திங்கள், 23 மார்ச், 2020

அரசியல் வானில் ஒரு இளம்தாரகை - ஸ்ம்ரிதி இராணி மார்ச் 23.

எந்த ஒரு நிறுவனமோ, இயக்கமோ அல்லது அரசியல் கட்சியோ நெடுங்காலம் நீடித்து இருப்பதற்கு ஒரு வழிகாட்டும் கொள்கையும் அதனால் ஈடுபட்டு அதில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர் பட்டாளமும், அவர்களை வழிகாட்டி அவர்களைத் தலைவர்களாக மாற்றும் மூத்த நிர்வாகிகளும் தேவை. அப்படி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்திலும் பின்னர் பாரதிய ஜனதா கட்சியிலும் அடுத்த தலைமுறை தலைவர்களில் முக்கியமானவராக விளங்கும் ஸ்ம்ரிதி இராணி அவர்களின் பிறந்தநாள் இன்று


அஜய் குமார் மல்ஹோத்ரா - ஷிபானி பக்ச்சி தம்பதியரின் மூத்த மகளாக ஸ்ம்ரிதி 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் நாள் பிறந்தார். ஸ்ம்ரிதியின் தாத்தா ஒரு ஸ்வயம்சேவக், அவர் தாயார் ஜனசங்கத்தின் உறுப்பினர். எனவே இயல்பாகவே அவருக்கு அரசியல் ஈடுபாடு இருந்ததில் வியப்பில்லை.

சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்த ஸ்ம்ரிதி, தனது சிறு வயதிலேயே அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்து பொருளீட்டத் தொடங்கினார். 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பத்து போட்டியாளர்ககளில் ஒருவராகத் தேர்வானார். அதனைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடிக்க ஸ்ம்ரிதி மும்பை நகருக்கு குடியேறினார்.

ஊச் லா லா லா என்ற தொலைக்காட்சித் தொடரை தொகுத்தளிக்கத் தொடங்கிய ஸ்ம்ரிதி, ஏக்தா கபூர் தயாரித்த குன்கி சாஸ் பி கபி பஹு தி என்ற தொலைக்காட்சித் தொடரில் துளசி விரானி என்ற பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்தத் தொடரின் வெற்றி அவரை வட மாநிலங்களில் அறியப்பட்ட முகமாக மாற்றியது. அந்தக் காலகட்டத்தில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஸ்ம்ரிதி தயாரித்து வழங்கினார்.

2003ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஸ்ம்ரிதி, அடுத்த ஆண்டே மஹாராஷ்டிரா மாநில இளைஞர் அணியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கபில் சிபிலை எதிர்த்துப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

ஆனால் இந்த தற்காலிகப் பின்னடைவு அவரின் அரசியல் வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே. தனது தொடர்ந்த உழைப்பினால் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராகவும், பெண்கள் அணியின் தேசியத்தலைவராகவும் அவரை கட்சி நியமித்தது. 2011ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் சார்பாக ஸ்ம்ரிதி இராணி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்ம்ரிதி இராணி களமிறங்கினார்.

1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் அதுவரை 14 தேர்தல்கள் நடைபெற்று இருந்தன. அதில் ஒரு முறை ஜனதா கட்சியும், ஒரு முறை பாஜகவும் வெற்றி பெற்று இருந்தது. 12 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருந்தது. அதிலும் நேரு குடும்பத்தின் சொந்த தொகுதியாக சஞ்சய் காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் 1980ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக (1988 தேர்தல் தவிர ) அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று இருந்தனர். ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளராக இருந்த தொகுதியில் அவரை எதிர்த்து ஸ்ம்ரிதி இராணி போட்டியிட்டார். ஒருலட்ச ஒட்டு வித்தியாசத்தில் ராகுல் அப்போது வெற்றி பெற்றார்.

ஆனால் அடுத்த ஐந்தாண்டு காலகட்டத்தில் ஸ்ம்ரிதி இராணி அந்தத் தொகுதியைச் சுற்றிச் சுற்றி வந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். 2019ஆம் ஆண்டு மீண்டும் ராகுலை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிட்டார். வெற்றிபெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்ட ராகுல் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். எதிர்பார்த்தது போல ராகுல் காந்தியைவிட ஐம்பத்தைந்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ஸ்ம்ரிதி அமேதி தொகுதியைக் கைப்பற்றினார்.

2014ஆம் ஆண்டு அமைந்த மோதி தலைமையிலான அரசில் மனிதவள மேம்பாட்டுத்துறை, அதனைத் தொடர்ந்து செய்தித் தொடர்புத் துறையின் கூடுதல் பொறுப்பு, ஜவுளித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராகவும், 2019ஆம் ஆண்டில் அமைந்த அமைச்சரவையில் ஜவுளிதுறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் ஸ்ம்ரிதி இராணி பணியாற்றி வருகிறார்.

ஸுபின் இராணி என்ற தொழிலதிபரை மணந்து கொண்ட ஸ்ம்ரிதி இராணிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்திய அரசியல் வானில் 44 வயது என்பது மிக இளைய வயதுதான். இன்னும் நீண்ட கால அரசியல் வாழ்வு ஸ்ம்ரிதி இராணிக்கு உள்ளது என்பதுதான் உண்மை.

பாரத நாட்டின் சேவையில் ஸ்ம்ரிதி இரானியின் பங்கு இன்னும் வீரியமாக இருக்கட்டும் என்று ஒரே இந்தியா தளம் மனமார வாழ்த்துகிறது.