ஞாயிறு, 6 ஜூலை, 2025

ஜூலை 6. - டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜீ பிறந்தநாள்

கல்வியாளரும், கொல்கத்தா பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தரும், வழக்கறிஞரும், இன்றய பாஜகவின் முன்னோடியான பாரதிய  ஜனசங்கத்தை நிறுவியவருமான திரு சியாமா பிரசாத் முகர்ஜீயின் பிறந்ததினம் இன்று.

வங்காளத்தைச் சேர்ந்த கணிதவியலாளர் திரு அஷுதோஷ் முகேர்ஜீ. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய இரண்டு துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மாணவர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தர், வழக்கறிஞர், கொல்கத்தா நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். இப்படி புகழ்வாய்ந்த அஷுதோஷ் முகர்ஜீயின் மகனாக 1901  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் நாள் பிறந்தவர்தான் டாக்டர் சியாம பிரசாத் முகேர்ஜீ.

இயல்பிலேயே படிப்பில் சூடிப்பாக இருந்த சியாம பிரசாத் வங்காள மொழியில் முதுகலைப் பட்டமும், சட்டப் படிப்பையும் முடித்தார். அதனைத் தொடர்ந்து தனது பாரிஸ்டர் பட்டத்தை இங்கிலாந்து நாட்டில் பெற்றார். 1934ஆம் ஆண்டு தனது 33ஆம் வயதில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இன்று வரை மிக இளையவயதில் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒரே அறிஞராக சியாம பிரசாத் முகர்ஜீயே ஆவார். நான்கு வருடங்கள் அவர் இந்தப் பொறுப்பை வகித்தார். இவரது காலத்தில்தான் முதல்முறையாக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் வங்காள மொழியில் உரையாற்றினார். அந்த விருந்தினர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர். முகேர்ஜியின் சேவையைப் பாராட்டி கொல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு 1938ஆம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டத்தை அளித்தது.

1929ஆம் ஆண்டு தனது 29ஆவது வயதில் முகர்ஜீ வங்காள சட்ட மேல்சபைக்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினராக கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அடுத்த வருடமே சட்டமன்றங்களைப் புறக்கணிக்க காங்கிரஸ் தீர்மானிக்க, முகர்ஜியும் பதவி விலகினார். உடனடியாக சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மீண்டும் 1937ஆம் ஆண்டு தேர்தலில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1941 - 42 ஆம் ஆண்டுகளில் வங்காள மாநிலத்தின் நிதியமைச்சராகப் பதவி வகித்தார்.

1939ஆம் ஆண்டு ஹிந்து மஹாசபையில் தன்னை இணைத்துக் கொண்ட முகர்ஜி அந்த ஆண்டே ஹிந்து மகாசபையின் தாற்காலிகத் தலைவராகவும், அடுத்த ஆண்டு செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

சுதந்திரத்தை அடுத்து ஜவாஹர்லால் நேரு தலைமையில் உருவான அரசாங்கத்தில் தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் உடன் நேரு 1950ஆம் ஆண்டு செய்து கொண்ட தில்லி ஒப்பந்தத்தை ஏற்காமல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்றய கிழக்கு பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்கள் பாகிஸ்தான் கீழே நிம்மதியாக வாழமுடியாது, எனவே பாரதம் - பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ள மக்களை மதத்தின் படி மாற்றிக்கொள்வதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று சியாம பிரசாத் முகர்ஜி கோரினார். வரலாற்றின் பக்கங்களில் இருந்து பாடம் படிக்காது, கனவுலகில் வாழ்ந்த நேரு அதனை நிராகரித்தார். ஆனால் முகர்ஜி கூறியது தான் நடந்தது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரான ஹிந்துக்களும், சீக்கியர்களும் அங்கே வாழ்வுரிமை இல்லாமல்தான் இன்றும் இருக்கிறார்கள். அப்படித் துன்பப்படும் சகோதர்களுக்கு உதவத்தான் மோதி அரசு குடியுரிமைச் சட்டத்தை இப்போது திருத்தி, அவர்களுக்கு பாரத நாட்டின் குடியுரிமை வழங்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. 

நேருவோடு உருவான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக்கான குருஜி கோல்வால்கர் அறிவுரையின் பேரில், முகர்ஜி பாரதிய ஜன் சங்கம் என்ற கட்சியை உருவாக்கினார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் ஜன்சங் கட்சி மூன்று தொகுதிகளைக் கைப்பற்றியது.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவை முகர்ஜி எதிர்த்து நாடாளுமண்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராடிக் கொண்டு இருந்தார். " ஒரு நாட்டில் இரண்டு அரசியலமைப்பு சட்டங்கள், இரண்டு பிரதமர்கள், இரண்டு தேசிய சின்னங்கள் இருக்க முடியாது" என்பது அவரின் போர் முழக்கமாக இருந்தது. ஹிந்து மஹாசபா மற்றும் ஜம்மு பிரஜா பரிஷத் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஜன்சங் 370ஆவது சட்டப் பிரிவை நீக்கக் கோரி சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தது.
எந்தவிதமான அடையாள அட்டையைக் காட்டாமல் காஷ்மீருக்கு செல்லும் போராட்டத்தை முகர்ஜி தொடங்கினார். காஷ்மீர் மாநிலத்துக்கு உள்ளே நுழையும் போது 1953ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி முகர்ஜி கைது செய்யப்பட்டார். 1953ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறையில் முகர்ஜி மரணமடைந்தார்.
முகர்ஜியின் மரணம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நேரு நிராகரித்தார். 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் முகர்ஜியின் மரணத்திற்கு பின்னர் நேருவின் சூழ்ச்சி இருந்தது என்று குற்றம் சாட்டினார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு கல்லூரி, அஹமதாபாத் நகரில் ஒரு பாலம், டெல்லியில் ஒரு சாலை, கோவா பல்கலைக்கழகத்தில் ஒரு உள்ளரங்க விளையாட்டு அரங்கம், ராய்ப்பூர் நகரில் இந்திய தகவல் தொழில்நுட்ப கல்லூரி என்று பல்வேறு இடங்களுக்கு சியாம பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

370ஆவது சட்டப்பிரிவை நீக்கி, எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு முழுமையாக இணைத்து மோதி அரசு முகர்ஜியின் பலிதானத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளது.  

சனி, 5 ஜூலை, 2025

ஜூலை 5 - வெற்றிகரமான முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பிறந்ததினம்

நீண்டகால அளவில் மிகுந்த லாபகரமான முதலீடு என்பது நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதுதான். எதிர்காலத்தில் எந்த துறைகள் ஏற்றமடையும் என்பதை இனம் கண்டுகொண்டு அந்தத் துறைகளில் உள்ள நிறுவங்களில் சிறந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்து போதுமான அளவு காத்திருந்தால் அதுபோன்ற லாபமான முதலீடு எதுவும் இல்லை. ஆனால் பாரத நாட்டில்  பங்குசந்தைகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். அதிகமான லாபம் தரும் முதலீடு என்பது அதற்க்கு குறைவில்லாத இழப்பையும் தரும் வாய்ப்புள்ளதால் பொதுவாகவே பாதுகாப்பை விரும்பும்  பாரத மக்கள் பங்குசந்தையில் அதிகமாக முதலீடு செய்வது இல்லை.

ஆனால் இதற்கு மாறாக மிக இளம் வயதில் பங்குசந்தையில் நுழைந்து மிகக் குறைந்த முதலீட்டை பலமடங்கு பெருக்கி, வெற்றிகரமான முதலீட்டாளராக இருப்பவர் திரு ராஜேஷ் ஜுன்ஜுன்வலா. மும்பையில் பணியாற்றிவந்த, மத்தியதர குடும்பத்தைச் சார்ந்த வருமானவரித்துறை அதிகாரி ராதேஷ்யாம் ஜுன்ஜுன்வாலாவின் மகனாக ராகேஷ் 1960ஆம் ஆண்டு பிறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஷெகாவத் பகுதி இவரின் பூர்வீகம். கல்வித்தகுதியில் ராகேஷ் ஒரு பட்டய கணக்காளர்.
கடந்த முப்பத்தி ஐந்தாண்டு காலமாக பங்குசந்தையில் முதலீடு செய்து வரும் ராகேஷ் சந்தையின் ஏற்ற இறக்கத்தை மிக அருகில் இருந்து பார்த்தவர். பொருளாதார தாராளமயமாக்கம், ஹர்ஷத் மேத்தா சகாப்தம், கணினிமயக்காத்தால் உருவான புது தொழில்கள், பல்வேறு பங்குச்சந்தை முறைகேடுகள் என்று சுழன்றடிக்கும் சூறாவளிக்கு நடுவே இவரது பயணம் நடைபெற்றது. 1985ஆம் ஆண்டு இவர் பங்குசந்தையில் முதலீட்டை தொடங்கும்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 150ஆக இருந்தது. இன்று அது ஏறத்தாழ 40,000 என்று உள்ளது.

படிப்பை முடித்த கையேடு பங்குசந்தையில் முதலீடு செய்ய ராகேஷ் திட்டமிட்டார். ராகேஷின் தந்தை பங்குசந்தையில் முதலீடு செய்ய இவருக்கு எந்தப் பணத்தையும் அளிக்கவில்லை. ஆனால் கூட்டுக்குடும்பம் என்பதால் உணவுக்கும், உறைவிடத்திற்கும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலீடு செய்யும் பணத்தை ராகேஷே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு வேளை பங்குச்சந்தை முதலீடு அவருக்கு லாபகரமாக இல்லை என்றால் படிப்பை கொண்டு ஏதாவது வேலைக்கு சென்று விடலாம் என்று அவர் தந்தை அறிவுரை கூறினார்.

மிகச் சிறிய அளவில் டாடா டீ, சேஷ கோவா முதலான நிறுவனங்களில் இவர் செய்த முதலீடு நல்ல லாபத்தை அளித்தது. அந்த லாபத்தையும் ராகேஷ் பங்குசந்தையில் முதலீடு செய்தார். இவரது முதலீட்டிலேயே மிகவும் லாபகரமான முதலீடு என்பது டைட்டான் நிறுவனப் பங்கில் செய்த முதலீடுதான். 2002 - 2003 காலகட்டத்தில் அந்த நிறுவனப் பங்குகள் ரூபாய் மூன்று என்ற அளவில் இருந்தது. அது இன்று ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது. ஏறத்தாழ ஐந்து கோடிக்கும் அதிகமான டைட்டான் நிறுவன பங்குகளை ராகேஷ் இன்று வைத்துள்ளார்.

ராகேஷும் அவர் மனைவி ரேகாவும் இணைந்து நடத்தும் Rare Enterprises நிறுவனத்தின் மூலமாக ராகேஷ் தனது முதலீடுகளை மேற்கொள்கிறார். செல்வத்தை சேர்ப்பது என்பது ஓன்று, அதனை தேவைப்படும் தகுதியான நபர்களுக்கு / சமுதாயத்திற்கு அளிப்பது என்பது மற்றொன்று. ராகேஷ் தனது செல்வத்தை பல்வேறு சமுதாயப் பணிகளுக்கும் அளித்து வருகிறார். கிராமப்புறத்தில் வசிக்கும் மாணவர்களுக்கான கல்வி, மற்றும் தகுதியான விளையாட்டு வீரர்களை உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு ராகேஷ் முன்னுரிமை அளித்து, அதற்கான தொண்டு நிறுவங்களுக்கு பண உதவி செய்து வருகிறார்.

செய்க பொருளை என்று வள்ளுவர் கட்டளை இட்டதுபோல பணத்தை சம்பாதிப்பதில், செல்வத்துப் பயனே ஈதல் என்ற வாக்குப்படி வாழ்ந்து வரும் ராகேஷின் வாழ்க்கை பல்வேறு பாரத இளைஞர்கள் பின்பற்ற தகுந்ததாகும். 

வெள்ளி, 4 ஜூலை, 2025

ஜூலை 4 - கனோஜி ஆங்க்ரே நினைவுநாள்

வரலாறு பதிவு செய்யப்பட்ட காலத்தில் ஏறத்தாழ 17ஆம் நூற்றாண்டு வரை உலக வர்த்தகத்திலும், உலக செல்வத்திலும் பெரும் பங்கு பாரதநாட்டிடமே குவிந்து கிடந்தது. அளவற்ற செல்வம் உலகின் பல பகுதி மக்களை இந்த நாட்டுக்கு வரவேண்டும் என்று தூண்டியது. அலையலையான அந்நியர் படையெடுப்பும் அதனை தடுத்து நின்ற வீரர்கள் வரலாறும்தான் இந்த மண்ணின் வரலாறு. அப்படி அரை நூற்றாண்டு காலம் கொங்கன் கடற்கரையை காத்து நின்று, தன் வாழ்நாளில் எந்தப் போரிலும் தோல்வியே அடையாத மராட்டிய மாவீரன் கனோஜி ஆங்க்ரேயின் நினைவுநாள் இன்று.

மராட்டிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சத்ரபதி சிவாஜி மஹாராஜால் ஸ்வர்ணமுக் கோட்டைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட துக்கோஜி ஆங்கிரே - அம்பாலால் தம்பதியினருக்கு 1669ஆம் ஆண்டு பிறந்தவர் கனோஜி ஆங்கிரே. பாரதத்தின் மேற்கு கடற்கரையில் இன்றய மும்பை நகருக்கும் கோவாவிற்கும் இடையே ஒரு தீவில் அமைந்து இருந்த ஸ்வர்ணமுக் கோட்டையில் தனது இளமைகாலத்தை கழித்தால் கடலும், கடல் சார்ந்த பரதவ இன மக்களின் நட்பும் கனோஜியை ஒரு கடலோடியாகவே உருவாக்கின.

சிவாஜி மஹராஜ் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கடற்படையை கனோஜி விரிவுபடுத்தினார். தனது 19ஆம் வயதில் 150 மைல் நீளமுள்ள கொங்கன் கடற்கரையை அவற்றின் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகி அவரை கடற்கரையின் தளபதியாக மராத்திய அரசு நியமித்தது. அப்போது அவர் வசம் பத்து கப்பல்கள் இருந்தன.

பாரத கடலெல்லைக்குள் வரும் ஐரோப்பியரின் கப்பல்கள் எதுவாக இருந்தாலும் மராட்டிய அரசுக்கு கப்பம் செலுத்தவேண்டும் என்ற விதிமுறையை கனோஜி ஆங்கிரே உருவாக்கினார். கப்பம் செலுத்திய கப்பல்களின் பாதுகாப்பை மராட்டிய கப்பல் படை ஏற்றுக்கொண்டது. கப்பம் கட்ட மறுத்த கப்பல்கள் தாக்கப்பட்டு அவை கொள்ளையடிக்கப் பட்டன. பெரும் கடற்படை இன்னும் உருவாகாத காரணத்தால் கனோஜி கடலில் கொரில்லா தாக்குதல் முறையை கையாண்டார். மராத்தா அரசு அவரை தனது கடற்படையின் தளபதியாகவும் 26 கோட்டைகளின் பொறுப்பாளராகவும் நியமித்தது. பிரிட்டிஷ்க்காரர்கள், போர்த்துகீஸ் மக்கள், டச் கடலோடிகள் அனைவரும் கனோஜி ஆங்க்ரேயின் கட்டளைக்கு அடிபணிய வேண்டி இருந்தது. நினைத்த பொழுதில் ஐரோப்பியர்களின் கப்பல்களைத் தாக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும் ஆங்க்ரேயினால் முடிந்தது.

வேகமான போர்முறைகளும், எதிர்பாராத தாக்குதல்களும் ஆங்க்ரேவை கடலின் சிவாஜி என்ற பட்டப்பெயரை பெற்றுக் கொடுத்தன.
கர்நாடகா முதல் மஹாராஷ்டிரா வரை பரவியுள்ள 1000 கிலோமீட்டர் நீளமுள்ள கொங்கன் கடற்கரையின் காவலனாக வலம் வந்த கனோஜி ஆங்கிரே 1729ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் நாள் காலமானார். ஆங்க்ரேவை எதிர்கொள்ள பிரிட்டிஷார் உருவாக்கிய கடற்படைதான் இன்று இந்திய கடற்படையாக உருவாகி நிற்கிறது.

மும்பையில் உள்ள கடற்படை தளத்திற்கும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்தினகிரியில் உள்ள துறைமுகத்திற்கும் ஆங்க்ரேயின் பெயரை சூட்டி பாரத நாடு அந்த வீரனுக்கு நன்றி செலுத்தி உள்ளது.  

வியாழன், 3 ஜூலை, 2025

ஜூலை 3 - சர்வாதிகாரத்தை எதிர்த்த தனி ஒருவன் நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா


பாரத வரலாற்றில் ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்ட பக்கங்கள் என்று பல உண்டு. அதில் மிக முக்கியமானது 1975ஆம் ஆண்டு இந்த நாட்டின் சட்டதிட்டங்கள் அனைவற்றையும் கிழித்து எறிந்துவிட்டு, இந்த நாட்டை சர்வாதிகாரப் போக்கில் கொண்டு சென்ற அன்றய பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடிநிலை பிரகடனம். நீதிமன்றம் மூலமாக மக்களவை வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்திராவின் நெருக்கடி இந்தியாவின் நெருக்கடியானது. அவசரச் சட்டத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் கடுமையான தணிக்கைக்கு உள்ளானது. எந்தவிதமான எதிர்ப்பு எழுந்தாலும் அது கடுமையான முறையில் அடக்கப்பட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒரு குரல் நெருக்கடி நிலையை எதிர்த்து ஒலித்தது. அரசியலமைப்பு சட்டத்தின்படி எது சரி எது தவறு என்பதை அந்தக் குரல் தெளிவுபடுத்தியது. உண்மையின் பக்கத்தில் இருந்ததால் அந்தக் குரலுக்கு சொந்தக்காரருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. ஆனாலும் வரலாற்றைப் படிக்கும் மாணவர்களின் மனதில் அவருக்கு தனி இடம் கிடைத்தது. அந்தக் குரலின் சொந்தக்காரர் ஒரு நீதிபதி. அம்ரித்ஸர் நகரில் பிறந்த அவரின் பெயர் நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வரையறை செய்த பல்வேறு வழக்குகளில் நீதிபதி கன்னாவின்  தீர்ப்புகள் இன்றும் முக்கியமான ஒன்றாக உள்ளன.

1912ஆம் ஆண்டு அம்ரித்ஸர் நகரில் திரு ஷரப்தயாள் கன்னாவின் மகனாகப் பிறந்தவர் இவர். திரு ஷரப்தயாள் வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமாவார். அவர் அம்ரிஸ்தர் நகரின் மேயராகவும் பணியாற்றினார். தனது கல்வியை DAV பள்ளியிலும், பின்னர் கல்சா கல்லூரியிலும் முடித்தார். லாகூர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து அம்ரித்ஸர் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
தனது நாற்பதாவது வயதில் ஹன்ஸ்ராஜ்கன்னா மாவட்ட குற்றவியல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பெரும் தொழிலதிபரான ராமகிருஷ்ன டால்மியாவை பண மோசடி வழக்கில் சிறைத்தண்டனை வழங்கினார். பஞ்சாப் உயர்நீதிமன்றத்திலும் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட டெல்லி உயர்நீதிமன்றத்திலும் திரு கன்னா பணியாற்றினார். 1971ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக திரு ஹன்ஸ்ராஜ் கன்னா புகழ்பெற்ற பல தீர்ப்புகளை எழுதினார்.

கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசாங்கம் : 
எடநீர்  மடத்தின் சொத்துக்களை நிர்வகிக்க கேரள அரசு கொண்டுவந்த சட்டங்களை எதிர்த்து அந்த மடத்தின் மடாதிபதி தொடுத்த வழக்கு இது. 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. தனது பதவியை பலப்படுத்திக் கொள்ள இந்திரா கொண்டுவந்த பல்வேறு சட்டங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. வங்கிகள் தேசியமயமாக்கம், மன்னர் மானிய ஒழிப்பு போன்றவைகளை நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது. அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதன் மூலம் நீதிமன்ற உத்தரவை இந்திரா ரத்து செய்தார். ஜனநாயகத்தின் இரண்டு தூண்களும் ஒன்றோடு ஓன்று முட்டிக்கொண்ட சமயம் இது.
இந்த வழக்கோடு, பல்வேறு அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் பற்றிய விவாதங்களும் தொடுக்கப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தை திருத்த அரசுக்கு அதிகாரம் உண்டா என்ற கேள்வி எழுந்தது. ஆறு நீதிபதிகள் அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் ஆறு நீதிபதிகள் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு எழுதினார்கள்.

நீதிபதி ஹன்ஸ்ராஜ்கன்னா அரசியலமைப்பு சட்டத்தை திருத்த அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் ஆனால் அதே சமயம் அரசுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் கிடையாது என்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை அரசு மாற்ற முடியாது என்றும் தீர்ப்பு சொன்னார்.

ஆள் கொணர்வு மனு வழக்கு : 
நெருக்கடிநிலை சமயத்தில் சட்டத்திற்கு புறம்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள சிறையானவர்களின் உறவினர்களால் பல ஆள்கொணர்வு மனுகள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத்தின் மாட்சிமை பற்றிய கேள்வி எழுந்தது. இதனை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உருவாக்கப் பட்டது.
எந்த காரணமும் இல்லாமல் சிறைபிடிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஆள்கொணர்வு மனுவை எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்றும் மற்ற நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்க, நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா அதனை மறுத்து தீர்ப்பு சொன்னார். "உயிர் வாழும் உரிமையை அரசின் பிடியில் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கவில்லை. இங்கே கேள்விக்குள்ளாகி இருப்பது சட்டத்தின் மாட்சிமை. விசாரணை இல்லாது சிறையில் அடைப்பது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது" என்று அவர் தீர்ப்பளித்தார்.

சர்வாதிகாரத்திற்கு எதிராக எழுந்த குரலை இந்திரா விரும்பவில்லை. நீதிபதி கன்னாவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. அவருக்கு இளையவரான நீதிபதி பைக் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி கன்னா உடனடியாகப் பதவி விலகினார். அவருக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர். ஆனால் அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை அரசிடம் இருந்து நீதிமன்றங்கள் பறித்துக் கொண்டன.

நெருக்கடி நிலை விலக்கிக் கொண்ட பிறகு 1978ஆம் ஆண்டு அவர் பணியாற்றிய உச்ச நீதிமன்றத்தின் இரண்டாம் எண் நீதிமன்றத்தில் நீதிபதி கன்னாவின் முழு உருவ ஓவியம் நிறுவப்பட்டது. உயிரோடு இருக்கும் போதே இந்தப் பெருமையை இதுவரை யாரும் அடையவில்லை.
1999ஆம் ஆண்டு பாரத அரசு நீதிபதி கன்னாவிற்கு பத்மவிபூஷண் விருது அளித்து கவுரவித்தது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை அளித்தன.

மனசாட்சிக்கும் நீதிக்கும் உண்மையாக இருந்த நீதிபதி ஹன்ஸ்ராஜ் கன்னா 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் நாள் தனது 95ஆவது வயதில் காலமானார்.  

புதன், 2 ஜூலை, 2025

ஜூலை 2 - விண்வெளிக்கு பாதை அமைத்த மயில்சாமி அண்ணாதுரை பிறந்தநாள்


தமிழகத்திற்கு புகழ் சேர்த்த அறிவியல் அறிஞர்களுள் முக்கியமான திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாள் இன்று.

1958ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி அருகே உள்ள கொத்தவாடி கிராமத்தில் பிறந்தவர் இந்த அறிஞர். தனது கல்வியை தமிழ்வழி மூலம் அதே கிராமத்தில் முடித்த திரு அண்ணாதுரை தனது பொறியியல் இளங்கலை படிப்பை கோவை அரசு பொறியியல் கல்லூரியிலும், முதுகலை படிப்பை கோவை PSG கல்வி நிலையத்திலும் முடித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்ற திரு அண்ணாதுரை தனது 24ஆவது வயதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைத்தார். தந்து நெடிய பணிக்காலத்தில் அவர் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு தலைவராகப் பணியாற்றினார்.

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்று மஹாகவி பாரதி முரசு கொட்டியது போல, சந்திரனுக்கும் பின்னர் செவ்வாய் கிரகத்திற்கும் ஆராய்ச்சிப் பணிக்காக செயற்கைகோள்களை அனுப்பும் பணியில் திரு அண்ணாதுரையின் பங்கு மகத்தானது.

2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சீறிப் பாய்ந்த சந்திராயன் I, நவம்பர் 8ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டது. 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் நாள் சந்திரனில் இறங்கிய ஆராய்ச்சி விண்கலம் வான்வெளியை வெற்றிகொள்வதில் யாருக்கும் பாரத விஞ்ஞானிகள் சளைத்தவர்கள் இல்லை என்று அறிவித்தது. சந்திரனில் இறங்கிய நான்காவது தேசம் என்ற பெருமை நாட்டிற்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சந்திராயன் II என்ற விண்வெளி ஆராய்ச்சி முயற்சியும் வெற்றிகரமாக நிறைவேறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை வெற்றிகொள்ளும் பணிக்கு அரசு அனுமதி அளித்தது. 2013ஆம் வருடம் அக்டோபர் 28ஆம் தேதி  ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கிளம்பிய மங்களாயன், ஏறத்தாழ ஒருமாத காலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்தது. அதன் பின்னர் ஏழு நிலைகளில் வெவ்வேறு நீள்வட்டப் பாதைகளுக்கு தன்னை உயர்த்திக்கொண்டு 2014ஆம் செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த முதலாவது ஆசிய நாடு மற்றும் முதல் முறையிலேயே வெற்றி அடைந்த முதல் நாடு என்ற பெருமையை நாடு அடைந்தது.

வறுமைக்கோட்டுக்கு கீழே மக்கள் வசிக்கும் நாட்டிற்கு இவையெல்லாம் தேவையா என்று  சில போராளிகள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் விண்ணை வெற்றிகொள்வதன் மூலம் அடையும் பலங்கள் பல. தொலைத்தொடர்பு, மழை, புயல் ஆகியவற்றை அறிந்துகொள்ளுதல் போன்ற மக்களுக்கு பயன்படும் பல்வேறு துறைகளுக்கு விண்வெளி ஆராய்ச்சி பயன்படுகிறது.

திரு அண்ணாதுரையின் பங்களிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

இந்திய அரசு அண்ணாதுரைக்கு 2016ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி சிறப்பு செய்துள்ளது.

அறிஞர்களின் வாழ்வு நமது மாணர்வர்களை பல்வேறு ஆராய்ச்சி துறையில் ஈடுபடுத்தும், மேலும் பலப்பல திறமைசாலிகளை உருவாக்க பயனாகும் என்பதில் ஐயமில்லை.  

செவ்வாய், 1 ஜூலை, 2025

ஜூலை 1 - ஹவில்தார் அப்துல் ஹமீத் பிறந்தநாள்

பாரத நாட்டின்  சேவைக்காக ராணுவத்தில் சேர்ந்து எல்லையைக் காக்கும் பணியில் தன் உயிரையே பலிதானமாகத் தந்த ஹவில்தார் அப்துல் ஹமீதின் பிறந்தநாள் இன்று.  ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அளித்து நாடு அப்துல் ஹமீதைக் கௌரவித்தது.


இன்றய உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காஜிபூர் மாவட்டத்தின் தமுப்பூர் என்ற கிராமத்தில் தையல் கலைஞராக தொழில் செய்து வந்த மொஹம்மத் உஸ்மான் என்பவரின் மகனாக 1933ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் பிறந்தவர் அப்துல் ஹமீத். இவர் தாயார் பெயர் சகினா பேகம். இவருடன் பிறந்தவர்கள் நான்கு சகோதர்களும் இரண்டு சகோதிரிகளும். சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் சேரவேண்டும் என்பதே அப்துல் ஹமீதின் கனவாக இருந்து வந்தது.

1954ஆம் ஆண்டு இறுதியில் ஹமீது பாரத ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்தார். க்ரெண்டியர்ஸ் என்று அழைக்கப்படும் காலாள்படை பிரிவில் ஹமீது பணியாற்றினார். தனது படைப்பிரிவொடு ஆக்ரா, அருணாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அமிர்ஸ்தர், டெல்லி என்று பல்வேறு இடங்களில் இவர் வேலை பார்த்து வந்தார். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனப் போரிலும் ஹமீது கலந்து கொண்டார்.

1965ஆம் ஆண்டு பாகிஸ்தான் மீண்டும் ஒரு முறை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தது. பாகிஸ்தான் ராணுவம் 30,000 தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து காஷ்மீரில் ஊடுருவியது. வழக்கம் போல அது மக்கள் புரட்சி என்று கூறி அவர்களுக்குத் துணையாக ராணுவம் களமிறங்கியது என்று கூறுவதுதான் அவர்கள் திட்டம்.

பஞ்சாப் மாநில எல்லையைக் காக்கும் பொறுப்பு செம்பருந்துப் படை என்று அழைக்கப்படும் காலாள்படையின் நான்காம் பிரிவுக்கு அளிக்கப்பட்டது. இந்தப் படையின் ஒரு பகுதிதான் க்ரெண்டியர் படை.  1965ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் நாள் இரவில் க்ரெண்டியர் படை பஞ்சாப் மாநில எல்லையைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.  விமானம் மூலமாகவும், பீரங்கிகளைக் கொண்டும் பாரத எல்லையை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. அமெரிக்க நாடு அளித்திருந்த பட்டன் பீரங்கிகளைக் கொண்டு இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது.

அதுவரை அன்றய நிலையில் உலகத்தின் மிகச் சிறப்பான பீரங்கி என்ற பெருமை பட்டன் பீரங்கிக்கு இருந்தது. ஆனால் தனது ராணுவ ஜீப்பில் பொருத்தப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு இரண்டு நாள்களில் எட்டு பட்டன் பீரங்கிகளை அப்துல் ஹமீது அழித்தொழித்தார். பட்டன் பீரங்கி பற்றிய பிம்பம் வெற்றிகரமாகக் கலைக்கப்பட்டது. உயர்தர தளவாடங்களால் அல்ல, நாட்டுப் பற்றும் வீரமும் கொண்ட வீரர்களாலதான் போர்கள் வெல்லப்படுகின்றன என்ற உண்மையை ஹவில்தார் அப்துல் ஹமீது உறுதியாக்கினார்.

இந்தப் போர்முனையில் நாட்டைக் காக்கும் பணியில் அப்துல் ஹமீது தனது உயிரை ஆகுதியாக்கினார். நாட்டின் கௌரவத்தையும், நாட்டு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணியில் உயிரையும் கொடுப்பேன் என்று பாரத ராணுவத்தில் சேரும்போது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை தன் இன்னுயிரைக் கொடுத்து அப்துல் ஹமீது உண்மையாக்கினார்.

போர்க்களத்தில் மிகப் பெரும் வீர சாகசத்தை நடத்திக் காட்டி, பலிதானியான அப்துல் ஹமீது அவர்களுக்கு பாரத ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அவர் நினைவாக அவர் போரிட்ட பஞ்சாபில் உள்ள அசல் உத்தார் கிராமத்தில் செப்டம்பர் மாதம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அப்துல் ஹமீதின் பிறப்பிடமான தமுப்பூர் கிராமத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டு உள்ளது.

மாவீரர் அப்துல் ஹமீது அவர்களின் பிறந்தநாளான இன்று ஒரே இந்தியா தளம் அவர்க்கு புகழஞ்சலி செலுத்துகிறது. 

ஜூலை 1 - வெங்கையா நாயுடு பிறந்தநாள்

பாஜகவின் மூத்த தலைவரும் பாரதநாட்டின் 13ஆவது குடியரசு துணைத்தலைவருமாகிய திரு வெங்கையா நாயுடு அவர்களின் பிறந்தநாள் இன்று.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1949 ஆம் ஆண்டு பிறந்தவர் திரு நாயுடு. தனது பள்ளிப்படிப்பையும், அரசியல் அறிவியல் துறையில் பட்டபடிப்பையும் நெல்லூரில் முடித்த நாயுடு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். சிறுவயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட திரு நாயுடு அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆந்திர பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1972ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெய் ஆந்திரா போராட்டத்திலும் அதன் பின்னர் 1974ஆம் ஆண்டு ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டங்களிலும் முன்னிலை வகித்தார். பிரதமர் இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி சிறை சென்றார்.

1978 மற்றும் 1983ஆம் ஆண்டுகளுக்கான சட்டமன்ற தேர்தல்களில் ஆந்திராவின் உதயகிரி தொகுதியில் இருந்து தேர்வானார். கடுமையான உழைப்பும், அற்புதமான பேச்சாற்றலும் கொண்ட திரு நாயுடு பாஜகவின் முன்னணி தலைவராக உருவாகத் தொடங்கினார்.

1998, 2004 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் ராஜ்யசபைக்கு தேர்வானார். 2016ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபை உறுப்பினரானார். வாஜ்பாய் தலைமையிலான அரசின் கிராமப்புற வளர்ச்சித்துறையின் அமைச்சராகப் பணியாற்றினார். மோதி தலைமையிலான அரசின் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, ஏழ்மை ஒழிப்பு ஆகிய துறைகளிலும் பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறையிலும் , செய்தி மக்கள் தொடர்பு துறையிலும் அமைச்சராகப் பணியாற்றினார்.

2003ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய தலைவராகப் பொறுப்பேற்ற திரு நாயுடு 2004ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின்னர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். பல்லாண்டுகள் பாஜகவின் மூத்த உதவி தலைவராகவும், செய்தி தொடர்பாளராகவும் அவர் பணிபுரிந்தார்.

2017ஆம் ஆண்டு பாஜக சார்பில் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவரை டாக்டர் ராதாகிருஷ்னன் மற்றும் முகமத் ஹமீத் அன்சாரி ஆகிய இருவரும் இரண்டு முறை குடியரசு துணைத்தலைவர் பதவியை வகித்துள்ளார். 2022ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் நாயுடு அவர்களே பாஜகவின் வேட்பாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுவாக குடியரசு துணைத்தலைவரையே அடுத்த தேர்தலில் குடியரசு தலைவராக முன்மொழிவது பழக்கம் என்பதால் இந்தியாவின் மிக உயரிய பதவியை திரு நாயுடு வகிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.