வெள்ளி, 19 டிசம்பர், 2025

ஜனவரி 19 – ஓஷோ நினைவுநாள்

ஓஷோ - பிறக்கவும் இல்லை - இறக்கவும் இல்லை -

1931ஆம் வருடம் டிசம்பர் 11 முதல் 1990ஆம் வருடம் ஜனவரி 19 வரை இந்த பூமிக்கு வருகை புரிந்தார்.

யாரது சமாதியில் இப்படி எழுதி நாம் பார்த்திருக்கமாட்டோம். இதுதான் ஆச்சார்ய ரஜனீஷ் என்றும் பகவான் ஓஷோ என்றும் அறியப்படுபவரை பற்றிய சித்திரம்.

ஆச்சாரிய ரஜனீஷ் 1931ஆம் வருடம் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு சமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ரஜனீஷ் சந்திரமோகன் என்பதாகும். சிறுவயதில் இருந்தே தியானத்தில் ஈடுபட ரஜனீஷ் தனது இருபத்தி ஒன்றாம் வயதில் 1953ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் நாள் ஞானம் அடைந்ததாக அறிவித்தார். 

தத்துவத்துறையில் முதுகலை பட்டம் பெற்ற ரஜனீஷ், ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். அதே காலகட்டத்தில் அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தத்துவ உரைகளை நிகழ்த்தினார். அன்றய காலகட்டத்தில் அரசு பின்பற்றிய சோசலிச பொருளாதாரக் கொள்கையை அவர் நிராகரித்து, இந்தியா முன்னேறவேண்டுமானால் அது அறிவியல் சிந்தனை, முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மூலமாகவே நடக்கும் என்று கூறி வந்தார்.

கீழைத் தத்துவத்தில் தேர்ச்சியும் ஆங்கிலத்தில் புலமையும் பெற்றிருந்த ஆச்சரிய ரஜனீஷை பலர் பின்பற்ற ஆரம்பித்தனர். .இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இவரது சீடர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.  தனது பல்கலைக்கழக வேலையைத் துறந்த ரஜனீஷ் 1974 ஆம் ஆண்டு பூனா நகரில் தனது ஆசிரமத்தைத் தொடங்கினார்.

அதன்பிறகு அமெரிக்காவில் 1981ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தை தொடங்கிய ரஜனீஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. எந்தவிதமான ஆணையும் இன்றி அமெரிக்க காவல்துறை ரஜனீஷை பனிரெண்டு நாட்கள் சிறையில் அடைந்திருந்தது. அங்கே அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 

அமெரிக்காவின் தூண்டுதலால் பல்வேறு நாடுகள் அவரைத் தங்கள் நாடுகளுக்கு உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டன.  1986ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் ரஜனீஷ் பாரதம் வந்து சேர்ந்தார்.  1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் நாள் தனது ஐம்பத்து எட்டாம் வயதில் அவர் மரணம் அடைந்தார்.

இவரது பேச்சுகளும் நூல்களும் இந்திய சிந்தனைப் போக்கில் ஒரு புது விளக்கத்தை அளித்தது என்றால் அது மிகையில்லை

வியாழன், 18 டிசம்பர், 2025

டிசம்பர் 18 - சைவநெறிக் காவலர் நல்லூர் ஆறுமுக நாவலர் அவதார தினம்

தமிழ் உரைநடையின் தந்தை, சைவ சமயத்தின் ஐந்தாம் சமயக் குரவர்  என்று போற்றப்படுபவரும்
நாயனார் நாற்குரவர் நாவலர் தென் ஞாலமிசை 
மேயினார் ஈசனருள் மேல் என்று சி வை தாமோதரன் பிள்ளையால் போற்றப்பட்ட நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களின் திருவவதார தினம் இன்று.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இலங்கையில் வெள்ளை ஏகாதிபத்தியம் வலுவாக நிலைகொண்டு இருந்தது. அவர்களின் படைகளில் முக்கியமான பாதிரிபடை இலங்கை முழுவதையும் கிருத்துவமயமாகும் பணியில் மும்முரமாக இயங்கிக்கொண்டு இருந்தது.கல்வி வாய்ப்புக்காகவும், அரச ஊழியத்துக்காகவும் தமிழ்மக்கள் சைவ சமயத்தைவிட்டு கிறித்துவ மதத்திற்கு மாறிக் கொண்டிருந்தார்கள். தமிழ்க் கல்வி புறக்கணிக்கப்பட்டு ஆங்கில மோகம் மக்களை ஆட்டிப்படைத்தது. அப்போதுதான் தமிழையும் சைவத்தையும் புதுப்பொலிவோடு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தென்னாடுடைய ஈசன் கருணையால் ஆறுமுகநாவலர் அவதரித்தார்.

யாழ்ப்பாணத்தின் நல்லூர் என்ற பகுதியில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையாரின் திருமகனாக 1822ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் ஆறுமுக நாவலர் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆறுமுகம் பிள்ளை என்பதாகும். நாவலரின் குடும்பமே தமிழில் தோய்ந்த குடும்பம். இவர் உடன்பிறந்தவர்கள் நான்கு சகோதர்களும் மூன்று சகோதரிகளும் ஆவார்கள்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும் , சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். ஆசிரியராகப் பணியேற்றதோடு, அப்பாடசாலை நிறுவுனரான பேர்சிவல் பாதிரியாரின் கிறிஸ்தவ வைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிக்கு உறுதுணையாக செயற்பட்டார்.

ஆனாலும் சைவ சமயத்தை இழித்தும் பழித்தும் கூறி மக்களை கிருத்தவ மதத்தின் பக்கம் திருப்பும் பாதிரிகளின் செயலைப் பார்த்து மனம் நொந்த ஆறுமுகம், சைவத்தின் மேன்மையையும், தமிழின் இனிமையையும் மக்கள் அறிந்து கொள்ளவே தனது வாழ்வை அர்பணிக்கத் தீர்மானித்தார். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இதனால் பலரும் சிவதீட்சை பெற்றனர். அசைவ உணவைத் தவிர்த்தனர். இவரது முயற்சியால் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறத் தொடங்கின.

கல்வித் தளத்தில் ஏற்பட்ட அறிவியல் மாற்றங்களை அவர் வரவேற்றார். கிறித்தவர்கள் தங்கள் மதத்தைப் பரப்பச்  செய்யக் கையாண்ட கருவிகள் ஒவ்வொன்றையும் நாவலர் சைவத்தை வளர்க்கக் கையில் ஏந்தினார்!  கிறித்தவ பாதிரிமார்கள் சமயம் வளர்க்க பல பள்ளிகள் நிறுவினார்கள். நாவலரும் அரும்பாடு பட்டு சைவப் பள்ளிகள்நிறுவினார். அந்தப் பள்ளிகளில் சமய சாத்திரங்கள் (தேவார திருவாசகங்கள், புராணங்கள், நாலடியார், திருக்குறள், மெய்கண்ட சாத்திரங்கள்) படிப்பிப்பதற்கு ஒரு பாடத் திட்டத்தையே வகுத்தார். அத்தோடு மேற்குநாட்டுச் சாத்திரங்களான வரலாறு, பூகோளம், கணிதம், இயற்பியல், வேற்பியல் கற்பிக்க ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வீடுதோறும் பிடி அரிசி திரட்டும் திட்டத்தை உருவாக்கினார்.

கிறித்தவர்கள் தங்கள் மதபோதனைகளைப் பரப்ப அச்சு யந்திரசாலைகளை அமைத்து நிறையப் புத்தகங்களை அச்சிட்டு மக்களிடம் கொடுத்தார்கள். நாவலரும் அவ்வாறே அச்சுக் கூடங்களை யாழ்ப்பாணத்திலும் சிதம்பரத்திலும் நிறுவி ஓலைகளில் இருந்த சைவசமய நூல்களை ஒப்புநோக்கி, பாடபேதங்கள் நீக்கிப் பதிப்பித்து வெளியிட்டார்.

கிறித்தவர்கள் வினா விடை பாணியில் (catechism) சமயக் கோட்பாடுகளை விளக்கியது போல் நாவலரும் சைவ வினாவிடை நூல்களை எழுதினார். பல நூல்களுக்கு உரை எழுதினார். அவரது நண்பர்கள், மாணாக்கர்கள் எழுதிய நூல்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தார். அல்லது பதிப்பிக்க உதவினார். நாவலரது உழைப்பால் வெளிவந்த நூல்களுக்கு அளவில்லை.

நன்னூல் விருத்தியுரை
நன்னூல் காண்டிகையுரை
நைடதவுரை
சூடாமணி நிகண்டுரை
திருமுருகாற்றுப்படை உரை
இலக்கணக் கொத்து
திருவிளையாடற புராணம்
சிவ பூசாவிதி
பால பாடம் (1.2.3.4)
ஆத்திசூடி உரை
கொன்றை வேந்தன் உரை
மருதூரந்தாதியுரை
கோயிற்புராண உரை
சைவ சமயநெறி உரை
கந்தபுராணம்
பெரியபுராணம் (உரைநடை)
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
திருக்கோவையாருரை
தொல்காப்பியம்
சவுந்தரிய லகரி
சைவ எல்லப்ப நாவலர்
பாரதம்
கொலை மறுத்தல்
வைராக்கிய தீபம்
வைராக்கிய சதகம்
திருவுந்தியார்
தாயுமானவ சுவாமிகள் பாடல்கள்

திருவாடுதுறை ஆதீனத்தில் இவர் ஆற்றிய உரையைக் கேட்டு மகிழ்ந்த அன்றய குரு சன்னிதானம் இவருக்கு நாவலர் என்ற பட்டத்தை வழங்கினார்.

1870-இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.

1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.

செய்யுள் வடிவில் இருந்த தமிழ் இலக்கிய மரபை வசன நடைக்கு மாற்றி காற்புள்ளி, அரைப்புள்ளி, நிறுத்தற்குறிகளோடு எழுதும் மரபைத் தொடங்கி வைத்தவர் ஆறுமுக நாவலரே ஆவார். இன்றய தமிழ் மேடைப்பேச்சுக்கு ஆரம்பமே இவர் செய்துகொண்டு வந்த பிரசாங்கங்கள்தான்.

1879ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் நாள் ஆறுமுக நாவலர் சிவபதம் அடைந்தார். ஐம்பத்தி ஆறு ஆண்டுகளே வாழ்ந்த ஆறுமுக நாவலர்  பிறந்திரரேல் சைவசமயத்திற்கும் தமிழுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை நாவலர் சிவபதமடைந்தபோது சி.வை. தாமோதரம்பிள்ளை எழுதிய இன்னொரு பாடல் இனிது விளக்குகிறது.

நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேப்ர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே அறை.’

சைவநெறிக் காவலராக விளங்கிய ஆறுமுக நாவலரின் நினைவைப் போற்றுவோம். மத மாற்றத்தை எப்போதும் தடுப்போம். தொன்மையான சனாதன தர்மத்தின் கருத்துக்களை எல்லோரிடமும் பரப்புவோம். 

புதன், 17 டிசம்பர், 2025

டிசம்பர் 17 - காங்கிரஸ் வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா நினைவுநாள்

ஆந்திரப்பிரதேசத்தின் முக்கியமான காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியமான தலைவராகத் திகழ்ந்த பட்டாபி சீதாராமையாவின் நினைவுநாள் இன்று.


ஆந்திரபிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு நியோகி ப்ராஹ்மண குடும்பத்தில் 1880ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் பிறந்தவர் பட்டாபி சீதாராமய்யா. தனது கல்லூரிப் படிப்பை சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் முடித்த சீதாராமையா பின்னர் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் மசூலிப் பட்டினத்தில் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். 1905ஆம் ஆண்டு கர்சான் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிளந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் குதித்தனர். சீதாராமையாவும் தனது மருத்துவ சேவையை விட்டு விட்டு அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் லால் - பால் - பால் - எனப்படும் லாலா லஜபதிராய் - பால கங்காதர திலகர் - பிபின் சந்திரபால் ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட சீதாராமையா பின்னர் காந்தியின் தொண்டராக மாறினார்.

1912ஆம் ஆண்டிலேயே  சென்னை ராஜதானியில் இருந்து பிரிக்கப்பட்டு தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காகத் தனியான மாநிலம் அமைக்கப்படவேண்டும் என்று பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். அதனைத் தொடர்ந்து லக்நோ நகரில் 1916ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஆந்திராவிற்காக தனியான காங்கிரஸ் கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்று வாதாடி, அதனை நிறைவேற்றவும் செய்தார். ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் சீதாராமையா இருந்தார்.

1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு முக்கியமான ஒன்றாகும். காங்கிரஸின் தலைவர் பதவிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியில் ஈடுபட்டார். காந்தியின் ஆதரவு சீதாராமையாவிற்கு இருந்தது. ஆனாலும் நேதாஜி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று காந்தி அறிவித்தார்.

மசூலிப்பட்டின கடற்கரையில் தடையை மீறி உப்பு எடுக்கும் போராட்டத்திற்காகவுவம் பின்னர் சாராயக்கடை மறியல் போராட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் தனிநபர் சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டும் கைதானார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு காந்தி அறிவித்தார். உடனடியாக அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அதில் சீதாராமையாவும் ஒருவர். மூன்றாண்டுகள் அவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அஹமத்நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். சிறை வாழ்வில் அவர் எழுதிய நாள்குறிப்புகள் பின்னர் பூக்களும் கற்களும் என்ற பெயரில் வெளியானது.

1948ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் சீதாராமையா பதவி வகித்தார். மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் வரலாற்றை பட்டாபி சீதாராமையா எழுதினார். அதுவே அந்த இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரலாறு. 1935ஆம் ஆண்டு முதல் பகுதியும் 1947ஆம் ஆண்டு இரண்டாம் பகுதியும் என்று இரண்டு தொகுதியாக வெளியான முக்கியமான ஆவணம் இது.

சுதேசி இயக்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த சீதாராமையா ஆந்திரா இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் கிருஷ்ணா மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகியவற்றையும் உருவாக்கினார். புகழ்பெற்ற ஆந்திரா வங்கி இவரால் உருவாக்கப்பட்டதுதான்.

நாட்டின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான பட்டாபி சீதாராமையா 1959ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் நாள் காலமானார். 

திங்கள், 15 டிசம்பர், 2025

டிசம்பர் 15 - தேர்தல் ஆணையர் T N சேஷன் பிறந்தநாள்

பாரத நாட்டின் வழிகாட்டு ஆவணம் நமது அரசியலமைப்புச் சட்டம். தேர்தல் மூலம் தேர்வான மக்கள் பிரதிநிதிகள் மூலம் உருவாக்கப்படும் சட்டங்கள், அந்த சட்டங்களை செயல்படுத்தும் அரசு அதிகாரிகள், சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலுக்கு உள்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் நீதிமன்றங்கள் இவை அரசின் முக்கியமான அங்கங்கள். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களோடு ஒன்றின் வரைமுறைக்குள் மற்றொன்று தலையிடா வண்ணம் அமைக்கப்பட்டது நமது அரசியலமைப்பு சட்டம்.

ஆனால் காலம் செல்லச் செல்ல, ஆணவமிக்க சிலரால் மற்ற அமைப்பில் உள்ளவர்களை தங்கள் செல்வாக்கின் மூலம் செயலற்றவர்களாக ஆக்கி, தங்களுக்குச் தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் கோலமும் உருவானது. அப்போது சட்டரீதியாக உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதை அமுல்படுத்திக் காட்டிய  திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் என்ற டி என் சேஷனின் பிறந்தநாள் இன்று


பாலக்காடு பகுதியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த சேஷன் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு 1950ஆம் ஆண்டு முதல் 1952ஆம் ஆண்டு வரை அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1953ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றார், ஆனால் அதில் சேரவில்லை. அடுத்த ஆண்டு 1954ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று பணிக்குச் சேர்ந்தார்.

இந்திய ஆட்சிப் பணியில் தமிழகப் பிரிவில் சேர்ந்த சேஷன் கோயம்புத்தூர் மாவட்ட துணை ஆட்சியாளாராகப் பொறுப்பேற்றார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியாளர், தமிழக ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத்துறை போன்ற பிரிவுகளில் பணியாற்றினார். மதுரை மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றி, பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைபட்ட படிக்க அமெரிக்கா சென்றார்.

மீண்டும் தாயகம் திரும்பிய சேஷன் அணுசக்திதுறை, விண்வெளித்துறை ஆகியவற்றில் பணியாற்றினார். சுற்றுப்புறச்சூழல் மற்றும் காடுகள் துறை, பாதுகாப்பு ஆகிய துறைகளில் செயலாளராகவும் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பணியியேயே மிக உயரிய பதவியான அமைச்சரவை செயலாளர் ( Cabinet Secretary ) பதவியையும், தேசிய திட்டக்குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.

இந்தியாவின் 10-வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பொறுப்பேற்றார். 1996-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த காலத்தில்தான், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியது. வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் தேர்தல் சீர்திருத்தப் பணிகளில் மும்முரமாக செயல்பட்டார்.

விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்தியது இவரது பதவிக்காலத்தில்தான் எனக் கூறலாம். இதன்காரணமாக இந்தியத் தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி என அழைக்கப்பட்டார். இவருக்கு 1996-ம் ஆண்டு உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது

அரசங்கப் பதவிக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை சேஷன் ஐயம் திரிபுர நிரூபித்துக் காட்டினார். தேர்தல் பரப்புரை செய்வதில் நேரக் கட்டுப்பாடு, அனுமதிக்கப்பட்ட அளவில் தேர்தலுக்கான பணம் செலவழித்தல், வீட்டு உரிமையாளர் அனுமதி இன்றி சுவரில் விளம்பரம் செய்வதைத் தடுத்தல் என்று சட்டத்தில் சொன்னபடி தேர்தலை நடத்த முடியும் என்று செய்து காட்டியவர் திரு சேஷன் அவர்கள்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலில் சேஷன் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை.சிலகாலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பயிற்சி நிலையத்திலும், சென்னையில் உள்ள கிரேட் லேக்ஸ் மேலாண்மை நிறுவனத்திலும் சிறப்பு அழைப்பாளராக பயிற்றுநராக இருந்தார்.

திரு சேஷன் 2019ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் காலமானார். தேர்தல் கமிஷன் என்ற அமைப்பு ஓன்று உள்ளது என்பதை பொது மக்களுக்கு புரியவைத்த சேஷன் இந்தியாவில் தேர்தல் நடைபெறும்வரை மக்கள் மனதில் குடியிருப்பார் என்பதில் ஐயமில்லை. 

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

டிசம்பர் 14 - ஹிந்தி திரைப்பட நடிகர் ராஜ்கபூர் பிறந்தநாள்

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஹிந்தி திரைப்பட உலகின் முக்கியமான ஆளுமையாக விளங்கிய ரன்பிர் ராஜ்கபூர் என்ற ராஜ்கபூர் அவர்களின் பிறந்ததினம் இன்று.


ஹிந்தி திரைபட உலகின் தொடக்ககால நட்சத்திரங்களில் ஒருவரான பிரிதிவிராஜ்கபூரின் முதல் மகனாக பேஷவார் நகரில் 1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள் பிறந்தவர் ராஜ்கபூர். இவரின் சகோதர்கள் சஷிகபூர், ஷம்மிகபூர் மற்றும் ஊர்மிளா என்ற சகோதரி. திரைப்பட நடிகராக பல்வேறு நகரங்களுக்கு மாறி மாறி பிரிதிவிராஜ்கபூர் வசித்ததால், அவரின் குடும்பமும் அவரோடே பயணப்பட வேண்டி இருந்தது. அதனால் ராஜ்கபூர் டெஹ்ராடூன், கொல்கத்தா, மும்பை என்று பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளில் படித்துவந்தார்.

சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த ராஜ்கபூர் சினிமாவில் முதல்முதலாக கிளாப் அடிக்கும் வேலையில் இருந்துதான் தன் பயணத்தைக் தொடங்கினார். பல படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டிய ராஜ்கபூர் முதல்முதலாக 1947ஆம் ஆண்டு நீல்கமல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தில் இவரது ஜோடி மதுபாலா.

தனது 24ஆம் வயதில் ஆர் கே ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை உருவாக்கி ஆக் என்ற படத்தை இயக்கினார். இந்தப்படத்தில் நர்கிஸ் இவருக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் அந்த காலத்தில் மிக இளைய திரைப்பட இயக்குனர் என்ற பெருமை ராஜ்கபூரை வந்தடைந்தது. திலிப்குமார், நர்கிஸ் ஆகியோரோடு ராஜ்கபூர் நடித்த அன்டாஸ் என்ற படம் பெரும் வெற்றியை பெற்றது. ராஜ்கபூர் தயாரித்து, இயக்கி நடித்த பர்ஸாட் என்ற படம் திரையுலகின் முக்கியமான ஆளுமையாக ராஜ்கபூரை நிலைநிறுத்தியது.

தனது ஆர் கே ஸ்டுடியோ சார்பில் ராஜ்கபூர் தயாரித்து நடித்த ஆவாரா, ஸ்ரீ 420, ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹத்தி ஹை ஆகிய படங்கள் அன்றைய வெற்றிப்படங்கள். 1970களில் ராஜ்கபூர் மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்தார். ஆனால் இன்று கொண்டாடப்படும் இந்தப்படம் அன்று ஒரு தோல்விப்படமாக இருந்தது. 1973ஆம் ஆண்டு இவர் தயாரித்த பாபி என்ற திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.

எழுபதுகளின் பிற்பாதிகளிலும் எண்பதுகளிலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களை ராஜ்கபூர் தயாரித்து இயக்கினார். ஸிநத் அமன் நடித்த சத்தியம் சிவம் சுந்தரம், பத்மினி கோல்ஹாப்பூரி நடித்த பிரேம் ரோக், மந்தாகினி அறிமுகமான ராம் தேரி கங்கா மைலி ஆகியவை அதில் முக்கியமானவையாகும். இந்த காலகட்டங்களில் ராஜ்கபூர் குணசித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கி இருந்தார்.

1946ஆம் ஆண்டு ராஜ்கபூர் கிருஷ்ணா மல்ஹோத்ரா என்ற பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். அதில் ரன்திர்கபூர், ரிஷிகபூர், ராஜிவ்கபூர் ஆகியோரும் திரைத்துறையில்தான் இயங்கிக்கொண்டு உள்ளார்கள். இவரது மகளான ரீத்து எஸ்கார்ட்ஸ் குழுமத்தின் ராஜு நந்தாவைத் திருமணம் செய்துகொண்டு உள்ளார். இவர்கள் மருமகள்தான் அமிதாப் பச்சனின் மகள் ஸுவேதா. ராஜ்கபூரின் மற்றொரு மகளான ரீமா மனோஜ் ஜெயின் என்ற முதலீட்டு ஆலோசகரை மணந்து கொண்டுள்ளார். பிரிதிவிராஜ்கபூரின் தொடங்கி நான்கு தலைமுறையாக இவர்கள் குடும்பம் ஹிந்தி திரையுலகின் பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்து வருகிறது.

பல்வேறு திரைப்படங்களுக்காக ராஜ்கபூருக்கு மூன்று தேசிய விருதுகளும், பதினோரு பிலிம்பேர் விருதுகளும் வழங்கப்பட்டு உள்ளது. 1971ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 1987ஆம் ஆண்டு தாதாசாஹேப்பால்கே விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

திரு ராஜ்கபூர் 1988ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் நாள் காலமானார். திரை ரசிகர்கள் மனதில் இன்றும் ராஜ்கபூர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். 

சனி, 13 டிசம்பர், 2025

டிசம்பர் 13 - பாஜக தலைவர் மனோகர் பாரிக்கர் பிறந்தநாள்

பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவருமான திரு மனோகர் கோபால கிருஷ்ண பிரபு பாரிக்கர் என்ற மனோகர் பாரிக்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று.


1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் நாள் பிறந்த திரு பாரிக்கர், தனது இளம்வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( IIT Mumbai ) உலோகவியல் பொறியியலில் ( Metallurgical Engineering ) பட்டம் பெற்றவர் இவர். ஐ ஐ டி பட்டதாரிகளில் சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டதாரியும் இவரே.

1978ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த பாரிக்கர் கோவா திரும்பி தங்கள் குடும்பத் தொழிலில் ஈடுபட்டார். அதோடு சங்கப்பணியும் அவருக்கு காத்திருந்தது. தனது 26ஆம் வயதில் உள்ளூர் ஷாகாவின் சங்கசாலக் பொறுப்பு அவரை வந்தடைந்தது. அதோடு பாஜகவை கோவா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் வளர்க்கும் பணியும் அவருக்கு அளிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் சட்டசபைக்கு அவர் தேர்வானார். 1999ஆம் ஆண்டு குறுகிய காலகட்டத்திற்கு அவர் கோவா மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவர் பொறுப்பையும் வகித்தார்.

அடுத்து நடந்த தேர்தலில் பாஜவை வெற்றிபெற வைத்து 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாரிக்கர் முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்த ஆட்சி 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. அதிலிருந்து மரணமடையும் வரை பாரிக்கர் கோவா மாநிலத்தின் பாஜகவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கினார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிற்கு நரேந்திர மோதி அவர்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர்களில் மனோகர் பாரிக்கர் முக்கியமான ஒருவராவார். மோதி அமைச்சரவையில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பாரிக்கர் சேர்க்கப்பட்டார். தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரிக்கர் டெல்லி சென்றார்.

ராணுவத்திற்கான தளவாடங்கள் வாங்குவதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கியதன்மூலமும், அதிநவீனரக ஆயுதங்களை ராணுவத்திற்குப் பெற்றுக் கொடுத்ததன் மூலமும் பாரிக்கர் தனது முத்திரையைப் பதித்தார். நாட்டின் எல்லைகளைக் காக்கும் ராணுவத்தினர் உயிரைக் காக்கும் தரமான ஆயுதங்களை வாங்கிக் கொடுத்ததன் மூலம் அவர் நாட்டுக்கு மிக முக்கியமான சேவையை ஆற்றினார்.

கோவா மாநிலத்தில் உருவான நிலையற்ற தன்மையை மாற்றும் பொருட்டு பாரிக்கர் மீண்டும் கோவா திரும்பி அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுக்கொண்டார். அவர் ஆட்சி செய்த காலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும், கோவாவின் சுற்றுலாதுறை வளர்ச்சிக்காகவும் எடுத்த நடவடிக்கைகள் இன்றும் மக்களால் நினைவு கூறப்படுகிறது.

துரதிஷ்டவசமாக கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாரிக்கர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் நாள் காலமானார். அரசியல்வானில் சுடர்விட்டுப் பிரகாசித்து இருக்கவேண்டிய பல தலைவர்களை இள வயதிலேயே பாஜக இழந்து வருவது என்பது மிகவும் சோகமான ஒன்றாகும்.

இறுதி மூச்சுவரை ஒரு ஸ்வயம்சேவக் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த திரு மனோகர் பாரிக்கர் அவர்களை ஒரே இந்தியா தளம் மரியாதையோடு நினைவு கொள்கிறது. 

வெள்ளி, 12 டிசம்பர், 2025

டிசம்பர் 12 - விண்வெளி நிபுணர் நம்பி நாராயணன் பிறந்தநாள்

பாரத நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக பின்னப்பட்ட சதிவலையை அறுத்தெறிந்து விட்டு வெற்றி வீரராக விளங்கும் நம்பி நாராயண் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆனால் அதில் அவரும், நாடும் இழந்தது அதிகம்.


கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரில் 1941ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் பிறந்தவர் திரு நம்பி நாராயணன் அவர்கள். தனது படிப்பை முடித்த நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்சி நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். விக்ரம் சாராபாயின் தூண்டுதலின் பேரில் அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏவுகணைக்கான திரவ எரிபொருள் பற்றிய படிப்பில் தனது மேற்படிப்பை முடித்தார். அமெரிக்காவில் கிடைத்த வேலைகளை உதறித்தள்ளிவிட்டு மீண்டும் பாரத நாட்டின் சேவைக்குத் திரும்பினார்.

அதுவரை திட எரிபொருள்கள்தான் பயன்பட்டுக் கொண்டிருந்ததை மாற்றி திரவ எரிபொருள்கள் மூலம் விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்களுக்கான மோட்டார் தயாரிக்கும் முயற்சியில் நம்பி நாராயணன் ஈடுபட்டார். அவரது சோதனைகளுக்கு விண்வெளி ஆராய்சி நிலையத் தலைவர்களாக இருந்த சதிஷ் தவான் மற்றும் யு ஆர் ராவின் முழு ஒத்துழைப்பும் இருந்தது. மெதுவாக ஆனால் மிக உறுதியாக விண்வெளி ஆராய்சியில் பாரதம் முன்னேறிக்கொண்டு இருந்தது. பூமிப் பந்தின் மீது ஒரே இடத்தில் இருக்குமாறு, அதாவது பூமி சுழலும் அதே வேகத்தில் சுழலும் செயற்கைகோள்களை ஏவும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணியில் நம்பி நாராயணன் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.

அப்போதுதான் அந்த பூகம்பம் வெடித்தது. 1994ஆம் ஆண்டு நம்பி நாராயணன் மற்றும் சசிகுமார் என்ற மற்றொரு விஞ்ஞானி  மீது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ரகசியங்களை எதிரிநாட்டுக்கு அளித்ததாக ஒரு வழக்கு பதிவானது. அதோடு இந்த வழக்கில் இரண்டு மாலத்தீவைச் சார்ந்த இரண்டு இளம்பெண்கள் உள்ளனர் என்றும் இந்த ரகசியத்தை பகிர கோடிக்கணக்கான ரூபாய்கள் கைமாறியது என்றும் தகவல்கள் வந்தன. நாட்டையே உலுக்கிய விவகாரமாக இது வெடித்தது. நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது நாற்பத்தி ஆறு நாட்கள் அவர் காவலில் வைக்கப்பட்டார். விசாரணை என்ற பெயரில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானதாக அவர் தெரிவித்தார். பிறகு 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டது என்று மத்திய புலனாய்வுதுறை தெரிவித்தது. புகழ்பெற்ற அறிஞரின் வாழ்க்கையை கெடுத்துவிட்டீர்கள் என்று தேசிய மனித உரிமை ஆணையம் கேரள அரசின் மீது கடுமையான கண்டணத்தைத் தெரிவித்தது. அவரிடம் மன்னிப்பு கோரி ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு அது கேரள அரசைக் கேட்டுக்கொண்டது. பத்து லட்ச ரூபாயை நஷ்டஈடாகக் கொடுக்கும்படி கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

நடந்த தவறுக்கு எந்தப் பரிகாரமும் தேடாமல், இதில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீதான நடவடிக்கையை கேரள அரசு விலக்கிக் கொண்டது. இதனை எதிர்த்து நம்பி நாராயணன் மீண்டும் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார். நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நம்பி நாராயணன் அவர்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் நஷ்டஈடாகக் கொடுக்கும்படி உத்திரவு பிறப்பித்தது.

ஏறத்தாழ இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பதில் கிடைத்தது. ஆனால் பாரதத்தின் விண்வெளிதுறை இதற்கு முன்னமே எட்டி இருக்கவேண்டிய வெற்றிகள் காலதாமதமானது.

நடந்த கொடுமைகளுக்கு பரிகாரமாக மத்திய அரசு திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதை வழங்கியது.

என்ன செய்தாலும் நம்பி நாராயணன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் ஆகாதுதான். அவரிடம் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்பதும், அவருக்கு நிம்மதியான வாழ்வை அருளும்படி ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வதும்தான் இன்று நம்மால் செய்ய முடிந்த ஒன்றாகும்.

திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், வணக்கங்களையும் ஒரே இந்தியா தளம் தெரிவித்துக் கொள்கிறது. 

வியாழன், 11 டிசம்பர், 2025

டிசம்பர் 11 - சர்சங்கசாலக் பாலாசாஹேப் தேவரஸ் பிறந்தநாள்

குருஜி கோல்வாக்கருக்குப் பிறகு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தை சர்சங்கசாலக்காக இருந்து வழிநடத்திய பரமபூஜ்யனிய மதுக்கர் தத்தாத்திரேய தேவரஸ் என்ற பாலாசாஹேப் தேவரஸ் அவர்களின் பிறந்ததினம் இன்று. 



மஹாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்த தத்தாத்திரேய க்ரிஷ்ணாராவ் தேவரஸ் - பார்வதிபாய் தம்பதியினரின் எட்டாவது மகனாக 1915ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள் பிறந்தவர் பாலாசாஹேப் தேவரஸ். மிக இளமைக் காலத்திலேயே சங்கத்தில் இணைந்து கொண்ட தேவரஸ் டாக்டர் ஹெட்கேவார் மற்றும் குருஜி கோல்வாக்கரால் பட்டை தீட்டப்பட்டார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற தேவரஸ், சங்கத்தின் முழுநேர பிரச்சாரகராகச் சேர்ந்தார். தேவரஸின் இளைய சகோதர் முரளிதர் தேவரஸும் சங்கத்தின் முழுநேர பிரச்சாரகர்தான். 

சங்கத்தின் பணியை முன்னெடுக்க பாலாசாஹேப் வங்காளத்திற்கு அனுப்பப்பட்டார். வெற்றிகரமாக வங்க மண்ணில் சங்கத்தை நிறுவி விட்டு நாக்பூர் திரும்பி சங்கத்தின் மராத்தி மொழி பத்திரிகையான தருண்பாரத் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியான யுகதர்மா ஆகிய பத்திரிகைகளின் பொறுப்பை தேவரஸ் ஏற்றுக்கொண்டார். சங்கம் ஒருபோதும் நேரடி அரசியலில் ஈடுபடுவது இல்லை. அதனால்தான் டாக்டர் ஹெட்கேவார் காந்தியின் சத்தியாகிரஹப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்ற போது, சங்கத்தின் பிரதிநிதியாக இல்லாமல் தனிப்பட்ட முறையிலேயே கலந்துகொண்டார். ஆனால் தவிர்க்கமுடியாமல் நேரடி அரசியல் பணியை சங்கம் முன்னெடுக்கவேண்டிய கட்டாயம் தேவரஸ் அவர்களுக்கு ஏற்பட்டது. 

1973ஆம் ஆண்டு சங்கத்தின் பொறுப்பு தேவரஸ் வசம் வந்தது. சிறிது காலத்திலேயே இந்திரா நெருக்கடி நிலையை அமுல் செய்தார். உடனடியாகத் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சங்கமும் இருந்தது. நாக்பூரில் கைது செய்யப்பட்ட தேவரஸ் பூனா நகரின் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். பலர் தலைமறைவானார்கள். ஸ்வயம்சேவகர்களின் வீடுகள் பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் சரணாலயமானது. இருபத்திமூவாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடைபெற்ற தொடர்ந்த போராட்டங்களில் நாற்பத்தியையாயிரம் சங்க தொண்டர்கள் கைதானார்கள். 

சர்வாதிகாரத்தை எதிர்த்த சங்கத்தின் பங்களிப்பைப் பற்றி 1976ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதியிட்ட The Economist பத்திரிகை இப்படி எழுதியது. 

“The underground campaign against Mrs Gandhi claims to be the only non-left wing revolutionary force in the world, disavowing both bloodshed and class struggle. Indeed, it might even be called right wing since it is dominated by the Hindu communist party, Jan Sangh and its ‘cultural’ (some say paramilitary) affiliate the RSS. But its platform at the moment has only one non-ideological plank; to bring democracy back to India. The ground troops of this operation (the underground movement), consist of tens of thousands of cadres who are organized to the village level into four men cells. Most of them are RSS regulars, though more and more new young recruits are coming in. The other underground parties which started out as partners in the underground have effectively abandoned the field to Jan Sangh and RSS.”

நெருக்கடி நிலையை விலக்கிக்கொண்டு திடீர் என்று இந்திரா தேர்தலை அறிவித்தார். எல்லா எதிர்கட்சிகளையும் ஒரு குடைக்குள் கொண்டுவந்து இந்திராவை எதிர்க்க நானாஜி தேஷ்முக் தலைமையிலான ஸ்வயம்சேவகர்கள் ஈடுபட்டனர். குறுகிய கால இடைவெளிக்குள் நாடெங்கும் இந்திராவைத் தோற்கடிக்க ஸ்வயம்சேவகர்கள் உழைத்தனர். 

தேர்தல் முடிந்தபிறகு மீண்டும் சங்கம் தனது தேச புனர்நிர்மாணப் பணிக்கு திரும்பியது. எண்பதுகளின் இறுதிப் பகுதியில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுலாக்க வி பி சிங் முடிவு செய்தார்.  இந்த முடிவு நாடெங்கும் பெரும் சூறாவளியைக் கிளப்பியது. இந்த முடிவை எப்படி எதிர்கொள்ள என்று சங்கத்தின் அனைத்து நிலைகளிலும் விவாதங்கள் நடந்தன. ஏற்கனவே தீண்டாமை குற்றம் இல்லையென்றால் எதுவுமே குற்றமாகாது என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு இருந்த தேவரஸ், பெருவாரியான மக்களின் முன்னேற்றத்திற்காக இதனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார். 

தேவரஸ் காலத்தில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிபட்ட போது மீண்டும் சங்கம் தடை செய்யப்பட்டது. அதில் இருந்தும் மீண்டும் பொலிவோடு முன்னெழ தேவரஸ் அவர்களின் பங்களிப்பு மிக அதிகம். 

1993ஆம் ஆண்டு தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சர்சங்கசாலக் பொறுப்பில் இருந்து தேவரஸ் விலகிக் கொண்டார். அடுத்த தலைவராக ராஜுபையா என்ற பேராசிரியர் ராஜேந்திரசிங் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இருபது ஆண்டுகள் சங்கத்தை மிக சிக்கலான காலகட்டத்தில் வழிநடத்திய பாலாசாஹேப் தேவரஸ் 2003ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் நாள் பாரததாயின் தாளில் அற்பணமானார். 

சங்கத்தின் புகழ்வாய்ந்த தலைவருக்கு ஒரே இந்தியா தளம் தலை வணங்கி தனது மரியாதையைச் செலுத்துகிறது. 

புதன், 10 டிசம்பர், 2025

டிசம்பர் 10 - சக்ரவர்த்தி திருமகன் - ராஜாஜி பிறந்தநாள்

புகழ் பெற்ற வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் மனசாட்சி என்று அறியப்பட்டவர், கருத்தியல் எதிரிகளால் மூதறிஞர் என்று போற்றப்பட்டவர், சமூக சீர்திருத்தவாதி, மேற்கு வங்க ஆளுநர், பாரதத்தின் கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், சென்னை மாகாணத்தின் முதலமைச்சர், எதிர்க்கட்சியை இல்லாமல் இருந்த காலத்தில் காங்கிரசுக்கு எதிராக சுதந்திரா கட்சியை கட்டமைத்தவர், முதல்முதலாக தமிழகத்தில் மதுவிலக்கை அமுல் செய்தவர், விற்பனை வரி என்ற புதிய வரியை அறிமுகம் செய்தவர் என்றெல்லாம் அறியப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்கு எழுத்தாளர் என்ற ஒரு முகமும் உண்டு.


டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதங்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த ராஜாஜி, வெளியே வந்ததும் `சிறையில் தவம்' எனும் நூலை எழுதி எழுத்தாளரும் நூலாசிரியரும் ஆனார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 40 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, கதை, நாவல் என எல்லா வடிவங்களிலும் எழுதினார். சமய, இதிகாச, தத்துவ எழுத்தில் ஒரு புதிய பாணியைப் படைத்தார்.

ஏராளமான சிறுகதைகள் எழுதிய ராஜாஜிக்கு, கதைக்கொள்கையைப் பொறுத்தவரையில் தெளிவான சிந்தனையும் கோட்பாடும் உண்டு. சிறுகதை வேறு, நாவல் வேறு என்பதையும் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் அவர் மிகக் கச்சிதமாக அறிந்துவைத்திருந்தார். 

"சிறுகதை நெடுங்கதையைப்போல் நீடித்த ஒரு காலப்போக்கையோ அல்லது ஒரு கதாநாயகனுடைய வாழ்க்கை முழுவதையுமோ சித்திரிக்காது. தனிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை மட்டிலும் எடுத்துக்கொண்டு சித்திரிப்பது சிறுகதை. சிறுகதையில் நிகழ்ச்சிச் செறிவு அதிகமாகக் காணப்பட மாட்டாது. சம்பவங்கள் குறைந்த எண்ணிக்கையாய்த்தான் இருக்கும். ஆனால், கதைக்கட்டு சாமர்த்தியமாகப் பதிந்திருக்கும். பாத்திரங்கள் பளிச்செனத் தூக்கிக்காட்டும் குண விசேஷங்களுடன் இருக்கும். நல்ல சிறுகதைக்கு அடையாளம் ஒன்றே. அதைப் படித்து முடிக்கும்போது நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும். இந்தக் கதைகளெல்லாம் நான் வெறும் பொழுதுபோக்காக எழுதவில்லை. என் நாட்டு மக்களுக்கு என்னுடைய எந்தக் கருத்து நன்மைபயக்குமோ, மக்களின் முன்னேற்றத்துக்கு எந்த அனுபவ உண்மை பயன்படுமோ அதைக் கதைபோலச் சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். வெறும் கதையழகு, கலையழகுக்காக நான் இவற்றை எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட சில உண்மைகளை என் நாட்டு மக்களுக்குச் சொல்கிறேன், அவ்வளவே.” " இது தனது கதைகளைப் பற்றி ராஜாஜியே செய்த திறனாய்வு.

மதுவிலக்குப் பிரசாரம், தீண்டாமை ஒழிப்பு போன்ற அன்றைய காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்குத் துணையாகப் பிரசாரம் செய்யும் நோக்குடன் நிறைய கதைகள் எழுதியவர் ராஜாஜி. அவர் எப்போதுமே ஓர் ஒழுக்கவாதி. ஆகவே, சிறுகதை உள்ளிட்ட எந்தப் படைப்பானாலும் அவசியம் ஒரு நீதி இருக்க வேண்டும் என்பதை அவர் வற்புறுத்துவார். அதனால் அவருடைய கதைகளில் பிரசார தொனி சற்றுத் தூக்கி நிற்கும். ஆனால், அத்தகைய பிரசாரம் ஏதுமில்லாத வாழ்க்கைக் கதைகளையும் அவர் சுவைபட எழுதியிருக்கிறார். ராஜாஜி வக்கீலாக இருந்ததாலோ என்னவோ, அவருடைய பெரும்பாலான கதைகளில் ஒரு வக்கீல் வந்து நின்றுவிடுகிறார்.

ராஜாஜி கதைகள்', `பாற்கடல்', `பிள்ளையார் காப்பாற்றினார்', `நிரந்தரச் செல்வம்' ஆகிய தொகுதிகளிலும் தனியாகவும் என 60-க்கு மேற்பட்ட சிறுகதைகளை ராஜாஜி எழுதியிருக்கிறார். மணிக்கொடியும், ஆனந்த விகடனும் சிறுகதைக்கு இடம் கொடுக்கத் தொடங்கும் முன்னரே ராஜாஜி கதை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1929-ம் ஆண்டில் மதுவிலக்குப் பிரசாரத்துக்காகவே அவர் தொடங்கிய `விமோசனம்’ இதழில் அவர் கதைகள் எழுதினார்.

ராஜாஜியின் அறிவு முதிர்ச்சிக்கு மக்களிடத்தில் இருந்த செல்வாக்கே அவரது எழுத்துகளுக்கு மதிப்பைக்கொடுத்தது. அரசியலில் இருந்த புகழால் இலக்கியத் துறையில் பெரும்பெயர் பெற்ற ராஜாஜி, தமது எழுத்துத்திறனால் இலக்கியத் துறையிலும் தமக்கு நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்றுக்கொண்டார். `சமீபகால இலக்கிய வரலாற்றில், அரசியலை இலக்கியத்துக்குள் கலந்தோருள் ராஜாஜி முதன்மையானவர்.

1954-ம் ஆண்டில் சென்னை முதலமைச்சர் பதவி காமராஜிடம் கைமாறியபோது, ராஜாஜிக்கு வயது 76. அதன் பிறகு ராமாயணத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். . `கல்கி' வார இதழில் 23 மே 1954 முதல் 6 நவம்பர் 1955 வரை `சக்கரவர்த்தித் திருமகன்' எனும் பெயரில் ராமாயணச் சுருக்கத்தைத் தொடராக எழுதினார். ராஜாஜியின் தந்தை பெயர் சக்கரவர்த்தி வேங்கடார்யா ஐயங்கார். ஆகவே, `சக்கரவர்த்தித் திருமகன்' எனும் தலைப்பு ஒருவகையில் ராஜாஜிக்கேகூடப் பொருத்தமானதுதான். அந்தத் தொடர் மலிவுப் பதிப்பாக 1956 மார்ச் மாதம் ஒரு ரூபாய் விலையில் நூலாக வந்தபோது, தொடர்ந்து 33 பதிப்புகள் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தமிழ்ப் புத்தக விற்பனையில் சரித்திரம் படைத்தது. அதுமட்டுமன்று, அதற்கு சாகித்திய அகாடமி பரிசும் 1958-ம் ஆண்டில் கிடைத்தது.

`குழந்தைகளுக்கான கதைகளும் எழுதினார் ராஜாஜி. சிறுவர்களை ஒன்றும் அறியாதவர்கள், அவர்களுக்குப் பெரியவர்களின் உபதேசம் தேவை என்ற எண்ணத்தை, முற்றிலும் இந்தக் கதைகளில் உடைத்துவிட்டார் ராஜாஜி. நன்கு புரிந்துகொள்ளக்கூடிய பக்குவமுடையவர்களை வைத்துக்கொண்டே கதைகளைச் சொல்லியிருக்கிறார்' என்று ராஜாஜியைப் பற்றி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நூல் எழுதிய ஆர்.வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.

சேலத்தில் இலக்கிய வளர்ச்சிக்காக சேலம் இலக்கியச் சங்கத்தை நிறுவி, அதன்மூலம் தொடர்ந்து கூட்டங்களை நடத்தியவர் ராஜாஜி. Tamil Scientific Terms Society என்ற அமைப்பை நிறுவி தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்க காரணமாக இருந்தார்.

மஹாபாரதத்தை வியாசர் விருந்து என்ற பெயரிலும், கண்ணன் காட்டிய வழி என்று பகவத் கீதையை, திருமூலர் திருமொழி, சோக்கிரதர், உபநிடதப் பலகணி, குடி கெடுக்கும் கள், திக்கற்ற பார்வதி, ராஜாஜி கதைகள், ராஜாஜி கட்டுரைகள் என்று பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ராஜாஜி-கல்கி-சதாசிவம்-எம்.எஸ்.சுப்புலட்சுமி-ரசிகமணி ஆகியோர் நட்சத்திர நண்பர்களாக அன்றைய நாள்களில் மதிக்கப்பட்டவர்கள். ராஜாஜி கவிஞர் அல்லர். ஆனால், சில பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதி இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு பாடல் `குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற பக்திப்பாடல்.

ராஜாஜி, தம் 37-ம் வயதில் மனைவி அலர்மேல்மங்கையை இழந்தார். அப்போது அவருடைய கடைசி மகள் லட்சுமிக்கு மூன்று வயது. மூத்த மருமகன் வரதாச்சாரி இறந்தபோது, மகள் நாமகிரிக்கு 26 வயது. இளைய மருமகன் தேவதாஸ் காந்தி மறைந்தபோது, மகள் லட்சுமிக்கு 45 வயது. இத்தகைய இழப்புகளையும் வாழ்க்கையில் பல இடர்களையும் சோதனைகளையும் சந்தித்தவண்ணம் இருந்த அவரால், `குறை ஒன்றும் இல்லை...' என்று எப்படிப் பாட முடிந்தது என்பது அதிசயம்தான்.

சில பத்தாண்டுகளைத் தாண்டிப் பார்க்கும் அறிவாற்றல் மிக்க தலைவரை இன்று மரியாதையுடன் ஒரே இந்தியா தளம் நினைவு கொள்கிறது.

செவ்வாய், 9 டிசம்பர், 2025

டிசம்பர் 9 - விடுதலை வீரர் ராவ் துலாராம்

அந்த விடுதலை வீரர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தவர். பலமுறை ஆங்கிலேயர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பித்துச் சென்றவர். பிறகு பாரதத்தை விட்டு விலகி வெளிநாட்டு ஆட்சியாளர்களின் உதவியுடன் ராணுவத்தை உருவாக்கியவர். ஆனால் தனது கனவு நிறைவேறும் முன்னால், வெளிநாட்டிலேயே மரணம் அடைந்தவர். நாம் சுபாஷ் சந்திரபோஸைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கவில்லை. அவருக்கு எண்பதாண்டுகளுக்கு முன்னம் அதே போல இருந்த ஒரு வீரரைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்.


இன்றய தெற்கு ஹரியானா முதல் வடகிழக்கு ராஜஸ்தான் வரை உள்ள இடம் அஹிர்வால் பிரதேசம் என்று அறியப்படும் நாடாக இருந்தது. ரேவாரி அதன் தலைநகர். அதனை யது குலத்தைச் சார்ந்த மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். டெல்லிக்கு எண்பது கிலோமீட்டர் தொலைவில் இந்த நாடு இருந்தது. இந்த நாட்டை ஆண்டுகொண்டு இருந்த ராஜா ராவ் புரன் சிங் - ராணி ஞான் கவுர் தம்பதியினரின் மகனாக 1825ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் பிறந்தவர் துலா சிங் அஹிர். நாடாளுவதற்கு தேவையான ஆயுதப் பயிற்சி, ராணுவ வியூகங்கள் அமைத்தல் ஆகியவற்றை சிறுவயதில் இருந்தே மேற்கொண்டார் துலா சிங். அதோடு அவர் ஹிந்தி, பாரசீகம், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்று இருந்தார். தனது பதினாலாம் வயதில் தந்தையை இழந்த துலா சிங் ராஜா ராவ் துலா ராம் என்ற பெயரோடு 1839ஆம் ஆண்டு அரியணை ஏறினார்.

பாரதம் கொந்தளிப்பான காலத்தில் இருந்த நேரம் அது. வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் சிறிது சிறிதாக பாரதத்தை தங்கள் கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அதனை எதிர்த்து முதலாம் சுதந்திரப் போர் தொடங்கியது. அதில் ராஜா ராவ் துலாராமும் கலந்துகொண்டார். கடைசி முகலாய அரசராக இருந்த பகதுர் ஷா ஜாபர் அவர்களின் உதவிக்கு ஐயாயிரம் வீரர்கள் கொண்ட படையோடு அவர் சென்றார். ஏற்கனவே ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவி இருந்ததால், பல்வேறு ஆயுதங்களும் துலாராம் வசம் இருந்தது.

டெல்லிக்கு சற்று தொலைவில் உள்ள நசிபிபூரில் நடந்த சண்டையில் ஆங்கிலேயர்களை துலாராம் படைகள் தோற்கடித்தன. கர்னல் ஜான் ஜெரார்ட் மற்றும் கேப்டன் வாலஸ் ஆகியோர் இதில் கொல்லப்பட்டனர். ஆனால் பாட்டியாலா, கபூர்தலா போன்ற நாடுகளின் படைகள் ஆங்கிலேயர்களின் உதவிக்கு வர துலாராம் படைகள் பின்னடையவேண்டி இருந்தது. எப்படியும் ஆங்கிலேயர்கள் தன்னைப் பின்தொடருவார்கள் என்பதை அறிந்த துலாராம், தாந்தியா தோபேயின் துணையோடு மீண்டும் போராட்டத்தை தொடங்கினார். முழுமையான ஆதரவு இல்லாததால் முதல் சுதந்திரப் போர் வெற்றியில் முடியவில்லை.

சரணடைய விரும்பாத துலாராம், ஈரானுக்குச் சென்று அன்றய மன்னர் ஷாவைச் சந்தித்தார். ஷா அவருக்கு ராணுவ உதவி அளிப்பதாக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வந்த துலாராம் அந்த நாடு எமிரையும் சந்தித்து உதவி கோரினார். அவரும் உதவி செய்ய ஒத்துக்கொண்டார். ஆப்கானிஸ்தானத்தில் இருந்தே ரஷிய மன்னரோடு துலாராம் தொடர்பு கொண்டார். ஏற்கனவே இவர்கள் அனைவரோடும் ஆங்கிலேயர்களுக்கு நல்ல உறவு இல்லை. அதனால் இவர்கள் அனைவரும் துலாராமிற்கு உதவி செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 1863ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் துலாராம் தனது முப்பத்தி எட்டாம் வயதில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் மரணமடைந்தார்.

வீரர்கள் மரணமடையலாம், ஆனால் வீர வரலாறு மரணிக்காது. ராஜா ராவ் துலாராம் உள்ளிட்ட வீரர்களுக்கு நமது நன்றியும் வணக்கங்களும் என்றும் உரித்தாகுக. 

வியாழன், 4 டிசம்பர், 2025

டிசம்பர் 4 - பொம்மைகள் வழியாக விஞ்ஞானம் அரவிந்த்குப்தா

நாம் உணர்கிறோமோ இல்லையோ, நாம் வசிக்கும் பிரபஞ்சம் திட்டவட்டமான அறிவியல் விதிகளின்படியே இயங்குகிறது. ஆனால் பயனாளிகளுக்கு அறிவியல் விதிகள் சொல்லிக்கொடுக்கப்படுவது இல்லை. பொதுமக்களுக்கும் கல்விச்சாலைகளுக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கின்றது. மனப்பாடம் செய்து, கேள்விகளுக்கு பதில் சொல்லும்படிதான் நமது மாணவர்கள் பயிற்றுவிற்கப் படுகிறார்கள். பதில்கள் மீது கேள்வி கேட்கும் மாணவர்களை நமது கல்விமுறை ஊக்குவிப்பதில்லை. இந்த இடைவெளியை இல்லாமல் செய்ய பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் அரவிந்த் குப்தா. நாம் குப்பைகள் என்று ஒதுக்கும் பொருள்களில் இருந்து பொம்மைகளைச் செய்து அதன் மூலம் அறிவியலை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் இவர்.


அர்விந்த் குப்தா, பரேலி என்னும் ஊரில், மிக அதிகம் படிக்காத, ஆனால், கல்வியின் முக்கியத்துவம் அறிந்த பெற்றோருக்கு நான்காவது மகனாக 1953ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் நாள் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த அரவிந்த் குப்தா 1972 ஆம் ஆண்டு, கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் படிக்கச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஒரு நாள், கான்பூர் ஐஐடியில், கல்வியாளார் அனில் சட்கோபால் என்பவர் ஒரு உரை நிகழ்த்தினார். அனில் சட்கோபால், இந்திய வேளாண் கழகத்தில் முதுகலைப் பட்டமும், கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

வேளாண்மை, சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் கிஷோர் பாரதி என்ற சேவை நிறுவனத்தை அனில் சட்கோபால் 1971ஆம் ஆண்டு துவங்கி இருந்தார். 1972 ஆம் ஆண்டு, ஹோஷங்காபாத் அறிவியல் கல்வித் திட்டம் (Hoshangabad Science Teaching Programme – HSTP) என்னும் திட்டத்தைத் துவங்கினார். இது துவக்கத்தில், 5-8 வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியற் கல்வியைக் கற்பிப்பதற்காகத் துவங்கப்பட்டது. அவரின் உரை அரவிந்த் குப்தாவிற்கு புதிய திறப்பை அளித்தது.

படிப்பை முடித்தபின் அரவிந்த் குப்தா டாடா மோட்டார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு ஹோஷங்காபாத் சென்றார். சைக்கிளின் வால் ட்யூப்பையும், தீக்குச்சிகளையும் வைத்துக் கொண்டு, பல்வேறு விதமான வடிவங்களை அமைத்தார். அவற்றை வைத்துக் கொண்டு, கணித வடிவங்கள், வேதியியல் மூலக்கூறு அமைப்புகள், வீடுகள், கட்டுமானங்கள் முதலியவற்றைக் குழந்தைகளே செய்து, அறிந்து கொள்ளுமாறு பயிற்றுவித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அங்கிருந்து திருவனந்தபுரம் சென்று, கட்டிடக்கலை வல்லுநர் லாரி பேக்கரிடம் பணிபுரிந்தார.

மீண்டும் வேலைக்குத் திரும்பிய அரவிந்த் குப்தாவிற்கு, தான் மேற்கொள்ள வேண்டிய பணி எது என்பது தீர்மானமாகத் தெரிந்ததால், வேலையை விட்டு விட்டு கல்வி கிடைக்காத குழந்தைகளுக்கு பொம்மைகள் மூலம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் பணியில் ஈடுபட முடிவு செய்து, வேலையை உதறினார். அந்தச் சமயத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலராக இருந்த பேராசிரியர் யாஷ்பால் அவர்கள் மூலமாக, ஒரு புத்தகம் எழுத ஒரு ஃபெல்லோஷிப் கிடைத்தது. “தீக்குச்சி மாதிரிகளும் மற்ற அறிவியல் பரிசோதனைகளும்”, என்னும் ஒரு புத்தகத்தை எழுதினார். இரண்டு ஆண்டுகளில், அந்தப் புத்தகம் 12 மொழிகளில் வெளியாகி, கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அனில் சடகோபனின் ஏகலைவா நிறுவனத்துக்காக, அர்விந்த் குப்தா பல அறிவியல் நூல்களை எழுதினார். தரங்க் (சிற்றலைகள்) என்னும் தலைப்பில், 25 வருடங்களில், 125 நிகழ்ச்சிகளைத் தயாரித்து, தேசியத் தொலைக்காட்சிக்காக (தூர்தர்ஷன்) வழங்கினார். இதன் மூலமாக, மிகப் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கும், எளிமையான அறிவியல் பரிசோதனைகளை அவர் பள்ளி மாணவர்களிடையே கொண்டு செல்ல முடிந்தது. தரங்க், தூர்தர்ஷனின் மிக வெற்றிகரமான நிகழ்ச்சிகளுள் ஒன்று.

பெரும் பொருள்செலவில் பள்ளிகளில் அறிவியல் சோதனைச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதாலேயே, பல பள்ளிகளில் அவை இல்லாமலேயே ஆகி விடுகிறது. ஆனால் மிக எளிய முறையில், அதிகம் பொருள் செலவு இல்லாமலேயே அதே சோதனைகளை செய்து காட்டியும், குழந்தைகளே அந்த சோதனைகளைச் செய்ய வைப்பதன் மூலம் அவர்களின் அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதும் பெரும் பலனை அளிக்கும் என்பதை அரவிந்த் குப்தா நிரூபித்து உள்ளார்.

பல்வேறு பொம்மைகளின் மூலம் அறிவியல் சோதனைகளைச் செய்வது பற்றிய அவரின் செயல்முறை விளக்கங்களும், அது பற்றிய புத்தகங்களும் என்று அவரது வலைத்தளம் தேடுதல் உடையவர்களுக்கு ஒரு தங்கச் சுரங்கம்.

தனது கல்வியை, திறமையை சமுதாயத்தின் வளர்ச்சிக்கு என்று அர்ப்பணித்த அரவிந்த் குப்தாவிற்கு பல்வேறு விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. அதில் முக்கியமானது பாரத அரசு 2018ஆம் ஆண்டு அவருக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதாகும்.

நாட்டின் சிறப்புமிக்க அறிவியல் ஆசிரியருக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 

புதன், 3 டிசம்பர், 2025

டிசம்பர் 3 - தொழிலதிபர் நவ்ரோஜி கோத்ரேஜ் பிறந்தநாள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பார்சி இனத்தைச் சார்ந்த இரண்டு சகோதர்கள் பூட்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் பட்டம் பெற்ற அர்தேஷிர் கோத்ரேஜும் அவர் சகோதரர் பிரோஷா கோத்ரேஜும் 1897ஆம் ஆண்டு தொடங்கிய அந்த முயற்சி இன்று பூட்டுகள், இரும்புப் பெட்டிகள், சோப் தயாரிப்பு, கால்நடைகளுக்கான உணவுவகைகள், விண்வெளி ஆராய்ச்சிக்கான உபகரணங்கள், நிறுவனங்களுக்கான மேசை, நாற்காலி என்று பல்வேறு துறைகளில் தங்கள் தரத்தினால் தனி இடத்தைப் பிடித்துள்ள கோத்ரேஜ் குழுமமாக மாறி உள்ளது. கோத்ரேஜ் குழுமத்தின் இரண்டாம் தலைமுறை வாரிசான நவ்ரோஜி கோத்ரேஜ் என்று அறியப்பட்ட நேவல் பிரோஷா கோத்ரேஜ் அவர்களின் பிறந்தநாள் இன்று. 

பிரோஷா கோத்ரேஜின் இளைய மகனாக 1916ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் பிறந்தவர் நவ்ரோஜி கோத்ரெஜ். தனது மூன்றாம் வயதிலேயே தாயாரை இழந்த நவ்ரோஜி மற்றும் அவர் சகோதர்களை கராச்சி நகரில் வசித்து வந்த அவரது பாட்டி பராமரித்து வளர்த்து வந்தார். சிறுவயதிலிருந்தே இயந்திரங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்த நவ்ரோஜி, பள்ளிப் படிப்பை முடித்த உடனேயே தந்தையின் தொழில்சாலைக்கு தொழில் கற்க வந்துவிட்டார். வருங்கால முதலாளியாக குளிர்பதன அறையில் அமர்ந்து கொண்டிருக்காமல், தொழிலாளிகளில் ஒருவராக பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் தளத்தில் அதிகநேரம் செலவிட்டதால் இயல்பாகவே நவ்ரோஜிக்கு உழைப்பின் மரியாதை தெரிந்ததோடு, பணியாளர்களை நிறுவனத்தின் வளர்ச்சியின் பங்குதாரர்களாகப் பார்க்கும் பக்குவமும் கைவசமானது. 

பல்வேறு இயந்திரங்களோடும் கருவிகளோடும் தன் மனதைப் பறிகொடுத்த நவ்ரோஜி, சுதேசித் தயாரிப்பில் தட்டச்சு இயந்திரத்தை ( Manual Typewriter ) தயாரிக்க முடிவு செய்தார். அன்றய காலகட்டத்தில் ஆசிய கண்டத்திலேயே எந்த நாட்டிலும் தட்டச்சு இயந்திரம் தயாரிக்கப்படவில்லை. ஆயிரத்திற்கும் அதிகமான உதிரிபாகங்களை இணைத்து தட்டச்சு இயந்திரத்தைத் தயாரிப்பது எனப்து மிகச் சவாலான வேலை. அதனை வெற்றிகரமாக செயலாக்கிக் காட்டியவர் நவ்ரோஜி கோத்ரேஜ். 1955ஆம் ஆண்டு ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்  பாரதம் சோசலிஸ பாதையில் செல்லும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மாநாட்டில்தான் முதல்முதலாக பாரதத்திலேயே தயாரான கோத்ரெஜ் தட்டச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை நேரு பார்வையிடும் படத்தை  இன்றும் பல்வேறு கோத்ரெஜ் அலுவலங்கங்களில் நாம் காணலாம். 


1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை கோத்ரெஜ் நிறுவனம் தயாரித்து வழங்கியது. பின்னர் முதல் இந்திய குளிர்சாதனப் பெட்டியை ( Refrigerator ) 1958ஆம் ஆண்டு கோத்ரெஜ் உருவாக்கியது. இதற்கெல்லாம் நவ்ரோஜியின் இயந்திரங்கள் மீதான புரிதல் பெரும் பங்காற்றியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்காக பல்வேறு துணைக்கருவிகளையும் 1976ஆம் ஆண்டு முதல் கோத்ரெஜ் தயாரித்து வருகிறது. இதற்கான தனிப் பிரிவையே நவ்ரோஜி உருவாக்கினார். 

தொழில் செய்வது, அதையும் சிறப்பாக, லாபகரமாகச் செய்வது என்பது ஓன்று. ஆனால் அதனை தர்மகர்த்தா முறையில் செய்வது என்பது வேறொன்று. கோத்ரெஜ் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கு மூலதனம் கோத்ரெஜ் குழுமத்தின் அறக்கட்டளைகள் வசம் உள்ளன. ஆண்டுதோறும் நிறுவனம் ஈட்டும் லாபத்தில் இருந்து பல்வேறு சேவைகளை அவை செய்து வருகின்றன. மக்கள்தொகை கட்டுப்பாடு, இயற்கை வளங்களை காப்பாற்றுதல் ஆகியவை அறக்கட்டளையின் முக்கியப் பணிகளாக உள்ளன. தங்களுக்கு சொந்தமான விக்ரோலி பகுதியில் உள்ள சதுப்பு நிலக் காடுகளை அழிக்காமல் இன்றும் கோத்ரேஜ் நிர்வாகம் பராமரித்து வருகிறது. அநேகமாக இன்று மும்பை நகரின் நுரையீரலாக இந்தக் காடுகள் செயல்பட்டு வருகின்றன. 

சுத்தமும் சுகாதாரமும் வசதிகளும் கூடிய பணியாளர் குடியிருப்பை நவ்ரோஜி உருவாக்கினார். அவரின் தந்தை பெயரில் பிரோஷாநகர் என்ற பெயரில் அது  உருவானது.தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க உதயச்சால் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று பெருவாரியாகப் பேசப்படும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு, தொழிலாளர் மனித வள மேம்பாடு என்ற சொற்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னமே அவற்றை செயலாகிக் காட்டியவர் நவ்ரோஜி கோத்ரேஜ் அவர்கள். 

தொழில்துறை வளர்ச்சிக்கு நவ்ரோஜியின் பங்களிப்பை மரியாதை செலுத்தும் விதமாக அரசு அவருக்கு 1976ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. 

பாரத நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான நவ்ரோஜி பிரோஷா கோத்ரேஜின் பங்களிப்பை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

செவ்வாய், 2 டிசம்பர், 2025

டிசம்பர் 2 - அம்புலிமாமாவின் மாமா - B நாகி ரெட்டி


இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளுக்கு முன்னர் தங்கள் பாலியத்தை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அது ஒரு சுகமான காலம் என்று. தொலைபேசியும் இணையத் தொடர்போடு கூடிய கைபேசியும் இல்லாத காலம் அது. குழந்தைகள் பிறந்த உடனேயே படிக்கவேண்டும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கவேண்டும், கணினித் துறையில் வேலைக்குச் சேரவேண்டும், உடனே வெளிநாடு செல்லவேண்டும் என்ற அழுத்தம் இல்லாமல் இருந்த காலம். வீடுகளில் தாத்தாவும் பாட்டியும், மாதத்தில் பாதி நாட்கள் தங்கி இருக்கும் உறவினர்களும் என்று பேசவும் பகிரவும் ஆள்கள் எப்போதும் இருந்த காலம். ஆங், அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்தினபாலா,  லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என்று பாடத்தைத் தாண்டியும் படிக்க புத்தகங்கள் இருந்த காலம் அது. சிறுவர்களுக்கான நூல்களில் முன்னோடியும், அறுபதாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலத்தோடு சேர்த்து பதின்மூன்று மொழிகளில் வெளியான அம்புலிமாமா என்ற பத்திரிகையை நடத்தி வந்த திரு நாகி ரெட்டியின் பிறந்தநாள் இன்று.

இன்றய ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தைச் சார்ந்தவர் திரு நாகி ரெட்டி அவர்கள். இவரின் தந்தை சென்னையில் தங்கி இருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்துகொண்டு இருந்தார். நாகி ரெட்டியின் மூத்த சகோதரர் நரசிம்ம ரெட்டி. திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்த நரசிம்ம ரெட்டியைப் பின்தொடர்ந்து நாகி ரெட்டியும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடலானார். நாகி ரெட்டி தனது நண்பரான சக்ரபாணி என்பவரோடு இணைந்து தமிழிலும், தெலுங்கிலும் பல்வேறு வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற வெற்றிப்படங்களை நாகி ரெட்டி தயாரித்து வெளியிட்டார். சென்னையின் முக்கியமான திரைப்படத் தளமாக விளங்கிய விஜயா வாகினி ஸ்டுடியோவும் இந்த இரட்டையர்களுக்கு சொந்தமானதுதான். கன்னடம், மற்றும் ஹிந்தி மொழியிலும் இந்த நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து உள்ளது. ஸ்டுடியோவில் இருந்து திரைப்படங்கள் வெளியேறி திறந்தவெளிகளில் படமாக்கப்பட்டன. நான்கு தென்மாநிலப் படங்களும் சென்னையில் தயாரித்து குறைந்து அந்தந்த மாநிலங்களில் தயாரிக்கும் நிலை உருவானது. நாகிரெட்டி சென்னை வடபழனியில் நடைபெற்று வந்த தனது ஸ்டுடியோவை மருத்துவமனையாக மாற்றினார். 

ஆனால் இது அனைத்தையும் விட நாகி ரெட்டியின் மகத்தான பங்களிப்பு என்பது ஏறத்தாழ அறுபதாண்டு காலத்திற்கும் மேலாக சந்தமாமா என்ற சிறுவர் பத்திரிகையை பல மொழிகளிலும் நடத்தியதுதான். 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாந்தாமாமா என்று தெலுங்கிலும் அம்புலிமாமா என்று தமிழிலும் ஒரே நேரத்தில் சிறார் பத்திரிகையை நாகி ரெட்டி தொடங்கினார். 


1949ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கன்னட மொழியில், 1949 ஆகஸ்ட் மாதம் ஹிந்தியில், 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மராத்தி மற்றும் மலையாள மொழியில், 1954ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில், 1955ஆம் ஆண்டு ஆங்கிலத்தில், 1956ஆம் ஆண்டு ஒரிய மற்றும் சிந்தி மொழியில், 1972ஆம் ஆண்டு வங்காள மொழியில், 1975ஆம் ஆண்டு பஞ்சாபி மொழியில், 1976ஆம் ஆண்டு அஸ்ஸாமிய மொழியில், 1978ஆம் ஆண்டு சிங்கள மொழியில், 1984ஆம் ஆண்டு ஸமிஸ்க்ரித மொழியில், சந்தாலி மொழியில் 2004ஆம் ஆண்டு என்று பாரதத்தின் முக்கிய மொழிகளில் எல்லாவற்றிலும் இந்தப் பத்திரிகை வெளிவந்தது.

பாரத நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் கதைகள், பல்வேறு மொழிகளில் உள்ள நீதிக்கதைகள் என்று பாரதத்தின் பாரம்பரியத்தை சிறுவர்களிடம் எடுத்துச் சென்றதில் சந்தமாமா பத்திரிகை பெரும் பங்காற்றியது.

இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு நாகி ரெட்டியின் குடும்பத்தினர் பத்திரிகையின் பங்குகளை வேறு சிலரோடு பகிர்ந்து கொண்டார்கள். தொழிலாளர் பிரச்னை காரணமாக ஓராண்டு இந்தப் பத்திரிகை வெளிவராமல் இருந்தது. மீண்டும் வெளிவரத் தொடங்கிய சந்தமாமா பத்திரிகை இன்று வெளிவருவது இல்லை. ஆனாலும் அறுபதாண்டுகளாக கலாச்சாரத்தை சிறுவர்களுக்கு போதித்த ஒரு பெரும் பங்களிப்பு எல்லாக் காலத்திலும் திரு நாகி ரெட்டியை நம் மனதில் நீங்காத இடத்தில் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

திரைத்துறையில் நாகி ரெட்டியின் பங்களிப்பை பல்வேறு மாநில அரசாங்கங்கள் அங்கீகரித்து பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளன. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, கன்னட மொழியின் சிறந்த திரைப்படத்திற்கான விருது, பிலிம்பேர் விருதுகள் என்று பல விருதுகள் இவரை வந்தடைந்தன. அனைத்திலும் சிகரம் போல பாரத அரசு திரைதுறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நாகி ரெட்டிக்கு 1986ஆம் ஆண்டு வழங்கியது.

எங்களின் இளமைப் பருவத்தை இனியதாக மாற்றிய திரு நாகி ரெட்டி அவர்களை இன்று நாங்கள் நன்றியோடு நினைவு கூறுகிறோம். 

திங்கள், 1 டிசம்பர், 2025

டிசம்பர் 1 - காகா காலேல்கர்பிறந்ததினம்

இந்த மனிதனை எந்த வரையறையில் சேர்க்க ? சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் சீடர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று பல்வேறு திசைகளில் ஒளிவீசும் ரத்தினமாகத் திகழ்ந்த தாத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்ற காகா காலேல்கரின் பிறந்ததினம் இன்று.

மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் பிறந்து, பூனா பெர்கூசன் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்று, பரோடா நகரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர உணர்ச்சியை தூண்டும் இடமாக அந்த பள்ளி விளங்கியதால் ஆங்கில அரசு அந்த பள்ளியைத் தடை செய்த பிறகு பத்திரிகையாளராகப் பணியாற்றி, பின்னர் கால்நடையாகவே இமயமலை பகுதிகளில் சுத்தித் திரிந்து, ஆச்சாரிய கிருபளானியோடு தொடர்பு ஏற்பட்டு, அவரோடு பர்மா சென்று, பின்னர் காந்தியைக் கண்டு, அவரின் சீடராக மாறி, சபர்மதி ஆசிரமத்தில் தங்கி, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று என்று அநேகமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பலரின் வாழ்க்கை போலத்தான் இவரின் வாழ்வும் இருந்தது.

இவரின் கைத்தடியைத்தான் தண்டி யாத்திரியையின் போது காந்தி பயன்படுத்தினார். எனவே தான் காந்தியின் கைத்தடி என்று காலேல்கர் தன்னை அறிமுகம் செய்து கொள்வது உண்டு. காந்தியின் ஆணைக்கேற்ப ஹிந்தி மொழியை பரப்பும் செயலிலும் காலேல்கர் ஈடுபட்டு இருந்தார். சென்னையில் உள்ள தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக சபாவின் முதல் பட்டமளிப்பு விழா இவரின் தலைமையில்தான் நடைபெற்றது. 1952 ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை இவர் பாரத நாட்டின் ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றினார். நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வாழ்க்கை நிலையை ஆராய்ந்து அவர்கள் முன்னேற்றத்திற்காக அரசுக்கு பரிந்துரை செய்ய என்று நிறுவப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுக் குழுவின் தலைவராகவும் காலேல்கர் பணியாற்றினார். 


மராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காலேல்கர் காந்தியின் தூண்டுதலின் பேரில் குஜராத்தி மொழியைக் கற்றுக்கொண்டு ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம்  ஆகிய மொழிகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அதிலும் முக்கியமானது லோக மாதா அதாவது உலகின் தாய் என்ற தலைப்பில் குஜராத்தி மொழியில் அவர் எழுதி தமிழில் ஜீவன் லீலா என்ற பெயரில் மொழிபெயராக்கப்பட்ட பாரத நாட்டின் நதிகளை நேரில் பார்த்து அவர் எழுதிய பயணக் கட்டுரைகளின் தொகுப்பு.


பள்ளிக்கல்வியும் பாடப்புத்தகங்களும் கற்றுக்கொடுக்காத பாடத்தை மனிதர்களுக்கு  பயணம் கற்றுக்கொடுக்கிறது. எதையோ தேடி வரலாறு முழுவதும் மனிதன் பயணம் செய்துகொண்டேதான் இருக்கிறான். பொருள் தேடியோ போர் நிமித்தமாக தலைவன் பிரிவதை பாலைத்திணை என்று தமிழ் வரையறை செய்கிறது. பத்திரிகைப் பணிக்காகவும் தேச விடுதலைக்கான இயக்க வேலைக்காகவும் காலேல்கர் பாரதநாடு முழுவதும் பயணம் செய்தார். எதனாலோ அவருக்கு நீர்நிலைகள்மீது ஒரு தணியாத ஆர்வம் இருந்தது. தான் தேடிதேடிப் பார்த்த நதிகளைப் பற்றி கட்டுரைகளாக அவர் பதிவு செய்து இருக்கிறார்.   


நதிக்கரைகள்தான் மனித நாகரிகத்தின் தொட்டிலாக உள்ளது. மலைகளில் சிறுதுளியாகத் தொடங்கி வழியில் பல்வேறு ஓடைகளை இணைத்துக் கொண்டு நீர்வீழ்ச்சியாக குதித்து, நின்று நிதானமாக ஓடி, தான் செல்லும் இடத்தையெல்லாம் குளிர்வித்து, செழிப்பாக்கி, பாலைவனங்களைச் சோலையாக்கி, விவசாய பூமியாக்கி, இறுதியில் கடலில் சங்கமிக்கும் இடங்கள் வரை காலேல்கர் தேடித்தேடி சென்று பார்த்தார். 


பாரதநாட்டின் பண்பாடு என்பது நதிகளை தெய்வமாக எண்ணித் தொழுவது. காலேல்கரின் தனது பயணங்களில் வெறும் கேளிக்கைக்காக கடல்களையும் நதிகளையும் காணச்  செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை இந்தப் பயணங்கள் என்பது ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதை ஒத்தது. இந்தக் கட்டுரைகளில் நீர்நிலைகள் மீதான அவரது நெருக்கமும் பக்தியும் தென்படுகிறது.  நாட்டின் ஒவ்வொரு இடத்தைப் பற்றித் தனக்குத் தெரிந்திருக்க வேண்டும், அவற்றோடு தனக்கு ஒரு நெருக்கமான உறவு இருக்கவேண்டும் என்ற அவரின் விருப்பமும் தவிப்பும் நமக்குப் புலனாகிறது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை அவர் " நின்று, கரம்குவித்துத் தொழுதல்" என்று தலைப்பிட்டிருப்பதை நோக்கினால் நீர்நிலைகளை அவர் தெய்வமாக எண்ணுவதை, ஆறுகளைத் தேடிச் செல்லும் பயணங்களை அவர் ஆன்மீக அனுபவத்தை நாடிச் செல்லும் ஒரு பக்தனின் பயணமாக கருதுவதை உணர்ந்து கொள்ள முடியும் 


இந்த நூலில் உள்ளவை வெறும் பயணம் பற்றிய தகவல்களோ அல்லது நதிகளைப் பற்றிய குறிப்புகளோ மட்டும் அல்ல. மனிதனின் வாழ்க்கைக்கும் நதிகளுக்கு இடையேயான ஒரு உணர்வுபூர்வமான இணைப்பின் ஒரு ஆய்வு இது. இந்த நாட்டின் எல்லா நதிகளைப் பற்றி எதோ ஒரு புராணக்கதை உள்ளது. எதோ ஒரு தெய்வத்தோடு அல்லது ஒரு முனிவரோடு இந்த நதிகள் இணைக்கப்பட்டு உள்ளன. 


புத்தகத்தின் முதல் கட்டுரை பெல்காம் பகுதியில் வைத்தியனாத மலையிலிருந்து உற்பத்தியாகி பெலகுந்தி கிராமத்தை நோக்கி ஓடிவரும் மார்க்கண்டி நதியைப்பற்றியதாகும். இது 1928-ல் எழுதப்பட்டது. எழுபதாவது கட்டுரையான ‘மழைப்பாட்டு’ கார்வார் கடற்கரையில் பெய்யும் மழையனுபத்தை முன்வைத்து எழுதப்பட்டது. இது 1952-ல் எழுதப்பட்டது. இடைப்பட்ட முப்பத்திநான்கு ஆண்டு காலத்தில், தேசம் முழுதும் அலைந்து கங்கை, யமுனை, பிரம்மபுத்திரை, ஜீலம், இரவி, கிருஷ்ணா, தபதி, கோதாவரி, துங்கபத்திரை, காவேரி, நர்மதை, ஷராவதி, ஐராவதி, பினாகினி, லவணவாரி, அகநாசினி, தூத்கங்கா, ராவி, கடப்பிரபா, கூவம், அடையாறு என எண்ணற்ற ஆறுகளையும் நீர்நிலைகளையும் பார்த்து நெஞ்சை நிறைத்துக்கொண்ட அனுபவங்களை வெவ்வேறு தருணங்களில் தனித்தனி கட்டுரைகளாக எழுதினார். அதற்குப் பின்னரே அவை நூல்வடிவம் கண்டன.


மார்க்கண்டி நதி அவர் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றி ஓடும் நதி சிவனின் அருளால் எமனின் பாசக்கயிறிலிருந்து பிழைத்து என்றென்றும் பதினாறு வயதுடையவனாகவே வாழ்ந்த மார்க்கண்டேயனின் பெயரால் அந்த நதி அழைக்கப்படுகிறது. அதைத் தன் குழந்தைப்பருவத் தோழி என்று குறிப்பிடுகிறார். தம் குடும்பத்துக்குச் சொந்தமான வயல்வெளியைத் தொட்டபடி ஓடும் அந்த நதிக்கரையில் மணிக்கணக்கில் நின்று வேடிக்கை பார்த்த அனுபவங்களை அதில் விவரிக்கிறார். கார்வார் கடற்கரையில் பெய்யும் மழைத்தாரைகளை கடலைத் வெட்டும் ஆயுதங்கள் என கவித்துவம் ததும்ப  எழுதுகிறார். 


பாரதநாட்டின் எல்லா மக்களின் நினைவிலும் இருப்பது கங்கை நதி. அந்த நதியின் ஓட்டத்தை மூன்று கட்டங்களாக வகுத்துரைக்கிறார் காலேல்கர்.  கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரியிலிருந்து ஹரித்துவார் வரையிலான கங்கையின் ஓட்டம் முதல் கட்டம். இது நதியின் குழந்தைப் பருவம். ஹரித்துவார் முதல் பிரயாகை வரையிலான கங்கையின் ஓட்டம் இரண்டாவது கட்டம். இது கங்கையின் குமரிப் பருவம். பிரயாகையிலிருந்து கடலுடன் சங்கமமாகும் வரையிலான கங்கையின் ஓட்டம் மூன்றாவது கட்டம். அவற்றை ’திரிபதகா’ என்னும் சொல்லால் மூன்று அவதாரங்கள் என்றே குறிப்பிடுகிறார் காலேல்கர். மூன்று கட்டங்களில் ஹரித்துவாரிலிருந்து பிரயாகை வரைக்குமான கங்கையின் ஓட்டத்துக்கு உலக மதிப்பு மிகுதி. கோவிலுக்கு அருகில் உள்ள துறைகள், அவற்றையொட்டி ஓடும் மடுக்கள் எல்லாமே கங்கையின் அழகை பல மடங்காகப் பெருகவைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமானது அங்கு வீசும் காற்று. இமயத்தின் பனிச்சிகரத்திலிருந்து வீசும் காற்று முதன்முதலாக மானுடரையும் அவர்களுடைய குடியிருப்பையும் இந்த இடத்தில்தான் தொட்டுக் கடந்து செல்கிறது. கங்கையைச் சகுந்தலையாகவும் யமுனையை திரௌபதி என்றும் மாற்றி அவர் குறிப்பிடுகிறார். அயோத்தி நகர் வழியாக பாயும் சரயுநதி, ராஜா  ரத்திதேவனோடு தொடர்புடைய சம்பல் நதி, கஜேந்திர மோட்ஷம் நடைபெற்ற சோணபத்ரநதி, கண்டகி நதி என்று பல்வேறு நதிகளைப் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார். 

தண்டால் மலைப்பகுதியில் கங்கையும் யமுனையும் சந்திப்பது போல நெருங்கி வந்து பிறகு சங்கமிக்காமல் பிரிந்து போய்விடும். தண்டால் மலையருகில் யமுனையின் கரையில் வாசம் செய்தபடி தினமும் கங்கையில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஒரு முனிவர். வயதான காலத்தில் அவரால் தன் இருப்பிடத்திலிருந்து கங்கைக்கரை வரையிலான தொலைவை நடக்கமுடியாமல் போய்விட்டது. நீராடாமல் பூசைகளில் ஈடுபட முடியாமல் அவர் தவிப்பதைப் பார்த்து, கங்கை தன் ஓட்டத்தையே சற்று மாற்றிக்கொண்டு அவர் வசிக்குமிடத்துக்கு அருகிலேயே ஒரு சிற்றருவியாகப் பாய்ந்து வந்தது. முனிவர் மறைந்துபோனாலும் அச்சிற்றருவி இன்றும் பெருக்கெடுத்துப் பாய்ந்தபடி இருக்கிறது. இந்தத் தொன்மக் கதையையும் காலேல்கர் பதிவு செய்து இருக்கிறார். 

காந்தி ஒருமுறை தன் பிரயாணத்தின் ஒரு பகுதியாக சாகர் என்னும் இடத்தில் தங்கியிருக்கிறார். அங்கிருந்து நாற்பது ஐம்பது மைல்கள் தொலைவில் இருக்கும் ஜோக் நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு வரலாம் என்னும் திட்டத்தை காந்தியிடம் முன்வைத்தார் காலேல்கர். காந்தியோ தனக்கு நேரமில்லை என்றும் “நீ வேண்டுமானால் சென்று வா. நீ போய்வந்தால் மாணவர்களுக்கு ஒரு சில பாடங்களைச் சொல்ல வசதியாக இருக்கும்” என்று சொல்லி மறுத்துவிட்டார். ”ஜோக் உலகத்தின் அற்புதக்காட்சிகளில் ஒன்று” என்றெல்லாம் சொல்லி காந்தியைக் கரைக்க முற்பட்டார் காலேல்கர். காந்தியோ அவரிடம் மீண்டும் “960 அடி என்பதெல்லாம் ஒரு உயரமா? மழைத்தண்ணீர் அதைவிட உயரமான இடமான ஆகாயத்திலிருந்து விழுகிறது தெரியுமா? அது எவ்வளவு பெரிய அதிசயம்?” என்று சொல்லி மேலும் வாதத்துக்கு வழியின்றி முடித்துவிட்டார். பிறகு வேறு வழியில்லாமல் மேலும் சிலரைச் சேர்த்துக்கொண்டு காலேல்கர் ஜோக் அருவியைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். ஷராவதி ஆற்றங்கரை வரைக்கும் நீண்டிருக்கும் காட்டை நடந்து கடப்பது ஒரு பயணம். பிறகு அருவிக்கரை வரைக்கும் படகுப்பயணம். ஒவ்வொரு கட்டத்தையும் நேர்த்தியான சொல்லோவியங்களென தீட்டி வைத்திருக்கிறார் காலேல்கர். ரோரர், ராகெட், லேடி ஆகிய அருவிக்கிளைகளுக்கு அவர் ருத்ர, வீரபத்ர, பார்வதி என்னும் புதிய பெயர்களைச் சூட்டி அப்பெயர்த்தேர்வுகளுக்கான காரணங்களையும் சுவாரசியமாகச் சொல்கிறார்.

கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி, கோமதி ஆகிய நதிகளில் நீராடுவதைப்பற்றியும் அவற்றின் கரைகளில் செய்யப்படும் தானதர்மங்களைப் பற்றியும் ஏராளமாகச் சொல்லப்பட்ட போதிலும் அந்நதிகளை வலம்வருவதைப்பற்றி எக்குறிப்பும் புராணங்களில் இல்லை. அதற்கு விதிவிலக்கு நர்மதை. அந்த நதியை வலம்வருவது இன்றளவும் ஒரு சடங்காக உள்ளது. அதற்கு பரிகம்மா என்பது பெயர். முதலில் நர்மதை உற்பத்தியாகும் இடத்திலிருந்து தொடங்கி தென்கரை வழியாக கடலில் சங்கமமாகும் இடம்வரைக்கும் செல்லவேண்டும். பிறகு படகின் மூலம் வடகரையைத் தொடவேண்டும். அங்கிருந்து கால்நடையாக அமர்கண்டக் செல்லவேண்டும். வலம்வரும் போது எங்கும் நதியைக் கடக்கக்கூடாது. நதியின் பிரவாகத்தைவிட்டு வெகுதொலைவு செல்லவும் கூடாது. நீர் அருந்தவேண்டுமானால் நர்மதையின் நீரையே அருந்தவேண்டும். இப்படி நர்மதையை வலம்வந்த  காலேல்கரின் அனுபவம் அவரோடு சேர்ந்து நாமும் நடப்பதுபோல உள்ளது. தன் விழிகளால் கண்ட ஒவ்வொரு காட்சியையும் காலேல்கர் நம்மையும் காண வைத்துவிடுகிறார். ஜபல்பூருக்கு அருகில் பேடாகாட் என்னும் இடத்தில் நர்மதையின் ஓட்டத்துக்குக் காவலாக இருபுறங்களிலும் ஓங்கி உயரமாக நின்றிருக்கும் சலவைக்கல் மலைகளை முழுநிலவில் காண்பது மகத்தானதொரு அனுபவம். நிலவின் ஒளி முதலில் சலவைக்கல் மலையில் பட்டு பிரதிபலிப்பதையும், பிறகு ஆற்றின் மேற்பரப்பில் பிரதிபலிப்பதையும் பார்ப்பது மயக்கத்தையும் திகிலையும் ஊட்டும் ஒரு பேரனுபவம்.

டேராடூனுக்கு அருகில் உள்ள நதியின் பெயர் தீஸ்தா. அதாவது த்ரி- ஸ்ரோத்ரா. தனித்தனியாக நதிகள் மூன்று இடங்களில் உற்பத்தியாகி பிறகு அனைத்தும் இணைந்து ஒரே நதியாக ஓடுகிறது. கஞ்சன் ஜங்கா சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசூங் சூ என்பது ஒரு நதி. பாவ்ஹூன்ரீ சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசேன் சூ என்பது இரண்டாவது நதி. தாலூங் சூ என்பது மூன்றாவது நதி. இம்மூன்றும் இணைந்து தீஸ்தா என்னும் பெயருடன் ஓடத் தொடங்குகிறது. சிறிது தொலைவிலேயே இத்துடன் திக்சூ, ரோரோசூ, ரோங்கனீசூ, ரங்க்போசூ, ரங்கீத்சூ போன்ற ஆறுகள் வந்து இணைந்துகொள்கின்றன. எங்கெல்லாம் இரு ஆறுகள் கலக்கின்றனவோ, அங்கெல்லாம் கோம்போ எனப்படும் புத்தர் கோவில் காணப்படுகிறது.

வேத காலத்தில் விதஸ்தா என்று அழைக்கப்பட்ட நதியின் இன்றைய பெயர் ஜீலம். ‘உலகில் எங்காவது சொர்க்கம் இருக்குமெனில் அது இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது’ என அழுத்தம் திருத்தமாக ஒன்றுக்கு மூன்று முறை முகலாயச் சக்கரவர்த்தியான ஜஹாங்கீர் சொன்ன வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்றும் ஜீலம் நதிக்கரையில் வீற்றிருந்து அதன் அழகை சொல்லாமல் சொன்னபடி உள்ளது. ஆறு இங்குமங்கும் சுற்றிக்கொண்டு மெதுவாக ஓடுவதால் அது அசைவதே தெரிவதில்லை. வராஹமூலம் என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட பாராமுல்லா என்னும் இடத்தைக் கடந்தபிறகே ஜீலம் வேகம் கொள்கிறது.

கார்வார் அருகில் தேவ்கட் என்னுமிடத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தைக் காணச் சென்ற அனுபவமும் கார்வாரிலிருந்து கோகர்ணத்தைக் காணச் சென்ற அனுபவமும் சாகசப்பயணங்களுக்கு நிகரான சித்தரிப்புகளைக் கொண்டிருக்கின்றன. கோதாவரியின் சரித்திரத்தோடு ராமர்-சீதை கதையையும், சந்த ஞானேஸ்வரரின் கதையையும் இணைத்துச் சித்தரிப்பது வாசிப்பில் ஒருவித ஆர்வத்தையே தூண்டுகிறது. கல்கத்தாவிலிருந்து பர்மாவுக்குச் செல்லும் வழியிலும் ஆப்பிரிக்கப் பயணப் பாதைகளிலும் கண்ட பலவிதமான ஆறுகளைப்பற்றிய தகவல்களை காலேல்கர் தொகுத்துச் சொல்லும் விதமே, அவற்றை நாமும் உடனே சென்று பார்த்துவிடவேண்டும் என்னும் ஆவலை உருவாக்குகிறது. நேபாளத்தில் பாக்மதியையும் டேராடூனில் சஹஸ்ரதாராவையும் அசாமில் பரசுராமகுண்டத்தையும் பார்க்கச் சென்ற அனுபவங்கள் அனைத்தும் ஒரு சிறுகதைக்குரிய அனுபவங்களைப்போல உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் வசீகரம் நிறைந்த ஒரு சொல்லோவியம். காலேல்கரின் முயற்சியை ஒருவகையில் சொல்லோவியங்களால் நம் தேசத்தின் வரைபடத்தைத் தீட்டும் முயற்சி என்றே சொல்லலாம். பி.எம்.கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கிட்டும் அனுபவம் காஷ்மீரிலிருந்து தனுஷ்கோடி வரைக்கும் பயணம் செய்த அனுபவத்துக்கு நிகரானது. 

இலக்கியத்திற்க்காக சாஹித்ய அகாடமி விருதும் பொது சேவைக்காக பத்ம விபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.