சொலலாமா ? நிர்வாகிக்கு குறிப்பிட்ட சம்பளம் மட்டுமே, லாபமோ அல்லது நட்டமோ அது உங்கள் அனைவருக்கும் என்று முடிவு செய்துகொள்ளலாமா ? இதைத்தான் பரஸ்பரநிதி நிறுவனங்கள் செய்து வருகின்றன.

ஆனால் பல்வேறு மக்களைக் கூட்டி அவர்கள் எப்படி முதலீடு செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று கேட்டு அறியமுடியாது அதனால், பரஸ்பரநிதி நிறுவனங்கள் தாங்கள் எப்படி முதலீடு செய்யப் போகிறோம் என்பதைத் தெரிவித்து, அந்த முதலீட்டிற்குத் தயாராக உள்ள தனியாரிடம் இருந்து நிதியைத் திரட்டி, தாங்கள் கூறியது போன்று முதலீடு செய்து அதன் லாப நட்டத்தை முதலீட்டலர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த சேவைக்காக முதலீட்டாளர்கள் இடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் கட்டணமாகப் பெற்றுக் கொள்கின்றனர்.

எப்படி உங்களுக்கான வீடு கட்டும் பொறுப்பை ஒரு பொறியாளர் கட்டணம் பெற்றுக்கொண்டு செய்கிறாரோ, எப்படி உங்களுக்கான வழக்கை ஒரு வழக்கறிஞர் நடத்துகிறாரோ அது போல உங்களுக்காக முதலீடு செய்பவர்கள் இருக்கும் ஒரு நிறுவனம்தான் பரஸ்பர நிதி நிறுவனங்கள்.

 ஒவ்வொரு முதலீட்டுத் திட்டமும் வெவ்வேறு குறிக்கோளைக் கொண்டு இருக்கும். அந்தக் குறிக்கோளை அடைய வெவ்வேறு முதலீடுகளைச் செய்ய முடிவு செய்து இருக்கும்.  
  • 1. குறுகிய கால அளவிலான தனியார் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம் 
  • 2. அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம் 
  • 3, தொடர்ச்சியாக வருமானம் வரும் வகையில் நிரந்தர வட்டி தரும் முதலீட்டுப் பத்திரங்களில் / கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம் 
  • 4. நீண்ட கால நோக்கில் வளர்ச்சி அடையும் விதமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் திட்டங்கள்  என்று இந்த முதலீட்டு வகைகளைப் பிரிக்கலாம். 
அநேகமாக பல திட்டங்கள் மேல்குறிப்பிட முதலீட்டில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட திட்டங்களின் தொகுப்பாக இருக்கும். அதாவது ஒரு திட்டம் எழுபது முதல் எண்பது சதவிகிதம் பங்குச் சந்தையிலும், இருபது முதல் முப்பது சதவிகிதம் வரை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம். 

பங்குச் சந்தை முதலீட்டில் எந்த முப்பது நிறுவனங்களின் பங்கு விலை முலமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் தீர்மானிக்கப் படுகிறதோ, அந்த நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யும் நிதித்திட்டங்கள், தேசியப் பங்குச் சந்தை எண்ணை நிர்ணயம் செய்யும் நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யும் திட்டங்கள், பலதரப் பட்ட பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்கள், துறை சார்ந்த பங்குகளில் மட்டும் ( உதாரணமாக வங்கிப் பங்குகள் / மென்பொருள் நிறுவனங்கள் / மருத்துவப் நிறுவனங்கள் / மக்களின் அன்றாடம் பயன் படுத்தும் FMCG நிறுவனங்கள் ) முதலீடு செய்யும் திட்டங்கள் என்று பலவிதமாக முதலீட்டுத் திட்டங்கள் இருக்கிறது. 

 முதலீடு செய்பவர்களின் தேவை, முதலீட்டின் கால அளவு, அவர்களின் நட்டத்தைத் தாங்கும் திறன் இவைகளைப் பொருத்து  எந்தத் திட்டம் தங்களுக்கு உகந்தது என்பதை முதலீட்டாளர்கள் முடிவு செய்ய வேண்டும்.

புதன், 8 ஏப்ரல், 2015

புதையலா இல்லை புதைகுழியா ?

சென்ற ஆண்டு 2014 ஏப்ரல் மாதம் முதல் தேதி அன்று மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் 22,446. ஒரு வருடம் கழிந்து 2015ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அன்று குறியீட்டு எண் இருபத்தி ஐந்து சதவிகிதம் உயர்ந்து 28,260 ஆக இருக்கிறது.

இதே காலகட்டத்தில் Ashok Leyland நிறுவனத்தின் பங்குகள் 227% வளர்ச்சியையும், Britannia நிறுவனம் 158% வளர்ச்சியையும், Jet Airways நிறுவனம் 100% வளர்ச்சியையும் கண்டுள்ளது. மிக அதிகமாக வளர்ச்சி அடைந்த பங்குகள் பற்றிய விவரம் இங்கே.  

என்ன, பங்குச் சந்தையில் முதலீட்டை ஆரம்பிக்கலாமா என்று எண்ணுகிறீர்களா ? கொஞ்சம் பொறுங்கள். இதே காலகட்டத்தில் Reliance Communications நிறுவனத்தின் பங்குகள் 127 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகக் குறைந்து உள்ளது. Tata Steel நிறுவனத்தின் பங்குகள் 401 ரூபாயில் இருந்து 324ஆகவும், Indian Overseas Bank பங்குகள் ஐம்பது ரூபாயில் இருந்து நாற்பத்தி இரண்டு ரூபாயாகவும் குறைந்து இருக்கிறது. சந்தையின் குறியீட்டு எண் வளர்ச்சி காணும் போது இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து இருக்கிறது. ஆக, சந்தையின் குறியீட்டு எண் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு தனிப்பட்ட பங்குகளின் விலையை நாம் நிர்ணயிக்க முடியாது. இதே காலகட்டத்தில் விலை குறைந்த பங்குகள் பற்றிய விவரம் இங்கே. 

பங்குகளின் விலை மாற்றம் அடைய பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும். பங்குகளின் விலை என்பது அந்த நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, லாபத்தில் வளர்ச்சி இவைகளைப் பொறுத்தே அமையும். வருங்காலத்தில் நிறுவனம் வளர்ச்சிபாதையில் செல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் பங்குகள் விலை கூடும். நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்கள் அல்லது வழங்கும் சேவைகள், அதற்க்கான சந்தை, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அரசின் கொள்கை முடிவுகள், உலகளாவிய போட்டி, மாறிவரும் தேவைகள் இவைகள் எல்லாம் நிறுவனத்தைப் பாதிப்பதைப் போலவே பங்குகளின் விலையையும் பாதிக்கும். உதாரணமாக உலகம் முழுவதும் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருள்கள் விற்பனைக்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. இந்திய அளவில் புகையிலை மற்றும் மதுபானங்களுக்கு விளம்பரம் செய்யவும், விற்பனை செய்யவும் கட்டுப்பாடுகள் உள்ளன. இது துறை சார்ந்த சவால்கள்.




இதுபோல காலமாற்றத்தில் பல பொருள்களின் தேவை என்பது இல்லாமலே ஆகிவிடும். உதாரணமாக தட்டச்சு இயந்திரம், கணினிகள் பயன்பாடு அதிகரித்தால் இல்லாமலே ஆகிவிட்டது. சற்றே யோசித்துப் பாருங்கள், கடந்த ஐந்து அல்லது பத்து வருடகாலத்தில் உங்கள் பகுதியில் பல பழைய தொழில் நிறுவனங்கள் காணாமல்போய், அங்கே புது நிறுவனங்கள் வந்து இருக்கிறது அல்லவா. இது போலப் பெரிய நிறுவனங்கள் இல்லாமல் ஆகி, பல சிறிய நிறுவங்கள் வளர்ந்து பெரும் நிறுவனங்களாக மாறி இருக்கிறது. உதாரணமாக இன்று நாம் காணும் மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு உள்ளாகத் தொடங்கப்பட்டதுதான். மாறிவரும் உலகில் மாற்றத்தை சரியாக எதிர்கொண்டு மாறாத நிறுவனங்கள் காணாமல் ஆவது தவிர்கமுடியாத நிகழ்வே ஆகும்.

இந்த மாற்றங்கள், சவால்கள் இவைகளைப் பலரால்  அறிந்துகொள்ள, புரிந்து கொள்ள முடியும். ஆனால் புரியாத சில சுழல்களும் பங்குச் சந்தையில் உண்டு. முதலீடு செய்யும் பொதுமக்களின் பேராசையையும், சரிதான புரிதல் இன்மையையும் பயன்படுத்தி சந்தையின் போக்கை மாற்றும் திமிங்கிலங்களும் பங்குச்சந்தையில் அவ்வப்போது தென்படுவதுண்டு. 1992ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாத இறுதிக்கும் சந்தையின் குறியீட்டு எண் 2000இல் இருந்து 4000என இருமடங்கு உயர்ந்தது. 

அப்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருந்த திரு நரசிம்மராவ் அவர்கள் அரசு அறிமுகப்படுத்திய உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் என்ற  புதிய பொருளாதாரக் கொள்கைகளால் இந்த வளர்ச்சி இருந்தது என்று மக்கள் எண்ணிக்கொண்டு இருந்தனர். ஆனால் அதற்குப் பின் இருந்தது ஒரு தனி மனிதன். அவர் பெயர் ஹர்ஷத் மேத்தா. 


வங்கிகளில் உள்ள பணத்தை சந்தைக்குத் திருப்பிவிட்டு வரலாறு காணாத அளவில் சந்தையின் மதிப்பை அவர் உயர்த்தினார். பங்கு வர்த்தகம் பற்றித் தெரியாத பலர் அப்போது பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கினர். ஆனால் இதைப் பல காலம் தொடர்ந்து அவரால் செய்ய முடியாமல் மாட்டிக் கொண்டு சிறைப்பட்டு அங்கேயே இறக்கவும் செய்தார். எப்படி இருந்தாலும் ஹர்ஷத் மேத்தா பெயரைச் சொல்லாமல், இந்தியப் பங்குச் சந்தையைப் பற்றி பேச முடியாது. அவர் கைவண்ணத்தால் 1992இல் 400ஐத் தொட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் அடுத்த ஆயிரத்தைத் தொட எழு வருடங்கள் ஆனது. அந்த அளவு மக்கள் சந்தையை விட்டு விலகி இருந்தனர். 

அது 2009ஆம் ஆண்டு. இந்தியாவின் பெரும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்கராஜு அவரது நிறுவனம் தாக்கல் செய்த கணக்குகள் உண்மையானவை இல்லை என்று ஒத்துக்கொண்டார். உடனடியாக அந்த நிறுவனத்தின் பங்குவிலை சரிந்தது, அதோடு கூடவே சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் பங்கு விலைகளும் குறைந்தன. 


ராஜு கைதுசெய்யப்பட்டார், சத்தியம் நிறுவனத்தை மகேந்திரா நிறுவனம் விலைக்கு வாங்கியது. இன்று அந்த நிறுவனம் சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. 

சிறிதும் பெரிதுமான பங்குச்சந்தை ஊழல்கள் இதுபோலப் பல கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. எப்போதும் காவலாளியைவிட கள்ளனே திறமையானவனாக இருக்கிறான். 

பங்குவர்த்தகத்தை முறைப்படுத்த SECURITIES AND EXCHANGE BOARD OF INDIA என்ற அமைப்பை அரசாங்கம் உருவாக்கியது. மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி உடன் இணைந்து இந்தியப் பங்குச் சந்தைகளை செபி கண்காணித்து வருகிறது. 


மிக அதிகமாக வளர்ச்சி கிட்டும் முதலீடு என்று சொல்லிவிட்டு உடனேயே சந்தையில் நடக்கும் ஊழல்கள் பற்றி ஏன் பேசுகிறோம் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா. நாள்தோறும் விபத்துகள் நடக்கின்றன என்பதற்காக நாம் சாலைகளில் பயணம் செய்யாமல் முடங்கிவிடுவது இல்லை, அதுபோல்தான் நாம் பயணம் செய்ய இருக்கும் பொருளாதாரப் பாதையில் உள்ள சிக்கல்களை சிறிது எடுத்துக் கூறினேன். ஆனால் இவைகளைத் தாண்டிதான் நாம் பயணிக்க வேண்டும். ஆனால் கூடியவரை சிக்கல் இல்லாமல் பயணிக்கவேண்டும், அதற்கு என்ன செய்யலாம் ? 

வாருங்கள் பயணிப்போம். 

தொடர்புடைய பதிவுகள் 

திங்கள், 6 ஏப்ரல், 2015

பங்குச் சந்தை

நம்மிடம் உள்ள முதலீட்டுக்கான வழிகளில் மிக அதிகமான வளர்ச்சியைக் கொடுக்கக் கூடியது பங்குகளில் முதலீடு செய்வது மட்டுமே. மிகக் கவர்ச்சிகரமானதும் மிக அபாயமான சந்தை முதலீட்டைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நமக்கு காய்கறிச் சந்தை, மீன் சந்தை இவைகளைப் பற்றித் தெரியும். சந்தை என்பது வாங்குபவர்களும் விற்ப்பவர்களும் அதோடு வேடிக்கை பார்பவர்களும் கூடும் இடம். பண்டமாற்று முறையிலோ அல்லது பணப் பரிமாற்றம் மூலமாகவோ பொருள்களும் சேவைகளும் கைமாறும் இடம்.

பங்குச் சந்தை என்பதும் அதுபோல பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யப்படும் இடமாகும். முன்பெல்லாம் நாம் காய்கனி வாங்க அவைகள் விற்பனை செய்யப் படும் இடத்திற்க்குச் சென்றாக வேண்டும். அதுபோல பங்குகள் வாங்க, விற்க பங்குச் சந்தைக்குச் செல்லவேண்டும். இன்று அறிவியல் முன்னேற்றம் காரணமாக காய்கனிகளை தொலைபேசி மூலமாகவோ இல்லை இணையதளம் மூலமாகவோ வாங்குவது போலவே பங்குகளையும் தொலைபேசி மூலமாக, இணையம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியும்.

பங்குகள் - ஒரு அறிமுகம். 
ஒரு தொழிலைத் தொடங்கவும், காலப் போக்கில் அது வளர்ச்சி அடையும்போதும் அதற்க்கு முதலீடு தேவைப்படும். தொழில்முனைவர் பொதுவாக தங்கள் கைவசம் உள்ள பணத்தை அவர் தொழிலில் முதலீடு செய்வார். அதற்க்கு மேலும் பணம் தேவைப்பட்டால் பங்குதாளர்களைச் சேர்த்துக் கொண்டோ, இல்லை வங்கிகளில்/தனியாரிடம் கடன் வாங்கியோ அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வார். கடன் வழங்குபவர்களுக்கு தொழிலின் லாப நட்டதைப் பற்றி பெரிய அளவில் கவலை இருக்காது. அவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணம் வட்டியோடு திரும்பி வருமா என்ற கேள்விதான் முக்கியமாக இருக்கும். ஆனால் பங்குதாளர்களுக்கு நிறுவனத்தின் லாபத்திலும் நட்டத்திலும் பங்கு உண்டு.

பெரும் அளவில் பணம் தேவைப்படும் தொழில்களில் பொதுமக்களையும் பங்குதாளர்களாக சேர்த்துக் கொள்வது உண்டு. அப்போது அந்த முதலீட்டாளர்கள் தொழிலில் உள்ள லாப நட்டத்தையும் பகிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு தொழிலைத் தொடங்க எனக்கு ஐந்து கோடி ரூபாய் தேவைப்படுகிறது. என்வசம் இரண்டு கோடி ரூபாய்தான் இருக்கிறது என்றால், மீதி மூன்று கூடி ரூபாய்க்கு நான் பங்குகளை விற்கலாம். என்மீது நம்பிக்கை உள்ளவர்கள் (அப்படி யாரேனும் இருந்தால்) அந்தப் பங்குகளை வாங்கிக் கொண்டு நான் தொடங்கும் தொழிலில் பங்கெடுத்துக் கொள்வார்கள். பொதுவாக பங்குகளின் முகமதிப்பு பத்து ரூபாயாக இருக்கும். அப்போது இந்தத் தொழிலுக்காக நான் அம்பது லட்சம் பங்குகளை வெளியிட்டு, அதில் இருபது லட்சம் பங்குகளை வைத்துக் கொண்டு, முப்பது லட்சம் பங்குகளை வெளியீடு செய்வேன். நிறுவனத்தின் லாப நட்டதை ஒட்டி, இந்தப் பங்குகளின் விலை மாற்றம் அடையும். இப்படி வெளியிடப் படும் பங்குகள் தான் பங்குச் சந்தையில் விற்பனையாகிறது.

ஒருவேளை நான் ஏற்க்கனவே லாபகரமாக நடத்திக்கொண்டு இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்ய எனக்குப் பணம் வேண்டி இருந்து அதற்காக நான் பங்குகளை வெளியிட்டால், முகமதிப்பான பத்து ரூபாய்க்கு மேல் ஒரு தொகையை (Premium) அதிகமாக வைத்து வெளியிடலாம். புதிதாக ஆரம்பிக்கும் தொழில் லாபமடைய கொஞ்ச நாட்கள் பிடிக்கும். ஆனால் நடந்து கொண்டு இருக்கும் தொழில் உடனடியாக லாபம் தருவதால் இந்த அதிகப் பணம் கொடுக்கப்படுகிறது.

தொழில்முனைவோரின் பின்னணி, அவரது அனுபவம், ஏற்க்கனவே அவர் நடத்தி வரும் தொழில்கள், அவர் தொடங்க / விரிவாக்கம் செய்ய உள்ள தொழில், அதற்க்கான சந்தை இவைகளைப் பொருத்து முதலீட்டாளர்கள் அந்தப் பங்கை வாங்க முன்வருவார்கள்.

மும்பை பங்குச் சந்தை 
இந்தியாவில் மும்பையிலும் அதுபோன்ற பெருநகரங்களிலும் பங்குச் சந்தைகள் இயங்கி வருகின்றன. அவைகளில் மிகவும் பழமையானதும், அளவில் பெரியதும் மும்பை பங்குச் சந்தைதான். மும்பை பங்குச் சந்தை ஆசியாவின் மிகப் பழமையான ஒரு நிறுவனம். இது 1875ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் ஐயாயிரத்திற்கும் அதிகமான நிறுவங்களின் பங்குகள் பரிமாற்றம் ஆகின்றன.

மும்பை பங்குச் சந்தை இணையத்தளம் 

பங்குச்சந்தை குறியீடு ( Sensex ) 
இந்த நிறுவனங்களில் இருந்து வெவ்வேறு துறையில் இருந்து, அளவில் பெரிய முப்பது நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பங்குச் சந்தை குறியீடு எண் நிர்ணயம் செய்யப் படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி அன்று இந்த குறியீடு எண் 100 என்று எடுத்துக் கொண்டு, நாள்தோறும் இந்த முப்பது பங்குகளின் விற்பனை விலையை வைத்து இது நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த முப்பது நிறுவனங்கள் என்பது நிலையான ஓன்று இல்லை. இவை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுவது. 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி இந்த எண் 27,957.49 என்று குறிக்கப்பட்டு உள்ளது.

அதாவது  36 வருடங்களில் சந்தையின் மதிப்பு 280 மடங்கு அதிகரித்து உள்ளது. ஏறத்தாழ வருடாவருடம் சந்தையின் மதிப்பு இரட்டிப்பாகிறது என்று கொள்ளலாம்.

எல்லாப் பங்குகளும் இதே அளவில் கூடி இருக்கிறது என்பது இல்லை, சில பங்குகள் இந்த அளவைத் தாண்டியும் கூடி இருக்கலாம். சில பங்குகள் விலை குறைந்தும் இருக்கலாம். குறியீட்டு எண் என்பது ஒரு கைகாட்டி மரம் போலத்தான் என்பதை நினைவில் வையுங்கள்.

கடந்துவந்த பாதை 





சந்தை முதல் பத்து வருடத்தில் பத்து மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் நாலாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் வளர்ச்சி அடைய ஏறத்தாழ எழு வருடங்களும், அதில் இருந்து ஏழாயிரம் எண்ணிக்கையைத் தொட ஆறு வருடங்களும் ஆகி இருக்கிறது. குறியீட்டு எண் இருபதாயிரத்தில் இருந்து இருபத்தி இரண்டாயிரம் வர எழு வருடங்கள் ஆகி உள்ளது. ஆனால் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு உள்ளாக ஒரே வருடத்தில் இருபத்தி இரண்டாயிரத்தில் இருந்து முப்பதாயிரம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. போதுமான கால அவகாசம் கொடுத்து இருந்தால் பங்குச் சந்தையில் கிடைக்கும் வளர்ச்சி வேறு எந்த முதலீட்டிலும் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.

தொடக்கம் முதல் இந்த வருடம் வரை சந்தையின் போக்கு.


1979 முதல் 1989 வரையான முதல் பத்து வருட வளர்ச்சி.

1989 முதல் 1999 வரையான இரண்டாவது பத்து வருட வளர்ச்சி


1999 முதல் 2009 வரை

2009 முதல் 2015 வரை

குறைந்த பட்சம் எழு வருடங்களுக்குக் குறையாமல் கால அவகாசம் தருவது உங்கள் பணத்தைப் பெருக்கும் வழியாக இருக்கும்.

காளையும் கரடியும் 
பங்குகளின் மதிப்பு என்பது எல்லா நேரத்திலும் நிறுவனங்களின் அடிப்படையை வைத்து இருப்பது இல்லை. எதிர்பார்ப்புகளை, கணிப்புகளை வைத்தே முதலீட்டாளர்கள் பங்குகளின் விலைகளை நிர்ணயம் செய்கிறார்கள். உதாரணமாக தற்போதைய அரசாங்கத்தின் மீது உள்ள நம்பிக்கை பங்குகளின் விலையை ஏற்றிவைத்து உள்ளது. ஒரு வேளை சந்தையின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப தற்போதைய அரசு செயல்படவில்லை என்றால் இந்த விலைகள் கீழே போகவும் கூடும். சந்தை ஏறுமுகமாக இருந்தால் அது காளையின் பிடியில் உள்ளது என்றும், இறங்குமுகமாக இருந்தால் அது கரடியின் பிடியில் உள்ளது என்றும் கூறுவார்கள். காளை அதன் கொம்புகளால் முட்டித் தூக்குவதாலும், கரடி தன் கைகளால் பிடித்து அழுத்துவதாலும் இந்தப் பெயர்கள் குறிக்கப்படுகின்றன.



1979ஆம் வருடம் உங்களிடம் ஒரு லட்ச ரூபாய் இருந்து, நீங்கள் அதனை எங்கேயும் முதலீடு செய்யாமல் உங்கள் கையிலேயே வைத்து இருந்தீர்கள் என்றால், உங்களிடம் அதே ஒரு லட்ச ரூபாய் இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அந்தப் பணத்தின் வாங்கும் சக்தி ரூபாய் ஆறாயிரமாக இருக்கும். அதே பணத்தை நீங்கள் வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் (Fixed Deposit) முதலீடு செய்து இருந்தால் அந்தப் பணம் பதினேழு லட்சமாக வளர்ந்து இருக்கும், ஆனால் பணவீக்கவிகிதத்தால் அதன் வாங்கும் மதிப்பு ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாயாகத்தான் இருக்கும்.

இதே பணத்தை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்து இருந்தால் அதன் மதிப்பு இன்று முப்பத்தி ஆறு லட்சமாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தைக் கணக்கில் எடுத்தால், அதன் மதிப்பு 2.3 லட்ச ரூபாயாக இருக்கும்.

இதே ஒரு லட்ச ரூபாயை அன்று நீங்கள் சந்தை குறியீடு எண்களைக் குறிக்கும் பங்குகளில் முதலீடு செய்து இருந்தால், அதன் மதிப்பு இன்று 2.32 கோடி ரூபாயாக இருக்கும், ஆனால் பணவீக்க விகிதத்தால் அதன் மதிப்பு பதினான்கு லட்ச ரூபாயாக இருக்கும். இதில் சந்தை குறியீட்டு எண்களாக இருக்கும் நிறுவனங்கள் நிலையாக இருப்பதில்லை என்பதை நினைவில் வைக்கவும்.

( அதாவது 1979ஆம் வருடத்தில் 14 லட்ச ரூபாய்க்கு எதை வாங்க முடியுமோ அதைதான் 2015ஆம் வருடத்தில் உங்கள்வசம் இருக்கும் 2.32 கோடி ரூபாயால் வாங்க முடியும் )

 மாற்றம் ஒன்றே மாறாதது. சந்தை எப்போதும் ஏறுமுகமாகவோ இல்லை இறங்குமுகமாகவோ நிலையாக இருப்பது இல்லை. குறைந்த விலையில் வாங்கி, விலை அதிகமாகும்போது விற்றால் லாபம் கிடைக்கும். மிக எளிதாகத் தோன்றினாலும், பலர் பங்குச்சந்தையில் பணத்தை இழக்கவே செய்கின்றனர். இதற்க்கு இரண்டு காரணங்கள், ஓன்று அடிப்படை தெரியாமல் பங்கு வர்த்தகத்தில் இறங்குவது, இரண்டாவது இன்னும் இன்னும் மேலே விலை உயரும் என்ற பேராசை.

 இந்த இரண்டு காரணங்களால் பணத்தை இழந்தவர்கள், சூடு பட்ட பூனை பாலைப் பார்த்து பயந்து ஓடுவது போல பங்குச் சந்தையை சூதாட்டம் என்று மற்றவர்களைப் பயமுறுத்துகின்றனர்.

அப்படி என்றால் பங்குச் சந்தை முதலீடு புதையலா இல்லை புதைகுழியா ? வாருங்கள் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

தொடர்புடைய பதிவுகள் 
1. முதலீட்டுக்கான சில வாய்ப்புகள் 
2. எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை
3. பணவீக்கம் ஒரு எளிய அறிமுகம்