வெள்ளி, 19 டிசம்பர், 2025

ஜனவரி 19 – ஓஷோ நினைவுநாள்

ஓஷோ - பிறக்கவும் இல்லை - இறக்கவும் இல்லை -

1931ஆம் வருடம் டிசம்பர் 11 முதல் 1990ஆம் வருடம் ஜனவரி 19 வரை இந்த பூமிக்கு வருகை புரிந்தார்.

யாரது சமாதியில் இப்படி எழுதி நாம் பார்த்திருக்கமாட்டோம். இதுதான் ஆச்சார்ய ரஜனீஷ் என்றும் பகவான் ஓஷோ என்றும் அறியப்படுபவரை பற்றிய சித்திரம்.

ஆச்சாரிய ரஜனீஷ் 1931ஆம் வருடம் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு சமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ரஜனீஷ் சந்திரமோகன் என்பதாகும். சிறுவயதில் இருந்தே தியானத்தில் ஈடுபட ரஜனீஷ் தனது இருபத்தி ஒன்றாம் வயதில் 1953ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் நாள் ஞானம் அடைந்ததாக அறிவித்தார். 

தத்துவத்துறையில் முதுகலை பட்டம் பெற்ற ரஜனீஷ், ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். அதே காலகட்டத்தில் அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தத்துவ உரைகளை நிகழ்த்தினார். அன்றய காலகட்டத்தில் அரசு பின்பற்றிய சோசலிச பொருளாதாரக் கொள்கையை அவர் நிராகரித்து, இந்தியா முன்னேறவேண்டுமானால் அது அறிவியல் சிந்தனை, முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மூலமாகவே நடக்கும் என்று கூறி வந்தார்.

கீழைத் தத்துவத்தில் தேர்ச்சியும் ஆங்கிலத்தில் புலமையும் பெற்றிருந்த ஆச்சரிய ரஜனீஷை பலர் பின்பற்ற ஆரம்பித்தனர். .இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இவரது சீடர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.  தனது பல்கலைக்கழக வேலையைத் துறந்த ரஜனீஷ் 1974 ஆம் ஆண்டு பூனா நகரில் தனது ஆசிரமத்தைத் தொடங்கினார்.

அதன்பிறகு அமெரிக்காவில் 1981ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தை தொடங்கிய ரஜனீஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. எந்தவிதமான ஆணையும் இன்றி அமெரிக்க காவல்துறை ரஜனீஷை பனிரெண்டு நாட்கள் சிறையில் அடைந்திருந்தது. அங்கே அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 

அமெரிக்காவின் தூண்டுதலால் பல்வேறு நாடுகள் அவரைத் தங்கள் நாடுகளுக்கு உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டன.  1986ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் ரஜனீஷ் பாரதம் வந்து சேர்ந்தார்.  1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் நாள் தனது ஐம்பத்து எட்டாம் வயதில் அவர் மரணம் அடைந்தார்.

இவரது பேச்சுகளும் நூல்களும் இந்திய சிந்தனைப் போக்கில் ஒரு புது விளக்கத்தை அளித்தது என்றால் அது மிகையில்லை

வியாழன், 18 டிசம்பர், 2025

டிசம்பர் 18 - சைவநெறிக் காவலர் நல்லூர் ஆறுமுக நாவலர் அவதார தினம்

தமிழ் உரைநடையின் தந்தை, சைவ சமயத்தின் ஐந்தாம் சமயக் குரவர்  என்று போற்றப்படுபவரும்
நாயனார் நாற்குரவர் நாவலர் தென் ஞாலமிசை 
மேயினார் ஈசனருள் மேல் என்று சி வை தாமோதரன் பிள்ளையால் போற்றப்பட்ட நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களின் திருவவதார தினம் இன்று.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இலங்கையில் வெள்ளை ஏகாதிபத்தியம் வலுவாக நிலைகொண்டு இருந்தது. அவர்களின் படைகளில் முக்கியமான பாதிரிபடை இலங்கை முழுவதையும் கிருத்துவமயமாகும் பணியில் மும்முரமாக இயங்கிக்கொண்டு இருந்தது.கல்வி வாய்ப்புக்காகவும், அரச ஊழியத்துக்காகவும் தமிழ்மக்கள் சைவ சமயத்தைவிட்டு கிறித்துவ மதத்திற்கு மாறிக் கொண்டிருந்தார்கள். தமிழ்க் கல்வி புறக்கணிக்கப்பட்டு ஆங்கில மோகம் மக்களை ஆட்டிப்படைத்தது. அப்போதுதான் தமிழையும் சைவத்தையும் புதுப்பொலிவோடு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தென்னாடுடைய ஈசன் கருணையால் ஆறுமுகநாவலர் அவதரித்தார்.

யாழ்ப்பாணத்தின் நல்லூர் என்ற பகுதியில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையாரின் திருமகனாக 1822ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் ஆறுமுக நாவலர் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆறுமுகம் பிள்ளை என்பதாகும். நாவலரின் குடும்பமே தமிழில் தோய்ந்த குடும்பம். இவர் உடன்பிறந்தவர்கள் நான்கு சகோதர்களும் மூன்று சகோதரிகளும் ஆவார்கள்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும் , சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். ஆசிரியராகப் பணியேற்றதோடு, அப்பாடசாலை நிறுவுனரான பேர்சிவல் பாதிரியாரின் கிறிஸ்தவ வைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிக்கு உறுதுணையாக செயற்பட்டார்.

ஆனாலும் சைவ சமயத்தை இழித்தும் பழித்தும் கூறி மக்களை கிருத்தவ மதத்தின் பக்கம் திருப்பும் பாதிரிகளின் செயலைப் பார்த்து மனம் நொந்த ஆறுமுகம், சைவத்தின் மேன்மையையும், தமிழின் இனிமையையும் மக்கள் அறிந்து கொள்ளவே தனது வாழ்வை அர்பணிக்கத் தீர்மானித்தார். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இதனால் பலரும் சிவதீட்சை பெற்றனர். அசைவ உணவைத் தவிர்த்தனர். இவரது முயற்சியால் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறத் தொடங்கின.

கல்வித் தளத்தில் ஏற்பட்ட அறிவியல் மாற்றங்களை அவர் வரவேற்றார். கிறித்தவர்கள் தங்கள் மதத்தைப் பரப்பச்  செய்யக் கையாண்ட கருவிகள் ஒவ்வொன்றையும் நாவலர் சைவத்தை வளர்க்கக் கையில் ஏந்தினார்!  கிறித்தவ பாதிரிமார்கள் சமயம் வளர்க்க பல பள்ளிகள் நிறுவினார்கள். நாவலரும் அரும்பாடு பட்டு சைவப் பள்ளிகள்நிறுவினார். அந்தப் பள்ளிகளில் சமய சாத்திரங்கள் (தேவார திருவாசகங்கள், புராணங்கள், நாலடியார், திருக்குறள், மெய்கண்ட சாத்திரங்கள்) படிப்பிப்பதற்கு ஒரு பாடத் திட்டத்தையே வகுத்தார். அத்தோடு மேற்குநாட்டுச் சாத்திரங்களான வரலாறு, பூகோளம், கணிதம், இயற்பியல், வேற்பியல் கற்பிக்க ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வீடுதோறும் பிடி அரிசி திரட்டும் திட்டத்தை உருவாக்கினார்.

கிறித்தவர்கள் தங்கள் மதபோதனைகளைப் பரப்ப அச்சு யந்திரசாலைகளை அமைத்து நிறையப் புத்தகங்களை அச்சிட்டு மக்களிடம் கொடுத்தார்கள். நாவலரும் அவ்வாறே அச்சுக் கூடங்களை யாழ்ப்பாணத்திலும் சிதம்பரத்திலும் நிறுவி ஓலைகளில் இருந்த சைவசமய நூல்களை ஒப்புநோக்கி, பாடபேதங்கள் நீக்கிப் பதிப்பித்து வெளியிட்டார்.

கிறித்தவர்கள் வினா விடை பாணியில் (catechism) சமயக் கோட்பாடுகளை விளக்கியது போல் நாவலரும் சைவ வினாவிடை நூல்களை எழுதினார். பல நூல்களுக்கு உரை எழுதினார். அவரது நண்பர்கள், மாணாக்கர்கள் எழுதிய நூல்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தார். அல்லது பதிப்பிக்க உதவினார். நாவலரது உழைப்பால் வெளிவந்த நூல்களுக்கு அளவில்லை.

நன்னூல் விருத்தியுரை
நன்னூல் காண்டிகையுரை
நைடதவுரை
சூடாமணி நிகண்டுரை
திருமுருகாற்றுப்படை உரை
இலக்கணக் கொத்து
திருவிளையாடற புராணம்
சிவ பூசாவிதி
பால பாடம் (1.2.3.4)
ஆத்திசூடி உரை
கொன்றை வேந்தன் உரை
மருதூரந்தாதியுரை
கோயிற்புராண உரை
சைவ சமயநெறி உரை
கந்தபுராணம்
பெரியபுராணம் (உரைநடை)
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
திருக்கோவையாருரை
தொல்காப்பியம்
சவுந்தரிய லகரி
சைவ எல்லப்ப நாவலர்
பாரதம்
கொலை மறுத்தல்
வைராக்கிய தீபம்
வைராக்கிய சதகம்
திருவுந்தியார்
தாயுமானவ சுவாமிகள் பாடல்கள்

திருவாடுதுறை ஆதீனத்தில் இவர் ஆற்றிய உரையைக் கேட்டு மகிழ்ந்த அன்றய குரு சன்னிதானம் இவருக்கு நாவலர் என்ற பட்டத்தை வழங்கினார்.

1870-இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.

1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.

செய்யுள் வடிவில் இருந்த தமிழ் இலக்கிய மரபை வசன நடைக்கு மாற்றி காற்புள்ளி, அரைப்புள்ளி, நிறுத்தற்குறிகளோடு எழுதும் மரபைத் தொடங்கி வைத்தவர் ஆறுமுக நாவலரே ஆவார். இன்றய தமிழ் மேடைப்பேச்சுக்கு ஆரம்பமே இவர் செய்துகொண்டு வந்த பிரசாங்கங்கள்தான்.

1879ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் நாள் ஆறுமுக நாவலர் சிவபதம் அடைந்தார். ஐம்பத்தி ஆறு ஆண்டுகளே வாழ்ந்த ஆறுமுக நாவலர்  பிறந்திரரேல் சைவசமயத்திற்கும் தமிழுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை நாவலர் சிவபதமடைந்தபோது சி.வை. தாமோதரம்பிள்ளை எழுதிய இன்னொரு பாடல் இனிது விளக்குகிறது.

நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேப்ர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே அறை.’

சைவநெறிக் காவலராக விளங்கிய ஆறுமுக நாவலரின் நினைவைப் போற்றுவோம். மத மாற்றத்தை எப்போதும் தடுப்போம். தொன்மையான சனாதன தர்மத்தின் கருத்துக்களை எல்லோரிடமும் பரப்புவோம். 

புதன், 17 டிசம்பர், 2025

டிசம்பர் 17 - காங்கிரஸ் வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா நினைவுநாள்

ஆந்திரப்பிரதேசத்தின் முக்கியமான காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியமான தலைவராகத் திகழ்ந்த பட்டாபி சீதாராமையாவின் நினைவுநாள் இன்று.


ஆந்திரபிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு நியோகி ப்ராஹ்மண குடும்பத்தில் 1880ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் பிறந்தவர் பட்டாபி சீதாராமய்யா. தனது கல்லூரிப் படிப்பை சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் முடித்த சீதாராமையா பின்னர் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் மசூலிப் பட்டினத்தில் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். 1905ஆம் ஆண்டு கர்சான் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிளந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் குதித்தனர். சீதாராமையாவும் தனது மருத்துவ சேவையை விட்டு விட்டு அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் லால் - பால் - பால் - எனப்படும் லாலா லஜபதிராய் - பால கங்காதர திலகர் - பிபின் சந்திரபால் ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட சீதாராமையா பின்னர் காந்தியின் தொண்டராக மாறினார்.

1912ஆம் ஆண்டிலேயே  சென்னை ராஜதானியில் இருந்து பிரிக்கப்பட்டு தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காகத் தனியான மாநிலம் அமைக்கப்படவேண்டும் என்று பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். அதனைத் தொடர்ந்து லக்நோ நகரில் 1916ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஆந்திராவிற்காக தனியான காங்கிரஸ் கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்று வாதாடி, அதனை நிறைவேற்றவும் செய்தார். ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் சீதாராமையா இருந்தார்.

1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு முக்கியமான ஒன்றாகும். காங்கிரஸின் தலைவர் பதவிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியில் ஈடுபட்டார். காந்தியின் ஆதரவு சீதாராமையாவிற்கு இருந்தது. ஆனாலும் நேதாஜி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று காந்தி அறிவித்தார்.

மசூலிப்பட்டின கடற்கரையில் தடையை மீறி உப்பு எடுக்கும் போராட்டத்திற்காகவுவம் பின்னர் சாராயக்கடை மறியல் போராட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் தனிநபர் சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டும் கைதானார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு காந்தி அறிவித்தார். உடனடியாக அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அதில் சீதாராமையாவும் ஒருவர். மூன்றாண்டுகள் அவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அஹமத்நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். சிறை வாழ்வில் அவர் எழுதிய நாள்குறிப்புகள் பின்னர் பூக்களும் கற்களும் என்ற பெயரில் வெளியானது.

1948ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் சீதாராமையா பதவி வகித்தார். மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் வரலாற்றை பட்டாபி சீதாராமையா எழுதினார். அதுவே அந்த இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரலாறு. 1935ஆம் ஆண்டு முதல் பகுதியும் 1947ஆம் ஆண்டு இரண்டாம் பகுதியும் என்று இரண்டு தொகுதியாக வெளியான முக்கியமான ஆவணம் இது.

சுதேசி இயக்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த சீதாராமையா ஆந்திரா இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் கிருஷ்ணா மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகியவற்றையும் உருவாக்கினார். புகழ்பெற்ற ஆந்திரா வங்கி இவரால் உருவாக்கப்பட்டதுதான்.

நாட்டின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான பட்டாபி சீதாராமையா 1959ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் நாள் காலமானார். 

திங்கள், 15 டிசம்பர், 2025

டிசம்பர் 15 - தேர்தல் ஆணையர் T N சேஷன் பிறந்தநாள்

பாரத நாட்டின் வழிகாட்டு ஆவணம் நமது அரசியலமைப்புச் சட்டம். தேர்தல் மூலம் தேர்வான மக்கள் பிரதிநிதிகள் மூலம் உருவாக்கப்படும் சட்டங்கள், அந்த சட்டங்களை செயல்படுத்தும் அரசு அதிகாரிகள், சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலுக்கு உள்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் நீதிமன்றங்கள் இவை அரசின் முக்கியமான அங்கங்கள். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களோடு ஒன்றின் வரைமுறைக்குள் மற்றொன்று தலையிடா வண்ணம் அமைக்கப்பட்டது நமது அரசியலமைப்பு சட்டம்.

ஆனால் காலம் செல்லச் செல்ல, ஆணவமிக்க சிலரால் மற்ற அமைப்பில் உள்ளவர்களை தங்கள் செல்வாக்கின் மூலம் செயலற்றவர்களாக ஆக்கி, தங்களுக்குச் தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் கோலமும் உருவானது. அப்போது சட்டரீதியாக உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதை அமுல்படுத்திக் காட்டிய  திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் என்ற டி என் சேஷனின் பிறந்தநாள் இன்று


பாலக்காடு பகுதியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த சேஷன் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு 1950ஆம் ஆண்டு முதல் 1952ஆம் ஆண்டு வரை அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1953ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றார், ஆனால் அதில் சேரவில்லை. அடுத்த ஆண்டு 1954ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று பணிக்குச் சேர்ந்தார்.

இந்திய ஆட்சிப் பணியில் தமிழகப் பிரிவில் சேர்ந்த சேஷன் கோயம்புத்தூர் மாவட்ட துணை ஆட்சியாளாராகப் பொறுப்பேற்றார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியாளர், தமிழக ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத்துறை போன்ற பிரிவுகளில் பணியாற்றினார். மதுரை மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றி, பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைபட்ட படிக்க அமெரிக்கா சென்றார்.

மீண்டும் தாயகம் திரும்பிய சேஷன் அணுசக்திதுறை, விண்வெளித்துறை ஆகியவற்றில் பணியாற்றினார். சுற்றுப்புறச்சூழல் மற்றும் காடுகள் துறை, பாதுகாப்பு ஆகிய துறைகளில் செயலாளராகவும் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பணியியேயே மிக உயரிய பதவியான அமைச்சரவை செயலாளர் ( Cabinet Secretary ) பதவியையும், தேசிய திட்டக்குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.

இந்தியாவின் 10-வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பொறுப்பேற்றார். 1996-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த காலத்தில்தான், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியது. வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் தேர்தல் சீர்திருத்தப் பணிகளில் மும்முரமாக செயல்பட்டார்.

விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்தியது இவரது பதவிக்காலத்தில்தான் எனக் கூறலாம். இதன்காரணமாக இந்தியத் தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி என அழைக்கப்பட்டார். இவருக்கு 1996-ம் ஆண்டு உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது

அரசங்கப் பதவிக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை சேஷன் ஐயம் திரிபுர நிரூபித்துக் காட்டினார். தேர்தல் பரப்புரை செய்வதில் நேரக் கட்டுப்பாடு, அனுமதிக்கப்பட்ட அளவில் தேர்தலுக்கான பணம் செலவழித்தல், வீட்டு உரிமையாளர் அனுமதி இன்றி சுவரில் விளம்பரம் செய்வதைத் தடுத்தல் என்று சட்டத்தில் சொன்னபடி தேர்தலை நடத்த முடியும் என்று செய்து காட்டியவர் திரு சேஷன் அவர்கள்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலில் சேஷன் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை.சிலகாலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பயிற்சி நிலையத்திலும், சென்னையில் உள்ள கிரேட் லேக்ஸ் மேலாண்மை நிறுவனத்திலும் சிறப்பு அழைப்பாளராக பயிற்றுநராக இருந்தார்.

திரு சேஷன் 2019ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் காலமானார். தேர்தல் கமிஷன் என்ற அமைப்பு ஓன்று உள்ளது என்பதை பொது மக்களுக்கு புரியவைத்த சேஷன் இந்தியாவில் தேர்தல் நடைபெறும்வரை மக்கள் மனதில் குடியிருப்பார் என்பதில் ஐயமில்லை. 

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

டிசம்பர் 14 - ஹிந்தி திரைப்பட நடிகர் ராஜ்கபூர் பிறந்தநாள்

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஹிந்தி திரைப்பட உலகின் முக்கியமான ஆளுமையாக விளங்கிய ரன்பிர் ராஜ்கபூர் என்ற ராஜ்கபூர் அவர்களின் பிறந்ததினம் இன்று.


ஹிந்தி திரைபட உலகின் தொடக்ககால நட்சத்திரங்களில் ஒருவரான பிரிதிவிராஜ்கபூரின் முதல் மகனாக பேஷவார் நகரில் 1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள் பிறந்தவர் ராஜ்கபூர். இவரின் சகோதர்கள் சஷிகபூர், ஷம்மிகபூர் மற்றும் ஊர்மிளா என்ற சகோதரி. திரைப்பட நடிகராக பல்வேறு நகரங்களுக்கு மாறி மாறி பிரிதிவிராஜ்கபூர் வசித்ததால், அவரின் குடும்பமும் அவரோடே பயணப்பட வேண்டி இருந்தது. அதனால் ராஜ்கபூர் டெஹ்ராடூன், கொல்கத்தா, மும்பை என்று பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளில் படித்துவந்தார்.

சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த ராஜ்கபூர் சினிமாவில் முதல்முதலாக கிளாப் அடிக்கும் வேலையில் இருந்துதான் தன் பயணத்தைக் தொடங்கினார். பல படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டிய ராஜ்கபூர் முதல்முதலாக 1947ஆம் ஆண்டு நீல்கமல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தில் இவரது ஜோடி மதுபாலா.

தனது 24ஆம் வயதில் ஆர் கே ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை உருவாக்கி ஆக் என்ற படத்தை இயக்கினார். இந்தப்படத்தில் நர்கிஸ் இவருக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் அந்த காலத்தில் மிக இளைய திரைப்பட இயக்குனர் என்ற பெருமை ராஜ்கபூரை வந்தடைந்தது. திலிப்குமார், நர்கிஸ் ஆகியோரோடு ராஜ்கபூர் நடித்த அன்டாஸ் என்ற படம் பெரும் வெற்றியை பெற்றது. ராஜ்கபூர் தயாரித்து, இயக்கி நடித்த பர்ஸாட் என்ற படம் திரையுலகின் முக்கியமான ஆளுமையாக ராஜ்கபூரை நிலைநிறுத்தியது.

தனது ஆர் கே ஸ்டுடியோ சார்பில் ராஜ்கபூர் தயாரித்து நடித்த ஆவாரா, ஸ்ரீ 420, ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹத்தி ஹை ஆகிய படங்கள் அன்றைய வெற்றிப்படங்கள். 1970களில் ராஜ்கபூர் மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்தார். ஆனால் இன்று கொண்டாடப்படும் இந்தப்படம் அன்று ஒரு தோல்விப்படமாக இருந்தது. 1973ஆம் ஆண்டு இவர் தயாரித்த பாபி என்ற திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.

எழுபதுகளின் பிற்பாதிகளிலும் எண்பதுகளிலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களை ராஜ்கபூர் தயாரித்து இயக்கினார். ஸிநத் அமன் நடித்த சத்தியம் சிவம் சுந்தரம், பத்மினி கோல்ஹாப்பூரி நடித்த பிரேம் ரோக், மந்தாகினி அறிமுகமான ராம் தேரி கங்கா மைலி ஆகியவை அதில் முக்கியமானவையாகும். இந்த காலகட்டங்களில் ராஜ்கபூர் குணசித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கி இருந்தார்.

1946ஆம் ஆண்டு ராஜ்கபூர் கிருஷ்ணா மல்ஹோத்ரா என்ற பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். அதில் ரன்திர்கபூர், ரிஷிகபூர், ராஜிவ்கபூர் ஆகியோரும் திரைத்துறையில்தான் இயங்கிக்கொண்டு உள்ளார்கள். இவரது மகளான ரீத்து எஸ்கார்ட்ஸ் குழுமத்தின் ராஜு நந்தாவைத் திருமணம் செய்துகொண்டு உள்ளார். இவர்கள் மருமகள்தான் அமிதாப் பச்சனின் மகள் ஸுவேதா. ராஜ்கபூரின் மற்றொரு மகளான ரீமா மனோஜ் ஜெயின் என்ற முதலீட்டு ஆலோசகரை மணந்து கொண்டுள்ளார். பிரிதிவிராஜ்கபூரின் தொடங்கி நான்கு தலைமுறையாக இவர்கள் குடும்பம் ஹிந்தி திரையுலகின் பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்து வருகிறது.

பல்வேறு திரைப்படங்களுக்காக ராஜ்கபூருக்கு மூன்று தேசிய விருதுகளும், பதினோரு பிலிம்பேர் விருதுகளும் வழங்கப்பட்டு உள்ளது. 1971ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 1987ஆம் ஆண்டு தாதாசாஹேப்பால்கே விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

திரு ராஜ்கபூர் 1988ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் நாள் காலமானார். திரை ரசிகர்கள் மனதில் இன்றும் ராஜ்கபூர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். 

சனி, 13 டிசம்பர், 2025

டிசம்பர் 13 - பாஜக தலைவர் மனோகர் பாரிக்கர் பிறந்தநாள்

பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவருமான திரு மனோகர் கோபால கிருஷ்ண பிரபு பாரிக்கர் என்ற மனோகர் பாரிக்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று.


1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் நாள் பிறந்த திரு பாரிக்கர், தனது இளம்வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( IIT Mumbai ) உலோகவியல் பொறியியலில் ( Metallurgical Engineering ) பட்டம் பெற்றவர் இவர். ஐ ஐ டி பட்டதாரிகளில் சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டதாரியும் இவரே.

1978ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த பாரிக்கர் கோவா திரும்பி தங்கள் குடும்பத் தொழிலில் ஈடுபட்டார். அதோடு சங்கப்பணியும் அவருக்கு காத்திருந்தது. தனது 26ஆம் வயதில் உள்ளூர் ஷாகாவின் சங்கசாலக் பொறுப்பு அவரை வந்தடைந்தது. அதோடு பாஜகவை கோவா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் வளர்க்கும் பணியும் அவருக்கு அளிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் சட்டசபைக்கு அவர் தேர்வானார். 1999ஆம் ஆண்டு குறுகிய காலகட்டத்திற்கு அவர் கோவா மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவர் பொறுப்பையும் வகித்தார்.

அடுத்து நடந்த தேர்தலில் பாஜவை வெற்றிபெற வைத்து 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாரிக்கர் முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்த ஆட்சி 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. அதிலிருந்து மரணமடையும் வரை பாரிக்கர் கோவா மாநிலத்தின் பாஜகவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கினார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிற்கு நரேந்திர மோதி அவர்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர்களில் மனோகர் பாரிக்கர் முக்கியமான ஒருவராவார். மோதி அமைச்சரவையில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பாரிக்கர் சேர்க்கப்பட்டார். தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரிக்கர் டெல்லி சென்றார்.

ராணுவத்திற்கான தளவாடங்கள் வாங்குவதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கியதன்மூலமும், அதிநவீனரக ஆயுதங்களை ராணுவத்திற்குப் பெற்றுக் கொடுத்ததன் மூலமும் பாரிக்கர் தனது முத்திரையைப் பதித்தார். நாட்டின் எல்லைகளைக் காக்கும் ராணுவத்தினர் உயிரைக் காக்கும் தரமான ஆயுதங்களை வாங்கிக் கொடுத்ததன் மூலம் அவர் நாட்டுக்கு மிக முக்கியமான சேவையை ஆற்றினார்.

கோவா மாநிலத்தில் உருவான நிலையற்ற தன்மையை மாற்றும் பொருட்டு பாரிக்கர் மீண்டும் கோவா திரும்பி அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுக்கொண்டார். அவர் ஆட்சி செய்த காலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும், கோவாவின் சுற்றுலாதுறை வளர்ச்சிக்காகவும் எடுத்த நடவடிக்கைகள் இன்றும் மக்களால் நினைவு கூறப்படுகிறது.

துரதிஷ்டவசமாக கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாரிக்கர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் நாள் காலமானார். அரசியல்வானில் சுடர்விட்டுப் பிரகாசித்து இருக்கவேண்டிய பல தலைவர்களை இள வயதிலேயே பாஜக இழந்து வருவது என்பது மிகவும் சோகமான ஒன்றாகும்.

இறுதி மூச்சுவரை ஒரு ஸ்வயம்சேவக் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த திரு மனோகர் பாரிக்கர் அவர்களை ஒரே இந்தியா தளம் மரியாதையோடு நினைவு கொள்கிறது. 

வெள்ளி, 12 டிசம்பர், 2025

டிசம்பர் 12 - விண்வெளி நிபுணர் நம்பி நாராயணன் பிறந்தநாள்

பாரத நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக பின்னப்பட்ட சதிவலையை அறுத்தெறிந்து விட்டு வெற்றி வீரராக விளங்கும் நம்பி நாராயண் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆனால் அதில் அவரும், நாடும் இழந்தது அதிகம்.


கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரில் 1941ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் பிறந்தவர் திரு நம்பி நாராயணன் அவர்கள். தனது படிப்பை முடித்த நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்சி நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். விக்ரம் சாராபாயின் தூண்டுதலின் பேரில் அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏவுகணைக்கான திரவ எரிபொருள் பற்றிய படிப்பில் தனது மேற்படிப்பை முடித்தார். அமெரிக்காவில் கிடைத்த வேலைகளை உதறித்தள்ளிவிட்டு மீண்டும் பாரத நாட்டின் சேவைக்குத் திரும்பினார்.

அதுவரை திட எரிபொருள்கள்தான் பயன்பட்டுக் கொண்டிருந்ததை மாற்றி திரவ எரிபொருள்கள் மூலம் விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்களுக்கான மோட்டார் தயாரிக்கும் முயற்சியில் நம்பி நாராயணன் ஈடுபட்டார். அவரது சோதனைகளுக்கு விண்வெளி ஆராய்சி நிலையத் தலைவர்களாக இருந்த சதிஷ் தவான் மற்றும் யு ஆர் ராவின் முழு ஒத்துழைப்பும் இருந்தது. மெதுவாக ஆனால் மிக உறுதியாக விண்வெளி ஆராய்சியில் பாரதம் முன்னேறிக்கொண்டு இருந்தது. பூமிப் பந்தின் மீது ஒரே இடத்தில் இருக்குமாறு, அதாவது பூமி சுழலும் அதே வேகத்தில் சுழலும் செயற்கைகோள்களை ஏவும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணியில் நம்பி நாராயணன் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.

அப்போதுதான் அந்த பூகம்பம் வெடித்தது. 1994ஆம் ஆண்டு நம்பி நாராயணன் மற்றும் சசிகுமார் என்ற மற்றொரு விஞ்ஞானி  மீது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ரகசியங்களை எதிரிநாட்டுக்கு அளித்ததாக ஒரு வழக்கு பதிவானது. அதோடு இந்த வழக்கில் இரண்டு மாலத்தீவைச் சார்ந்த இரண்டு இளம்பெண்கள் உள்ளனர் என்றும் இந்த ரகசியத்தை பகிர கோடிக்கணக்கான ரூபாய்கள் கைமாறியது என்றும் தகவல்கள் வந்தன. நாட்டையே உலுக்கிய விவகாரமாக இது வெடித்தது. நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது நாற்பத்தி ஆறு நாட்கள் அவர் காவலில் வைக்கப்பட்டார். விசாரணை என்ற பெயரில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானதாக அவர் தெரிவித்தார். பிறகு 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டது என்று மத்திய புலனாய்வுதுறை தெரிவித்தது. புகழ்பெற்ற அறிஞரின் வாழ்க்கையை கெடுத்துவிட்டீர்கள் என்று தேசிய மனித உரிமை ஆணையம் கேரள அரசின் மீது கடுமையான கண்டணத்தைத் தெரிவித்தது. அவரிடம் மன்னிப்பு கோரி ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு அது கேரள அரசைக் கேட்டுக்கொண்டது. பத்து லட்ச ரூபாயை நஷ்டஈடாகக் கொடுக்கும்படி கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

நடந்த தவறுக்கு எந்தப் பரிகாரமும் தேடாமல், இதில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீதான நடவடிக்கையை கேரள அரசு விலக்கிக் கொண்டது. இதனை எதிர்த்து நம்பி நாராயணன் மீண்டும் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார். நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நம்பி நாராயணன் அவர்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் நஷ்டஈடாகக் கொடுக்கும்படி உத்திரவு பிறப்பித்தது.

ஏறத்தாழ இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பதில் கிடைத்தது. ஆனால் பாரதத்தின் விண்வெளிதுறை இதற்கு முன்னமே எட்டி இருக்கவேண்டிய வெற்றிகள் காலதாமதமானது.

நடந்த கொடுமைகளுக்கு பரிகாரமாக மத்திய அரசு திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதை வழங்கியது.

என்ன செய்தாலும் நம்பி நாராயணன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் ஆகாதுதான். அவரிடம் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்பதும், அவருக்கு நிம்மதியான வாழ்வை அருளும்படி ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வதும்தான் இன்று நம்மால் செய்ய முடிந்த ஒன்றாகும்.

திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், வணக்கங்களையும் ஒரே இந்தியா தளம் தெரிவித்துக் கொள்கிறது.