புதன், 16 ஜூலை, 2025

ஜூலை 16 - விடுதலைப் போராட்ட வீராங்கனை அருணா ஆசப் அலி பிறந்தநாள்

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள், பம்பாய் நகரத்தில் கூடிய காங்கிரஸ் மாநாடு வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. எல்லா முன்னணித் தலைவர்களையும் உடனடியாக பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அடுத்த நாள் கூட்டத்திற்கு 32 வயதே ஆன ஒரு இளம் பெண் தலைமை வகித்தார். மாநாட்டில் அன்று காங்கிரஸ் கொடியை அவர் ஏற்றினார். பாரத நாட்டின் மிகப் பெரும் போராட்டம் தொடங்கியது. கூட்டத்தில் புகுந்து வெள்ளையர்களின் காவல்துறை கண்முடித்தனமாக தாக்கியது, துப்பாக்கிச்சூடு நடத்தியது. தனது உயிரை துச்சமாக எண்ணி போராட்டத்தை முன்னெடுத்த அருணா ஆசப்அலியின் பிறந்தநாள் இன்று.


அன்றய பஞ்சாப் மாநிலத்தில் கல்கா நகரில் ஒரு உணவு விடுதியை நடத்திக்கொண்டு இருந்த வங்காளத்தை சேர்ந்த உபேந்திரநாத் கங்குலி - அம்பாலிகா தேவி தம்பதியினரின் மகளாக 1909 ஆம் ஆண்டு பிறந்தவர் அருணா கங்குலி. இவர் தாயார் வழி தாத்தா த்ரிலோக்நாத் சன்யால் பிரம்ம சமாஜத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர்.

தனது பள்ளிக்கல்வியை லாகூர் நகரிலும் கல்லூரிப்படிப்பை நைனிடால் நகரிலும் முடித்த அருணா கங்குலி கொல்கத்தா நகரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருந்தார். அலஹாபாத் நகரில்  புகழ்பெற்ற வழக்கறிஞரான ஆசப் அலி பகத்சிங், படுகேஸ்வர் தத் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களுக்காக  வாதாடியவர். விடுதலைப் போராட்ட களத்தில் அருணா கங்குலி சகபோராளியாக நண்பராக ஆசப் அலியோடு அறிமுகமானார். ஒத்த அலைவரிசையில் இருந்த அவர்கள் காதல் வயப்பட்டார்கள் 

இருபத்தி ஒரு வயது வித்தியாசமும், வெவ்வேறு மதம் என்பது அருணாவின் காதலுக்கு குறுக்கே நிற்கவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி அருணா ஆசப் அலியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு காந்தி, நேரு, ராஜாஜிசரோஜினி நாயுடு, அபுல் கலாம் ஆஜாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே ஆசப் அலி விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் இருந்ததால், அருணாவும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெற்று சிறைத்தண்டனை அனுபவித்தார். 1931ஆம் ஆண்டு ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தத்தை அடுத்து நாட்டின் எல்லா அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்ட போதும் அருணா விடுதலை செய்யப்படவில்லை. அவரோடு சிறையில் இருந்த எல்லா பெண் கைதிகளும் தாங்களும் சிறையில் இருந்து வெளியே போகப் போவதில்லை என்று போராடியபிறகே அருணா விடுதலை செய்யப்பட்டார்.

1932ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட அருணா ஆசப் அலி, சிறையில் அரசியல் கைதிகள் மரியாதையாக நடத்தப்படவேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். கைதிகளின் நிலையில் மாற்றம் வந்தது, அதோடு அருணா அம்பாலா சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவருக்கு தனிமைச்சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சிறையில் இருந்து விடுதலையான அருணா ஆசப் அலி, சிறிது காலம் அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்தார். ஆனால் நாட்டின் கொந்தளிப்பான நிலைமை அவரை அமைதியாக இருக்கவிடவேயில்லை. 1942ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கொடியை ஏற்றி அதிகாரபூர்வமாக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைத் தொடங்கி வைத்த அருணா தலைமறைவானார். ஆகஸ்ட் புரட்சியின் கதாநாயகி தலைமறைவு வாழ்க்கையில் இருந்தாலும் வட இந்தியா முழுவதும் புரட்சிக்கனலை கொழுந்து விட்டு எரியச் செய்துகொண்டுதான் இருந்தார். 

ராம் மனோகர் லோஹியாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் இன்குலாப் என்ற மாதாந்திர பத்திரிகையை வெளியிட்டுக்கொண்டும், வானொலி ஒலிபரப்பின் மூலமாக மக்களிடம் உரையாடிக்கொண்டும் இருந்தார். இன்குலாப் பத்திரிகையின் 1944ஆம் ஆண்டு இதழில் ஆயுதம் ஏந்தியா அல்லது அகிம்சை வழியிலா என்று விவாதித்துக் கொண்டு இருக்காதீர்கள், போராட்டத்தில் இறங்குங்கள், எந்த வழியானாலும் தவறில்லை என்று ஜெயப்ரகாஷ் நாராயணனோடு இணைந்து பாரத நாட்டு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். காந்தியின் அரசியல் வாரிசுகள் இப்போது மார்க்ஸின் மாணவர்களாக மாறிவிட்டார்கள் என்று அன்றய பத்திரிகைகள் எழுதின.

அருணாவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூபாய் ஐயாயிரம் பரிசு என்று ஆங்கில அரசு அறிவித்தது. 1946ஆம் ஆண்டு அவர் மீதான கைது ஆணை ரத்து செய்யப்பட்ட பின்னர்தான் அருணா வெளியுலகத்திற்கு தன்னைக் காட்டிக் கொண்டார். சூரியனே அஸ்தமிக்காத அரசு என்று பெருமை பேசிக்கொண்ட ஆங்கில அரசு ஒரு பாரதப் பெண்மணியிடம் தோற்று மண்டியிட்டது. பம்பாயில் தொடங்கிய இந்தியா கப்பல் படை கிளர்ச்சியை அருணா ஆதரித்தார். இது இந்த நாட்டின் ஹிந்துக்களுக்கு முஸ்லீம்களுக்குமான உறவை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அருணா ஆசப் அலி காங்கிரஸ் கட்சியின் சோசலிச பிரிவில் தீவிரமாக இயங்கினார். பின்னர் சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியின் முதல் மேயர் பதவியை வகித்தார்.

நேரடி அரசியலில் இருந்து விலகிய அருணா பெண்கள் முன்னேற்றதிற்காக கமலாதேவி சட்டோபாத்யாய உடன் இணைந்து பணி செய்யத் தொடங்கினார்.

1964ஆம் ஆண்டு சோவியத் அரசு அருணாவிற்கு லெனின் அமைதிப் பரிசை வழங்கியது. 1992ஆம் ஆண்டு பாரத அரசு பத்ம விபூஷண் விருதையும் அவர் மரணத்திற்குப் பிறகு 1997ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் வழங்கி அவரை கவுரவித்தது.

1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அருணா ஆசப் அலி காலமானார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் அருணா ஆசப் அலிக்கு தனியான இடம் ஓன்று எப்போதும் இருக்கும்.  

திங்கள், 14 ஜூலை, 2025

ஜூலை 14 - தொழிலதிபர் சிவநாடார் பிறந்தநாள்


கணினி மென்பொருள்துறையில் முக்கிய நிறுவனமான HCL நிறுவன அதிபரான திரு சிவ நாடார் அவர்களின் பிறந்தநாள் இன்று. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரின் அருகே உள்ள மூலைப்பொழி என்ற கிராமத்தைச் சார்ந்தவர் திரு சிவநாடார். இவரது தந்தை சிவசுப்பிரமணிய நாடார் தாயார் வாமசுந்தரிதேவி. இவர் தாய்வழி தாத்தா வழக்கறிஞர் சிவந்தி ஆதித்தன், இவரது தாய் மாமன் தினத்தந்தி பத்திரிகை நிறுவனர் திரு சி பா ஆதித்தனார்.

தனது தொடக்க கல்வியை கும்பகோணம் நகரிலும், பின்னர் மதுரையிலும் பயின்ற சிவநாடார் தனது பொறியியல் படிப்பை கோவை பி எஸ் ஜி கல்லூரியில் முடித்தார். டெல்லியில் உள்ள DCM நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றிய சிவ்நாடார் தனது நண்பர்களோடு இணைந்து 1976ஆம் ஆண்டு மைக்ரோகம்ப் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அவர்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வடிவில் வந்தது. 1977ஆம் ஆண்டு பதவியேற்ற ஜனதா அரசு இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று சட்டமியற்றியது. இதனை ஏற்காத கோகோகோலா ஐ பி எம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறிட முடிவு செய்தன.

எதிர்காலம் கணினித்துறையில்தான் உள்ளது என்பதை மிகச் சரியாக கணித்த சிவநாடார் கணினி தயாரிப்பில் இறங்க முடிவு செய்தார். ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் நிறுவனம் ஏறத்தாழ இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. எண்பதுகளின் தொடக்கத்தில் பாரத நாட்டில் விற்பனையான கணினிகளில் பெரும்பான்மையானவை ஹெசிஎல் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

மென்பொருள்துறையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவரும் ஹெசிஎல் நிறுவனத்தில் இன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கணினி துறையில் பெரும் வேலை வாய்ப்பு இருக்கும் என்பதை கணித்து, அதற்கான பணியாட்களை உருவாக்க சிவநாடார் தன் நண்பர்களோடு இணைத்து NIIT என்ற பயிற்சி நிறுவனத்தையும் உருவாக்கினார். பாரத நாட்டில் கணினி விற்பன்னர்கள் பலர் உருவானதற்கு இந்த நிறுவனத்தின் பயிற்சி மிக முக்கியமான காரணமாகும்.

தான் நிறுவிய சிவநாடார் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கான இரண்டு இலவசப் பள்ளிகள், அறக்கட்டளை மானியத்தில் இயங்கும் மூன்று பள்ளிகள், ஒரு பல்கலைக்கழகம் ஆகியவற்றை உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடத்தி வருகிறார். சென்னையில் சிவநாடார் அறக்கட்டளை நடத்தும் எஸ் எஸ் என் பொறியியல் கல்லூரி தமிழகத்தில் உள்ள தரமான கல்லூரிகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. தற்போது சென்னையில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைத் தொடங்க தமிழக அரசு சிவநாடாருக்கு அனுமதி வழங்கி உள்ளது.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்காருக்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப, பொருளை உருவாக்குவதிலும், அப்படி உருவாக்கிய பொருளை தேவை உடையவர்களுக்கு அளிப்பதிலும் முன்னுதாரணமாக விளங்கும் திரு சிவநாடார் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  

சனி, 12 ஜூலை, 2025

ஜூலை 12 - மெட்ரோ ரயில் நாயகன் ஸ்ரீதரன் பிறந்ததினம்

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது தரமான போக்குவரத்து வசதிதான். பாரதநாட்டின் ரயில்வே துறையில் பல சாதனைகளைப் புரிந்த ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள் இன்று. 

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள கருகாபுத்தூர் என்ற கிராமத்தில் நீலகண்டன் - அமலு அம்மா தம்பதியரின் மகனாக 1932ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் நாள் பிறந்தவர் ஸ்ரீதரன். தனது ஆரம்பக் கல்வியை பாலக்காடு பகுதியில் படித்த ஸ்ரீதரன் ஆந்திரப்பிரதேசம் காக்கிநாடாவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்தார். பாரத நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த டி என் சேஷன் இவரோடு பள்ளியில் சேர்ந்து படித்தவர். 

பொறியியல் படிப்பை முடித்த பிறகு ஸ்ரீதரன் சிறிது காலம் ஆசிரியராகவும் பின்னர் மும்பை துறைமுக பொறுப்புக் கழகத்திலும் பணியாற்றினார். பின்னர் 1953ஆம் ஆண்டு இந்திய அரசுப் பணித் தேர்வில் வெற்றி பெற்று பொறியாளர் பணியில் சேர்ந்தார். இந்திய ரயில்வே துறையில் இவரை பணியாற்றுமாறு அரசு ஆணை பிறப்பித்தது. 1964ஆம் ஆண்டு ஸ்ரீதரன் தென்னக ரயில்வேயின் துணை பொறியாளராக நியமிக்கப்பட்டார். 

1963ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய புயலால் ராமேஸ்வரத்தை நாட்டின் பிற பகுதிகளோடு இணைத்த பாம்பன் பாலம் முற்றிலும் சேதமானது. மூன்று மாதங்களில் அந்தப் பாலத்தை மீளுருவாக்கம் செய்யுமாறு ஸ்ரீதரன் பணிக்கப்பட்டனர். நாற்பத்தி ஆறே நாட்களில் ஸ்ரீதரன் அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்தார். இந்த சாதனையைப் பாராட்டி ரயில்வே துறையின் அமைச்சர் அளிக்கும் சிறப்பு அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. 

1970ஆம் ஆண்டு கொல்கத்தா நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான பொறுப்பாளராக அரசு ஸ்ரீதரனை நியமித்தது. குறிப்பிட்ட கால அளவில், அளிக்கப்பட்ட பணத்திற்கு உள்ளாகவே ஸ்ரீதரன் அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்தார். 1979ஆம் ஆண்டு கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற ஸ்ரீதரன், 1981ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் முதல் கப்பலான ராணி பத்மினி என்ற கப்பலை வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டார். 

1990 ஜூன் மாதம் அரசுப் பணியிலிருந்து ஸ்ரீதரன் ஓய்வு பெற்றார். ஆனால் அவரது சேவை நாட்டுக்குத் தேவை என்று அரசு முடிவு செய்தது. அன்றய ரயில்வேதுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டர்ஸ் ஸ்ரீதரனை கொங்கன் ரயில்வேயின் நிர்வாக இயக்குனராக நியமித்தார். பாரத நாட்டின் மேற்குக் கடற்கரையோரமாக கர்நாடகாவில் இருந்து மஹாராஷ்டிரா வரை செல்லும் சவாலான அந்தப் பொறுப்பை ஸ்ரீதரன் திறம்பட நிறைவேற்றினார். 

அதனைத் தொடர்ந்து டெல்லி, கொச்சி, லக்னோ, ஜெய்ப்பூர், விஜயவாடா, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கான மெட்ரோ சேவைகளில் நேரடியாகவோ அல்லது ஆலோசகராகவோ ஸ்ரீதரன் பணிபுரிந்தார். 

ஸ்ரீதரனின் சேவைகளைப் பாராட்டி பாரத அரசு அவருக்கு 2001ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், பின்னர் 2008ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருதையும் அளித்து சிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், ரூர்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமும் ஸ்ரீதரனுக்கு கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கி உள்ளன. 

ஊழலின் கரை படியாத ஸ்ரீதரனின் வாழ்க்கை பாரத நாட்டு இளைஞர்களுக்கு ஒரு பாடமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. 

வெள்ளி, 11 ஜூலை, 2025

ஜூலை 11 - முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பிறந்தநாள்


வாஜ்பாய் மற்றும் மோதி அமைச்சரவைகளில் அமைச்சராகப் பதவி வகித்த திரு சுரேஷ் பிரபு அவர்களின் பிறந்தநாள் இன்று.

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் பிரபு ஒரு பட்டயக் கணக்காளரும், வழக்கறிஞருமாவார். மஹாராஷ்டிர மாநிலத்தின் ராஜாபூர் தொகுதியில் இருந்து 1996 முதல் 2009 வரை இவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ராஜ்யசபை உறுப்பினராக உள்ளார். தனது அரசியல் வாழ்க்கையை சிவசேனா கட்சியில் தொடங்கிய பிரபு, தற்போது பாஜகவில் உள்ளார்.

வாஜ்பாய் அரசில் சுற்றுப்புறத்துறை, உரத்துறை, மின்சாரத்துறை, கனரக தொழில்துறை ஆகிய இலாக்காக்களில் பிரபு மந்திரியாகப் பணியாற்றினார். குறிப்பாக இவர் மின்சாரத்துறையில் அமைச்சராகப் பணியாற்றிய போது 2003ஆம் ஆண்டு பல்வேறு சட்டங்களை ஓன்றுபடுத்தி, மாறிவரும் காலநிலைமைக்கு ஏற்ப புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. அநேகமாக திவால் நிலையில் இருந்த பல்வேறு மாநில மின்சார வாரியங்களை மீட்டெடுத்ததில் சுரேஷின் பங்கு மகத்தானது.

மோதியின் அரசில் ரயில்வே, தொழில்துறை, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் சுரேஷ் பிரபு பணியாற்றினார். குறிப்பாக ரயில்வே துறையில் இவர் பணியாற்றிய போது பல்வேறு புதிய ரயில்கள், ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருப்பது, ரயில் நிலையங்களில் சூரிய ஒளியை வைத்து மின்சாரம் தயாரிப்பது ஆகிய புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்னும் பல்லாண்டு பூரண உடல்நலத்தோடு வாழ்ந்து பாரத நாட்டுக்கு சுரேஷ் பிரபு தனது பங்கை ஆற்றட்டும் என்று ஒரே இந்தியா தளம் வாழ்த்துகிறது  

வியாழன், 10 ஜூலை, 2025

ஜூலை 10 - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பிறந்தநாள் -


பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் தற்போதய மத்திய ராணுவ அமைச்சருமான ராஜ்நாத்சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று.

உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1951ஆம் ஆண்டு பிறந்தவர் ராஜ்நாத்சிங். இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டத்தை கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிவந்தார். தனது 13ஆம் வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராஜ்நாத், 1974ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மிர்சாபூர் நகரின் செயலாளராகவும் இருந்தார்.  அடுத்த ஆண்டே மாவட்ட தலைவராகவும் அதன்பின்னர் 1977ஆம் ஆண்டு உத்திரபிரதேச  சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

பாஜகவின் இளைஞர் பிரிவின் மாநிலத் தலைவராக 1984ஆம் ஆண்டிலும், பின்னர் தேசிய செயலாளராக 1986ஆம் ஆண்டிலும், இளைஞர் அணி தேசிய தலைவராக 1988ஆம் ஆண்டிலும் தேர்வானார்.

1988ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மேல்சபைக்கு தேர்வான ராஜ்நாத் 1991ஆம் மாநிலத்தின் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1994ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேல்சபைக்கு நியமிக்கப்பட்ட ராஜ்நாத், பாஜகவின் கொறடாவாகப் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு பாஜகவின் உத்திரப்பிரதேச மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1999ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசின் தரைவழி போக்குவரத்துதுறையின் அமைச்சராக ஏறத்தாழ ஓராண்டு காலம் பணியாற்றினார். வாஜ்பாயின் கனவு திட்டமான தங்க நாற்கர சாலை அமைக்கும் திட்டத்தில் ராஜ்நாத்தின் பங்கு மகத்தானது.
2000 - 2002ஆம் ஆண்டுகளில் உத்திரப்பிரதேச மாநில முதல்வராகப் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் அவர் பாஜகவின் தேசிய செயலாளராகவும் இருந்தார்.

மீண்டும் 2002ஆம் ஆண்டு மத்திய விவசாயத்துறை அமைச்சராகவும், பின்னர் உணவு பதப்படுத்தும் துறையின் அமைச்சராகவும் இருந்தார்.
2005 - 2009 காலகட்டத்திலும் அதன் பின்னர் 2013 - 2014 காலகட்டத்திலும் பாஜகவின் தேசிய தலைவராகவும் இருந்தார். அப்போதுதான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பெற்று பாஜக மத்திய அரசை அமைத்தது.

மோதி தலைமையிலான அரசின் உள்துறை அமைச்சராகவும், தற்போது பாதுகாப்புதுறை அமைச்சராகவும் ராஜ்நாத்சிங் பணியாற்றிவருகிறார்.

விஜயலக்ஷ்மி பண்டிட், ஷீலா கௌல், H N பகுகுணா அதன் பின்னர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஐந்து முறை வாஜ்பாய் ஆகிய நட்சத்திர வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய லக்னோ தொகுதியில் இருந்து 2014 மற்றும் 2019 ஆண்டு தேர்தல்களில் ராஜ்நாத் வெற்றி பெற்று உள்ளார்.

நாற்பதாண்டு காலத்திற்கும் மேலாக தேசத்திற்காக உழைத்து வரும் திரு ராஜ்நாத்சிங் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.  

புதன், 9 ஜூலை, 2025

ஜூலை 9 - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் - நிறுவன நாள்


நமது தேசம் அன்னியர் ஆட்சியின் கீழ் இருந்த காரணத்தால் இந்த தேசத்தின் மாணவர்களுக்கு நமது பெருமையும் புகழும் மறந்தே போய்விட்டன. மீண்டும் இந்த பாரதம் தேசம் உலகின் குருவாக விளங்க வேண்டும் எனில் இன்றைய மாணவர்கள் தேச பக்தியுடனும் தேச ஒற்றுமையுடனும் விளங்க வேண்டும். அதற்கான ஏற்பாடு அரசாங்கத்தின் சார்பில் செய்யப்படவில்லை.1948 -ம் ஆண்டு முதல் மாணவர்களிடத்தில் தேசபக்தியை வளர்க்க தேவையான முயற்சிகளை சில தலைவர்கள் முன்னெடுத்தனர். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ பி வி பி) ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் 1949 ஜூலை 9இல் தான் முறைப்படி பதிவு செய்யப்பட்டது . அந்த ஆண்டே நாடு முழுவதும் இந்த இயக்கம் பரவியது.

1948 -ம் ஆண்டு அக்டோபர் முதலே தமிழகத்தில் இந்த இயக்கத்தின் பணிகள் துவக்கப்பட்டது. இன்று இந்த இயக்கம் உலகின் மிகப்பெரிய மாணவர் இயக்கமாக திகழ்கிறது. அறிவு , ஒழுக்கம், ஒற்றுமை - என்ற தாரக மந்திரம் ஏபிவிபி-ன் கொள்கை. சுவாமி விவேகானந்தர் கூறிய ஆன்மிகம் மற்றும் தேசபக்தி சிந்தனையுடன் செயல்பட்டு வரும் இயக்கம் ஏபிவிபி. 3 மில்லியன் எண்ணிக்கையை விட அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ள ஒரே பெரிய மாணவர் இயக்கம் ஏ பி வி பி தான். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 9-ஆம் நாள் ஏபிவிபி நிறுவப்பட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தேசிய மாணவர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த இயக்கம் ஆரம்பித்து 71 வருடங்கள் ஆகிவிட்டன. "மாணவர் சக்தியே தேசிய சக்தி" என்னும் பிரதான முழக்கத்தோடு கடந்த 71 வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிறது ஏபிவிபி. தேசிய புனரமைப்பு மற்றும் தேசத்தை கட்டமைத்தல் இவைதான் ஏ பி வி பி-யின் லட்சியம். இந்த இயக்கத்தின் ஓங்கி ஒலிக்கும் சுலோகம் "இன்றைய மாணவர்கள் இன்றைய குடிமகன்கள்". இதனடிப்படையில் உயர்கல்வித் துறையில் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடத்தில் தேசபக்தியை வளர்த்து வருகிறது. இதன் மூலம் நாட்டிற்கு தேவையான தேசப்பற்றுள்ள இளைஞர் சக்தியை உருவாக்கி வருகிறது. தேச பக்தி என்பது வெறும் பேச்சில் மட்டும் அல்ல செயலிலும் இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த மாணவர் இயக்கம் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ஏபிவிபி-ன் களம் கல்லூரி வளாகங்கள் தான். இதன் செயல்பாட்டாளர்கள் மாணவர்கள் மற்றும் வழிநடத்துபவர்கள் ஆசிரியர்கள்.

பிரிவினைவாத சக்திகள் இந்த தேசத்துக்கு எதிராக செயல்படும் போதெல்லாம் அங்கு ஏபிவிபி வலிமையோடு எதிர்த்துப் போராடி வந்துள்ளது. "இந்த தேசம் ஒன்றுபட்ட தேசம்" "இந்த தேசம் நம் அனைவருக்கும் தாய்" -இத்தகைய உன்னதமான லட்சியத்தோடு தேசிய உணர்வை மாணவர்களின் மனதில் விதைத்து வருகிறது. இதன் மூலம் இந்த பாரத தேசத்தை நேசிக்கின்ற போற்றுகின்ற மதிக்கின்ற நல்ல குடிமகன்களை ஏபிவிபி உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது. தேசபக்தி உள்ள ஒவ்வொரு ஏபிவிபி மாணவனும் இந்த தேசத்திற்காக தியாகம் செய்ய தயாராக இருப்பான். தனது வாழ்நாளில் தனது நேரத்தை தேச வளர்ச்சிக்காக ஒதுக்கித்தர வேண்டும் தியாகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உணர்வு ஒவ்வொரு ஏபிவிபி மாணவன் இடத்திலும் காணமுடியும். கல்வி நிலையங்களில் மாணவர்களுக்காக ஏபிவிபி பரிந்து பேசம் மாணவர் நலனுக்காக போராடவும் செய்யும்.

ஏபிவிபி எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து இல்லை. இது ஒரு தன்னாட்சி இயக்கம். அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆசிரியர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்ட இது ஒரு கல்வி குடும்பம். தொழில்நுட்ப மாணவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், சட்டக் கல்வி மாணவர்கள் , ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் போன்ற துறவாரியான மாணவர்களை ஒருங்கிணைக்க ஏபிவிபி-ல் பல்வேறு தளங்கள் உள்ளன. IIT போன்ற கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்களுக்காக THINKINDIA, சட்ட கல்லூரி மாணவர்களுக்காக FOTLAW, மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக MEDIVISION, ஆயுர்வேத கல்லூரி மாணவர்களுக்காக JINGASA,தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்காக SETINDIA போன்ற பேரவைகள் (FORUM) மூலம் செயல்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள் தனது சமுதாயத்தில் உள்ள மக்களின் வாழ்வை நேரடியாக உணர வேண்டும் என்ற நோக்கத்தில் SOCIAL INTERNSHIP என்ற பெயரில் கிராம மற்றும் ஏழைமக்களை சந்தித்து அவர்களோடு உரையாடி அவர்களின் வாழ்வை பதிவு செய்யும் பயிற்சிகள் கோடை விடுமுறையில் நடத்த படுகின்றன. மாணவர்களின் படைப்பாக்கத் திறன்களை வெளிக் கொண்டு வந்து நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் TECHNICAL EXPO நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் தேசம் முழுக்க ஏபிவிபி நடத்தி வருகிறது. இதுவரை எண்ணற்ற சமுதாய தலைவர்களை, தேசிய அரசியல் தலைவர்களை ஏபிவிபி நாட்டிற்கு தந்துள்ளது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வெகுஜன இயக்கமாக ஏபிவிபி திகழ்கிறது என்றல் மிகை அல்ல.

தேசத்தை நேசிக்கும் மாணவர் படையை உருவாக்க ஏபிவிபி இயக்கத்தை நாம் அனைவரும் ஆதரிப்போம். தேசிய சக்தியை வலுப்படுத்துவோம்.

ஜெய் ஹிந்த் 

செவ்வாய், 8 ஜூலை, 2025

ஜூலை 8 - முன்னாள் பிரதமர் சந்திரசேகர் நினைவு தினம்

பாரதநாட்டின் எட்டாவது பிரதமராக இருந்த திரு சந்திரசேகரின் நினைவுநாள் இன்று.

சந்திரசேகரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், எண்பதுகளின் இறுதியில் இருந்த அரசியல் நிலைமை பற்றி நாம் சற்றே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 1984ஆம் ஆண்டு இறுதியில் அன்றைய பிரதமர் இந்திரா தனது மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடெங்கும் வீசிய அனுதாப அலையினால் ராஜிவ் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தார். அவர் ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு பீரங்கி வாங்கிய வகையில் சில அரசியல்வாதிகளுக்கு போபோர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்தது என்று சுவீடன் நாட்டு வானொலியில் செய்தி வெளியானது. சந்தேகத்தின் நிழல் ராஜீவின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் படிந்தது. அதனைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பெற்று இருந்தாலும் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை.

ஜனதாதளம் கட்சிக்கு 143 இடங்கள் கிடைத்து இருந்தது. பாரதிய ஜனதா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவையில் சேராமல், வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முன்வர ஜனதாதள கட்சிக்கு ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்தார். பிரதமராகும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று சந்திரசேகர் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார். பலர் வி பி சிங்கை பிரதமராக வேண்டும் என்று கூறினர். சமரச ஏற்பாடாக தேவிலால் பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால் திடீர் என்று தேவிலால் வி பி சிங்கை பிரதமராக அறிவித்தார். தான் ஏமாற்றப்பட்டதாக சந்திரசேகர் நினைக்கத் தொடங்கினார்.

தனது பலத்தைக் காட்ட தேவிலால் டெல்லியில் ஒரு விவசாயிகள் ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தார். அதனை எதிர்கொள்ள வி பி சிங் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தும் என்று அறிவித்தார். இட ஒதுக்கீட்டை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி வெடித்தது. இதற்கிடையே அயோத்தி நகரில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி குஜராத் மாநிலத்தின் சோமநாதபுரம் நகரில் இருந்து ரதயாத்திரையைத் தொடங்கினார். அந்த யாத்திரையை பிஹார் மாநிலத்தில் தடை செய்து அத்வானியையும் அன்றய பிஹார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கைது செய்தார். இதனைத் தொடர்ந்து ஜனதாதள அரசுக்கு அழைத்துவந்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது. வி பி சிங் பதவியில் இருந்து விலகினார்.
ஒரு வருடத்திற்கும் குறைவாகவே வி பி சிங் ஆட்சி செய்ய, இன்னொரு தேர்தலுக்கு நாடு தயாராகவில்லை ஜனதாதள கட்சியின் ஒரு பிரிவு உறுப்பினர்களின் ஆதரவோடு, காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்க சந்திரசேகர் பாரத நாட்டின் எட்டாவது பிரதமராகப் பதவி ஏற்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில்  ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1927ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் பிறந்தவர் திரு சந்திரசேகர். அரசியல் அறிவியல் துறையில் தனது முதுகலைப் பட்டத்தை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்ற சந்திரசேகர், படிக்கும் காலத்திலேயே அரசியல் ஈடுபாட்டோடு இருந்தார். புகழ்பெற்ற சோசலிஸ்ட் தலைவர்களான  ராம் மனோகர் லோஹியா மற்றும் ஆச்சாரிய நரேந்திர தேவ் ஆகியோரின் தலைமையில் செயல்பட்டார்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் பின்னர் அதே கட்சியின் உத்திரப்பிரதேச மாநில பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். 1962ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். 1965ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1967ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிப்படையில் பொதுவுடைமைவாதியான சந்திரசேகர் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்க்காக குரல் கொடுத்தார். சொத்துக்கள் சில தனியார் கைகளில் குவிவதை எதிர்த்த காரணத்தால் பலநேரங்களில் அவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையே எதிர்க்க வேண்டி இருந்தது.

சந்திரசேகரும் அவரோடு ஒத்த கருத்துள்ள பெரோஸ் காந்தி, சத்யேந்திர நாராயண் சின்ஹா, மோகன் தாரியா, ராம்தன் ஆகியோர் இளம் துருக்கியர்கள் என்று அழைக்கப் பட்டனர். தனது எண்ணங்களை வெளிப்படுத்த சந்திரசேகர் Young Indian என்ற வாரப் பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். பொதுவாழ்வில் இருந்து விலகி இருந்த ஜெயப்ரகாஷ் நாராயணன் அரசியலில் ஊழல் அதிகமாகி விட்டது, அதனை எதிர்க்க வேண்டும் என்று நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கினார். லட்சியவாதியான சந்திரசேகர் அந்தப் போராட்டத்தை ஆதரித்தார்.. போராட்டத்தை எதிர்கொள்ள இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடம் செய்தார். ஆளும் கட்சியில் இருந்தாலும் சந்திரசேகரும் கைது செய்யப்பட்டார்.

நெருக்கடி நிலையைத் தொடர்ந்து உருவான ஜனதா கட்சிக்கு சந்திரசேகர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் 1980ஆம் ஆண்டு இந்திரா பிரதமரானார். இந்திராவின் மறைவை அடுத்து நடந்த பொது தேர்தலில் அநேகமாக எல்லா எதிர்க்கட்சிகளும் தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் சந்திரசேகர் தலைமையிலான ஜனதா கட்சி, மற்றைய சோசலிச கட்சிகளோடு இணைத்து ஜனதாதள  உருவானது. 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனதா தளம் ஆட்சி அமைத்தது.

சந்திரசேகர் ஆட்சியில் இருந்த போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது. நாட்டின் மதிப்பீடு பொருளாதார தர நிறுவங்களால் குறைத்து மதிப்பிடப்பட்டது. இறக்குமதியை சமாளிக்க நாட்டின் தங்கத்தை அடமானம் வைக்கும் கடினமான முடிவை சந்திரசேகர் எடுத்தார். அடுத்த பொதுத்தேர்தலை சந்திக்கலாம் என்று தீர்மானித்த ராஜிவ் ஹரியானா காவல்துறை தன்னை வேவு பார்ப்பதாக கூறி சந்திரசேகர் அரசுக்கு அளித்தது வந்த ஆதரவை விலகிக்கொண்டார். நாடு அடுத்த தேர்தலுக்கு தயாரானது. தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜிவ் தமிழ்நாட்டில் மனித வெடிகுண்டால் பலியானார். அந்த தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க, நரசிம்மராவ் பிரதமரானார்.

1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து பாலியா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான சந்திரசேகர் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் நாள் காலமானார்.

லட்சியத்தில் உறுதியும், கொள்கையில் பிடிப்பும், நேர்மையும் கொண்ட சந்திரசேகர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும்.