திங்கள், 1 செப்டம்பர், 2025

செப்டம்பர் 1 - பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமி அவதார தினம்

பாரதநாடு உலகுக்கு அளித்த சித்தாந்தங்களில் பக்தியை ப்ரேமையை முன்னிறுத்தும் கௌடிய வைஷ்ணவ சித்தாந்தம் முக்கியமான ஒன்றாகும். சைதன்ய மஹாப்ரபுவால் செழுமை செய்யப்பட்ட இந்த சித்தாந்தத்தை உலகமெங்கும் எடுத்துச் சென்றவர் பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள். கண்ணனின் திருநாமத்தைப் பாடியும், ஆடியும் பாகவத புராணத்தையும் பகவத்கீதையை படித்தும், அதன்படி வாழ்ந்தும் ஆண்டவனை அடையலாம் என்பதே கௌடிய வைஷ்ணவ சித்தாந்தம். ஹரே கிருஷ்ணா இயக்கம் என்னும் இஸ்கான் மூலம் இந்த சித்தாந்ததை பரப்பியவர் பிரபுபாத ஸ்வாமிகள். 



கொல்கத்தா நகரின் தெற்குப் பகுதியில் கௌர் மோகன் டே - ரஜினி டே தம்பதியரின் மகனாக 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் நாள் அவதரித்தவர் பிரபுபாத ஸ்வாமிகள். இவரின் பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் அபய் சரண் என்பதாகும். கண்ணனிடம் சரணந்ததால் பயமற்றவன் என்பது இந்தப் பெயரின் பொருள். இவர் பிறந்தது ஜன்மாஷ்டமிக்கு அடுத்த தினம். அது கண்ணனின் தந்தையான நந்தகோபாலனை சிறப்பிக்கும் நந்தோஸ்தவ தினம். எனவே இவருக்கு நந்துலால் என்ற பெயரும் உண்டு. 

கொல்கத்தா நகரில் உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் தத்துவ துறையில் 1920 ஆம் ஆண்டு தேறிய அபய சரண், விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் அறைகூவலை ஏற்று தனது பட்டத்தை வாங்காமல் நிராகரித்தார். தனது 22 ஆம் வயதில் அபய சரண் ராதாராணி தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

1922 ஆம் ஆண்டில் அபய சரண் தனது குருவைக் கண்டடைந்தார். கௌடிய வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த பக்திசித்தானந்த ஸரஸ்வதி என்பவர் அபய சரணின் ஆன்மீக குருவாக அமர்ந்து சித்தாந்த விளக்கங்களைப் போதித்தார். கௌடிய வைஷ்ணவ சித்தாந்தத்தைப் பரப்ப Back to Godhead என்ற மாதப் பத்திரிகையை அபய சரண் நடத்த ஆரம்பித்தார். 

1947 ஆம் ஆண்டு கௌடிய வைஷ்ணவ அறிஞர்கள் இவரது புலமையைப் பாராட்டி பக்தி வேதாந்த என்ற பட்டத்தினை அளித்தனர். கண்ணன் வளர்ந்த விருந்தாவன் கிராமத்தில் பல ஆண்டுகள் தங்கி பாகவத புராணத்தை மொழிபெயர்த்து அதற்கான விளக்கவுரையை எழுதி வெளியிட்டார்.  1959 ஆம் ஆண்டு பக்தி பிரஜ்ஞான கேசவ் என்பவர் அபய சரணுக்கு முறையாக சன்யாசம் வழங்கினார். அது முதல் அவர் பிரபுபாதா என்று அழைக்கப்பட்டார். 

1965 ஆம் ஆண்டு தனது குருவின் ஆணைக்கு இணங்கி பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள் கிருஷ்ணனின் வழியை உலகமெங்கும் பரப்புவதற்காக அமெரிக்காவிற்கு பயணமானார். கையில் பணமோ அல்லது ஆதரிப்பாரோ இல்லாமல் அவர் பாஸ்டன் நகரை வந்தடைந்தார். பூங்காக்களிலும் சிறிய கூட்டங்களிலும் அவர் கீதையின் வழியில் வாழ்வது பற்றி பேசத் தொடங்கினார். சிறிது சிறிதாக மக்கள் இந்திய ஞானத்தின்பால் ஈர்க்கப்பட்டார்கள். இஸ்கான் எனும் International Society for Krishna Consciousness என்ற அமைப்பு 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் இஸ்கானின் கோவில்கள் நிறுவப்பட்டன. பின்னர் இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரத்திலும் இஸ்கான் இயக்கம் பரவியது. அன்று பிரபலமாக இருந்த பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சார்ந்தவர்கள் இஸ்கான் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள். நாம சங்கீர்த்தனமும், ரத யாத்திரையும் மேற்கத்திய மக்களை ஆத்மா ஆனந்தமயமானது, கடமையை பலனின் மீது பற்றில்லாமல் செய்வதுதான் உன்னதமான வழி என்பதை உணர வைத்தது. 

கிருஷ்ண பக்தியை உலகமெங்கும் பரப்பும் பணியில் பிரபுபாத ஸ்வாமிகள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து பதினான்கு முறை உலகை வலம் வந்தார். அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் புதிய விருந்தாவன் என்ற பகுதி அமைக்கப்பட்டது. ஏறத்தாழ ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல்வேறு கோவில்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் என்று கிருஷ்ண பக்தியை இது பரப்பி வருகிறது. 



என்பதற்கும் மேலான புத்தகங்களை பிரபுபாத ஸ்வாமிகள் எழுதி உள்ளார். வேதங்கள், உபநிதடங்கள், பாகவத புராணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கான விளக்க உரைகளை அவர் எழுதினார். பகவத்கீதை - உண்மை உருவில் என்று அவர் எழுதிய கீதைக்கான உரை முக்கியமான ஒன்றாகும். இதுவரை எண்பது மொழிகளில் இந்த உரை மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. 

தனது 81 ஆம் வயதில் 1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் நாள் பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள் கண்ணனின் திருவடியை அடைந்தார். 

எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில், அவர்கள் அனைவர்க்கும் எங்கள் வணக்கங்கள். 

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 29 - விஸ்வ ஹிந்து பரிஷத் - நிறுவன தினம்

பரிவார் அமைப்புகளில் முக்கியமான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனதினம் இன்று. 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் நாள் புனிதமான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக் குருஜி கோல்வால்கர் மற்றும் ஸ்வாமி சின்மயானந்த மஹராஜ் ஆகியோரால் தொடங்கப்பட்ட இயக்கமானது இன்று ஹிந்துக்கள் இருக்கும் இடமெங்கும் பரவி விரிந்து உள்ளது. கோவில்கள் பராமரிப்பு, பசு பாதுகாப்பு, மதமாற்ற முயற்சிகளை தடுத்து நிறுத்துவது, பாதை மாறிப்போன சகோதர்களை மீண்டும் தாய்மதம் திருப்புதல், பல்வேறு கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் மும்முரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.



பாரதிய வித்யா பவன் நிறுவனர் குலபதி முன்ஷி, கேஷவ்ராம் காசிராம் சாஸ்திரி, மாஸ்டர் தாராசிங், சத்குரு ஜக்ஜித்சிங், சி பி ராமஸ்வாமி அய்யர் ஆகியோரோடு குருஜி கோல்வால்கர், ஆப்தே, ஸ்வாமி சின்மயாந்த மஹராஜ் ஆகியோர் விஸ்வ ஹிந்து பரிஷத்தை உருவாக்கினார்கள். உலகமெங்கும் உள்ள ஹிந்துக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கமாக இது இயங்கும் என்ற குறிக்கோளோடு விஸ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கப்பட்டது. இயக்கத்தின் முதல் தலைவராக ஸ்வாமி சின்மயானந்த மஹாராஜும் செயலாளராக ஆப்தேயும் பணியாற்றினார்கள்.

மரபான இந்திய மதங்களான சீக்கியம், பௌத்தம், சமணம், மற்றும் பல்வேறு வழிபாட்டு மற்றும் வாழ்வியல் முறைகளை சார்ந்த சமயங்களையும் உள்ளடக்கியதாக விஸ்வ ஹிந்து பரிஷத் விளங்குகிறது. " அறம் காக்க, அறம் நம்மைக் காக்கும்" என்ற வேத வாக்கியம் இயக்கத்தின் குறிக்கோளாக பொறிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கலப்பில்லாத இயக்கம் என்பதால், எந்த ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பு வகிப்பவர்களும் இதில் பொறுப்பில் இருக்க முடியாது என்ற வரையறை உள்ளது.

பாரத நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் விஸ்வ ஹிந்து பரிஷத்த்தின் தன்னார்வலர்கள் தொண்டாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். கோவில்களில் உழவாரப் பணி, எல்லா சமுதாய தாய்மார்களும் பங்குபெறும் திருவிளக்கு பூஜை, மாணவர்களுக்கான சமய வகுப்புகள், பல்வேறு கல்வி நிலையங்கள், குறைந்த கட்டணத்தில் நடைபெறும் மருத்துவமனைகள், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள், பெண்களுக்கான விடுதிகள் என்று பல தளங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. பல்வேறு இயற்கை சீற்றங்கள் நாட்டைத் தாக்கும்போது அங்கே முதலில் நிவாரணப் பணிக்கு செல்வது பரிவார் அமைப்பினர்கள்தான்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கிளைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா என்று பல்வேறு நாடுகளிலும் பரவி உள்ளது. ஏறத்தாழ ஆறு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இன்று விஸ்வ ஹிந்து பரிஷத்தில் உள்ளனர். பலனின் மீது பற்று வைக்காமல் சேவை செய்யும் உறுப்பினர்கள் பலரின் உழைப்பால் சமுதாயத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தால் நீடித்த நிலையான மாற்றத்தை உருவாக்க முடிகிறது.

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 28 - அறிவியல் அறிஞர் M G K மேனன் பிறந்தநாள்

அணு அறிவியல், மின்னணுவியல், விண்வெளி ஆராய்ச்சி, உயிர் தொழில்நுட்பம், சுற்றுப்புற சூழல், இயற்பியலில் உயர் ஆற்றல் துறை என்று அறிவியலின் பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கிய பேராசிரியர் எம் ஜி கே மேனன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

மங்களூர் நகரை பிறப்பிடமாகக் கொண்ட திரு மேனன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் நகரில் உள்ள ஜஸ்வந்த் கல்லூரியிலும் பின்னர் மும்பையில் உள்ள அரசு அறிவியல் நிறுவனத்திலும் பயின்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற சிசில் பாவெல் மேற்பார்வையில் துகள் இயற்பியலில் ( Particle Physics ) முனைவர் பட்டம் பெற்றார்.

நாடு திரும்பிய திரு மேனன், ஹோமி பாபாவின் அறிவுரையின் பேரில் 1955ஆம் ஆண்டு மும்பையில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ( Tata Institute of Fundamental Research ) தன்னை இணைத்துக் கொண்டார். டாக்டர் பாபாவின் அகால மரணத்தைத் தொடர்ந்து, 1966 ஆம் ஆண்டு தனது முப்பத்தி எட்டாம் வயதில் அந்த நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி ஏற்றார்.

டாக்டர் விக்ரம் சாராபாயின் மரணத்தை அடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக ஒரு ஆண்டு பணியாற்றினார். இந்திய புள்ளியில் நிறுவனத்தின் தலைவராகவும், மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும்,  அலகாபாத் நகரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும் பணியாற்றினார்.



கேரள மாநிலத்தில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் அரசு நிறுவத் திட்டமிட்டிருந்த நீர்மின் நிலையம் உருவானால், அந்த வனப்பகுதி பாதிக்கப்படும் என்று அரசுடன் வாதாடி அதனை தடுத்ததிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு.

திட்டக்குழு உறுப்பினராகவும், பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசகராகவும் பின்னர் அறிவியல் தொழில்நுட்ப துறையின் அமைச்சராகவும் திரு மேனன் பணியாற்றினார்.

1971முதல் 1982வரை பாரத அரசின் மின்னணுவியல், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புற சூழல் துறைகளின் செயலாளராகவும் திரு மேனன் பணிபுரிந்தார். கணினி துறையில் நாடு இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிக்கல் நாட்டியவர் திரு மேனன் என்றால் அது மிகையல்ல.

நாட்டின் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷண் விருதுகளை வழங்கி நாடு திரு மேனனை மரியாதை செலுத்தியது.

அறிவியலின் பல்வேறு தளங்களின் தனது பங்களைப்பைச் செலுத்திய திரு மேனன் தனது எண்பத்தி எட்டாவது வயதில் 2016ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் காலமானார். 

புதன், 27 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 27 - சர் தோரப்ஜி டாடா பிறந்தநாள்

டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மகனும், டாடா குழுமத்தின் இரண்டாவது தலைவரும், தொழிலதிபருமான திரு தோரப்ஜி டாடா அவர்களின் பிறந்தநாள் இன்று,



1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் நாள் திரு ஜாம்ஷெட்ஜி டாடா - ஹீராபாய் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் திரு தோரப்ஜி டாடா. தனது பள்ளிக்கல்வியை மும்பையிலும் பின்னர் பட்டப் படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், மும்பையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியிலும் முடித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.

1884 ஆம் ஆண்டு தந்தையின் நிறுவனத்தில் இணைந்த திரு தோரப்ஜி டாடா முதலில் பாண்டிச்சேரி நகரில் நூற்பாலை ஒன்றை நிறுவ முடியமா என்பதை கண்டுபிடிக்கவும், பின்னர் நாக்பூரில் உள்ள அவர்களின் துணி ஆலையிலும் பணியாற்றினார். மைசூர் நகரில் வசித்து வந்த கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய திரு ஹோர்முர்ஷி பாபாவின் மகளான மெஹர்பாய் என்ற பெண்மணியை மணம் செய்தார். மெஹர்பாயின் சகோதர் மகன்தான் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் டாக்டர் ஹோமி பாபா.

ஜாம்ஷெட்ஜி டாடாவின் மறைவிற்குப் பிறகு டாடா குழுமத்தின் தலைவராக திரு தோரப்ஜி டாடா பொறுப்பேற்றார். அப்போது டாடா குழுமத்தில் நூற்பாலைகளும் மும்பையில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலும்தான் இருந்தன. தந்தையின் கனவை தனயன் நிறைவேற்றினார். டாடா குழுமத்தின் முக்கிய அங்கமான டாடா இரும்பு எக்கு தொழில்சாலை, டாடா மின் உற்பத்தி ஆலை, நியூ இந்தியா காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றை திரு தோரப்ஜி டாடா நிறுவினார். திரு ஜாம்ஷெட்ஜி டாடா காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பெங்களூர் நகரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ( Indian Institute of Science ) திரு தோரப்ஜி டாடா காலத்தில்தான் முறையாகத் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒரு பெரும் தொகையை நன்கொடையாக அளித்தார்.

இந்திய தொழில் முன்னேற்றத்தில் திரு தோரப்ஜி டாடா அவர்களின் பங்களிப்பை மரியாதை செலுத்தும் வகையில் அன்றய ஆங்கில அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது.

வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமல்லாது திரு தோரப்ஜி டாடா  ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், விளையாட்டு வீரர்களை ஆதரிப்பவராகவும் விளங்கினார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும் அவர் பணியாற்றினார். 1924 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு பங்குபெற்ற இந்திய அணியின் மொத்த செலவையும் டாடாவே அளித்தார்.

1931 ஆம் ஆண்டு திரு தோரப்ஜி டாடாவின் மனைவி மெஹர்பாய் தனது 52 ஆம் வயதில் ரத்த புற்றுநோயால் மரணமடைந்தார். மனைவியின் நினைவாக திருமதி டாடா நினைவு அறக்கட்டளையை நிறுவி ரத்த புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்காக பொருளுதவி செய்தார். 1932 ஆம் ஆண்டு சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை நிறுவப்பட்டது. கல்வி, பேரிடர் மேலாண்மை போன்ற சமுதாய பணிகளை இந்த அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

1932 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் நாள் தோரப்ஜி டாடா காலமானார். இன்று ஆல்போல் பெருகி அருகுபோல் வேரோடி இருக்கும் டாடா குழுமத்தை நிலைநிறுத்தியதில் திரு தோரப்ஜி டாடா அவர்களின் பங்கு மகத்தானது. 

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 25 - திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்தநாள் -

பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டும் இழித்தும் பழித்தும் பேசும் ஒரு கூட்டம் தமிழகத்தில் தோன்றிய போது, இசையால், இனிய தமிழால் சித்தாந்தங்களை எளிய முறையில் அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எடுத்துரைத்து மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை தன் தோளில் சுமந்த ஒரு அறிஞரும் தோன்றினார். எண்பத்தி ஏழு ஆண்டுகள் வாழ்ந்து நாடெங்கும் சைவ சித்தாந்தத்தை விளக்கினார். தனது பேச்சுத் திறமையால் கேட்பவர் அனைவரையும் கட்டிப் போட்டார். அவர்தான் திருமுருக கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள். 



தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகே காங்கேயநல்லூர் என்ற சிற்றூரில் மல்லையதாசருக்கும் கனகவல்லி அம்மையாருக்கும் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் பிறந்தவர் வாரியார் ஸ்வாமிகள். வீர சைவ மரபில் பிறந்த ஸ்வாமிகளுக்கு அவரது ஐந்தாம் வயதில் சிவலிங்க தாரணம் செய்து வைக்கப்பட்டது. 

இவரது தந்தையே இயல் இசை புராண வல்லுநர். அவரே ஸ்வாமிகளுக்கு குருவாக அமர்ந்து கல்வி கற்பித்தார். இயல் இசையிலும் இலக்கண இலக்கியங்களிலும் ஸ்வாமிகள் தேர்ச்சி பெற்றார். எட்டு வயதில் கவி பாடும் திறமையும் பதின்ம வயதிலேயே பன்னிரெண்டாயிரம் பாடல்களை மனப்பாடமாக சொல்லும் திறமையும் ஸ்வாமிகளுக்கு அமைந்தது. தனது பதினெட்டாம் வயதில் இருந்து பக்தி பேருரைகளை நிகழ்த்த ஆரம்பித்தார். ஸ்வாமிகள் வீணை வாசிப்பதிலும் நிபுணர். 

பண்டிதர்களுக்கு மட்டுமல்லாது பாமர மக்களுக்கும் புரியும் படி பேச்சு வழக்கில் உபன்யாசம் செய்வது ஸ்வாமிகளின் வழிமுறை. தனது பேச்சுக்களின் நடுவே திருப்புகழ், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை பண்ணோடு பாடி அவைகளை மக்களிடம் சேர்த்தார். ஸ்வாமிகளின் பேச்சு முறை என்பது நாடக பாணியில், உயர்தர நகைச்சுவையோடு, அன்றாட நடப்புகளை கலந்து இருக்கும். 

1936ஆம் ஆண்டு முதல் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக திருப்புகழ் அமிர்தம் என்ற மாத பத்திரிகையை நடத்தினார். அந்த இதழ்  மாதம் தோறும் திருப்புகழ் பாடல் ஒன்றுக்கு உரை, கந்தர் அலங்காரத்திற்கு உரை, மற்றும் பல்வேறு கட்டுரைகளோடு வெளியானது. வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் ஸ்வாமிகள் எழுதி உள்ளார். 

கிருபை என்றால் கருணை, வாரி என்றால் கடல். மிகச் சரியாகத்தான் இவர் பெற்றோர்கள் இவருக்கு கிருபானந்த வாரியார் என்று பெயர் இட்டனர்  போலும்.பேருக்கு ஏற்றார் போல ஸ்வாமிகள் கருணைக் கடலாகவும் ஆனந்தக் கடலாகவும் விளங்கினார். பல்வேறு கோவில்களில் திருப்பணியும், பல்வேறு கல்வி நிலையங்களும் இவரால் உருவாக்கப்பட்டன. 

நாடெங்கும் சைவத்தையும் தமிழையும் வளர்த்து சிறப்பித்த வாரியார் ஸ்வாமிகள் 1993ஆம் நாள் நவம்பர் 7ஆம் நாள் முருகப் பெருமாள் திருவடிகளை அடைந்தார். பூத உடலைத் துறந்தாலும் தனது புத்தகங்கள் மூலமாகவும், பதிவு செய்யப்பட்ட சொற்பொழிவுகள் மூலமாகவும் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 24 - அணு விஞ்ஞானி ஹோமி சேத்னா பிறந்தநாள் -

அது 1974ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் தார் பாலைவனம் பரவிக் கிடைக்கும் பொக்ரான் நகரில் இருந்து டெல்லிக்கு  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்தவர் அன்றய பிரதமர் இந்திரா காந்தி. பேசிய குரல் ஒரே ஒரு செய்தியைத்தான் கூறியது. " புத்தர் சிரித்தார் " இரண்டே சொற்களில் பாரதம் வெற்றிகரமாக தனது அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது என்பது அந்த சங்கேத வாக்கியத்தின் பொருள். இந்த மகத்தான சாதனை ஹோமி நுஸுர்வான்ஜி சேத்னா இந்திய அணுசக்தி நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நடைபெற்றது.


பாரசீக நாட்டில் இருந்து தங்கள் மத நம்பிக்கைகளை காப்பாற்றிக் கொள்ள பாரத தேசத்திற்கு அடைக்கலம் வந்த இனம் பார்சி மக்கள். பாலில் கலந்த சர்க்கரை போல பாரத நாட்டிற்கு பெரும் தொண்டாற்றிய சிறுபான்மை இனம் பார்சி இனம். புகழ்பெற்ற அறிஞர்களை தொழில்முனைவோர்களை ஆராய்ச்சியாளர்களை ராணுவ தளபதிகளை இந்த தேசத்திற்கு அளித்த இனம் அது. ஹோமி சேத்னாவும் பார்சி இனத்தைச் சார்ந்தவர்தான்.

1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் நாள் இன்றய மும்பை நகரில் பிறந்தவர் சேத்னா. மும்பை தூய சவேரியார் பள்ளியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகத்திலும் படித்த சேத்னா அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். சிறிது காலம் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி விட்டு பாரதம் திரும்பிய சேத்னா Indian Rare Earth நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார்.

அணு உலைகளுக்கு தேவையான மூலப் பொருள்களான தோரியம் மற்றும் புளூட்டோனியம் ஆகிய தனிமங்களை பிரித்தெடுக்கும் ஆலையை மும்பை நகரில் உள்ள டிராம்பே பகுதியிலும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் தனிமத்தை பிரித்தெடுக்கும் ஆலையை இன்றய ஜார்கண்ட் மாநிலத்திலும் பின்னர் நாட்டின் முதல் அணு மின் உற்பத்தி நிலையத்தை மும்பையிலும் உருவாக்கிய குழுக்களுக்கு தலைவராக இருந்து பணியாற்றினார்.

அடுத்தடுத்து மர்மமான முறையில் பாரத நாட்டின் முன்னோடி விஞ்ஞானிகளான ஹோமி பாபா மற்றும் விக்ரம் சாராபாய் ஆகியோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணுசக்தி நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உலக நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்த உறுப்பினர்களான ஐந்து நாடுகள் தவிர வேறு எந்த நாடும் அணு சக்தித் துறையில் ஆராய்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்த காலம் அது. அந்த தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கு முன்னர் பாரதம் அணு ஆயுத சோதனையைச் செய்ய முடிவு செய்தது. அந்த பொறுப்பு சேத்னாவிடம் ஒப்படைக்கப்பட்டது. புத்தர் சிரித்தார், பூமி அதிர்ந்தது. பாரதத்தின் திறமை உலகமெங்கும் ஐயமே இல்லாமல் நிலைநாட்டப்பட்டது.

நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியான ஹோமி சேத்னாவுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி நாடு மரியாதை செலுத்தியது. பட்நாகர் விருது, பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளித்த முனைவர் பட்டங்கள் என்று சேத்னா கவுரவம் செய்யப்பட்டார்.

ஒரு சிறந்த தலைவரின் இலக்கணம் என்பது தன்னைக் காட்டிலும் சிறந்த தலைவர்களை உருவாக்குவதுதான். ராஜா ராமண்ணா, பி கே ஐயங்கார் என்று அடுத்த தலைமுறை அணுசக்திதுறை தலைவர்களை பட்டை தீட்டி சேத்னா நாட்டுக்கு அளித்தார். ஹோமி பாபாவும், விக்ரம் சாராபாயும், ஹோமி சேத்னாவும் அமைத்த பாதையில் இன்று நாடு நடை போடுகிறது.

தனது எண்பத்தி ஏழாவது வயதில் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் ஹோமி சேத்னா காலமானார்.

நாட்டின் பாதுகாப்புக்கு பெரும்பங்காற்றிய அறிஞருக்கு ஒரே இந்தியா தளம் தலை வணங்குகிறது. 

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

ஆகஸ்ட் 22 - ஏக்நாத் ரானடே நினைவு தினம்


நீலத் திரைகடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை. பாரத நாட்டின் தெற்கு எல்லையில் அன்னை தவம் செய்த ஸ்ரீபாத பாறையில் தவம் செய்ய கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வந்தார்.துறவறம் என்பது எந்த வேலையையும் செய்யாமல் இருப்பதல்ல, அது நாட்டுக்கு நாள்தோறும் உழைப்பது என்று கூறிய ஸ்வாமி விவேகானந்தர்தான அந்த இளைஞர். அதே பாறையில் ஸ்வாமிக்கு ஒரு மண்டபம் கட்ட வேண்டும், அது எண்ணற்ற பாரத இளைஞர்களை தேச சேவைக்கு தூண்டும் விளக்காக இருக்க வேண்டும் என்று பாரதத்தின் மேற்குப் பகுதியில் இருந்து ஒருவர் வந்தார். அவர்தான் ஏக்நாத் ரானடே.



1914 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் பிறந்தவர் ஏக்நாத் ரானடே. சிறு வயதிலேயே ஏக்நாத்தின் குடும்பம் நாகபுரி நகருக்கு குடியேறியது. தத்துவ இயலில் இளங்கலை படிப்பும் பின்னர் சட்டமும் பயின்றவர் ஏக்நாத் ரானடே. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் ஆரம்பித்த சிறுது காலத்திலேயே தனது பதின்ம வயதில் ஸ்வயம்சேவகராக இணைந்து கொண்டார் ஏக்நாத் ஜி. தேசபக்தியும், கொள்கைப் பிடிப்புமாக சங்கம் அவரை வார்த்தெடுத்தது. குடும்பத்தையும் இல்வாழ்கையையையும் துறந்து சங்கத்தின் முழுநேர சேவகராக பணியாற்றத் தொடங்கினார். தனது இருபத்தி நாலாம் வயதிலேயே ஜபல்பூர் நகரின் பிரச்சாரகராக நியமிக்கப்பட்டார். காந்தி கொலையைத் தொடர்ந்து சங்கம் தடை செய்யப்பட்டது. பல முழுநேர ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஏக்நாத் ஜி தலைமறைவானார். தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டே சங்க பணிகளில் ஈடுபட்டார். அரசோடு நடந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். சிறிது காலத்திலேயே காந்தி கொலைக்கும் சங்கத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று நிரூபணமாகி தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

வங்காளம், பிஹார், அஸாம் ஆகிய மாநிலங்கள் அடங்கிய பாரதத்தின் கிழக்குப் பகுதியின் க்ஷேத்திர பிரச்சாரக்காக 1950ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பிரிவினைக்குப் பின்னால் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பாரதம் வந்த ஹிந்து சகோதர்களை அரவணைத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை சிறப்பாக வழிநடத்தினார். சங்கத்தின் மிக முக்கியப் பொறுப்பான அகில இந்திய ப்ரச்சாரக் பிரமுக், பௌதிக் பிரமுக், சர்காரியவாக் ( செயலாளர் ) ஆகிய பொறுப்புளையும் ஏக்நாத் ஜி வகித்தார்.

1963ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகானந்தரின் நூறாவது ஆண்டு. அப்போது ஸ்வாமிஜியின் சிந்தனைகளை தொகுத்து " ஹிந்து ராஷ்டிரத்திற்கு ஒரு அறைகூவல்" ( Rousing Call to Hindu Nation ) என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஸ்வாமியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஸ்ரீபாத பாறையில் மணிமண்டபம் ஓன்று கட்ட திட்டம் உருவானது. சங்கத்தின் சார்பாக ஏக்நாத் ஜி குழுவின் செயலாளராக அடையாளம் காட்டப்பட்டார்.

பாரதம்  முழுவதும் பயணம் செய்து பொதுமக்களின் ஆதரவை விவேகானந்தரின் மண்டபத்திற்கு ஏக்நாத் ஜி திரட்டினார். முன்னூறுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை கடிதம் மூலம் தெரிவித்தனர். கட்சி வேறுபாடில்லாமல் எல்லா கட்சி தலைவர்களையும் கட்டுமானப் பணிக்கு ஆதரவு தெரிவிக்க வைத்தார். ஏக்நாத் ஜியின் அயராத உழைப்பின் காரணமாக இன்று ஸ்ரீபாத பாறையில் விவேகானந்தரின் நினைவு மண்டபம் கம்பிரமாக நிற்கிறது. அதனைத் தொடர்ந்து கன்யாகுமரி கடற்கரை அருகில் விவேகானந்த கேந்த்ராவை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டு அதனையும் வெற்றிகரமாக முடித்தார். இன்று விவேகானந்தா கேந்திரா பல்வேறு தேசியப் புனர் நிர்மாணப் பணிகளையும், கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறது.

எந்த பலனையும் எதிர்பாராமல் நிஷ்காமியமாக  செயல்படும் கர்மயோகியாக தனது வாழ்க்கையை பெரும் குறிக்கோளுக்காக அர்ப்பணம் செய்யும் ஸ்வயம்சேவக்காக தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு உதாரணமாக நடத்திக் காட்டியவர் ஏக்நாத் ரானடே ஜி அவர்கள்.

தனது அறுபத்தி ஏழாம் வயதில் 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் நாள் ஏக்நாத் ஜி மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவர் உருவாக்கிய விவேகானந்தா கேந்த்ராவில் 23ஆம் நாள் மாலை சூரியன் மறையும் போது அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஸ்வயம்சேவக்காக பாரதம் முழுவதும் பணியாற்றி, தெற்கு கோடியில் தனது அயராத உழைப்பினால் மிகப் பெரும் ஸ்தாபனத்தை உருவாக்கிய ஏக்நாத் ரானடே ஜியின் வாழ்க்கை நம் எல்லோருக்கும் பாடமாக அமையட்டும்.