சனி, 27 டிசம்பர், 2025

டிசம்பர் 27 - லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா பிறந்ததினம்

இன்றய ஜார்காலாந்து மாநிலத்தில் ராஞ்சி நகருக்கு அருகே உள்ள கும்லா மாவட்டத்தில் ஜாரி கிராமத்தில் வசித்து வந்த ஆதிவாசி வகுப்பைச் சார்ந்த ஜூலியஸ் எக்கா - மரியம் எக்கா தம்பதியரின் மகனாக 1942ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் நாள் பிறந்தவர் ஆல்பர்ட் எக்கா. மலையும் காடுகளும் சூழ்ந்த நிலத்தில்  வசித்து வந்த காரணத்தால் பொதுவாகவே ஆதிவாசிகள் வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். ஆல்பர்ட் எக்காவும் அதில் விதிவிலக்காக இல்லை. துணிச்சலும் வீர சாகசங்களிலில் நாட்டமும் இருந்த ஆல்பர்ட் ராணுவத்தில் சேருவதில் மிகவும் விருப்பமாக இருந்தார். தனது இருபதாவது வயதில் ஆல்பர்ட் பாரத ராணுவத்தில் இணைந்தார். பின்னர் அவர் Brigade of the Guards - காவலர்களின் படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  

Brigade of the Guards படைப்பிரிவானது பாரத நாடு முழுவதிலும் உள்ள எல்லா இனக்குழுக்களிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படைப்பிரிவு. பொதுவாக பாரத ராணுவத்தில் சீக்கியர்கள் படை, கூர்க்கா படை, மராட்டா படை என்று இனக்குழுவாரியாக வீரர்களை இணைத்து படைப்பிரிவுகளை உருவாக்குவதே வழக்கம். எல்லாப் பகுதி மக்களும் இணைந்து உருவான முதல்படைப்பிரிவு இதுதான். ஜெனரல் கரியப்பா உருவாக்கிய படைப்பிரிவு இது. பஞ்சாப் ராணுவப்பிரிவு, ராஜ்புதான துப்பாக்கிப்படை மற்றும் கையெறி குண்டுகள் வீசும் கிரான்டியர் படை ஆகியவற்றில் இருந்து படைகளை இணைத்து இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. 

இதப்படையின் குறிக்கோள் பஹலா ஹமேஷா பஹலா அதாவது முதலில் எப்போதும் முதலில் என்பதாகும். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போர், 1965 மற்றும் 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர்கள், சீக்கிய தீவிரவாதிகள் வசம் இருந்த பொற்கோவிலை விடுவிக்க நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூஸ்டார் மற்றும் ஐக்கிய நாடுகள் சார்பாக அமைதிப்படையாக வியட்நாம், கம்போடியா, லாவோஸ், அங்கோலா மற்றும் காசா பகுதிகளில் பணியாற்றி உள்ளது. பல்வேறு களங்களில் பணியாற்றி இரண்டு அசோகா சக்ரா, எட்டு பரம் விஷிஸ்ட சேவா பதக்கங்கள், எட்டு மஹாவீர் சக்ரா, நான்கு கீர்த்தி சக்ரா, நாற்பத்தி ஆறு வீர் சக்ரா, எழுபத்தி ஏழு சேனா பதக்கங்கள், பத்து அதி விஷிட்ட சேவா பதக்கங்கள், மூன்று யுத்த சேவா பதக்கங்கள், பதினாறு விஷ்ட்ட சேவா பதக்கங்கள் என்று பல்வேறு பதக்கங்களை இந்தப் படை பெற்றுள்ளது. அதெற்கெல்லாம் சிகரம் வைத்தது போல இந்தப் படைப் பிரிவுக்கு ஆல்பர்ட் எக்கா பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றுத் தந்துள்ளார்.

வில்லையும் அம்புகளையும் வைத்து வேட்டையாடுவதில் ஆல்பர்ட் எக்காவிற்கு இருந்த தேர்ச்சி அவரை துப்பாக்கி சுடுவதில் திறமையானவராக ஆக்கியது. குறி தவறாமல் சுடும் அவரின் திறமையை அவரது மேலதிகாரிகள் எப்போதும் பாராட்டுவது வழக்கம். ராணுவத்தில் சேர்ந்த பிறகு வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலகங்களை அடக்குவதில் எக்கா ஈடுபட்டு இருந்தார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பாரத ராணுவம் ஒரே நேரத்தில் மேற்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் போரிட வேண்டிய நிலைமை உருவானது. பங்களாதேஷ் நாட்டை விடுவிப்பதில் கங்காசாகர் பகுதியில் நடைபெற்ற போர் முக்கிய பங்கு வகித்தது. அந்தப் பகுதி டாக்கா நகரை இணைக்கும்  முக்கியமான ரயில் பாதையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியைக் கைப்பற்றி அங்கிருந்து அஹாவுரா பகுதியைக் கைப்பற்றினால்தான் டாக்கா நகரில் நுழையமுடியும்.  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தி வைத்திருந்தது. பாரத படைகள் முன்னேறுவதைத் தடுக்க சாலையெங்கும் கண்ணிவெடிகளை பாகிஸ்தான் ராணுவம் புதைத்து வைத்திருந்தது. அங்கேதான் டிசம்பர் 3ஆம் நாள் Brigade of the Guards படையின் 14ஆம் பிரிவு தங்கள் தாக்குதலைத் தொடங்க வேண்டும். கேப்டன் கோலி தலைமையில் படைகள் அங்கே அணி வகுத்து இருந்தது. கடினமான இந்தப் பணியை மேற்கொள்ள துணிச்சலுடனும் உறுதியுடனும் ஆல்பர்ட் எக்கா தயாராகிக்கொண்டு இருந்தார்.  தனது உயிரைப் பணயம் வைத்து தனியொருவனாக எக்கா எதிரிப்படையை அழித்தார். 

பாகிஸ்தான் படைகள் ரயில்வே தண்டவாளங்களுக்கு நடுவே நடந்து செல்வதை பாரத ராணுவம் பார்த்தது. அந்தப் பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து பாரத ராணுவம் தங்கள் தாக்குதலைத் தொடங்கியது. எதிரிகள் இருக்கும் இடத்திற்கு 100 மீட்டர் அருகே வரும் நேரத்தில் கடுமையான எதிர் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியது. பதுங்குகுழியின் மேலே அமைக்கப்பட்டு இருந்த இயந்திரத் துப்பாக்கி மூலம் தொடர்ச்சியான துப்பாக்கிச் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது. பாதுகாப்பான இடத்தில இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்குவதும், அதோடு நேருக்கு நேராக அவர்களை எதிர்கொள்வதன் மூலமாக மட்டுமே அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்று எக்கா தீர்மானம் செய்தார். பாக்கிஸ்தான் ராணுவம் அமைத்திருந்த சுவரில் ஏறி அவர் பதுங்குகுழியில் வெடிகுண்டுகளை வீசினார். அதோடு இரண்டு வீரர்களை தன் துப்பாக்கியில் பொருத்தப்பட்டு இருந்த கத்தியால் குத்திக் கொன்றார். எதிர் தாக்குதலில் காயமடைந்த நிலையிலும் எக்கா மற்றொரு பதுங்குகுழியையும் தனது குண்டுவீச்சால் அழித்தார். தனது கடமையை முடித்த நிம்மதியில் எக்கா போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தார். 

அவரது அச்சமற்ற தன்மை, தனது கடமையின் மீது அவரின் பக்தி ஆகியவை இந்தப் போரின் வெற்றியில் பெரும் பங்காற்றின. அவரது வீரத்தைப் பாராட்டும் விதமாக ஆல்பர்ட் எக்காவிற்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. 

வெள்ளி, 26 டிசம்பர், 2025

டிசம்பர் 26 - உத்தம வீரன் உத்தம்சிங் பிறந்தநாள்

எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது இயக்கவியலின் விதி. அந்த எதிர்வினை எப்போது நடைபெறும் என்பதுதான் வரலாற்றின் வினா. பாரத மண்ணில் நடைபெற்ற வினைக்காக இருபத்தி ஒரு ஆண்டுகள் காத்திருந்து லண்டன் மாநகரத்தில் எதிர்வினையாற்றிய மாவீரன் உத்தம்சிங்கின் பிறந்தநாள் இன்று.


அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து ஆயுதம் எதுவும் இல்லாமல் கூடிய பாரத மக்களை " சுட்டேன் சுட்டேன் குண்டு தீரும்வரை சுட்டேன்" என்று படுகொலை செய்த பாதகன் ஜெனரல் ரெஜினால்ட் டயர். அவனுக்கு அனுமதி அளித்து இந்த படுகொலைக்கு பின்புலமாக இருந்தவன் அன்றய பஞ்சாப் ஆளுநர் மைக்கேல் ஓ டயர். இந்த வினைக்கு எதிர்வினையாக சிந்திய பாரத ரத்தத்திற்கு பதிலாக லண்டன் நகரில் மைக்கெல் டயரை சுட்டுக் கொன்ற உத்தம்சிங்கின் பிறந்தநாள் இன்று.

1889 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தின் சுனாம் கிராமத்தில் சர்தார் முக்தாசிங் - ஆஷாகபூர் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஷேர்சிங் என்பதாகும். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஷேர்சிங்கையும் அவர் சகோதரரையும் சீக்கிய மத குருமார்கள் தாங்கள் நடத்தும் விடுதியில் அடைக்கலம் கொடுத்து வளர்த்தனர். அங்கேதான் இவருக்கு உத்தம்சிங் என்று பெயரிடப்பட்டது. நாடெங்கும் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கருத்து உருவாக்கிக்கொண்டு இருந்த காலம் அது. வீரத்திற்கும், தியாகத்திற்கும், நாட்டுப் பற்றுக்கும் பேர் போன சீக்கிய இனக்குழுவில் பிறந்து வளர்ந்தவர் உத்தம்சிங். அவரும் தியாக சீலராக வளர்வதில் வியப்பென்ன இருக்க முடியும் ?

அப்போதுதான் சீக்கியர்களின் முக்கியமான பண்டிகையான பைசாகி திருநாள் அன்று ஜாலியன்வாலாபாகில் கூடிய மக்களை ஜெனரல் டயர் சுட்டுக் கொன்றான். நாடெங்கும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கிய படுகொலை இது. இந்தக் கொலைக்கு பழிவாங்கிய தீரவேண்டும் என்ற முனைப்பு பல தேசியப் போராட்ட வீரர்களுக்கும் உருவானது. அதில் உத்தம்சிங்கும் ஒருவர். இந்த கனல் அவரை பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட வைத்தது. தென்னாபிரிக்கா, நைரோபி ஆகிய நாடுகளில் பல்வேறு பணிகளில் இருந்து விட்டு பின்னர் உத்தம்சிங் அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் இருந்து பாரத சுதந்திரத்திற்கு லாலா ஹர்தயாள் போன்றவர்கள் செயல்பட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் கதர் இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெற்ற உத்தம்சிங் 1927ஆம் ஆண்டு பாரதம் திரும்பினார். காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைப்பட்ட உத்தம்சிங் சிறையில் பகத்சிங் முதலான வீரர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தார். சிறையில் இருந்து விடுதலையான பிறகும் காவல்துறை அவர்மீது கண் வைத்தபடியே இருந்தது. எனவே காஷ்மீர் சென்று ஜெர்மன் வழியாக உத்தம்சிங் லண்டன் சென்று சேர்ந்தார். நாட்டின் எதிரியை அவன் நாட்டிலேயே கொன்று பழி தீர்ப்பதுதான் அவரின் லட்சியமாக இருந்தது.

1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் நாள் கூட்டம் ஒன்றில் மைக்கெல் டயர் பேச வருவதாகத் தகவல் கிடைத்தது. ஏற்கனவே லண்டன் நகருக்குள் தான் கடத்தி வந்த கைத்துப்பாக்கியோடு உத்தம்சிங்கும் அந்த கூட்டத்திற்கு சென்றார். கூட்டத்தில் நேருக்கு நேராக உத்தம்சிங் மைக்கேல் டயர் மீது குறிபார்த்துச் சுட்டார். டயரின் நெஞ்சை ஒரு குண்டு துளைக்க, இரண்டாயிரம் பாரத மக்களைப் படுகொலை செய்யக் காரணமாக இருந்த ஆங்கிலேயன் அங்கேயே மரணமடைந்தான். இருபது ஆண்டுகளும், உலகமெங்கும் சுற்றி, பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு நாட்டின் கறையை ஆங்கில குருதிகொண்டு துடைத்தார் உத்தம்சிங்.

ஆளுநர் டையரின் கொலை இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. மக்கள் மைக்கேல் ஓ டையரின் கொடும் செயலை மறக்கவில்லை. வழக்கம் போல் காந்திஜி அவரது செயலைக் கண்டித்தார். ஜெர்மனி வானொலி ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும் இந்தியர்கள் யானையைப் போல எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் 20 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது. பெர்லின் பத்திரிக்கை உத்தம் சிங் இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி என்று கூறியது. இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு பகத் சிங் மற்றும் உத்தம் சிங்கின் செயல் குறித்த காந்திஜியின் விமர்சனத்தைக் கண்டித்தது

லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. தன்னை ராம் முஹம்மது சிங் ஆசாத் என்று அறிமுகம் செய்துகொண்டார் உத்தம்சிங். பாரத நாட்டின் முக்கியமான மதத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது விடுதலை என்ற பொருளில் இந்தப் பெயரை அவர் பயன்படுத்தினார். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட உடனே உத்தம்சிங் வெடித்தார். “பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நீதிமன்றத்திற்குத் என்னை விசாரிக்கும் உரிமையோ தகுதியோ கிடையாது. மைக்கேல் ஓ.டயரைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. இந்த தண்டனை  அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டியதே. நான் மரணத்திற்குப் பயப்படவில்லை. என் தாய் நாட்டை விடுவிக்க உயிர் துறப்பதற்காக பெருமைப்படுகிறேன். நான் போனபிறகு என்னுடைய இடத்திற்கு  என் தேசத்தின் மக்கள் வருவார்கள்.   உங்களை அவர்கள் விரட்டுவார்கள். நீங்கள் இந்தியாவிற்கு வருவீர்கள். பிறகும் பிரிட்டனுக்குத் திரும்பி பிரபு ஆவீர்கள். நாடாளுமன்றத்திற்குப் போவீர்கள்.  நாங்கள் பிரிட்டனுக்குள் வந்தால் தூக்கில் போடுவீர்கள். ஆனால் நீங்கள் பாரத தேசத்திலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்படுவீர்கள். உங்கள் பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியம் சுக்குநூறாக உடைந்து சிதறும்.” என்று முழங்கினார்.

உத்தம்சிங்கை ‘சாகும்வரை தூக்கில் போடவேண்டும்’ என்று தீர்ப்பெழுதிப் பேனாவை முறித்தார் வெள்ளைக்கார நீதிபதி ஹட்கின்ஸன். நீதிமன்றத்திலிருந்து உடனே அவரை இழுத்துச் செல்லுமாறும் உத்தரவிட்டார். ‘வந்தேமாதரம்! ‘ என்று நீதிமன்ற  அறையே அதிரும் வகையில் முழங்கிச் சென்றார் உத்தம்சிங். 1940 ஜூலை 31ந்தேதி தூக்குத்தண்டனைக்கான நாளாகக் குறிக்கப்பட்டது. லண்டனில் உள்ள பென்டோவில் சிறையில்  அடைக்கப்பட்டிருந்த உத்தம்சிங் புன்னகை ததும்பிய முகத்துடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார். வந்தேமாதரம் சொல்லி பாரதமாதாவை வாழ்த்தினார். பிரிட்டிஷ் வழக்கப்படி வெண்ணிற துணியைப் போட்டு முகத்தை மூடி தூக்கிலிட்டனர். சொந்த தேசத்து மக்களைக் கொன்றவனை ஒரு வேள்வியைப் போல 21 ஆண்டுகள் காத்திருந்து பழிதீர்த்து விடுதலை வீரரின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது.

லண்டன் பென்டோவில் சிறை வளாகத்தில் உத்தம்சிங் புதைக்கப்பட்டு இந்திய மாவீரன் உடலால் ஆறடிமண் இங்கிலாந்தில் ஆக்கிரமிக்கப்பட்டது வரலாற்றின் மைல்கல். முப்பது ஆண்டுகளுக்குப் பின் அவரது  உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது  சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவரது  தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.

நாட்டின் சேவைக்காக பலிதானியான தியாகிகளை என்றும் நினைவில் கொள்வோம். அவர்கள் வழியில் நடப்போம். 

வியாழன், 25 டிசம்பர், 2025

டிசம்பர் 25 - வளர்ச்சி நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரச்சாரகரும், பாரதிய ஜனதா கட்சியை நிறுவிய தலைவரும், முதல் முதலாக காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஐந்தாண்டுகள் வழிநடத்திய பிரதமரும், கேட்பவர் மனதை மயக்கும் பேச்சாளரும், சிறந்த கவிஞரும் ராஜதந்திரியுமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்ததினம் இன்று.


கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதியரின் மகனாக 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் குவாலியர் நகரில் பிறந்தவர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள். அவரது தாத்தா பண்டிட் ஷ்யாம்லால் வாஜ்பாய் காலத்திலேயே அவரது குடும்பம் உத்திரப்பிரதேசத்தில் இருந்து மத்தியப்பிரதேசத்திற்கு குடிபுகுந்தது. கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் ஒரு பள்ளி ஆசிரியர். வாஜ்பாய் குவாலியரில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார். குவாலியரில்
தற்போது ராணி லக்ஷ்மிபாய் கல்லூரி என்று அறியப்படும் விக்டோரியா கல்லூரியில்  இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து சட்டம் படிக்கச் சேர்ந்த வாஜ்பாய் சுதந்திரத்தை ஒட்டி நடைபெற்ற கலவரங்களால் தனது படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார்.

சிறுவயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பில் பற்றுக் கொண்டிருந்த வாஜ்பாய், சிலகாலம் ஆர்ய சமாஜத்தின் இளைஞர் அமைப்பான ஆர்ய குமார் சபாவின் செயலாளராகவும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து தன்னை சங்கத்தின் முழுநேர ஊழியராக இணைத்துக் கொண்ட வாஜ்பாய் உத்திரப்பிரதேசத்தில் சங்கத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். தீனதயாள் உபாத்யாவோடு வாஜ்பாய் பாரதிய ஜனசங்கத்தை வளர்க்கும் பொறுப்பில் சங்கத்தால் நியமிக்கப்பட்டார். தேசசேவைக்காக அரசியலில் வாஜ்பாய் அடியெடுத்து வைத்தது அப்போதுதான். ராஷ்டிரதர்மா, பாஞ்சஜன்யா, ஸ்வதேஷ், வீர் அர்ஜுன் போன்ற ஹிந்துத்துவ பத்திரிகைகளில் வாஜ்பாய் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

1957ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் இரண்டாவது பொதுத்தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் பாலக்பூர்  தொகுதியில் இருந்து வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் மக்களவைக்கு ஒன்பது முறையும் என்று நீண்ட ஐம்பதாண்டுகால நாடாளுமன்ற உறுப்பினர் திரு வாஜ்பாய். மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் மற்றும் விதிஷா, உத்திரப்பிரதேசத்தின் பாலக்பூர், லக்நோ, புதுடெல்லி என்று நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மக்களவைக்கு வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாயின் பாராளுமன்ற விவாதங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அன்றய பிரதமர் நேரு வாஜ்பாய் ஒருகாலத்தில் பாரதத்தின் பிரதமராக வருவார் என்று சரியாகக் கணித்தார்.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாவின் மரணத்திற்குப் பின் பாரதிய ஜனசங்கத்தின் தலைமை வாஜ்பாயை வந்தடைந்தது. அத்வானி, பால்ராஜ் மதோக் மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோர் வாஜ்பாயின் துணைக்கு வந்தனர். 1975ஆம் ஆண்டு இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார். பல்வேறு தலைவர்களோடு வாஜ்பாயும் சிறையானார். நெருக்கடி நிலை விலக்கிக்கொண்டு பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனதா கட்சி என்ற பெயரில் ஒருங்கிணைந்தன. அந்த கூட்டமைப்பில் பாரதிய ஜனசங்கமும் இணைந்தது. தேர்தலில் வெற்றிபெற்ற வாஜ்பாய் மொரார்ஜி தலைமையில் அமைந்த ஆட்சியில் வெளியுறவுத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இரண்டே ஆண்டுகளில் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ, அந்த சோதனை தோல்வியில் முடிந்தது.

பழைய ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய அவதாரம் கண்டது. கட்சியின் முதல் தலைவராக வாஜ்பாய் நியமிக்கப்பட்டார். மெதுவாக ஆனால் மிக உறுதியாக பாஜக வளரத் தொடங்கியது. வாஜ்பாயின் பேச்சாற்றலும், அத்வானியின் செயல்திறனும் பல்வேறு இளம்தலைமுறையினரின் கடின உழைப்பும் கட்சியை வளர்த்தெடுத்து. அடுத்தடுத்த தேர்தல்களில் கூடுதலான இடங்களைக் கைப்பற்றி 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிக அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக பாஜக விளங்கியது. அன்றய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் ஷர்மா வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்தார். முதல்முறையாக வாஜ்பாய் நாட்டின் பத்தாவது பிரதமராகப் பதவியேற்றார். செங்கோட்டையில் காவிக்கொடி பறக்கத் தொடங்கியது. ஆனால் நாடாளுமன்றத்தில் பாஜகவால் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியவில்லை. வாஜ்பாய் பதவி விலகினார். " மிக விரைவில் தனி பெரும்பான்மையோடு நாங்கள் ஆட்சி அமைப்போம், மத்திய அரசில் மட்டுமல்ல மாநிலங்கள் அனைத்திலும் எங்கள் ஆட்சி இருக்கும், இதனை விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள்" என்று வாஜ்பாய் சூளுரைத்தார்.

சிறுபான்மை அரசை தேவ கௌடாவும் அவரைத் தொடர்ந்து ஐ கே குஜராலும் அமைத்தனர். இரண்டு ஆட்சியையும் காங்கிரஸ் கவிழ்த்தது. மீண்டும் ஒரு தேர்தல் திணிக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அரசு அமைந்தது. மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார். ஆனால் ஜெயலலிதா தனது ஆதரவை விலக்கிக்கொள்ள மீண்டும் ஆட்சி கவிழ்ந்தது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு இணைந்து பெரும்பான்மை பலத்தோடு மூன்றாம் முறையாக வாஜ்பாய் பிரதமரானார். முழுமையாக ஐந்தாண்டுகள் அவர் ஆட்சி செய்தார். இதன்மூலம் தனது பதவிக்காலத்தை முழுவதும் ஆட்சி செய்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார்.

ராஜஸ்தான் பாலைவனத்தில் பொக்ரான் பகுதியில் அணுகுண்டு சோதனையை நடத்தி, நாட்டின் வலிமையை வாஜ்பாய் உலகமெங்கும் பறைசாற்றினார். கார்கில் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டும் வரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என்று உறுதியாக இருந்தார். மேலை நாடுகள் பாரதத்தின் மீது விதித்த பொருளாதாரத் தடையை உடைத்து நாட்டின் ஆன்ம பலத்தையும் பொருளாதார பலத்தையும் நிரூபித்தார். நாடெங்கும் நான்குவழிச் சாலைகளை அமைத்து பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலினார். அவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பெரும்வளர்ச்சியைச் சந்தித்தது.

ஆனாலும் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடங்களை பெறவில்லை. வயதின் காரணமாகவும், உடல்நிலையில் காரணமாகவும் வாஜ்பாய் பொதுவாழ்வில் இருந்து விலகினார். பலகாலமாக இருந்த நீரழிவு நோயால் அவதிப்பட்ட வாஜ்பாய் 2009ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். ஆற்றொழுக்குப் போல பொழியும் அவரது பேச்சு அதனால் தடைபெற்றது. நீண்டகாலம் உடல்நலம் குன்றி இருந்த வாஜ்பாய் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் நாள் காலமானார். அடுத்த நாள் அரசு மரியாதையோடு பீரங்கி குண்டுகள் முழங்க வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா எரியூட்ட அந்த தேச பக்தர் நாட்டின் காற்றோடு கலந்தார்.

நாட்டின் சேவகன் எப்படி வாழவேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்வு நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

திங்கள், 22 டிசம்பர், 2025

டிசம்பர் 22 - அன்னை சாரதா தேவி - அவதார தினம்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்கைத்துணையாகவும், முதல் சீடராகவும் ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த துறவியருக்கும் மற்றும் பல பக்தர்களுக்கும் அன்னையாகவும் போற்றி வணங்கப்படும் அன்னை சாரதா தேவியரின் அவதாரதினம் இன்று.


இன்றய மேற்கு வங்காளத்தில் உள்ள ஜெயராம்பட்டி என்ற சிறு கிராமத்தில் ராமசந்திர முகோபாத்யாய - ஷ்யாம சுந்தரி தேவி தம்பதியரின் முதல் மகவாக 1853ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாள் அவதரித்தவர் சாரதா தேவி. அவரின் இயற்பெயர் சாரதாமணி என்பதாகும். கங்கை பாயும் செழிப்பான பூமியை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து மக்களை வறுமையின் பிடியில் வாட வைத்திருந்த காலம் அது. வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றில்தான் அன்னையும் பிறந்தார். அவர் பள்ளி சென்று படிக்கவில்லை. ஆனால் எல்லா ஹிந்து குடும்பங்களையும் போல இதிகாசங்களையும் வாழ்வியல் பாடங்களும் அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. சிலை வடிவில் ஆண்டவனை அமைத்து, பூஜை செய்வது அவரின் முக்கியமான வேலையாக இருந்தது.

அன்னையின் வாழ்வு கொல்கத்தா நகரில் இருந்த கதாகதரோடு இணைக்கப்பட்டு இருந்தது. தக்ஷிணேஸ்வர் கோவிலில் ஆன்ம சாதனையில் மூழ்கி இருந்தார் கதாகதர், அவரின் அருமை தெரியாத அவரின் குடும்பத்தினர் திருமணம் ஆகிவிட்டால் ஆவர் நம்மைப்போல உலகவாழ்வில் உழலும் மனிதராக மாறி விடுவார் என்று எண்ணி அதற்கான வேலையில் ஈடுபடத் தொடங்கினர். கதாகாதர் சாரதாமணிதான் தனக்கு சரியான துணை என்று கூற, அந்தத் திருமணம் நடைபெற்றது. கதாகாதர்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று அறியப்பட்ட ஜீவன் முக்தர். விவேகானந்தர் என்ற ஞானச்சுடரை இந்த உலகுக்கு கொடுத்த குருநாதர். திருமணம் நடைபெறும் போது சாரதாமணியின் வயது ஆறுதான். ராமகிருஷ்ணரின் வயது இருபத்தி மூன்று. அந்தக் கால வழக்கப்படி திருமணம் ஆன பிறகும் தனது தந்தையின் வீட்டிலே இருந்த அன்னை, தனது பதினெட்டாம் வயதில் தன் கணவரோடு இணைந்து கொண்டார். ராமகிருஷ்ணர் சாதாரண மனிதர் இல்லை என்பதை புரிந்து கொண்டு அவரின் முதல் சீடராக, தொண்டராக அவர் தன் வாழ்க்கையை நடத்தினார்.

இனிப்பை நோக்கி எறும்பு வருவது போல, ராமகிருஷ்ணரை நோக்கி பல்வேறு சீடர்கள் வரத் தொடங்கி இருந்தார்கள். தினம்தோறும் தனது தியானத்தையும், பூஜைகளையும் முடித்து ராமகிருஷ்ணருக்கும் அவரது சீடர்களுக்கும் உணவு தயாரித்து உபசரிப்பது அன்னையின் பணியாக ஆனது. இல்வாழ்வில் ஈடுபடாது இருந்த அன்னைக்கு ஆயிரமாயிரம் மகன்கள் கிடைத்தார்கள். பராசக்தியின் வடிவமாகவே அன்னையைக் கண்ட ராமகிருஷ்ணர் அன்னையையே பீடத்தில் அமர்த்தி மாதா திரிபுரசுந்தரியாக வரித்து பூஜை செய்வதும் உண்டு. ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் விதவைக்கோலம் பூணத் தொடங்கிய அன்னையின் முன் ராமகிருஷ்ணர் தோன்றி " நான் எங்கே சென்று விட்டேன், இங்கேதானே ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு சென்றுளேன்" என்று கூறி அதனை தடுத்து விட்டார். ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அப்போதுதான் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தின் ஆணிவேராக அன்னை செயல்பட்டார்.

தனது பெண் சீடர்கள் தொடர அன்னை காசி, மதுரா மற்றும் அயோத்தி ஆகிய புனித நகரங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். பின்னர் ராமகிருஷ்ணர் பிறந்த கமர்புக்கூர் கிராமத்தில் ஓராண்டு தங்கி இருந்தார். அங்கே இருந்தவர்களுக்கு அன்னையின் அருமை தெரியவில்லை. அவரையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அன்னையின் நிலையைத் தெரிந்து கொண்ட ராமகிருஷ்ணரின் சீடர்கள் அன்னையை மீண்டும் கொல்கத்தாவிற்கே அழைத்து வந்தனர். அங்கே பல்வேறு மனிதர்கள் அன்னையின் சீடர்களாக ஆனார்கள். ராமகிருஷ்ண மடத்து துறவிகளை சமுதாய சேவைக்கு தூண்டியது அன்னையின் பெரும் கருணையேயாகும். அமெரிக்கா நாட்டுக்கு அனைத்து சமய மாநாட்டுக்கு செல்லலாமா என்ற கேள்விக்கு விடையளித்து விவேகானந்தரை அங்கே அனுப்பி வைத்ததும் அன்னையே.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரத ஞானத்தை விவேகானந்தர் பரப்பினார். அங்கே அவருக்கு பல்வேறு அயல்நாட்டினர் சீடர்களாக மாறி பாரதம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் தனது குழந்தைகளாக ஏற்று தனது கருணையெனும் அமுதமழையில் அன்னை ஆசீர்வதித்தார். மிக எளிய சொற்களைக் கொண்டு ஆழ்ந்த கருத்துக்களை தெரிவிக்கும் திறன் அவருக்கு இயல்பாகவே இருந்தது. கனவிலே அன்னை தனக்கு மந்திர உபதேசம் செய்தார் என்று பலர் கூறுவதும் உண்டு.

"உங்களுக்கு நிம்மதி வேண்டும் என்றால் பிறரின் குறைகளை பார்ப்பதை நிறுத்துங்கள், அதற்குப் பதில் உங்கள் குறைகளை கண்டறியுங்கள். உலகம் முழுவதையும் உங்கள் உறவு என்று நினைக்கப் பழகுங்கள். உலகில் யாரும் உங்களுக்கு அந்நியர் அல்ல, அனைவரும் உறவினர்கள்தான்" இது அன்னை அளித்த உபதேசம். பெண் கல்வியின் முக்கியத்தை அறிந்த அன்னை, தனது சீடர்களை பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்க வைத்தார்.

ஜீவன் முக்தரின் வாழ்க்கைத்துணையாக, தன்னலத்தை ஒழித்த துறவியர் வரிசையின் ஆணிவேராக, உலக மக்களின் தாயாக விளங்கிய அன்னை சாரதாதேவி 1920ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் தனது உடல்கூட்டை உதறி பரம்பொருளோடு கலந்தார்.

அன்னையின் நினைவு நம்மை எல்லாப் பொழுதும் நல்வழியில் செலுத்தட்டும். எத்தனையோ ஞானிகள் இந்த மண்ணில் அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்.  

வெள்ளி, 19 டிசம்பர், 2025

ஜனவரி 19 – ஓஷோ நினைவுநாள்

ஓஷோ - பிறக்கவும் இல்லை - இறக்கவும் இல்லை -

1931ஆம் வருடம் டிசம்பர் 11 முதல் 1990ஆம் வருடம் ஜனவரி 19 வரை இந்த பூமிக்கு வருகை புரிந்தார்.

யாரது சமாதியில் இப்படி எழுதி நாம் பார்த்திருக்கமாட்டோம். இதுதான் ஆச்சார்ய ரஜனீஷ் என்றும் பகவான் ஓஷோ என்றும் அறியப்படுபவரை பற்றிய சித்திரம்.

ஆச்சாரிய ரஜனீஷ் 1931ஆம் வருடம் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு சமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ரஜனீஷ் சந்திரமோகன் என்பதாகும். சிறுவயதில் இருந்தே தியானத்தில் ஈடுபட ரஜனீஷ் தனது இருபத்தி ஒன்றாம் வயதில் 1953ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் நாள் ஞானம் அடைந்ததாக அறிவித்தார். 

தத்துவத்துறையில் முதுகலை பட்டம் பெற்ற ரஜனீஷ், ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். அதே காலகட்டத்தில் அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தத்துவ உரைகளை நிகழ்த்தினார். அன்றய காலகட்டத்தில் அரசு பின்பற்றிய சோசலிச பொருளாதாரக் கொள்கையை அவர் நிராகரித்து, இந்தியா முன்னேறவேண்டுமானால் அது அறிவியல் சிந்தனை, முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மூலமாகவே நடக்கும் என்று கூறி வந்தார்.

கீழைத் தத்துவத்தில் தேர்ச்சியும் ஆங்கிலத்தில் புலமையும் பெற்றிருந்த ஆச்சரிய ரஜனீஷை பலர் பின்பற்ற ஆரம்பித்தனர். .இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இவரது சீடர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.  தனது பல்கலைக்கழக வேலையைத் துறந்த ரஜனீஷ் 1974 ஆம் ஆண்டு பூனா நகரில் தனது ஆசிரமத்தைத் தொடங்கினார்.

அதன்பிறகு அமெரிக்காவில் 1981ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தை தொடங்கிய ரஜனீஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. எந்தவிதமான ஆணையும் இன்றி அமெரிக்க காவல்துறை ரஜனீஷை பனிரெண்டு நாட்கள் சிறையில் அடைந்திருந்தது. அங்கே அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 

அமெரிக்காவின் தூண்டுதலால் பல்வேறு நாடுகள் அவரைத் தங்கள் நாடுகளுக்கு உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டன.  1986ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் ரஜனீஷ் பாரதம் வந்து சேர்ந்தார்.  1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் நாள் தனது ஐம்பத்து எட்டாம் வயதில் அவர் மரணம் அடைந்தார்.

இவரது பேச்சுகளும் நூல்களும் இந்திய சிந்தனைப் போக்கில் ஒரு புது விளக்கத்தை அளித்தது என்றால் அது மிகையில்லை

வியாழன், 18 டிசம்பர், 2025

டிசம்பர் 18 - சைவநெறிக் காவலர் நல்லூர் ஆறுமுக நாவலர் அவதார தினம்

தமிழ் உரைநடையின் தந்தை, சைவ சமயத்தின் ஐந்தாம் சமயக் குரவர்  என்று போற்றப்படுபவரும்
நாயனார் நாற்குரவர் நாவலர் தென் ஞாலமிசை 
மேயினார் ஈசனருள் மேல் என்று சி வை தாமோதரன் பிள்ளையால் போற்றப்பட்ட நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களின் திருவவதார தினம் இன்று.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இலங்கையில் வெள்ளை ஏகாதிபத்தியம் வலுவாக நிலைகொண்டு இருந்தது. அவர்களின் படைகளில் முக்கியமான பாதிரிபடை இலங்கை முழுவதையும் கிருத்துவமயமாகும் பணியில் மும்முரமாக இயங்கிக்கொண்டு இருந்தது.கல்வி வாய்ப்புக்காகவும், அரச ஊழியத்துக்காகவும் தமிழ்மக்கள் சைவ சமயத்தைவிட்டு கிறித்துவ மதத்திற்கு மாறிக் கொண்டிருந்தார்கள். தமிழ்க் கல்வி புறக்கணிக்கப்பட்டு ஆங்கில மோகம் மக்களை ஆட்டிப்படைத்தது. அப்போதுதான் தமிழையும் சைவத்தையும் புதுப்பொலிவோடு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தென்னாடுடைய ஈசன் கருணையால் ஆறுமுகநாவலர் அவதரித்தார்.

யாழ்ப்பாணத்தின் நல்லூர் என்ற பகுதியில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையாரின் திருமகனாக 1822ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் ஆறுமுக நாவலர் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆறுமுகம் பிள்ளை என்பதாகும். நாவலரின் குடும்பமே தமிழில் தோய்ந்த குடும்பம். இவர் உடன்பிறந்தவர்கள் நான்கு சகோதர்களும் மூன்று சகோதரிகளும் ஆவார்கள்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும் , சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். ஆசிரியராகப் பணியேற்றதோடு, அப்பாடசாலை நிறுவுனரான பேர்சிவல் பாதிரியாரின் கிறிஸ்தவ வைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிக்கு உறுதுணையாக செயற்பட்டார்.

ஆனாலும் சைவ சமயத்தை இழித்தும் பழித்தும் கூறி மக்களை கிருத்தவ மதத்தின் பக்கம் திருப்பும் பாதிரிகளின் செயலைப் பார்த்து மனம் நொந்த ஆறுமுகம், சைவத்தின் மேன்மையையும், தமிழின் இனிமையையும் மக்கள் அறிந்து கொள்ளவே தனது வாழ்வை அர்பணிக்கத் தீர்மானித்தார். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இதனால் பலரும் சிவதீட்சை பெற்றனர். அசைவ உணவைத் தவிர்த்தனர். இவரது முயற்சியால் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறத் தொடங்கின.

கல்வித் தளத்தில் ஏற்பட்ட அறிவியல் மாற்றங்களை அவர் வரவேற்றார். கிறித்தவர்கள் தங்கள் மதத்தைப் பரப்பச்  செய்யக் கையாண்ட கருவிகள் ஒவ்வொன்றையும் நாவலர் சைவத்தை வளர்க்கக் கையில் ஏந்தினார்!  கிறித்தவ பாதிரிமார்கள் சமயம் வளர்க்க பல பள்ளிகள் நிறுவினார்கள். நாவலரும் அரும்பாடு பட்டு சைவப் பள்ளிகள்நிறுவினார். அந்தப் பள்ளிகளில் சமய சாத்திரங்கள் (தேவார திருவாசகங்கள், புராணங்கள், நாலடியார், திருக்குறள், மெய்கண்ட சாத்திரங்கள்) படிப்பிப்பதற்கு ஒரு பாடத் திட்டத்தையே வகுத்தார். அத்தோடு மேற்குநாட்டுச் சாத்திரங்களான வரலாறு, பூகோளம், கணிதம், இயற்பியல், வேற்பியல் கற்பிக்க ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வீடுதோறும் பிடி அரிசி திரட்டும் திட்டத்தை உருவாக்கினார்.

கிறித்தவர்கள் தங்கள் மதபோதனைகளைப் பரப்ப அச்சு யந்திரசாலைகளை அமைத்து நிறையப் புத்தகங்களை அச்சிட்டு மக்களிடம் கொடுத்தார்கள். நாவலரும் அவ்வாறே அச்சுக் கூடங்களை யாழ்ப்பாணத்திலும் சிதம்பரத்திலும் நிறுவி ஓலைகளில் இருந்த சைவசமய நூல்களை ஒப்புநோக்கி, பாடபேதங்கள் நீக்கிப் பதிப்பித்து வெளியிட்டார்.

கிறித்தவர்கள் வினா விடை பாணியில் (catechism) சமயக் கோட்பாடுகளை விளக்கியது போல் நாவலரும் சைவ வினாவிடை நூல்களை எழுதினார். பல நூல்களுக்கு உரை எழுதினார். அவரது நண்பர்கள், மாணாக்கர்கள் எழுதிய நூல்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தார். அல்லது பதிப்பிக்க உதவினார். நாவலரது உழைப்பால் வெளிவந்த நூல்களுக்கு அளவில்லை.

நன்னூல் விருத்தியுரை
நன்னூல் காண்டிகையுரை
நைடதவுரை
சூடாமணி நிகண்டுரை
திருமுருகாற்றுப்படை உரை
இலக்கணக் கொத்து
திருவிளையாடற புராணம்
சிவ பூசாவிதி
பால பாடம் (1.2.3.4)
ஆத்திசூடி உரை
கொன்றை வேந்தன் உரை
மருதூரந்தாதியுரை
கோயிற்புராண உரை
சைவ சமயநெறி உரை
கந்தபுராணம்
பெரியபுராணம் (உரைநடை)
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
திருக்கோவையாருரை
தொல்காப்பியம்
சவுந்தரிய லகரி
சைவ எல்லப்ப நாவலர்
பாரதம்
கொலை மறுத்தல்
வைராக்கிய தீபம்
வைராக்கிய சதகம்
திருவுந்தியார்
தாயுமானவ சுவாமிகள் பாடல்கள்

திருவாடுதுறை ஆதீனத்தில் இவர் ஆற்றிய உரையைக் கேட்டு மகிழ்ந்த அன்றய குரு சன்னிதானம் இவருக்கு நாவலர் என்ற பட்டத்தை வழங்கினார்.

1870-இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.

1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.

செய்யுள் வடிவில் இருந்த தமிழ் இலக்கிய மரபை வசன நடைக்கு மாற்றி காற்புள்ளி, அரைப்புள்ளி, நிறுத்தற்குறிகளோடு எழுதும் மரபைத் தொடங்கி வைத்தவர் ஆறுமுக நாவலரே ஆவார். இன்றய தமிழ் மேடைப்பேச்சுக்கு ஆரம்பமே இவர் செய்துகொண்டு வந்த பிரசாங்கங்கள்தான்.

1879ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் நாள் ஆறுமுக நாவலர் சிவபதம் அடைந்தார். ஐம்பத்தி ஆறு ஆண்டுகளே வாழ்ந்த ஆறுமுக நாவலர்  பிறந்திரரேல் சைவசமயத்திற்கும் தமிழுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை நாவலர் சிவபதமடைந்தபோது சி.வை. தாமோதரம்பிள்ளை எழுதிய இன்னொரு பாடல் இனிது விளக்குகிறது.

நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேப்ர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே அறை.’

சைவநெறிக் காவலராக விளங்கிய ஆறுமுக நாவலரின் நினைவைப் போற்றுவோம். மத மாற்றத்தை எப்போதும் தடுப்போம். தொன்மையான சனாதன தர்மத்தின் கருத்துக்களை எல்லோரிடமும் பரப்புவோம். 

புதன், 17 டிசம்பர், 2025

டிசம்பர் 17 - காங்கிரஸ் வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா நினைவுநாள்

ஆந்திரப்பிரதேசத்தின் முக்கியமான காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியமான தலைவராகத் திகழ்ந்த பட்டாபி சீதாராமையாவின் நினைவுநாள் இன்று.


ஆந்திரபிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு நியோகி ப்ராஹ்மண குடும்பத்தில் 1880ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் பிறந்தவர் பட்டாபி சீதாராமய்யா. தனது கல்லூரிப் படிப்பை சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் முடித்த சீதாராமையா பின்னர் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் மசூலிப் பட்டினத்தில் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். 1905ஆம் ஆண்டு கர்சான் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிளந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் குதித்தனர். சீதாராமையாவும் தனது மருத்துவ சேவையை விட்டு விட்டு அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் லால் - பால் - பால் - எனப்படும் லாலா லஜபதிராய் - பால கங்காதர திலகர் - பிபின் சந்திரபால் ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட சீதாராமையா பின்னர் காந்தியின் தொண்டராக மாறினார்.

1912ஆம் ஆண்டிலேயே  சென்னை ராஜதானியில் இருந்து பிரிக்கப்பட்டு தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காகத் தனியான மாநிலம் அமைக்கப்படவேண்டும் என்று பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். அதனைத் தொடர்ந்து லக்நோ நகரில் 1916ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஆந்திராவிற்காக தனியான காங்கிரஸ் கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்று வாதாடி, அதனை நிறைவேற்றவும் செய்தார். ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் சீதாராமையா இருந்தார்.

1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு முக்கியமான ஒன்றாகும். காங்கிரஸின் தலைவர் பதவிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியில் ஈடுபட்டார். காந்தியின் ஆதரவு சீதாராமையாவிற்கு இருந்தது. ஆனாலும் நேதாஜி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று காந்தி அறிவித்தார்.

மசூலிப்பட்டின கடற்கரையில் தடையை மீறி உப்பு எடுக்கும் போராட்டத்திற்காகவுவம் பின்னர் சாராயக்கடை மறியல் போராட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் தனிநபர் சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டும் கைதானார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு காந்தி அறிவித்தார். உடனடியாக அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அதில் சீதாராமையாவும் ஒருவர். மூன்றாண்டுகள் அவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அஹமத்நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். சிறை வாழ்வில் அவர் எழுதிய நாள்குறிப்புகள் பின்னர் பூக்களும் கற்களும் என்ற பெயரில் வெளியானது.

1948ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் சீதாராமையா பதவி வகித்தார். மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் வரலாற்றை பட்டாபி சீதாராமையா எழுதினார். அதுவே அந்த இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரலாறு. 1935ஆம் ஆண்டு முதல் பகுதியும் 1947ஆம் ஆண்டு இரண்டாம் பகுதியும் என்று இரண்டு தொகுதியாக வெளியான முக்கியமான ஆவணம் இது.

சுதேசி இயக்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த சீதாராமையா ஆந்திரா இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் கிருஷ்ணா மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகியவற்றையும் உருவாக்கினார். புகழ்பெற்ற ஆந்திரா வங்கி இவரால் உருவாக்கப்பட்டதுதான்.

நாட்டின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான பட்டாபி சீதாராமையா 1959ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் நாள் காலமானார்.