ஞாயிறு, 2 நவம்பர், 2025

நவம்பர் 2 - அருண் ஷோரி பிறந்தநாள்

நில்லாமல்  ஓடிக்கொண்டு இருக்கும் காலம் இரக்கமற்றது. மிகப்பெரும் ஆதர்சனங்களாக இருந்தவர்கள் தங்கள் நிலையில் இருந்து வீழும் துர்பாக்கியத்தைப் பார்க்கும் வாய்ப்பை அது பலருக்கு அளித்து விடுகிறது. நிறைவேறாத ஆசைகள், கலந்த கனவுகள், ஒட்டாமல் போன உறவுகள் என்று இந்த வரிசை மிகப் பெரியதாக இருக்கிறது. ஒருகாலத்தில் அப்படி பெரும் ஆளுமையாக விளங்கிய பொருளாதார நிபுணரும், பத்திரிகையாளருமான அருண் ஷோரி அவர்களின் பிறந்தநாள் இன்று.



மிகப் பெரிய அளவில் அருண் ஷோரி வெளியுலகத்திற்கு தெரியவந்தது எண்பதுகளின் தொடக்கத்தில். அப்போது அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர். பழுத்த காந்தியவாதியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அதிபரும், பிறவிப் போராளியுமாகிய ராம்நாத் கோயங்காவின் தளபதியாக அருண் ஷோரி செயல்பட்டு வந்தார். கத்தியைக் காட்டிலும் பேனாவின் முனை கூர்மையானது என்பதை பாரத மக்களுக்கு அருண் ஷோரி நிரூபித்துக் காட்டினார். அவரது எழுத்துக்கள் அன்றய மஹாராஷ்டிரா முதல்வர் அந்துலேவை ஊழல் குற்றசாட்டுகளால் துளைத்தது. அந்துலே பதவி விலக வேண்டி வந்தது. கோயங்காவும், ஷோரியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் குறிவைத்தது இந்திரா மீதும் அவர் மகன் ராஜீவ் மீதும். அந்துலேவைத் தொடர்ந்து, போபோர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம், ரிலையன்ஸ் திருபாய் அம்பானியின் முறைகேடுகள் என்று தங்கள் எழுத்துக்களால் அவர்கள் நாட்டின் மனசாட்சியை உலுக்கி எடுத்தனர்.

அன்றய இந்திய ஆட்சிப் பணியில் இருந்த ஹரிதேவ் ஷோரியின் மகனாக 1941ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் நாள் பிறந்தவர் அருண் ஷோரி. ஹரிதேவ் ஷோரி நுகர்வோர் உரிமைக்கான பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தவர். டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் இளங்கலை பட்டத்தையும், அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர் அருண் ஷோரி. அதனைத் தொடர்ந்து உலகவங்கியில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்தார். அதே காலகட்டத்தில் 1972 - 1974ஆம் ஆண்டுகளில் பாரத நாட்டின் திட்டக்குழுவின் ஆலோசகராகவும் இருந்தார்.

1975ஆம் ஆண்டில் இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அதனை எதிர்த்து ராம்நாத் கோயங்கா அவரது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மூலம் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தார். அந்த போராட்டத்தில் அருண் ஷோரியும் கலந்துகொண்டார். தொடர்ச்சியாக அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். 1979ஆம் ஆண்டு கோயங்கா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக அருண் ஷோரியை நியமித்தார். ஷோரியின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயல்களை விமர்சிக்கும் பணி இன்னும் முனைப்போடு நடைபெற்றது. அவரது சேவைகளை பாராட்டி அவருக்கு 1982ஆம் ஆண்டு மகாசாய் விருது வழங்கப்பட்டது.

பத்திரிகையில் எழுதுவது மட்டுமல்லாமல் பல்வேறு புத்தகங்களையும் அருண் ஷோரி எழுதியுள்ளார். பொய்யான கடவுளை வழிபடுதல் என்று அம்பேத்கார் பற்றிய புத்தகம், பத்வாகளின் உலகம் என்று ஷரியா சட்டங்களைப் பற்றி, இந்திய நீதித்துறை செயல்படும் விதம் பற்றி அனிதாவுக்கு பிணை ஆணை கிடைத்தது, இறைவனுக்கு தாயின் மனம் தெரியுமா என்று நரம்பு சீர்கேட்டால் அவதிப்படும் தனது மகனைப் பற்றி என்று பல்வேறு புத்தகங்களை அருண் ஷோரி எழுதி உள்ளார்.

1998 முதல் 2010ஆம் ஆண்டு வரை இரண்டு முறை ஷோரி பாஜகவின் மத்திய மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். வாஜ்பாய் அரசின் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தனியார்மயமாக்கல் ஆகிய துறைகளின் அமைச்சராகவும் ஷோரி பணியாற்றி உள்ளார்.

ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றியபோது அவர்க்கு அளிக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை கான்பூர் ஐ ஐ டி நிறுவனத்தில் உயிர் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வகம் அளிக்க அவர் வழங்கினார்.

தற்போதய அருண் ஷோரியின் எண்ணப்போக்கு ஒரே இந்தியா தளத்தின் அலைவரிசைக்கு ஒத்ததாக இல்லை என்றாலும், ஆசிரியர் குழுவின் ஆதர்ச நாயகர்களில் ஒருவராக ஒரு காலத்தில் அருண் ஷோரி விளங்கியது என்னவோ உண்மைதான்.

மனம் திருந்திய மைந்தராக தேசத்தின் புனர்நிர்மாணப் பணிக்கு அருண் ஷோரி திரும்பவேண்டும் என்ற பிரார்தனையோடு அவர்க்கு எங்கள் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

வியாழன், 30 அக்டோபர், 2025

அக்டோபர் 30 - பிரமோத் மகாஜன் பிறந்தநாள்

காலம் தனக்கு தேவையான மனிதர்களை தேவையான நேரத்தில்  தேவையான இடத்தில் வைத்து விடுகிறது, அதனால்தான் சிலரை சில இடங்களில் இருந்து, சிலரை உலகத்தில் இருந்தே விலக்கி விடுகிறது. காலத்தினால் வெளியேற்றப்பட்ட, பாஜகவின்இரண்டாம் தலைமுறை அரசியல்வாதியும், பாரத அரசியல் வானில் பிரகாசமான விளக்காக திகழ்ந்து இருக்க வேண்டியவருமான  பிரமோத் மகாஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று.



இன்றய தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப்நகர் பகுதியைச் சார்ந்த வெங்கடேஷ் தேவிதாஸ் மகாஜன் - பிரபாவதி தம்பதியரின் ஐந்து குழந்தைககளில் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் திரு பிரமோத் மகாஜன். இந்த தம்பதியரே மஹாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தின் அம்பஜ்ஜோகி நகருக்கு குடிபெயர்ந்ததால், ப்ரமோதின் இளமைக்காலம் முதலே அவர் மஹாராஷ்டிரா மாநிலத்தவராகவே வளர்ந்து வந்தார். தனது பள்ளிப்படிப்பை யோகேஸ்வரி வித்யாலயாவில் முடித்த மகாஜன் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டமும், இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். படிக்கும் காலத்திலேயே நாடகத்துறையில் சிறந்து விளங்கிய பிரமோத், தன்னோடு நடித்த ரேகாவை காதலித்து மணந்து கொண்டார். நான்காண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பிரமோத் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

மிகக் சிறுவயதில் இருந்தே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இருந்த பிரமோத் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தருண் பாரத் என்ற மராத்தி செய்தித்தாளின் ஆசிரியராகவும் இருந்தார். இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலை காலத்தில் கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சி உருவான காலத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்ப்பில் கட்சிப் பணிக்காக அனுப்பப்பட்டவர்களில் பிரமோத்தும் ஒருவர். தனது பணித்திறமையால், பல்வேறு மாற்றுக் கட்சியினரோடு இருந்த தொடர்பால் அவர் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.

மஹாராஷ்டிர மாநில பாஜகவின் பொதுச் செயலாளர், கட்சியின் தேசிய செயலாளர், கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தது. இந்திரா கொலையானதைத் தொடர்ந்து நடைபெற்ற 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார், ஆனால் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரது சேவைகளை அங்கீகாரம் செய்யும் விதமாக பாஜக அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நான்கு முறை நியமித்தது.

1996ஆம் ஆண்டு முதல்முதலாக வாஜ்பாய்  அமைந்த பாஜக அரசில் பிரமோத் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு முதலில் பிரதமரின் ஆலோசகராகப் பணியாற்றிய மகாஜன், பின்னர் செய்தித் தொடர்பு, உணவு பதனிடும் துறை, பாராளுமன்ற விவகாரத்துறை, நீர்வளம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அவர் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பிரமோத் மகாஜன் பாஜகவின் முக்கிய தலைவர்களான வாஜ்பாய் மற்றும் அத்வானியின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். வாஜ்பாய் அவரை லக்ஷ்மணன் என்றே அழைப்பது வழக்கம்.

1995ஆம் ஆண்டு பாஜக சிவசேனாவோடு கூட்டணி வைத்து மஹாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு பெரும் வெற்றியைப் பெற்றது. கூட்டணி அமையவும், தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை அமைப்பதிலும் பிரமோத்தின் பங்கு பாராட்டுதலுக்குரியது. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத் தேர்தலின் போது, அந்த மாநிலத்தின் பொறுப்பாளராக பிரமோத் பணியாற்றினார். அங்கும் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் "இந்தியா ஒளிர்கிறது" என்ற முழக்கத்தோடு பாஜக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்தத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கு தேவையான வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. தோல்விக்கான பொறுப்பை மகாஜன் ஏற்றுக்கொண்டார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் பிரமோத் மகாஜன் அவர் வீட்டில் அவரது உடன்பிறந்த தம்பியால் சுடப்பட்டார். மிக அருகில் இருந்து வெளியான துப்பாக்கி குண்டுகளால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் பலனளிக்காமல் பிரமோத் மே மாதம் 3ஆம் தேதி காலமானார்.

பிரமோத் மஹாஜனின் சகோதரி கணவர் கோபிநாத் முண்டேயும் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ப்ரமோதின் மகள் பூனம் மகாஜன் தற்போது பாஜகவின் இளைஞர் அணி தலைவியாக உள்ளார்.

விதி விளையாடாமல் இருந்திருந்தால், பிரதமர் பதவிக்கே வந்திருக்க வேண்டிய பிரமோத் மகாஜன் பிறந்தநாளில் கட்சிக்கான அவரது சேவையை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

புதன், 29 அக்டோபர், 2025

அக்டோபர் 29 - கலையரசி கமலாதேவி சட்டோபாத்யாய நினைவு நாள்



பாரத நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்த பலர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எந்த ஒரு பதவிக்கும் ஆசைப்படாமல், தேசத்தின் புனர்நிர்மாணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது என்பது பல நாடுகளில் நாம் காண முடியாத ஓன்று. அப்படி அரசியலை விட்டு விட்டு வேறு தளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர் கமலாதேவி சட்டோபாத்தியாய அவர்கள்.

மங்களூரில் மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றிவந்த ஆனந்தைய தாரேஸ்வர் - கிரிஜாபாய் தம்பதியரின் நான்காவது மகளாக 1903ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தவர் கமலாதேவி. கமலாதேவியின் பாட்டி சமிஸ்க்ரித நூல்கள் வழியாக பாரத நாட்டின் வரலாற்றை அறிந்தவராக இருந்தார். அவரின் வழிகாட்டல் கமலாதேவிக்கு தேசத்தின் பாரம்பரியத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தது. தங்கள் வீட்டிற்கு வழக்கமாக வரும் கோவிந்த ரானடே, கோபால கிருஷ்ண கோகுலே, அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோரின் அறிமுகம் கமலாதேவியின் சிந்தனைகளை வடிவமைத்தன

இதற்கிடையில் கடுமையான சோதனைகளை கமலாதேவி சந்திக்க நேர்ந்தது.  அவரது மூத்த சகோதரி சகுணா வெகு இளமையில் உயிர் நீத்தார். கமலாவுக்கு 7 வயதாகும் போது அவரது தந்தையாரும் மறைந்தார். மறைந்த தந்தையார் உயில் எதுவும் எழுதி வைத்து விட்டுச் செல்லவில்லை என்பதால் அந்த நாள் வழக்கப்படி கணவரது சொத்துக்கள் எல்லாம் மனைவியை வந்தடையாமல் கணவரது வழி உறவினர் ஒருவரது மகனைச் சென்றடைந்தது. அப்போது அதுதான் சட்டம். அந்த சொத்துக்களை பெற்றுக்கொண்ட பயனாளி, மாதாமாதம் கமலாதேவி குடும்பத்தினருக்கு வாழ்க்கை நடத்த குறிப்பிட்ட அளவு பணத்தை அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் கமலாதேவியின் தாயார் கிரிஜாபாய் அந்தத் தீர்ப்பை நிராகரித்தார். தனக்குத் தனது கணவரது சொத்துக்களின் மீது உரிமை இல்லாவிட்டால் அது தனக்கும், தன் குழந்தைகளுக்கும் தேவையில்லை என்று கூறி  தனது தாய் வீட்டில் இருந்து தனக்களிக்கப்பட்ட சீதனத்தைக் கொண்டு மட்டுமே எதிர்கால வாழ்க்கையை நடத்துவது என முடிவு செய்து கொண்டார்.

கமலாதேவிக்கு அவரின் 14ஆம் வயதில் திருமணமானது. ஆனால் இரண்டே வருடத்தில் அவர் கணவர் மரணமடைந்தார்.  இளம் விதவையாக சென்னை ராணி மேரிக் கல்லூரியில் சமூகவியல் கற்க மாணவியாகச் சேர்ந்தார் கமலா. அங்கே கமலாவின் சக வகுப்புத் தோழியாக அமைந்தவர் சுஹாசினி சட்டோபாத்யாய். இவர் கவிக்குயில் சரோஜினி தேவியின் இளைய சகோதரி. இவர்களது நட்பு கிடைத்ததும் கமலாவுக்கு மென்கலைகளில் நாட்டம் மிகுந்தது. அதோடு சுஹாசினி, தன் தோழிக்கு, தனது மூத்த சகோதரரும், மாபெரும் கலை ஆர்வலரும், நாடகக் கலைஞருமான  ஹரிந்தரநாத் சட்டோபாத்யாவை  அறிமுகம் செய்து வைத்தார். இருவரின் கலை ஆர்வமும் ஒன்றாக இருக்க இருவரும் காதலிக்கத் தொடங்கினர். தனது 20ஆவது வயதில்  ஹரிந்திர நாத்தைத் திருமணம் செய்து கொள்வது என கமலாதேவி முடிவெடுத்தார்.

அன்றய காலகட்டத்தில் இது ஒரு பெரும் புரட்சி.  திருமணம் முடிந்து ஓரிரு ஆண்டுகளில் தனது ஒரே மகன் ராமா பிறந்ததும் கணவருடன் மேற்கல்விக்காக லண்டன் சென்று விட்டார் கமலா தேவி. அவர் லண்டனில் இருக்கும் போது தான் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் இன்னபிற காந்திய வழிப் போராட்டங்கள் குறித்தெல்லாம் அறிய நேர்ந்தார். அவருக்கு காந்தியின் அஹிம்சா வழிப் போராட்டங்களின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது இப்படித்தான்.

கமலாதேவியும், ஹரிந்திர நாத்தும் இணைந்து தங்கள் வாழ்வில் தடைகள் பல இருப்பினும் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகக் கடந்து பல மேடை நாடகங்களை அரங்கேற்றினர். கமலா திரைப்படங்களிலும் நடித்தார். கன்னடத்தில் முதல் மெளனப் படத்தில் நடித்தவர் என்ற பெருமை கமலாதேவிக்கு உண்டு. அது தவிர 1931 ஆம் ஆண்டில் பிரபல கன்னட நாடக ஆசிரியரான சூத்ரகாவின், மிருக்‌ஷ்கடிகா (வசந்தசேனா)  என்ற கன்னடப் படத்திலும் கமலா நடித்தார். 1943 ஆன் ஆண்டில் தான்சேன் என்ற இந்தித் திரைப்படத்திலும், தொடர்ந்து சங்கர் பார்வதி, தன்னா பகத் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கமலா நடித்திருந்தார்.

ஆனாலும் கமலாதேவியின் திருமண வாழ்வு ஆனந்தமாக இல்லை. அதனால் கமலாதேவி தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதுவும் அன்று விவாதப் பொருளானது. . ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட கமலாவுக்கு நேரமில்லை. அவர் அச்சமயத்தில் வெகு தீவிரமாக காந்தியப் போராட்டங்களுக்கு தம்மை ஒப்புக் கொடுத்து விட்டிருந்தார்.

கமலாதேவி இலண்டனில் இருந்தபோது, இந்தியாவில் காந்தி  ஒத்துழையாமை இயக்கத்துக்கு 1923இல் அழைப்புவிடுத்ததை அறிந்து இந்தியா திரும்பி, சேவாதளம் அமைப்பில் இணைந்தார். விரைவில் கமலாதேவி சேவா தளம் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக ஆனார். சேவாதளத்தின் சார்பில் அனைத்திந்திய அளவில் பெண்களைத் தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் கமலா ஈடுபட்டார்.

1926, இல் இவர் அனைத்திந்திய மகளிர் மாநாடு (AIWC) அமைப்பின் நிறுவனரான  மார்கரெட் என்பவரைச் சந்தித்தார். அவரின் தாக்கத்தால் சென்னை மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டார். இவர்தான் இந்தியாவில் சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண். ஆயினும் தேர்தலில் இவர் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

அதற்கடுத்த ஆண்டில், அனைத்து - இந்திய மகளிர் மாநாடு (AIWC) நிறுவப்பட  அதன் முதல் அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், AIWC யின் கிளைகள் இந்தியா முழுவதும் இயங்கத் துவங்கின, தன்னார்வத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு மதிப்பு மிகுந்த தேசிய அமைப்புகளில் ஒன்றாக மாறியது AIWC. கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.

காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகக் குழு உறுப்பினர்களான ஏழு பேர்களில் கமலாவும் ஒருவர். மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பை பங்குச் சந்தையில் விற்க முயன்ற போது கமலா கைது செய்யப்பட்டார்.  இதற்கு ஓராண்டு கழித்து 1936 ல் காங்கிரஸ் சோஸலிஸ்ட் கட்சியின் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு,  ஜெயபிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, மினுமசானி முதலிய தலைவர்களுடன் இணைந்து இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார்.

இரண்டாம் உலகப்போர் துவங்கிய காலத்தில் கமலாதேவி இங்கிலாந்தில் இருந்தார், அவர் உடனடியாக உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் பிரதிநிதியாகச் சென்று இந்திய விடுதலைக்கான ஆதரவைத் திரட்டுவதில் முனைந்தார்.

இந்தியா சுதந்திரமடையும் போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளான பிரிந்தன. இதனையொட்டி நாட்டில் இந்து –முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். இந்நிலையில் கமலா தேவி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து 50,000 மக்களுக்கு மருத்துவ உதவியும், உணவு வசதியும், தங்குமிடமும்  செய்து கொடுத்தார்.

அகதிகளாக வந்தவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும் அல்லவா. அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு தேவையான பொருளாதாரத்தை  உருவாக்கும் பொருட்டு
 மறக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த கைவினைத் தொழில்களை சீரமைத்துத் தரும்  பணியினையும் இரண்டாம் கட்டமாக தொடங்கினார். இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறித்துறை மரபைக் காக்கவும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் அத்துறைக்கு பெரும் புத்துயிர் அளிக்கவும் கமலாதேவி பொறுப்பெடுத்துக் கொண்டார். நவீன இந்தியாவில் இன்று நாம் காணும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் வளர்ச்சி மற்றும் நவீன முன்னேற்றங்கள் அனைத்துக்கும் அடித்தளமிட்டவர்  கமலா தேவி  என்றால் மிகையில்லை

இவரது பணிகளை அங்கீகரிக்கும் விதமாக  இந்திய அரசு  பத்மபூஷன்  விருதை 1955 ல் அளித்தது. பின்னர் இரண்டாவது மிக உயரிய  விருதான பத்மவிபூஷண்  விருதை 1987 ல் பெற்றார். 1966 ல் ராமன் மகசேசே விருதை பெற்றார். மேலும் சங்கீத நாடக அகாதெமி விருது,  1974 இல் இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்காக இந்திய தேசிய அகாதெமி வழங்கிய வாழ்நாள் சாதனைக்கான விருதையும் பெற்றார்.

யுனெஸ்கோ அமைப்பு கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் இவரது பணிகளுக்காக 1977 ல் சிறப்பு விருது வழங்கியது.  ரவீந்திர நாத் தாஹூரின் சாந்தி நிகேதனும் கூட கமலாதேவியின் சமூக முன்னேற்ற மற்றும் கலைத்துறை சேவைகளுக்காக அதன் மிக உயர்ந்த விருதை கமலாவுக்கு அளித்து அவரைச் சிறப்பு செய்து கெளரவித்தது

வாழ்க்கை முழுவதும் ஓயாமல் இயங்கிக்கொண்டு இருந்த கமலாதேவி சட்டோபாத்யாய 1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் நாள் காலமானார். 

செவ்வாய், 28 அக்டோபர், 2025

அக்டோபர் 28 - இந்திரா நூயி பிறந்தநாள்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி


மஹாகவியின் இந்த வாக்கு இன்று உண்மையாகிக் கொண்டுள்ளது. பாரதத்தில் மட்டுமல்ல பாரெங்கும் பாரதப் பெண்கள் இன்று தங்கள் திறமையால் வெற்றிக்கொடி கட்டி வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் திருமதி இந்திரா நூயி அவர்கள். அதிலும் இவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பது நமெக்கெல்லாம் இன்னும் பெருமை.

சென்னையைச் சார்ந்த மத்தியதர குடும்பத்தில் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி பிறந்தவர் திருமதி இந்திரா. தனது கல்வியை சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியிலும், பின்னர் சென்னை கிருஸ்துவக் கல்லூரியிலும் முடித்த இந்திரா பின்னர் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் மேலாண்மைப்  பட்டத்தையும் பெற்றார்.

டூடல் என்ற நிறுவனத்திலும், அதனைத் தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் பாஸ்டன் கன்சல்டிங் குரூப், மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் போவெரி போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார்.

1994ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் மூத்த உதவித் தலைவர் பதவி இந்திரா நூயியை தேடி வந்தது. அதிலிருந்து இருபத்தி நான்கு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். பல்வேறு பொறுப்புகளில் நிறுவனத்திற்குச் சேவை செய்து அவரது கடின உழைப்பில் மட்டுமே வளர்ந்து, பின்னர் 2001 ல் பெப்சிகோ வின் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைவர் ஆனார். மேலும் அவர் இயக்குர் குழுவிலும் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட மாநிலங்களுக்குள்ளாக அந்த மக்களுக்குப் பரிட்சயமான பிரபலங்களைக் கொண்டு பெப்சி விளம்பரங்களைப் பல வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தினார். இந்தியாவில் முன்னணி விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு பெப்சி குளிர்பானத்திற்கான விளம்பரங்களை அதிக அளவில் செய்தார். இதனால் உலகம் முழுக்க பெப்சியின் விற்பனை வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக பெப்சியின் விற்பனை வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். இந்தியாவில் விற்பனையாகும் முதல் ஐந்து குளிர்பானங்களில் பெப்சியும் ஒன்று.

இந்திராவின் திறமைக்கு சி.இ.ஓ பதவியுடன் கூடுதலாக 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடிவந்தது. ஃபார்ச்சுன் பத்திரிகையின் 2006, 2007, 2008, 2009-ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். அந்தச் சமயங்களில் ஓர் இந்தியப் பெண்மணியாக உலகம் முழுக்க இவரது பணித் திறன் பெருமையாக பேசப்பட்டது.

1981ஆம் ஆண்டு ராஜ் நூயி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இந்திராவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவரது திறமையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும், பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2007 ஆம் ஆண்டு பாரத அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.

எல்லாத் தடைகளையும் பாரத மகளீர் தாண்டி சாதனை படைப்பார்கள் என்ற உண்மையை உலகமெங்கும் உரக்கச் சொன்ன இந்திரா நூயி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

அக்டோபர் 26 - புரட்சிவீரர் மன்மதநாத் குப்தா நினைவுநாள் -

அக்டோபர் 26, வருடம் 2000. அது ஒரு தீபாவளி திருநாள். பதின்ம வயதிலேயே  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்நிய ஆட்சியை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி அதனால் தனது நாற்பதாம் வயதுக்குள் இருபதாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பெரும் போராளி தீபவரிசை நாட்டை அலங்கரித்து வழியனுப்ப தொண்ணுற்றி ஒன்றாம் வயதில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட நாள் இன்றுதான்.



"எங்களை புரட்சியாளர்கள் என்று மக்கள் சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் நாங்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யத் துணிந்த சாதாரண மனிதர்கள்தான்" என்று கூறிய மன்மதநாத் குப்தாவின் நினைவுநாள் இன்று.

வங்காளத்தை தங்கள் பூர்விகமாகக் கொண்ட, வாரணாசியில் வசித்து வந்த  வீரேஸ்வர் குப்தாவிற்கு மகனாக 1908ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் பிறந்தவர் மன்மதநாத் குப்தா. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மன்மதநாத். 1921ஆம் ஆண்டு அன்றய வேல்ஸ் இளவரசரான எட்டாம் எட்வர்ட் வருகையை ஒட்டி வாரணாசியில் மன்னர் வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மக்களைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரங்களை 13 வயதான மன்மதநாத் விநியோகிக்கும் செய்துகொண்டு இருந்தார். அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று அன்றய காவல்துறை அவரை கைது செய்தது. மூன்று மாத சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுதலைப் போருக்கும், சிறைவாழ்வுக்கும் மன்மதநாத் குப்தாவுக்குமான நீண்ட உறவு அன்றுதான் தொடங்கியது.

விடுதலையாகி வந்த மன்மதநாத் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி அழைப்பு விடுத்தார். ஆனால் சவுரி சவுராவில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து போராட்டத்தை காந்தி திரும்பப் பெற்றார். மனம் வெறுத்த இளைஞர்கள் தீவிரவாத நடவடிக்கைதான் சரியாக இருக்கும் என்று எண்ணத் தலைப்பட்டனர். பலர் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் அஸோஸியேஷன் என்ற அமைப்பில் இணைந்தனர். ராம் பிரசாத் பிஸ்மி, அஷ்பாகுல்லாகான், சந்திரசேகர ஆசாத், பகத்சிங் என்ற பெரும் வீரர்கள் ஒரே அணியாகத் திரண்டனர். அவர்களில் ஒருவராக மன்மதநாத் குப்தாவும் இருந்தார்.

போராட்டத்திற்கு ஆயுதம் வேண்டும், ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும், பணத்தை ஆங்கில ஆட்சியிடமே கொள்ளை அடிக்கலாம் என்ற திட்டம் உருவானது. அரசின் பணத்தோடு வந்த புகைவண்டி ஒன்றை ககோரி என்ற இடத்தில் வீரர்கள் கொள்ளை அடித்தனர். ஆனால் ஆட்சியாளர்களின் கைகள் புரட்சிவீரர்கள் பலரை கைது செய்தது. மன்மதநாத் குப்தாவும் கைதானார். பதினெட்டு வயதை எட்டவில்லை என்பதால் பதினாலு ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1937ஆம் ஆண்டு விடுதலையான மன்மதநாத் மீண்டும் ஆங்கில ஆட்சியை எதிர்த்து எழுதத் தொடங்கினார். 1939ஆம் ஆண்டு மீண்டும் சிறை, இந்தமுறை அந்தமான் சிறைக்கொட்டடியில், எட்டாண்டுகள் கழித்து 1946ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். முப்பத்தி எட்டு வயதுக்குள் சரிபாதி வாழ்வை சிறையில் கழித்த வீரர் மன்மதநாத்.

சுதந்திரம் அடைந்த நாட்டில் மன்மதநாத் எழுத்தாளராக உருமாறினார். ஏறத்தாழ நூற்றி இருபது புத்தகங்களுக்கு மேலாக அவர் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் வங்காள மொழியில் எழுதியுள்ளார். கத்தியின்றி ரத்தமின்றி கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது, அதில் ஆயுதம் தாங்கி போராடிய வீரர்களின் பங்கு மிகப் பெரியது என்ற உண்மையை போராளிகளின் பார்வையில் இருந்து அவர் பதிவு செய்து உள்ளார். அவர்கள் அபாயகரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் ( They lived dangerously ) என்ற அவரது புத்தகம் அன்றய விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வை பதிவு செய்துள்ளது. சந்திரசேகர ஆசாத், காந்தியும் அவர் காலமும், பகத்சிங்கும் அவர் காலமும், விடுதலைப் போராட்டத்தில் போராளிகளின் வரலாறு என்பவை அவர் எழுதிய முக்கியமான நூல்களில் சில.

செய்தி ஒளிபரப்பு துறையில் பணியாற்றிய மன்மதநாத் குப்தா திட்டக்குழுவின் சார்பில் பல்வேறு புத்தகங்களை / கையேடுகளை எழுதி வெளியிட்டுள்ளார். பால பாரதி என்ற சிறுவர் பத்திரிகை மற்றும் ஆஜ்கல் என்ற இலக்கிய பத்திரிகை மற்றும் திட்டக்குழுவின் சார்பில் வெளியான யோஜனா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் மன்மதநாத் குப்தா இருந்தார்.

நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட தியாகிகளில் ஒருவரான மன்மதநாத் குப்தா 2000ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் இந்திய மண்ணோடு கலந்தார்.

விடுதலை வீரர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள் 

வெள்ளி, 24 அக்டோபர், 2025

அக்டோபர் 24 - கேலிச்சித்திர கலைஞர் R K லக்ஷ்மன் பிறந்தநாள்

பாரதம் அப்போதுதான் ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை அடைந்து இருந்தது. அந்நியர் ஆட்சி அகன்றதால் இனி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்ற நம்பிக்கையை மக்களிடம் அரசியல்வாதிகள் விதைத்துக்கொண்டு இருந்தனர். அரசியலமைப்பு சட்டம் நிறைவேறி, பாரதம் தன்னை ஒரு ஜனநாயக குடியரசு நாடாக அறிவித்து இருந்தது. வயது வந்த அனைவரும் ஒட்டுப் போட்டு தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முதலாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற இன்னும் ஒரு ஆண்டு காலம் இருந்தது.



பாராளுமன்றத் தேர்தல், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு,ஐந்தாண்டு திட்டங்கள், சீனா உடனான போர், நேரு மறைவு, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்றல், பாகிஸ்தானுடனான போர், தாஷ்கண்ட் ஒப்பந்தம், சாஸ்திரி மறைவு, இந்திரா பிரதமராகுதல், காங்கிரஸ் கட்சி பிளவு அடைதல், பாரதம் சோசலிச சித்தாந்தத்தில் கரைதல், வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்காள தேச விடுதலைக்காக மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போர், நெருக்கடி நிலை, ஜனதா கட்சி ஆட்சி, இரண்டரை ஆண்டுகளில் அதுவும் கவிழ்தல், மீண்டும் இந்திரா, பஞ்சாப் தீவிரவாதம், பொற்கோவிலில் ராணுவம் நுழைதல், இந்திராவின் படுகொலை, ராஜிவ் பதவி ஏற்பு , டெல்லியில் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள், போபால் விஷவாயு கசிவு, போபோர்ஸ் பீரங்கி ஊழல், ஜனதாதளத்தின் சார்பில் வி பி சிங், அவரைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமராகுதல், ராஜிவ் படுகொலை, நரசிம்மராவ் பிரதமராகுதல், பொருளாதார தாராளமயமாக்கல், மீண்டும் தேவ கௌடா மற்றும் குஜரால் பிரதமர் பதவிக்கு வருதல், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாஜ்பாய் பதவி ஏற்றல், கார்கில் போர். மிகச் சரியாக பாரதம் விடுதலை பெற்ற ஐம்பது ஐந்து கால வரலாற்றை சுருக்கமாகச் சொன்னால், இப்படி சொல்லி முடிக்கலாம்.

இந்த வரலாற்றை அருகில் இருந்து எதுவும் பேசாமல், சாட்சியாக மட்டும் இருந்து கவனித்து பதிவு செய்த ஒரு மனிதர் உண்டு. அவருக்கு பெயர் கூடக் கிடையாது. வேண்டுமானால் நாம் அவரை திருவாளர் பொதுஜனம் ( The common man ) என்று பெயரிட்டு அழைக்கலாம். அவரது உடையை இந்தியாவில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியிலும் மொத்தமாகப் பார்க்க முடியாது. ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொன்றாய் எடுத்துப் போட்டு உருவான ஆடை அது. ஒரு பஞ்சாபி தென்னிந்தியரில் இருந்து மாறுபட்டு இருக்கலாம். ஒரு வங்காளி பீஹாரியைப் போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் மொத்த பாரதப் பிரஜைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது, நாட்டில் தன்மீது அரசியல்வாதிகளால், பணம் படைத்தவர்களால் நடத்தப்படும் கொடுமைகள் அத்தனையும் பார்த்துக் கொண்டு, செய்வதறியாமல் தவித்து நிற்பதோடு, வாயைத் திறக்காமல் அத்தனையையும் சகித்துக் கொண்டு இருப்பதுதான். அப்படியான மக்களின் பிரதிநிதி பேசவா செய்வார் ? அவர் எல்லாவற்றையும் பேசாமலேயே பார்த்துக் கொண்டு இருப்பார். ஆனால் அவர் பேசவேண்டியவற்றை அவரது முகபாவங்களே காட்டி விடும். அப்படியான மக்களின் பிரதிநிதியை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மன் சுருக்கமாக ஆர் கே லக்ஷ்மன் அவர்களின் பிறந்த தினம் இன்று.



பாரதத்தின் முக்கியமான கதை சொல்லிகளின் ஒருவரான திரு ஆர் கே நாராயணனின் சகோதரர் ஆர் கே லக்ஷ்மன். இவர் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். ஆறு மகன்களும், இரண்டு பெண்களும் உள்ள பெரிய குடும்பத்தின் கடைசி பிள்ளை லக்ஷ்மன். தந்தை மைசூரில் பணி புரிந்ததால், லக்ஷ்மன் படிப்பு மைசூர் நகரிலேயே நடைபெற்றது. சிறு வயதில் இருந்தே தரைகளிலும், சுவர்களிலும், பள்ளி புத்தகங்களிலும் படங்கள் வரைவது லக்ஷ்மணின் பழக்கம். இவரின் சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டதால், தனது சகோதர்கள் ஆதரவில் லக்ஷ்மன் வளர்ந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். படிக்கும் போதே பல்வேறு பத்திரிகைகளுக்கு படம் வரைந்து கொடுப்பது இவரின் பகுதி நேரத் தொழிலாக இருந்தது.

ஸ்வராஜ்யா, பிளிட்ஸ், ஹிந்து போன்ற பத்திரிகைகளுக்கு படம் வரைந்து கொண்டிருந்த லக்ஷ்மன், Times of India பத்திரிகையில் இணைந்து கொண்டார். அப்போது அவரோடு சித்திரக்காரராக பணியாற்றியவர் மகாராஷ்டிராவின் முக்கியத் தலைவராக பின்னாளில் உருவெடுத்த பால் தாக்கரே. அப்போது உருவானவர்தான் இந்த திருவாளர் பொதுஜனம்.

சிறுது சிறிதாக உருமாறி, பாரத பிரஜைகளின் ஒட்டு மொத்த உருவமாக, அவர்களின் மனசாட்சியாக மாறியவர் அவர். ஐம்பதாண்டுகால பாரத நாட்டின் வரலாற்றை திருவாளர் பொதுஜனத்தின் பார்வையில் பார்ப்பது என்பது நமது வரலாற்றை நாமே மீள்பார்வையை பார்ப்பதாகும். கேப்டன் கோபிநாத் தொடங்கிய டெக்கான் விமான நிறுவனத்தின் அடையாளமாகவும் திருவாளர் பொதுஜனமே இருந்தார். திருவாளர் பொதுஜனத்திற்கு பூனா நகரிலும் மும்பையிலும் சிலைகள் உள்ளன.



 புகழ்பெற்ற நடனக் கலைஞரும் திரைப்பட நடிகையுமான பேபி கமலா என்பவரை லக்ஷ்மன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த மணவாழ்வு வெற்றிகரமாக அமையவில்லை. முறையான விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் கமலா என்ற பெயர் கொண்ட இன்னொரு பெண்மணியை அவர் மணந்து கொண்டார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் 2015ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் காலமானார். 

வியாழன், 23 அக்டோபர், 2025

அக்டோபர் 23 - சுபேதார் ஜோகிந்தர் சிங் - நினைவுநாள்

இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர்சக்ரா விருது பெற்ற சுபேதார் ஜோகிந்தர்சிங் அவர்களின் நினைவுநாள் இன்று. 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போரில் பெரும் வீரத்தைக் காட்டி, உச்சகட்டமாக தன உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்தவர் திரு ஜோகிந்தர்சிங் அவர்கள்.



பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஷேர்சிங் சஹனான் - கிருஷ்ணன் கவுர் தம்பதியரின் மகனாக 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்தவர் திரு ஜோகிந்தர் சிங். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அவர் அன்றய பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்தார். அவர் அன்றய ராணுவத்தின் சீக்கிய பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். ராணுவத்தில் சிறப்பு பயிற்சிகளை முடித்து அவர் வீரர்களின் பயிற்சியாளராகவும் விளங்கினார். இரண்டாம் உலகப் போரிலும், பின்னர் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் போரிலும் ஜோகிந்தர் கலந்துகொண்டார்.

1962ஆம் ஆண்டு சீனா இந்தியாமீது படையெடுத்தது. களநிலவரம் தெரியாமல் கற்பனையில் மூழ்கி இருந்த தலைமையால் இந்திய ராணுவம் தோல்வியைச் சந்தித்தது. ஆனாலும் எல்லா இடர்களுக்கு நடுவிலும், இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் துணிச்சலைக் காட்டி பெரும் சாகசங்களை நிகழ்த்தினர்.

அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள நம்கா சூ என்ற ஆற்றின் அருகே உள்ள தளத்தைக் காக்க சீக்கியப் படை பிரிவு களம் இறங்கியது. மிகக் குறைவான தளவாடங்களையும் அதைவிடக் குறைவான வீரர்களையும் கொண்ட ஒரு சிறு படைப்பிரிவு முழுவதுமாக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்து, முடிந்தவரை சீனப் படைகளைத் தடுத்து நின்றனர். ஆனாலும் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்த சீனப் படை எல்லா இந்திய வீரர்களையும் கொன்று அந்தத் தளத்தைக் கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து முன்னேறிய சீனப்படையை பும்லா கணவாய் அருகே சீக்கியப் படையின் இன்னொரு பிரிவு எதிர்கொண்டது. அந்த படைக்கு தலைமை வகித்தவர் சுபேதார் ஜோகிந்தர் சிங். மொத்தம் இருபது வீரர்கள் கொண்ட படை அது. கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தளத்தை கைப்பற்ற அடுத்தடுத்து மூன்று முறை தலா 200 வீரர்கள் கொண்ட படையை சீனா அனுப்ப வேண்டி வந்தது. இரண்டு முறை வந்த படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்து, எதிரிகளை முழுவதுமாக சீக்கியப் படைப்பிரிவு கொன்றது. ஆனால் அதில் நமது படையின் பாதி வீரர்கள் மரணமடைந்தார். மூன்றாம் முறை அடுத்த 200 சீன வீரர்கள் தாக்குதலை பத்தே இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதற்கிடையில் இந்தியப் படையின் குண்டுகள் எல்லாம் காலியாகி விட்டது.

கையில் துப்பாக்கியோடு 200 சீன வீரர்கள் ஒருபுறம், தாயகத்தைக் காக்கும் பணியில் எந்த தளவாடங்களும் இல்லாத பத்து இந்திய வீரர்கள் மறுபுறம். ஆனாலும் போரில் பின்வாங்குவது என்பது சீக்கிய வீரர்களின் வரலாற்றிலேயே இல்லாத ஓன்று. துப்பாக்கியில் குண்டு இல்லாவிட்டால் என்ன ? துப்பாக்கி முனையில் சொருகப்பட்ட கத்தி உள்ளதே. 'ஜெய் போலோ ஸோ நிஹால் ஸத் ஸ்ரீ அகால்' இதுதான் சீக்கியப் படைப்பிரிவின் போர் முழக்கம். குரு கிரந்த சாஹிபின் புனித மந்திரமான ஸத் ஸ்ரீ அகால் என்ற முழக்கத்தோடு துப்பாக்கியில் உள்ள கத்தியை ஆயுதமாக கையில் ஏந்தி சுபேதார் ஜோகிந்தர்சிங் தலைமையில் மீதம் இருந்த பத்து வீரர்களும் எதிரிகளை நேருக்கு நேராக எதிர்கொண்டனர். எதிரியின் படையில் பெரும் சேதத்தை உருவாக்கி, அவர்கள் பாரத வீரத்தை பாரெங்கும் பறை சாற்றினர்.

எண்ணிக்கையிலும், தளவாடத்திலும் அதிகமாக இருந்த சீனர்கள் அந்தப் போரில் வெற்றி அடைந்தனர். ஆனால் அதற்காக அவர்கள் அளிக்க வேண்டிய விலை மிக அதிகமாக இருந்தது. சுபேதார் ஜோகேந்தர்சிங் போர் கைதியாக சீனர்களால் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால் சண்டையில் ஏற்பட்ட காயங்களால் அவர் மரணம் அடைந்தார்.

பிரமிக்கத் தக்க வீரத்தைக் காட்டி, மிகப் பெரும் தியாகத்தைச் செய்து பலிதானியான சுபேதார் ஜோகேந்தர்சிங் அவர்களுக்கு பாரத ராணுவத்தின் மிகப் பெரும் விருதான பரம்வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. முழுமரியாதையோடு ஜோகிந்தர்சிங்கின் அஸ்தியை சீனா பாரத நாட்டிடம் ஒப்படைத்தது.

எண்ணற்ற ராணுவ வீரர்கள் நாட்டின் எல்லையைக் காத்து நிற்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள்.