சனி, 21 ஜூன், 2025

ஜூன் 21 - மேஜர் பத்மநாப ஆச்சார்யா பிறந்ததினம்


அது 1999ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் நாள். ஹைதராபாத் நகரில் உள்ள மேஜர் பத்மநாப ஆச்சாரியாவின் வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அதனை எடுத்தவர் மேஜர் ஆச்சாரியாவின் மனைவி சாருலதா. அவர் அப்போது ஆறு மாதம் கர்ப்பம். சாருலதா தன்னை அறிமுகம் செய்து கொண்ட உடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைப்பு, அப்போதும் எடுத்தவர் சாருலதா. மீண்டும் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. அடுத்தமுறை அழைப்பை எடுத்தவர் மேஜர் பத்மநாப ஆச்சார்யாவின் தந்தை விங் கமாண்டர் ஜெகநாத ஆச்சார்யா. பாரத விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அவர். பாகிஸ்தானோடு நடைபெற்ற 1965 மற்றும் 1971ஆம் நடைபெற்ற போர்களில் பங்குபெற்றவர். விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றபிறகு அவர் ராணுவ ஆராய்ச்சி சாலையில் பணியாற்றிவந்தார்.

எந்த ராணுவவீரரின் குடும்பத்தினரும் கேட்க விரும்பாத செய்திதான் தொலைபேசி வழியே பகிரப்பட்டது. " உங்கள் மகன் மேஜர் பத்மநாப ஆச்சார்யா தீரத்துடன் போரிட்டார். வரலாற்றில் தனக்கான இடத்தை தன் உயிரைக் கொடுத்து அவர் பெற்றுக்கொண்டார்" என்று பத்மநாப ஆச்சார்யாவின் வீரமரணத்தைப் பற்றிய தகவல் அவர் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.

கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் பத்மநாப ஆச்சார்யா அவர்களின் பிறந்ததினம் இன்று. அவரின் பலிதானத்தை கௌரவிக்கும் வகையில் பாரதநாடு அவருக்கு ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான மகாவீர் சக்ரா விருதை அளித்தது.

ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த பத்மநாப ஆச்சார்யா இன்றய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் வளர்ந்தவர். அவரது தந்தை ஜகந்நாத் ஆச்சார்யா பாரதநாட்டின் விமானப்படை அதிகாரியாக சேவை செய்தவர்.  1969ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் நாள் பிறந்த பத்மநாப ஆச்சார்யாவும் தனது தந்தையைப் பின்பற்றி பாரத ராணுவத்தின் ராஜ்புதான துப்பாக்கிப் படையில் தனது சேவையைத் தொடங்கினார்.

1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில் டோலோலிங் மலை உச்சியில் இருந்த பகைவர்களை விரட்டி அந்த இடத்தைக் கைப்பற்றும் பொறுப்பு மேஜர் ஆச்சார்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏறத்தாழ ஐயாயிரம் அடி உயரத்தில் இருந்த முகாம் அது. உச்சியில் இருக்கும் பகைவர்களைத் தாக்கி அதனைக் கைப்பற்றுவது என்பது நேரடியாக மரணத்தைச் சந்திக்கும் வேலை. ஆனால் அந்த சவாலை பாரத ராணுவம் எதிர்கொண்டது. கடுமையான உயிரிழப்பை தாங்கி ராஜ்புதான துப்பாக்கிப் படை மலையின் உச்சியை அடைந்தது. படையை முன்னிருந்து நடத்திய ஆச்சார்யா எதிரியின் குண்டுகளால் படுகாயம் அடைந்தார். ஆனாலும் மருத்துவ சிகிச்சை பெறாமல், முன்னேறிச் சென்று தனது படையினரோடு எதிரிகளை சர்வநாசம் செய்து தனக்கு இடப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்தார். அதற்கான களத்தில் அவர் பணயமாக வைத்தது அவரது உயிரை.

எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் நாட்டின் மரியாதையும், பாதுகாப்பும் முதலில், நான் நடத்திச் செல்லும் படையின் பாதுகாப்பு அடுத்ததாக, எனது பாதுகாப்பு அதற்கும் பின்னால்தான், பாரத ராணுவத்தில் பணியாற்றச் சேரும் அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி இது. அந்த உறுதிமொழியை தனது உதிரத்தால், உயிரால் காப்பாற்றிய வீரர் மேஜர் பத்மநாப ஆச்சார்யா.

தன் தந்தையின் முகத்தைக் கூடப் பார்க்காதவர் மேஜர் ஆச்சார்யாவின் மகள் அபராஜிதா. அவர் தன் தந்தையின் நினைவாக அவரது படங்களும், அவர் எழுதிய கடிதங்களையும் தொகுத்து மேஜர் ஆச்சார்யாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.  மேஜர் ஆச்சார்யாவின் மனைவி சாருலதா, போரில் பலியான வீரர்களின் குடும்பத்தினரின் உளவியல் சவால்களைச் சரிசெய்யும் சேவை அமைப்பை நடத்தி வருகிறார்.

பத்மநாப ஆச்சார்யாவின் இளைய சகோதர் பத்மசாம்ப ஆச்சார்யாவும் பாரத ராணுவத்தின் ராஜ்புதான துப்பாக்கிப் படையின் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 

நம்பற்குரியர் அவ்வீரர், தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர் என்ற பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாக விளங்கும் மேஜர் பத்மநாப ஆச்சார்யா உள்ளிட்ட வீரர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.   

வெள்ளி, 20 ஜூன், 2025

ஜூன் 20 - தொழிலதிபர் லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் பிறந்தநாள்

புதுமையான பல தொழில்களை பாரத நாட்டில் உருவாக்கியவரும், கிர்லோஸ்கர் குழுமத்தின் நிறுவனருமான லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று.

அன்றய மும்பாய் ராஜதானியின் அங்கமாக இருந்த பெல்காம் மாவட்டத்தில் வசித்துவந்த வேத பண்டிதரான காசிநாத் பண்ட் என்ற மஹாராஷ்டிர பிராமணரின் மகனாக 1869ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் நாள் பிறந்தவர் திரு லக்ஷ்மன்ராவ் கிர்லோஸ்கர். தன்னைப் போலவே தன் மகனும் வேத விற்பன்னராக இருப்பான் என்று தந்தை நினைக்க, லக்ஷ்மண்ராவின் விருப்பமோ ஓவியங்கள் வரைவதிலும், இயந்திரப் பொருள்களை உருவாக்குவதிலும்தான் இருந்தது.

தனது மூத்த சகோதரர் ராமண்ணா பொருளுதவி செய்ய லக்ஷ்மணராவ் மும்பையில் உள்ள ஜே ஜே நுண்கலைக் கல்லூரியில் ஓவியம் படிக்கச் சென்றார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவரது பார்வையில் ஏற்பட்ட குறைபாட்டால் அவர் அந்தத் துறையை விட்டு விட்டு இயந்திரங்களை உருவாக்கத் தேவையான ஓவியங்களை வரைவது பற்றிய படிப்பிற்கு மாற்றிக்கொள்ள நேரிட்டது. படிப்பை முடித்த பிறகு அவர் விக்டோரியா ஜூபிலி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். பல்வேறு இயந்திரங்களைப் பற்றிய தகவல்களைத் தாங்கிவரும் வெளிநாட்டுப் புத்தகங்களை வாசிப்பதன் மூலமும், கல்வி நிலையத்தில் உள்ள ஆய்வுகூடத்தில் அந்த மாதிரிகளை உருவாகிப் பார்ப்பதன் மூலமும் லக்ஷ்மணராவ் தன்னை செதுக்கிக் கொண்டார்.

இதற்கிடையில் 1890களில் ராமண்ணா - லக்ஷ்மணராவ் சகோதர்கள் பெல்காம் நகரில் ஒரு மிதிவண்டி விற்பனை நிலையத்தைத் தொடங்கினார்கள். மும்பையில் இருந்து லக்ஷ்மணராவ் மிதிவண்டிகளை வாங்கி அனுப்ப, ராமண்ணா அதனை விற்பனை செய்துகொண்டு இருந்தார். கிர்லோஸ்கர் குழுமத்தின் விதை இந்த விற்பனை நிலையத்தில்தான் ஊன்றப்பட்டது. தகுதி இருந்தும் லக்ஷ்மன்ராவுக்கு கல்வி நிலையத்தில் பதவி உயர்வு கிடைக்கவில்லை, அது ஒரு ஆங்கிலோ இந்தியருக்கு அளிக்கப்பட்டது. மனம் நொந்த லக்ஷ்மணராவ் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு பெல்காம் திரும்பினார். சகோதர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து காற்றாடி ஆலைகளை இறக்குமதி செய்து விற்கத் தொடங்கினார். ஆனால் அதற்கான வாடிக்கையாளர்கள் அதிகமாக இல்லை.

பாரதம் போன்ற விவசாய நாட்டில் விவசாயத்துறைக்கான இயந்திரங்களுக்கு நல்ல தேவை இருக்கும் என்பதைக் கணித்த லக்ஷ்மணராவ் இரும்புக் கலப்பைகளை உருவாக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் விவசாயிகள் அதனை பயன்படுத்தத் தயங்கினர். தொடர்ச்சியாக  விவசாயிகளோடு  பேசி, இரும்புக் கலப்பையின் சாதகங்களை எடுத்துக் கூறி லக்ஷ்மணராவ் அதனை விற்பனை செய்தார். அதனைத் தொடர்ந்து கால்நடைகளுக்கான தீவனத்தை சிறு துண்டுகளாக வெட்டும் இயந்திரம் ஒன்றை லக்ஷ்மன்ராவ் வடிவமைத்தார்.

லக்ஷ்மணராவின் இயந்திரங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ குறுநில மன்னர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்தார். கிர்லோஸ்கர் குழுமத்தின் முதல் தொழில்சாலை அங்கே நிறுவப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வெளியாகும் பல  பத்திரிகைகளைத் தொடர்ச்சியாகப் படிக்கும் லக்ஷ்மணராவ், அதுபோலவே தொழிலாளர்களுக்கான எல்லா வசதியும் உள்ள குடியிருப்புகளோடு தனது தொழில்சாலையை உருவாக்கினார். அன்றய காலகட்டத்தில் தனது தொழில்சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தீண்டாமையை பின்பற்றக் கூடாது என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். அதுபோலவே தனது நிறுவனம் தயாரிக்கும் எல்லாப் பொருள்களும் உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்பதிலும் லக்ஷ்மணராவ் கிர்லோஸ்கர் உறுதியாக இருந்தார்.

மிகச் சாதாரணமாக மிதிவண்டி விற்பனை செய்வதில் தொடங்கிய பயணம் இன்று பல்வேறு இயந்திரங்களை உருவாகும் மிகப் பெரும் தொழில் குழுமமாக கிர்லோஸ்கர் குழுமம் வளர்ந்துள்ளது.

தொழில்துறையில் திரு லக்ஷ்மணராவ் கிர்லோஸ்கரின் சாதனைகளை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கூறுகிறது.  

வியாழன், 19 ஜூன், 2025

ஜூன் 19 - சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர் கோபிந்த் பிறந்த நாள்


சீக்கியர்களை போர்க்குணம் கொண்ட இனக்குழுவாக வடிவமைத்த குரு ஹர்கோபிந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. சீக்கியர்களின் ஐந்தாவது குருவான அர்ஜன் தேவ் அவர்களின் மகனாக 1595ஆம் ஆண்டு பிறந்தவர் இவர். குரு அர்ஜன் தேவ் அவர்களின் பலிதானத்திற்குப் பிறகு சீக்கியர்களின் குருவாக ஹர்கோபிந்த் தனது பதினோராம் வயதில் பதவி ஏற்றார்.

கொடுமையான சித்திரவத்தையினால் குரு அர்ஜன்தேவ் மரணமடைய, பெரும்பலம் வாய்ந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து நிற்க சீக்கியர்கள் உறுதி பூண்டனர். அந்த எண்ணத்தை ஆற்றுப்படுத்தி, தொடர்ந்த பயிற்சிகள் மூலம் சீக்கியர்களை போர்க்குணம் கொண்ட இனமாகிய பொறுப்பு குரு ஹர்கோபிந்த் அவர்கள் மீது விழுந்தது. அதுவரை ஹிந்து சமுதாயத்தில் உள்ள ஒரு ஜாதி வேறுபாடுகளை களையும் அமைப்பாக இருந்த சீக்கியம் இவர் காலத்திலேயே தனக்கான ஒரு தனி அடையாளத்தைக் கைகொள்ளத் தொடங்கியது.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு மெய்காவல் படையை உருவாக்கிக் கொள்ளவும், மொகலாய அடக்குமுறையில் இருந்த மக்களைக் காக்க ஆயுதம் எந்த எப்போதும் தயாராக இருக்கவும் குரு அர்ஜன் தேவ் இவருக்கு ஆணையிட்டார். அதன் படி எழுநூறு குதிரைகள் கொண்ட படையையும், அறுபது பேர் கொண்ட பீரங்கி படையையும் குரு ஹர்கோவிந்த் உருவாக்கினார். குரு எப்போதும் இரண்டு வாள்களை அணிந்து இருந்தார், அதில் ஓன்று இவ்வுலக அதிகாரத்தையும், மற்றொன்று அவரது ஆன்மீக அதிகாரத்தையும் குறித்தது. அம்ரித்ஸர் நகரைச் சுற்றி குரு கோட்டையை எழுப்பினார். பொற்கோவிலில் உள்ள ஹர்மந்தர் சாஹிப் இவரால் உருவாக்கப் பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து குரு சீக்கிய மதத்தைப் பரப்பினார்.

வளர்ந்து வரும் சீக்கிய மதத்தையும், அவர்களின் ராணுவ பலத்தையும் கண்டு பொறாமல் முகலாய மன்னர் ஜஹாங்கிர் குருவை குவாலியர் கோட்டையில் சிறை வைத்தார். ஆனால் அப்போது லாகூர் நகரில் ஆளுநராக இருந்த வாஜிர் கான் மற்றும் குருவின் நண்பர்கள் ஜஹாங்கீரின் மனதை மாற்றி குருவை விடுவிக்க வைத்தனர். ஆனால் குரு ஹர்கோவிந்த் தன்னோடு சிறையில் இருந்த 52 ஹிந்து மன்னர்களையும் விடுவிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, அவர்களையும் விடுவிக்க வைத்தார். விடுதலையான குரு அம்ரித்ஸர் நகருக்கு வந்தது ஒரு தீபாவளி நாள் அன்று. அதனால் இன்றும் சீக்கியர்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

ஜஹாங்கீருக்கும் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட நல்லுறவு சிலகாலமே நீடித்தது. புதிதாக பதவிக்கு வந்த ஷாஜஹான் மீண்டும் சீக்கியர்களோடு மோத ஆரம்பித்தார். தொடர்ச்சியான போராட்டங்கள் ஆரம்பமானது. முழுமையாக இஸ்லாமும் சீக்கியமும் எதிர் அணிகளில் இருப்பதற்கான விதை ஷாஜஹானால் ஊன்றப்பட்டது.

வெளிப்பார்வைக்கு மன்னன், ஆனால் உள்ளுக்குள் துறவி, எளியவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் ஆயுதம் ஏந்திய வீரன், உலகத்தைத் துறக்காமல் மாயையைத் துறந்த குரு என்று தன்னை பிரகடம் செய்துகொண்ட குரு தனது 48ஆவது வயதில் காலமானார்.

எத்தனையோ குருமார்கள் இந்த மண்ணில் அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்  

புதன், 18 ஜூன், 2025

ஜூன் 18 - சர்சங்கசாலக் சுதர்ஷன் ஜி பிறந்தநாள் -


ராஷ்டிரிய ஸ்வயம்சேவகசங்கத்தின் ஐந்தாவது சர்சங்கசாலக்காக பணியாற்றிய மானநிய சுதர்ஷன் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.

இன்றய சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர் சுதர்ஷன்ஜி அவர்கள். ஜபல்பூர் பொறியியல் கல்லூரியில் தொலைதொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றவர் இவர்.

பல ஸ்வயம்சேவகர்களைப் போலவே சுதர்ஷன்ஜியும் மிகச் சிறிய வயதிலேயே சங்கத்தின் தொடர்புக்குள் வந்து விட்டார். தனது ஒன்பதாம் வயதிலேயே சங்கத்தின் ஷாகாவில் பங்கெடுக்கத் தொடங்கிய சுதர்ஷன்ஜி பட்டப்படிப்பு முடித்தவுடன் தனது 23ஆம் வயதிலேயே முழுநேர ஊழியராக ( பிரச்சாரக் ) சங்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார். 

மத்திய பிரதேசத்தில் தொடங்கிய இவரது சங்கபணி வடகிழக்கு மாநிலங்களில் பரவி பின்னர் இந்தியா முழுவதுமாக விரிவடைந்தது.
படிப்படியாக சங்கத்தின் பல்வேறு பொறுப்புகள் சுதர்ஷன் ஜியைத் தேடி வந்தது. சங்கத்தின் அகில பாரத துணை பொது செயலாளராக அவர் பணியாற்றினார். 2000ஆவது ஆண்டில் சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக் ஸ்ரீ ராஜேந்திரசிங் ஜி, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். சங்கத்தின் அடுத்த தலைவராக ஸ்ரீ சுதர்ஷன்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த ஒன்பது ஆண்டுகள் அவர் இந்தப் பொறுப்பில் இருந்தார்.

கன்னட மொழி, மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், சட்டிஸ்கரி போன்ற 13 மொழிகளில் புலமை பெற்ற சுதர்ஷன்ஜியின் தலைமையில் சங்கம் இன்னும் விரிவாகப் பரவியது. ஆழ்ந்த படிப்பும், இந்தியா முழுவதும் சுற்றி வந்த நேரடி அனுபவமும் இணைந்த சுதர்ஷன் ஜி ஸ்வதேசி பொருளாதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். பரிவார் அமைப்புகள் அனைத்திலும் இளைய தலைவர்கள் உருவாவதிலும், அவர்களை வார்த்தெடுப்பதிலும் சுதர்ஷன்ஜி மிகுந்த கவனம் செலுத்தினார்.
2009ஆம் ஆண்டு சுதர்ஷன்ஜி தலைமைப் பொறுப்பை மோகன் பகவத்ஜி அவர்களிடம் ஒப்படைத்தார்.

தனது 81ஆம் வயதில் சுதர்ஷன்ஜி ராய்ப்பூர் நகரில் காலமானார். அவரது விருப்பத்தின்படி அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. எதோ ஒரு இடத்தில இருந்து வலிமையான பாரத நாட்டை சுதர்ஷன் ஜி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.  

திங்கள், 16 ஜூன், 2025

ஜூன் 16 - இந்தியவியல் சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன் பிறந்தநாள்

புகழ்பெற்ற இந்தியவியல் சிந்தனையாளரும், களப்பணியாளரும், எழுத்தாளருமாகிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

அரவிந்தன் நீலகண்டன் தமிழகத்தில் ஹிந்து எழுச்சிக்கு அடித்தளமாக விளங்கும் நாகர்கோவில் நகரைச் சார்ந்தவர். இவரது தந்தை நாகர்கோயில் ஹிந்துக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். இவர் தாயார் அதே கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். பெற்றோர் இருவருமே கல்விப் புலத்தில் இருந்ததால் சிறுவயது முதலே பல்வேறு புத்தகங்களை படித்து அது பற்றி விவாதிக்கும் வாய்ப்பு அரவிந்தனுக்கு கிட்டியது. கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மலர்வது போல, பல்வேறு புத்தகங்களை ஐயம் திரிபுர கற்ற அரவிந்தன் இந்தியவியல் சிந்தனையாளராக மலர்ந்தார்.

வேளாண்மைத் துறை மாணவராகத் தொடங்கிய அரவிந்தன் நீலகண்டன் பொருளாதாரம் மற்றும் உளவியல் துறைகளில் முதுகலைப் பட்டங்களும் பெற்றார். இவரது கட்டுரைகள் திண்ணை இணையத்தளத்தில் வெளியாகத் தொடங்கின. அதன் பின்னர் தினமணி, சொல்வனம், தமிழ் பேப்பர் ஆகிய பத்திரிகைகள் இவரது கட்டுரைகளை வெளியிட்டன. தமிழ் ஹிந்து இணைய இதழின் ஆசிரியர் குழுவில் பங்களித்தார். வலம் பத்திரிகை மற்றும் ஸ்வராஜ்யா போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்தியாவைத் துண்டாட நினைக்கும் பல்வேறு சக்திகள் பற்றி ராஜிவ் மல்ஹோத்ராவுடன் இணைந்து, பல்வேறு ஆரய்ச்சிகளுக்குப் பிறகு ‘உடையும் இந்தியா’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
‘நம்பக்கூடாத கடவுள்’, ‘ஆழி பெரிது’, ‘ஹிந்துத்துவச் சிறுகதைகள்’, ‘இந்திய அறிதல் முறைகள்' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி உள்ளார். ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ என்ற புத்தகத்தில் கம்யூனிச சித்தாந்தத்தின் கோர முகத்தைப் பற்றியும், அதனால் உலகத்திற்கு ஏற்பட்ட இன்னல்கள் பற்றியும் விரிவாக ஆய்வுமுறையில் பதிவு செய்துள்ளார். இன்றுவரை இப்புத்தகம் எந்த ஒரு கம்யூனிஸ்ட்டாலும் மறுக்கப்படவில்லை என்பது முக்கியமான செய்தி.

நான்கு பக்க கட்டுரைக்கு எட்டுப் பக்கத்திற்கு ஆதாரங்களை அளித்து எழுதுவது என்பது இவர் பாணி. அதனாலேயே இவர் எழுதும் கட்டுரைகளுக்கோ அல்லது புத்தகங்களுக்கோ, எதிர் முகாமில் இருந்து வசைபாடல்கள் இருக்குமே அன்றி, தர்க்கபூர்வமான எதிர்ப்புகள் என்பது பொதுவாக இருப்பதில்லை.

நண்பரும், ஆசானும், சகோதரனும், ‘ஒரே இந்தியா’ தள நிர்வாகிகளின் ஆதர்ச நாயகனுமான அரவிந்தன் நீலகண்டனுக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் ஒரே இந்தியா தளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.


பாரத நாட்டுக்கு இன்னும் ஆயிரம் ஆயிரம் அரவிந்தர்கள் தேவை.

சனி, 14 ஜூன், 2025

ஜூன் 14 - தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா பிறந்தநாள்

பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறப்பது என்பது எப்படி ஒரு பெரும் வாய்ப்போ அதுபோலவே அது பெரும் சவால்கூட. குடும்பத்தின் பெருமையைக் காப்பதுவும், குடும்ப முன்னோர்களின் சாதனையைத் தாண்டிச் செல்வது என்பதும் மிகக் கடினமான ஓன்று. அந்த சவாலை சந்தித்து வெற்றிகரமாக விளங்கும் குமார்மங்கலம் பிர்லாவின் பிறந்தநாள் இன்று.


புகழ்பெற்ற பிர்லா குடும்பத்தின் நான்காம் தலைமுறை வாரிசு குமாரமங்கலம் பிர்லா. கொல்கத்தா நகரில் பிறந்த பிர்லா, மும்பையில் வளர்ந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற பிர்லா அதனைத் தொடர்ந்து லண்டன் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பின்னர் பட்டயக் கணக்காளர் படிப்பையும் முடித்தார். 

பிர்லா குழுமத்தின் அன்றய தலைவரும், குமாரமங்கலம் பிர்லாவின் தந்தையுமான ஆதித்ய விக்ரம் பிர்லா புற்றுநோய் காரணமாக 1995ஆம் ஆண்டு தனது ஐம்பது ஒன்றாம் வயதில் மரணமடைய தனது இருபத்தி எட்டாம் வயதில் பிர்லா குழுமத்தின் தலைவராக குமாரமங்கலம் பிர்லா பொறுப்பேற்றுக் கொள்ள நேர்ந்தது. அவரது தலைமையில் பிர்லா குழுமம் இருபத்தி நான்கு ஆண்டுகளில் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் வியாபாரத்தில் இருந்து நாற்பத்தி எட்டு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடைந்தது. 

அலுமினியம், தாமிரம், சிமெண்ட், துணிவகைகள், சூரிய மின்சக்தி, விவசாயப் பொருள்கள், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம், நிதி சம்மந்தமான சேவைகள் என்று பல்வேறு துறைகளில் பிர்லா குழுமத்தை முக்கியமான ஒன்றாக குமார்மங்கலம் பிர்லா மாற்றி உள்ளார். கடந்த இருபது ஆண்டுகளில் கனடா, சீனா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள  நாற்பது நிறுவனங்களை கையகப்படுத்தி பல துறைகளில் முக்கியமான நிறுவனமாக பிர்லா குழுமத்தை உயர்த்தி உள்ளார். நாற்பத்தி இரண்டு நாடுகளைச் சார்ந்த 1,20,000 தொழிலாளர்கள் பிர்லா குழுமத்தில் வேலை செய்கிறார்கள். 

தொழில் நிறுவனங்களை நடத்துவதோடு பிர்லா குழுமம் நாட்டில் பல முக்கியமான கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறது. புகழ்வாய்ந்த பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியின் வேந்தராகவும் குமார்மங்கலம் பிர்லா பணியாற்றி வருகிறார். அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் அவர் உள்ளார். 

குமார்மங்கலம் பிர்லா முக்கியமான தொழிலதிபர் என்பதோடு தனது குழுமத்தின் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு உள்ளார். ஏறத்தாழ ஐயாயிரம் கிராமங்களில் எழுபத்தி ஐந்து லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கல்வி, சுகாதார வசதிகளை செய்து வருகிறார். நாற்பத்தி ஐயாயிரம் மாணவர்கள் படிக்கும் ஐம்பத்தி ஆறு பள்ளிகளையும் இருபத்தி இரண்டு மருத்துவமனைகளையும் பிர்லா குழுமம் சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் சேவைக்காக நடத்தி வருகிறது, இது போன்ற சேவைப் பணிகளுக்காக வருடம் ஒன்றுக்கு இருநூற்றி ஐம்பது கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவாகிறது. 

குமார்மங்கலம் பிர்லாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வாரணாசியில் உள்ள ஹிந்து சர்வகலாசாலை, கோவிந்தவல்லப பந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ முனைவர் பட்டத்தை அளித்துள்ளன. 

பாரத நாட்டு இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக ஆகவும், அதில் வரும் பணத்தை சமுதாயப் பணிகளுக்காகச் செலவிடவும் குமார்மங்கலம் பிர்லா வழிகாட்டியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது. 

தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா இன்னும் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து, நாட்டுக்கு சேவை புரிய வேண்டும் என்ற வேண்டுதலோடு அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை ஒரே இந்தியா தளம் தெரிவித்துக் கொள்கிறது. 

வெள்ளி, 13 ஜூன், 2025

ஜூன் 13 - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பிறந்தநாள்

மோதி தலைமையிலான அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறையின் மத்திய அமைச்சரான திரு பியூஸ் கோயல் அவர்களின் பிறந்தநாள் இன்று.


வேத்பிரகாஷ் கோயல் சந்திரகாந்தா தம்பதியரின் மகனாக 1964ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் நாள் பிறந்தவர் திரு பியூஸ் கோயல் அவர்கள்.  லாகூர் நகரைச் சார்ந்த வேதபிரகாஷ் கோயல் பாரதநாட்டின் ராஜ்யசபை உறுப்பினராகவும், வாஜ்பாய் தலைமையிலான அரசில் கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் பாஜகவின் தேசியப் பொருளாளராகவும் பதவி வகித்தவர். திருமதி சந்திரகாந்தா மூன்று முறை மும்பை மாதுங்கா தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பியூஸ் கோயல் பட்டயக் கணக்காளர் தேர்வில் நாட்டிலேயே இரண்டாவது இடத்திலும்,  சட்டப் படிப்பில் மும்பை பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடத்திலும் தேர்ச்சி பெற்றவர். முதலீட்டுத் துறையில் மிகுந்த அனுபவம் பெற்ற பியூஸ் கோயல் தனியார் துறையில் வேலை செய்த போது, பல்வேறு நிறுவனங்களுக்கு யுத்திகள் வகுப்பதிலும், நிறுவனங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது பற்றியும் ஆலோசகராக விளங்கினார்.

பாஜக சார்பில் 2010ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்குத் தேர்வான பியூஸ் கோயல், பாஜகவில் தேசியப் பொருளாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார்.

2014ஆம் ஆண்டு அமைந்த மோதியின் அரசின் மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மற்றும் நிலக்கரி ஆகிய துறைகளின் அமைச்சராகச் செயலாற்றினார். அதுவரை மின்சார இணைப்பே இல்லாமல் இருந்த 18,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்தது இவரின் சாதனை. அது போல மிகக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் எல் ஈ டி விளக்குகளை குறைந்த விலையில்  விற்பனை செய்து, மின் பயன்பாட்டைக் குறைத்து, மரபு சாரா எரிசக்தி தயாரிப்பில் பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது, எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் நிலக்கரி சுரங்கத்தை குத்தகைக்கு விட்டது என்று பல்வேறு சாதனைகளை பியூஸ் கோயல் செய்தார்.

2017ஆம் ஆண்டு ரயில்வே  துறையின் அமைச்சராக கோயல் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ உடல்நிலை குன்றி இருந்த போது, தற்காலிக நிதியமைச்சர் என்ற முறையில் 2019ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கோயல் தாக்கல் செய்தார்.

2019ஆம் ஆண்டு அமைந்த மோதியின் இரண்டாவது அரசின் ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக கோயல் பணியாற்றிவருகிறார். பேங்க் ஆப் பரோடா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் கோயல் பணியாற்றி உள்ளார்.

பாஜகவின் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவரான திரு பியூஸ் கோயல் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற பிரார்தனைகளோடு அவருக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.  

புதன், 11 ஜூன், 2025

ஜூன் 11 - புரட்சிவீரர் ராம் பிரசாத் பிஸ்மில் பிறந்தநாள்

பாரத நாட்டின் விடுதலை என்பது பல்வேறு தியாகிகள் தங்களையே ஆகுதியாக்கி அதனால் கிடைத்த பலனாகும்.  அப்படியான தியாகிகளின் வரிசையில் முக்கியமான ராம் பிரசாத் பிஸ்மில் அவர்களின் பிறந்ததினம் இன்று. 

தனது ஒரு கையில் ஏந்திய துப்பாக்கியினால் உமிழும் தோட்டாக்கள் மூலமாகவும், மறுகையில் ஏந்திய பேனா முனையில் இருந்து வெளியாகும் கவிதைகள் மூலமாகவும்  ஒரே நேரத்தில் ஆங்கிலேயர்களின் நிம்மதியைக் குலைத்த வீரர் அவர்.

 இன்றய உத்திரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் முரளிதர் - மூல்மதி தம்பதியரின் மகனாக 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் நாள் பிறந்தவர். தன் தந்தையிடம் ஹிந்தி மொழியையும் அதனைத் தொடர்ந்து ஒரு இஸ்லாமிய மதகுருவிடம் உருது மொழியையும் ராம் பிரசாத் கற்றுத் தேர்ந்தார். அன்றய காலகட்டத்தில் மிகவும் பிரசித்தியோடு இருந்த ஆரியசமாஜத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். ஹிந்து ஞானமரபுதான் அன்னியர்களை எதிர்த்துப் போரிடவேண்டும்  உத்வேகத்தை மக்களுக்கு எப்போதும் அளித்து வந்துள்ளது. ஆர்யசமாஜத்தில் இருந்த ஸ்வாமி சோமதேவ் என்பவர்தான் ராம் பிரசாத்தின் வழிகாட்டியாக அமைந்தார்.

ராம்பிரசாத் மாத்ரிவேதி ( தாய்நாட்டின் பலிபீடம் ) என்ற அமைப்பை உருவாக்கி இருந்தார். அப்போது ஸ்வாமி சோமதேவ் ராம்பிரசாத்தை கென்லாலால் தீக்ஷித் என்ற பள்ளி ஆசிரியரோடு தொடர்பு கொள்ள வலியுறுத்தினார். கென்லாலால் தீக்ஷித் சிவாஜி சமிதி என்ற இயக்கத்தை உருவாக்கி இளைஞர்கள் மனதில் தேசபக்திக் கனலை எரியவிடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  இருவரும் இணைந்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய போராளிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்தனர்.

தனது மைன்புரியின் உறுதிமொழி என்ற கவிதையோடு நாட்டுமக்களுக்கு ஒரு செய்தி என்ற துண்டறிக்கையைத் தயாரித்து ராம்பிரசாத்தும் கென்லாலால் தீக்ஷித்தும் விநியோகித்தனர். ஆயுதம் வாங்க பணம் வேண்டும், அந்தப் பணத்தை ஆங்கில அரசிடமே கொள்ளையடிப்பது என்று வீரர்கள் தீர்மானித்து, மூன்று முறை ஆங்கில ஆட்சியாளர்களின் கருவூலத்தைக் கொள்ளை அடித்தனர். டெல்லிக்கு ஆக்ராவிற்கும் நடுவே கொள்ளை அடிக்க முயற்சி செய்யும் போது காவல்துறையோடு பெரும் சண்டை நடந்தது. ராம்பிரசாத் யமுனா நதியில் குதித்தார். அவர் இறந்து விட்டார் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்க, நதியின் உள்ளே நீந்தித் தப்பித்தது ராம்பிரசாத் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். கென்டாலால் தீக்ஷித் ஆக்ரா கோட்டையில் சிறைவைக்கப் பட்டார். அவரும் சிறையில் இருந்து துணிகரமாகத் தப்பித்து தலைமறைவானார். மைன்புரி சதிவழக்கில் எல்லாக் குற்றவாளிகளும் விடுதலையானார். ராம்பிரசாத்தும் கென்லாலால் தீக்ஷித்தும் காணாமல் போய் விட்டார்கள் என்று நீதிபதி தீர்ப்பு எழுதினார்.

இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ராம்பிரசாத் பல்வேறு நூல்களை எழுதினார். வங்காள மொழியில் இருந்தும் ஆங்கில மொழியில் இருந்தும் புத்தகங்களை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்தார். ராம், பிஸ்மில், அக்யாத் என்று பல்வேறு புனைபெயர்களை அவர் பயன்படுத்தினார். மைன்புரி சதிவழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து ராம்பிரசாத் ஷாஜஹான்பூர் திரும்பினார். எந்த அரசு விரோத செயல்களிலும் தான் ஈடுபடமாட்டேன் என்று அவர் காவல்துறையிடம் உறுதிமொழி அளித்தார். அதை அரசும் நம்பவில்லை, ராம்பிரசாத்தும் உறுதிமொழிக்கு ஏற்ப நடக்கவேண்டும் என்று நினைக்கவில்லை.

1921ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராம்பிரசாத் தன் நண்பர்களோடு கலந்துகொண்டார். அந்த மாநாட்டில்தான் மௌலானா ஹஸ்ரத் மொஹைனி முன்மொழிந்த பூர்ண ஸ்வராஜ்யம் என்ற கோரிக்கை முதல் முதலாக நிறைவேற்றப்பட்டது. பூரண ஸ்வராஜ்யம் தேவையில்லை டொமினியன் அந்தஸ்து போதும் என்ற  காந்தியின் கருத்து  இளைஞர்களின் ஆவேசத்தின் முன் பயனில்லாமல் போனது. மாநாடு முடிந்து ஷாஜஹான்பூர் திரும்பிய ராம்பிரசாத் இளைஞர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். அஹிம்சை முறையில் விடுதலை அடைய முடியாது என்பது அவரின் எண்ணமாக இருந்தது.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். ஆனால் சவுரிசவுராவில் நடைபெற்ற வன்முறையால் நாடு இன்னும் அஹிம்சை முறைக்குத் தயாராகவில்லை என்று கூறி காந்தி இயக்கத்தை ஒத்தி வைத்தார். 1922 ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இளைஞர்கள் எதிர்ப்பையும் மீறி காந்தி தனது நிலையில் உறுதியாக இருந்தார்.  காந்தியின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து காங்கிரஸ் இயக்கத்தின் அந்த ஆண்டுத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பதவி விலகினார். சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு போன்றவர்கள் இணைந்து ஸ்வராஜ்ய கட்சியை உருவாக்கினார்கள். தேர்தலைச் சந்தித்து நேரடி அரசியலில் ஈடுபட ஸ்வராஜ்ய கட்சி முடிவு செய்தது. காந்தியின் அகிம்சை வழி பயன்தராது, ஆயுதம் தாங்கிய போராட்டம்தான் சரி என்று முடிவுக்கு இளைஞர்கள் வந்தனர்.

லாலா ஹர்தயாள் வழிகாட்ட, சச்சிந்திரநாத் சன்யால், ஜடுகோபால் முகர்ஜீ ஆகியோரின் உதவியோடு ராம்பிரசாத் புதிய இயக்கம் ஒன்றை உருவாக்க அதன் சட்டதிட்டங்களை வடிவமைத்தார். ஹிந்துஸ்தான் ரிபப்லிக் அசோசியேஷன் உருவானது. இதில் கிளைத்து எழுந்தவர்கள்தான் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத், ஜதின்தாஸ் போன்ற போராளிகள்.

ஆயுதம் வாங்க பணம் வேண்டும், பணம் திரட்டும் வழியோ ஏற்கனவே தெரியும். ஆங்கில அரசு பெரும் பணத்தை லக்னோ நகருக்கு கொண்டு செல்லும் தகவல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக்  கிடைத்தது. ககோரி பகுதியில் ரயிலை நிறுத்தி கஜானாவை கொள்ளை அடிக்க முடிவானது. மன்மதநாத் குப்தா, அஷ்பாகுல்லா கான் ஆகியோரின் துணையோடு பணம் கொள்ளையடிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு விடுதலை வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

புகழ்பெற்ற ககோரி சதிவழக்கு ஆரம்பமானது. சசீந்திரநாத் சன்யால், சசீந்திரநாத் பக்ஷி ஆகியோர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். மன்மதநாத் குப்தாவிற்கு பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை, என்று பலருக்கு சிறைத்தண்டனை வழங்கப் பட்டது. ராம்பிரசாத் பிஸ்மில், தாகூர் ரோஷன்சிங், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பாகுல்லா கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ச்சியான மேல்முறையீடுகளிலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ராம்பிரசாத் பிஸ்மில் கோரக்பூர் சிறையிலும், ரோஷன்சிங் பிரயாக்ராஜ் சிறையிலும் அஷ்பாகுல்லா கான் ஃபைஸாபாத் சிறையிலும் 1927ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் நாள் தூக்கிலிடப் பட்டார்கள். ராஜேந்திரநாத் லஹரி இரண்டுநாட்களுக்கு முன்பாக கோண்டா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

முப்பது ஆண்டுகளே வாழ்ந்த ராம்பிரசாத் பிஸ்மில் பாரத நாட்டில் வரலாற்றில் ஒளிவிடும் விண்மீனாக விளங்குகிறார். மகத்தான தியாகியின் நினைவுக்கு இன்று நாம் அஞ்சலி செலுத்துவோம்.

வெள்ளி, 6 ஜூன், 2025

ஜூன் 6 - மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் -

கன்னட மொழியின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். கன்னட மொழி படைப்புகளுக்காக ஞானபீட விருது பெற்ற மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் பிறந்த தினம் இன்று. அவரின் நினைவு தினமும் இன்றுதான். 

1891ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாள் கோலார் மாவட்டத்தில் ஒரு தமிழ் பேசும் ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் பிறந்தவர் வெங்கடேச ஐயங்கார். தனது இளமைக்காலத்தில் மாஸ்தி கிராமத்தில் கழித்த ஐயங்கார், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அன்றய மைசூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பணியில் வேலை பார்க்கத் தொடங்கிய ஐயங்கார் 1943 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். வேலை பார்க்கும் காலத்திலேயே ஸ்ரீனிவாஸ் என்ற புனைபெயரில் அவர் எழுதிக்கொண்டிருந்தார்


ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஐயங்கார் பின்னர் கன்னட மொழியில் எழுதலானார். இவர் எழுதிய முதல் நூல் ரங்கன மதுவே 1910ஆம் ஆண்டு வெளியானது. அதில் தொடங்கி 1985ஆம் ஆண்டு வரை  தத்துவங்கள், அழகியல், சமுதாயம் பற்றிய பல கவிதைகள், பல நாடகங்கள், மொழிபெயர்ப்பு என்று எழுத்தில் எல்லா தளங்களிலும் ஐயங்கார் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். இவரது கடைசி நூல் மாதுகரே ராமண்ணா 1985ஆம் ஆண்டு வெளியானது. மாஸ்தி எழுதிய  கேலவு சன்ன கேட்டகளு ( சில சிறுகதைகள் ) என்ற தொகுப்பு நவீன கன்னட இலக்கியத்தின் முக்கியமான படைப்பாகக் கொண்டாடப்படுகிறது.  கன்னட மொழியில் 123 புத்தகங்களும் ஆங்கிலத்தில் 17 புத்தகங்களும் இவரால் எழுதப்பட்டன. ஜீவனா என்ற மாத இதழின் ஆசிரியராகவும் மாஸ்தி இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். 

கர்நாடகத்தின் குடகு பகுதியை ஆண்ட கடைசி மன்னன் சிக்கவீர ராஜேந்திரன். கட்டுப்பாடற்ற வளர்ப்பினால் ஒரு அரசனுக்குரிய எந்த தகுதியையும் வளர்த்துக் கொள்ளாத மன்னன் இவன். தொடர்ந்து இவன் செய்த தவறுகளால் அரச குடும்பத்தினரும், மந்திரிகளும் மன்னனுக்கு எதிராகத் திரும்ப, ஆங்கிலேயர் வசம் குடகு அடிமைப்பட நேர்ந்தது. இந்தக் களத்தில் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் எழுதிய சிக்கவீர ராஜேந்திரன் என்ற புதினம் ஐயங்காருக்கு ஞானபீடப் பரிசைப் பெற்றுத் தந்தது. இந்த புதினத்தை ஐயங்கார் தனது 92ஆம் வயதில் எழுதினார். 

ஒழுங்கீனமும் பொறுப்பற்ற தன்மையும் சிக்கவீர ராஜேந்திரன் போன்ற பல மன்னர்களின் பழக்கமாக இருந்திருந்திருக்கலாம். அதனாலேயே ஆங்கில ஆட்சிக்கு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருந்திருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. பதவியை இழந்த ராஜேந்திரன் லண்டன் சென்று விக்டோரியா மஹாராணியைச் சந்தித்து தனது நாட்டை மீண்டும் ஒப்படைக்கக் கோருகிறான். தனது பெண்ணான கௌரியம்மாவை ராணியின் வசத்தில் அவன் ஒப்படைக்கிறான் அங்கே கிருத்துவ மதத்திற்கு மாற்றப்படும் ராஜகுமாரி, தன்னை விட முப்பது வயது மூத்த ஒரு ராணுவ அதிகாரியை மணந்து தனது இருபத்திமூன்றாம் வயதில் லண்டன் நகரிலேயே காலமாகிறார்.  

தனது 95ஆம் வயதில் காலமான மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் நினைவாக கர்நாடக அரசு கன்னட மொழி எழுத்தாளர்களுக்கான விருது வழங்கி சிறப்பிக்கிறது. இவர் வாழ்ந்த வீடு இவரது நினைவில்லமாக செயல்பட்டு வருகிறது. 

வியாழன், 5 ஜூன், 2025

ஜூன்- 5அரசாளும் துறவி யோகி ஆதித்யநாத் பிறந்ததினம்

நாடாளும் அரசர்கள் பற்றற்று துறவிகள் போல இருக்கவேண்டும் என்பது பாரத சித்தாந்தம். ஆனால் ஒரு துறவியே அரசாள்வது என்பது ஒரு புதிய பார்வை. அப்படி நாட்டின் மிகப்பெரும் மாநிலமான உத்திரப்பிரதேசத்தை ஆட்சி செய்யும் கோரக்பூர் மடத்தின் பீடாதிபதியான யோகி ஆத்யநாத் அவர்களின் பிறந்ததினம் இன்று.


உத்திரப்பிரதேச வனத்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த ஆனந்த்சிங் பிஷ்ட் என்பவரின் மகனாக 1972ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர் அஜய்மோகன் பிஷ்ட். ஆம் இதுதான் யோகியின் இயற்பெயர். நான்கு சகோதர்களும் மூன்று சகோதரிகளும் கொண்ட பெரிய குடும்பத்தின் இரண்டாவது மகன் யோகி. ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெட்ரா அஜய்மோகன் ராம்ஜன்மபூமி இயக்கத்தில் கலந்து கொண்டார். அப்போது கோரக்பூர் மடத்தின் அன்றய பீடாதிபதியாக மஹந்த் அவைத்யநாத் அவர்களின் சீடரானார். உலக வாழ்வைத் துறந்தது துறவியான அஜய்மோகனுக்கு ஆதித்யநாத் என்ற யோகபட்டம் அளிக்கப்பட்டது.

கோரக்பூர் மடத்தின் அதிபதிகள் பல்லாண்டுகளாகவே ராமஜன்ம பூமியை விடுவிக்கும் இயக்கத்தில் பெரும்பங்காற்றியவர்கள். அந்தப் பாதையை யோகி ஆதித்யனாத்தும் பின்தொடர்ந்தார். மஹந்த் அவைத்யநாத் மஹாசமாதி அடைந்த பிறகு யோகி கோரக்பூர் மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். கோரக்பூர் மடம் கல்வி நிலையங்கள் நடத்துவது, மருத்துவமனைகளை நடத்துவது போன்ற பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறது. உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் அந்த சமூகப் பணிகளை இன்னும் யோகி விரிவுபடுத்தினார்.

தீவிரமான ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட கோரக்பூர் மடாதிபதிகள் திக்விஜயநாத், அவைத்யநாத் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்திருக்கிறார்கள். யோகியும் தனது 26ஆம் வயதில் கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 1998ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஐந்து முறை தொடர்ச்சியாக அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக யோகி பணியாற்றினார். 16ஆவது நாடாளுமன்றத்தில் யோகி 77% கூட்டங்களில் கலந்து கொண்டு 284 கேள்விகளை எழுப்பி 56 விவாதங்களில் கலந்து கொண்டு தன் தொகுதியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி உள்ளார்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற உத்திரப்பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. பாஜக யோகி ஆதித்யநாத்தை உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக நியமித்தது. பல ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, வளர்ச்சிப் பணிகளில் பின்தங்கி இருந்த மாநிலத்தை மாற்ற யோகி பல்வேறு கடினமான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். சட்ட விரோதமாக நடைபெற்று வந்த இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டன. பல்வேறு சமூக விரோதிகள் இரும்புக்கரம் கொண்டு அடைக்கப்பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கல்வி மட்டும்தான் தொடர்ச்சியான மாறுதலைக் கொண்டு வரும் என்பதை முழுமையாக அறிந்த யோகி, கல்வித்துறையில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தார். மாநிலத்தில் உள்ள ஒருலட்சத்து அறுபதாயிரம் பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் காயகல்ப் திட்டம் அறிவிக்கப்பட்டது. சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், மின் இணைப்பு, புதிய வகுப்பறைகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை உருவாகும் திட்டம் இது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இவை முன்னெடுக்கப்பட்டது.  பல்வேறு அமைச்சர்களும் அதிகாரிகளும் எதிர்பாராத நேரங்களில் பள்ளிகளைப் பார்வையிட்டு போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். இதுவரை நாற்பத்தி ஆறாயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் எழுபதாயிரம் ஆசிரியர்களை நியமிக்கும் திட்டமும் உள்ளது. அதுபோல மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் வழிகளும் அதற்கான முன்னெடுக்களும் பெரும் அளவில் நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய்த்தோற்று உத்திரப்பிரதேசத்திற்கு புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் ஒரே நேரத்தில் அளித்துள்ளது. பாரதம் முழுவதும் பரவியுள்ள பல லட்சம் தொழிலார்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பெரும் பணி யோகியின் முன் உள்ளது. அதே நேரத்தில் சீனாவில் இருந்து வெளியேறும் யோசனையில் உள்ள பல்வேறு நிறுவனங்களை உத்திரப்பிரதேசத்திற்கு வரவழைக்கும் வாய்ப்பையும் இந்த நோய்தோற்று யோகிக்கு தந்துள்ளது. அதற்கான முயற்சியில் யோகி முழு மூச்சாக இயங்கிக்கொண்டு உள்ளார்.

உத்திரப்பிரதேசத்தை முன்னேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள யோகி ஆதித்யநாத் வெற்றி அடையட்டும் என்ற வாழ்த்துகளை ஒரே இந்தியா தளம் தெரிவித்துக்கொள்கிறது. 

புதன், 4 ஜூன், 2025

ஜூன் 4 - மைசூர் மஹாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையார் பிறந்ததினம்

கர்நாடக மாநிலத்தின் இன்றய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்ட பெருமைக்குரியவர் மைசூர் ராஜ்யத்தைஆண்ட கிருஷ்ணராஜ உடையாரே ஆவார். 1884ஆம் ஆண்டு மஹாராஜா சம்மராஜேந்திர உடையாரின் முதல் மகனாகப் பிறந்தார். இவரது சிறு வயதிலேயே இவர் தந்தை மரணமடைந்தால் இவரின் தாயார் கிருஷ்ணராஜ உடையாரின் பிரதிநிதியாக ஆட்சி செய்துவந்தார். 1902ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் கிருஷ்ணராஜ உடையார் அரியணை ஏறினார்.

ஆங்கிலம், கன்னடம் மற்றும் சமிஸ்க்ரித மொழிகளில் பயிற்சி, குதிரையேற்றம், நீதி வழங்குதல், அரசாட்சி செய்யும் முறை, இந்திய மற்றும் மேல்நாட்டு கலைகளில் தேர்ச்சி என்று நாடாளும் மன்னருக்கு தேவையான பயிற்சிகள் அவருக்கு வழங்கப்பட்டது.
மஹாராஜா கிருஷ்ணராஜ உடையார் இந்திய வரலாற்றில் ஜனகரைப் போல ராஜரிஷியாக அசோகரைப் போல பொது மக்களின் மனத்தைக் கவர்ந்த அரசராக விளங்கினார். மிகப்பெரும் உள்கட்டுமானப் ணிகள் இவர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

காசியில் உள்ள ஹிந்து சர்வகலாசாலையின் முதலாம் வேந்தராகவும், மைசூர் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் ராஜா செயல்பட்டார். ஒரு இந்திய அரசால் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமை மைசூர்  பல்கலைக்கழத்திற்கு உண்டு.


தீண்டாமையை ஒரு தண்டனைக்குரிய குற்றம் என்று ராஜா பிரகடனம் செய்தார். சிறுவயது திருமணத்தை தடை செய்தார். விதவையான பெண்களின் கல்விக்காக உதவித்தொகை அளித்தார். தனது சொந்தப் பணத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு அறுபதாயிரம் ரூபாய் அளவிற்கு மாற்றுத் திறனாளி குழைந்தைகள் கல்விக்காக ஒதுக்கீடு செய்தார். கல்வி நிலையங்களில் 25% இட ஒதுக்கீடு அளித்தார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெண்கள் வாக்களிக்கும் உரிமையை வழங்கினார். இவரது காலத்தில் 1927ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் படி மைசூர் சமஸ்தானத்தில் 8000 பள்ளிகளில் ஏறத்தாழ 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வந்தனர். அரசு நாற்பத்தி ஆறு லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்தது.

ஆரம்பக்கல்வியை ராஜா கட்டாயமாக்கினார், அதனை இலவசமாகவும் அளித்தார். எல்லா பள்ளிகளிலும் பட்டியல் இன மாணவர்களை சேர்க்க உத்தரவிட்டார். மைசூர் விவசாய பல்கலைக்கழகம், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் ஆகிவை இவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

புகழ்பெற்ற பொறியாளர் விஸ்வேஸ்வரய்யாவை தனது திவானாக ( பிரதம மந்திரியாக ) நியமித்தார். சிவசமுத்திரம் நீர்மின்நிலையம், ஆசியாவில் முதல்முறையாக பெங்களூரு நகர் முழுவதும் மின்சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள் என்று பல்வேறு திட்டங்களை உருவாக்கினார்.

காவேரி நதியின் குறுக்கே அணை கட்டி, விவசாய நிலங்களை பெருக்கினார். அந்த அணை கிருஷ்ணராஜ சாகர் என்று அழைக்கப் படுகிறது. பெங்களூர் நகரில் மிகப் பெரும் பரப்பளவிலான நிலத்தை ஜெ ஆர் டி டாட்டாவிற்கு அளித்தார். அந்த இடத்தில்தான் இந்திய அறிவியல் கழகம் ( Indian Institute of Science ) செயல்பட்டு வருகிறது.

ராஜா கிருஷ்ணராஜ உடையார் வயலின், புல்லாங்குழல், வீணை, சித்தார், போன்ற பல இசைக்கருவிகள் வாசிப்பதில் நிபுணராக விளங்கினார். பல்வேறு கலைஞர்களை ஆதரித்தார். சுருக்கமாக சொல்வது என்றால் அவரது ஆட்சிக்காலம் மைசூர் ராஜ்யத்தின் பொற்காலம் என்று கூறலாம். இதன் காரணமாக காந்தி ராஜா கிருஷ்ணராஜ உடையாரை ராஜரிஷி என்று புகழ்ந்து கூறினார்.


அரசாட்சி செய்த மன்னர்களில் காலம் கடந்தும் மக்களால் நினைக்கப்படவேண்டும் என்றால் கிருஷ்ணராஜ உடையாரைப் போல மக்களின் நலனுக்காக பாடுபடவேண்டும்.  

செவ்வாய், 3 ஜூன், 2025

ஜூன் 3 - போராளியாகவே வாழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தநாள்

போராட்டகுணம் கொண்ட தொழில்சங்கவாதி, ஜனநாயகத்தைக் காக்க இந்திராவை எதிர்த்து நின்ற வீரர், சிறந்த பாராளுமன்றவாதி, மத்திய அமைச்சர், எழுத்தாளர், பல மொழி விற்பன்னர், பத்திரிகையாளர் என்ற பன்முக பரிமாணம் கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தநாள் இன்று.

மங்களூரில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் கிருத்துவ இறையியல் படிப்பதற்காக பெங்களூரு வந்தார். ஆனால் அதில் சலிப்புற்று மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கே சோசியலிச சித்தாந்தவாதியாக மாறி, ரயில்வேதுறை தொழிலார்களின் தலைவராக உருவானார். ராம்மனோஹர் லோகியாவின் சீடராக, சோஷலிச கொள்கைகளை முன்னெடுப்பவராக மாறினார். மும்பை மாநகராட்சியின் உறுப்பினனராக 1961 முதல் செயல்பட்டார்.

இன்றுபோல் அன்றும் பொருளாதாரத்தில் முன்னேறவேண்டும் என்ற முனைப்போடு உள்ள மக்களை ஈர்த்துக்கொண்டு இருந்தது. அந்த நகரத்தில் குடியிருக்கும் அமைப்புசாரா மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அப்போது ஜார்ஜ் வடிவமைத்தார்.
ரயில்வே துறை தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி சார்பாக தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1975ஆம் ஆண்டுஇந்தியாவில் எல்லா ஜனநாயக முறைகளையும் இல்லாமலாக்கி இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். சர்வாதிகாரத்தை எதிர்த்து ஆயுதம் தாங்கிய புரட்சியை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டார். பரோடா ரயில்பாலத்தை வெடிவைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் கொல்கத்தா நகரில் கைது செய்யப்பட்டார்.

1977ஆம் ஆண்டு நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து நடைபெற்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் அமைந்த ஜனதா கட்சியின் ஆட்சியில் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். குறுகிய காலத்தில் ஜனதா ஆட்சி கலைய, மீண்டும் இந்திரா பிரதமரானார்.
1989ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் வி பி சிங் தலைமையில் அமைந்த ஜனதாதள் அரசில் ரயில்வேத்துறை மந்திரியாகப் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில்தான் கொங்கன் ரயில்வே திட்டம் தொடங்கப்பட்டது.

சமதா கட்சியின் நிறுவனரான 1996ஆம் ஆண்டு முதல் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய உறவில் இருந்தார். வாஜ்பாய் அரசில் ராணுவ அமைச்சராகப் பணியாற்றினார். இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதும், கார்கில் யுத்தத்தில் வெற்றி பெற்றதும் இந்த காலகட்டத்தில்தான்.
கார்கில் போரில் இறந்த வீரர்களின் உடலை கொண்டுசெல்லும் சவப்பெட்டியில் வாங்கியதில் ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை இவர் மீது சுமத்தியது. ஆனால் விசாரணை முடிவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டார்.

கொங்கணி, துளு, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், மலையாளம், உருது, லத்தின் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1967 முதல் 2004 வரை ஒன்பது முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.


உடல்நலம் சரியில்லாது இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் 2019ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் நாள் காலமானார்.  

திங்கள், 2 ஜூன், 2025

ஜூன் 2 - இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நிலகேனி பிறந்தநாள்

இன்போசிஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் இந்தியாவின் குடிமக்கள் பற்றிய முழு தகவல்களை சேகரிக்கும் ஆதார் கார்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய திரு நந்தன் நிலகேனி அவர்களின் பிறந்தநாள் இன்று.

கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த திரு நந்தன் தனது ஆரம்ப கல்வியை தார்வாட் நகரிலும் தனது பொறியியல் கல்வியை மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விநிலையத்திலும் ( IIT Bombay ) முடித்தார். தனது தொழில்வாழ்வை மும்பையில் உள்ள பாட்னி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தொடங்கிய திரு நந்தன் பிறகு அதே நிறுவனத்தில் பணி புரிந்த நாராயணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், ராகவன், தினேஷ், அசோக் அரோரா மற்றும் ஷிபுலால் ஆகியோருடன் இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார். இன்று இந்திய நாட்டை கணினி மென்பொருள் துறையில் உலகத்தின் முக்கிபற்றிய முக்கியமான நாடாக மாற்றியதும், பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்ததன் மூலம் பெரும் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைந்தது இன்போசிஸ் நிறுவனம்.

இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நந்தன் பணியாற்றினார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய மக்களைப் பற்றிய முழு தகவல்களைத் தொகுக்கும் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மத்திய மந்திரிக்கு இணையான பதவி இது. இந்த ஆணையத்தின் முயற்சிதான் இன்று நாடுமுழுவதும் பொதுமக்களுக்கான அடையாள அட்டையாக விளங்கும் ஆதார் அட்டையாகும். இதன்படிதான் பல்வேறு பொருளாதார பலன்கள் தேவைப்படும் தகுதியான மக்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்டார். ஏழாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதாகக் கூறி அந்தத் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெரும் பணக்கார வேட்பாளராக அறியப்பட்டார். ஆனால் அந்த தேர்தலில் நந்தன் வெற்றிபெறவில்லை.

பல்வேறு தொழில்நுட்ப தொடக்கநிலை நிறுவனங்களில் நந்தன் முதலீடு செய்து அவர்களுக்கு வழிகாட்டியாகும் இருந்துவருகிறார். தனது சொத்தில் சரிபாதி அளவை சமுதாயப் பணிகளுக்கு அளிக்கவும் நந்தன் உறுதி ஏற்றுள்ளார்.


சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து தனது படிப்பின் மூலமும் அயராத உழைப்பின் மூலமும் மிகப்பெரும் உயரங்களை நந்தனின் வாழ்க்கை இந்திய இளைஞர்களுக்கு ஒரு உந்துகோலாக ஐயமில்லை. 

சனி, 31 மே, 2025

மே 31 - ராஜமாதா மஹாராணி அஹல்யாபாய் ஹோல்கர் பிறந்தநாள்

மெக்காலே முறையில் கல்வி கற்றவர்களால் இந்தியாவில் பெண்களும் அரசாட்சி செய்திருக்கிறார்கள், ஆயுதம் ஏந்தி நாட்டைக் காக்க போராடியிருக்கிறார்கள், மக்களின் குறைகளைத் தீர்த்திருக்கிறார்கள் என்பதை நம்பமுடியாது, ஏனென்றால் நமது உண்மையான வரலாற்றை அறிந்துகொண்டால் அவர்களுக்கு தாங்கள் பாரதீயர்கள் என்று பெருமிதம் வந்துவிடும், அப்படி இல்லாத மக்களை உருவாக்குவதே தங்களுக்கு நலம் பயக்கும் என்று உருவானதுதான் ஆங்கிலேயர்கள் வகுத்த பாடத் திட்டம். அடிமை விலங்கை உடைத்தெறிந்து எழுவது ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அதனை மாற்றி நமது உண்மையான வரலாற்றை எழுதாமல் இருப்பது நமது வரலாற்று சோகம்.

அஹல்யாபாய் அரச குடும்பத்தில் பிறவாதவர். அவர் தந்தை மன்கோஜி ஷிண்டே ஒரு கிராமத்தின் தலைவராக மஹாராஷ்டிரா பேஷ்வாக்களின் கீழ் பணியாற்றிவந்தார். வீட்டில் வைத்தே அஹல்யாபாய் கல்வி கற்றார்.
இன்றய மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் தென் கிழக்கு பகுதிகள் உள்ளடங்கிய மால்வா பகுதியின் அரசரும் பேஷ்வாக்களின் தளபதியுமான மால்ஹர் ராவ் ஹோல்கர் ராவ் ஹோல்கர் கண்களில் அஹல்யாபாய் பட, அஹல்யாவின் கருணையையும் நடவடிக்கைகளையும் கண்ட மால்ஹர் அஹல்யாவை தனது மகன் காந்தேராவுக்கு மணம் முடிக்கிறார். அப்போது அஹல்யா மிகவும் சிறு பெண்.

1754ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பேர் யுத்தத்தில் கந்தராவ் மரணமடைகிறார். அப்போது கணவனோடு தானும் இறந்துவிடலாம் என்று நினைக்கும் அஹல்யாவின் மனதை அவர் மாமனார் மால்ஹர் ராவ் மாற்றி அவரை நாடாளுவதற்கு பயிற்சி அளிக்கிறார். 1766ஆம் ஆண்டு மால்ஹர் ராவும் இயற்கை எய்தி விட, அஹல்யாவின் மகன் மாலே ராவ் மன்னனாகிறார். ஆனாலும் துரதிர்ஷ்டம் அஹல்யாவை துரத்துகிறது. அவரது மகனும் ஒரே வருடத்தில் இறந்து போகிறார்.

அடுக்கடுக்கான துயரங்கள் சாதாரண மனிதர்களை நிலைகுலைய வைத்துவிடும். ஆனால் வரலாற்றில் இடம் பெரும் நாயகர்கள் சொந்த சோகங்களை கடந்து சென்று விடுவார்கள். மஹாராணி அஹல்யாபாயும் தனது சோகங்களை கடந்து சென்றார். மராட்டியத்தை ஆண்டு கொண்டு இருந்த பேஷ்வாக்களின் ஒப்புதலோடு அரசுப் பொறுப்பை ஏற்றார். ஹோல்கர் வீரர்கள் அவர்பின் அணிவகுத்தனர். திறமைவாய்ந்த துக்கோஜி ஹோல்கரை படைத்தளபதியாக நியமித்து, திறம்பட ஆட்சி செய்தார்.
மஹாராணியே ஒரு சிறந்த போர்வீரரும் ஆவார். அவரது பட்டத்து யானையின் அம்பாரியின் நான்கு புறமும் பொருத்தப்பட்ட அம்பராத்தூளியோடு யானை மீதேறி கையில் வில்லோடு போர்க்களம் புகும் ராணியை மக்கள் துர்க்கையின் வடிவமாகவே பார்த்தனர். தனது அரசின் எல்லைகளைக் காப்பதிலும், படையெடுத்து வரும் அரசர்களை தோற்கடிப்பதிலும் ராணி அஹல்யாபாய் வெற்றியை மட்டுமே கண்டார்.

ஏறத்தாழ முப்பதாண்டு காலம் ஆட்சி செய்த ராணி, மக்களின் குறைகளை தீர்த்து வைத்தார். நாடெங்கும் சாலைகள் அமைத்தல், ஆங்காங்கே வழிப்போக்கர்கள் தங்க சத்திரம் அமைத்தல், கலைஞர்களை ஆதரித்தல், தினம் தினம் தர்பாரில் அமர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்கான நிவாரணத்தை அளித்தல் என்று மக்களால் விரும்பப்படும் ஆட்சியை அளித்தார். கணவன் இறந்த பிறகு விதவையான மனைவி கணவனின் சொத்துக்கு உரிமையாளர் ஆகிறார் என்றும் கணவன் இறந்த பிறகு தத்தெடுக்கும் உரிமை மனைவிக்கு உண்டு என்று சட்டம் இயற்றினார்.

இன்றய இந்தோர் நகரம் என்பது அவராலேயே விரிவாக்கப்பட்டது. அதுபோக இந்தியாவெங்கும் கோவில்களை திருப்பணி செய்து விரிவாக்கியது அவரது முயற்சியால்தான். தற்போதுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், சோம்நாத்தில் உள்ள ஆலயம், கயாவில் உள்ள ஆலயம் மற்றும் கேதார்நாத், ப்ரயாக், குருஷேத்திரம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களை புதுப்பித்து, விரிவாக்கம் செய்து அவைகளுக்கு பல்வேறு மானியங்களை அவர் வழங்கினார்.
முப்பதாண்டு காலம் ஆட்சி நடத்திய மஹாராணி தனது எழுபதாவது வயத்தில் காலமானார். இந்தோர் விமானநிலையம் மற்றும் இந்தோர் பல்கலைக்கழகம் இன்று மஹாராணி அஹல்யாபாய் பெயராலே அழைக்கப்படுகிறது.

பாரத தாய்க்கு எத்தனையோ புகழ்வாய்ந்த மகள்கள், அவர்கள் அத்தனை பேருக்கும் எங்கள் வணக்கம்  

வெள்ளி, 30 மே, 2025

மே 30 - குரு அர்ஜன்சிங் பலிதான தினம்


சீக்கியர்களின் ஐந்தாவது குருவும் தர்மத்திற்காக பலியான முதல் குருவுமான குரு அர்ஜன்சிங் அவர்களின் பலிதான தினம் இன்று. சீக்கியர்களின் மத நம்பிக்கைப்படி அவர்கள் குரு பரம்பரை குரு நானக்கில் தொடங்கி குரு கோவிந்த் சிம்மன் வரை பத்து குருக்களும் அதன் பிறகு குரு கிரந்த சாஹப் புத்தகம் குருவாகவும் மதித்து வணங்கப்படுகிறது.

அந்த குருபரம்பரையின் ஐந்தாவது குரு அர்ஜன் சிங். அவர் சீக்கியர்களின் நான்காவது குருவான குரு ராமதாஸின் இளைய மகனாக 1563ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் நாள் பிறந்தார். இவரது தாயார் மூன்றாவது குருவான குரு அமர்தாஸின் மகள். குரு ராமதாஸின் மறைவிற்குப் பிறகு 1581ஆம் ஆண்டு குரு அர்ஜன்சிங் சீக்கியர்களின் குருவாக நியமிக்கப்பட்டார்.

இவரது வழிகாட்டலில் பல்வேறு மக்கள் சீக்கிய மதத்தில் இணைந்தனர். சொல்லப்போனால் அன்று அது ஒரு தனி மதமாகவே இல்லை. அது ஹிந்து மதத்தின் ஒரு பிரிவாகவே இருந்தது. குரு அர்ஜன்சிங்கின் பெருமை வடநாடு முழுவதும் பரவியது.

குரு அர்ஜன்சிங் சீக்கிய மத பாடல்களைத் தொகுத்தார், அது ஆதி கிரந்தம் என்று அழைக்கப்பட்டது. அந்த நூலின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமே குரு கிரந்த சாஹப் என்று இன்று அழைக்கப்படுகிறது. அமிர்தஸர் நகரில் உள்ள தர்பார் சாஹப் என்று அழைக்கப்படும் பொற்கோவிலின் ஆரம்ப வடிவம் இவராலே உருவாக்கப்பட்டது.

மசந்த் எனப்படும் சீக்கிய குருக்களின் நேரடி பிரதிநிதிகளின் நியமனத்தை குரு அர்ஜன்சிங் ஒழுங்கு படுத்தினார். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் சீக்கியர்களின் நன்கொடைகளை வசூலித்து அதனைக் கொண்டு புது குருத்துவாராக்களை உருவாக்கவும், லங்கர் என்னும் உணவு வழங்கும் நிறுவனங்களை அவர்களே நிர்வகித்தனர். சீக்கியர்கள் தங்கள் வருமானத்தில் பத்து சதவிகிதத்தை வறியவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று குரு அர்ஜன் வலியுறுத்தினார்.

சீக்கியர்கள் ஒரு வலிமையான குழுவாக உருவானது முகலாய மன்னர் ஜஹாங்கீரின் கண்ணை உறுத்தியது. அவர் குரு அர்ஜன்சிங்கை கைது செய்து, அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு கூறினார். அதனை குரு சந்தேகமே இல்லாமல் நிராகரித்தார்.

அதனால் முகலாய மன்னர் ஜஹாங்கீரின் ஆணையின்படி குரு அர்ஜன்சிங் சித்திரவதைக்கு உள்ளானார். கொதிக்கக் காச்சிய இரும்பு தகட்டில் அமரவைக்கப்பட்டு, மணலை சூடாக்கி அவர் மீது கொட்டி, பின்னர் கொதிக்கும் தண்ணீரை அவர்மீது கொட்டப்பட்டது. 1606ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் நாள் ராவி நதியில் குளிக்கச் சென்ற குரு அர்ஜன்சிங் நதியில் முங்கி தனது உயிரை தியாகம் செய்தார்.

அவருக்கு பின் அவரது மகன் குரு ஹர்கோபிந்த் சீக்கியர்களின் ஆறாவது குருவாக நியமிக்கப்பட்டார். குரு அர்ஜன்சிங்கின் பலிதானதால் சீக்கியர்கள் போராட்ட குணம் கொண்ட பிரிவாக உருவானார்கள்.

இந்த நாட்டின் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக உயிர் கொடுத்த தியாகிகளின் தியாகத்தை மனதில் நிறுத்துவோம். தர்மத்தை காக்க நமது பங்களிப்பை அளிப்போம்.

வியாழன், 29 மே, 2025

மே 29 - முன்னாள் பிரதமர் சரண்சிங் நினைவு தினம்


விடுதலைப் போராட்ட வீரரும், உத்தரபிரதேசத்தில் நெடுங்காலம் அமைச்சராகவும், காங்கிரஸ் அல்லாத கட்சியின் சார்பாக முதல்முதலில் முதல்வராகவும், இந்திய நாட்டின் மிகக் கூறிய கால பிரதமராகவும், வட இந்திய விவசாயிகளின் தன்னிகரில்லா தலைவராகவும் விளங்கிய சவுத்திரி சரண்சிங் நினைவுதினம் இன்று.

ஹரியானவைச் சார்ந்த முதல் விடுதலைப் போரின் முன்னணி தலைவராக இருந்த பாலாபாக் அரசர் ராஜா நாகர்சிங் பரம்பரையில் பிறந்தவர் சரண்சிங் அவர்கள். விடுதலைப் புரட்சியின் முடிவில் ராஜா நாகர்சிங் ஆங்கில அரசால் மரணதண்டனை விதிக்கப்பட, அவர் குடும்பம் ஹரியானாவில் இருந்து உத்திரபிரதேசத்திற்கு குடி பெயர்ந்தது. அந்தப் பரம்பரையில் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் சரண்சிங் பிறந்தார்.
அறிவியலில் முதுகலைபட்டமும், சட்டப் படிப்பும் முடித்த சரண்சிங் கசியாபாத் நகரில் தனது வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். தனது 34ஆவது வயதில் உத்திரபிரதேச சட்டசபைக்கு தேர்வானார்.
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறை தண்டனை அனுபவித்தார்.

1937, 1946, 1952, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார். இந்த காலகட்டங்களில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். முதல் முறை தேர்வானபோதே விவசாயிகளின் நலன்களை காக்கும் பல்வேறு திட்டங்கள் உருவாக வாதாடினார். அவைகளில் பலவற்றை இன்று பல்வேறு மாநிலங்கள் சட்டமாக்கி உள்ளது.

இந்திய மனப்பான்மைக்கு சோவியத் வழிமுறையிலான கூட்டு விவசாயம் சரிவராது, விவசாய நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமை என்பது அவர்களின் சுயமதிப்பு சார்ந்தது என்று நேரு முன்வைத்த கூட்டு விவசாய முறையை எதிர்த்துப் பேசியதால் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

பின்னர் தனிக் கட்சியை உருவாக்கி உத்திர பிரதேச முதல்வராக தேர்வானார். காங்கிரஸ் கட்சி அல்லாத முதலாவது முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சரண்சிங், பல்வேறு பதவிகளில் இருந்தாலும் ஊழலை ஏற்றுக்கொள்ளாத, உறுதியான, அரசு செலவழித்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சரியானபடி விளக்கம் கேட்கும் நேர்மையாளராக இருந்தார்.
இந்திரா கொண்டுவந்த நெருக்கடி நிலையின் போது பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களோடு சரண்சிங்கும் கைதானார். அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் உருவான ஜனதா கட்சி அரசில் உதவிப் பிரதமராக பதவி வகித்தார்.

உள்கட்சி பூசலால் மொரார்ஜி தேசாய் பதவி விலகியபோது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அவருக்கான ஆதரவை இந்திரா விலக்கிக் கொள்ள சரண்சிங் பதவி விலகினார்.

1985ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சரண்சிங் 1987ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் காலமானார்.

லக்னோ விமான நிலையம், மீரட் பல்கலைக்கழகம் ஆகியவைகளுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இவரது பிறந்த தினம் விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

புதன், 28 மே, 2025

மே 28 - N T ராமாராவ் பிறந்ததினம்

 அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தங்கள் பதின்பருமத்தில் இருந்தவர்களின் நோக்கில் மஹாவிஷ்ணு எப்படி இருப்பார் என்று கேட்டால் அநேகமாக என் டி ராமாராவ் போல இருப்பார் என்றுதான் பதில் வரும். தென்னக திரைப்பட உலகத்தின் மிக முக்கியமான நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான நந்தமுனி தாரக ராமராவ் என்ற என் டி ராமராவ் அவர்களின் பிறந்தநாள் இன்று.   

1925ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் ஒருங்கிணைந்த மதராஸ் ராஜதானியின் பகுதியான குண்டூர் மாவட்டத்தில் நந்தமுனி லக்ஷ்மண சவுத்ரி - வேங்கட ராமண்ணா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் திரு ராமராவ். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராமாராவை குழந்தை இல்லாத அவரது மாமா வளர்த்து வந்தார். முதலில் தனது கிராமத்திலும், பின்னர் விஜயவாடாவிலும், பின்னர் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஆந்திர கிருஸ்துவக் கல்லூரியிலும் படித்தார்.  1947ஆம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்த ராமராவ் மிகக் குறுகிய காலத்திலேயே அந்த வேலையை ராஜினாமா செய்து திரைப்படங்களில் வாய்ப்பு தேடத் தொடங்கினார். 

1949ஆம் ஆண்டு வெளியான மானதேசம் என்ற தெலுங்குப் படத்தில் இவர் அறிமுகமானார். பாதாளபைரவி என்ற இருமொழிப் படத்தின் மூலம் தெலுங்கு தமிழ் ஆகிய ரசிகர்களிடம் ராமராவ் பிரபலமானார். மாயாபஜார், கர்ணன் உள்ளிட்ட பதினேழு திரைப்படங்களில் ராமராவ் கிருஷ்ணர் வேஷம் ஏற்று நடித்தார். புராணப் படங்களைத் தொடர்ந்து சமுதாயத்தைப் பற்றிச் சித்தரிக்கும் படங்கள் வெளியாகத் தொடங்கியது. அதில் கோபமுள்ள உலகத்தை மாற்றும் சிந்தனையுள்ள இளைஞன் வேடத்தில் அவர் நடிக்கத் தொடங்கினார். திரைக்கதை எழுதுவது, திரைப்படங்களை தயாரிப்பது என்று திரையுலகத்தின் பல்வேறு தளங்களிலும் அவர் இயங்கிக்கொண்டு இருந்தார். 

1980 முதல் 1982ஆம் ஆண்டுக்குள் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் நான்கு முதலமைச்சர்களை எந்தவிதமான காரணமும் இன்றி மாற்றியது. அப்போது ஆந்திராவின் மானத்தைக் காப்பாற்றுவோம் என்ற முழக்கத்தோடு ராமாராவ் தெலுங்கு தேசம் என்ற கட்சியை 1982ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்று ஆந்திராவின் காங்கிரஸ் அல்லாத முதல் அரசை அமைத்தார்.  முதன்முதலில் அரசியல் பிரச்சாரத்திற்கு ரதம் போல மாற்றப்பட்ட வண்டிகளில் பயணம் செய்தது ராமாராவ்தான். பெரும் கூட்டங்களுக்குப் பதிலாக சாலையோரத்தில் எங்கேயும் நிறுத்தி சிறு கூட்டங்களில் பேசும் அவரது பாணி பாரத நாட்டின் அரசியல் பிரச்சாரத்தில் ஒரு புது பாணியாக உருவானது. 

1984ஆம் ஆண்டு இதய அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது, அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. உடனடியாக நாடு திரும்பிய ராமராவ் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து பெரும் போராட்டத்தைத் தொடங்கி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். 

1984ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் பொதுத் தேர்தலில் இந்திரா காந்தியின் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையையும் மீறி ஆந்திராவில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி விளங்கியது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான தேசிய முன்னணியை நிறுவ காரணமாக இருந்தார்.   

தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் அவரின் சுயசரித்திரத்தை எழுத முன்வந்த லட்சுமி பார்வதி என்ற பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்த ராமராவ் அவரை மணந்து கொண்டார். இந்தத் திருமணம் அவர் குடும்பத்திலும், கட்சியிலும் பிளவை உருவாக்கியது. 

1994ஆம் ஆண்டு மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற இவரின் ஆட்சி ஒரு வருடத்திற்குள் இவரது மருமகனான சந்திரபாபு நாயுடுவால் பறிபோனது. 1996ஆம் ஆண்டு தனது 72ஆம் வயதில் இவர் காலமானார். 

திரைத்துறையிலும் அதனைத் தொடர்ந்து அரசியலிலும் தனி முத்திரையைப் பதித்த திரு ராமாராவின் நினைவுக்கு ஒரே இந்தியா தளம் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. 

செவ்வாய், 27 மே, 2025

27 மே - பாஜக முன்னணி தலைவர் நிதின் கட்கரி பிறந்தநாள்


பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு நிதின் கட்கரியின் பிறந்தநாள் இன்று. மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரைச் சார்ந்த கட்கரி, இளவயது முதலே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். பாரதீய ஜனதாவின் இளைஞர் பிரிவிலும், அகில பாரத வித்யார்த்தி பரீட்சித்திலும் பணியாற்றியவர். இவர் வணிகவியல் துறையில் முதுகலை பட்டமும் சட்டமும் பயின்றவர்.

மிகச் சிறுவயதிலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால், தனது முப்பத்திரண்டாவது வயதிலேயே மஹாராஷ்டிரா மாநில மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1990, 1996, 2002 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மஹாராஷ்டிரா மேலவை உறுப்பினராகத் தேர்வானார். மஹாராஷ்டிரா மாநில மேலவையில் எதிர்கட்சித் தலைவராகவும், பாஜகவின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.

1995ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு சாலைப்பணிகளை மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டன. அவற்றில் முக்கியமானது மும்பை - பூனா நகரை இணைக்கும் அதிவிரைவு சாலை. உள்கட்டுமானப் பணிகளில் தனியார் பங்களிப்பை உறுதி செய்து தனியார்களையும் முதலீடு செய்யவைத்தது அவரின் செயல்பாடாக இருந்துவந்தது.

2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பாஜகவின் தேசிய தலைவராகவும் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில்தான் மோதியை பிரதமர் வேட்பாளராக கட்சி அறிவித்தது. பாஜகவிற்கு அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை இழந்த காலகட்டத்தில் கட்சியை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் பொறுப்பு அவர்மீது சுமத்தப்பட்டது. அதனை கட்கரி திறமையாக கையாண்டார்.

2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் நாக்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார். 2014ஆம் ஆண்டு உருவான மோதி தலைமையிலான பாஜக அரசின் மிக முக்கியமான துறைகளை நிர்வகித்து வந்தார். தேசிய நெடுஞ்சாலைத்துறைகளின் அமைச்சராக 2014 - 2019 பணியாற்றிய போது நாளொன்றுக்கு பதினாறு கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.

பாஜக அரசின் சாதனைகளில் முக்கியமான ஒன்றான உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் கட்கரியின் பங்கு மகத்தானது. தற்போது கோதாவரி நதியை தமிழகத்திற்கு கொண்டுவரும் பிரமாண்டமான திட்டத்தின் மூலம் தமிழகத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம் என்று கட்கரி அறிவித்துள்ளார்.

மீண்டும் அமையவிருக்கும் பாஜவின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்க இருக்கும் திரு கட்கரிக்கு நமது நல்வாழ்த்துகள். 

திங்கள், 26 மே, 2025

மே 26 - ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை - நினைவு தினம்

பாரதநாட்டின் விடுதலைக்காக நாட்டின் உள்ளிருந்து போராடியவர்கள் ஒருபுறம் என்றால், அதற்காக வெளிநாட்டில் இருந்து முயற்சி செய்தவர்கள் மறுபுறம். அகிம்சை வழியில் பாடுபட்டவர்கள் ஒருபக்கம், ஆயுதம் ஏந்தி பாடுபட்டவர்கள் ஒருபுறம். அப்படி வெளிநாட்டில் இருந்து ஆயுதம் ஏந்தி போராடிய வீரர்களில் முக்கியமானவர் செண்பகராமன் பிள்ளை. தமிழகத்தைச் சார்ந்த இவரின் வாழ்க்கை சாகசங்களும், அதிரடிகளும், எதிர்பாரா திருப்புமுனைகளும், வியப்பும் கொண்டது.

திருவனந்தபுரத்தில் வசித்து வந்த சின்னசாமி பிள்ளை - நாகம்மாள் தம்பதியரின் மகன் இவர். பள்ளிப்பருவத்திலேயே ஸ்ரீ பாரதமாதா வாலிபர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி தனது தேசபக்தியை வெளிக்காட்டியவர் பிள்ளை. ஜெய் ஹிந்த் என்ற போர் முழக்கத்தை முதலில் பயன்படுத்தி, அதனை பிரபலப்படுத்தியதால் இவரை ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை என்று மக்கள் அழைத்தார்கள்.

அந்தக் காலகட்டத்திலேயே இத்தாலி, சுவிட்ச்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கல்வி பயின்று பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் செண்பகராமன் பிள்ளை. அந்தக் காலத்தில் பாரத நாட்டு விடுதலைக்காக இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் பல போராளிகள் இயங்கிக்கொண்டு இருந்தார்கள். ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அரசர் மற்றும் ரஷிய அரசோடு இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கவேண்டும் என்று பலர் முயற்சி செய்து கொண்டு இருந்த காலம் அது. 

1914ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் நாள் - ஆஸ்திரிய நாட்டு இளவரசரும் அவர் மனைவியும் செர்பியாவைச் சேர்ந்த ஒரு இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆஸ்ட்ரியா செர்பியாமீது படையெடுத்தது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் எதோ ஒரு அணியில் இணைய முதல் உலகப் போராக சண்டை மாறியது. பல நாடுகளின் எல்லைக்கோடுகள் மாற்றியமைக்கப் பட்டன. ஏற்கனவே ஜெர்மனியில் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் என்ற அமைப்பை செண்பகராமன் பிள்ளை நடத்திவந்தார். அமெரிக்காவிலும் கனடாவிலும் இருந்த கதர் இயக்கத்தினரோடு இணைந்து ஜெர்மனியின் உதவியோடு ஆயுதங்களை பாரத நாட்டுக்கு கடத்தி, அங்கே பெரும் ராணுவப் புரட்சியை உருவாக்க போராளிகள் திட்டமிட்டனர். 

இதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் நாட்டில் போராளிகள் தற்காலிக சுதந்திர பாரத அரசு ஒன்றை நிறுவினார்கள். ராஜா மகேந்திரபிரதாப் ஜனாதிபதியாகவும் மௌலானா பரகத்துல்லா பிரதமமந்திரியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக செண்பகராமன் பிள்ளை பணியாற்றினார். முதலாம் உலகப் போரின் போது எம்டன் என்ற கப்பலில் வந்து சென்னையின் மீது அதிரடியாக குண்டு வீசி ஆங்கில அரசை அதிரவைத்தவர் செண்பகராமன் பிள்ளை
பாரதநாட்டில் உருவாக்க எண்ணிய ஆயுதப்புரட்சி ஆங்கில உளவுத்துறையால் கண்டு பிடிக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சி காரணமாக போரில் இருந்து ரஷ்யா விலகிக்கொள்ள ஜெர்மனி தோற்க நேர்ந்தது. பிரிட்டிஷ் அரசின் நெருக்கடி காரணமாக தற்காலிக இந்திய அரசு  ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற நேர்ந்தது. 

1933-ம் ஆண்டு பெர்லினில் வாழ்ந்த மணிப்பூரைச் சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை, செண்பகராமன் திருமணம் செய்து​கொண்டார். அந்த காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை செண்பகராமன் பிள்ளை சந்தித்தார். பிள்ளை உருவாகியிருந்த பாரத தேசிய தன்னார்வப் படை நேதாஜியைக் கிளர்ச்சியூட்டியது. அந்த வழியில்தான் நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவத்தை வடிவமைத்தார். பிள்ளை உருவாகியிருந்த ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் நேதாஜியின் போர் முரசாக மாறியது. பல ஆயிரம் தேசபக்தர்களை உற்சாகமூட்டும் கோஷமாக இன்றும் அதுவே திகழ்கிறது. 
முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி உருவானது. செண்பகராமன், ஹிட்லருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். பாரதம் குறித்து ஹிட்லருக்குள் இருந்த ஆழமான வெறுப்பை உணர்ந்த செண்பகராமன், வெளிப்படையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார். ஆகவே, நாஜிக்களின் நெருக்கடிக்கு ஆளானார்.

ஒரு விருந்தில் செண்பகராமன் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அதை அறியாமல் சாப்பிட்டுவிட்டு நோய்மையுற்ற இவர், சிகிக்சை பெற இத்தாலி சென்றார். தீவிர சிகிக்சை அளித்தும் செண்பகராமன் இறந்து போனார். அவருக்குத் தரப்பட்ட உணவில் யார் விஷம் கலந்தது? அல்லது அது ஒரு கட்டுக்கதையா என்பது தெளிவற்ற தகவலாகவே இன்றும் இருந்து வருகிறது.

1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி செண்பகராமனின் உயிர் பிரிந்தது. தனது இறுதி விருப்பமாக, 'என்னுடைய சாம்பலை பாரத நாட்டுக்கு எடுத்துச் சென்று, எனது தாயாரின் சாம்பலைக் கரைத்த, கேரளாவில் உள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது மனைவி லட்சுமிபாயால் அதை எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. கணவனின் அஸ்தியைப் பாதுகாப்பாக வைத்திருந்தபோதும், லட்சுமி பாய் மீது நாஜி அரசு குற்றம் சுமத்தி அவரை மனநலக் காப்பத்தில் அடைத்தது. அவரைச் சித்ரவதைகள் செய்தது. கணவனின் அஸ்தியை வைத்துக்கொண்டு, லட்சுமிபாய் 30 வருடங்கள் போராடினார்.

முடிவில், அஸ்தியோடு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கி இருந்த அவர், இந்திய அரசின் மரியாதையோடு அந்த அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடினார். அதுவும் எளிதாக நடக்கவில்லை. ஒரு கட்டத்தில், இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இந்திரா ஒரு சிறுமியாக தனது வீட்டுக்கு வந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி, தனது கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார்.
இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் ஆண்டு, இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றில் செண்பகராமனின் அஸ்தியை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து கொச்சிக்குப் பயணமானார் லட்சுமிபாய். செண்பகராமன் விரும்பியபடியே அவரது அஸ்தி கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. எந்த நதியின் நீரில் தனது தாயின் அஸ்தி கரைந்து போனதோ, அதே நதியில் செண்பகராமனும் கரைந்து போனார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு செண்பகராமனுக்கு சிலை வைத்துக் கொண்டாடி இருக்கிறது. 1972-ம் ஆண்டு லட்சுமி பாய் மும்பையில் காலமானார்.

ஞாயிறு, 25 மே, 2025

மே 25 - ராஷ் பிஹாரி போஸ் பிறந்தநாள்

பாரத நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட பலரின் பெயர்கள் பொதுமக்களின் மனதில் இருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு உள்ளது. வீடு மனையைத் துறந்து, குடும்பத்தினரைப் பிரிந்து, வெளிநாடுகளில் தங்கி பாரதநாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்வு முழுவதையும் தியாகம் செய்த பெருமைமிக்க புதல்வர்கள் பலர். அதில் முக்கியமானவர் ராஷ்பிஹாரிபோஸ். சுபாஷ் சந்திர போஸுக்கு முன்னரே ஜப்பான் நாட்டுக்குச் சென்று அங்கே இந்திய சுதந்திரத்திற்கு பாடுபடும் படையை உருவாக்கியவர் இவர். இந்தப் படையின் தலைமையைத்தான் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ஏற்றுக்கொண்டார்.

வங்காளத்தின் பார்த்துவான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 1886ஆம் ஆண்டு பினோத் பிஹாரி போஸ் - புவனேஸ்வரி தேவி தம்பதியின் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்றார். கல்லூரிப் படிப்பை கொல்கத்தா நகரில் முடித்தார். படிக்கின்ற காலத்திலேயே ஆங்கில அரசை ஆயுதம் தாங்கியே எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

1912ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியாவின் தலைநகரை கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு மாற்றியது. டெல்லி நகரில் அன்றய வைஸ்ராய் ஹார்டிங் 1912ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் யானை மீது பவனி வந்தார். சாந்தினி சவுக் பகுதியில் ஊர்வலம் வரும்போது அவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. காயங்களோடு ஹார்டிங் உயிர்தப்பினார். வெடுக்குண்டு வீசியது பசந்த் பிஸ்வாஸ் எனும் 16 வயது சிறுவன். அவனைப் பயிற்றுவித்தது போஸ்.

போஸ் அப்போது டெஹ்ராடூன் நகரில் உள்ள வனத்துறையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். ஏதும் அறியாதது போல அவர் மீண்டும் டெஹ்ராடூன் சென்று தனது பணியைத் தொடர்ந்தார். ஆனாலும் இந்த வெடிகுண்டு வீச்சுக்குப் பின்னால் போஸ்தான் இருக்கிறார் என்பதைக் கண்டுகொண்ட ஆங்கில அரசு போஸ்மீது கைது நடவடிக்கையை ஆரம்பித்தது. போஸ் தலைமறைவானார். அவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்தது.

தலைமறைவு வாழ்க்கையை நடத்தும் போதே இந்திய அளவில் ஆயுதம் தாங்கிய தாக்குதலுக்கு போஸ் முயற்சி செய்து கொண்டு இருந்தார். அமெரிக்காவில் இருந்த கதர் கட்சி ( அரபி மொழியில் இருந்த வந்த உருது சொல் - இதற்கு புரட்சி என்று பொருள் ) ஜெர்மன் நாட்டில் இருந்து இயங்கிய இந்திய விடுதலைக்கான கூட்டமைப்பு, இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆயத புரட்சியாளர்கள் மற்றும் ராணுவத்தில் உள்ள வீரர்களோடு இணைந்து இந்தியாவின் பல பகுதிகளில் ஒரே நாளில் போராட்ட திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் ஆங்கில உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு திட்டம் தோல்வியில் முடிந்தது.

போஸ் இந்தியாவை விட்டு நீங்கி ஜப்பான் சென்றார். ஜப்பானிலும் ஆங்கில அரசு அவரைப் பின்தொடர்ந்து. அவரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜப்பான் அரசை நிர்ப்பந்தித்தது. இந்தியாவின் வீர மைந்தன் ஜப்பான் நாட்டிலும் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டி இருந்தது. ஆனால் இதற்கு நடுவே இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான உறவு சீர்குலைந்ததால் போஸ் ஜப்பானில் நிம்மதியாக இயங்க முடிந்தது. களங்கள்தான் மாறியது கடமை மாறவில்லை. ஜப்பானில் இருந்து போஸ் இந்திய விடுதலைக்கான வேலையைச் செய்து கொண்டுதான் இருந்தார். பல பத்திரிகைகளில் தனது கட்டுரைகள் மூலம் இந்திய விடுதலை வீரர்களுக்கு ஜப்பான் ஆதரவு தரவேண்டும் என்று எழுதி, ஜப்பான் நாட்டை இந்திய போராளிகளுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றினார். இந்திய விடுதலை முன்னணி என்ற அமைப்பை ஜப்பானில் உருவாக்கினார். இதன் தலைமைப் பொறுப்பையே பின்னாளில் நேதாஜி ஏற்றுக்கொண்டார்.

ஜப்பானில் நாகமுறையா உணவகத்தின் உரிமையாளரின் மகள் டோஷிகோ சோமோ என்பவரை போஸை மணந்துகொண்டார். அவருக்கு ஜப்பான் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டது. எட்டாண்டுகளே இந்தத் தம்பதியினர் இணைந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். உடல்நலக் குறைவால் டோஷிகோ சோமோ மரணமடைய, அதன் பின்னர் தனியாகவே போஸ் வாழ்ந்தார்.

சுபாஷ் சந்திர போஸ் பிரகடனம் செய்த சுதந்திர இந்தியாவின் கொடியை வடிவமைத்து கொடுத்தவர் ராஷ்பிஹாரிபோஸ்தான். "நான் காந்தியை மதிக்கிறேன், அவர் புனிதமானவர். ஆனால் அவர் கடந்த காலத்தவர், சுபாஷ் வருங்காலத்தை சேர்ந்தவர்" என்று கூறி சுபாஷுக்கு ஆசி வழங்கினார் ராஷ்பிஹாரிபோஸ்

இந்தியாவின் புகழ்வாய்ந்த தேசபக்தர் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் 1945ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் தந்து 58ஆம் வயதில் காலமானார்.

எதையும் எதிர்பாராமல் நாட்டுக்கு உழைத்த தியாகிகளின் நினைவைப் போற்றுவோம். அவர்கள் வழியில் நடப்போம் என்று ராஷ்பிஹாரிபோஸ் பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.