இன்றய ஜார்காலாந்து மாநிலத்தில் ராஞ்சி நகருக்கு அருகே உள்ள கும்லா மாவட்டத்தில் ஜாரி கிராமத்தில் வசித்து வந்த ஆதிவாசி வகுப்பைச் சார்ந்த ஜூலியஸ் எக்கா - மரியம் எக்கா தம்பதியரின் மகனாக 1942ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் நாள் பிறந்தவர் ஆல்பர்ட் எக்கா. மலையும் காடுகளும் சூழ்ந்த நிலத்தில் வசித்து வந்த காரணத்தால் பொதுவாகவே ஆதிவாசிகள் வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். ஆல்பர்ட் எக்காவும் அதில் விதிவிலக்காக இல்லை. துணிச்சலும் வீர சாகசங்களிலில் நாட்டமும் இருந்த ஆல்பர்ட் ராணுவத்தில் சேருவதில் மிகவும் விருப்பமாக இருந்தார். தனது இருபதாவது வயதில் ஆல்பர்ட் பாரத ராணுவத்தில் இணைந்தார். பின்னர் அவர் Brigade of the Guards - காவலர்களின் படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
Brigade of the Guards படைப்பிரிவானது பாரத நாடு முழுவதிலும் உள்ள எல்லா இனக்குழுக்களிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படைப்பிரிவு. பொதுவாக பாரத ராணுவத்தில் சீக்கியர்கள் படை, கூர்க்கா படை, மராட்டா படை என்று இனக்குழுவாரியாக வீரர்களை இணைத்து படைப்பிரிவுகளை உருவாக்குவதே வழக்கம். எல்லாப் பகுதி மக்களும் இணைந்து உருவான முதல்படைப்பிரிவு இதுதான். ஜெனரல் கரியப்பா உருவாக்கிய படைப்பிரிவு இது. பஞ்சாப் ராணுவப்பிரிவு, ராஜ்புதான துப்பாக்கிப்படை மற்றும் கையெறி குண்டுகள் வீசும் கிரான்டியர் படை ஆகியவற்றில் இருந்து படைகளை இணைத்து இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது.
இதப்படையின் குறிக்கோள் பஹலா ஹமேஷா பஹலா அதாவது முதலில் எப்போதும் முதலில் என்பதாகும். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போர், 1965 மற்றும் 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர்கள், சீக்கிய தீவிரவாதிகள் வசம் இருந்த பொற்கோவிலை விடுவிக்க நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூஸ்டார் மற்றும் ஐக்கிய நாடுகள் சார்பாக அமைதிப்படையாக வியட்நாம், கம்போடியா, லாவோஸ், அங்கோலா மற்றும் காசா பகுதிகளில் பணியாற்றி உள்ளது. பல்வேறு களங்களில் பணியாற்றி இரண்டு அசோகா சக்ரா, எட்டு பரம் விஷிஸ்ட சேவா பதக்கங்கள், எட்டு மஹாவீர் சக்ரா, நான்கு கீர்த்தி சக்ரா, நாற்பத்தி ஆறு வீர் சக்ரா, எழுபத்தி ஏழு சேனா பதக்கங்கள், பத்து அதி விஷிட்ட சேவா பதக்கங்கள், மூன்று யுத்த சேவா பதக்கங்கள், பதினாறு விஷ்ட்ட சேவா பதக்கங்கள் என்று பல்வேறு பதக்கங்களை இந்தப் படை பெற்றுள்ளது. அதெற்கெல்லாம் சிகரம் வைத்தது போல இந்தப் படைப் பிரிவுக்கு ஆல்பர்ட் எக்கா பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றுத் தந்துள்ளார்.
வில்லையும் அம்புகளையும் வைத்து வேட்டையாடுவதில் ஆல்பர்ட் எக்காவிற்கு இருந்த தேர்ச்சி அவரை துப்பாக்கி சுடுவதில் திறமையானவராக ஆக்கியது. குறி தவறாமல் சுடும் அவரின் திறமையை அவரது மேலதிகாரிகள் எப்போதும் பாராட்டுவது வழக்கம். ராணுவத்தில் சேர்ந்த பிறகு வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலகங்களை அடக்குவதில் எக்கா ஈடுபட்டு இருந்தார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பாரத ராணுவம் ஒரே நேரத்தில் மேற்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் போரிட வேண்டிய நிலைமை உருவானது. பங்களாதேஷ் நாட்டை விடுவிப்பதில் கங்காசாகர் பகுதியில் நடைபெற்ற போர் முக்கிய பங்கு வகித்தது. அந்தப் பகுதி டாக்கா நகரை இணைக்கும் முக்கியமான ரயில் பாதையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியைக் கைப்பற்றி அங்கிருந்து அஹாவுரா பகுதியைக் கைப்பற்றினால்தான் டாக்கா நகரில் நுழையமுடியும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி வைத்திருந்தது. பாரத படைகள் முன்னேறுவதைத் தடுக்க சாலையெங்கும் கண்ணிவெடிகளை பாகிஸ்தான் ராணுவம் புதைத்து வைத்திருந்தது. அங்கேதான் டிசம்பர் 3ஆம் நாள் Brigade of the Guards படையின் 14ஆம் பிரிவு தங்கள் தாக்குதலைத் தொடங்க வேண்டும். கேப்டன் கோலி தலைமையில் படைகள் அங்கே அணி வகுத்து இருந்தது. கடினமான இந்தப் பணியை மேற்கொள்ள துணிச்சலுடனும் உறுதியுடனும் ஆல்பர்ட் எக்கா தயாராகிக்கொண்டு இருந்தார். தனது உயிரைப் பணயம் வைத்து தனியொருவனாக எக்கா எதிரிப்படையை அழித்தார்.
பாகிஸ்தான் படைகள் ரயில்வே தண்டவாளங்களுக்கு நடுவே நடந்து செல்வதை பாரத ராணுவம் பார்த்தது. அந்தப் பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து பாரத ராணுவம் தங்கள் தாக்குதலைத் தொடங்கியது. எதிரிகள் இருக்கும் இடத்திற்கு 100 மீட்டர் அருகே வரும் நேரத்தில் கடுமையான எதிர் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியது. பதுங்குகுழியின் மேலே அமைக்கப்பட்டு இருந்த இயந்திரத் துப்பாக்கி மூலம் தொடர்ச்சியான துப்பாக்கிச் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது. பாதுகாப்பான இடத்தில இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்குவதும், அதோடு நேருக்கு நேராக அவர்களை எதிர்கொள்வதன் மூலமாக மட்டுமே அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்று எக்கா தீர்மானம் செய்தார். பாக்கிஸ்தான் ராணுவம் அமைத்திருந்த சுவரில் ஏறி அவர் பதுங்குகுழியில் வெடிகுண்டுகளை வீசினார். அதோடு இரண்டு வீரர்களை தன் துப்பாக்கியில் பொருத்தப்பட்டு இருந்த கத்தியால் குத்திக் கொன்றார். எதிர் தாக்குதலில் காயமடைந்த நிலையிலும் எக்கா மற்றொரு பதுங்குகுழியையும் தனது குண்டுவீச்சால் அழித்தார். தனது கடமையை முடித்த நிம்மதியில் எக்கா போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தார்.
அவரது அச்சமற்ற தன்மை, தனது கடமையின் மீது அவரின் பக்தி ஆகியவை இந்தப் போரின் வெற்றியில் பெரும் பங்காற்றின. அவரது வீரத்தைப் பாராட்டும் விதமாக ஆல்பர்ட் எக்காவிற்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.




