சனி, 31 ஆகஸ்ட், 2019

விஸ்வ ஹிந்து பரிஷத் - நிறுவன தினம் - ஆகஸ்ட் 29

பரிவார் அமைப்புகளில் முக்கியமான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனதினம் இன்று. 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் நாள் புனிதமான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக் குருஜி கோல்வால்கர் மற்றும் ஸ்வாமி சின்மயானந்த மஹராஜ் ஆகியோரால் தொடங்கப்பட்ட இயக்கமானது இன்று ஹிந்துக்கள் இருக்கும் இடமெங்கும் பரவி விரிந்து உள்ளது. கோவில்கள் பராமரிப்பு, பசு பாதுகாப்பு, மதமாற்ற முயற்சிகளை தடுத்து நிறுத்துவது, பாதை மாறிப்போன சகோதர்களை மீண்டும் தாய்மதம் திருப்புதல், பல்வேறு கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் மும்முரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.



பாரதிய வித்யா பவன் நிறுவனர் குலபதி முன்ஷி, கேஷவ்ராம் காசிராம் சாஸ்திரி, மாஸ்டர் தாராசிங், சத்குரு ஜக்ஜித்சிங், சி பி ராமஸ்வாமி அய்யர் ஆகியோரோடு குருஜி கோல்வால்கர், ஆப்தே, ஸ்வாமி சின்மயாந்த மஹராஜ் ஆகியோர் விஸ்வ ஹிந்து பரிஷத்தை உருவாக்கினார்கள். உலகமெங்கும் உள்ள ஹிந்துக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கமாக இது இயங்கும் என்ற குறிக்கோளோடு விஸ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கப்பட்டது. இயக்கத்தின் முதல் தலைவராக ஸ்வாமி சின்மயானந்த மஹாராஜும் செயலாளராக ஆப்தேயும் பணியாற்றினார்கள்.

மரபான இந்திய மதங்களான சீக்கியம், பௌத்தம், சமணம், மற்றும் பல்வேறு வழிபாட்டு மற்றும் வாழ்வியல் முறைகளை சார்ந்த சமயங்களையும் உள்ளடக்கியதாக விஸ்வ ஹிந்து பரிஷத் விளங்குகிறது. " அறம் காக்க, அறம் நம்மைக் காக்கும்" என்ற வேத வாக்கியம் இயக்கத்தின் குறிக்கோளாக பொறிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கலப்பில்லாத இயக்கம் என்பதால், எந்த ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பு வகிப்பவர்களும் இதில் பொறுப்பில் இருக்க முடியாது என்ற வரையறை உள்ளது.

பாரத நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் விஸ்வ ஹிந்து பரிஷத்த்தின் தன்னார்வலர்கள் தொண்டாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். கோவில்களில் உழவாரப் பணி, எல்லா சமுதாய தாய்மார்களும் பங்குபெறும் திருவிளக்கு பூஜை, மாணவர்களுக்கான சமய வகுப்புகள், பல்வேறு கல்வி நிலையங்கள், குறைந்த கட்டணத்தில் நடைபெறும் மருத்துவமனைகள், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள், பெண்களுக்கான விடுதிகள் என்று பல தளங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. பல்வேறு இயற்கை சீற்றங்கள் நாட்டைத் தாக்கும்போது அங்கே முதலில் நிவாரணப் பணிக்கு செல்வது பரிவார் அமைப்பினர்கள்தான்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கிளைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா என்று பல்வேறு நாடுகளிலும் பரவி உள்ளது. ஏறத்தாழ ஆறு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இன்று விஸ்வ ஹிந்து பரிஷத்தில் உள்ளனர். பலனின் மீது பற்று வைக்காமல் சேவை செய்யும் உறுப்பினர்கள் பலரின் உழைப்பால் சமுதாயத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தால் நீடித்த நிலையான மாற்றத்தை உருவாக்க முடிகிறது.

புதன், 28 ஆகஸ்ட், 2019

அறிவியல் அறிஞர் M G K மேனன் பிறந்தநாள் - ஆகஸ்ட் 28

அணு அறிவியல், மின்னணுவியல், விண்வெளி ஆராய்ச்சி, உயிர் தொழில்நுட்பம், சுற்றுப்புற சூழல், இயற்பியலில் உயர் ஆற்றல் துறை என்று அறிவியலின் பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கிய பேராசிரியர் எம் ஜி கே மேனன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

மங்களூர் நகரை பிறப்பிடமாகக் கொண்ட திரு மேனன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் நகரில் உள்ள ஜஸ்வந்த் கல்லூரியிலும் பின்னர் மும்பையில் உள்ள அரசு அறிவியல் நிறுவனத்திலும் பயின்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற சிசில் பாவெல் மேற்பார்வையில் துகள் இயற்பியலில் ( Particle Physics ) முனைவர் பட்டம் பெற்றார்.

நாடு திரும்பிய திரு மேனன், ஹோமி பாபாவின் அறிவுரையின் பேரில் 1955ஆம் ஆண்டு மும்பையில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ( Tata Institute of Fundamental Research ) தன்னை இணைத்துக் கொண்டார். டாக்டர் பாபாவின் அகால மரணத்தைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டு தனது முப்பத்தி எட்டாம் வயதில் அந்த நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி ஏற்றார்.

டாக்டர் விக்ரம் சாராபாயின் மரணத்தை அடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக ஒரு ஆண்டு பணியாற்றினார். இந்திய புள்ளியில் நிறுவனத்தின் தலைவராகவும், மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும்,  அலகாபாத் நகரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும் பணியாற்றினார்.



கேரள மாநிலத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் அரசு நிறுவத் திட்டமிட்டிருந்த நீர்மின் நிலையம் உருவானால், அந்த வனப்பகுதி பாதிக்கப்படும் என்று அரசுடன் வாதாடி அதனை தடுத்ததிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

திட்டக்குழு உறுப்பினராகவும், பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசகராகவும் பின்னர் அறிவியல் தொழில்நுட்ப துறையின் அமைச்சராகவும் திரு மேனன் பணியாற்றினார்.

1971முதல் 1982வரை பாரத அரசின் மின்னணுவியல், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புற சூழல் துறைகளின் செயலாளராகவும் திரு மேனன் பணிபுரிந்தார். கணினி துறையில் நாடு இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிக்கல் நாட்டியவர் திரு மேனன் என்றால் அது மிகையல்ல.

நாட்டின் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி நாடு திரு மேனனை மரியாதை செலுத்தியது.

அறிவியலின் பல்வேறு தளங்களின் தனது பங்களைப்பைச் செலுத்திய திரு மேனன் தனது எண்பத்தி எட்டாவது வயதில் 2016ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் காலமானார். 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

சர் தோரப்ஜி டாடா பிறந்தநாள் - ஆகஸ்ட் 27.

டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மகனும், டாடா குழுமத்தின் இரண்டாவது தலைவரும், தொழிலதிபருமான திரு தோரப்ஜி டாடா அவர்களின் பிறந்தநாள் இன்று,



1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் நாள் திரு ஜாம்ஷெட்ஜி டாடா - ஹீராபாய் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் திரு தோரப்ஜி டாடா. தனது பள்ளிக்கல்வியை மும்பையிலும் பின்னர் பட்டப் படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், மும்பையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியிலும் முடித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.

1884 ஆம் ஆண்டு தந்தையின் நிறுவனத்தில் இணைந்த திரு தோரப்ஜி டாடா முதலில் பாண்டிச்சேரி நகரில் நூற்பாலை ஒன்றை நிறுவ முடியமா என்பதை கண்டுபிடிக்கவும், பின்னர் நாக்பூரில் உள்ள அவர்களின் துணி ஆலையிலும் பணியாற்றினார். மைசூர் நகரில் வசித்து வந்த கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய திரு ஹோர்முர்ஷி பாபாவின் மகளான மெஹர்பாய் என்ற பெண்மணியை மணம் செய்தார். மெஹர்பாயின் சகோதர் மகன்தான் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் டாக்டர் ஹோமி பாபா.

ஜாம்ஷெட்ஜி டாடாவின் மறைவிற்குப் பிறகு டாடா குழுமத்தின் தலைவராக திரு தோரப்ஜி டாடா பொறுப்பேற்றார். அப்போது டாடா குழுமத்தில் நூற்பாலைகளும் மும்பையில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலும்தான் இருந்தன. தந்தையின் கனவை தனயன் நிறைவேற்றினார். டாடா குழுமத்தின் முக்கிய அங்கமான டாடா இரும்பு எக்கு தொழில்சாலை, டாடா மின் உற்பத்தி ஆலை, நியூ இந்தியா காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றை திரு தோரப்ஜி டாடா நிறுவினார். திரு ஜாம்ஷெட்ஜி டாடா காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ( Indian Institute of Science ) திரு தோரப்ஜி டாடா காலத்தில்தான் முறையாகத் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒரு பெரும் தொகையை நன்கொடையாக அளித்தார்.

இந்திய தொழில் முன்னேற்றத்தில் திரு தோரப்ஜி டாடா அவர்களின் பங்களிப்பை மரியாதை செலுத்தும் வகையில் அன்றய ஆங்கில அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது.

வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமல்லாது திரு தோரப்ஜி டாடா  ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், விளையாட்டு வீரர்களை ஆதரிப்பவராகவும் விளங்கினார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும் அவர் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு பங்குபெற்ற இந்திய அணியின் மொத்த செலவையும் டாடாவே அளித்தார்.

1931 ஆம் ஆண்டு திரு தோரப்ஜி டாடாவின் மனைவி மெஹர்பாய் தனது 52 ஆம் வயதில் ரத்த புற்றுநோயால் மரணமடைந்தார். மனைவியின் நினைவாக திருமதி டாடா நினைவு அறக்கட்டளையை நிறுவி ரத்த புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்காக பொருளுதவி செய்தார். 1932 ஆம் ஆண்டு சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை நிறுவப்பட்டது. கல்வி, பேரிடர் மேலாண்மை போன்ற சமுதாய பணிகளை இந்த அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

1932 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் நாள் தோரப்ஜி டாடா காலமானார். இன்று ஆல்போல் பெருகி அருகுபோல் வேரோடி இருக்கும் டாடா குழுமத்தை நிலைநிறுத்தியதில் திரு தோரப்ஜி டாடா அவர்களின் பங்கு மகத்தானது. 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் - ஆகஸ்ட் 25

பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டும் இழித்தும் பழித்தும் பேசும் ஒரு கூட்டம் தமிழகத்தில் தோன்றிய போது, இசையால், இனிய தமிழால் சித்தாந்தங்களை எளிய முறையில் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துரைத்து மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை தன் தோளில் சுமந்த ஒரு அறிஞரும் தோன்றினார். எண்பத்தி ஏழு ஆண்டுகள் வாழ்ந்து நாடெங்கும் சைவ சித்தாந்தத்தை விளக்கினார். தனது பேச்சுத் திறமையால் கேட்பவர் அனைவரையும் கட்டிப் போட்டார். அவர்தான் திருமுருக கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள். 



தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகே காங்கேயநல்லூர் என்ற சிற்றூரில் மல்லையதாசருக்கும் கனகவல்லி அம்மையாருக்கும் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் பிறந்தவர் வாரியார் ஸ்வாமிகள். வீர சைவ மரபில் பிறந்த ஸ்வாமிகளுக்கு அவரது ஐந்தாம் வயதில் சிவலிங்க தாரணம் செய்து வைக்கப்பட்டது. 

இவரது தந்தையே இயல் இசை புராண வல்லுநர். அவரே ஸ்வாமிகளுக்கு குருவாக அமர்ந்து கல்வி கற்பித்தார். இயல் இசையிலும் இலக்கண இலக்கியங்களிலும் ஸ்வாமிகள் தேர்ச்சி பெற்றார். எட்டு வயதில் கவி பாடும் திறமையும் பதின்ம வயதிலேயே பன்னிரெண்டாயிரம் பாடல்களை மனப்பாடமாக சொல்லும் திறமையும் ஸ்வாமிகளுக்கு அமைந்தது. தனது பதினெட்டாம் வயதில் இருந்து பக்தி பேருரைகளை நிகழ்த்த ஆரம்பித்தார். ஸ்வாமிகள் வீணை வாசிப்பதிலும் நிபுணர். 

பண்டிதர்களுக்கு மட்டுமல்லாது பாமர மக்களுக்கும் புரியும் படி பேச்சு வழக்கில் உபன்யாசம் செய்வது ஸ்வாமிகளின் வழிமுறை. தனது பேச்சுக்களின் நடுவே திருப்புகழ், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை பண்ணோடு பாடி அவைகளை மக்களிடம் சேர்த்தார். ஸ்வாமிகளின் பேச்சு முறை என்பது நாடக பாணியில், உயர்தர நகைச்சுவையோடு, அன்றாட நடப்புகளை கலந்து இருக்கும். 

1936ஆம் ஆண்டு முதல் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக திருப்புகழ் அமிர்தம் என்ற மாத பத்திரிகையை நடத்தினார். அந்த இதழ்  மாதம் தோறும் திருப்புகழ் பாடல் ஒன்றுக்கு உரை, கந்தர் அலங்காரத்திற்கு உரை, மற்றும் பல்வேறு கட்டுரைகளோடு வெளியானது. வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் ஸ்வாமிகள் எழுதி உள்ளார். 

கிருபை என்றால் கருணை, வாரி என்றால் கடல். மிகச் சரியாகத்தான் இவர் பெற்றோர்கள் இவருக்கு கிருபானந்த வாரியார் என்று பெயர் இட்டனர்  போலும்.பேருக்கு ஏற்றார் போல ஸ்வாமிகள் கருணைக் கடலாகவும் ஆனந்தக் கடலாகவும் விளங்கினார். பல்வேறு கோவில்களில் திருப்பணியும், பல்வேறு கல்வி நிலையங்களும் இவரால் உருவாக்கப்பட்டன. 

நாடெங்கும் சைவத்தையும் தமிழையும் வளர்த்து சிறப்பித்த வாரியார் ஸ்வாமிகள் 1993ஆம் நாள் நவம்பர் 7ஆம் நாள் முருகப் பெருமாள் திருவடிகளை அடைந்தார். பூத உடலைத் துறந்தாலும் தனது புத்தகங்கள் மூலமாகவும், பதிவு செய்யப்பட்ட சொற்பொழிவுகள் மூலமாகவும் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 

சனி, 24 ஆகஸ்ட், 2019

அணு விஞ்ஞானி ஹோமி சேத்னா பிறந்தநாள் - ஆகஸ்ட் 24.

அது 1974ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் தார் பாலைவனம் பரவிக் கிடைக்கும் பொக்ரான் நகரில் இருந்து டெல்லிக்கு  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்தவர் அன்றய பிரதமர் இந்திரா காந்தி. பேசிய குரல் ஒரே ஒரு செய்தியைத்தான் கூறியது. " புத்தர் சிரித்தார் " இரண்டே சொற்களில் பாரதம் வெற்றிகரமாக தனது அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது என்பது அந்த சங்கேத வாக்கியத்தின் பொருள். இந்த மகத்தான சாதனை ஹோமி நுஸுர்வான்ஜி சேத்னா இந்திய அணுசக்தி நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நடைபெற்றது.


பாரசீக நாட்டில் இருந்து தங்கள் மத நம்பிக்கைகளை காப்பாற்றிக் கொள்ள பாரத தேசத்திற்கு அடைக்கலம் வந்த இனம் பார்சி மக்கள். பாலில் கலந்த சர்க்கரை போல பாரத நாட்டிற்கு பெரும் தொண்டாற்றிய சிறுபான்மை இனம் பார்சி இனம். புகழ்பெற்ற அறிஞர்களை தொழில்முனைவோர்களை ஆராய்ச்சியாளர்களை ராணுவ தளபதிகளை இந்த தேசத்திற்கு அளித்த இனம் அது. ஹோமி சேத்னாவும் பார்சி இனத்தைச் சார்ந்தவர்தான்.

1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் இன்றய மும்பை நகரில் பிறந்தவர் சேத்னா. மும்பை தூய சவேரியார் பள்ளியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகத்திலும் படித்த சேத்னா அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். சிறிது காலம் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி விட்டு பாரதம் திரும்பிய சேத்னா Indian Rare Earth நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.

அணு உலைகளுக்கு தேவையான மூலப் பொருள்களான தோரியம் மற்றும் புளூட்டோனியம் ஆகிய தனிமங்களை பிரித்தெடுக்கும் ஆலையை மும்பை நகரில் உள்ள டிராம்பே பகுதியிலும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் தனிமத்தை பிரித்தெடுக்கும் ஆலையை இன்றய ஜார்கண்ட் மாநிலத்திலும் பின்னர் நாட்டின் முதல் அணு மின் உற்பத்தி நிலையத்தை மும்பையிலும் உருவாக்கிய குழுக்களுக்கு தலைவராக இருந்து பணியாற்றினார்.

அடுத்தடுத்து மர்மமான முறையில் பாரத நாட்டின் முன்னோடி விஞ்ஞானிகளான ஹோமி பாபா மற்றும் விக்ரம் சாராபாய் ஆகியோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணுசக்தி நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உலக நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்த உறுப்பினர்களான ஐந்து நாடுகள் தவிர வேறு எந்த நாடும் அணு சக்தித் துறையில் ஆராய்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்த காலம் அது. அந்த தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கு முன்னர் பாரதம் அணு ஆயுத சோதனையைச் செய்ய முடிவு செய்தது. அந்த பொறுப்பு சேத்னாவிடம் ஒப்படைக்கப்பட்டது. புத்தர் சிரித்தார், பூமி அதிர்ந்தது. பாரதத்தின் திறமை உலகமெங்கும் ஐயமே இல்லாமல் நிலைநாட்டப்பட்டது.

நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஹோமி சேத்னாவுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி நாடு மரியாதை செலுத்தியது. பட்நாகர் விருது, பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளித்த முனைவர் பட்டங்கள் என்று சேத்னா கவுரவம் செய்யப்பட்டார்.

ஒரு சிறந்த தலைவரின் இலக்கணம் என்பது தன்னைக் காட்டிலும் சிறந்த தலைவர்களை உருவாக்குவதுதான். ராஜா ராமண்ணா, பி கே ஐயங்கார் என்று அடுத்த தலைமுறை அணுசக்திதுறை தலைவர்களை பட்டை தீட்டி சேத்னா நாட்டுக்கு அளித்தார். ஹோமி பாபாவும், விக்ரம் சாராபாயும், ஹோமி சேத்னாவும் அமைத்த பாதையில் இன்று நாடு நடை போடுகிறது.

தனது எண்பத்தி ஏழாவது வயதில் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் ஹோமி சேத்னா காலமானார்.

நாட்டின் பாதுகாப்புக்கு பெரும்பங்காற்றிய அறிஞருக்கு ஒரே இந்தியா தளம் தலை வணங்குகிறது. 

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

கண்ணன் வருகின்ற நேரம் - ஜன்மாஷ்டமி - 23 ஆகஸ்ட்

இன்று கோகுலாஷ்டமி திருநாள். நாடுமுழுவதும் வீடுகள் எல்லாம் வாசலைப் பெருகி, நீரிட்டு மெழுகி, கோலம் இட்டு வாசலில் இருந்து கண்ணனின் காலடித் தடத்தை வரைந்து வெண்ணையும் அதிரசமும் அக்கார அடிசிலும் தயாரித்து கண்ணன் வருகைக்காக மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் பெருநாள்.



பாரத மண்ணின் இதிகாச நாயகன் சந்தேகமே இல்லாமல் நடையில் நின்று உயர் நாயகன் ராமன்தான். ஆனாலும்  மக்களின் உள்ளம் கவர்ந்தவன் கண்ணன்தான். ஆதியும் அந்தமும் இல்லாத இறைப் பொருள் மனிதனாக தோன்றி மக்கள் வாழும் வழியைச் சொல்லிச் சென்றதுதான் கண்ணனின் கதை.

ஒரு மனிதனுக்கு எப்படியெல்லாமோ துன்பங்கள் வரலாம், ஆனால் எல்லாவற்றையும் புன்முறுவலோடு எதிர்கொள்வது எப்படி என்பதையும், மகனாக, சகோதரனாக, நண்பனாக, அரசனாக, ராஜதந்திரியாக, நல்லாசானாக எப்படியெல்லாம் சமுதாயத்தோடு பழக வேண்டும் என்பதையும், இந்த சூழல் எந்த நேரத்திலும் கட்டுப்பட்டு விடாமல் தனித்திருப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்தவன் கண்ணன்.

பிறப்பதற்கு முன்னமே அவனை அழிக்க எதிரி காத்துகொண்டு இருந்தான். ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்த இளமைப் பருவம், வளரும் பருவத்தில் வீசும் இடமெல்லாம் குளுமையைத் தரும் தென்றல் போன்ற செயல்கள், எப்போதும் நண்பர்கள் பட்டாளம் சூழ வாழும் வாழ்க்கை, இசையே வாழ்வா இல்லை இசையோடு வாழ்வா என்று பிரித்து அறியாதபடி குழல் ஊதி மனமெல்லாம் கொள்ளை கொண்டாடும் திறமை, அழைப்பு வந்த உடன் அதனை மறுக்காமல் மதுரா நகருக்குச் சென்று மாமன் கம்சனை வென்ற வீரம், வெற்றி பெற்று அதனால் தனக்கு உரிமையான அரசை ஏற்காமல் அதனை உக்ரசேன மஹாராஜாவிற்கே அளித்த பெருந்தன்மை, கம்சனின் மாமனாரான ஜராசந்தனின் தாக்குதலுக்கு நாட்டு மக்களை பலியிடாமல் மத்திய பாரதத்தில் இருந்து மேற்கு கடற்கரை நகரமாம் துவாரகா நகருக்கு மாறிச் சென்ற யதார்த்தவாதி, அதே ஜராசந்தனை பாண்டவர்களைக் கொண்டு அழித்த புத்திசாலித்தனம், பாண்டவர் தூதுவனாய் அமைதிப் பேச்சுவார்தையை முன்னெடுத்த அமைதியின் தூதுவன், அது முடியாமல் போக பார்த்தனுக்கு சாரதியாக அமர்ந்து, இலக்குகள்தான் முக்கியம் தனிமனிதனலல்ல என்று பாடம் நடத்திய கடமை வீரன், போர்க்களத்தில் சோர்வுற்று இருந்த அர்ஜுனனுக்கு கடமையை செய்ய உத்வேகம் ஊட்டிய மனோதத்துவ நிபுணன். கண்ணனின் பல்முக ஆளுமை என்பது நாம் எல்லோருமே அறிந்ததுதான்.

இன்றய காலத்தில் நாட்டிற்கு கண்ணன் கூறும் செய்தி என்ன ?

பிரச்சனைகளும் பின்னடைவுகளும் எல்லோர் வாழ்விலும் ஒரு தவிர்க்க முடியாத பகுதிதான். அதற்காக புலம்பிக் கொண்டு இருப்பதில் பயனில்லை. வாழுவது ஒரு வாழ்க்கை, அதை ஆனந்தமாக வாழுவது எப்படி என்பது கண்ணன் காட்டும் ஒரு  பாடம்.

இசையை ரசிக்கத் தெரியாத அல்லது இலக்கியத்தில் பரிச்சியம் இல்லாத தலைமுறைக்கு வாழ்க்கையை வாழத் தெரியாது. எனவே இவைகளில் குறைந்த பட்ச பரிட்சயமாவது இருக்க வேண்டும், இது கண்ணனின் கையில் உள்ள புல்லாங்குழல் இசைக்கும் பாடம்.

தேங்கிக் கிடக்கும் நீர் கெட்டுவிடும், வில்லில் இருந்து புறப்படாத அம்பு எந்த இலக்கையும் அடையாது. எல்லா மனிதர்களுக்கும் பயணம் என்பது மிக அவசியம். மதுரா நகரில் இருந்து கோகுலத்திற்கு, அங்கிருந்து மீண்டும் மதுரா நகருக்கு, அங்கிருந்து துவாரகாபுரிக்கு, பிறகு  அஸ்தினாபுரத்திற்கும் குருஷேத்திர படுகளத்திற்கும் என்ற கண்ணன் நடந்த பாதை காட்டும் வழி நமக்கு இதுதான்.

வேடிக்கையும் விளையாட்டும் குறும்புத்தனமும் என்று இருந்த கண்ணன் நல்லாசிரியனாக வழிகாட்டியாக ஜகதகுருவாக தன்னை வெளிகாட்டிக் கொண்டது குருஷேத்திர படுகளத்தில். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டில் பிறந்த மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்த கீதையை அங்கேதான் கண்ணன் கூறுகிறான். எழுநூறு ஸ்லோகங்களின் சாரம் என்ன ?

"ஆரியனுக்கு அடுக்காததும் புகழைக் கெடுக்கக் கூடியதுமான மனச் சோர்வை விட்டொழி. செயல் செய். செயல் புரிவது என்ற கடமைக்காக செயலைப் புரி. பலனின் மீது பற்றில்லாமல் செயல் செய். பெருந்தோளா ! பாரதா ! எழுந்து நில், செயல் புரி" இது தான் கண்ணன் நமக்கு காட்டும் வழி.

வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் நாடு இருக்கிறது, இந்த நாட்டிற்கான நமது பங்களிப்பை செய்ய நாம் செயல் பட வேண்டும். தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும் தேசத்தின் நன்மைக்கே என்ற அர்ப்பண உணர்வோடு செயல் செய்யவேண்டும் என்பதுதான் நமக்கு கண்ணனின் அறைகூவல்.

நம்மில் உள்ள கண்ணனை கண்டறிவோம், கண்ணனைக் கண்டடைவோம்.

நண்பர்களுக்கு ஒரே இந்தியா தளத்தின் ஜென்மாஷ்டமி வாழ்த்துகள். 

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ஏக்நாத் ரானடே நினைவு தினம் - ஆகஸ்ட் 22.


நீலத் திரைகடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை. பாரத நாட்டின் தெற்கு எல்லையில் அன்னை தவம் செய்த ஸ்ரீபாத பாறையில் தவம் செய்ய கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வந்தார்.துறவறம் என்பது எந்த வேலையையும் செய்யாமல் இருப்பதல்ல, அது நாட்டுக்கு நாள்தோறும் உழைப்பது என்று கூறிய ஸ்வாமி விவேகானந்தர்தான அந்த இளைஞர். அதே பாறையில் ஸ்வாமிக்கு ஒரு மண்டபம் கட்ட வேண்டும், அது எண்ணற்ற பாரத இளைஞர்களை தேச சேவைக்கு தூண்டும் விளக்காக இருக்க வேண்டும் என்று பாரதத்தின் மேற்குப் பகுதியில் இருந்து ஒருவர் வந்தார். அவர்தான் ஏக்நாத் ரானடே.



1914 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் பிறந்தவர் ஏக்நாத் ரானடே. சிறு வயதிலேயே ஏக்நாத்தின் குடும்பம் நாகபுரி நகருக்கு குடியேறியது. தத்துவ இயலில் இளங்கலை படிப்பும் பின்னர் சட்டமும் பயின்றவர் ஏக்நாத் ரானடே. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் ஆரம்பித்த சிறுது காலத்திலேயே தனது பதின்ம வயதில் ஸ்வயம்சேவகராக இணைந்து கொண்டார் ஏக்நாத் ஜி. தேசபக்தியும், கொள்கைப் பிடிப்புமாக சங்கம் அவரை வார்த்தெடுத்தது. குடும்பத்தையும் இல்வாழ்கையையையும் துறந்து சங்கத்தின் முழுநேர சேவகராக பணியாற்றத் தொடங்கினார். தனது இருபத்தி நாலாம் வயதிலேயே ஜபல்பூர் நகரின் பிரச்சாரகராக நியமிக்கப்பட்டார். காந்தி கொலையைத் தொடர்ந்து சங்கம் தடை செய்யப்பட்டது. பல முழுநேர ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஏக்நாத் ஜி தலைமறைவானார். தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டே சங்க பணிகளில் ஈடுபட்டார். அரசோடு நடந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். சிறிது காலத்திலேயே காந்தி கொலைக்கும் சங்கத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று நிரூபணமாகி தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

வங்காளம், பிஹார், அஸாம் ஆகிய மாநிலங்கள் அடங்கிய பாரதத்தின் கிழக்குப் பகுதியின் க்ஷேத்திர பிரச்சாரக்காக 1950ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பிரிவினைக்குப் பின்னால் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பாரதம் வந்த ஹிந்து சகோதர்களை அரவணைத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை சிறப்பாக வழிநடத்தினார். சங்கத்தின் மிக முக்கியப் பொறுப்பான அகில இந்திய ப்ரச்சாரக் பிரமுக், பௌதிக் பிரமுக், சர்காரியவாக் ( செயலாளர் ) ஆகிய பொறுப்புளையும் ஏக்நாத் ஜி வகித்தார்.

1963ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் நூறாவது ஆண்டு. அப்போது ஸ்வாமிஜியின் சிந்தனைகளை தொகுத்து " ஹிந்து ராஷ்டிரத்திற்கு ஒரு அறைகூவல்" ( Rousing Call to Hindu Nation ) என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஸ்வாமியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஸ்ரீபாத பாறையில் மணிமண்டபம் ஓன்று கட்ட திட்டம் உருவானது. சங்கத்தின் சார்பாக ஏக்நாத் ஜி குழுவின் செயலாளராக அடையாளம் காட்டப்பட்டார்.

பாரதம்  முழுவதும் பயணம் செய்து பொதுமக்களின் ஆதரவை விவேகானந்தரின் மண்டபத்திற்கு ஏக்நாத் ஜி திரட்டினார். முன்னூறுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை கடிதம் மூலம் தெரிவித்தனர். கட்சி வேறுபாடில்லாமல் எல்லா கட்சி தலைவர்களையும் கட்டுமானப் பணிக்கு ஆதரவு தெரிவிக்க வைத்தார். ஏக்நாத் ஜியின் அயராத உழைப்பின் காரணமாக இன்று ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தரின் நினைவு மண்டபம் கம்பிரமாக நிற்கிறது. அதனைத் தொடர்ந்து கன்யாகுமரி கடற்கரை அருகில் விவேகானந்த கேந்த்ராவை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டு அதனையும் வெற்றிகரமாக முடித்தார். இன்று விவேகானந்தா கேந்திரா பல்வேறு தேசியப் புனர் நிர்மாணப் பணிகளையும், கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறது.

எந்த பலனையும் எதிர்பாராமல் நிஷ்காமியமாக  செயல்படும் கர்மயோகியாக தனது வாழ்க்கையை பெரும் குறிக்கோளுக்காக அர்ப்பணம் செய்யும் ஸ்வயம்சேவக்காக தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு உதாரணமாக நடத்திக் காட்டியவர் ஏக்நாத் ரானடே ஜி அவர்கள்.

தனது அறுபத்தி ஏழாம் வயதில் 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாள் ஏக்நாத் ஜி மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவர் உருவாக்கிய விவேகானந்தா கேந்த்ராவில் 23ஆம் நாள் மாலை சூரியன் மறையும் போது அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஸ்வயம்சேவக்காக பாரதம் முழுவதும் பணியாற்றி, தெற்கு கோடியில் தனது அயராத உழைப்பினால் மிகப் பெரும் ஸ்தாபனத்தை உருவாக்கிய ஏக்நாத் ரானடே ஜியின் வாழ்க்கை நம் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும்.  

புதன், 21 ஆகஸ்ட், 2019

ஜீவா என்றோர் மானிடன் - ஆகஸ்ட் 21

தமிழகம் கண்ட தன்னலம் இல்லா தலைவர்களில் முக்கியமான தோழர் ஜீவா என்ற ப ஜீவானந்தத்தின் பிறந்தநாள் இன்று. காந்தியவாதியாகத் தொடங்கி பொதுவுடைமை போராளியாக பரிணமித்த தலைவர் ஜீவா. இந்த நாடுதான் எனது சொத்து என்று காந்தியிடம் ஜீவா கூற, இல்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்று காந்தியால் புகழப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர். பிறப்பின் அடிப்படையில் பாரதியையும், அறியாமையால் கம்பனையும் திராவிட இயக்கங்கள் அவதூறு செய்த காலத்தில், மேடைதோறும் பாரதியையும் கம்பனையும் முழங்கி அவர்களை மக்களிடம் சேர்த்த இலக்கியவாதி தோழர் ஜீவா.



நாகர்கோவில் மாவட்டத்தில் பூதப்பாண்டி நகரில் பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதியரின் மகனாக 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் பிறந்தவர் இவர். சிறுவயதிலேயே காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பள்ளிக்காலத்திலேயே தனது எழுத்தின் மூலம் காந்தியைப் பற்றியும் கதர் பற்றியும் கவிதைகளும் நாடகங்களும் எழுதி அதனை மேடையேற்றவும் செய்தார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்தார். அப்போதுதான் பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் தூக்கிலிடப்பட்டனர். போராளிகளின் மரணம் நாட்டில் பெரும் கிளர்ச்சியை உண்டு செய்தது. சிறையில் இருந்த ஜீவானந்தம் பொதுவுடைமை கருத்துக்களால் கவரப்பட்டார். பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன் ? என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். அதற்காக மீண்டும் சிறைப்பட்டார். புத்தகத்தை வெளியிட்ட ஈ வே ரா மன்னிப்பு கோரி சிறை தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்டார். மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி ஜீவா சிறையில் இருந்தார்.

1938ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக ஜீவா தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவரோடு தேர்வானவர்கள் தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் ஆகியோர். வழக்கம் போல உள்கட்சி பூசலால் 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இவரை கட்சியில் இருந்து நீக்கியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு ஜீவா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

அதன் பிறகு தனது வாழ்க்கை முழுவதும் பொது உடைமைவாதியாகவே ஜீவா வாழ்ந்தார். ஆங்கில அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது. எனவே சில ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். 1952ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றினார்.

இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி 'தாமரை' இலக்கிய இதழை தொடங்கினார். 'ஜனசக்தி'  நாளிதழையும் தொடங்கினார்.

இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு  பிடித்தமானவராக இருந்தாலும்,  துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா. 

உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா.

கருத்துரீதியில் எதிரணியில் இருந்தாலும் எளிமையும், தூய்மையும், தேசபக்தியும் இணைந்து வாழ்ந்த மாமனிதன் தோழர் ஜீவாவின் வாழ்வு பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடமாகும். 

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

கணினி உலகின் கதாநாயகன் - இன்போசிஸ் நாராயணமூர்த்தி - ஆகஸ்ட் 20

கல்வியும், உழைப்பும் ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த ஒருவனை எப்படி முன்னேற்றும் என்பதையும், அதன் பலன் எப்படி நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் என்பதையும், எப்படி பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என்பதையும், எல்லா தடைகளையும் தாண்டி எப்படி பாரதம் உலகின் முக்கியமான சக்தியாக விளங்க முடியும் என்பதை நமது கண்களுக்கு முன்னே காட்டிய வரலாறு திரு நாராயணமூர்த்தி அவர்களின் வரலாறு.



கர்நாடக மாநிலத்தில் ஒரு எளிய மத்தியதர குடும்பத்தில் 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்தவர் நாராயணமூர்த்தி. அவரது தந்தைக்கு அவர் இந்திய ஆட்சிப்பணிக்கு செல்ல வேண்டும் என்பது எண்ணம். ஆனால் அன்றய இளைஞர்கள் போல நாராயணமூர்த்தி பொறியியல் துறையில் சேரவே ஆர்வம் கொண்டு இருந்தார். புகழ்வாய்ந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( IIT )  இடம் கிடைத்து இருந்தாலும், பொருளாதார நெருக்கடியால் அங்கே சேர முடியாமல் பிராந்திய பொறியியல் கல்லூரியில் ( REC ) மின் பொறியியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். பின்னர் கான்பூர் இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் ( IIT Kanpur ) முதுகலை பட்டம் பெற்றார்.

அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பணி புரியத் தொடங்கிய நாராயணமூர்த்தி, கணினி துறையால் ஈர்க்கப்பட்டார். சிறிது காலம் புனா நகரில் இருந்த பத்னி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்தார். பிறகு தன் நண்பர்களோடு இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். 1981ஆம் ஆண்டு மிகச் சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பும் கணினிமயமாக்குதலும் அடுத்த இருபதாண்டுகளில் மிகப் பெரும் வளர்ச்சியை கண்டது. தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை குறைந்த செலவில் அளிப்பதில் இன்போசிஸ் நிறுவனம் முன்னணியில் இருந்தது. எனவே அதே துறையில் இருந்த பல நிறுவனங்களைக் காட்டிலும் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி பலமடங்கு அதிகமாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் நரசிம்ம ராவால் தொடங்கப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டது. மிகப் பெரும் இளைஞர் சமுதாயம், அதுவும் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் திறமையான இளைஞர் பட்டாளம் நாராயண மூர்த்திக்கு உறுதுணையாக அமைந்தது. இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி இந்த இளைஞர்களை பணக்காரர்களாக மாற்றியது. அதிகமான சம்பளம், நிறுவனத்தின் பங்குகளை அளித்தல் என்று திறமை வாய்ந்த இளைஞர்களை இன்போசிஸ் தக்க வைத்துக் கொண்டது.
வறுமைக்கோட்டுக்கு கீழேயும், மத்தியதர வர்க்கமாகவும் இருந்த பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேறின.  இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பலர் பிறகு தனியாக நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமான தொழிலதிபர்களாக விளங்குகின்றனர்.

நாராயணமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி சுதா மூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் கல்வி சுகாதாரம் போன்ற துறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அவர் செய்து வருகிறார்.

பல்வேறு விருதுகளை பெற்ற நாராயணமூர்த்திக்கு பாரத அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி மரியாதை செலுத்தி உள்ளது.

பாரத நாட்டின் அறிவின் கூர்மையை உலகமெங்கும் பறைசாற்றிய திரு நாராயணமூர்த்திக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறது.

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

தீரர் சத்தியமூர்த்தி பிறந்த தினம் - ஆகஸ்ட் 19

சுதந்திரத்திற்கு முன்னுள்ள காலத்தில்  காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவராக விளங்கியவர் தீரர் சத்தியமூர்த்தி. பொய்யய்யே விதைத்து ஆட்சியைப் பிடித்த திராவிட சித்தாந்தத்தால் தவறாக சித்தரிக்கப்பட்ட வீரர்களில் முக்கியமான தலைவர் அவர்.



இன்றய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் என்ற ஊரில் சுந்தர சாஸ்திரிகள் - சுப்புலக்ஷ்மி அம்மாள் தம்பதியரின் மகனாக 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் நாள் பிறந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. இவர் தந்தை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். சிறு வயதிலே சத்தியமூர்த்தி தந்தையை இழந்தார். எனவே தாயாரையும் சகோதரர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டது. சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை வரலாறும் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும் முடித்து, சத்தியமூர்த்தி வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். அன்றய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஸ்ரீனிவாச ஐயங்கார் கீழ் பயிற்சி பெற்று வெற்றிகரமான வழக்கறிஞராக விளங்கினார்.

தனது கல்லூரி காலகட்டத்திலேயே மாணவர் தேர்தல்களில் பங்குகொண்டு சத்தியமூர்த்தி அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைத்து, தனது பேச்சாற்றலால் முக்கிய தலைவராக உருவானார். மாண்டேகு செமஸ்போர்ட் சீர்திருத்தங்களை எதிர்த்தும் ரௌலட் சட்டத்தை எதிர்த்தும் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு சென்று பாரதத்தின் குரலை ஒலித்த பண்டித மதன்மோகன் மாளவியாவின் தலைமையிலான குழுவில் இடம்பெற்றார். மதராஸ் ராஜதானியின் சட்டசபை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் பூண்டி நீர்த்தேக்கம் இவர் சென்னை மேயராக பதவி வகித்த காலத்தில் உருவாக்கியதுதான். கர்மவீரர் காமராஜரின் அரசியல் குரு சத்யமூர்த்திதான். பூண்டி நீர்தேக்கத்திற்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அலுவலக கட்டடத்திற்கும் சத்தியமூர்த்தியின் பெயரை காமராஜ் சூட்டினார். தனிநபர் சத்தியாகிரஹப் போராட்டத்தில் கலந்து கொண்டு அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக, தடையை மீறி தேசியக் கொடியை ஏற்றியதற்காக, அந்நிய துணிக்கடை முன்பாக மறியல் செய்ததற்காக என்று பலமுறை சத்தியமூர்த்தி சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு மத்திய நாடாளுமன்றத்திற்கு தேர்வானார்.

தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் சத்தியமூர்த்தி சட்டசபையில் மதுவிலக்கு, தீண்டாமை, நிற பேதம், சமூக ஏற்றத்தாழ்வுகள், மக்களின் அடிப்படை வசதிகள், பெண் கல்வி, பெண்ணுரிமை எனப் பல செய்திகளை விவாதித்து அலசியிருக்கிறார். பாரதியாரின்  கவிதை நூல்களை அரசு தடை செய்தபோது, 1.10.1928ல் இவர் பேசிய பேச்சு சட்டசபை வரலாற்றில் தனித்த சிறப்புடையது. ‘பாரதி பாடல் எழுதிய  ஏட்டை எரிக்கலாம்; அதை ப்பாடும் வாயை, கேட்டவர் மனத்து உணர்வை என்ன செய்ய முடியும்?’ என்றார். காந்தியடிகள் ‘இது போன்ற பல சத்திய மூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் என்றோ நாட்டை விட்டு ஓடியிருப்பர்” எனப் புகழ்ந்தார்.

தமிழை ஆட்சி மொழியாக்க அப்போதே வாதாடினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இவரும் உதவினார். கே.பி. சுந்தராம்பாளை, கிட்டப்பாவை மேடைகளில், தேசியப்பாடல்கள் பாட வைத்தார். ‘மனோகரா’ நாடகத்தில் இவர் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததாம். சென்னை மியூசிக் அகாடமி தோன்றவும் பெரிதும் உதவினார். உயர்ஜாதிப் பெண்கள் பரதநாட்டியம் ஆடுவது இழுக்கு என்ற நிலையை மாற்றிப் பலரையும் நாட்டியம் பயில வைத்தார்.

தான் கைபிடித்து அழைத்துக் கட்சியில் சேர்த்த காமராசரை தலைவராக்கி அழகுபார்த்தது மட்டுமல்ல, அவரது தலைமையின்கீழ் செயலாளராகப் பணியாற்றிய பெருந்தன்மை, இன்றைய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாகும்

தேவதாசிகள் தடை சட்டம் ஒருமனதாக நிறைவேறியதை மறைத்து, அது தவறு என்று சத்தியமூர்த்தி பேசினார் என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை மீண்டும் மீண்டும் பரப்பி வரலாற்றைத் திரித்து வைத்துள்ளது திராவிட இயக்கங்கள். மேலும் விவரங்கள் அறிய திரு விஜயராகவன் கிருஷ்ணன் அவர்களின் பதிவுகளைப் பார்க்கவும்.

https://www.facebook.com/vijayaraghavan.krishnan/posts/10220138703715253

தமிழும், ஆங்கிலத்திலும், வடமொழியிலும், இயல் இசை நாடகம் என்று முத்தமிழிலும் பெரும் புலமை பெற்றிருந்த தீரர் சத்தியமூர்த்தி சிறையில் ஏற்பட்ட முதுகுத் தண்டு காயத்தினால் 1943ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் நாள் காலமானார்.  

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

லெப்டினென்ட் ஜெனரல் அர்தேஷிர் தாராபூர் - ஆகஸ்ட் 18

பாரத நாட்டின் சேவைக்காக பாகிஸ்தானுக்கு எதிரான 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பலிதானியான லெப்டினென்ட் ஜெனரல் அர்தேஷிர் தாராபூர் அவர்களின் பிறந்ததினம் இன்று.

தாராபூரின் முன்னோரான ரத்தன்ஜிபா  சத்ரபதி சிவாஜி மஹாராஜின் படையில் தளபதியாகப் பணியாற்றியவர். இவரின் தந்தையும், பாட்டனாரும் ஹைதராபாத் நிஜாமின் அரசின் சுங்கத்துறையில் பணிபுரிந்தவர்கள். பள்ளிப்பருவத்திலேயே பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய தாராபூர் படிப்பை முடித்தபின் நிஜாமின் ராணுவத்தில் பணிபுரியத் தொடங்கினார். இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் இவரது படைப்பிரிவு மத்திய கிழக்கு நாடுகளில் பணியில் ஈடுபட்டு இருந்தது.




ஹைதராபாத் சமஸ்தானம் பாரதத்தோடு இணைந்த பிறகு 1951ஆம் ஆண்டு தாராபூர் இந்திய ராணுவத்தின் பூனா குதிரைப்படை பிரிவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். படிப்படியாக ராணுவத்தில் முன்னேறிய அவர் 1965ஆம் ஆண்டு லெப்டினென்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் காஷ்மீர் மக்களைப் போன்று உடைகளை அணிந்துகொண்டு பாகிஸ்தான் ராணுவம் பாரத எல்லைக்குள் ஊடுருவியது. உள்ளூர் மக்கள் அளித்த தகவல்களைத் தொடர்ந்து பல்வேறு பாகிஸ்தான் ராணுவத்தினர் பாரத ராணுவவீரர்களால் கைது செய்யப்பட்டனர். கேந்ர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பிடிப்பதன் மூலமும், சாலைப் போக்குவரத்தை தடை செய்வதன் மூலமும் பாரத ராணுவத்தை நிலைகுலைய வைத்துவிட திட்டமிட்ட பாகிஸ்தான் முழுமையான போரில் இறங்கியது. செப்டம்பர் ஆறாம் நாள் பாரத ராணுவம் சர்வதேச எல்லைக்கோட்டை கடந்து பாகிஸ்தானுக்குள் புகுந்தது.

பாகிஸ்தான் பகுதியில் உள்ள சிலாகோட் நகரை கைப்பற்றி லாகூரில் இருந்து ராணுவ தளவாடங்கள் போர்முனைக்கு செல்லாமல் தடுக்கும் முன்னெடுப்பை பாரத ராணுவம் தொடங்கியது. இந்தத் தாக்குதலை இந்தியாவின் முதலாவது கவசப்படை நடத்துமாறு உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. தாராப்பூர் நடத்திய பூனா குதிரைப்படையும் முதல் கவசப்படையின் ஒரு பகுதியாக இருந்தது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்திருந்த கவச வண்டிகளில் ( Military Tanks ) அறுபதை பாரத ராணுவம் அழித்தது. சிலாகோட் பகுதி பாரத ராணுவத்தின் பிடிக்குள் வந்தது. போரில் படுகாயம் அடைந்த போதிலும் தாராப்பூர் களத்தை விட்டு அகலாது தனது படைகளை நடத்தினார். பாரத ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த அந்த வீரர் போர்க்களத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தார்.

அவரது விருப்பப்படி போர்க்களத்திலேயே அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இறுதிச் சடங்குகள் நடைபெறும் நேரத்தில் பாகிஸ்தான் ராணுவமும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது தாக்குதலை நிறுத்தி வைத்தது.

போற்றுதலுக்குரிய நெஞ்சுரத்தை காட்டி, பலிதானியான வீரர் லெப்டினென்ட் ஜெனரல் அர்தேஷிர் தாராபூர் அவர்களுக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

இந்திய நாட்டைக் காக்க தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தை நாம் என்றும் போற்றுவோம். 

சனி, 17 ஆகஸ்ட், 2019

மாவீரன் மதன்லால் திங்க்ரா பலிதான தினம் - ஆகஸ்ட் 17

கைகளை வைத்துத் தேய்த்தபடி பஜன்லால் தன் ஆங்கிலேய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான், “ஒரு கொலைகாரனின் சகோதரன் என்பதே எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது. என் தந்தையார், அவன் என் மகனே அல்ல என்றும் அவனது உடலை எங்கள் குடும்பத்துக்கு அனுப்பி எங்களை அவமானப்படுத்த வேண்டாம் என்றும் மாட்சிமை தாங்கிய அரசருக்கு மனு அனுப்பிவிட்டார்.”



அதே நேரத்தில் அதே இலண்டனில் ஆங்கிலேய அதிகார வர்க்கத்தின் உச்சாணிப் பிரமுகர்கள் ஓர் அறையில் அதே கொலைகாரனைக் குறித்து, பேசிக்கொண்டிருந்தார்கள். “ஒரு தேசபக்தன் என்கிற விதத்தில் அவனை மதிக்கத்தான் வேண்டி இருக்கிறது,” என்றார் இலையாட் ஜியார்ஜ் (Lloyd George). அருகே அமர்ந்திருந்த பருமனான மனிதர் தலையாட்டினார்; “அவன் அன்று நீதிமன்றத்தில் பேசினானே… என்னைக் கேட்டால் தேசபக்தியின் பெயரில் நான் கேட்ட பேச்சுகளிலேயே மிகவும் அற்புதமான உரை அதுதான். நாம் ரெகுலஸையும் காரக்டாக்கஸையும் புளூடார்க்கின் வீரநாயகர்களையும் நம் நினைவில் வைத்திருப்பது போலவே அவனது பெயரையும் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் இந்தியர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அவனது பேச்சை நாம் வெளியில் வராமல் தடுத்துவிட்டோம் அல்லவா? …” அந்தப் பருமனான மனிதர்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாகப் போகும் வின்ஸ்டன் சர்ச்சில்.

அதே நேரத்தில் பிரிட்டிஷ் சிறையில் அந்தக் ‘கொலைகாரனை’ப் பார்க்க ஒரு ஒல்லியான இளைஞர் வந்திருந்தார். “நான் தூக்குத் தண்டனைக் கைதியைப் பார்க்க அனுமதியுடன் வந்திருக்கிறேன்.” கைதியிடம் அழைத்துச் செல்லப்பட்டார் அந்த மனிதர். சிறைக் கம்பிகளுக்கு இரு புறங்களிலும் நின்ற அந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒருவர் முகத்தில் புன்னகை; மற்றவர் கண்களில் கண்ணீர் அரும்பியது. “தங்கள் தரிசனத்தை யாசித்து வந்திருக்கிறேன்… நான் உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா?” என்றார் பார்க்க வந்தவர். சிறைக்குள் இருந்தவரோ, “தயவு செய்து ஒரு சீப்பு தரமுடியுமா? நாளை என் மணப்பெண்ணை முத்தமிடும் போது கலைந்த தலையுடன் இருப்பதை நான் விரும்பவில்லை,” என்றார். சீப்பும் சில தாள்களும் கைமாறின.

சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் விடைபெற்ற அந்த மனிதர் வீர சாவர்க்கர்.

இந்திய தேசபக்தர்களுக்கு கடுமையான தண்டனைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டு வந்த காலகட்டம் அது. இந்தத் தண்டனைகளில் முக்கிய பொறுப்பதிகாரியாக விளங்கியவன் கர்ஸன் வில்லி. இந்திய இம்பீரியல் செண்டரில் நடக்கும் விசுவாசமான இந்திய பிரஜைகளுக்கான கூட்டத்தில் அவன் கலந்து கொள்வதாக இருந்தது. ஜூலை 1, 1909 அன்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மதன்லால் திங்க்ரா சென்றார். நீலநிற பஞ்சாபித் தலைப்பாகையுடன் சென்ற அவர் கர்ஸான் வில்லியை ( Curzon Wyllie) நேருக்கு நேராகச் சுட்டு எமனுலகு அனுப்பினார். கூட்டம் பதறிச் சிதறி ஓடியது; திங்க்ரா போலிஸ் வரும்வரை நின்றார். பின்னர் செய்தியாளர்கள் எழுதினார்கள்: “அந்தக் கூட்டத்திலேயே அமைதியுடன் காணப்பட்டது திங்க்ரா மட்டும்தான்” திங்க்ரா நினைத்திருந்தால் அங்கிருந்த மக்கள் மீது குண்டுகளைப் பொழிந்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம். ஐரிஷ் புரட்சியாளர்கள் உதவியுடன் தப்பிச்சென்று பிரான்ஸில் அரசியல் அகதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் திங்க்ரா அதனைச் செய்யவில்லை. இலண்டனிலேயே இந்திய தேசியத்தின் சிங்க முழக்கத்தைக் கேட்கச்செய்துவிட்டார் திங்க்ரா.

பிரிட்டிஷ் கவிஞர் வில்ப்ரைய்ட் ஸ்காவென் ப்ளண்ட், (பிரிட்டிஷ் ராஜ்ஜிய விவகாரத் துறை உயர்பதவி வகித்தவர்) எழுதினார்: “எந்த ஒரு கிறிஸ்தவ இறைசாட்சியும் தனக்கு எதிரான தீர்ப்பினை இத்தனை மாட்சிமையுடனும் அச்சமின்மையுடனும் எதிர்நோக்கியதில்லை… இந்தியா இவரைப் போல 500 இளைஞர்களை உருவாக்கினால் நிச்சயமாக விடுதலையை அடைந்துவிடும். அந்த விசாரணையின் போது மருத்துவ அதிகாரி மதன்லால் திங்க்ராவின் நாடித் துடிப்பு கூட முதலில் இருந்து இறுதிவரை தனது இயல்பு நிலையிலிருந்து மாறவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.” ஐரிஷ்காரரான ப்ளண்டின் 69 ஆவது பிறந்தநாளும் மதன்லால் திங்க்ராவின் பலிதான தினமும் ஒன்றாக அமைந்தது. “என்னை திங்க்ரா பெருமைப்படுத்திவிட்டார்; இந்த நாள் இனி விடுதலை வீரர்களின் தியாகங்களின் நினைவுதினமாக அனுசரிக்கப்படும்” என அறிவித்தார் ப்ளண்ட்.

மதன்லால் திங்க்ராவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து டைம்ஸ் பத்திரிகை எழுதியது: “தண்டனை அறிவிக்கப்பட்ட போது கொலைகாரன் எவ்வித சலனமும் இன்றி இருந்தது அவனது மாட்சிமைக்குச் சாட்சியாக அமைந்தது. இங்கிலாந்து நாட்டு விசாரணைகளில் காணப்பட முடியாத அம்சம் இது. விசாரணைக் கூண்டிலிருந்து திங்க்ரா புன்னகையுடன் வெளியேறியதைக் காணமுடிந்தது.”

ஆகஸ்ட் 17, 1909 காலை 9:00 மணி இலண்டனின் பெண்டோன்வில்லி சிறையில் மதன்லால் திங்க்ரா அவரது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். ஹட்ஸன் எனும் ஒரு கிறிஸ்தவ பாதிரி வழக்கம்போல அவருக்காக பிரார்த்தனை செய்ய முன்வந்தார். “நான் ஒரு ஹிந்து; உங்கள் பிரார்த்தனை எனக்குத் தேவையில்லை” எனப் புன்னகையுடன் மறுத்துவிட்டார் திங்க்ரா.

இறுதி ஆசைகள் குறித்த கேள்விகளை நிராகரித்து நடந்தவர் முகத்தை மூடும் துணியையும் நிராகரித்தார். பிரிட்டிஷ் தலையாரி பியர்பாயிண்ட்டுக்கு எந்த வேலையும் வைக்காமல் அவரே தூக்குக் கயிறை முத்தமிட்டு கழுத்தில் சூடிக்கொண்டார். கால்களின் கீழிருந்த பலகை இழுக்கப்பட்டது. பிரிட்டிஷ் விதிகளின் படி அரைமணிநேரம் சடலம் தொங்கிய பிறகு எடுத்து வரப்பட்டது. மரண சான்றிதழ் வழங்கும் இடத்தில் சாவர்க்கரும் இருந்தார். மதன்லால் திங்க்ராவின் பூத உடலில் புன்னகை உறைந்திருந்தது. ஹிந்து முறைப்படி தகனம் செய்ய திங்க்ராவின் தோழர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் பிரிட்டிஷ் அரசுக்கான இராஜ விசுவாசத்துடன் அவரது உடலை வாங்க மறுத்துவிட்ட நிலையில் அவரது உடல் சிறையில் புதைக்கப்பட்டது.

பாரிஸில் இருந்த சர்தார் சிங் ராணாவுக்கு மதன்லால் திங்க்ராவின் இறுதி அறிக்கை சென்றது. மதன்லால் திங்க்ரா தூக்கிலிடப்பட்ட அன்று (17 ஆகஸ்ட், 1909) அவருடைய படத்துடன் வந்தே மாதரம் எழுதித் திகழ அதன் கீழ் இந்த அறிக்கை வெளியானது. இலண்டனிலும் அவை வெளிப்பட்டன. விரைவில் இந்தியாவுக்கும் அனுப்பப்பட்டன. அரசாங்கம் கருமசிரத்தையாக அதனைத் தடை செய்தது. “சவால்” எனும் தலைப்பில் வெளியான அந்த அறிக்கை கூறியது:

நான் கருணையை யாசிக்கப்போவதில்லை. உங்களுக்கு என் மீது எந்த அதிகாரமும் இல்லை. எப்படி ஜெர்மனி இங்கிலாந்தை ஆளமுடியாதோ அது போல பாரதத்தை இங்கிலாந்து ஆள முடியாது; கூடாது. நான் அன்று ஆங்கில இரத்தத்தை சிந்த வைத்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அது அடக்கத்துடன் நான் என் இந்திய தேசத்தின் தேசபக்த இளைஞர்களுக்கு தூக்குத் தண்டனைகளையும் நாடுகடத்தல் தண்டனைகளையும் அளித்து வந்தமைக்கான ஒரு எளிய பழிவாங்கும் முயற்சியே ஆகும். இந்த முயற்சியில் நான் என் மனசாட்சியைத் தவிர வேறு எவராலும் தூண்டப்படவில்லை என்பதனை சொல்லிக்கொள்கிறேன். நான் என் கடமையை செய்தேனே தவிர வேறு எவருடனும் சதியாலோசனை செய்யவில்லை.

அன்னியத் துப்பாக்கிகளால் அடக்கப்பட்டிருக்கும் ஒரு தேசமானது நிரந்தரப் போரில் ஈடுபட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். நிராயுதபாணிகளாக்கப்பட்ட ஒரு தேசத்துக்கு வெளிப்படையான யுத்தம் சாத்தியமில்லை. எனவே நான் எதிர்பாராத நேரத்தில் தாக்கினேன். போர் துப்பாக்கிகள் மறுக்கப்பட்டதால் நான் என் கைத்துப்பாக்கியால் தாக்கினேன்.

ஒரு ஹிந்து என்ற முறையில் என் தேசத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் என் தெய்வத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம். என் தேசத்தாயின் சேவை ஸ்ரீ ராமனின் சேவை. அவளுக்கு செய்யப்படும் சேவை ஸ்ரீ கிருஷ்ணனுக்குச் செய்யப்படும் சேவை. புத்திபலத்திலும் உடல்பலத்திலும் சக்தியில்லாத என்னைப் போன்ற ஒரு மைந்தன் என் அன்னைக்கு என் உதிரத்தைத் தவிர வேறு எதைத் தந்துவிட இயலும்? எனவே என் இரத்தத்தை அவள் சந்நிதியில் நான் சமர்ப்பித்தேன்.

இந்த விடுதலை யுத்தமானது பாரதத்துக்கும் இங்கிலாந்துக்குமிடையே தொடரும். ஆங்கிலேயர் எனும் இனத்துக்கும் ஹிந்துக்களுக்கும் இடையே இந்த இயற்கைக்கு முரணான ஏற்பாடு இருக்கும் பட்சத்தில் அந்த இரு இனங்களும் இருக்கும் வரை இந்தப் போராட்டம் முடிவின்றித் தொடரும்.

இறைவனிடம் என் ஒரே பிரார்த்தனை இதுதான்– நான் என் தேசத்துக்காக மீண்டும் இதே தேச அன்னைக்குப் பிறப்பேனாக. மீண்டும் இதே புண்ணிய கைங்கரியத்தில் மரணத்தைத் தழுவுவேனாக. உலக மானுடம் அனைத்துக்கும் அவள் நன்மையை அருளவும் ஈஸ்வரனின் மகோன்னதத்தை பிரகடனப்படுத்தவும், அவள் விடுதலையை அடையும்வரை நான் மீண்டும் மீண்டும் பிறந்து இதே கைங்கரியத்துக்காக மரணத்தைத் தழுவுவேனாக. இன்று என் பாரத தேசம் படித்துக்கொள்ள வேண்டிய ஒரே பாடம் எப்படி தேசத்துக்காக மரணத்தை ஏற்றுக்கொள்வது என்பதுதான். அதனை கற்பிக்க ஒரே வழி, நாமே அந்தப் பாதையை ஏற்று வழிகாட்டுவதுதான். எனவே நான் மரணத்தை ஏற்றுக்கொள்கிறேன் அந்தப் பிராண தியாகத்தில் பிரகாசிக்கிறேன்.

வந்தே மாதரம்

இன்று பாரத அன்னையின் விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரனின் பலிதான தினம். இரண்டாயிரம் ஆண்டுகள் இந்தியர்கள் இவரது நினைவைக் கொண்டாடுவார்கள் என அன்னியனையே வியந்து சொல்லவைத்த அந்த வீர மைந்தனின் பலிதான தினம். இந்தத் தேசத்தின் விடுதலையின்பால் கொண்ட அன்பினால், பிறந்த குடும்பத்தால் நினைவு துறக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, உறவு அறுக்கப்பட்டு, அனாதையாகப் புதைக்கப்பட்ட வீரனின் நினைவுதினம். நாம் அவரை நினைவில் வைத்திருக்கிறோமா? இத்தகைய தியாகங்களால் பெறப்பட்ட விடுதலைக்கு நாம் பாத்தியர்களாக இருக்கிறோமா? நாம் உண்ணும் உணவின் ஒவ்வொரு உப்புக் கல்லிலும் உறைந்திருப்பது வீரத் தியாகிகளின் உதிரமும் வியர்வையும் அவர்களை நேசித்தோர் சிந்திய கண்ணீரும். அதனை நாம் எண்ணிப் பார்க்கிறோமா? மதன்லால் திங்க்ராவின் நூறாவது நினைவுதினத்தன்று ஒவ்வொரு பாரத மைந்தனும் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.

ஆக்கம் - திரு அரவிந்தன் நீலகண்டன் -
தமிழ்ஹிந்து இணைய இதழில் எழுதிய கட்டுரை. 

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

மஹரிஷி அரவிந்தரின் அவதார தினம் - ஆகஸ்ட் 15.

பாரத நாட்டின் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான தினம். அன்னியர் ஆட்சியில் இருந்து நாம் விடுதலை அடைந்த நாள் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்ட வீரரும், தத்துவ ஞானியும், கவிஞரும், கர்மயோகியுமான மஹரிஷி அரவிந்தரின் அவதார தினமும் இது.

1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் கொல்கத்தா நகரின் மருத்துவர் கிருஷ்ணதன் கோஷ் - ஸ்வர்ணலதா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் அரவிந்த கோஷ். பெனுபூஷண், மன்மோகன் என்ற மூத்த சகோதர்களும், சரோஜினி என்ற தங்கையும், பாரேன் கோஷ் என்ற தம்பியும் இவரின் உடன்பிறப்புகள். இவர் தந்தை அன்று வங்காளத்தில் செல்வாக்கு மிகுந்த பிரம்மசமாஜத்தின் உறுப்பினர். ஆங்கில அரசு கருணை உள்ளம் கொண்டது என்றும் மேற்கத்திய நாகரிகம் முன்னேறியது என்ற எண்ணமும் கொண்டவர் அவர். அதனால் வீட்டில் ஆங்கிலமும், வெளியே தேவைப்படும் இடங்களில் ஹிந்துஸ்தானி மொழியும் பேசுமாறே அவர் தன் பிள்ளைகளை வளர்த்தார்.



தனது பிள்ளைகள் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கவேண்டும் என்று கருதிய கிருஷ்ணதன் கோஷ் அவர்களை முதலில் டார்ஜிலிங் நகரில் உள்ள ஆங்கிலப் பள்ளியிலும் பின்னர் இங்கிலாந்து நாட்டிலும் படிக்க வைத்தார். அங்கே அரவிந்தரும் அவர் சகோதர்களும் லத்தீன், பிரெஞ்சு, வரலாறு, புவியியல் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். தந்தையின் எண்ணம் ஒன்றாக இருக்க பிள்ளைகளின் கனவு வேறாக இருப்பது இயல்பான ஒன்றுதானே. மற்ற சகோதர்கள் தங்களின் மனதிற்கு உகந்த படிப்பை மேற்கொள்ள, அரவிந்தர் மட்டும் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களில் பதினோராம் இடத்தில் தேர்ச்சி பெற்றார். அதுவும் அவர் தந்தைக்காகத்தான். ஆட்சிப் பணியில் ஈடுபாடு இல்லாத அரவிந்தர் குதிரை ஓட்டும் தேர்வுக்கு தாமதமாக வந்து, ஆட்சிப் பணிக்கு செல்வதைத் தவிர்த்தார்.

இதனிடையில் இங்கிலாந்து வந்த பரோடா மன்னர் மூன்றாம் சாயாஜிராவ் ஜெய்குவார்ட் தனது அரசில் வேலை பார்க்க வருமாறு அரவிந்தருக்கு அழைப்பு விடுத்தார். அரவிந்தர் மீண்டும் தாயகம் திரும்பினார். மகனை வரவேற்ற மும்பைக்கு வந்த தந்தையிடம் தவறுதலாக அரவிந்தர் வந்துகொண்டு இருந்த கப்பல் கடலில் கவிழ்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது. மனமுடைந்த தந்தை அங்கேயே மரணமடைந்தார். தந்தையை உயிரற்ற உடலாகத்தான் அரவிந்தரால் பார்க்க முடிந்தது.

பரோடா அரசில் நில அளவுத் துறை மற்றும் வருவாய்துறைகளில் பணியாற்றிய அரவிந்தர் வெகு விரைவில் மன்னருக்கு நெருக்கமானவராக மாறினார். மன்னருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பொறுப்பும், விழாக்களில் பேசுவதை எழுதித் தரும் பொறுப்பும் அவருக்கு வந்தது. அப்போது பரோடா கல்லூரியில் பகுதி நேரமாக பிரெஞ்சு ஆசிரியராகவும் பணியாற்றினார். பரோடாவில் இருக்கும்போதுதான் அரவிந்தர் வங்காள மொழியையும், சமிஸ்க்ரித மொழியையும் கற்றுக்கொண்டார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நாட்டில் சுதந்திரக் கனல் வீசிக்கொண்டு இருந்தது. அரவிந்தரும் அதில் தப்பவில்லை. நேரடியாக அரசியலில் ஈடுபடும் சூழல் இல்லாததால் பரோடாவிலும், வங்காளத்திலும், மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இளைஞர்களை ஓன்று திரட்டினார். அன்றய சுதந்திரப் போராட்டம் என்பது ஆயுத வழியில் வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என்று எண்ணிய இளைஞர்களைப் பெருவாரியாக கொண்ட குழுக்களாக இயங்கியது. அப்படியான இளைஞர்களை தனது அனுசீலன் சமிதியின் மூலம் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு அரவிந்தர் ஆயுதப் பயிற்சி அளித்தார்.

1906ஆம் ஆண்டு வங்காள மாகாணத்தை கர்சான் மத ரீதியாக பிரித்தார். நாடெங்கும் அதனை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கின. 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. புரட்சியாளர்கள் திலகர் பின்னும், மிதவாதிகள் கோகுலே பின்னும் என்று திரண்டனர். திலகர் அணியில் அரவிந்தர், பாரதியார், சிதம்பரம் பிள்ளை ஆகியோர் இருந்தனர்.

நீதிபதி கிங்ஸ்போர்டை கொலை செய்ய அனுசீலன் சமிதி முடிவு செய்தது. அதனை நிறைவேற்றும் பொறுப்பு குதிராம் போஸ் பிரபுல்ல சாகி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி வரும் வண்டியில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன, ஆனால் தவறுதலாக இரண்டு ஆங்கிலேயப் பெண்கள் கொல்லப்பட்டனர், நீதிபதி தப்பிவிட்டார். பாரத நாட்டின் முக்கியமான அலிப்பூர் சதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அனுசீலன் சமிதியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரவிந்தரும் அவர் சகோதரர் பாரேன் கோஷ் உள்பட முப்பத்தி ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அரவிந்தர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அனுசீலன் சமிதியின் அமைப்பின்படி மேல்மட்ட தலைவர்கள் யாரும் கீழ்மட்டத்தில் உள்ளவர்களோடு நேரடித் தொடர்பில் இருப்பதில்லை. எனவே அரவிந்தர் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாமல் அவரை அரசு விடுதலை செய்தது. பாரேன் கோஷையும் உல்சாகர் தத்தையும் தூக்கிலிடுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. பலர் நாடு கடத்தப்பட்டார். பலருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார்.

சிறையில் இருந்த அரவிந்தருக்கு சில வினோதமான அனுபவங்கள் ஏற்பட்டன. தியானத்தில் இருந்த அரவிந்தர் செவிகளில் விவேகானந்தர் உரையாடுவது கேட்டது, ஏறத்தாழ பதினைந்து நாட்கள் விவேகானந்தர் அவருக்கு பல்வேறு போதனைகளைச் செய்தார் என்று அரவிந்தர் குறிப்பிட்டார். சிறையில் அவருக்கு கிருஷ்ண தரிசனமும் கிடைத்தது. நேரடியாக பகவான் கிருஷ்ணன் அரவிந்தருக்கு கீதையை போதித்ததாக அரவிந்தர் எழுதுகிறார். இதுபோன்ற அனுபவங்கள் அரவிந்தரின் வாழ்க்கைப் போக்கை மாற்றின. அரசியலில் இருந்து விலகி அரவிந்தர் ஞான மார்க்கத்தில் பயணிக்கத் தொடங்கினார்.

ஆனாலும் ஆங்கில அரசு வேறு வழக்குகளில் அரவிந்தரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது. வங்காளத்தில் இருந்து விலகி அன்று பிரெஞ்சு காலனியாக இருந்த பாண்டிச்சேரிக்கு அரவிந்தர் குடிபுகுந்தார். அங்கே பாரதியார், வ வே சு ஐயர் ஆகிய தேசபக்த நண்பர்கள் அவருக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள். தனது சொற்பொழிவுகளாலும் கட்டுரைகளாலும் தேசபக்தி கனலைத் தூண்டும் ஆற்றல் வாய்ந்த அரவிந்தர் மீண்டும் அரசியல் களத்திற்கு வரவேண்டும் என்று காந்தி தனது நண்பர்கள் மூலம் அவர்க்கு வேண்டுகோள் விடுத்தார். பாரத நாட்டின் விடுதலை என்பது மிக விரைவில் நடக்கப் போகிறது. ஆனால் நாடு பெரும்புகழ் அடையவேண்டும் என்றால் அது ஆன்மீகத்தின் மூலமாகவே முடியும், அந்த ஆத்ம சக்தியை தூண்டுவதே எனது வேலை என்று அரவிந்தர் கூறிவிட்டார்.

பாரத தத்துவ ஞானம் பற்றி, கீதை உபநிஷதங்கள் ஆகியவற்றுக்கு உரை என்று பல்வேறு படைப்புகளை அரவிந்தர் இயற்றினார். 24,000 வரிகள் கொண்ட தத்துவ நூலை சாவித்ரி என்ற பெயரில் அவர் எழுதினார். ஆத்ம சாதகத்தாலும், யோகத்தால் மாநிறம் கொண்ட அரவிந்தர் படிப்படியாக தங்க நிறத்திற்கு மாறினார் என்று அவரோடு பழகியவர்கள் பதிவு செய்து உள்ளனர்.

1950 ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி அரவிந்தர் மஹாசமாதி அடைந்தார். போராளியாகத் தொடங்கி ஆன்மீகவாதியாக மலர்ந்த மஹரிஷி அரவிந்தர் நம்மை வழிநடத்த பிராத்திக்கிறோம்.

நாடு விடுதலை அடைய தங்கள் உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் பாரத தாயின் காலடியில் சமர்ப்பணம் செய்த மாவீரர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள். தேச மக்களுக்கு ஒரே இந்தியா தளத்தின் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

பெண்மையின் சக்தி - காமா அம்மையாரின் நினைவுதினம் - ஆகஸ்ட் 13

இந்திய விடுதலை வேள்விக்கு ஆண்கள் மட்டுமல்ல ஏராளமான பெண்களும் ஆகுதியானார்கள். அதில் முக்கியமானவர் காமா அம்மையார். இந்திய மண்ணுக்கு வெளியே சுதந்திரக் கனலை பாதுகாத்தவர் அவர்.

1861ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் மும்பையைச் சார்ந்த பார்சி வகுப்பைச் சார்ந்த சொரப் பிரேம்ஜி படேல் என்பவரின் மகளாகப் பிறந்தவர் காமா அம்மையார். 1885ஆம் ஆண்டு ருஸ்தம் காமா என்ற வழக்கறிஞரை இவர் மணந்தார். ருஸ்தம் காமா ஆங்கிலேயர்களோடு இணைந்து அதன் மூலம் செல்வாக்கு பெறவேண்டும் என்று எண்ணியவர். ஆனால் காமா அம்மையாரே ஆங்கில ஆட்சியை அகற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர். அதனால் இவர்களது மணவாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை.



1896ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சமும் உடனடியாக அதனைத் தொடர்ந்து பிளேக் நோயும் மும்பையைத் தாக்கியது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் குழுவில் காமா அம்மையாரும் தன்னை இணைத்துக் கொண்டார். அதனால் அவரும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்காக 1902ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றார்.

மண் மாறினாலும் மனம் மாறாது. இந்திய விடுதலை இயக்கத்தை காமா அம்மையார் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் தலைநகரத்தில் தொடர்ந்தார். லண்டன் நகரத்தில் லண்டன் ஹவுஸ் என்ற பெயரில் இந்திய மாணவர்களுக்கு தங்கும் விடுதியை அமைத்து, அந்த மாணவர்களிடம் தேசபக்தி கனலை ஏற்றிக் கொண்டிருந்த ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா, தாதாபாய் நௌரோஜி ஆகியோருடன் இணைந்து கொண்டார். அங்கே வீர சாவர்க்கர், வ வே சு ஐயர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

அதனால் அவர் பாரதம் திரும்பவேண்டும் என்றால் இனி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி அளிக்கவேண்டும் என்று ஆங்கில அரசு உத்தரவிட்டது. அதனை அளிக்க மறுத்து காமா அம்மையார் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு குடியேறினார். அங்கிருந்து வந்தே மாதரம் மற்றும் தல்வார் என்ற பத்திரிகைகளை நடத்தினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட அந்த பத்திரிகைகளை பாண்டிச்சேரி வழியாக பாரதத்திற்குள்ளும் தேசபக்தர்கள் கொண்டு வந்தனர்.

1907ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற சோசலிச மாநாட்டில் காமா அம்மையார் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றினார். மேலே பச்சை நிறமும் அதோடு எட்டு தாமரை மலர்களும், நடுவில் காவி நிறமும் அதில் வந்தே மாதரம் என்ற தேசபக்தி மந்திரமும், கீழே சிகப்பு நிறமும் அதில் ஒரு புறம் பிறைச் சந்திரனும், மறுபுறம் சூரியனும் பொறிக்கப்பட்டு இருந்தது.

" பாருங்கள், சுதந்திர பாரதத்தின் கொடி இங்கே ஏற்றப்பட்டு உள்ளது. இதன் பெருமையைக் காப்பதற்காக பல்லாயிரம் இளைஞர்கள் தங்கள் குருதியை சிந்தி உள்ளனர். இந்தக் கொடியின் பெயரால் நான் அழைப்பு விடுக்கிறேன், உலகில் உள்ள சுதந்திரத்தை விரும்புபவர் அனைவரும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருக" என்று காமா அம்மையார் முழங்கினார்.

நெடுங்காலம் வெளிநாட்டிலேயே வசித்து வந்த காமா அம்மையார் 1935ஆம் ஆண்டு பாரதம் திரும்பினார். 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் நாள் அவர் காலமானார்.

எட்டும் அறிவினிலில் மட்டுமல்ல தியானத்திலும் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை என்று வாழ்ந்து காட்டிய காமா அம்மையாரின் தியாகமும் வீரமும் நம்மை வழிநடத்தட்டும்.  

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

விண்ணை அளந்த பாரதியன் - விக்ரம் சாராபாய் - ஆகஸ்ட் 12.

வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்,
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்.

சுதந்திர பாரதம் எந்தெந்த துறைகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்று மஹாகவி பாரதி கனவு கண்டானோ, அந்த துறைகளில் எல்லாம் இன்று பாரதம் கோலோச்சி நிற்கிறது. கவிஞனின் கனவை நனவாக்கி வானை அளக்க, சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிய பாதை அமைத்த விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் பிறந்த தினம் இன்று.



1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் நாள் குஜராத்தைச் சார்ந்த அம்பாலால் சாராபாய் - சரளாதேவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் விக்ரம் சாராபாய். சாராபாய் குடும்பம் பல்வேறு தொழில்களில் அன்று முன்னணியில் இருந்த குடும்பம். அம்பாலால் பல்வேறு தேசிய தலைவர்களோடு நெருங்கிய நட்பில் இருந்தவர். தனது ஆரம்ப கல்வியை வீட்டிலும், கல்லூரி படிப்பை அஹமதாபாத் நகரில் உள்ள குஜராத் கல்லூரியிலும் முடித்த விக்ரம் மேற்படிப்புக்காக இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.

அப்போது இரண்டாம் உலகப்போர் மூண்டதால் மீண்டும் தாயகம் திரும்பிய விக்ரம், சர் சி வி ராமன் மற்றும் ஹோமி பாபா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பெங்களூரு நகரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ( Indian Institute of Science ) தனது ஆராய்சியைத் தொடர்ந்தார். போர் முடிந்த பிறகு மீண்டும் இங்கிலாந்து சென்று தனது ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து முனைவர் பட்டம் பெற்றார். பாரதம் விடுதலை அடைந்திருந்த சமயம் அது. தனது அறிவு நாட்டிற்கு பயன்பட வேண்டும் என்று முடிவு செய்து விக்ரம் நாடு திரும்பினார்.

விக்ரம் அறிவியல் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல, அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கியவர். சந்தையின் மாறுதல்களை அளவிடும் Operations Research Group, நெசவுத்துறையின் முன்னேற்றத்திற்காக Textile Research Institute, அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் ( Indian Institute of Management - Ahamadabad ) போன்ற பல நிறுவனங்களை விக்ரம் சாராபாய் உருவாக்கினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியிலும் விக்ரம் சாராபாய் பெரும்பங்கு வகித்தார். இன்று சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் ஆய்வு செய்ய செயற்கைகோள்களை பாரதம் ஏவுகிறது என்றால், மிகக் குறைந்த செலவில் பல்வேறு செயற்கைகோள்களை பல்வேறு நாடுகளுக்கான விண்வெளியில் நிலைநிறுத்தும் திறமையை பாரதம் பெற்றுள்ளது என்றால் அதற்கான அடிக்கல் விக்ரம் சாராபாயால் தொடங்கப்பட்ட முன்னெடுப்புகள்தான் காரணம். இன்று தும்பாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு விக்ரம் சாராபாயின் பெயர்தான் சூட்டப்பட்டு உள்ளது.

விக்ரம் சாராபாயின் பங்களிப்பை மரியாதை செய்யும் வகையில் அரசு அவருக்கு பத்மவிபூஷண் விருதை வழங்கியது.

இன்னும் பல முன்னேற்றங்களை உருவாக்க தகுதியான விக்ரம் சாராபாய் 1971ஆம் ஆண்டு  டிசம்பர் 30ஆம் நாள் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தது இந்தியாவை உலுக்கியது. புகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஹோமி பாபா விமான விபத்தில் இறந்தார். பல்வேறு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் மரணித்ததும், நம்பி நாராயணன் போன்ற அறிஞர்கள் பொய் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறைப்பட்டதும் பாரதம் அறிவியல் துறையில் முன்னேறுவதை தடுக்க முயலும் அந்நிய நாடுகளின் சதியாக இருக்கும் என்று நம்ப எல்லா காரணங்களும் இருக்கின்றன.

நாட்டுக்கு உழைப்பது என்பது ராணுவத்தில் பணியாற்றி எல்லையை காப்பது மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் நாட்டை முன்னேற்றுவதும் அதே தான்.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

குதிராம் போஸ் பலிதான தினம் - ஆகஸ்ட் 11

ஆக்கிரமிப்பாளர்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில்தான் பேசவேண்டும், வெடிகுண்டுகளும், துப்பாக்கி உமிழும் தோட்டாக்களும்தான் அவர்களுக்குப் புரியும் என்றால் அதனை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று முடிவெடுத்து ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாரதநாட்டில் ஏராளம். அதில் மிகமுக்கியமானவர் குதிராம் போஸ். பதினெட்டு ஆண்டுகளே  வாழ்ந்து தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பாரதத்தாயின் மிக இளைய வீரனின் பலிதான தினம் இன்று.



வங்காள மாநில மித்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஹாப்பிபூர் கிராமத்தில் த்ரிலோகநாத் போஸ் - லக்ஷ்மிப்ரியா தம்பதியினரின் நான்காவது மகனாக 1889ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் நாள் பிறந்தவர் குதிராம். இவருக்கு முன்னர் பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் இளைய வயதில் இறந்து போனதால், இவரை தானியத்திற்கு ஈடாக கொடுத்துவிட்டால் காப்பாற்றிவிடலாம் என்று நம்பிய இவர் தாயார் இவரது சகோதரிக்கு மூன்று கைப்பிடி தானியத்திற்கு தத்து கொடுத்துவிட்டார். குதி என்ற வங்கமொழி சொல்லுக்கு தானியம் என்று பொருள். அதனால் இவர் பெயர் குதிராம் என்று ஆனது.

மிகச் சிறுவயதில் பெற்றோர் இருவரையும் இழந்த குதிராமை அவர் சகோதரியும் சகோதரி கணவரும் ஆதரித்து படிக்க வைத்தனர். பள்ளிப்பருவத்திலேயே அரவிந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோரின் சொற்பொழிவுகளை கேட்டு குதிராம் நாட்டுப்பற்றாளராக உருவானார்.

1905ஆம் ஆண்டு வைஸ்ராய் கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிளந்தார். பின்னர் நாடு பிரிவினையாக இதுவே தொடக்கமாக அமைந்தது. வங்காளப் பிரிவினையை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் தொடங்கின. வங்காளத்திலும் பஞ்சாபிலும் ஆயுதப் போராட்டம்தான் சரி என்று எண்ணிய இளைஞர்கள் பலர் பல்வேறு குழுக்களாக இணைந்தார்கள். புரட்சியாளர்கள் பலர் இருந்த யுகாந்தர் என்ற குழுவில் குதிராம் தன்னை இணைத்துக் கொண்டார்.

மித்னாபூர் மைதானத்தில் சத்யன் போஸ் எழுதிய தங்க வங்கம் என்ற துண்டுப்பிரசுரத்தை விநியோகம் செய்யும் போது காவலர் ஒருவர் இவரை பிடிக்க முயன்றார். ஆனால் காவலரைத் தாக்கிவிட்டு குதிராம் தப்பியோடி விட்டார். ஆனால் மீண்டும் ஆங்கில காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். மிக இளவயது என்பதால் நீதிபதி இவரை விடுதலை செய்தார்.

அந்தக்காலத்தில் கொல்கத்தா நீதிமன்றத்தில் கிங்ஸ்போர்ட என்ற நீதிபதி பணியாற்றிவந்தார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மிக கொடூரமான தண்டனைகளை வழங்குவதில் அவர் பெயர் போனவர். ஒரு வழக்குக்காக பிபின் சந்திரபால் நீதிமன்றம் வந்தபோது சுஷில் சென் என்ற பதினான்கு வயது சிறுவன் ஒருவன் வந்தேமாதரம் என்று கோஷமிட்டான். அதற்காக அவனை பதினைந்து கசையடி அளிக்குமாறு நீதிபதி கிங்ஸ்போர்ட உத்தரவிட்டார். ஒவ்வொரு அடிக்கும் சுஷில் சென் வந்தேமாதரம் என்று முழங்கியவாறு இருந்தார்.

நீதிபதியை கொலை செய்வது என்று அனுசீலன் சமிதி என்ற அமைப்பு முடிவு செய்தது. அதனை செய்து முடிக்க குதிராம் போஸ் முன்வந்தார். பிரபுல்ல சாகி என்ற இளைஞர் குதிராமின் துணைக்கு வந்தார். தொடர்ந்த கொலை மிரட்டல்களால் ஆங்கில அரசு நீதிபதி கிங்ஸ்போர்டை பிஹார் மாநிலத்தின் முசாபர்பூர் நகரத்திற்கு இடமாற்றம் செய்தது. குதிராம் போஸும் பிரபுல்ல சாகியும் பிஹார் சென்றனர்.

தொடர்ந்து நீதிபதியை கண்காணித்து அவரை எப்படி கொலை செய்வது என்ற திட்டத்தை நண்பர்கள் முடிவு செய்தனர். நாள்தோறும் இரவு ஆங்கிலேயர்கள் கூடும் கிளப் ஒன்றுக்குச் சென்று சிறிது நேரம் அங்கே தங்கிவிட்டு வீடு திரும்புவது கிங்ஸ்போர்டின் பழக்கம். வீட்டுக்குத் திரும்பும் வழியில் அவரது வண்டியின் மீது வெடிகுண்டு வீசுவது என்று முடிவானது. ஒருவேளை அதில் நீதிபதி தப்பிவிட்டால் அவரை சுட்டுக் கொல்ல துப்பாக்கிகளும் கைவசம் இருந்தது.

1908ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் நாள் கிளப்பில் இருந்து நீதிபதி தந்து சாரட் வண்டியில் கிளம்பினார். அதற்க்கு சற்று முன்பாக திருமதி கென்னடி என்ற ஆங்கிலப் பெண்ணும் அவர் மகளும் இன்னொரு வண்டியில் கிளம்பினார். திட்டமிட்டபடி வெடிகுண்டு வீசப்பட்டது, சாரட் வண்டி வெடித்துச் சிதறியது. ஆனால் இறந்தது நீதிபதி அல்ல என்பதை அறியாமல் சம்பவ இடத்தை விட்டு போராட்ட வீரர்கள் நகன்று விட்டனர். தனித்தனியாக பயணம் செய்து வங்காளத்தை அடைவது என்பது அவர்களின் முடிவு.

இரவு முழுவதும் நடந்தும் ஓடியும் களைப்பாக இருந்த குதிராம் வைனி நகரை அடைந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை கைது செய்ய முயற்சித்தனர். அவர்களைத் துப்பாக்கியால் சுட குதிராம் முயற்சி செய்தார். ஆனால் அதில் வெற்றிபெறாமல் அவர் கைது செய்யப்பட்டார். பிரபுல்ல சாகியை சந்தேகத்தின் பேரில் காவல்துறை கைது செய்ய முயற்சி செய்தபோது, அவர் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கைவிலங்கு இடப்பட்டு குதிராம் மே மாதம் ஒன்றாம் நாள் முசாபர்பூர் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டார். வழக்கு விசாரணை தொடங்கியது. குதிராம் கொலைக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார். குறி வைக்கப்பட்டது நீதிபதிக்குத்தான், தவறுதலாக இரண்டு பெண்கள் இறந்து விட்டார்கள், அதற்காக வருந்துகிறேன், அதற்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

குதிராமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எந்த விதமான சலனமும் இல்லாமல் சிரித்த முகத்தோடு குதிராம் அதனை எதிர்கொண்டார். ஏதாவது சொல்லவேண்டுமா என்ற நீதிபதியின் கேள்விக்கு " நேரமும், உங்களுக்கு ஆர்வமும் இருந்தால் உங்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொடுக்கிறேன் என்று குதிராம் பதில் சொன்னார்.

தனது வழக்கறிஞர்களின் வற்புறுத்தலால் குதிராம் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அங்கேயும் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. தண்டனைக்கான நாளாக ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் நிர்ணயிக்கப்பட்டது.

12 - 8 - 1908 அமிர்த பஜார் பத்திரிகை ‘குதிராமின் முடிவு’ என்ற தலைப்பிட்டு, பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. “மகிழ்ச்சி யோடும் புன்னகையோடும் அவன் மரணமடைந்தான்.  இறுதிச் சடங்கு அமைதியாய் நடந்தது.  காலை 6 மணிக்கு அவனைத் தூக்கிலேற்றினார்கள். அவன் தூக்கு மேடையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றான்.  தலையில் கறுப்புத்துணியை மூடும் வரை அவன் மரணத்தை அலட்சியப்படுத்தும் புன்னகையோடு நின்றான்” என்று அப்பத்திரிகை, செய்தி வெளியிட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் நாம் சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்க்காக குதிராம் போஸ் போன்று பல்வேறு வீரர்கள் தங்கள் வாழ்க்கையை அர்பணித்துள்ளார். அப்படியான வீரர்களை நாம் என்றும் நினைவில் கொள்வோம். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம். 

சனி, 10 ஆகஸ்ட், 2019

இந்தியப் புலிகளின் காவலன் - பாதேஹ் சிங் ரத்தோர் - ஆகஸ்ட் 10

ஐம்பதாண்டுகளுக்கு மேலாக இந்திய புலி வகைகளை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த பாதேஹ் சிங் ராத்தோரின் பிறந்ததினம் இன்று.



ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்புர் மாவட்டத்திலுள்ள சோரடியா கிராமத்தைச் சார்ந்தவர் ரத்தோர். இவரது தாத்தா ஒரு ராணுவ வீரர். இவர் தந்தை காவல் அதிகாரி. டெஹ்ராடூனில் பள்ளிப்படிப்பையும் ராஜ்புதான பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார் திரு ரத்தோர். படிப்பைக் காட்டிலும் நாடகத்திலும் விளையாட்டிலும் மனதை பறிகொடுத்தார் ரத்தோர். கல்லூரி படிப்பை முடித்த ரத்தோர் ராஜஸ்தான் மாநில வனத்துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

இங்கிலாந்து அரசி எலிசபெத் மஹாராணியும் அவர் கணவர் இளவரசர் பிலிப்பும் 1961ஆம் ஆண்டு பாரதம் வந்திருந்தபோது அவர்கள் வேட்டையாட ரத்தம்பூர் காடுகளுக்கு வந்தனர். அவர்களை உபசரிக்கும் பொறுப்பு ராத்தோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதுதான் முதன்முதலில் ஒரு புலியை ரத்தோர் நேரில் பார்த்தார். அதன் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல்வேறு காடுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார் ரத்தோர்.

தொடர்ச்சியான வேட்டைகளால் இந்திய புலிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது. அரசு இந்திய காடுகளில் வேட்டையாடுவதை தடை செய்தது. புலிகளைக் காக்கும் Project Tiger என்னும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. ஒரு காட்டில் புலி இருக்கிறது என்றால் அங்கே பல்லுயிர் பெருக்கம் சரியாக உள்ளது என்று பொருள். அடர்ந்த காடுகளில்தான் பொதுவாக புலிகள் வசிக்கும். Ecological Pyramid என்னும் சுற்றுச்சூழல் அமைப்பின் உச்சியில் புலி உள்ளது. புலிகளை பாதுகாப்பது என்பது மொத்த சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது என்பதே ஆகும்.

பாரத நாட்டின் ஒன்பது வனப்பகுதிகளை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. ரத்தம்பூர் சரணாலயமும் அதில் ஓன்று. அந்த சரணாலயத்தின் பொறுப்பாளராக ரத்தோர் நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த வனப்பகுதிக்குள் மக்களின் வசிப்பிடங்களும் இருந்தது. விவசாயத் தேவைக்காக மக்கள் காட்டு மரங்களை வெட்டியும், அங்கே உள்ள நீர்நிலைகளை தூர்த்தும் வந்தனர். பதினாறு கிராமங்களில் வசித்துவந்த ஏறத்தாழ பத்தாயிரம் குடும்பங்களை வனப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் பொறுப்பு ராத்தோரிடம் வந்தது. பரம்பரை பரம்பரையாக ஒரே இடத்தில வசித்து வந்த மக்களை வேறு இடத்திற்கு மாறிச் செல்லுமாறு செய்வது என்பது மிகக் கடினமான செயல். அது மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் வேலை. கடினமான இந்த வேலையை மிகத் திறமையாக ரத்தோர் செய்து முடித்தார்.

மக்கள் நடமாட்டம் குறைந்த பின்னர், காடு தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளத் தொடங்கியது. மரங்கள் வளர ஆரம்பித்தன. புலிகளின் காலடித்தடங்கள் தெரியத் தொடங்கின. ஒரு நாள் ஒரு எருமைமாடு கொல்லப்பட்டு இருந்ததை ரத்தோர் பார்த்தார். அது ஒரு புலியாலதான் வேட்டையாடப்பட்டு இருக்கும் என்று கணித்த ரத்தோர் ஒரு மரத்தின்மீது அமர்ந்து புலிக்காக காத்துக் கொண்டு இருந்தார். ஒரு பெண்புலி தன் குட்டிகளோடு அந்த எருமையை உண்ண வந்தது. மீண்டும் மீண்டும் பல்வேறு நேரங்களில் அதே பெண் புலியை ரத்தோர் பார்க்க நேர்ந்தது. அந்தப் புலிக்கு அவர் தனது மகளின் பெயரான பத்மினி என்று பெயர் சூட்டினார். அந்த வனப்பகுதியில் இருந்த எல்லாப் புலிகளையும் அவரால் தனித்தனியே அடையாளம் கண்டுகொள்ள முடியும். பத்தாயிரம் புலிகளுக்கு நடுவே என் புலிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று அவர் பெருமையாகக் கூறுவது வழக்கம்.

வனவிலங்குகளின் உடலுறுப்புகள் அகில உலக கள்ளச் சந்தையில் பெருமதிப்பு உடையவை. எனவே சட்டத்தை மீறி வேட்டையாடுவது இன்றும் தொடர்கிறது. அதுபோன்ற கயவர்களால் பலமுறை ரத்தோர் தாக்கப் பட்டதும் உண்டு. பொதுவாக நாடோடிகளாகவும், வேறு தொழில் எதுவும் தெரியாதவர்காளாகவும் உள்ள மக்களே வேட்டைக்காரர்களுக்கு உதவி செய்வது வழக்கம். எனவே அப்படியான இனக்குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கு வேறு வருமானம் வரும் கைத்தொழில்களைக் கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தால் சட்ட விரோதமான வேட்டைகளைக் குறைக்கலாம் என்று கருதிய ரத்தோர் தனது சேவை அமைப்பின் மூலம் அதனை முன்னெடுத்தார். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள நாட்டில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த திட்டமும் முறையாக செயல்படுத்த முடியாது. எனவே வனவிலங்கு பாதுகாப்பில் பொதுமக்களையும்   பங்குதாரர்களாக ரத்தோர் இணைத்துக் கொண்டார்.

தனது நீண்ட ஐம்பதாண்டு கால வனப்பாதுகாப்பு சேவைக்காக புலி பாதுகாப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை அன்றய பிரதமர் குஜரால் ரத்தோர் அவர்களுக்கு வழங்கினார்.  இந்திய புலிகளை நேசித்த, அவைகளை பாதுகாக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட திரு ரத்தோர் 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி காலமானார். 

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

அறிவியலறிஞர் அல்லாடி ராமகிருஷ்ணா பிறந்ததினம் - ஆகஸ்ட் 9

சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிவியலறிஞரும் சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தின் நிறுவனருமாகிய அல்லாடி ராமக்ரிஷ்ணாவின் பிறந்ததினம் இன்று. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்களில் ஒருவரான வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணஸ்வாமி அவர்களின் மகனாக 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் பிறந்தவர் திரு அல்லாடி ராமகிருஷ்ணா அவர்கள்.



தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள பி எஸ் உயர்நிலைப்பள்ளியில் முடித்த ராமகிருஷ்ணா,   இயற்பியல்துறையில் இளங்கலை பட்டத்தை சென்னை மாநிலக் கல்லூரியில் பெற்றார். வழக்கறிஞர் பட்டத்தைப் பெற்ற திரு ராமாகிருஷ்ணாவிற்கு அறிவியல் மீதான ஈர்ப்பு குறையவே இல்லை. அவர்  திரு சர் சி வி ராமன் அவர்களின் வழிகாட்டுதலினால் தத்துவார்த்த இயற்பியலிலும் ( Theoretical Physics ) சிறப்பு சார்பியல் துறையிலும் ( Special Relativity ) ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்தார். மும்பை நகரில் உள்ள அடிப்படை ஆராய்ச்சிக்கான டாட்டா நிறுவனத்தில் ( Tata Institute of Fundamental Research ) ஹோமி பாபா அவர்களின் வழிகாட்டுதலில் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அல்லாடி ராமகிருஷ்ணா தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அப்பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. மேலைநாடுகளில் பல்வேறு அறிவியலறிஞர்களோடு அவருக்கு தொடர்பும் நெருங்கிய நட்பும் உருவானது. அமெரிக்காவில் உள்ள பிரின்செஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள உயர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ( Institute of Advance Studies ) சென்ற திரு ராமகிருஷ்ணா அதுபோன்ற அமைப்பை இந்தியாவிலும் ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தார். புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் அந்த நிறுவனத்தில் மாணவர்களோடு உரையாடுதல் வழக்கம். புது கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும், மாணவர்களை ஆராய்ச்சியின் பக்கம் தூண்டிவிட்டு திசைதிருப்பவும் இந்த உரையாடல்கள் பயன்பட்டன.

சுதந்திரம் அடைந்து பத்தே ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. பொருளாதாரத்தில் நாடு கடினமான பாதையில் முன்னேறிக்கொண்டு இருந்த நேரம் அது. அரசின் உதவியை எதிர்பாராது திரு ராமகிருஷ்ணா சென்னையில் உள்ள தனது வீட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக பல்வேறு அறிவியலாளர்களால் நடத்தப்படும் தொடர் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.

அல்லாடி ராமகிருஷ்ணாவின் பரந்துபட்ட தொடர்புகளால் பல்வேறு அறிஞர்கள் ராமகிருஷ்ணாவின் வீட்டுக்கு வந்து ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய உரைகளை நிகழ்த்தினார்கள். அன்றய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அழைப்பினை ஏற்று புகழ்பெற்ற அணு விஞ்ஞானி நீல்ஸ் போர் 1960ஆம் ஆண்டு பாரதம் வந்தார். சென்னையில் உள்ள அல்லாடி ராமகிருஷ்ணாவின் வீட்டிற்கு வந்து அவரும் மாணவர்களோடு உரையாடினார். அந்த மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ச்சியுற்ற நீல்ஸ் போர் அந்த சந்திப்பைப் பற்றி பிரதமர் நேருவிடம் தெரிவித்தார். பிரதமரை நேரில் சந்திக்க வருமாறு அல்லாடி ராமகிருஷ்ணாவிற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது. அந்த சந்திப்பில் அறிவியல் முன்னேற்றங்களை முன்னெடுக்க சென்னையில் Institute of Mathematical Science - தொடங்கப்பட்டது. அறிவியலின் பெரும்பான்மையான கோட்பாடுகளை கணித சமன்பாடுகள் மூலம் நிரூபிப்பதே பல்வேறு ஆராய்ச்சிகளின் முதற்படியாகும். இந்த நிறுவனம் கணிதம், இயற்பியல், கணினிதுறை ஆகியவைகளில் ஆராய்ச்சி செய்து வருகிறது. அல்லாடி ராமகிருஷ்ணா இந்த நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெறும்வரை ஏறத்தாழ இருபத்தி ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பதவியில் இருந்து இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை வழிநடத்தினார்.

இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின்னும் பல்வேறு உயர்கல்வி நிறுவங்களில் அறிவியல் முன்னேற்றங்கள் பற்றி உரை நிகழ்த்தியவாறே இருந்தார். பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அவர் சென்னையில் இருக்கும் போது அவரை நேரில் சந்தித்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கமாக இருந்தது.

தந்து எண்பத்தி ஐந்தாவது வயதில் 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் நாள் அல்லாடி ராமகிருஷ்ணா தனது மகன் வீட்டில் அமெரிக்காவில் காலமானார்.  

புதன், 7 ஆகஸ்ட், 2019

இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை M S ஸ்வாமிநாதன் - ஆகஸ்ட் 7

மேவிய ஆறுகள் பல ஓடி மேனி செழித்த நாடு என்றாலும் ஆங்காங்கே பஞ்சம் மண்டிய நாடும்தான் பாரதம். முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்பியல் இழந்து நடுங்கு துயருறுத்து பாலை என்று படிமம் கொள்ளுமாம் என்று சிலப்பதிகாரம் வரையறை செய்கிறது. ஆனாலும் பதினேழாம் நூற்றாண்டுவரை பசியாலும் பஞ்சத்தாலும் கொத்து கொத்தாக பாரத மக்கள் இறந்ததாக வரலாறு இல்லை. ஆனால் ஆங்கில ஆட்சியினால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் பல லட்சம் மக்கள் மடிந்தனர். தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக் கெட்டிருந்த நாட்டின் கடைக்கோடியில் இருந்த ஒரு மாணவன் தனது படிப்பின் மூலம் இந்த நிலைமையை மாற்றவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டான்.



கும்பகோணத்தைச் சார்ந்த அந்த இளைஞன் மான்கொம்பு சாம்பசிவம் ஸ்வாமிநாதன், சுருக்கமாக எம் எஸ் ஸ்வாமிநாதன். எம் கே சாம்பசிவம் - பார்வதி தங்கம்மாள் தம்பதியினரின் இரண்டாவது மகனாக 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் கோவில்நகரமான கும்பகோணத்தில் பிறந்தவர் இவர். இவர் தந்தை ஒரு மருத்துவர். காந்தியவழியில் அந்நிய துணி புறக்கணிப்பு, எல்லா மக்களும் கோவிலில் நுழையும் போராட்டம் என்று தேசிய சிந்தனையோடு இருந்தவர் அவர். கும்பகோணம் பகுதியில் யானைக்கால் நோயை இல்லாமல் ஆக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தந்தை. சமுதாயசேவை என்பது இதனால் ஸ்வாமிநாதனுக்கு பரம்பரை சொத்தாகவே வந்தது. தனது பதினோராம் வயதில் தந்தையை இழந்த ஸ்வாமிநாதன் தனது தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தார். மருத்துவ குடும்பத்தில் பிறந்தாலும் 1942 - 43ஆம் ஆண்டுகளில் உருவான வங்காள பஞ்சம் இவர் மனதை உலுக்கியது. மருத்துவப் படிப்பை புறக்கணித்து உணவு ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள மன்னர் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படிப்பையும் பின்னர் சென்னையில் உள்ள விவசாயக் கல்லூரியில் விவசாய இளங்கலை பட்டத்தையும் பெற்றார். அதன் பின்னர் டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் முதுகலைப் பட்டத்தையும், பின்னர் நெதர்லாண்ட்ஸ் நாட்டிலும் அதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். வெளிநாடுகளில் வந்த வேலைவாய்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு ஸ்வாமிநாதன் பாரதம் திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் அவர் களமானது. இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தின் ஆசிரியர், ஆராய்ச்சியாளர், ஆய்வு நிர்வாகி, இயக்குனர் என்று படிப்படியாக ஸ்வாமிநாதன் உயர்ந்தார்.

1960களில் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று பாரத அரசு முடிவு செய்தது. உருவானது பசுமைப்புரட்சி திட்டம். உயர் விளைச்சல் தரும் வீரிய விதை ரகங்கள், மேம்பட்ட உரப் பயன்பாடு, முறையான நீர்ப்பாசனம், பூச்சிக்கொல்லி மருந்து நிர்வாகம் என்ற கலவையான திட்டங்களின் செயல்பாட்டினால் நாட்டில் தேவையை விட விவசாய உற்பத்தி அதிகரித்தது. இதனை மத்திய அமைச்சராக இருந்த சி சுப்பிரமணியமும், அதிகாரவர்க்கத்தின் சார்பில் எம் எஸ் ஸ்வாமிநாதனும் செயல்படுத்தினர்.

தேசிய வேளாண் ஆணைய உறுப்பினர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கூட்டமைப்பின் தலைவர், மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மை செயலாளர், மத்திய திட்டக்குழு உறுப்பினர் தேசிய உயிரித் தொழில்நுட்ப வாரியத்தின் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

நாட்டின் ராஜ்யசபையின் நியமன உறுப்பினராக ஸ்வாமிநாதனை ஜனாதிபதி நியமித்தார். தேசிய விவசாயிகள் நல ஆணையத்தின் தலைவர், தேசிய வேளாண் அறிவியல் அகாடமி தலைவர் என்று பொறுப்புகளையும் இவர் வகித்தார்.

பாரத நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இவருக்கு 1989ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

தனியொருவனுக்கு உணவில்லை என்ற நிலையை மாற்றிய காரணத்தால் ஸ்வாமிநாதன் பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

அவரது பிறந்தநாளில் அவரை ஒரே இந்தியா தளம் வணங்கி வாழ்த்துகிறது.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

நீர் மேலாண்மை நாயகன் - ராஜேந்திரசிங் - ஆகஸ்ட் 6

நீரின்றி அமையா யாக்கைக்கெல்லாம் 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 
உண்டி முதற்றே உணவின் பிண்டம் 
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே   - புறம் 18. 

வாழும் உயிர்களுக்கு எல்லாம் மிக மிக அத்தியாவசியமானது தண்ணீர். ஆனாலும் பூமிப்பந்தில் இருக்கும் நீரில் 90% மேலான நீரை குடிதண்ணீராகப் பயன்படுத்த முடியாது. எனவே இருக்கும் நீரை, அதோடு மழைநீரை மிகச் சரியாகப் பயன்படுத்தி, அதனை காப்பாற்றினால்தால் மனிதர்கள் குடிக்கவும், பிற தேவைகளுக்கு பயன்படுத்தவும், விவசாயத்திற்கும், மாற்ற கால்நடைகள் பயன்படுத்தவும் உபயோகிக்க முடியும். அப்படியான ஒரு சேவையில் பல்லாண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒருவரைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரின் அருகில் உள்ள பாக்பட் மாவட்டத்தைச் சார்ந்த ஒரு வசதியான குடும்பத்தில் முதல் மகனாக 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாள் பிறந்தவர் ராஜேந்திரசிங். அவர் தந்தை அறுபது ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த செல்வந்தர். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் காலத்தில் இவரது கிராமத்திற்கு ரமேஷ் ஷர்மா என்ற காந்தியவாதி வருகை புரிந்தார். அவரது தொடர்பு ராஜேந்திரசிங்கை சமுதாயப் பணியில் ஈடுபட வைத்தது. நெருக்கடி நிலையை எதிர்த்து ஜெயப்ரகாஷ் நாராயணன் தொடங்கிய சத்தியாகிரக போராட்டமும், கல்லூரி ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் இவரை இன்னும் ஆற்றுப்படுத்தியது. ஹிந்தி இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், ஆயுர்வேத மருத்துவர் பட்டமும் என்று இரண்டு பட்டங்களை ராஜேந்திரசிங் முடித்தார்.

பட்டப்படிப்பை முடித்த டாக்டர் ராஜேந்திரசிங்  ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப்பணியில் சேர்ந்தார். அங்கே அவர் தருண் பாரத் சங்கா ( இந்திய இளைஞர் அமைப்பு ) என்ற தொண்டு நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மூன்றே வருடத்தில் அந்த அமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பல்வேறு திசைகளில் அமைப்பு செயலாற்றிக்கொண்டு இருக்கிறது, அதனால் ஒரு நீடித்த மாறுதலை உருவாக்க முடியவில்லை என்று அவர் கருதினார். அதனை மற்ற அமைப்பாளர்களோடு விவாதித்தார். அமைப்பின் முழுப் பொறுப்பையும் ராஜேந்திரசிங் வசம் ஒப்படைத்து விட்டு மற்ற அமைப்பாளர்கள் விலகிக் கொண்டனர். அரசாங்க வேலையில் சலிப்படைந்த ராஜேந்திரசிங்  தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் நண்பர்கள் நால்வருடன் ஒரு பேருந்தில் ஏறி அது செல்லும் கடைசி கிராமத்திற்கு பயணம் மேற்கொண்டார். அவர் சென்றடைந்த இடம் ஆல்வார் மாவட்டத்தின் கிஷோரி கிராமம்.



ராஜேந்திரசிங்கும் அவர் நண்பர்களும் அங்கே மக்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியிலும், மருத்துவத்திலும் ஈடுபட்டனர். பொதுவாகவே ராஜஸ்தான் மாநிலம் ஒரு வறண்ட பிரதேசம், அங்கே பெய்யும் மழையின் அளவு மிகக் குறைவு. மக்கள் தண்ணீர்க்குக்காக பல மைல் தூரம் நடக்க வேண்டி இருக்கும் இடம் அது. பெய்யும் மழையை குளங்களிலும், கசிவுநீர் குட்டைகளிலும் சேமிக்கும் பழக்கம் மறைந்து, ஆழ்துளை கிணறுகளை மக்கள் பயன்படுத்தத் தொடங்கி இருந்த காலம் அது. குளங்கள் தூர்வாரப்படாமல், அதனால் மழைநீர் சேமிக்கப்படாது, எனவே நிலத்தடிநீர் இன்னும் இன்னும் கீழே சென்று கொண்டு இருந்தது. "குடிநீர் என்பது இப்போது கல்வியை விட முக்கியம்" என்று ஒரு கிராமத்துவாசி சொன்னது ராஜேந்திரசிங்கை உலுக்கியது. அருகில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த அவர் முடிவு செய்தார். ஆனால் கடினமான உடலுழைப்புக்கு தயாராக இல்லாத அவரது நண்பர்கள் ராஜேந்திரசிங்கை விட்டு விலகிச் சென்று விட்டனர்.

உள்ளூர் இளைஞர்களின் துணையோடு ராஜேந்திரசிங் ஒரு குளத்தை தூர்வாரி அதன் கரைகளை உயர்த்தினார். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தருமல்லவா, அதுபோல மழைக்காலம் வந்தது, குளமும் நிரம்பியது, மெல்ல மெல்ல அருகில் உள்ள நிலத்தடிநீரின் மட்டமும் உயரத் தொடங்கியது. அருகிலுள்ள கிராம மக்கள் இந்த விளைவைப் பார்த்து தங்கள் கிராமங்களிலும் மழைநீர்  சேமிப்பைத் தொடங்கினர். வறட்சியான மாவட்டங்கள் என்று அரசு குறிப்பிட்டிருந்த இடங்கள் வளமையான பகுதிகளாக மாறத் தொடங்கின.

அருகிலுள்ள கிராமங்களில் எல்லாம் சென்று மக்களிடம் பேசிப் பேசி ராஜேந்திரசிங் பெரும் மாற்றத்தை உருவாக்கினார். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீரோட்டம் இல்லாமல் இருந்த ஆர்வரி நதியை மீட்டெடுக்கும் முயற்சி ஆரம்பமானது. மழைநீரை சேமிக்கவும், தொடர்ச்சியான தடுப்பணைகளை கட்டியும் என்ற முயற்சிகளின் மூலம் இன்று ஆர்வரி நதியில் வருடம் முழுவதும் நீரோட்டம் உள்ளது.

அரசாங்கத்தோடு இணைந்து சரிஸ்கா வனவிலங்கு சரணாலயத்தில் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை ராஜேந்திரசிங் உருவாக்கினார். அந்த சரணாலயத்தில் வெளிப்பகுதியில்தான் இன்று தருண் பாரத் சங்காவின் அலுவலகம் செயல்பட்டுக் கொண்டு உள்ளது. இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ராஜேந்திரசிங் உருவாக்கி வருகிறார்.

தன்னலமற்ற சேவைக்காக இவருக்கு மகாசாய் விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது, என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. திரு ராஜேந்திரசிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் ஒரே இந்தியா தளம் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது. 

சனி, 3 ஆகஸ்ட், 2019

சோதனைகளை வென்று சாதனை - அனு ஆகா - ஆகஸ்ட் 3



அடுக்கடுக்கான பிரச்சனைகள் சூழும்போதுதான் சாதாரண மனிதர்களுக்கும் சாதனையாளர்களுக்குமான வித்தியாசம் தெரிய வரும். இது ஒரு குடும்பத்தலைவியின் கதை. ஒரு மத்தியதர பார்சி குடும்பத்தைச் சார்ந்தவர் அவர்.  அவரின் தந்தை சிறிய அளவில் ஒரு தொழில்சாலையை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தார். இவரோ மும்பை  நகரில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரமும் அதன் பின்னர் டாடா சமுதாய சேவைக்கான கல்லூரியில் ( Tata Institute of Social Science ) சமுதாய சேவை துறையில் மருத்துவமும் மனநலமும் பற்றிய உயர்கல்வியை முடித்திருந்தார். தந்தையின் தொழில்கூடத்தில் வேலை பார்த்துவந்த ரோஹின்டன் ஆகாவை திருமணம் செய்துகொண்டு, தங்கள் குழந்தைகளை பராமரித்துக்கொண்டு, கூடவே சமுதாயசேவைகளையும் செய்து கொண்டு இருந்தார். அவர்தான் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் நாள் பிறந்த அனு ஆகா அவர்கள்.

தனது மாமனாரின் தொழிலை நல்லமுறையில் விரிவு செய்த ரோஹின்டனுக்கு  1982ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை நடக்கும்போது அவர் பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். எண்களை, எழுத்துக்களை ஏன் மனைவி குழைந்தைகளைக் கூட அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலை உருவானது. ஆனால் தொடர்ந்த பயிற்சியினால் அவர் அந்த தடைகளை உடைத்துக் கொண்டு நலமடைந்து மீண்டும் தொழிலை நடத்தத் தொடங்கினார். கணவனுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தால் அனு ஆகா தங்கள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையில் தன்னை இணைத்துக் கொண்டார். 1995ஆம் ஆண்டு அந்த நிறுவனம் தனது பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட்டு முதல் திரட்டியது.

தனது மகளின் பிள்ளைபேறுக்கு உதவி செய்ய அமெரிக்கா சென்று இருந்த அனு 1995 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பூனாவில் இருந்து மும்பை நகருக்கு சென்று அவரை வரவேற்க வந்துகொண்டு இருந்த அவரது கணவர் அடுத்த மாரடைப்பால் மரணமடைந்தார். தெர்மாக்ஸ் நிறுவனம் இப்போது பங்குதாரர்களாக பொதுமக்களுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்ட ஓன்று. அந்த நிறுவனத்தின்  பங்குகளின் விலை ரூபாய் நானூற்றில் இருந்து ரூபாய் முப்பத்தி ஆறாகச் சரிந்தது. ஏற்கனவே மனிதவள மேம்பாட்டு துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்த அனு ஆகாவை தெர்மாக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்தினர்.இந்திய தொழில்துறைக்கு அது ஒரு சோதனையான காலகட்டம். பல்லாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அரண்கள் விலக்கப்பட்டு, இந்திய தொழில்கள் நரசிம்மராவ் அறிமுகம் செய்த புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டி போடும் சூழலில் இருந்த நேரம் அது.

தனது கடின உழைப்பாலும், சரியான ஆலோசகர்களின் அறிவுரையை செயல்படுத்தியதாலும் அனு தனது நிறுவனத்தை மீண்டும் லாபகரமாக மாற்றிக் காட்டினார். ஆனாலும் விதியின் கை அவரின் வாழ்க்கையோடு மீண்டும் விளையாடியது.கணவன் இறந்த ஒரே வருடத்தில் அனு ஆகாவின் மகன் குருஷ் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். அடுக்கடுக்கான பிரச்சனைகள் சூழும்போதுதான் சாதாரண மனிதர்களுக்கும் சாதனையாளர்களுக்குமான வித்தியாசம் தெரிய வரும்.. தொடர்ந்த தனிப்பட்ட துயரங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்காமல் இருக்கும்படி அனு ஆகா பார்த்துக்கொண்டார். தொடர்ந்து அவரது தலைமையில் அவர் நிறுவனம் திறமையாகச் செயல்பட்டு இன்றும் லாபகரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பாரத அரசு இவருக்கு 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.  2012ஆம் ஆண்டு இவர் நாட்டின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தற்போது அனு ஆகா Teach for India என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குழந்தைகளின் கல்விக்கு இந்த நிறுவனம் உதவி செய்து வருகிறது.

பாரத நாட்டின் பெண்களின் சக்திக்கு உதாரணமாக விளங்கும் அனு ஆகாவிற்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

மக்களிடம் இருந்து மகோன்னதத்தை நோக்கி - பங்கர்ராய் - ஆகஸ்ட் 2




மிகப்பெரும் அளவில் தேசிய கல்விக்கொள்கைக்கான ஆதரவான குரல்களும், எதிர்கருத்துகளைம் ஓங்கி ஒலித்துத்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் இதுதான் கல்வியா என்ற கேள்வியையும் சேர்த்தே கேட்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு கல்விமுறை இன்றும் நமது நாட்டில் வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிறது. நமது நாட்டின் சவால்களும் பிரச்சனைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. அதற்கான தீர்வுகளை முதலில் நமது மண்ணின் வேர்களில் இருந்துதான் தேடவேண்டும். நமது சவால்களின் விடைகள் இறக்குமதியான சித்தாந்தங்களில், கருத்துக்களில் இல்லை என்று நினைப்பவர்கள், அப்படி தேடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் பங்கர்ராய்.

ராஜிவ் காந்தி போன்ற உயர்வர்கத்தினர் பயிலும் டூன் பள்ளியில், டெல்லியின் ஸ்டீபன் கல்லூரியில் படிப்பு, ஸ்கவாஷ் விளையாட்டில் தேசிய அளவிலான வெற்றிகள், அந்த விளையாட்டில் உலக அளவிலான போட்டிகளில் பாரத நாட்டின் பிரதிநிதி என்று இருந்த இளைஞரின் கதை இது. அடுத்தபடியாக இந்திய ஆட்சிப் பணியிலோ அல்லது வெளிநாட்டில் படிப்பு அங்கேயே வேலை என்று சென்றிருக்க வேண்டிய வாழ்க்கை. ஆனால் நினைத்தது போல நடக்காமல் இருப்பதால்தான் வாழ்வின் சுவையே இருக்கிறதல்லவா !.

1967  ஆம் ஆண்டு பங்கர்ராய் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் பிஹாரில் பெரும் பஞ்சம் வந்தது. சமுதாய பணிக்கு வருமாறு இளைஞர்களை ஜெயப்ரகாஷ் நாராயணன் அழைத்தார். சிறிது காலம் அங்கே சென்று ஏதாவது செய்யலாம் என்று பங்கர் கிளம்பியபோது அந்த அனுபவம் தன் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் என்று நினைத்திருக்கவே மாட்டார். பஞ்சமும் பட்டினியும், மரணங்களும் அவரை உலுக்கி விட்டது.

பிஹார் - எப்படிப்பட்ட இடம். செழிப்பான கங்கை நதி பாயும் பிரதேசம், மாபெரும் மகத சாம்ராஜ்யம் உருவான நிலம். உலகின் செழிப்பான பாடலிபுத்திர நகரம் இருக்கும் மாநிலம். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து கல்விபெற மாணவர்கள் தேடி வந்த நாலந்தா பல்கலைக்கழகம் இருந்த இடம். ஆனால் தொடர்ந்த சுரண்டலால் வளம் இழந்து, தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டு நின்ற மாகாணம் பங்கர்ராயின் போதிமரமானது. தனது வாழ்வின் குறிக்கோளை  அவர் அங்கே கண்டுகொண்டார். வசதியான அதிகாரமிக்க வாழ்க்கை என்ற எண்ணம் மாறி, மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவானது.

நாட்டின் கிழக்கு பகுதியில் உருவான எண்ணம் செயலானது மேற்குப் பகுதியில் உள்ள ராஜஸ்தானில். வறட்சி புரட்டிப் போடும் பாலைவனப் பிரதேசம். பெண்கள் தண்ணீருக்கே பல மைல் தூரம் நடக்க வேண்டி இருக்கும் இடம், இதில் படிக்க எங்கே நேரம் ? கடுமையான சவால்களுக்கு புதுமையான தீர்வுகள்தான் சரியாக இருக்கும். தண்ணீர் எடுக்கவும் ஆடு மாடு மேய்க்கவும் மட்டுமே  செய்து கொண்டு இருந்த குழந்தைகளை, அதிலும் பெருவாரியானவர்கள் தாழ்த்தப்பட்ட பொருளாதாரரீதியில் சங்கடப்படும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அவர்களுக்காக இரவில் நடைபெறும் பள்ளிகள் உருவாகின. வெளிச்சத்திற்கு சூரிய ஒளியைச் சேமித்து வைத்து இரவில் ஒளி கொடுக்கும் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான விளக்குகளை உருவாகும் தொழில்நுட்பம் மக்களுக்கு கற்பிக்கப்பட்டு அவர்கள் தயாரிக்கும் விளக்குகளே பயன்படுத்தப்படுகின்றன.

இந்தப் பள்ளிகளில் வாழ்க்கைக்கான கல்வி கற்பிக்கப்படுகிறது. அடிப்படை அறிவியல், ஆரம்ப சுகாதாரம், கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு போன்றவை. இதில் கற்ற மாணவர்கள் தங்கள் மேற்படிப்புக்கு மற்ற பள்ளிகளுக்கோ அல்லது கல்லூரிகளுக்கோ அனுப்பி வைக்கப் படுகிறார்கள். இந்தப் பள்ளிகள் இங்கே படிக்கும் மாணவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது. ஒரு பிரதமர், அவருக்கு துணையாக அமைச்சர் குழு என்று மாணவர்களின் பிரதிநிதிகளே பள்ளி நிர்வாகத்தை நடத்துகிறார்கள்.

மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு சூரிய ஒளியின் மூலம் இயங்கும் விளக்குகளும், அடுப்புகளும் அளிக்கப் படுகிறது. அதாவது அதனை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமங்களில் இருக்கும் மூதாட்டியை கண்டறிந்து அவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. குறுகிய காலத்தில் இதனை கற்றுக்கொள்ளும் தாய்மார்கள், பின்னர் தங்கள் கிராமங்களில் சூரிய விளக்குகளை தயாரித்து மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்.

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா என்று உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து எண்பத்தி ஐந்து நாடுகள் தங்கள் குடிமக்களை இங்கே அனுப்பி இந்த தொழில் நுட்பத்தில் பயிற்சி பெற வைத்துளார்கள்.

இந்தக் கல்லூரி எந்த விதமான சான்றிதழ்களை அல்லது பட்டங்களை அளிப்பதில்லை, ஆனால் வாழ்கைக்குத் தேவையான திறன்களை அளிக்கிறது. அதனால் தான் பங்கர்ராய் தனது கல்வி நிலையத்தை வெறும்பாத கல்லூரி என்று அழைக்கிறார்.

சற்றே நாம் கண்களை அகல விரித்துப் பார்த்தால் நமக்கு மிக அருகிலேயே யாரோ ஒருவர் எந்த பலனையும் எதிர்பாராமல் சமுதாயத்திற்கு உழைத்துக் கொண்டுதான் இருப்பார்.

இன்று எழுபத்தி ஐந்தாம் வயதை எட்டிப் பிடிக்கும் பங்கர்ராய் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இன்னும் ஆயிரம் ஆயிரம் பங்கர்ராய்கள் பாரத தாயின் சேவைக்கு உருவாகட்டும்.


வியாழன், 1 ஆகஸ்ட், 2019

ராஜரிஷி புருஷோத்தமதாஸ் டான்டன் - ஆகஸ்ட் 1

உத்திரப்பிரதேசத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர், உத்திரப்பிரதேச மாகாணத்தின் சட்டசபையின் நீண்டகால சபாநாயகர், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர், அரசியலமைப்பு நிர்மாண சபையின் உறுப்பினர், வழக்கறிஞர், பாரதரத்னா விருது பெற்றவர் என்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன்

1982ஆம் ஆண்டில் ப்ரயாக்ராஜ் நகரில் திரு சாலிக்ராம் டான்டன் அவர்களின் மகனாகப் பிறந்தவர் திரு புருஷோத்தமதாஸ் டான்டன். வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டமும் அதனோடு சட்டப் படிப்பையும் முடித்து விட்டு ப்ரயாக்ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத்  தொடங்கினார்.முன்னணி வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தேஜ் பகதூர் சப்ருவின் வழிகாட்டுதலில் புருஷோத்தமதாஸ் டான்டன் தனது வழக்கறிஞர் சேவையை நடத்தினார். 



மிக இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்ட டான்டன் ஜாலியன்வாலாபாக் படுகொலையை விசாரிக்க காங்கிரஸ் கட்சி நியமித்த குழுவில் பணியாற்றினார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரஹம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். 1937ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகள் உத்திரப்பிரதேச சட்டசபையின் சபாநாயகர் பொறுப்பில் பணியாற்றனார்.

நாடு பிளவுபடுவதை கடுமையாக எதிர்த்தார். பிரிவினை என்பது உறுதியான பிறகு இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் உள்ள எல்லா ஹிந்துக்களை இந்தியாவிற்கும் மாற்றிக் குடியேற  என்று வலியுறுத்தினார்.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தார். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகவும் பின்னர் 1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

இந்தியாவின் தேசிய மொழியாக காந்தி பரிந்துரைத்த ஹிந்தியும் உருதுவும் கலந்த ஹிந்துஸ்தானி மொழிக்கு பதிலாக தேவநாகரி எழுத்தில் உள்ள ஹிந்தியைத்தான் நாட்டின் தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாதாடினார்.

மதமாற்ற தடுப்பு சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் புருஷோத்தமதாஸ் டான்டனும், குலபதி முன்ஷியும் பரிந்துரைத்தனர்.

1950ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் - ஆமாம் அப்போதெல்லாம் ஆண்டுதோறும் தேர்தல் வைத்து தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது - வெற்றி பெற்று கட்சி தலைவரானார். ஆனால் நேரு அவர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இவரது சேவைகளைப் பாராட்டும் விதமாக பாரத அரசு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதை இவருக்கு வழங்கி மரியாதை செலுத்தியது.

தனது எழுபத்தி ஒன்பதாவது வயதில் 1962ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் டான்டன்  காலமானார்.