சனி, 20 ஜூலை, 2019

மைசூரின் கடைசி மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையார் - பிறந்தநாள் ஜூலை 18


மைசூர் சமஸ்தானத்தின் இருபத்தி ஐந்தாவது மஹாராஜாவும் ஏறத்தாழ ஐந்தரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பரம்பரையின் கடைசி வாரிசாகவும் இருந்த மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையாரின் பிறந்தநாள் இன்று.

மைசூரின் மன்னராக இருந்த நாலாம் கிருஷ்ணராஜ உடையாரின் சகோதரர் இளவரசர் நரசிம்மராஜஉடையார். இளவரசர் நரசிம்மராஜ உடையாரின் மகனாகப் பிறந்தவர் ஜெயசாம்ராஜேந்திர உடையார். தந்தை இறந்ததால் இவர் இளவரசனாக நியமிக்கப்பட்டார். மஹாராஜா கிருஷ்ணராஜ உடையாரின் மறைவுக்குப் பிறகு ஜெயசாம்ராஜேந்திர உடையார் மைசூர் சமஸ்தானத்தின் மன்னராக 1940ஆம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டார். 1947ஆம் ஆண்டு பாரத நாடு சுதந்திரம் அடையும் நேரத்தில் மஹாராஜா தனது சமஸ்தானத்தை பாரத நாட்டோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார். அதோடு தனி மைசூர் சமஸ்தானம் பாரதத்தோடு இணைந்து கர்நாடக மாநிலமாக உருவானது.

ஜெயசாம்ராஜேந்திர உடையாரை மைசூர் சமஸ்தானத்தின் ராஜபிரமுக் என்ற பதவியில் பாரத அரசு நியமித்தது. அதன் பின்னர் மதராஸ் மாகாணம் மற்றும் ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஆளுகைக்குள் இருந்த கன்னட மொழி பேசும் இடங்களை இணைத்து உருவான மைசூர் மாகாணத்தின் ஆளுநராகவும், அதன் பின்னர் அன்றய  மதராஸ் மாநிலத்தின் ஆளுநராகவும் இவர் பணியாற்றினார்.

பொதுவாகவே மைசூர் மன்னர்கள் நாட்டு மக்களின் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்கள். ஜெயசாம்ராஜேந்திர உடையாரும் அவர் காலத்தில் கல்வி அறிவைப் பரப்ப பெரும்பணத்தை ஒதுக்கினார். மருத்துவம், விவசாயம், தொழில்துறை ஆகிய துறைகளிலும் மைசூர் சமஸ்தானம் நாட்டுக்கே முன்னோடியாக திகழ்ந்தது.

அமெரிக்காவைச் சார்ந்த வில்லியம் பவ்லி என்பவரோடு இணைந்து இந்திய தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்த் கொடுத்த திட்டத்தை ஏற்று பெங்களூரு நகரில் இந்தியன் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மஹாராஜா தொடங்கினார். விமானங்களை உருவாகும் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று பாரத நாட்டின் பாதுகாப்புதுறையில் முன்னணியில் உள்ளது.

ஜெயசாம்ராஜேந்திர உடையார் கர்நாடக இசையிலும், மேற்கத்திய இசையிலும் திறமைசாலியாக விளங்கினார். தனது தாயிடம் பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட மஹாராஜா பல்வேறு மேலைநாட்டு இசை விற்பனர்களுக்கு உதவி செய்தார். கர்நாடக இசையிலும் வீணை வாசிப்பதிலும் சிறந்து விளங்கிய மஹாராஜா 94 சாகித்யங்களை இயற்றியுள்ளார். ஸ்ரீ வித்யா என்பது இவர் இயற்றிய சாகித்யங்களில் இவரது முத்திரை சொல்லாகும்.

இந்திய தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட ஜெயசாம்ராஜேந்திர உடையார் வேதாந்தம் பற்றி, கீதை பற்றி, இந்திய தத்துவவியல் பற்றி பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். பல்வேறு சமிஸ்க்ரித நூல்களை கன்னட மொழியில் மொழிபெயர்க்கும் அமைப்பை நிறுவி அதன் புரவலாராகவும் இருந்தார்.

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி மரியாதை செலுத்தி உள்ளன.

வழமையான சாம்ராஜ்யத்தின் மன்னராகத் தொடங்கி, பல்வேறு துறைகளில் பெரும்பங்களிப்பை நல்கிய அரசர் தனது ஐம்பத்தி ஐந்தாவது வயதில் 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் காலமானார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக