சனி, 27 செப்டம்பர், 2025

செப்டம்பர் 27 - நூலகவியலின் பிதாமகர் எஸ் ஆர் ரெங்கநாதன் நினைவுதினம்

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்று அறிஞர்கள் கூறுவார்கள். மகத்தான மனிதர்கள் தங்கள் சிந்தனைகளை, வாழ்வியலை புத்தகங்கள் மூலமாகவே வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார்கள். எல்லாவற்றைப் பற்றியும் நாம் அனுபவித்துத் தெரிந்து கொள்ள முடியாது, எனவே பல்வேறு புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவே நாம் அறிவைப் பெருகிக் கொள்ள முடியும், அதன் அடிப்படையிலேயே அடுத்த கட்ட விவாதங்கள் மூலம் மனிதகுலம் முன்னேறமுடியும். அப்படியான சிறப்பான புத்தகங்களை பலரும் பயன்பெறும் வண்ணம் சேர்த்து, சேமித்து தேவைப்படும் ஆட்களுக்கு வழங்கும் நூலகங்களை இன்னும் சிறப்பாக மாற்றிக் காட்டியவர் சீர்காழி ராமாமிர்தம் ரெங்கநாதன் என்ற எஸ் ஆர் ரெங்கநாதன். பாரதநாட்டின் நூலகவியலின் தந்தை என்று திரு ரெங்கநாதன் கொண்டாப்படுகிறார்.



ராமாமிர்த ஐயர் - சீதாலட்சுமி தம்பதியரின் மகனாக 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12நாள் பிறந்தவர் திரு ரெங்கநாதன். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த ரெங்கநாதனையும் அவரது உடன்பிறப்புகளையும் அவர் தாயார் வளர்த்து வந்தார். சீர்காழியில் உள்ள எஸ் எம் ஹிந்து பள்ளியில் தனது பள்ளியிறுதி வகுப்பை முடித்த ரெங்கநாதன், அதன் பின்னர் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார். அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பயிற்சித் தேர்விலும் வெற்றிபெற்று ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். மங்களூரிலும், கோவையிலும் பணியாற்றிய ரெங்கநாதன் அதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றத் தொடங்கினார்.  அதே காலகட்டத்தில் சென்னையில் நடைபெற்றுவந்த ஆசிரியர் சங்கத்தின் இயற்பியல் மற்றும் கணிதத் துறையின் செயலாளராகவும் இருந்தார். பொதுமக்களும் மாணவர்களும் அறிவியல்துறையில் ஆர்வம் கொள்ள அவர் தொடர்ந்து பல்வேறு சொற்பொழிவுகளையும் நடத்தி வந்தார்.

1924ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தின் நூலகராக அவர் தேர்வானார். மாணவர்கள் சூழ ஆசிரியர் பணி செய்துகொண்டு இருந்த ரெங்கநாதனுக்கு ஆள்களே வராத நூலகத்தில் பணியாற்ற விருப்பமில்லை. ஆனால் நூலகவியல் பற்றி தெரிந்து கொள்ள இங்கிலாந்து செல்லுமாறும், அதன் பின்னரும் நூலகர் பணி விருப்பமானதாக இல்லாமல் இருந்தால் அவரை மீண்டும் ஆசிரியர் பணிக்கு மாற்றுவதாகவும் பல்கலைக்கழகம் உறுதி அளித்து, அவரை நூலகராக நியமனம் செய்தது.

1924ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சென்ற ரெங்கநாதன் ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் அங்கே தங்கி இங்கிலாந்து நாட்டில் நூலகங்கள் செயல்படும்விதம் பற்றி ஆராய்ந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்துறையின் விரிவுரையாளராக பணியாற்றிய பெர்விக் சாயேர்ஸ் என்பவர் நூலகத்துறையின் நுணுக்கங்களை ரெங்கநாதனுக்கு கற்றுக் கொடுத்தார். இங்கிலாந்து நாட்டிலுள்ள பல்வேறு நூலகங்களுக்கு ரெங்கநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பணிபுரியும் தொழிலாளிகள், ஆராய்ச்சியாளர், பெண்கள் என்று சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கும் ஏற்றவாறு நூலகங்களை எப்படி அமைக்க
வேண்டும் என்ற புரிதல் ரெங்கநாதனுக்கு ஏற்பட்டது. ஆசிரியர் பணியைக் காட்டிலும் நூலகராக தனது பணி இன்னும் தேவையானது என்ற உறுதியோடு அவர் 19025ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரதம் திரும்பினார்.

நாடு திரும்பிய ரெங்கநாதன் சென்னை பல்கலைக்கழகத்தின் நூலகத்தை சீரமைக்கும் வேலையத் தொடங்கினார். நூலகத்திற்கு வாசகர்களின் வருகையைக் கூட்டுவதிலும், அவர்கள் நிம்மதியாக அமர்ந்து படிக்கும் அளவிற்கு தேவையான வசதிகளைச் செய்துகொடுக்கவும், புத்தகங்களை முறைப்படி அட்டவணைப் படுத்தவும் என்று அவரது வேலைகள் ஆரம்பமானது. இவரது சேவைகளைப் பார்த்த அன்றய அரசு, சென்னை பல்கலைக்கழக நூலகத்திற்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கி ஆதரவு தந்தது.

சென்னை நூலக சங்கத்தை நிறுவி, அதன் மூலம் பொதுமக்களின் ஆதரவையும், படிக்கும் பழக்கத்தையும் முன்னெடுக்கும் பணியும் ஆரம்பமானது. அன்றய சென்னை ராஜதானி என்பது இன்றய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா வரை பரவியிருந்த பெரும் நிலப்பரப்பு என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்று தென்னிந்தியாவில் பரவியுள்ள நூலகங்கள் என்பது ரெங்கநாதனின் முயற்சியின் பலனே ஆகும்.

ஐந்து நூலக விதிகள். 

ரெங்கநாதனின் பெரும்பங்களிப்பு என்பது அவர் உருவாக்கிய நூலக விதிகளே ஆகும்.

1, புத்தகங்கள் என்பது பயன்படுத்தவே
2, ஒவ்வொரு வாசகருக்கும் எதோ ஒரு தேவையான புத்தகம்
3, ஒவ்வொரு புத்தகத்திற்கும் எதோ ஒரு வாசகன் உண்டு
4, வாசகரின் நேரத்தை நூலகம் வீணடிக்கக்கூடாது
5, நூலகம் என்பது தொடர்ந்து வளரும் நிறுவனம்.

சென்னையில் நூலகவியலுக்கான கல்லூரி ஒன்றை ரெங்கநாதன் 1929ஆம் ஆண்டு தொடங்கி, அதன் இயக்குனராக 15 ஆண்டு காலம் பணியாற்றினார். 1957ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தை நூற்றாண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக தனது மனைவி பெயரில் சாரதா ரெங்கநாதன் நூலக இருக்கையை உருவாக்க ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.

21 ஆண்டு கால நூலகப் பணிக்கு பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து ரெங்கநாதன் விருப்ப ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட எண்ணி இருந்த அவரை காசி ஹிந்து சர்வகலாசாலை தங்கள் நூலகத்தை சீரமைக்க அழைப்பு விடுத்தது. ஏறத்தாழ ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட அந்த நூலகத்தை தனியொருவனாக ரெங்கநாதன் மேம்படுத்தினார்.

1947ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் நூலகத்துறை ஆசிரியராக ரெங்கநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கண்காணிப்பில் டெல்லி பல்கலைக்கழகத்தில் நூலகப் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டது. டெல்லியிலும் நூலகத்துறை பற்றிய கலந்தாய்வு கூட்டங்களை ரெங்கநாதன் வாரா வாரம் தனது வீட்டில் நடத்தி வந்தார். நூலகங்கள் சந்திக்கும் சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவை இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன.

டெல்லியில் பணியாற்றிய காலத்தில் பாரத நாட்டில் நூலகத்துறையின் வளர்ச்சிக்கான முப்பதாண்டு கால வரைவு அறிக்கையை ரெங்கநாதன் உருவாக்கி மத்திய அரசுக்கு சமர்ப்பித்தார்.

உலகளவில் நூலகத்துறை செயல்படும் விதம் பற்றி அறிந்துகொள்ள சிறுது காலம் ஸுரிச் நகரிலும், பின்னர் பெங்களூரு நகரிலும் ரெங்கநாதன் வசிக்கத் தொடங்கினார். அப்போது அவர் மத்திய திட்டக்குழு மற்றும் பல்கலைக்கழக நிதி ஒதுக்கீடு குழு ஆகியவற்றின் ஆலோசகராகவும் இருந்தார். மத்திய அரசு அவரை தேசிய நூலக ஆராய்ச்சிப் பேராசிரியர் என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தது. அந்தக் காலத்தில் இந்தப் பெருமையைப் பெற்ற ஐந்தாவது அறிஞர் ரெங்கநாதன். நூலகத்துறைக்கு திரு ரெங்கநாதன் ஆற்றிய சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. அறுபது புத்தகங்களையும், 2000 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் ரெங்கநாதன் எழுதி உள்ளார்.

இவரது பிறந்தநாள் நாடெங்கும் தேசிய நூலகர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

திரு ரெங்கநாதன் 1972ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் காலமானார். 

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

செப்டம்பர் 26 - கலைக்களஞ்சியம் தொகுத்த மேதை பெரியசாமி தூரன் பிறந்ததினம்

பழமையும் புதுமையும், இளமையும் கொண்ட செம்மார்ந்த தமிழ்மொழிக்கு தன்னலம் இல்லாமல் தொண்டாற்றியவர்களும் உண்டு, எங்களால்தான் தமிழ்மொழியே உயிர் வாழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பவர்களும் உண்டு. இருவேறு உலகத்து இயற்கை என்பது உண்மைதானே. தமிழின் கலைக்களஞ்சியத்தை தொகுப்பாசிரியராக இருந்து தொகுத்தவர், அதன் பின்னர் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை தமிழில் உருவாக்கியவர், அப்பழுக்கற்ற தேசபக்தர், கல்விப் பணியில் ஈடுபட்டவர், மரபியல், உளவியல் பற்றி எளிய தமிழில் புத்தகங்களை இயற்றியவர், கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், கவிதை, குழந்தைகள் இலக்கியம் என்று தமிழின் எல்லா தளங்களிலும் இயங்கியவர், தமிழிசையில் பல்வேறு பாடல்களை இயற்றியவர், பத்திரிகை ஆசிரியர்   என்ற பன்முகவித்தகர் திரு பெரியசாமி தூரனின் பிறந்தநாள் இன்று. 


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே உள்ள மஞ்சக்காட்டு வலசு என்ற சிற்றூரில் பழனிவேலப்பக்க கௌண்டர் - பாவாத்தாள் தம்பதியினரின் மகனாக 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் நாள் பிறந்தவர் இவர். கொங்குநாட்டின் தூரன் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர் பெரியசாமி தூரன் என்று அழைக்கப்பட்டார். தனது தொடக்கக் கல்வியை சொந்த கிராமத்திலும், உயர்நிலைப் படிப்பை ஈரோட்டிலும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் தொடர்ந்தார். புரட்சிவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரை ஆங்கில அரசு தூக்கில் இட்டதைத் தொடர்ந்து, கல்லூரியை விட்டு வெளியேறினார். பட்டப்படிப்பை முடிக்காமல் போனாலும் கோபிச்செட்டிபாளையம் வைரவிழா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்

அதனைத் தொடர்ந்து அவினாசிலிங்கம் செட்டியார் நடத்திவந்த ராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், பின்னர் தலைமையாசிரியராகவும் பணியாற்றினார். இவர் பணிபுரிந்த காலகட்டத்தில் அந்தப் பள்ளிக்கு மஹாத்மா காந்தி வருகை புரிந்து உள்ளார்அவினாசிலிங்கம் செட்டியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார்

அவினாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சராகப் பணியாற்றிய போது, தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், கலைச்சொற்களை தமிழில் உருவாக்கவும் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பின் சார்பில் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகும் முயற்சி தொடங்கியது. இந்த மகத்தான படைப்பை உருவாகும் பணிக்கு முதன்மை ஆசிரியராக தூரன் நியமிக்கப்பட்டார். பத்தொன்பது ஆண்டுகள் இடையறாது உழைத்து தூரன் கலைக்களஞ்சியத்தை வெளிக்கொண்டு வந்தார். அதன் பிறகு பத்து தொகுதிகள் கொண்ட சிறுவர்கள் கலைக்களஞ்சியத்தையும் அவர் உருவாக்கினார்

தமிழ்மொழியே இசையானது, இசைபோல இனிமையானது. தமிழில் தேர்ச்சி பெற்ற தூரனுக்கு இசைப்பாடல்கள் புனையும் திறமை இயல்பாகவே இருந்தது. அந்த காலகட்டத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ராஜாஜி, ரசிகமணி டி கே சி ஆகியோர் தமிழிசை மீண்டும் தழைக்கப் பாடுபட்டுக்கொண்டு இருந்தனர். அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களை தூரன் இயற்றினார்

திரு.தூரன் அவர்கள், நாட்டுபுறப் பாடல்களும், கர்னாடக இசைக் கீர்த்தனைகளும், ஸ்வரங்களும் இயற்றியுள்ளார். டி.கே.பட்டம்மாள், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், என்.சி.வசந்தகோகிலம், டி.வி.சங்கரநாராயணன், டைகர் வரதாச்சாரியார், முசிறி சுப்ரமணிய ஐயர், போன்ற இசையுலக ஜாம்பவான்கள், இவருடைய இசையறிவை மெச்சி, இவர் இயற்றிய பாடல்களுக்கு அடிமைகளாகவே இருந்து, தங்கள் கச்சேரிகளில் அவற்றைப் பாடாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம். ’சாரங்காராகத்தில் அமைந்தஞானநாதனே”, ‘பிருந்தாவன சாரங்காவில் அமைந்தகலியுக வரதன்”, ‘மாண்ட்ராகத்தில் அமைந்தமுரளீதரா கோபாலா”, ‘சாவேரியில் அமைந்தமுருகா முருகா”, ‘காபியில் பாடியபழனி நின்ற”, ‘கீரவாணியில் அமைந்தபுண்ணியம் ஒரு கோடி”, ‘சுத்த சாவேரிராகத்தில் அமைந்ததாயே திரிபுரசுந்தரிஆகியவை இவர் இயற்றியுள்ள மயங்கவைக்கும் கீர்த்தனைகளில் சில.

தூரனின் சாதனைகளில் முக்கியமானது பாரதியார் 1904 முதல் 1921 வரை சுதேசமித்திரன் இதழில் எழுதிய படைப்புகளைத் தேடி எடுத்து ஆவணப்படுத்தி காலவரிசைப்படி தொகுத்துபாரதி தமிழ்என்ற பேரில் வெளியிட்டது. பாரதி ஆய்வுகள் தமிழில் தொடங்கப்படுவதற்கான வழிகாட்டி முயற்சி என்பதுடன் பாரதி படைப்புகள் அழிந்துவிடாமலிருக்க தக்க நேரத்தில் செய்யப்பட்ட பெரும்சேவையுமாகும். திரு.வி.கவின் ஆலோசனைப்படி இதை தூரன் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

பாரம்பரியம், கருவில் வளரும் குழந்தை, பெற்றோர் கொடுத்த பெரும்கொடை என்று மரபியலிலும் , குழந்தை உள்ளம், தாழ்வு மனப்பான்மை, மனமும் அதன் விளக்கமும் என்று பல்வேறு புத்தகங்கள் உளவியலிலும் தூரன் எழுதி உள்ளார். இன்றுபோல அறிவியல் வளராத அம்பதுகளில், கலைச்சொற்கள் தமிழில் உருவாகாத காலத்தில் இப்படி எழுதவேண்டும் என்றால் அதற்காக தூரன் எவ்வளவு உழைத்து இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தாலே மலைக்க வைக்கிறது

தமிழ் இசை சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் பாரத அரசின் பத்மபூஷன் விருதுகள் இவர்க்கு வழங்கப்பட்டு உள்ளன

வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக அயராது பாடுபட்ட திரு பெரியசாமி தூரன் 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் காலமானார்


வியாழன், 25 செப்டம்பர், 2025

செப்டம்பர் 25 - விண்வெளி ஆராய்ச்சியாளர் சதிஷ் தவான் பிறந்தநாள்

சந்திரமண்டலத்தியல் கண்டு தெளியும் விண்வெளி ஆய்வில் தனியிடம் பெற்று பாரதம் விளங்குகிறது என்றால் அதற்கான அடித்தளம் இட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான பேராசிரியர் சதிஷ் தவான் அவர்களின் பிறந்தநாள் இன்று.


காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த சதிஷ் தவான் 1920ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிறந்தவர். இன்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரத்தின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும், இயந்திரவியல் துறையில் இளங்கலைப்  பட்டத்தையும் அதனைத் தொடர்ந்து ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவர். பின்னர் அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் விண்வெளி  பொறியியல் துறையில் முதுகலை பட்டமும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியல் துறையில் முதுகலை பட்டமும் பின்னர் கணிதம் மற்றும் வானூர்தி பொறியியல் ஆகிய இரண்டு துறைகளிலும் முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.

தனது உயர்கல்வியை அமெரிக்காவில் முடித்த பிறகு சதிஷ் தவான் 1951ஆம் ஆண்டு தாயகம் திரும்பி பெங்களூரு நகரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 1962ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தில் இயக்குநராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் தவான் 1981ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் நீடித்தார். தவான் பொறுப்பில் இருந்த காலத்தில் கூடுமான வரை நாட்டில் தயாரான பொருள்களை வைத்தே அறிவியல் ஆய்வுகளை நடத்தவும், புதிதாக சுதந்திரம் அடைந்த நாட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் துறைகளிலும் ஆய்வு செய்யவும் அவர் தூண்டுகோலாக இருந்தார்.

புதிதாக சுதந்திரம் அடைந்த பாரத நாடு அறிவியல் துறையில் முன்னேறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைத் தொடங்கி, திறமை வாய்ந்த இளைஞர்கள் துணையோடு செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மர்மமான முறையில் சாராபாய் இறக்க,  மிகக் குறுகிய காலம் பேராசிரியர் எம் ஜி கே மேனன் தலைமையில் விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டது. இந்த முக்கியமான ஆய்வு மையத்தை வழிநடத்த பேராசிரியர் சதிஷ் தவான்தான் பொருத்தமான மனிதராக இருப்பார் என்று கருதிய அரசு அவரை விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக நியமித்தது. 1972ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பொறுப்பேற்றுக்கொண்ட தவான் ஏறத்தாழ பனிரெண்டு ஆண்டுகள், 1984ஆம் ஆண்டு வரை விண்வெளி ஆய்வை வழிநடத்தினார்.

பாரத நாட்டின் விண்வெளி ஆய்வு  பேராசிரியர் சதிஷ் தவானால் மிக உறுதியாக அடித்தளம் இடப்பட்டது. அவர் காலத்தில்தான் ஆரியபட்டா, பாஸ்கரா போன்ற துணைக்கோள்களை விண்ணில் ஏவப்பட்டது. துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தும் ஏவுகணைகளின் ஆரம்பகால வெற்றிகளும் எட்டப்பட்டன. விண்வெளி ஆய்வின் மூலம் தொலைத்தொடர்பு துறையிலும், பருவநிலை மாற்றம், மழை பொழிவு போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.

விண்வெளி ஆய்வில் பின்னடைவு ஏற்படும் போது அதற்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டும், வெற்றியடையும் காலத்தில் அதற்கான பாராட்டைத் தன் அணியைச் சார்ந்தவர்கள் பெறச் செய்வதும் என்று பேராசிரியர் சதிஷ் தவான் ஒரு சிறந்த தலைவருக்கான உதாரணமாக விளங்கினார். அடுத்த தலைமுறை ஆய்வாளர்களும், தலைவர்களையும் உருவாக்கி தனக்கு அளிக்கப்பட பணியை தவான் திறம்பட நடத்தினார்.

பாரத நாட்டின் முக்கியமான ஆய்வாளரான சதிஷ் தவானின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் 1971ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும், 1981ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருதையும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது.

பேராசிரியர் சதிஷ் தவான் 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் நாள் காலமானார். ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திற்கு பேராசிரியர் சதிஷ் தவானின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. சதிஷ் தவான் அமைத்துக் கொடுத்த வலிமையான அடித்தளத்தில் நாடு இன்று விண்வெளி ஆய்வில் உலகில் முன்னணியில் உள்ளது.

பேராசிரியர் சதிஷ் தவான் உள்பட அறிஞர் பெருமக்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

புதன், 24 செப்டம்பர், 2025

செப்டம்பர் 24 - சீக்கிய குரு ராம்தாஸ் பிறந்ததினம்

சீக்கிய குருமார்கள் வரிசையில் நான்காவது குருவான குரு ராமதாஸ் மஹாராஜின் பிறந்தநாள் இன்று.



1534ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் இன்றய பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் ஒரு எளிய ஹிந்து குடும்பத்தில் பிறந்தவர் குரு ராமதாஸ் மஹராஜ். இவரது இயற்பெயர் ஜெத்தா என்பதாகும். ஏழு வயதிலேயே பெற்றோர்களை இழந்த ஜெதாவை அவர் தாய்வழி பாட்டி வளர்த்து வந்தார்.

தனது பனிரெண்டாம் வயதில் ஜெத்தா சீக்கியர்களின் மூன்றாவது குருவான குரு அமர்தாஸ் மஹாராஜை சந்தித்தார். அப்போது முதல் குரு அமர்தாஸை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு அவரின் சேவையில் தனது வாழ்வை அமைத்துக்கொண்டார். குரு அமர்தாஸ் தனது மகளான பீபீ பாணியை ஜெத்தாவிற்கு திருமணம் செய்து வைத்தார். தனக்கு முந்தய இரண்டு குருக்கள் போல, குரு அமர்தாஸும் தனது மகன்களில் ஒருவரை அடுத்த குருவாக நியமிக்காமல் பாய் ஜெதாவை பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் 1574ஆம் ஆண்டு சீக்கியர்களின் அடுத்து குருவாக நியமித்தார். அதுமுதல் பாய் ஜெத்தா குரு ராமதாஸ் என்று அழைக்கப்பட்டார்.

குரு கிரந்த சாஹிபில் இவர் இயற்றிய 638 பாசுரங்கள் இடம்பெற்றுள்ளன. முப்பதிற்கும் மேற்பட்ட ராகங்களில் இவர் பாசுரங்களை இயற்றி உள்ளார்.

ராம்தாஸ்பூர் என்ற புதிய நகரத்தை குரு ராம்தாஸ் உருவாக்கினார். நகரின் நடுவில் ஒரு பெரிய குளமும் அதனைச் சுற்றி நகரும் அமையுமாறு அவர் அதனை வடிவமைத்தார். இன்று சீக்கியர்களின் புனிதத்தலமாக விளங்கும் அம்ரித்சர் நகர்தான் அது. பல்வேறு வியாபாரிகளையும், கைவினை கலைஞர்களையும் அந்த நகரில் அவர் குடியேற்றினார்.

இறை தியானம் மட்டுமல்ல மக்களின் சேவையும் முக்கியம் என்ற கருத்தை குரு ராம்தாஸ் வலியுறுத்தினார். இன்றய சீக்கியர்களின் திருமணம் என்பது குரு கிரந்தசாஹிபை நான்கு பாசுரங்கள் ஒலிக்க மணமக்கள் நான்குமுறை சுற்றிவந்து நடைபெறும். அந்த நான்கு பாசுரங்களும் குரு ராம்தாஸ் இயற்றியதுதான். அருகருகே இருப்பதால் அல்ல, இரண்டு உடல்களில் ஒரே ஆன்மாவாக இருப்பதால்தான் தம்பதியராக மாறுகிறார்கள் என்பது குருவின் கருத்து.

சீக்கிய மதத்தைப் பிரச்சாரம் செய்யும் தகுதியான ஆட்களைக் கண்டறிந்து, பல்வேறு இடங்களுக்கு அவர்களை அனுப்பும் பணி குரு ராம்தாஸால் தொடங்கப்பட்டது.

தனது மகனான அர்ஜனை அடுத்து குருவாக நியமித்து விட்டு குரு ராம்தாஸ் 1581ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மஹாசமாதி அடைந்தார்.

பாரத வரலாற்றில் சீக்கியர்களின் பங்களிப்பு என்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்றாகும். அதற்கு அடித்தளம் இட்ட குருக்களின் வரிசை நாம் என்றென்றும் நன்றியோடு நினைவு கொள்ள வேண்டிய ஒன்றாகும்.