ஞாயிறு, 31 மே, 2020

ராஜமாதா மஹாராணி அஹல்யாபாய் ஹோல்கர் - பிறந்தநாள் மே 31.


மெக்காலே முறையில் கல்வி கற்றவர்களால் இந்தியாவில் பெண்களும் அரசாட்சி செய்திருக்கிறார்கள், ஆயுதம் ஏந்தி நாட்டைக் காக்க போராடியிருக்கிறார்கள், மக்களின் குறைகளைத் தீர்த்திருக்கிறார்கள் என்பதை நம்பமுடியாது, ஏனென்றால் நமது உண்மையான வரலாற்றை அறிந்துகொண்டால் அவர்களுக்கு தாங்கள் பாரதீயர்கள் என்று பெருமிதம் வந்துவிடும், அப்படி இல்லாத மக்களை உருவாக்குவதே தங்களுக்கு நலம் பயக்கும் என்று உருவானதுதான் ஆங்கிலேயர்கள் வகுத்த பாடத் திட்டம். அடிமை விலங்கை உடைத்தெறிந்து எழுவது ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அதனை மாற்றி நமது உண்மையான வரலாற்றை எழுதாமல் இருப்பது நமது வரலாற்று சோகம்.

அஹல்யாபாய் அரச குடும்பத்தில் பிறவாதவர். அவர் தந்தை மன்கோஜி ஷிண்டே ஒரு கிராமத்தின் தலைவராக மஹாராஷ்டிரா பேஷ்வாக்களின் கீழ் பணியாற்றிவந்தார். வீட்டில் வைத்தே அஹல்யாபாய் கல்வி கற்றார்.
இன்றய மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் தென் கிழக்கு பகுதிகள் உள்ளடங்கிய மால்வா பகுதியின் அரசரும் பேஷ்வாக்களின் தளபதியுமான மால்ஹர் ராவ் ஹோல்கர் ராவ் ஹோல்கர் கண்களில் அஹல்யாபாய் பட, அஹல்யாவின் கருணையையும் நடவடிக்கைகளையும் கண்ட மால்ஹர் அஹல்யாவை தனது மகன் காந்தேராவுக்கு மணம் முடிக்கிறார். அப்போது அஹல்யா மிகவும் சிறு பெண்.

1754ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பேர் யுத்தத்தில் கந்தராவ் மரணமடைகிறார். அப்போது கணவனோடு தானும் இறந்துவிடலாம் என்று நினைக்கும் அஹல்யாவின் மனதை அவர் மாமனார் மால்ஹர் ராவ் மாற்றி அவரை நாடாளுவதற்கு பயிற்சி அளிக்கிறார். 1766ஆம் ஆண்டு மால்ஹர் ராவும் இயற்கை எய்தி விட, அஹல்யாவின் மகன் மாலே ராவ் மன்னனாகிறார். ஆனாலும் துரதிர்ஷ்டம் அஹல்யாவை துரத்துகிறது. அவரது மகனும் ஒரே வருடத்தில் இறந்து போகிறார்.

அடுக்கடுக்கான துயரங்கள் சாதாரண மனிதர்களை நிலைகுலைய வைத்துவிடும். ஆனால் வரலாற்றில் இடம் பெரும் நாயகர்கள் சொந்த சோகங்களை கடந்து சென்று விடுவார்கள். மஹாராணி அஹல்யாபாயும் தனது சோகங்களை கடந்து சென்றார். மராட்டியத்தை ஆண்டு கொண்டு இருந்த பேஷ்வாக்களின் ஒப்புதலோடு அரசுப் பொறுப்பை ஏற்றார். ஹோல்கர் வீரர்கள் அவர்பின் அணிவகுத்தனர். திறமைவாய்ந்த துக்கோஜி ஹோல்கரை படைத்தளபதியாக நியமித்து, திறம்பட ஆட்சி செய்தார்.
மஹாராணியே ஒரு சிறந்த போர்வீரரும் ஆவார். அவரது பட்டத்து யானையின் அம்பாரியின் நான்கு புறமும் பொருத்தப்பட்ட அம்பராத்தூளியோடு யானை மீதேறி கையில் வில்லோடு போர்க்களம் புகும் ராணியை மக்கள் துர்க்கையின் வடிவமாகவே பார்த்தனர். தனது அரசின் எல்லைகளைக் காப்பதிலும், படையெடுத்து வரும் அரசர்களை தோற்கடிப்பதிலும் ராணி அஹல்யாபாய் வெற்றியை மட்டுமே கண்டார்.

ஏறத்தாழ முப்பதாண்டு காலம் ஆட்சி செய்த ராணி, மக்களின் குறைகளை தீர்த்து வைத்தார். நாடெங்கும் சாலைகள் அமைத்தல், ஆங்காங்கே வழிப்போக்கர்கள் தங்க சத்திரம் அமைத்தல், கலைஞர்களை ஆதரித்தல், தினம் தினம் தர்பாரில் அமர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்கான நிவாரணத்தை அளித்தல் என்று மக்களால் விரும்பப்படும் ஆட்சியை அளித்தார். கணவன் இறந்த பிறகு விதவையான மனைவி கணவனின் சொத்துக்கு உரிமையாளர் ஆகிறார் என்றும் கணவன் இறந்த பிறகு தத்தெடுக்கும் உரிமை மனைவிக்கு உண்டு என்று சட்டம் இயற்றினார்.

இன்றய இந்தோர் நகரம் என்பது அவராலேயே விரிவாக்கப்பட்டது. அதுபோக இந்தியாவெங்கும் கோவில்களை திருப்பணி செய்து விரிவாக்கியது அவரது முயற்சியால்தான். தற்போதுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், சோம்நாத்தில் உள்ள ஆலயம், கயாவில் உள்ள ஆலயம் மற்றும் கேதார்நாத், ப்ரயாக், குருஷேத்திரம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களை புதுப்பித்து, விரிவாக்கம் செய்து அவைகளுக்கு பல்வேறு மானியங்களை அவர் வழங்கினார்.
முப்பதாண்டு காலம் ஆட்சி நடத்திய மஹாராணி தனது எழுபதாவது வயத்தில் காலமானார். இந்தோர் விமானநிலையம் மற்றும் இந்தோர் பல்கலைக்கழகம் இன்று மஹாராணி அஹல்யாபாய் பெயராலே அழைக்கப்படுகிறது.

பாரத தாய்க்கு எத்தனையோ புகழ்வாய்ந்த மகள்கள், அவர்கள் அத்தனை பேருக்கும் எங்கள் வணக்கம்  

சனி, 30 மே, 2020

குரு அர்ஜன்சிங் பலிதான தினம் - மே 30


சீக்கியர்களின் ஐந்தாவது குருவும் தர்மத்திற்காக பலியான முதல் குருவுமான குரு அர்ஜன்சிங் அவர்களின் பலிதான தினம் இன்று. சீக்கியர்களின் மத நம்பிக்கைப்படி அவர்கள் குரு பரம்பரை குரு நானக்கில் தொடங்கி குரு கோவிந்த் சிம்மன் வரை பத்து குருக்களும் அதன் பிறகு குரு கிரந்த சாஹப் புத்தகம் குருவாகவும் மதித்து வணங்கப்படுகிறது.

அந்த குருபரம்பரையின் ஐந்தாவது குரு அர்ஜன் சிங். அவர் சீக்கியர்களின் நான்காவது குருவான குரு ராமதாஸின் இளைய மகனாக 1563ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் நாள் பிறந்தார். இவரது தாயார் மூன்றாவது குருவான குரு அமர்தாஸின் மகள். குரு ராமதாஸின் மறைவிற்குப் பிறகு 1581ஆம் ஆண்டு குரு அர்ஜன்சிங் சீக்கியர்களின் குருவாக நியமிக்கப்பட்டார்.

இவரது வழிகாட்டலில் பல்வேறு மக்கள் சீக்கிய மதத்தில் இணைந்தனர். சொல்லப்போனால் அன்று அது ஒரு தனி மதமாகவே இல்லை. அது ஹிந்து மதத்தின் ஒரு பிரிவாகவே இருந்தது. குரு அர்ஜன்சிங்கின் பெருமை வடநாடு முழுவதும் பரவியது.

குரு அர்ஜன்சிங் சீக்கிய மத பாடல்களைத் தொகுத்தார், அது ஆதி கிரந்தம் என்று அழைக்கப்பட்டது. அந்த நூலின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமே குரு கிரந்த சாஹப் என்று இன்று அழைக்கப்படுகிறது. அமிர்தஸர் நகரில் உள்ள தர்பார் சாஹப் என்று அழைக்கப்படும் பொற்கோவிலின் ஆரம்ப வடிவம் இவராலே உருவாக்கப்பட்டது.

மசந்த் எனப்படும் சீக்கிய குருக்களின் நேரடி பிரதிநிதிகளின் நியமனத்தை குரு அர்ஜன்சிங் ஒழுங்கு படுத்தினார். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் சீக்கியர்களின் நன்கொடைகளை வசூலித்து அதனைக் கொண்டு புது குருத்துவாராக்களை உருவாக்கவும், லங்கர் என்னும் உணவு வழங்கும் நிறுவனங்களை அவர்களே நிர்வகித்தனர். சீக்கியர்கள் தங்கள் வருமானத்தில் பத்து சதவிகிதத்தை வறியவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று குரு அர்ஜன் வலியுறுத்தினார்.

சீக்கியர்கள் ஒரு வலிமையான குழுவாக உருவானது முகலாய மன்னர் ஜஹாங்கீரின் கண்ணை உறுத்தியது. அவர் குரு அர்ஜன்சிங்கை கைது செய்து, அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு கூறினார். அதனை குரு சந்தேகமே இல்லாமல் நிராகரித்தார்.

அதனால் முகலாய மன்னர் ஜஹாங்கீரின் ஆணையின்படி குரு அர்ஜன்சிங் சித்திரவதைக்கு உள்ளானார். கொதிக்கக் காச்சிய இரும்பு தகட்டில் அமரவைக்கப்பட்டு, மணலை சூடாக்கி அவர் மீது கொட்டி, பின்னர் கொதிக்கும் தண்ணீரை அவர்மீது கொட்டப்பட்டது. 1606ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் நாள் ராவி நதியில் குளிக்கச் சென்ற குரு அர்ஜன்சிங் நதியில் முங்கி தனது உயிரை தியாகம் செய்தார்.

அவருக்கு பின் அவரது மகன் குரு ஹர்கோபிந்த் சீக்கியர்களின் ஆறாவது குருவாக நியமிக்கப்பட்டார். குரு அர்ஜன்சிங்கின் பலிதானதால் சீக்கியர்கள் போராட்ட குணம் கொண்ட பிரிவாக உருவானார்கள்.

இந்த நாட்டின் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக உயிர் கொடுத்த தியாகிகளின் தியாகத்தை மனதில் நிறுத்துவோம். தர்மத்தை காக்க நமது பங்களிப்பை அளிப்போம்.

வெள்ளி, 29 மே, 2020

முன்னாள் பிரதமர் சரண்சிங் நினைவு தினம் - மே 29


விடுதலைப் போராட்ட வீரரும், உத்தரபிரதேசத்தில் நெடுங்காலம் அமைச்சராகவும், காங்கிரஸ் அல்லாத கட்சியின் சார்பாக முதல்முதலில் முதல்வராகவும், இந்திய நாட்டின் மிகக் கூறிய கால பிரதமராகவும், வட இந்திய விவசாயிகளின் தன்னிகரில்லா தலைவராகவும் விளங்கிய சவுத்திரி சரண்சிங் நினைவுதினம் இன்று.

ஹரியானவைச் சார்ந்த முதல் விடுதலைப் போரின் முன்னணி தலைவராக இருந்த பாலாபாக் அரசர் ராஜா நாகர்சிங் பரம்பரையில் பிறந்தவர் சரண்சிங் அவர்கள். விடுதலைப் புரட்சியின் முடிவில் ராஜா நாகர்சிங் ஆங்கில அரசால் மரணதண்டனை விதிக்கப்பட, அவர் குடும்பம் ஹரியானாவில் இருந்து உத்திரபிரதேசத்திற்கு குடி பெயர்ந்தது. அந்தப் பரம்பரையில் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாள் சரண்சிங் பிறந்தார்.
அறிவியலில் முதுகலைபட்டமும், சட்டப் படிப்பும் முடித்த சரண்சிங் கசியாபாத் நகரில் தனது வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். தனது 34ஆவது வயதில் உத்திரபிரதேச சட்டசபைக்கு தேர்வானார்.
காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறை தண்டனை அனுபவித்தார்.

1937, 1946, 1952, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார். இந்த காலகட்டங்களில் பல்வேறு துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். முதல் முறை தேர்வானபோதே விவசாயிகளின் நலன்களை காக்கும் பல்வேறு திட்டங்கள் உருவாக வாதாடினார். அவைகளில் பலவற்றை இன்று பல்வேறு மாநிலங்கள் சட்டமாக்கி உள்ளது.

இந்திய மனப்பான்மைக்கு சோவியத் வழிமுறையிலான கூட்டு விவசாயம் சரிவராது, விவசாய நிலத்தின் மீதான விவசாயிகளின் உரிமை என்பது அவர்களின் சுயமதிப்பு சார்ந்தது என்று நேரு முன்வைத்த கூட்டு விவசாய முறையை எதிர்த்துப் பேசியதால் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.

பின்னர் தனிக் கட்சியை உருவாக்கி உத்திர பிரதேச முதல்வராக தேர்வானார். காங்கிரஸ் கட்சி அல்லாத முதலாவது முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சரண்சிங், பல்வேறு பதவிகளில் இருந்தாலும் ஊழலை ஏற்றுக்கொள்ளாத, உறுதியான, அரசு செலவழித்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சரியானபடி விளக்கம் கேட்கும் நேர்மையாளராக இருந்தார்.
இந்திரா கொண்டுவந்த நெருக்கடி நிலையின் போது பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களோடு சரண்சிங்கும் கைதானார். அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் உருவான ஜனதா கட்சி அரசில் உதவிப் பிரதமராக பதவி வகித்தார்.

உள்கட்சி பூசலால் மொரார்ஜி தேசாய் பதவி விலகியபோது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அவருக்கான ஆதரவை இந்திரா விலக்கிக் கொள்ள சரண்சிங் பதவி விலகினார்.

1985ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சரண்சிங் 1987ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் காலமானார்.

லக்னோ விமான நிலையம், மீரட் பல்கலைக்கழகம் ஆகியவைகளுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இவரது பிறந்த தினம் விவசாயிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

வியாழன், 28 மே, 2020

காதலுக்காக முடி துறந்த அரசன் - எட்டாம் எட்வர்ட் நினைவுநாள் மே 28.


காதலுக்கு கண்ணில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் காதலுக்காக ஒரு பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை உதறித்தள்ளுவது என்பது எல்லோராலும் நினைத்தே பார்க்கமுடியாத ஓன்று. அதிலும் சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அரச பதவியை விட்டு விலகுவது என்றால் அந்தக் காதலின் ஆழம் நமக்குப் புரியவரும்.

இங்கிலாந்து அரசன், தெற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட பெரும்பான்மை ஆப்பிரிக்கா கண்டம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா போன்ற டொமினியன் நாடுகளின் தலைவன், பிளவுபடாத இந்திய துணைக்கண்டத்தின் ( இன்றய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் மியான்மார் ) பேரரசன் என்று உலகத்தின் சரிபாதி நாடுகளின் தலைமைப் பொறுப்பை இரண்டு முறை திருமணமாகி இரண்டு முறையும் விவாகரத்தான ஒரு பெண்மீது கொண்ட காதலால் உதறித்தள்ளியவர் இன்றய நாளின் நாயகன் எட்வர்ட் ஆல்பர்ட் கிறிஸ்டின் ஜார்ஜ் ஆண்ட்ரு பேட்ரிக் டேவிட் என்ற எட்டாம் எட்வர்ட்.

1894ஆம் ஆண்டு யார்க் இளவரசரும் பின்னாளில் ஐந்தாம் ஜார்ஜ் என்ற பெயரில் மன்னரானவருக்கும் முதல் மகனாகப் பிறந்தார். அப்போது இங்கிலாந்து நாட்டை அவர் தந்தையின் பாட்டி விக்டோரியா மஹாராணி ஆட்சி செய்துகொண்டு இருந்தார். விக்டோரியா மஹாராணி காலத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து முதல் இந்திய சுதந்திரப் போருக்குப் பின்னால் இங்கிலாந்து அரச பரம்பரைக்கு இந்தியாவின் ஆட்சி கை மாறியது. விக்டோரியா மஹாராணிதான் முதல் முதலில் இந்தியாவின் பேரரசி என்று பட்டம் சூட்டிக்கொண்டவர்.

இவரது தந்தை ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவியேற்ற பின்னர் இவர் வேல்ஸ் இளவரசர் என்று அறிவிக்கப்பட்டார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் 1936ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் இறந்த பின்னர் இவர் எட்டாம் எட்வர்ட் என்ற பெயரில் இங்கிலாந்து நாட்டின் மன்னராக முடிசூட்டப்பட்டார். அதோடு காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும், இந்தியாவின் சக்ரவர்த்தியாகவும் பிரகடனப் படுத்தப்பட்டார்.

இந்த காலகட்டத்தில் அமெரிக்காவைச் சார்ந்த வாலிஸ் சிம்ப்சன் என்ற பெண்ணின் மீது எட்டாம் ஜார்ஜ் காதல் வயப்பட்டார். வாலிஸ் இருமுறை மணமானவர். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து அடுத்த கணவரையும் அவர் விவாகரத்து செய்யும் காலகட்டத்தில் இருந்தவர்.
இங்கிலாந்து மன்னர் ஆங்கில நாட்டு சர்ச்சின் தலைவரும் ஆவார். ஏற்கனவே மணமாகி விவாகரத்தான பெண் ஒருவரை அரசர் மணப்பது என்பது பழமையில் ஊறிய ஆங்கிலேயர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எட்டாம் எட்வர்ட் மன்னருக்கு ஓன்று காதலைத் துறக்கவேண்டும், அல்லது மக்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது காதலிதான் முக்கியம் என்றால் அரசாட்சியைத் துறக்க வேண்டும் என்ற மூன்று வாய்ப்புகள்தான் இருந்தன. காதலிக்காக அரசாட்சியைத் துறந்து விடுவது என்று எட்டாம் எட்வர்ட் முடிவு செய்தார். 1936ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் நாள் தனது உடன்பிறந்தார் முன்னிலையில் தான் அரச உரிமையைத் துறப்பதாகவும், தனது வாரிசுகள் யாருக்கும் அரசாட்சியில் எந்த உரிமையும் இல்லை என்றும் அறிவித்து பதவியில் விட்டு விலகினார். 

ஆங்கில வரலாற்றில் மிகக் குறுகிய காலமே மன்னராக எட்டாம் ஜார்ஜ் பதவி வகித்தார். அவருக்குப் பின் அவர் சகோதரர் ஆறாம் ஜார்ஜ் என்ற பெயரில் இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராகப் பதவி ஏற்றுக்கொண்டார். ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மகள்தான் தற்போதைய இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத்.

ஆங்கிலேய சர்ச் எட்வர்டின் திருமணத்தை நடத்தி வைக்க மறுத்ததால் அவர் வாலிஸை பிரான்ஸ் நாட்டில் உள்ள கிருஸ்துவ தேவாலயம் ஒன்றில் மணந்து கொண்டார். பதவி இழந்த எட்வர்டுக்கு வின்சர் பிரபு என்ற பட்டம் வழங்கப்பட்டது.

தனது வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை இங்கிலாந்து நாட்டிற்கு வெளியே கழித்த எட்வர்ட் தொண்டையில் உருவான புற்றுநோய் காரணமாக 1972ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் காலமானார். அவர் மறைவிற்குப் பிறகு பதினான்கு ஆண்டுகள் கழிந்து 1986ஆம் ஆண்டு அவர் காதல் மனைவி வாலிஸ் காலமானார்.

காரண காரியங்களை தாண்டியது காதல் என்பது எட்டாம் எட்வர்ட் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது. 

புதன், 27 மே, 2020

பாஜக முன்னணி தலைவர் நிதின் கட்கரி பிறந்தநாள் - 27 மே


பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு நிதின் கட்கரியின் பிறந்தநாள் இன்று. மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரைச் சார்ந்த கட்கரி, இளவயது முதலே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். பாரதீய ஜனதாவின் இளைஞர் பிரிவிலும், அகில பாரத வித்யார்த்தி பரீட்சித்திலும் பணியாற்றியவர். இவர் வணிகவியல் துறையில் முதுகலை பட்டமும் சட்டமும் பயின்றவர்.

மிகச் சிறுவயதிலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதால், தனது முப்பத்திரண்டாவது வயதிலேயே மஹாராஷ்டிரா மாநில மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1990, 1996, 2002 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மஹாராஷ்டிரா மேலவை உறுப்பினராகத் தேர்வானார். மஹாராஷ்டிரா மாநில மேலவையில் எதிர்கட்சித் தலைவராகவும், பாஜகவின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றினார்.

1995ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு சாலைப்பணிகளை மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டன. அவற்றில் முக்கியமானது மும்பை - பூனா நகரை இணைக்கும் அதிவிரைவு சாலை. உள்கட்டுமானப் பணிகளில் தனியார் பங்களிப்பை உறுதி செய்து தனியார்களையும் முதலீடு செய்யவைத்தது அவரின் செயல்பாடாக இருந்துவந்தது.

2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பாஜகவின் தேசிய தலைவராகவும் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில்தான் மோதியை பிரதமர் வேட்பாளராக கட்சி அறிவித்தது. பாஜகவிற்கு அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை இழந்த காலகட்டத்தில் கட்சியை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் பொறுப்பு அவர்மீது சுமத்தப்பட்டது. அதனை கட்கரி திறமையாக கையாண்டார்.

2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் நாக்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார். 2014ஆம் ஆண்டு உருவான மோதி தலைமையிலான பாஜக அரசின் மிக முக்கியமான துறைகளை நிர்வகித்து வந்தார். தேசிய நெடுஞ்சாலைத்துறைகளின் அமைச்சராக 2014 - 2019 பணியாற்றிய போது நாளொன்றுக்கு பதினாறு கிலோமீட்டர் அளவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.

பாஜக அரசின் சாதனைகளில் முக்கியமான ஒன்றான உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் கட்கரியின் பங்கு மகத்தானது. தற்போது கோதாவரி நதியை தமிழகத்திற்கு கொண்டுவரும் பிரமாண்டமான திட்டத்தின் மூலம் தமிழகத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம் என்று கட்கரி அறிவித்துள்ளார்.

மீண்டும் அமையவிருக்கும் பாஜவின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்க இருக்கும் திரு கட்கரிக்கு நமது நல்வாழ்த்துகள். 

செவ்வாய், 26 மே, 2020

ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை - நினைவு தினம் - மே 26


இந்திய விடுதலைக்காக நாட்டின் உள்ளிருந்து போராடியவர்கள் ஒருபுறம் என்றால், அதற்காக வெளிநாட்டில் இருந்து முயற்சி செய்தவர்கள் மறுபுறம். அகிம்சை வழியில் பாடுபட்டவர்கள் ஒருபக்கம்,ஆயுதம் ஏந்தி பாடுபட்டவர்கள் ஒருபுறம். சுதந்திரம் என்பது சும்மா வரவில்லை. எத்தனையோ தியாகிகளின் கண்ணீரால், உதிரத்தால், உயிர் தியாகத்தால் கிடைத்த பொக்கிஷம் அது.

அப்படி வெளிநாட்டில் இருந்து ஆயுதம் ஏந்தி போராடிய வீரர்களில் முக்கியமானவர் செண்பகராமன் பிள்ளை. தமிழகத்தைச் சார்ந்த இவரின் வாழ்க்கை சாகசங்களும், அதிரடிகளும், எதிர்பாரா திருப்புமுனைகளும், வியப்பும் கொண்டது.

திருவனந்தபுரத்தில் வசித்து வந்த சின்னசாமி பிள்ளை - நாகம்மாள் தம்பதியரின் மகன் இவர். பள்ளிப்பருவத்திலேயே ஸ்ரீ பாரதமாதா வாலிபர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி தனது தேசபக்தியை வெளிக்காட்டியவர் பிள்ளை. ஜெய் ஹிந்த் என்ற போர் முழக்கத்தை முதலில் பயன்படுத்தி, அதனை பிரபலப்படுத்தியதால் இவரை ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை என்று மக்கள் அழைத்தார்கள்.

அந்தக் காலகட்டத்திலேயே இத்தாலி, சுவிட்ச்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கல்வி பயின்றவர். பொறியியல் துறையில் முனைவர் ( Doctor ) பட்டம் பெற்றவர். ஜெர்மனி நாட்டில் இந்திய சுதந்திர போராட்ட இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி போராடியவர். இந்தியாவில் உள்ள ஆங்கில அரசை எதிர்த்து ஆப்கானிஸ்தானில் உருவான இந்திய மாற்று அரசின் வெளிவிவகாரத்துறையின் அமைச்சராகப் பணியாற்றியவர்.
பிரிட்டிஷ் அரசின் நெருக்கடி காரணமாக இந்த அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற நேர்ந்தது. அப்போது நடைபெற்ற முதலாம் உலகப் போரின் போது எம்டன் என்ற கப்பலில் வந்து சென்னையின் மீது அதிரடியாக குண்டு வீசி ஆங்கில அரசை அதிரவைத்தவர் செண்பகராமன் பிள்ளை

1933-ம் ஆண்டு பெர்லினில் வாழ்ந்த மணிப்பூரைச் சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை, செண்பகராமன் திருமணம் செய்து​கொண்டார். முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி உருவானது. செண்பகராமன், ஹிட்லருடன் நெருக்கமாகப் பழகி வந்தார். இந்தியா குறித்து ஹிட்லருக்குள் இருந்த ஆழமான வெறுப்பை உணர்ந்த செண்பகராமன், வெளிப்படையாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார். ஆகவே, நாஜிக்களின் நெருக்கடிக்கு ஆளானார்.
ஒரு விருந்தில் செண்பகராமன் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது. அதை அறியாமல் சாப்பிட்டுவிட்டு நோய்மையுற்ற இவர், சிகிக்சை பெற இத்தாலி சென்றார். தீவிர சிகிக்சை அளித்தும் செண்பகராமன் இறந்து போனார். அவருக்குத் தரப்பட்ட உணவில் யார் விஷம் கலந்தது? அல்லது அது ஒரு கட்டுக்கதையா என்பது தெளிவற்ற தகவலாகவே இன்றும் இருந்து வருகிறது.

1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி செண்பகராமனின் உயிர் பிரிந்தது. தனது இறுதி விருப்பமாக, 'என்னுடைய சாம்பலை இந்தியாவுக்கு எடுத்துச் சென்று, எனது தாயாரின் சாம்பலைக் கரைத்த, கேரளாவில் உள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது மனைவி லட்சுமிபாயால் அதை எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. கணவனின் அஸ்தியைப் பாதுகாப்பாக வைத்திருந்தபோதும், லட்சுமி பாய் மீது நாஜி அரசு குற்றம் சுமத்தி அவரை மனநலக் காப்பத்தில் அடைத்தது. அவரைச் சித்ரவதைகள் செய்தது. கணவனின் அஸ்தியை வைத்துக்கொண்டு, லட்சுமிபாய் 30 வருடங்கள் போராடினார்.
முடிவில், அஸ்தியோடு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கி இருந்த அவர், இந்திய அரசின் மரியாதையோடு அந்த அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடினார். அதுவும் எளிதாக நடக்கவில்லை. ஒரு கட்டத்தில், இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இந்திரா ஒரு சிறுமியாக தனது வீட்டுக்கு வந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி, தனது கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார்.

இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் ஆண்டு, இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றில் செண்பகராமனின் அஸ்தியை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து கொச்சிக்குப் பயணமானார் லட்சுமிபாய். செண்பகராமன் விரும்பியபடியே அவரது அஸ்தி கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. எந்த நதியின் நீரில் தனது தாயின் அஸ்தி கரைந்து போனதோ, அதே நதியில் செண்பகராமனும் கரைந்து போனார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு செண்பகராமனுக்கு சிலை வைத்துக் கொண்டாடி இருக்கிறது. 1972-ம் ஆண்டு லட்சுமி பாய் மும்பையில் காலமானார்.

நாற்பத்தி இரண்டு வயது வரை மட்டுமே வாழ்ந்த வீரர் செண்பகராமன் பிள்ளையின் நினைவு தினம் இன்று. தியாகிகளின் வாழ்வு நமக்கு வழிகாட்டியாக விளங்கட்டும்.


திங்கள், 25 மே, 2020

ராஷ் பிஹாரி போஸ் பிறந்தநாள் - மே 25


பாரத நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட பலரின் பெயர்கள் பொதுமக்களின் மனதில் இருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு உள்ளது. வீடு மனையைத் துறந்து, குடும்பத்தினரைப் பிரிந்து, வெளிநாடுகளில் தங்கி பாரதநாட்டின் விடுதலைக்காக தங்கள் வாழ்வு முழுவதையும் தியாகம் செய்த பெருமைமிக்க புதல்வர்கள் பலர். அதில் முக்கியமானவர் ராஷ்பிஹாரிபோஸ். சுபாஷ் சந்திர போஸுக்கு முன்னரே ஜப்பான் நாட்டுக்குச் சென்று அங்கே இந்திய சுதந்திரத்திற்கு பாடுபடும் படையை உருவாக்கியவர் இவர். இந்தப் படையின் தலைமையைத்தான் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ஏற்றுக்கொண்டார்.

வங்காளத்தின் பார்த்துவான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 1886ஆம் ஆண்டு பினோத் பிஹாரி போஸ் - புவனேஸ்வரி தேவி தம்பதியின் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்றார். கல்லூரிப் படிப்பை கொல்கத்தா நகரில் முடித்தார். படிக்கின்ற காலத்திலேயே ஆங்கில அரசை ஆயுதம் தாங்கியே எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

1912ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியாவின் தலைநகரை கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு மாற்றியது. டெல்லி நகரில் அன்றய வைஸ்ராய் ஹார்டிங் 1912ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் யானை மீது பவனி வந்தார். சாந்தினி சவுக் பகுதியில் ஊர்வலம் வரும்போது அவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. காயங்களோடு ஹார்டிங் உயிர்தப்பினார். வெடுக்குண்டு வீசியது பசந்த் பிஸ்வாஸ் எனும் 16 வயது சிறுவன். அவனைப் பயிற்றுவித்தது போஸ்.

போஸ் அப்போது டெஹ்ராடூன் நகரில் உள்ள வனத்துறையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். ஏதும் அறியாதது போல அவர் மீண்டும் டெஹ்ராடூன் சென்று தனது பணியைத் தொடர்ந்தார். ஆனாலும் இந்த வெடிகுண்டு வீச்சுக்குப் பின்னால் போஸ்தான் இருக்கிறார் என்பதைக் கண்டுகொண்ட ஆங்கில அரசு போஸ்மீது கைது நடவடிக்கையை ஆரம்பித்தது. போஸ் தலைமறைவானார். அவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்தது.

தலைமறைவு வாழ்க்கையை நடத்தும் போதே இந்திய அளவில் ஆயுதம் தாங்கிய தாக்குதலுக்கு போஸ் முயற்சி செய்து கொண்டு இருந்தார். அமெரிக்காவில் இருந்த கதர் கட்சி ( அரபி மொழியில் இருந்த வந்த உருது சொல் - இதற்கு புரட்சி என்று பொருள் ) ஜெர்மன் நாட்டில் இருந்து இயங்கிய இந்திய விடுதலைக்கான கூட்டமைப்பு, இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆயத புரட்சியாளர்கள் மற்றும் ராணுவத்தில் உள்ள வீரர்களோடு இணைந்து இந்தியாவின் பல பகுதிகளில் ஒரே நாளில் போராட்ட திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் ஆங்கில உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு திட்டம் தோல்வியில் முடிந்தது.

போஸ் இந்தியாவை விட்டு நீங்கி ஜப்பான் சென்றார். ஜப்பானிலும் ஆங்கில அரசு அவரைப் பின்தொடர்ந்து. அவரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜப்பான் அரசை நிர்ப்பந்தித்தது. இந்தியாவின் வீர மைந்தன் ஜப்பான் நாட்டிலும் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டி இருந்தது. ஆனால் இதற்கு நடுவே இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான உறவு சீர்குலைந்ததால் போஸ் ஜப்பானில் நிம்மதியாக இயங்க முடிந்தது. களங்கள்தான் மாறியது கடமை மாறவில்லை. ஜப்பானில் இருந்து போஸ் இந்திய விடுதலைக்கான வேலையைச் செய்து கொண்டுதான் இருந்தார். பல பத்திரிகைகளில் தனது கட்டுரைகள் மூலம் இந்திய விடுதலை வீரர்களுக்கு ஜப்பான் ஆதரவு தரவேண்டும் என்று எழுதி, ஜப்பான் நாட்டை இந்திய போராளிகளுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றினார். இந்திய விடுதலை முன்னணி என்ற அமைப்பை ஜப்பானில் உருவாக்கினார். இதன் தலைமைப் பொறுப்பையே பின்னாளில் நேதாஜி ஏற்றுக்கொண்டார்.

ஜப்பானில் நாகமுறையா உணவகத்தின் உரிமையாளரின் மகள் டோஷிகோ சோமோ என்பவரை போஸை மணந்துகொண்டார். அவருக்கு ஜப்பான் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டது. எட்டாண்டுகளே இந்தத் தம்பதியினர் இணைந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். உடல்நலக் குறைவால் டோஷிகோ சோமோ மரணமடைய, அதன் பின்னர் தனியாகவே போஸ் வாழ்ந்தார்.

சுபாஷ் சந்திர போஸ் பிரகடனம் செய்த சுதந்திர இந்தியாவின் கொடியை வடிவமைத்து கொடுத்தவர் ராஷ்பிஹாரிபோஸ்தான். "நான் காந்தியை மதிக்கிறேன், அவர் புனிதமானவர். ஆனால் அவர் கடந்த காலத்தவர், சுபாஷ் வருங்காலத்தை சேர்ந்தவர்" என்று கூறி சுபாஷுக்கு ஆசி வழங்கினார் ராஷ்பிஹாரிபோஸ்

இந்தியாவின் புகழ்வாய்ந்த தேசபக்தர் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் 1945ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் தந்து 58ஆம் வயதில் காலமானார்.

எதையும் எதிர்பாராமல் நாட்டுக்கு உழைத்த தியாகிகளின் நினைவைப் போற்றுவோம். அவர்கள் வழியில் நடப்போம் என்று ராஷ்பிஹாரிபோஸ் பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.

ஞாயிறு, 24 மே, 2020

தியாகி கர்தார் சிங் சரபா - மே 24

 பாரத நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடி தன் பத்தொன்பதாம் வயதிலேயே தூக்குக்கயிற்றை முத்தமிட்ட வீரன் கர்தார் சிங் சரபாவின் பிறந்ததினம் இன்று. 
பாரத நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது தொடர்ச்சியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும். அதில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இருந்து சீக்கிய வீரர்களால் முன்னெடுக்கப்பட போராட்டம் என்பது வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய ஓன்று. கதர் கட்சி என்று உருவான புரட்சி இயக்கமும் அதில் இணைந்து தங்களை ஆகுதியாகிய வீரர்களும் இன்று மக்களிடம் மறைக்கப்பட்டது நமது துரதிஷ்டமே. அந்த வீரர்களில் முக்கியமானவர் கர்தார் சிங்.

1896ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் லூதியான மாவட்டத்தில் உள்ள சரபா என்ற கிராமத்தில் ஜாட் வகுப்பைச் சார்ந்த சீக்கியரான மங்கள்சிங் - சாஹிப் கௌர் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் கர்தார் சிங். சிறு வயதிலேயே தந்தையை இழந்த கர்தார் சிங்கை அவரது தாத்தாதான் வளர்த்து வந்தார். தனது ஆரம்பிக் கல்வியை லூதியானாவிலும் பின்னர் ஒரிசா மாநிலத்தின் கட்டாக் நகரிலும் முடித்த கர்தார் சிங், பட்டப்படிப்பு படிக்க 1912ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். ஆங்கில அரசின் வரைமுறை அற்ற வரிவசூலால் பாதிக்கப்பட்ட சீக்கியர்கள் அப்போது அமெரிக்காவிலும் கனடாவிலும் குடியேறிக்கொண்டு இருந்தனர். தாய்நாட்டின் அவலநிலையைக் கண்டு கொதித்த தேசபக்தர்கள் அங்கங்கே கூடி இந்த தாழ்வுநிலையை மாற்றுவது பற்றியும், ஆங்கில அரசை தூக்கி எறிவது பற்றியும் சிந்தித்துக் கொண்டு இருந்தனர்.

தேசபக்தர்கள் இணைந்து கதர் கட்சி என்ற புரட்சி இயக்கத்தைத் தொடங்கி இருந்தனர். சோஹன்சிங், லாலா ஹர்தயாள் ஆகியோர் இந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக இருந்தனர். இரும்பைக் காந்தம் ஈர்ப்பது போல, கர்தார் சிங்கை லாலா ஹர்தயாள் ஈர்த்தார். ஹிந்தி உருது பஞ்சாபி குஜராத்தி குர்முகி ஆகிய மொழிகளில் கதர் என்ற பெயரில் பத்திரிகையை சின்ஹட்ட புரட்சி இயக்கம் வெளியிட்டுக்கொண்டு இருந்தது. அந்தப் பத்திரிகையில்  கட்டுரைகள் கவிதைகள் என்று தொடர்ச்சியாக எழுதி கர்தார் சிங் சுதந்திர வேட்கையைத் தூண்டிக்கொண்டு இருந்தார். வெளிநாடுகளில் வாழும் பாரதியர்களிடம் ஆங்கில அரசின் கொடுமையை கொண்டு செல்லும் பணியை கதர் பத்திரிகை செய்து கொண்டு இருந்தது.

1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் தொடங்கியது. அதே ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் கதர் கட்சி முறைப்படி ஆங்கில ஆட்சி மீது போர் தொடுக்கிறோம் என்று அறிவித்தது. பாரத நாட்டில் உள்ள இந்திய ராணுவ வீரர்களிடம் இந்த செய்தி பரப்பப்பட்டது. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க கர்தார் சிங் உள்பட பல்வேறு வீரர்கள் பாரத நாட்டுக்கு திரும்பினார். கல்கத்தா நகருக்கு வந்து சேர்ந்த கர்தார் சிங் அங்கே ஜுகாந்தர் இயக்கத்தின் தலைவரான ஜதின் முகர்ஜியின் அறிமுகக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வாரணாசி சென்று ராஷ்பிஹாரிபோஸை சந்தித்தார். போராட்டத்தை முன்னெடுக்க அரசு கருவூலங்களையும், பணக்காரர்களையும் கொள்ளை அடிப்பது என்றும் பெராஸ்பூர் நகரில் ஊழல் ராணுவ பாசறையைக் கைப்பற்றி ஆயத்தப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் புரட்சியாளர்களின் ஊடே நுழைந்த துரோகி ஒருவனால் இந்த செய்திகள் ஆங்கில அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. கைது நடவடிக்கை தொடங்கியது. பல்வேறு வீரர்கள் தப்பியோடினார். பலர் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு தப்பினார்கள். ஆனால் தனது தோழர்கள் சிறையில் வாடும்போது தலைமறைவாக இருக்க கர்தார் சிங் தயாராக இல்லை. எனவே அவர் மீண்டும் ஆப்கானிஸ்தானிலில் இருந்து பாரதம் திரும்பினார். மீண்டும் ராணுவ வீரர்களை புரட்சியில் ஈடுபடுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். அந்த காலகட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

கதர் கட்சியைச் சார்ந்த 17 வீரர்களுக்கு மரண தண்டனையும், மேலும் பலருக்கு பல்வேறு தண்டனைகளும் அளிக்கப்பட்டது. 1915ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் தனது பத்தொன்பதாம் வயதில் தூக்குமேடையில் பாரத தேவியின் காலடியில் தனது உயிரை ஆகுதியாகினார் அந்த வீரர்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் என்பது கர்தார் சிங் போன்ற பல்வேறு தியாகிகளின் வீரத்தால், தியாகத்தால் நமக்கு அளிக்கப்பட்டது என்பதை நாம் என்றும் நினைவில் வைக்கவேண்டும். 

சனி, 23 மே, 2020

மஹாராணி காயத்ரி தேவி - மே 23

ராஜாஜியின் ஸ்வராஜ்யா கட்சியின் மூத்த தலைவரும், ஜெய்பூர் சமஸ்தானத்தின் முன்னாள் மஹாராணியுமான ராஜமாதா காயத்ரிதேவியின் பிறந்ததினம் இன்று.


வங்காளத்தில் உள்ள கூச் பெஹர் சமஸ்தான அரசராக இருந்த மஹாராஜா ஜிதேந்த்ர நாராயணன் - இந்திரா ராஜே தம்பதியரின் மகளாக 1919ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி பிறந்தவர் இளவரசி காயத்ரி தேவி. பரோடா அரசர் ஷாயாஜிராய் கெய்வர்டின் மகள்தான் இந்திரா ராஜே. தனது ஆரம்ப கல்வியை லண்டன் நகரிலும் பின்னர் ரபீந்த்ரநாத் டாகுரின் சாந்திநிகேதனிலும், ஸ்விட்சர்லாந்து நாட்டிலும் பயின்றவர் காயத்ரி தேவி. ஜெய்பூர் சமஸ்தானத்தின் அரசரான மான்சிங் பகதூரை காயத்ரி தேவி மணந்து கொண்டு ஜெய்பூர் அரசியானார்.

நாடு விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து ஜெய்பூர் சமஸ்தானம் பாரத நாட்டோடு இணைந்தது. ராஜா மான்சிங் ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜபிரமுக் என்று அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் சுவீடன் நாட்டுக்கான பாரத நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

சுதந்திர சிந்தனையும், முற்போக்கு எண்ணங்களும் கொண்ட மஹாராணி காயத்ரி தேவி, ராஜாஜி தொடங்கிய ஸ்வதந்த்ரா கட்சியில் இணைந்து, அதன் முக்கியமான தலைவராக உருவானார். 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்வதந்திரா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோசலிச பொருளாதார கொள்கைகளை கடுமையாக எதிர்த்த காயத்ரி தேவியை நெருக்கடி நிலைமை காலத்தில் இந்திரா கைது செய்து திஹார் சிறையில் அடைத்தார். ராஜாஜியின் மறைவைத் தொடர்ந்து ஸ்வதந்த்ரா கட்சி அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழக்க, மஹாராணி காயத்ரி தேவியும் அரசியலில் இருந்து விலகினார்.

மஹாராணி காயத்ரி தேவி குதிரை சவாரி செய்வதிலும், போலோ விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். அதுபோலவே வனவிலங்குகளை வேட்டையாடுவதில் அவர் சிறந்து விளங்கினார். மஹாராணி காயத்ரி தேவி நினைவாக ஆண்டுதோறும் போலோ விளையாட்டுப் போட்டியை ஜெய்பூர் அரச குடும்பம் நடத்தி வருகிறது. தனது ஆட்சியில் இருந்த பகுதியில் பல்வேறு கல்வி நிலையங்களை மஹாராணி தொடங்கினார். அதுபோலவே நகை தயாரிப்பு, கைத்தறி துணிகள் போன்ற பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிப்பிலும், சந்தைப்படுத்துவதிலும் கலைஞர்களுக்கு மஹாராணி உறுதுணையாக இருந்தார்.

பனிரெண்டு வயதில் சிறுத்தையை வேட்டையாடியது, மஹாராணி என்ற நிலையில் பர்தா முறையில் சிக்கிக் கொள்ளாதது, அரசியலிலும் சமூக சேவையிலும் ஒரே நேரத்தில் தீவிரமாக இயங்கியது, சிறை தண்டனை அனுபவித்தது என்று வாழ்வின் பல்வேறு பகுதிகளையும் வாழ்ந்து பார்த்தவர் மஹாராணி காயத்ரி தேவி.

நெருக்கடி நிலையில் சிறையில் இருந்த மகாராணியின் உடல்நிலை மோசமடைந்தது. வாய் புற்றுநோயால் அவதிப்பட்ட ராஜமாதா காயத்ரி தேவி 2009ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் காலமானார். 

வெள்ளி, 22 மே, 2020

சமூக சீர்திருத்தவாதி ராஜா ராம்மோகன்ராய் - மே 22



அது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டம். பாரதம் முழுவதும் ஆட்சி செய்த முகலாய வம்சம் வலிமை இழந்து இருந்தது. பெரும்பலத்தோடு எழுந்து வந்த மராத்தியப் பேரரசு மூன்றாம் பானிபட் போரில் ஆப்கானியர்களிடம் தோற்று, நாடு முழுவதும் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் இருந்த காலம் அது. ஆங்கில ஆட்சிக்கு ராபர்ட் கிளைவ் வலுவான அடித்தளம் இட்டிருந்தார். பாரதத்தில் தழைத்திருந்த சனாதன தர்மமும், அரேபியாவில் இருந்து வந்த இஸ்லாமிய கருத்துக்களும், ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியான கிருஸ்துவ சிந்தனைகளும், அதோடு ஆங்கிலப் படிப்பும் என்று ஒரு புதிய காலத்திற்கு பாரதம் தயாராகிக்கொண்டு இருந்த காலம் அது.  பல்வேறு சிந்தனையாளர்கள், கவிஞர்கள், தத்துவ ஞானிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு பாரதத்தை வழிநடத்தும் முக்கியமானவர்கள் தோன்றிய காலமும் இதுதான். இந்த புகழ்வாய்ந்த முன்னோடிகளில் முக்கியமானவரான ராஜா ராம்மோகன்ராய் பிறந்தநாள் இன்று.

வங்காளத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் ராதாநகர் கிராமத்தில் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் நாள் ராம்காந்தோராய் - தாரணிதேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் ராம்மோகன்ராய். முகலாய ஆட்சியாளர்களின் சார்பாக வரிவசூலிக்கும் வேலையில் ராம்காந்தோராய் ஈடுபட்டு இருந்தார். அன்றய வழக்கத்தின்படி ராம்மோகன்ராய் வங்காள மொழியையும் பாரசீக மொழியையும் கற்றுத் தேர்ந்தார். மேற்படிப்புக்காக பாட்னா சென்ற ராம்மோகன் அங்கே அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வாரணாசியில் சமிஸ்க்ரித மொழியையும் கற்றார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹீப்ரு, லத்தீன் என்று மேலைநாட்டு மொழிகள் பலவற்றையும் அவர் கற்றார். பல மொழி தெரிந்து இருந்ததால், பல்வேறு சமயங்களின் மூலநூல்களை அந்தந்த மொழிகளில் ராம்மோகன் படிக்கத் தொடங்கினார்.

ஆழமான படிப்பு அவரிடம் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது. தொடர்ந்த விவாதங்கள் அவருக்கும் அவர் தந்தைக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை உருவாக்கியது. வீட்டை விட்டு வெளியேறிய ராம்மோகன்ராய், இமயமலை சாரல்களிலும் பின்னர் திபெத்திலும் அலைந்து திரிந்து பின்னர் சில காலம் கழித்து வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். 1803ஆம் ஆண்டு அவர் தந்தை இறந்து விட ராம்மோகன்ராய் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய்துறையில் சிறுது காலம் பணியாற்றினார்.

சமுதாயத்தில் நிலவிவந்த பல்வேறு மூடநம்பிக்கைகளை மாற்றும் பணியில் ஆத்மீய சபை என்ற அமைப்பை நிறுவினார். உருவ வழிபாடு, இறுக்கமான ஜாதியமுறை ஆகியவற்றை எதிர்த்தும், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும் என்றும், பலதார மணம், சதி ஆகியவற்றை எதிர்த்தும் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  ரபீந்த்ரநாத் தாகூரின் தந்தையான தேவேந்த்ரநாத் தாகூரோடு இணைந்து ப்ரம்ம சமாஜ் என்ற அமைப்பை உருவாக்கினார்.

பாரதத்தின் கடைசி முகலாய மன்னராக இருந்த பகதூர்ஷா ஜாபரின் தந்தையான இரண்டாம் அக்பர் ராம்மோகன்ராய்க்கு ராஜா என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தார். முதன்முதலாக பாரத நாட்டின் செல்வதை ஆங்கிலேயர்கள் எடுத்துச் செல்கிறார்கள் என்று பதிவு செய்தது ராஜா ராம்மோகன்ராய்தான்.

மாணவர்களுக்கு ஆங்கில கல்வி அளிக்கப்படவேண்டும் என்பதுதான் ராம்மோகன்ராயின் எண்ணமாக இருந்தது. இதற்காக கொல்கத்தா நகரில் அவர் 1817ஆம் ஆண்டே ஹிந்து கல்லூரியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஆங்கிலோ ஹிந்து பள்ளி, ஸ்காட் சர்ச் கல்லூரி, வேதாந்தா கல்லூரி  ஆகிய நிறுவனங்கள் உருவாகவும் ராம்மோகன் உதவியாக இருந்தார். பத்திரிகை சுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.

பாரதத்தின் மறுமலர்ச்சி காலத்தை தொடங்கி வைத்த ராஜா ராம்மோகன்ராய் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் நாள் இங்கிலாந்து நாட்டில் காலமானார்.   

புதன், 20 மே, 2020

பிபின் சந்திர பால் நினைவு தினம் - மே 20.


இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த முன்னோடி தலைவராகவும், பால் லால் பால் என்று அழைக்கப்பட்ட மூன்று முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய பிபின் சந்திரபால் அவர்களின் நினைவு தினம் இன்று. பஞ்சாபில் லாலா லஜபதி ராய், மஹாராஷ்டிராவில் பால கங்காதர திலகர், வங்காளத்தில் பிபின் சந்திர பால் ஆகியோர்தான் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நாட்டில் சுதந்திர வேட்கையை ஊட்டியவர்கள். தமிழகத்தின் முன்னணி சுதந்திர வீரர்களாக விளங்கிய வ உ சி, சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகியோருக்கு வழிகாட்டியாக விளங்கியவர்கள் இந்த மூவருமே.

பிபின் சந்திர பால் இன்று வங்கதேசத்தில் இருக்கும் சில்ஹெட் மாவட்டத்தில் போயல் என்ற கிராமத்தில் 1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தை ராமச்சந்திர பால் ஒரு பாரசீக மொழி அறிஞர். தாயார் நாராயணி. வைஷ்ணவ பாரம்பரியத்தைக் கொண்ட இவர்கள் குடும்பம் ஓரளவு வசதியானதுதான். அன்றய வங்காளம் என்பது ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகளின் சேவையால் புதிய கருத்துக்களை வரவேற்கும் நிலையில் இருந்தது.

கல்கத்தா மாநிலக் கல்லூரிக்கு படிக்கச் சென்ற பிபினுக்கு ப்ரம்மசமாஜ தொடர்பு உருவாகிறது. கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்ட பிபின் ஒரு பள்ளியில் தலைமையாசிரியராகவும் பிறகு கல்கத்தா பொது நூலகத்தில் நூலகராகவும் பணியாற்றினார். அப்போது ஒரு விதவையை மணம் புரிந்து கொண்டதால் குடும்பத்தாரோடு அவரது உறவு சீர்குலைகிறது. நாடெங்கிலும் உருவாகிக்கொண்டு இருந்த விடுதலை உணர்ச்சியால் பிபினும் தனது வேலையத் துறந்து முழுநேரமும் நாட்டுக்காக உழைக்கத் தொடங்குகிறார்.

வங்காளம் இரண்டாகப் பிரிவுபடுவதை தீவிரமாக எதிர்த்து பல்வேறு கூட்டங்களில் உரையாற்றுகிறார் பிபின். ஸ்வராஜ்யம், சுதேசி, அந்நிய துணிகளை உபயோகிக்காமல் இருப்பது, அன்னியத் துணிகளை எரிப்பது என்று ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறார். வந்தேமாதரம் வழக்கில் அரவிந்தருக்கு எதிராக சாட்சியம் அளிக்க மறுத்ததால் ஆங்கில அரசு இவரைக் கைது செய்கிறது.
அந்த சிறைத்தண்டனை முடிந்தது பிபின் சந்திரபால் விடுதலையைக் கொண்டாடியதற்குத்தான் வ உ சி மற்றும் சுப்ரமணிய சிவாவின் மீது தமிழகத்தில் வழக்கு பதிவாகிறது.

அந்நியப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது, புதிய தொழில்களை இந்தியர்களே தொடங்கவேண்டும், பொருளாதார ரீதியில் ஆங்கிலேயர்கள் நம்மைச் சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே பொருளாதார ரீதியில் நாம் அவர்களை தோற்கடித்தால் சுதந்திரம் விரைவாகக் கிடைக்கும் என்பது பிபின் சந்திர பாலின் முழக்கமாக இருந்தது.
இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிபின் சந்திர பால், கீதை மற்றும் உபநிஷதங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். இந்திய தேசியம், இந்தியாவின் ஆன்மா போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் செல்லத் தொடங்கிய போது, அரசியலில் இருந்த விலகிக் கொண்டார்.

வங்காளம் தந்த இந்த வீரர் தனது 73ஆவது வயதில் 1932ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் பாரதத்தாயோடு கலந்தார்.

தன்னலம் கருதாத தியாகிகளின் வாழ்க்கை நமக்கு பாடமாக அமையட்டும்.

செவ்வாய், 19 மே, 2020

முதல் சுதந்திரப் போரின் நாயகன் நானா சாஹேப் - மே 19

வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி சிறிது சிறிதாக பாரதம் நாட்டின் பெரும்பகுதியை தங்கள் ஆளுமைக்கு கொண்டுவந்தனர். அந்நிய ஆட்சியை வேரோடு அகற்றி சுதந்திரத்தை மீண்டும் பிரகடனம் செய்யும் முகமாக உருவான முதல் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான கதாநாயகன் நானா சாஹேபின் பிறந்தநாள் இன்று. 


மூன்றாவது மராட்டியப் போரில் ( 1817 - 1818 ) மராட்டியர்களைத் தோற்கடித்து அவர்களிடம் இருந்து பாரத நாட்டின் பெரும்பான்மையான பகுதியின் ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர்கள் உருவானார்கள். மராட்டியப் படை முற்றிலும் உருக்குலைந்து இருந்தது. அடுத்த நாற்பது வருடங்களில் தங்கள் நடவடிக்கைள் மூலம் அதுவரை முக்கிய சக்தியாக விளங்கிய மராட்டியர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர். மராட்டியப் பகுதியில் இருந்து பேஷ்வா இரண்டாம் பாஜிராவை கான்பூர் நகருக்கு அருகில் உள்ள பிதூர் பகுதியில் வசிக்குமாறு கம்பெனி. .வாரிசு இல்லாத பேஷ்வா நாராயண் பட் - கங்காபாய் தம்பதியரின் மகனான நானா கோவிந்த் டோண்டு பந்த் என்ற இளைஞரை தத்து எடுத்துக்கொண்டார். 

1818-ல் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலோ-மராட்டா போரின் தொடர்ந்த நடைபெற்றது தான் 1857 போர். இந்த இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் பொருளாதாரத்தை முற்றிலும் சிதைத்திருந்தது. பல்வேறு குடிசைத் தொழில்களும், சிறு தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன. மக்கள் பெரும் வரிவிதிப்பிற்கு உள்ளாயினர். மறைமுக மதமாற்றம் மிக தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக கிறித்துவ மதத்திற்கு மாறுவதன் மூலம் பெரும் வரிவிதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் மக்களிடையே வேகமாக பரப்பப்பட்டது. கோயில் சார்ந்த குடியிருப்புகளும், தொழில்களும் பெரும் வன்முறைக்கு இலக்காயின. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்த இந்தியர்கள் பலரும் “சுபேதார்” என்ற பணிநிலைக்கு மேல் உயர்த்தப்படவில்லை. வாரிசு இல்லாத மன்னர்களின் அரசை எந்த தர்ம நியாயமும் இல்லாமல் ஆங்கில ஆட்சி அபகரித்துக் கொண்டது. பேஷ்வாவின் வாரிசான நானா சாஹேபை ஆங்கில ஆட்சி அங்கீகரிக்க மறுத்துவிட்டது. 

மொகலாய மன்னர்களின் வரிசையில் கடைசியானவரான பகதூர் ஷா-2  தனது 62-வது வயதில் 1837-ஆம் ஆண்டு தான் ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது. அவரது தந்தையான 2-வது அக்பர் ஷா 1837-ல் இறந்தபோது, மூத்த மகன் உயிரோடு இல்லை என்பதால், 2-வது மகனான பகதூர் ஷா-2 ஆட்சியில் அமர ஆங்கிலேய ஆட்சி  ஒப்புதல் கொடுத்தது.

இந்தியாவின் பெரும்பாலான ராஜ்ஜியங்கள் ஏற்கெனவே ஆங்கிலேயர் வசம் வந்திருந்தன. பகதூர் ஷாவிற்கு ஆங்கிலேயர் பென்ஷன் கொடுத்து விட்டு, ராஜ்ஜியத்தின் நிர்வாகத்தை தங்கள் வசம் எடுத்துக் கொண்டு விட்டனர். ஒரு சிறு பகுதியில் மட்டும் பெயருக்கு வசூல் பண்ணிக்கொள்ளவும், தனது சொந்த பாதுகாப்பிற்கென ஒரு சிறுபடையை வைத்துக் கொள்ளவும் பகதூர் ஷாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. எல்லாப் பகுதிகளிலும் இருந்த அழுத்தம் பெரும் போராட்டமாக வெடித்தது. பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் இணைந்து துப்பாக்கி குண்டை உபயோகம் செய்யவேண்டி உள்ளது என்ற வதந்தி இந்த எரிமலையை பற்ற வைத்தது. 

நானா சாஹேபின் சிறு வயது நண்பர்களான தாந்தியா தோபே, ஜான்சியின் மகாராணியாக இருந்த லக்ஷ்மிபாய், அஸிமுல்லா கான் ஆகியோர் இந்த சுதந்திரப் போராட்டத்தை பல்வேறு இடங்களில் முன்னெடுத்தனர். முதல் இந்திய சுதந்திரப் போர் 29 மார்ச், 1857 அன்று துவங்கியது. மங்கள் பாண்டேயின் புரட்சியுடன் இது தொடங்கியது. இதை தொடர்ந்த அடுத்த சில மாதங்களில், புரட்சியாளர்கள் தொடர் வெற்றிகளை அடைந்தனர். அதே வருடம் மே மாதம் 10-ஆம் தேதியன்று தில்லி பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து விடுவிக்கப்பட்டது. 

தில்லியை தொடர்ந்து கான்பூர், லக்னொ, குவாலியர் மற்றும் பாண்டா ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. அதே வருடம் ஜூன் மாதம், 4, 5, மற்றும் 6 ஆகிய தேதிகளில், அசம்கர், வாரணாசி மற்றும் அலகாபாத் ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. ஜூன் 11 அன்று, ஃபைசாபாத், தைராபாத்/பாராபங்கி, சலன், சுல்தான்பூர் மற்றும் கோண்டா ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. இதே சமயத்தில், மத்திய இந்தியா, ஜான்சி, நெளகான், குருசராய், பண்பூர  மற்றும் ஓராய் ஆகிய பகுதிகள் பிரிட்டிஷ் படைகளுடன் போர் நடந்தது. இந்தப் போரில் பிரிட்டிஷ் படைகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். 27 ஜூனன்று கான்பூர், ஜூலை 5 லக்னொ ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. 

பகதூர் ஷா ஜபரின்(Bahadur Shah Zafar) தலைமையில் 15 ஆகஸ்டு 1857-அன்று ஒரு இந்திய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் மே 1858 வரை தொடர்ந்து செயல்பட்டது. கான்பூரில் இருந்த கிழக்கிந்திய ராணுவத்தின் படையை சுதந்திரப் வீரர்களோடு நானா சாஹேப் முற்றுகை இட்டார். ஆங்கிலத் தளபதி வீலர் நானா சாஹேபிடம் சரணடைந்தார். மீண்டும் ஆங்கிலப் படை கான்பூரைத் தாக்கி அதனை தங்கள் வசம் கொண்டுவந்தனர். 

இந்தப் போரில் இந்தியர்கள் ஈட்டிய வெற்றியில் கிராமங்களுக்கு பெரும் பங்குண்டு. புரட்சிப் படைக்குத் தேவையான உணவை இந்த கிராமங்கள் போதுமானளவு அளித்துவந்தன. இதை அறிந்த பிரிட்டிஷார் பல்வேறு கிராமங்களை தரைமட்டமாக்கினர். கிராமத்து மனிதர்களை அவர்கள் பூமியிலிருந்து விரட்டினர். குறிப்பாக தற்கால டாக்கா தொடங்கி பேஷாவர்(பாகிஸ்தான்) வரையிலான நீண்ட “நெடுஞ்சாலை”யில்(Grand Trunk Road) இருந்த கிராமங்கள் அனைத்தும் சின்னாபின்னமாயின. இதனால் இந்தியப் படையின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடங்கள் அவர்களின் அதிகார எல்லையில் இருந்து நழுவின. இதை நன்கு உபயோகப்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசு இந்தியப் படை மீதான தாக்குதலுக்கு வசதியாக தங்கள் படைகளை இந்த இடங்களில் நிறுவியது. தங்கள் படைகளுக்கு தேவையான அனைத்தையும் கொண்டு செல்ல இந்த பெரும் “நெடுஞ்சாலை” அவர்களுக்கு பெரிதும் உதவியது. தாங்கள் கைப்பற்றிய இடங்களிலிருந்து பிரிட்டிஷ் படை இந்தியப் படை மீது தாக்குதலை துவங்கியது. இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற பிரிட்டிஷ் படை மிக மூர்க்கமான தாக்குதலை நடத்தியது. இப்படி ஒரு மூர்க்கத்தனத்தை எதிர்பார்த்திராத இந்தியப் படை பெரும் இழப்பை சந்தித்தது. கொல்கத்தா முதல் கான்பூர் வரை இடங்களை கைப்பற்றியபடி முன்னேறிய பிரிட்டிஷ் படையினரின் மூர்க்கமான தாக்குதலில் லட்சக்கணக்கான இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 

கான்பூர் ஆங்கிலேயர்கள் வசமானதைத் தொடர்ந்து நானா சாஹேப் நேபாளத்திற்கு தப்பிச் சென்றார். மீண்டும் ஒருமுறை கான்பூர் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஆனால் அதுவும் வெற்றிகரமாக முடியவில்லை. 

புரட்சிக் களத்தில் ஒவ்வொரு மாவீரரும் வரிசையாக களப்பலி ஆனார்கள்.  ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார். குமாரசிம்மன் உயிரிழந்தார். மெளல்வி அகமதுஷா நண்பன் என கருதிய ஒரு இந்திய சிப்பாயால் சுட்டுக் கொல்லப்பட்டார். பகதூர் ஷா நாடுகடத்தப்பட்டார். தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டார். நேபாளத்திலும் இமயமலைக் காடுகளிலும் ஒளிந்து வாழ்ந்த நானா சாஹேப் மரணமடைந்து விட்டதாக ஆங்கில அரசு அறிவித்தது.  ஆனால் 1906 அல்லது 1907ஆம் ஆண்டில் நானா சாஹேப் மஹாகவி பாரதியைச் சந்தித்ததாக பாரதியின் நண்பர்கள் பதிவு செய்துள்ளார்கள் 

ஆனாலும் நானா சாஹேப் போன்ற தியாகிகளின் பலிதானம் வீணாகவில்லை. அவர்கள் காலடியில் இருந்து இன்னும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்கள் தோன்றினார்கள். தொடர்ந்த போராட்டத்தின் இறுதியில் பாரதம் முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு தொன்னூறு ஆண்டுகள் கழித்து சுதந்திரம் அடைந்தது. இன்று நாம் சுதந்திரமாக இருக்க தங்கள் வாழ்வைத் தியாகம் செய்த வீரர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகுக.   

நாதுராம் கோட்ஸே - பிறந்தநாள் மே 19


நாதுராம் கோட்ஸேவின் இயற்பெயர் ராமச்சந்திர கோட்ஸே. ஆங்கிலேய ஆட்சியில் தபால் துறையில் பணியாற்றிவந்த விநாயக கோட்ஸே - லக்ஷ்மி தம்பதியினரின் மகன் இவர். இவருக்கு முன் பிறந்த மூன்று ஆண் குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், இவர் பெற்றோர் இவரின் சிறுவயதில் பெண் குழந்தையைப் போல வளர்த்தனர். இவரின் சகோதர் பிறந்த பிறகே இவருக்கு ஆண் உடைகளை அணிவித்தனர். ஒரு பெண்ணைப் போல இவருக்கு முக்குத்தி அணிவித்து இருந்ததால் இவரை நாதுராம் ( முக்குத்தி அணிந்த ராமன் ) என்று அழைத்தனர். அந்தப் பெயராலேயே அவர் தனது வாழ்நாள் எல்லாம் அறியப்பட்டார்.

ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்து மஹாசபா இயக்கங்களோடு தொடர்பில் இருந்த நாதுராம் அக்ரிணி என்ற மராத்திய மொழி பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். 1940ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்து மஹாசபா ஆகிய இயக்கங்கள் மீது அதிருப்தி அடைந்து ஹிந்து ராஷ்ட்ரதள் என்ற அமைப்பை உருவாக்கினார். இதற்கிடையே ஹைதராபாதில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார்.

நாடு சுதந்திரத்தை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. நாட்டைப் பிரிப்பது என்பது தடுக்கமுடியாத செயலாக ஆகிக்கொண்டு இருந்தது. நேரடி நடவடிக்கை நாள் என்ற பெயரில் கலவரத்திற்கு ஜின்னா நேரடி அழைப்பு விடுத்தார். கல்கத்தா நகரம் பற்றி எரிந்தது. " நாங்கள் போரை விரும்பவில்லை. ஓன்று நாட்டைப் பிரிக்கவும், அல்லது நாடு என்பதே இல்லாமல் ஆக்கிவிடுவோம்" என்று ஜின்னா அறைகூவல் விடுத்தார்.
வங்காளத்தின் அன்றய முதல்வர் சுஹ்ரவாதி காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட, 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் வங்காள ஹிந்துக்களுக்கு கருப்பு தினமாக விடிந்தது. ஏழாயிரத்தில் இருந்த பத்தாயிரம் வரை இறந்தவர்கள் எண்ணிக்கை இருக்குமென்று கூறப்படுகிறது. மத ரீதியில் நாட்டைப் பிரிப்பதைத்தவிர வேறு வழி இல்லை என்ற நிலைமை உருவானது.

ரத்தத்தில் கோடு கிழித்து பாரதம் துண்டாடப்பட்டது. பாகிஸ்தான் தன்னை முஸ்லீம் நாடாகப் பிரகடனம் செய்து கொண்டது. ஓநாய்களுக்கு நடுவில் எங்களைத் தள்ளிவிட்டீர்கள் என்று கான் அப்துல் கபார் கான் கதறினார். மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்காளத்திலும் இருந்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். எல்லையோரத்தில் இருந்த ஹிந்துக்கள் தங்கள் பதிலடியை ஆரம்பித்தனர். இரு நாடுகளிலும் உடமைகளை இழந்து, உறவுகளைப் பலி கொடுத்த அகதிகள் குவிந்தார்கள். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் பாரத நாட்டைப் பற்றிய புரிதலே இல்லாமல் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் சிரில் ஜான் ராட்கிளிப் கிழித்த கோடு பல லட்சக்கணக்கான மக்களின் தலையெழுத்தை புரட்டிப் போட்டது.

நாட்டைத் துண்டாடிய ஆங்கிலேய அரசு பாரதத்தில் இருந்த சமஸ்தானங்களை பாரதநாட்டில் இணைய வேண்டுமா, பாகிஸ்தானோடு இணைய வேண்டுமா அல்லது தனியே சுதந்திரமாக இருக்க வேண்டுமா என்பதை அந்தந்த மன்னர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு பிச்சைக்காரன் கையில் உள்ள கிழிந்த துணியைப் போல விட்டுச் சென்றது. காஷ்மீர் மன்னர் தனித்து இயங்க முடிவு செய்தார். பாகிஸ்தான் படைகள் மலைவாழ் மக்கள் என்ற போர்வையில் காஷ்மீரத்தைக் கைப்பற்ற சென்றது. காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவோடு இணைய சம்மதித்தார். அந்த இணைப்புக்கு காரணமாக இருந்தவர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அன்றய சர்சங்கசாலக் குருஜி கோல்வாக்கர் அவர்கள்.

நாடு பிரிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட அரசு சொத்துக்களின் மதிப்பில் விகிதாச்சார அடிப்படையில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படவேண்டிய பங்கை அன்றய ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு நிறுத்தி வைத்தது. அந்தப் பணம் பாகிஸ்தானை ஆயுதங்கள் வாங்கவும், பாரதநாட்டுக்கு எதிராகவும் பயன்படும் எனவே அதனைத் தரக்கூடாது என்று அன்றய அரசு முடிவு செய்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியே ஆகவேண்டும், பணத்தை தரவேண்டும் இல்லை என்றால் வழக்கம் போல சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று காந்தி கூறினார்.

மீண்டும் மீண்டும் ஹிந்து மக்களுக்கு எதிராக காந்தி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். இனியும் அவர் உயிரோடு இருந்தால் ஹிந்து மக்கள் வாழவே முடியாது எனவே அவரைக் கொன்று விட வேண்டியதுதான் என்று கோட்ஸே அப்போதுதான் முடிவெடுக்கிறார்.
1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள், தனது வழக்கமான பிரார்தனைக் கூட்டத்திற்கு வந்துகொண்டு இருந்த காந்தியை நேருக்கு நேர் நின்று துப்பாக்கியால் சுடுகிறார். நெஞ்சைத் துளைத்த குண்டினால் காந்தி மரணமடைகிறார். சுட்டுவிட்டு தப்பியோட கோட்ஸே முயற்சி செய்யவே இல்லை.

காந்தி கொலை வழக்கு
கோட்ஸே உடன் நாராயண ஆப்தே, திகம்பர் பாட்கே, சங்கர் கிஸ்தயா, விஷ்ணு கார்கே, கோபால் கோட்ஸே, மதன்லால் பாவா, தாத்தாத்ரேய பார்ச்சூரே மற்றும் விநாயக தாமோதர சாவர்க்கர் ஆகியோர் மீது கொலை குற்றம், கொலை செய்ய சதி செய்தது என அரசு வழக்கு தொடர்ந்தது. ஆர் எஸ் எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. பின்னர் ஆர் எஸ் எஸ் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார். நீதிபதி ஆத்மசந்திரன் நாதுராம் கோட்ஸே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோர்க்கு மரணதண்டனை விதித்தும், சாவர்க்கரை விடுதலை செய்தும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
கோட்ஸேவைத் தவிர்த்து மற்றவர்கள் மேல் முறையீடு செய்தனர். சங்கர் கிஸ்தயா மற்றும் தாத்தாத்ரேய பார்ச்சூரேஇருவரை விடுவித்தும் மற்றவர்கள் மீதான தண்டனையை உறுதி செய்தும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1948ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நீதிபதி ஆத்மசரண் முன்னிலையில் கோட்ஸே தனது வாக்குமூலத்தை வாசித்தார். அதில் அவர் இந்தக் கொலைக்கும் மற்றவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் காந்தி கொலைக்கு தான் மட்டுமே காரணம் என்றும் தான் ஏன் காந்தியைக் கொலை செய்ய நேர்ந்தது என்றும் விளக்கினார். இந்த நீண்ட வாக்குமூலத்தை காங்கிரஸ் அரசு யாரும் பிரசுரம் செய்யாமல் இருக்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. வரலாற்றின் பக்கங்களில் தான் செய்தது சரிதான் என்றுதான் தீர்ப்பு எழுதப்படும் என்று கோட்ஸே கூறினார். 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி அரசு இந்த தடையை விலக்கி உத்தரவு பிறப்பித்தது.

காந்தி கொலைவழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான திரு ஜி டி கோஸ்லா எழுதிய The Murder of Mahathma என்ற நூலில் உள்ள வரிகள் இவை
The audience was visibly and audibly moved. There was a deep silence when he ceased speaking. Many women were in tears and men were coughing and searching for their handkerchiefs. The silence was accentuated and made deeper by the sound of an occasional subdued sniff or a muffled cough. It seemed to me that I was taking part in some kind of melodrama or in a scene out of a Hollywood feature film. Once or twice I had interrupted Godse and pointed out the irrelevance of what he was saying, but my colleagues seemed inclined to hear him and the audience most certainly thought that Godse's performance was the only worth-while part of the lengthy proceedings. A writer's curiosity in watching the interplay of impact and response made me abstain from being too conscientious in the matter. Also I said to myself: 'The man is going to die soon. He is past doing any harm. He should be allowed to let off steam for the last time.'
I have, however, no doubt that had the audience of that day been constituted into a jury and entrusted with the task of deciding Godse's appeal, they would have brought in a verdict of ' not guilty' by an overwhelming majority.

கோட்ஸே மற்றும் ஆப்தே ஆகியோரின் மரண தண்டனை 1948ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் நாள் அம்பாலா சிறைச்சாலையில் நிறைவேற்றப்பட்டது. கோட்ஸேயின் கடைசி ஆசை தனது அஸ்தி அகண்ட பாரதம் உருவான பின்பு சிந்து நதியில் கரைக்கப்பட்ட வேண்டும் என்பதே.

கோட்ஸே காந்தி கொலைக்கான முழுப் பொறுப்பையும், தண்டனையையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். கொலைக்கான காரணங்களையும் விளக்கியுள்ளார். அவர் தரப்பு நியாயத்தையும் கேட்பதில் தவறில்லைதானே