செவ்வாய், 16 செப்டம்பர், 2025

செப்டம்பர் 16 - இசைப் பேரரசி எம் எஸ் சுப்புலக்ஷ்மி பிறந்ததினம்

உலகின் வெவ்வேறு காலகட்டங்களில் காலத்தைத் தாண்டி நிற்கும் விற்பன்னர்கள் தோன்றுவார்கள். அப்படி கடந்த நூற்றாண்டில் கர்நாடக இசை உலகின் ஒப்பற்ற நட்சத்திரமாகத் தோன்றியவர் திருமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள்.



1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் நாள் மதுரையைச் சார்ந்த வழக்கறிஞர் சுப்ரமணிய ஐயருக்கும் ஷண்முகவடிவு என்ற வீணை கலைஞருக்கும் மகளாகப் பிறந்தவர் எம் எஸ். இவரது பாட்டி அக்கம்மாள் வயலின் வாத்தியக் கலைஞர். குஞ்சமா என்பது எம் எஸ் அவர்களை உறவினர்கள் செல்லமாக அழைக்கும் பெயர்.

குடும்பத்தில் இசை என்பது சுவாசமாக இருந்தது, அது எம் எஸ்ஸுக்கு இயல்பாக பரிமளித்தது. மிகச் சிறுவயதிலேயே எம் எஸ் இசை கச்சேரிகளை நடத்தத் தொடங்கினார். அப்போதுதான் உருவாகிவந்த கிராமபோன் ரெகார்டுகளும், வானொலியும் அவரது இசையை பட்டி தொட்டிகளில் எல்லாம் கொண்டு சேர்த்தது. வாய்ப்பாட்டு மட்டுமல்ல எம் எஸ் வீணை வாசிப்பதிலும், பரத நாட்டியத்தில் நிபுணத்துவதோடு விளங்கினார். ஆனால் காலம் அவரை வாய்ப்பாட்டு இசையின் மகாராணியாக காட்டியது.

தாயார் ஷண்முகவடிவே எம் எஸ்ஸின் முதல் குரு. பின்னர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், சேத்தூர் சுந்தரேச பட்டர், கடையநல்லூர் வெங்கடராமன் ஆகியோர் இவருக்கு பயிற்சி அளித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி டி எல் வெங்கட்ராம ஐயர், பாபநாசம் சிவன், மைசூர் வாசுதேவாச்சாரியார், பண்டிட் நாராயணராவ் வியாஸ் ஆகியோர் எம் எஸ்ஸுக்கு பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தனர்.

1938ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் கே சுப்பிரமணியனின் சேவாசதனம் என்ற படத்தில் எம் எஸ் நடித்தார். சிறு பெண்களை வயதானவர்கள் மணந்து கொள்வதை கண்டித்து இந்தப் படம் எடுக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சாவித்ரி என்ற படத்தில் ஆண் வேடமிட்டு நாரதர் வேடத்தில் நடித்தார். மீரா என்ற படத்தில் மீராவாக நடித்தார். இதில் வரும் காற்றினிலே வரும் கீதம் என்ற பாடல் இன்றும் பிரபலமாக உள்ளது.

சதாசிவத்தை மணந்து திரையுலகை விட்டு வெளியேறி இசையுலகில் மட்டும் பயணிக்க முடிவு செய்தார் எம் எஸ். அவரது இசை உலகை இசைய வைத்தது. தனது இசை நிகழ்ச்சிகள் மூலம் பெரும் பணத்தையும் புகழையும் சம்பாதித்தார் எம் எஸ். புகழ் அவரோடு தங்கியது, பணம் முழுவதையும் பல்வேறு சேவைப் பணிகளுக்கு அளித்தார்.

ராஜாஜி, டி.கே.சிதம்பரநாத முதலியார், ராஜா சர் அண்ணாமலை செட்டியர், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சே.சண்முகம் செட்டியர் ஆகியோர் ஆரம்பித்த தமிழ் இசை இயக்கத்திற்கு பக்க பலமாக இருந்தார். பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார் பாடல்களைப் பாடினார்.

1944ல் நான்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தி 2 கோடி நிதி திரட்டி காந்தியடிகளிடம் “கஸ்தூரிபாய் அறக்கட்டளைக்கு” அளித்தார். அறிவியில் ஆராய்ச்சி கல்வி, மருத்துவம், மற்றும் சமயத் தொண்டு ஆகியவற்றிற்கு நிதி உதவி அளித்தார்.

 23.10.1966ல் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். 100க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய மே தி லார்ட் பர்கிவ் என்ற பாடலையும், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் மைத்ரீம் பஜத உலக நன்மை பிரார்த்தனை ஸ்லோகத்தையும் பாடினார்.

மேலும் லண்டன், நியூயார்க், கனடா, கிழக்கு நாடுகள் ஆகியவற்றிலும் இசைக் கச்சேரி செய்துள்ளார். 1975ல் திருப்பதி தேவஸ்தானம் எம்.எஸ்.பாடிய வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தை ஒலிபரப்பியது. மேலும் ஆஸ்தான பாடகியாகவும் அங்கீகரித்தது.

பஜகோவிந்தம், சுப்ரபாதம், குறையொன்றும் இல்லை, ரகுபதிராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதே ஆகியவை எம்.எஸ். பாடியவற்றில் சிகரத்தை தொட்டவை.

நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. இது தவிர எண்ணற்ற பட்டங்களும் விருதுகளும் மரியாதைகளும் அவருக்கு அளிக்கப்பட்டன. அவரால் பட்டங்கள் பெருமை அடைந்தன என்பது தேய்வழக்காக இருந்தாலும் எம் எஸ் அவர்களைப் பொறுத்தவரை அதுதான் உண்மை.

வாழ்க்கையின் பெரும்பகுதியை தனது கணவரின் வழிகாட்டுதலிலேயே கழித்த எம் எஸ் திரு சதாசிவம் இறந்த பிறகு பாடுவதை நிறுத்திக் கொண்டார். இசைப் பேரரசி 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இசையோடு கலந்தார். ஆனால் மனதை உருக்கும் அவரது இசை இன்னும் பல்லாண்டுகாலம் வாழ்ந்துகொண்டு இருக்கும்.

திங்கள், 15 செப்டம்பர், 2025

செப்டம்பர் 15 - சமகால சாணக்யன் சுப்ரமணியம் ஸ்வாமி பிறந்தநாள்

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், பல்வேறு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணி, தேர்ந்த ராஜதந்திரி, ஐம்பதாண்டு கால பாரத அரசியலில் தவிர்க்க முடியாத மனிதர், பெரும்பலம் வாய்ந்த அரசியல்வாதிகளை சட்டத்தின் மூலம் செல்லாக் காசாக மாற்றிய சட்ட நிபுணர், உலகம் முழுவதும் பரந்து விரிந்த தொடர்புகளும் செல்வாக்கும் கொண்ட மனிதர்  என்று பல்வேறு ஆளுமைகளின் மொத்த உருவம் திரு சுப்ரமணியம் ஸ்வாமியின் பிறந்தநாள் இன்று.



மதுரையை அடுத்த சோழவந்தான் பகுதியை தனது ஆதாரமாகக் கொண்ட சீதாராம சுப்ரமணியம் - பத்மாவதி தம்பதியரின் மகனாக 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தவர் சுப்ரமணியம் சுவாமி.  சீதாராம சுப்ரமணியம் இந்திய புள்ளியியல் துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். மத்திய புள்ளியியல் நிலையத்தின் இயக்குனராகவும், இந்திய அரசின் புள்ளியியல் ஆலோசகராகவும் அவர் பணியாற்றியதால், ஸ்வாமியின் குடும்பம் டெல்லியில் வசிக்க வேண்டி இருந்தது. டெல்லி ஹிந்து கல்லூரியில் கணித பட்டப் படிப்பையும் அதன் பின்னர் கொல்கத்தா நகரில் உள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் சுவாமி முடித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சுவாமி தொடங்கினார். அவரின் வழிகாட்டியாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் சைமன் கூஸ்நட்ஸ் அமைந்தார். தனது இருபத்தி ஆறாம் வயதுக்குள் பொருளாதார முனைவர் பட்டத்தையும் அதோடு குறிப்பிடத்தக்க பொருளாதார மேதையாகவும் சுவாமி அடையாளம் காணப்பட்டார். நோபல் பரிசு பெற்ற மேதை பால் சாமுவேல்சன் என்பவரோடு இணைந்து ஸ்வாமி எழுதிய குறியீட்டு எண்கள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் ஸ்வாமியை உலகமெங்கும் பிரபலப்படுத்தியது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக தனது பயணத்தை சுவாமி தொடங்கினார். அமர்த்தியா சென்னின் அழைப்பை ஏற்று டெல்லி பொருளாதார நிறுவனத்தில் பணி புரிய சுவாமி பாரதம் திரும்பினார். ஆனால் அன்றய அரசின் சோசலிச பொருளாதார கொள்கைகளை அவர் விமர்சித்த காரணத்தால், அந்தப் பணி அவருக்கு மறுக்கப்பட்டது. அதனால் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருளாதார கணித துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் இரண்டாண்டுகளில் அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஸ்வாமி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு சுவாமி அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டார்.

சுப்ரமணியம் ஸ்வாமியை பதவி நீக்கம் செய்து , அவரை தீவிர அரசியலில் ஈடுபட வைத்த பெருமை அன்றய பிரதமர் இந்திரா காந்தியையே சாரும். முதலில் ஜெயப்ரகாஷ் நாராயணனோடு இணைந்து சர்வோதயா இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஸ்வாமி, பின்னர் பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க ஜெ பி தொடங்கிய இயக்கத்தின் முக்கிய தலைவராக உருவானார். 1974ஆம் ஆண்டு ஜனசங்கம் அவரை உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு அனுப்பியது.

அந்தகாலத்தில்தான் இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. பல்வேறு தலைவர்கள் தலைமறைவாக சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தனர். ஸ்வாமியும் தலைமறைவானார். பாராளுமன்றம் நடந்து கொண்டு இருந்த ஒரு நாளில் பாராளுமண்டத்திற்கு ஸ்வாமி நுழைந்தார், உரிமை பிரச்சனை ஒன்றை கிளப்பி விட்டு மீண்டும் மாயமாக மறைந்தார். அப்போது காவல்துறைக்கு அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி. இந்த தடாலடி செயல் இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற இந்திரா காந்தியையே நிலைகுலைய வைத்தது.

1977 ஆம் ஆண்டு நெருக்கடி நிலைமை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் இந்திரா தோல்வியுற்றார். மும்பை வட கிழக்கு பாராளுமன்ற தொகுதியில் இருந்து ஸ்வாமி மக்களவைக்கு தேர்வானார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் இருந்து அவர் தேர்வானார். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் இருந்தும், 1988 ஆம் ஆண்டு முதல் 1994 வரை உத்திரப்பிரதேசத்தில் இருந்து ஜனதா கட்சி சார்பில் ராஜ்யசபைக்கும் அவர் தேர்வானார். சந்திரசேகரின் அமைச்சரவையில் சட்ட மற்றும் வர்த்தக துறைகளின் அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

அப்போது அவர் வடிவமைத்த கொள்கைகளின் அடிப்படையில்தான் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் அரசு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தது. நெடுங்காலம் ஜனதா கட்சியை நடத்திக்கொண்டு இருந்த சுப்ரமணியம் சுவாமி 2013 ஆம் ஆண்டு தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்தார். 2016 ஆம் ஆண்டு பாஜக அவரை ராஜ்யசபா உறுப்பினராக நியமித்தது.

தனது நீண்ட அரசியல் வாழ்வில் பல்வேறு ஊழல்களை, அதிகார துஷ்பிரயோகங்களை ஸ்வாமி வெளிக்கொண்டு வந்துள்ளார்.  ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள், இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடுகளில் நடைபெற்ற முறைகேடுகள், நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் பங்குகளை முறைகேடாக சோனியா காந்தியும் அவர் மகன் ராகுல் காந்தியும் அடைந்தது ஆகியவை ஸ்வாமி முன்னெடுத்த முக்கியமான வழக்குகளாகும்.

பாரத அரசியல் வானில் அவரை மதிக்கலாம், வெறுக்கலாம் ஆனால் புறம்தள்ள முடியாத ஆளுமையாக விளங்கும் திரு சுப்ரமணியம் ஸ்வாமியின் எண்பதாவது பிறந்தநாள் இன்று. தனது வாழ்க்கையையே பலருக்கு படிப்பினையாக அமைத்திருக்கும் திரு ஸ்வாமிக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. 

வியாழன், 11 செப்டம்பர், 2025

செப்டம்பர் 11 - சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி பிறந்தநாள்

அந்த கனவின் விதை கருவானது ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால். எல்லா வளமும் எல்லா திறமையும் இருந்தும் ஏன் பாரதம் மீண்டும் மீண்டும் அந்நியர் கைகளில் சிக்குகிறது ? இந்த நிலை இன்னும் ஓர் முறை நிகழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையின் விளைவாகப் பிறந்தது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம். பெரும் சிந்தனாவாதிகளும், செயல் வீரர்களும் தங்கள் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து தேசிய புனர்நிர்மாண சேவையில் தங்களை ஆட்படுத்திக் கொண்டனர். சிறு விதை இன்று ஆலமரமாக வளர்ந்து நாட்டையும் பெருவாரியான மாநிலங்களையும் தனது ஆளுமைக்குள் கொண்டுவந்துள்ளது. பெரும் வெற்றி இன்னும் மிகப் பெரும் பொறுப்புகளையும் கடமைகளையும் சவால்களையும் முன்வைக்கிறது. அப்படியான காலத்தில் சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.



1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராபூர் நகரில் மதுகர் ராவ் பகவத் - மாலினி தேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் மோகன் பகவத். மதுகர் ராவ் பகவத் சங்கத்தின் ஆரம்பகால பிரச்சாரக்களில் ஒருவர். குஜராத் மாநிலப் பொறுப்பாளராக அவர் பணியாற்றினார். தாயார் மாலினி தேவி ராஷ்டிரிய சேவிகா சமிதியின் உறுப்பினர்.

தனது ஆரம்ப கல்வியை லோகமானிய திலக் வித்யாலயாவில் முடித்த மோகன் பகவத், கால்நடை மருத்துவத்வ பட்டத்தை நாக்பூர் நகரில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் பெற்றவர். முதுகலை படிப்பில் சேர்ந்த பகவத் அதனை பாதியில் நிறுத்தி விட்டு சங்கத்தின் முழுநேர உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

1975ஆம் ஆண்டு அவர் சங்கத்தில் இணைந்த சிறிது காலத்தில் நாட்டில் நெருக்கடி நிலையை இந்திரா பிரகடனம் செய்தார். சங்கம் தடை செய்யப்பட்டது. மோகன்ஜி தலைமறைவானார். சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்தை சங்கம் முன்னெடுத்தது. அதில் மோகன்ஜி பெரும் பங்காற்றினார்.

படிப்படியாக சங்கத்தின் பல்வேறு பொறுப்புகள் மோகன்ஜியைத் தேடி வந்தது. சங்கத்தின் அகில பாரத ஷைரிக் பிரமுக் மற்றும் அகில பாரத பிரச்சாரக் பிரமுக் ஆகிய பொறுப்புகளை மோகன்ஜி திறம்பட நிர்வகித்தார்.

2000ஆம் ஆண்டு அன்றய சர்சங்கசாலக் ராஜேந்திர சிங்ஜி  மற்றும் சர்காரியவாக் சேஷாத்ரிஜி ஆகியோர் தங்கள் உடல்நிலை காரணமாக விலகிக்கொள்ள சுதர்ஷன்ஜி சர்சங்கசாலக்காகவும் மோகன் பகவத்ஜி சர்காரியாவாக்காகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் 2009ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் மோகன் பகவத்ஜி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக்காக நியமிக்கப்பட்டார்.

மோகன்ஜியின் வழிகாட்டுதலில் பரிவார் அமைப்புகள் புதிய உற்சாகத்தோடு செயல்படத் தொடங்கின. தேசத்தின் புனர்நிர்மாணப் பணிகளில் புது உத்வேகம் ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தனிப் பெரும்பான்மை பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. 2025 ஆம் ஆண்டு தனது நூறாவது ஆண்டைக் கொண்டாட இருக்கும் சங்கத்தை அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இருக்குமாறு மோகன் பகவத்ஜி வழி நடத்திக்கொண்டு உள்ளார்.

மானனீய சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

திங்கள், 1 செப்டம்பர், 2025

செப்டம்பர் 1 - பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமி அவதார தினம்

பாரதநாடு உலகுக்கு அளித்த சித்தாந்தங்களில் பக்தியை ப்ரேமையை முன்னிறுத்தும் கௌடிய வைஷ்ணவ சித்தாந்தம் முக்கியமான ஒன்றாகும். சைதன்ய மஹாப்ரபுவால் செழுமை செய்யப்பட்ட இந்த சித்தாந்தத்தை உலகமெங்கும் எடுத்துச் சென்றவர் பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள். கண்ணனின் திருநாமத்தைப் பாடியும், ஆடியும் பாகவத புராணத்தையும் பகவத்கீதையை படித்தும், அதன்படி வாழ்ந்தும் ஆண்டவனை அடையலாம் என்பதே கௌடிய வைஷ்ணவ சித்தாந்தம். ஹரே கிருஷ்ணா இயக்கம் என்னும் இஸ்கான் மூலம் இந்த சித்தாந்ததை பரப்பியவர் பிரபுபாத ஸ்வாமிகள். 



கொல்கத்தா நகரின் தெற்குப் பகுதியில் கௌர் மோகன் டே - ரஜினி டே தம்பதியரின் மகனாக 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் நாள் அவதரித்தவர் பிரபுபாத ஸ்வாமிகள். இவரின் பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் அபய் சரண் என்பதாகும். கண்ணனிடம் சரணந்ததால் பயமற்றவன் என்பது இந்தப் பெயரின் பொருள். இவர் பிறந்தது ஜன்மாஷ்டமிக்கு அடுத்த தினம். அது கண்ணனின் தந்தையான நந்தகோபாலனை சிறப்பிக்கும் நந்தோஸ்தவ தினம். எனவே இவருக்கு நந்துலால் என்ற பெயரும் உண்டு. 

கொல்கத்தா நகரில் உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் தத்துவ துறையில் 1920 ஆம் ஆண்டு தேறிய அபய சரண், விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் அறைகூவலை ஏற்று தனது பட்டத்தை வாங்காமல் நிராகரித்தார். தனது 22 ஆம் வயதில் அபய சரண் ராதாராணி தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

1922 ஆம் ஆண்டில் அபய சரண் தனது குருவைக் கண்டடைந்தார். கௌடிய வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த பக்திசித்தானந்த ஸரஸ்வதி என்பவர் அபய சரணின் ஆன்மீக குருவாக அமர்ந்து சித்தாந்த விளக்கங்களைப் போதித்தார். கௌடிய வைஷ்ணவ சித்தாந்தத்தைப் பரப்ப Back to Godhead என்ற மாதப் பத்திரிகையை அபய சரண் நடத்த ஆரம்பித்தார். 

1947 ஆம் ஆண்டு கௌடிய வைஷ்ணவ அறிஞர்கள் இவரது புலமையைப் பாராட்டி பக்தி வேதாந்த என்ற பட்டத்தினை அளித்தனர். கண்ணன் வளர்ந்த விருந்தாவன் கிராமத்தில் பல ஆண்டுகள் தங்கி பாகவத புராணத்தை மொழிபெயர்த்து அதற்கான விளக்கவுரையை எழுதி வெளியிட்டார்.  1959 ஆம் ஆண்டு பக்தி பிரஜ்ஞான கேசவ் என்பவர் அபய சரணுக்கு முறையாக சன்யாசம் வழங்கினார். அது முதல் அவர் பிரபுபாதா என்று அழைக்கப்பட்டார். 

1965 ஆம் ஆண்டு தனது குருவின் ஆணைக்கு இணங்கி பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள் கிருஷ்ணனின் வழியை உலகமெங்கும் பரப்புவதற்காக அமெரிக்காவிற்கு பயணமானார். கையில் பணமோ அல்லது ஆதரிப்பாரோ இல்லாமல் அவர் பாஸ்டன் நகரை வந்தடைந்தார். பூங்காக்களிலும் சிறிய கூட்டங்களிலும் அவர் கீதையின் வழியில் வாழ்வது பற்றி பேசத் தொடங்கினார். சிறிது சிறிதாக மக்கள் இந்திய ஞானத்தின்பால் ஈர்க்கப்பட்டார்கள். இஸ்கான் எனும் International Society for Krishna Consciousness என்ற அமைப்பு 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் இஸ்கானின் கோவில்கள் நிறுவப்பட்டன. பின்னர் இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரத்திலும் இஸ்கான் இயக்கம் பரவியது. அன்று பிரபலமாக இருந்த பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சார்ந்தவர்கள் இஸ்கான் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள். நாம சங்கீர்த்தனமும், ரத யாத்திரையும் மேற்கத்திய மக்களை ஆத்மா ஆனந்தமயமானது, கடமையை பலனின் மீது பற்றில்லாமல் செய்வதுதான் உன்னதமான வழி என்பதை உணர வைத்தது. 

கிருஷ்ண பக்தியை உலகமெங்கும் பரப்பும் பணியில் பிரபுபாத ஸ்வாமிகள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து பதினான்கு முறை உலகை வலம் வந்தார். அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் புதிய விருந்தாவன் என்ற பகுதி அமைக்கப்பட்டது. ஏறத்தாழ ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல்வேறு கோவில்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் என்று கிருஷ்ண பக்தியை இது பரப்பி வருகிறது. 



என்பதற்கும் மேலான புத்தகங்களை பிரபுபாத ஸ்வாமிகள் எழுதி உள்ளார். வேதங்கள், உபநிதடங்கள், பாகவத புராணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கான விளக்க உரைகளை அவர் எழுதினார். பகவத்கீதை - உண்மை உருவில் என்று அவர் எழுதிய கீதைக்கான உரை முக்கியமான ஒன்றாகும். இதுவரை எண்பது மொழிகளில் இந்த உரை மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. 

தனது 81 ஆம் வயதில் 1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் நாள் பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள் கண்ணனின் திருவடியை அடைந்தார். 

எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில், அவர்கள் அனைவர்க்கும் எங்கள் வணக்கங்கள். 

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 29 - விஸ்வ ஹிந்து பரிஷத் - நிறுவன தினம்

பரிவார் அமைப்புகளில் முக்கியமான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனதினம் இன்று. 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் நாள் புனிதமான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக் குருஜி கோல்வால்கர் மற்றும் ஸ்வாமி சின்மயானந்த மஹராஜ் ஆகியோரால் தொடங்கப்பட்ட இயக்கமானது இன்று ஹிந்துக்கள் இருக்கும் இடமெங்கும் பரவி விரிந்து உள்ளது. கோவில்கள் பராமரிப்பு, பசு பாதுகாப்பு, மதமாற்ற முயற்சிகளை தடுத்து நிறுத்துவது, பாதை மாறிப்போன சகோதர்களை மீண்டும் தாய்மதம் திருப்புதல், பல்வேறு கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் மும்முரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.



பாரதிய வித்யா பவன் நிறுவனர் குலபதி முன்ஷி, கேஷவ்ராம் காசிராம் சாஸ்திரி, மாஸ்டர் தாராசிங், சத்குரு ஜக்ஜித்சிங், சி பி ராமஸ்வாமி அய்யர் ஆகியோரோடு குருஜி கோல்வால்கர், ஆப்தே, ஸ்வாமி சின்மயாந்த மஹராஜ் ஆகியோர் விஸ்வ ஹிந்து பரிஷத்தை உருவாக்கினார்கள். உலகமெங்கும் உள்ள ஹிந்துக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கமாக இது இயங்கும் என்ற குறிக்கோளோடு விஸ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கப்பட்டது. இயக்கத்தின் முதல் தலைவராக ஸ்வாமி சின்மயானந்த மஹாராஜும் செயலாளராக ஆப்தேயும் பணியாற்றினார்கள்.

மரபான இந்திய மதங்களான சீக்கியம், பௌத்தம், சமணம், மற்றும் பல்வேறு வழிபாட்டு மற்றும் வாழ்வியல் முறைகளை சார்ந்த சமயங்களையும் உள்ளடக்கியதாக விஸ்வ ஹிந்து பரிஷத் விளங்குகிறது. " அறம் காக்க, அறம் நம்மைக் காக்கும்" என்ற வேத வாக்கியம் இயக்கத்தின் குறிக்கோளாக பொறிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கலப்பில்லாத இயக்கம் என்பதால், எந்த ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பு வகிப்பவர்களும் இதில் பொறுப்பில் இருக்க முடியாது என்ற வரையறை உள்ளது.

பாரத நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் விஸ்வ ஹிந்து பரிஷத்த்தின் தன்னார்வலர்கள் தொண்டாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். கோவில்களில் உழவாரப் பணி, எல்லா சமுதாய தாய்மார்களும் பங்குபெறும் திருவிளக்கு பூஜை, மாணவர்களுக்கான சமய வகுப்புகள், பல்வேறு கல்வி நிலையங்கள், குறைந்த கட்டணத்தில் நடைபெறும் மருத்துவமனைகள், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள், பெண்களுக்கான விடுதிகள் என்று பல தளங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. பல்வேறு இயற்கை சீற்றங்கள் நாட்டைத் தாக்கும்போது அங்கே முதலில் நிவாரணப் பணிக்கு செல்வது பரிவார் அமைப்பினர்கள்தான்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கிளைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா என்று பல்வேறு நாடுகளிலும் பரவி உள்ளது. ஏறத்தாழ ஆறு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இன்று விஸ்வ ஹிந்து பரிஷத்தில் உள்ளனர். பலனின் மீது பற்று வைக்காமல் சேவை செய்யும் உறுப்பினர்கள் பலரின் உழைப்பால் சமுதாயத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தால் நீடித்த நிலையான மாற்றத்தை உருவாக்க முடிகிறது.

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 28 - அறிவியல் அறிஞர் M G K மேனன் பிறந்தநாள்

அணு அறிவியல், மின்னணுவியல், விண்வெளி ஆராய்ச்சி, உயிர் தொழில்நுட்பம், சுற்றுப்புற சூழல், இயற்பியலில் உயர் ஆற்றல் துறை என்று அறிவியலின் பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கிய பேராசிரியர் எம் ஜி கே மேனன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

மங்களூர் நகரை பிறப்பிடமாகக் கொண்ட திரு மேனன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் நகரில் உள்ள ஜஸ்வந்த் கல்லூரியிலும் பின்னர் மும்பையில் உள்ள அரசு அறிவியல் நிறுவனத்திலும் பயின்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற சிசில் பாவெல் மேற்பார்வையில் துகள் இயற்பியலில் ( Particle Physics ) முனைவர் பட்டம் பெற்றார்.

நாடு திரும்பிய திரு மேனன், ஹோமி பாபாவின் அறிவுரையின் பேரில் 1955ஆம் ஆண்டு மும்பையில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ( Tata Institute of Fundamental Research ) தன்னை இணைத்துக் கொண்டார். டாக்டர் பாபாவின் அகால மரணத்தைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டு தனது முப்பத்தி எட்டாம் வயதில் அந்த நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி ஏற்றார்.

டாக்டர் விக்ரம் சாராபாயின் மரணத்தை அடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக ஒரு ஆண்டு பணியாற்றினார். இந்திய புள்ளியில் நிறுவனத்தின் தலைவராகவும், மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும்,  அலகாபாத் நகரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும் பணியாற்றினார்.



கேரள மாநிலத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் அரசு நிறுவத் திட்டமிட்டிருந்த நீர்மின் நிலையம் உருவானால், அந்த வனப்பகுதி பாதிக்கப்படும் என்று அரசுடன் வாதாடி அதனை தடுத்ததிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

திட்டக்குழு உறுப்பினராகவும், பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசகராகவும் பின்னர் அறிவியல் தொழில்நுட்ப துறையின் அமைச்சராகவும் திரு மேனன் பணியாற்றினார்.

1971முதல் 1982வரை பாரத அரசின் மின்னணுவியல், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புற சூழல் துறைகளின் செயலாளராகவும் திரு மேனன் பணிபுரிந்தார். கணினி துறையில் நாடு இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிக்கல் நாட்டியவர் திரு மேனன் என்றால் அது மிகையல்ல.

நாட்டின் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி நாடு திரு மேனனை மரியாதை செலுத்தியது.

அறிவியலின் பல்வேறு தளங்களின் தனது பங்களைப்பைச் செலுத்திய திரு மேனன் தனது எண்பத்தி எட்டாவது வயதில் 2016ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் காலமானார். 

புதன், 27 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 27 - சர் தோரப்ஜி டாடா பிறந்தநாள்

டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மகனும், டாடா குழுமத்தின் இரண்டாவது தலைவரும், தொழிலதிபருமான திரு தோரப்ஜி டாடா அவர்களின் பிறந்தநாள் இன்று,



1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் நாள் திரு ஜாம்ஷெட்ஜி டாடா - ஹீராபாய் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் திரு தோரப்ஜி டாடா. தனது பள்ளிக்கல்வியை மும்பையிலும் பின்னர் பட்டப் படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், மும்பையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியிலும் முடித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.

1884 ஆம் ஆண்டு தந்தையின் நிறுவனத்தில் இணைந்த திரு தோரப்ஜி டாடா முதலில் பாண்டிச்சேரி நகரில் நூற்பாலை ஒன்றை நிறுவ முடியமா என்பதை கண்டுபிடிக்கவும், பின்னர் நாக்பூரில் உள்ள அவர்களின் துணி ஆலையிலும் பணியாற்றினார். மைசூர் நகரில் வசித்து வந்த கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய திரு ஹோர்முர்ஷி பாபாவின் மகளான மெஹர்பாய் என்ற பெண்மணியை மணம் செய்தார். மெஹர்பாயின் சகோதர் மகன்தான் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் டாக்டர் ஹோமி பாபா.

ஜாம்ஷெட்ஜி டாடாவின் மறைவிற்குப் பிறகு டாடா குழுமத்தின் தலைவராக திரு தோரப்ஜி டாடா பொறுப்பேற்றார். அப்போது டாடா குழுமத்தில் நூற்பாலைகளும் மும்பையில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலும்தான் இருந்தன. தந்தையின் கனவை தனயன் நிறைவேற்றினார். டாடா குழுமத்தின் முக்கிய அங்கமான டாடா இரும்பு எக்கு தொழில்சாலை, டாடா மின் உற்பத்தி ஆலை, நியூ இந்தியா காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றை திரு தோரப்ஜி டாடா நிறுவினார். திரு ஜாம்ஷெட்ஜி டாடா காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ( Indian Institute of Science ) திரு தோரப்ஜி டாடா காலத்தில்தான் முறையாகத் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒரு பெரும் தொகையை நன்கொடையாக அளித்தார்.

இந்திய தொழில் முன்னேற்றத்தில் திரு தோரப்ஜி டாடா அவர்களின் பங்களிப்பை மரியாதை செலுத்தும் வகையில் அன்றய ஆங்கில அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது.

வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமல்லாது திரு தோரப்ஜி டாடா  ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், விளையாட்டு வீரர்களை ஆதரிப்பவராகவும் விளங்கினார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும் அவர் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு பங்குபெற்ற இந்திய அணியின் மொத்த செலவையும் டாடாவே அளித்தார்.

1931 ஆம் ஆண்டு திரு தோரப்ஜி டாடாவின் மனைவி மெஹர்பாய் தனது 52 ஆம் வயதில் ரத்த புற்றுநோயால் மரணமடைந்தார். மனைவியின் நினைவாக திருமதி டாடா நினைவு அறக்கட்டளையை நிறுவி ரத்த புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்காக பொருளுதவி செய்தார். 1932 ஆம் ஆண்டு சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை நிறுவப்பட்டது. கல்வி, பேரிடர் மேலாண்மை போன்ற சமுதாய பணிகளை இந்த அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

1932 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் நாள் தோரப்ஜி டாடா காலமானார். இன்று ஆல்போல் பெருகி அருகுபோல் வேரோடி இருக்கும் டாடா குழுமத்தை நிலைநிறுத்தியதில் திரு தோரப்ஜி டாடா அவர்களின் பங்கு மகத்தானது.