சனி, 23 நவம்பர், 2019

தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்த் பிறந்தநாள் - நவம்பர் 23


பாரத நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய தொழிலதிபரும், வால்சந்த் குழுமத்தைத் தொடங்கியவருமான வால்சந்த் ஹிராசந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று. வியாபாரம் செய்யும் பின்னணியில் தொடங்கிய இவர் கப்பல்துறை, கப்பல் கட்டும் தொழில், கார் உற்பத்தி, விமான கட்டுமானம், கட்டடம் கட்டுதல், சர்க்கரை  உற்பத்தி, ராணுவ தளவாடங்கள் தயாரித்தல் என்று பல்வேறு துறைகளில் தடம் பதித்தவராவார்.

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த சமண மரபினர் திரு ஹிராசந்த் நேம்சந்த் ஜோஷி. இவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் பருத்தி வியாபாரம் செய்து வந்தார். இவரின் மகனாக 1882ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் பிறந்தவர் வால்சந்த் ஹிராசந்த். சோலாப்பூர் அரசு பள்ளியிலும் அதனைத் தொடர்ந்து மும்பை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றார் வால்சந்த். அன்றய வழக்கப்படி படிக்கின்ற காலத்திலேயே இவருக்கு திருமணம் ஆகி விட்டது. ஆனால் சிறிது காலத்திலேயே இவர் மனைவி இறந்துவிட மறுமணம் செய்துகொண்டார்.

படித்து முடித்தபின் தந்தையின் தொழிலில் இணைந்த ஹிராசந்த், அதன் பின்னர் ரயில்வே துறையின் கட்டடங்கள் கட்டும் ஒப்பந்தகாரராக உருவானார். தொடர்ந்து ஆங்கில அரசுக்கு பல்வேறு கட்டடங்களையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் இவர் செய்து கொடுக்கத் தொடங்கினார். அதே நேரத்தில் இந்திய தேசிய கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். அண்ணிபெசன்ட் அம்மையாரோடு இணைந்து Free Press of India என்ற செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் அநேகமாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரமற்ற செய்தி நிறுவனமாகவே இயங்கியது.

சில காலம் டாடா குழுமத்தோடு இணைந்து கட்டிடத்துறையில் செயல்பட்ட வால்சந்த் பிறகு டாடா குழுமத்தின் பங்குகளையும் வாங்கிக்கொண்டார். இன்று நாட்டின் முக்கியமான கட்டுமான நிறுவனமாக விலங்கு Hindustan Construction Company என்ற நிறுவனமும் இவர் நிறுவியதுதான். வால்சந்த் அவர்கள் சர்க்கரை தயாரிக்க 1908ஆம் ஆண்டு Walchandnagar Industries என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் காலப்போக்கில் சர்க்கரை ஆலைகளை உருவாக்குதல், சிமெண்ட் தயாரிப்பு, பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி என்று பல்வேறு திசைகளில் வெற்றிகரமாகப் பயணித்தது. இன்று நாட்டுக்குத் தேவையான ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பணியிலும் இந்தக் குழுமம் ஈடுபட்டு உள்ளது. பொக்ரானில் பாரதம் நடத்திய அணுகுண்டு வெடிப்பு சோதனையை அடுத்து அமெரிக்கா இந்த நிறுவனத்தின் மீது தடை விதித்தது, பின்னர் அது விளக்கிக்கொள்ளப்பட்டது.

குவாலியர் அரச குடும்பத்தினரிடம் இருந்து கப்பல் ஒன்றை வாங்கி வால்சந்த் சிந்தியா கப்பல் கம்பெனி என்ற பெயரில் ஒரு புது தொழிலைத் தொடங்கினார். சில காலத்தில் விசாகப்பட்டினதில் கப்பல் கட்டும் தளத்தை நிறுவினார். கப்பல் தொழிலோடு இணைந்ததுதான் காப்பீடு நிறுவனம், எனவே அதையும் அவர் ஆரம்பித்தார். மைசூர் அரச குடும்பத்தோடு இணைந்து பெங்களூர் நகரில் விமான தயாரிப்பிலும் வால்சந்த் ஈடுபட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கப்பல் கட்டும் தளத்தையும், விமான தயாரிப்பு நிறுவனத்தையும் அன்றய அரசு நாட்டுடமை ஆக்கியது. அவை இன்று Hindustan Shipyard Ltd, Hindustan Aeronautical Ltd என்று அறியப்படுகின்றன. இதோடு வால்சந்த் கார் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டார். சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் வரை புகழ்பெற்ற விளங்கிய Premier Padmini கார்கள் இவரது தயாரிப்பே.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளையும் வால்சந்த் நிறுவினார். தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம், இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு, மகாராஷ்டிரா மாநில தொழில்  தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஆகியவற்றில் நீண்ட காலம் தலைவராகவும் வால்சந்த் பணியாற்றினார்.

பாரதம் சுதந்திரம் அடைந்த நேரத்தில் இந்தியாவின் முதல் பத்து  முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த வால்சந்த் ஹிராசந்த் 1953ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் நாள் காலமானார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக