புதன், 20 மே, 2020

பிபின் சந்திர பால் நினைவு தினம் - மே 20.


இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த முன்னோடி தலைவராகவும், பால் லால் பால் என்று அழைக்கப்பட்ட மூன்று முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய பிபின் சந்திரபால் அவர்களின் நினைவு தினம் இன்று. பஞ்சாபில் லாலா லஜபதி ராய், மஹாராஷ்டிராவில் பால கங்காதர திலகர், வங்காளத்தில் பிபின் சந்திர பால் ஆகியோர்தான் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நாட்டில் சுதந்திர வேட்கையை ஊட்டியவர்கள். தமிழகத்தின் முன்னணி சுதந்திர வீரர்களாக விளங்கிய வ உ சி, சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகியோருக்கு வழிகாட்டியாக விளங்கியவர்கள் இந்த மூவருமே.

பிபின் சந்திர பால் இன்று வங்கதேசத்தில் இருக்கும் சில்ஹெட் மாவட்டத்தில் போயல் என்ற கிராமத்தில் 1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தை ராமச்சந்திர பால் ஒரு பாரசீக மொழி அறிஞர். தாயார் நாராயணி. வைஷ்ணவ பாரம்பரியத்தைக் கொண்ட இவர்கள் குடும்பம் ஓரளவு வசதியானதுதான். அன்றய வங்காளம் என்பது ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகளின் சேவையால் புதிய கருத்துக்களை வரவேற்கும் நிலையில் இருந்தது.

கல்கத்தா மாநிலக் கல்லூரிக்கு படிக்கச் சென்ற பிபினுக்கு ப்ரம்மசமாஜ தொடர்பு உருவாகிறது. கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்ட பிபின் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகவும் பிறகு கல்கத்தா பொது நூலகத்தில் நூலகராகவும் பணியாற்றினார். அப்போது ஒரு விதவையை மணம் புரிந்து கொண்டதால் குடும்பத்தாரோடு அவரது உறவு சீர்குலைகிறது. நாடெங்கிலும் உருவாகிக்கொண்டு இருந்த விடுதலை உணர்ச்சியால் பிபினும் தனது வேலையத் துறந்து முழுநேரமும் நாட்டுக்காக உழைக்கத் தொடங்குகிறார்.

வங்காளம் இரண்டாகப் பிரிவுபடுவதை தீவிரமாக எதிர்த்து பல்வேறு கூட்டங்களில் உரையாற்றுகிறார் பிபின். ஸ்வராஜ்யம், சுதேசி, அந்நிய துணிகளை உபயோகிக்காமல் இருப்பது, அன்னியத் துணிகளை எரிப்பது என்று ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறார். வந்தேமாதரம் வழக்கில் அரவிந்தருக்கு எதிராக சாட்சியம் அளிக்க மறுத்ததால் ஆங்கில அரசு இவரைக் கைது செய்கிறது.
அந்த சிறைத்தண்டனை முடிந்தது பிபின் சந்திரபால் விடுதலையைக் கொண்டாடியதற்குத்தான் வ உ சி மற்றும் சுப்ரமணிய சிவாவின் மீது தமிழகத்தில் வழக்கு பதிவாகிறது.

அந்நியப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது, புதிய தொழில்களை இந்தியர்களே தொடங்கவேண்டும், பொருளாதார ரீதியில் ஆங்கிலேயர்கள் நம்மைச் சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே பொருளாதார ரீதியில் நாம் அவர்களை தோற்கடித்தால் சுதந்திரம் விரைவாகக் கிடைக்கும் என்பது பிபின் சந்திர பாலின் முழக்கமாக இருந்தது.
இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிபின் சந்திர பால், கீதை மற்றும் உபநிஷதங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். இந்திய தேசியம், இந்தியாவின் ஆன்மா போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் செல்லத் தொடங்கிய போது, அரசியலில் இருந்த விலகிக் கொண்டார்.

வங்காளம் தந்த இந்த வீரர் தனது 73ஆவது வயதில் 1932ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் பாரதத்தாயோடு கலந்தார்.

தன்னலம் கருதாத தியாகிகளின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமையட்டும்.