புதன், 31 ஜூலை, 2019

ஹிந்தி மொழியின் உபன்யாஸ சாம்ராட் முன்ஷி பிரேம்சந்த் - ஜூலை 30


ஹிந்தி மொழியின் புகழ்பெற்ற நாவலாசிரியரும் நாவலாசிரியர்களில் சக்கரவர்த்தி ( உபன்யாஸ சாம்ராட் ) என்று போற்றப்படும் முன்ஷி பிரேம்சந்த்  அவர்களின் பிறந்தநாள் இன்று. பனிரெண்டுக்கும் மேற்பட்ட புதினங்கள், இருநூற்று ஐம்பது சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகள் மேலும் பல்வேறு மொழிபெயர்ப்புகள் என்று சாம்ராட் பட்டத்திற்கு தகுதியானவர்தான் பிரேம்சந்த்.

புனிதமான காசிநகரின் வடக்குப் பகுதியில் உள்ள லாம்ஹி பகுதியில் தபால் அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டு இருந்த அஜெய்ப் ராய் - ஆனந்தி தேவி தம்பதியினரின் மகனாக 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் நாள் பிறந்தவர் பிரேம்சந்த்.  இவரின் இயற்பெயர் தன்பதி ராய். இவரது பெற்றோருக்கு முதலில் பிறந்த இரண்டு குழந்தைகள் இறந்துவிட, மூன்றாவது ஒரு சகோதரியுடன் இவர் நான்காவது மகவு.

இவரது மாமா இவரை நவாப் என்று செல்லமாக அழைப்பது உண்டு. அதனால் இவர் முதலில் எழுதும்போது நவாப் ராய் என்ற புனைபெயரிலேயே எழுதத் தொடங்கினார். தனது ஏழாவது வயதில் ஒரு மதராசாவில் தனது படிப்பைத் தொடங்கினார் தன்பதிராய். இவரது எட்டாவது வயதில் தாயாரும், அதனைத் தொடர்ந்து சிறுது காலத்திலேயே தாயாரின் தாயரும் இறந்து போக, அதற்கு முன்பே இவரின் சகோதரிக்கு திருமணம் ஆகிவிட, தன்பதி ராய் தனித்து விடப்பட்டார்.

வேலை நிமித்தமாக கோரக்பூர் நகருக்கு மாற்றலாகிய இவரின் தந்தை மறுமணம் செய்துகொண்டார். சித்தியிடம் இருந்து தன்பதி ராய்க்கு எந்த பரிவும் கிடைக்கவில்லை. பிரேமச்சந்தின் படைப்புகளில் இப்படியான சித்தி பாத்திரம் மீண்டும் மீண்டும் வருவதை நாம் பார்க்கலாம். கவனிப்பார் யாருமில்லாத தன்பதி ராய் புத்தகம் படிப்பதிலும், அதுபற்றிய எண்ணங்களில் திளைத்து இருப்பதுமாக தனது இளமைப்பருவத்தை கழித்தார். தொடர்ந்து சோதனைகள் அவரை வாட்டியது. தனது பதினேழாம் வயதில் தந்தையையும் இழந்தார். இதற்கு நடுவில் அவருக்கு திருமணமும் ஆகி இருந்தது. படிப்பிலும் சிறப்பானவராக இல்லை. பள்ளி இறுதி தேர்வில் இரண்டாம் வகுப்பில்தான் தேர்ச்சி பெற முடிந்தது. சிறிது காலம் வாரணாசியிலேயே பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அந்த காலகட்டத்தில்தான் இவர் எழுதத் தொடங்கினார்.

இவரது தொடக்ககால படைப்புகள் விடுதலைப் போராட்டத்தை களமாகக் கொண்டே படைக்கப்பட்டது. திலகர் வழியில் தீவிரமாக போராடவேண்டும் என்பதே இவரின் எண்ணமாக இருந்தது. இவரது சில படைப்புகள் அரசால் தடை செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அரசு வேலையில் இருந்துகொண்டே எழுதியதால் இவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் நவாப்ராய் என்ற புனைபெயரில் இருந்து பிரேம்சந்த் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.

தனது வேலையின் காரணமாக கான்பூர் கோரக்பூர் என்று பல்வேறு நகரங்களில் வசித்து வந்த பிரேம்சந்த் தனது நாற்பதாவது வயதுக்குளாகவே பல்வேறு படைப்புகளை உருவாக்கி உருது மற்றும் ஹிந்தி மொழியின் முக்கிய படைப்பாளியாக அறியப்பட்டு இருந்தார். அப்போது காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு தனது வேலையை ராஜினாமா செய்தார். சிறிதுகாலம் மும்பையில் திரைத்துறையில் பணியாற்றினார்.

பிரேம்சந்தின் காலம் என்பது ஸ்வாமி விவேகானந்தர், கோகலே, திலகர் அதன்  காந்தி என்று பல்வேறு தலைவர்கள் நாட்டில் பெரும் தாக்கத்தை உருவாக்கிய காலம். அது பிரேம்சந்தின் படைப்புகளிலும் காணலாம். சுதந்திர போராட்டம், ஏழ்மை ஒழிப்பு, கல்வி சீர்திருத்தம், தொழிலாளர்களின் ஒடுக்கப்பட்ட நிலைமை என்ற கருத்துக்கள் இவர் படைப்புகளில் விரவி இருப்பதை நாம் காணலாம். தமிழகத்தில் பாரதி போன்று ஹிந்தி மற்றும் உருது மொழியில் ஒரு புது பாதையைத் தொடங்கி வைத்தவர் என்ற பெருமை முன்ஷி பிரேம்சந்த் அவர்களையே சாரும். சேவா சதன், நிர்மலா, கோதான், கர்மபூமி என்பவை இவரின் முக்கியமான சில படைப்புகள், இவரது பல புத்தகங்கள் தமிழ்மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

1936ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் பிரேம்சந்த் காலமானார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக