சனி, 29 பிப்ரவரி, 2020

மொரார்ஜி தேசாய்பிறந்தநாள் - பிப்ரவரி 29

காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமரான திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் பிறந்தநாள் இன்று.

1896ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் பல்சார் மாவட்டத்தில் ஒரு ஆசிரியரின் மூத்த மகனாகப் பிறந்தவர் தேசாய் அவர்கள். தனது பள்ளிப்படிப்பை குஜராத்திலும், பட்டப்படிப்பை மும்பையில் முடித்த இவர் அரசு வேலையில் இணைந்தார். கோத்ரா மாவட்டத்தில் துணை ஆட்சியாளராக இருந்த இவர், காந்தியின் அழைப்பை ஏற்று பணியைத் துறந்து இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கு கொண்டு பல்லாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். சுதந்திரத்துக்கு முன்பு பிளவு படாத பம்பாய் ராஜதானியின் வருவாய் மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1952ஆம் ஆண்டு பம்பாய் ராஜதானியின் இரண்டாவது முதலமைச்சராகப் பணியாற்றினார்.

குராஜாத்தில் உள்ள சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 1957ஆம் ஆண்டில் இருந்து ஐந்துமுறை ( இருபத்தி மூன்று ஆண்டுகள்)  வெற்றிபெற்றார். நேருவின் அமைச்சரவையில் 1958ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை நிதியமைச்சராகப் பணியாற்றினார். நேருவின் மறைவிற்குப் பிறகு பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தேசாய், கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் லால் பகதூர் சாஸ்திரியை தேர்ந்தெடுத்தால், அந்த வாய்ப்பை நழுவவிட்டார்.

சாஸ்திரியின் அகால மரணத்திற்குப் பிறகு மீண்டும் பிரதமர் போட்டியில் குதித்த தேசாய், நேருவின் மகளான இந்திரா காந்தியிடம் தோல்வியுற்றார். ஆனால் இந்திராவின் அமைச்சரவையில் 1967 முதல் 1969வரை துணைப்பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பணியாற்றனார்.

வங்கிகளைத் தேசியமயமாக்க இந்திரா முடிவு செய்து தேசாயிடமிருந்து நிதித்துறையை பறித்தார். ஆனாலும் துணைப்பிரதமராக பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதை மறுத்து தேசாய் மந்திரிசபையில் இருந்து வெளியேறினார். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. காங்கிரஸின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டி வேட்பாளரை நிறுத்தி அவரை இந்திரா வெற்றிபெறவைத்தார். கட்சி பழைய தலைவர்களை முன்னிறுத்தி சிண்டிகேட் எனவும் இந்திராவை முன்னிறுத்தி இண்டிகேட் எனவும் இரண்டானது. அதைத்தொடர்ந்து வந்த தேர்தலில் இந்திரா பெரும் வெற்றிபெற்றார்.

நேரு குடும்பத்தின் ஆட்சிக்கான அட்சாரமாக எழுபதுகளின் தொடக்கம் இருந்தது. பிரதமர் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் முக்கியமான அதிகாரமையமாக உருவானார். நாடெங்கும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமானது. அரசியலை விட்டு விலகியிருந்த லோக்நாயக் ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் மாணவர்கள் ஓன்று திரண்டனர். இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. பிரச்சனைகளை சமாளிக்க இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார்.

சுதந்திரம் அடைந்து முப்பது ஆண்டுகளுக்கு உள்ளாக இந்தியா மீண்டும் தனது ஜனநாயக உரிமைகளை இழந்தது. அநேகமாக எல்லா எதிர்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திராவே இந்தியா என்று இந்திரா காங்கிரஸின் தலைவர்கள் கோஷமிட்ட ஆரம்பித்தனர். பத்திரிகைகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. அரசை விமர்சிக்கும் எந்த செய்தியும் பிரசுரிக்கும் நிலை இல்லாமல் ஆனது.

1977ஆம் ஆண்டு திடீர் என்று இந்திரா நெருக்கடி நிலையை விலக்கிக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார். ஜெயப்ரகாஷ் நாராயணனின் வழிகாட்டலில் பெருவாரியான எதிர்க்கட்சிகள் இணைத்து ஜனதா கட்சி என்ற பெயரில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றன. நாட்டின் நான்காவது பிரதமராக, காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராக தனது எண்பத்தி ஒன்றாம் வயதில் மொரார்ஜி தேசாய் தேர்வானார்.

உள்கட்சி பூசலால் ஜனதா கட்சியின் ஆட்சி கவிந்தது. 1980ஆம் ஆண்டு நேரடி அரசியலில் இருந்து தேசாய் விலகிக்கொண்டார்.
வாழ்நாள் முழுவதும் உண்மையான காந்தியவாதியாக இருந்த தேசாய் மிக எளிமையான வாழ்வை மேற்கொண்டார். நீண்ட அரசியல் வாழ்வில் அவரது எதிரிகள்கூட அவர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியவில்லை.

அரசியல் வாழ்வில் இருந்து விலகிய பிறகு, தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாத காரணத்தால் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்றால் இன்றய தலைமுறையால் அதனை நம்பவே  முடியாது.

இந்திய அரசு தேசாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி மரியாதை செலுத்தியது. பாகிஸ்தான் அரசு தனது உயரிய விருதான நிஷான் ஹி பாகிஸ்தான் விருதை அவருக்கு வழங்கியது

தனது 99 ஆம் வயதில் 1995 ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் மும்பையில் தேசாய் காலமானார்.

இந்த நாளில் தேசாயைப் போல ஒழுக்கமானவராக இருப்போம் என்று உறுதி பூணுவோம்.  

வியாழன், 27 பிப்ரவரி, 2020

நானாஜி தேஷ்முக் நினைவுநாள் - பிப்ரவரி 27

தான் உண்மை என்று நம்பும் கொள்கைக்காக எல்லா சுகங்களைளையும் துறந்து, மக்களின் பணிக்காக தங்களை முழுவதுமாக அர்பணித்துக்கொள்ளும் தனிமனிதர்கள் மீண்டும் மீண்டும் பாரத மண்ணில் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். எந்த அங்கீகாரத்தை, புகழை, விளம்பர வெளிச்சத்தை விரும்பாத அப்படியான மகோன்னதமான மனிதர்களில் முக்கியமானவரான சந்திகதாஸ் அமிர்தராவ் தேஷ்முக் என்ற  திரு நானாஜி தேஷ்முக் அவர்களின் நினைவுநாள் இன்று.



1916ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கடோலி என்ற கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் நானாஜி. வறுமை வாட்டியபோதும், காய்கறிகள் விற்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தனது படிப்பை தொடர்ந்தவர் இவர். ஷிகர் சமஸ்தான மன்னர் அளித்த உதவித்தொகையைக் கொண்டு தனது மேல்படிப்பை பிலானிலில் உள்ள பிர்லா கல்லூரியில் முடித்தார்.

சங்கத்தின் நிறுவனர் டாக்டர்ஜி அவர்களோடு நெருங்கிய பழகிய குடும்பத்தைச் சார்ந்தவர் திரு தேஷ்முக். பல்வேறு ஸ்வயம்சேவகர்கள் போலவே மிக இள வயதிலேயே இவரும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். படிப்பை முடித்தபின் சங்கத்தின் முழுநேரப் பிரச்சாரகராக பணியாற்றத் தொடங்கிய தேஷ்முக்கின் கர்மபூமியாக உத்திரப்பிரதேசம் ஆனது. ஆக்ராவிலும் கோரக்பூரிலும் தர்மசாத்திரங்களில் தங்கிப் பணியாற்றி உத்திரப் பிரதேசத்தில் சங்க கிளைகளை உருவாக்கினார். அந்த சமயத்தில்தான் தீன தயாள் உபாத்தியாவின் அறிமுகம் தேஷ்முக்கிற்கு கிடைத்தது.

கல்வி பற்றி மிகக் கறாரான தெளிவான பார்வை அப்போதே தேஷ்முக்கிற்கு இருந்தது. 1950ஆம் ஆண்டு கோரக்பூரில் சரஸ்வதி சிஷு மந்திர் என்ற கல்வி நிலையத்தை தேஷ்முக் தொடங்கினார். இன்று 12,000 பள்ளிகளோடு ஏறத்தாழ நாற்பது லட்சம் மாணவர்களுக்கு கல்வி தரும் நிறுவனமாக அதனை மாற்றியது நானாஜியின் சாதனைகளில் ஓன்று.

1947ஆம் ஆண்டு பாஞ்சஜன்யா, ராஷ்டிரதர்மா என்ற மாத பத்திரிகைகளையும் ஸ்வதேஷ் என்ற நாளிதழையும் நானாஜி தொடங்கினார். அடல் பிஹாரி வாஜ்பாய் ஆசிரியராககவும், தீனதயாள் உபாத்தியாய வழிகாட்டியாகவும் செயல்பட்டனர். ஆனால் சிறிது காலத்திலேயே காந்தி கொலையானதைத் தொடர்ந்து, சங்கம் தடை செய்யப்பட பத்திரிகைகளை தலைமறைவாக இருந்து நடத்த வேண்டி இருந்தது.

சங்கத்தின் மீதான தடை விலக்கப்பட்ட பின்னர், ஜனசங்கம் என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டது. கட்சியின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் பொது செயலாளராக நானாஜி பணியாற்றத் தொடங்கினார். தீனதயாள் உபாத்தியாவின் லட்சிய நோக்கு, வாஜ்பாயின் பேச்சாற்றல், நானாஜியின் செயல்திறம் இவை அனைத்தும் இணைத்து வட பாரதத்தில் கட்சியை வளர்த்தன.

பிற கட்சித் தலைவர்களோடும் நானாஜி நெருங்கிய உறவை உருவாக்கி இருந்தார். சோஷலிச தலைவரான ராம் மானோஹர் லோஹியா உடன் நானாஜிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. எனவே இரண்டு கட்சிகளும் இணைந்து காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை தட்டிக் கேட்பது என்பது வெகு இயல்பான ஒன்றாகத்தான் இருந்தது. ஆச்சாரிய வினோபா பாவேயின் பூதான இயக்கத்திலும் நானாஜி இணைந்து பணியாற்றினார்.

காங்கிரஸ்ஆட்சியின்  ஊழலை எதிர்த்து மாணவர்கள் களம் கண்டனர். அரசியலில் இருந்து விலகி இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். இயக்கத்தின் செயலாளராக நானாஜி பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு மக்களின் எல்லா உரிமைகளையும் பறித்து நாட்டில் இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார். அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் கடுமையான தணிக்கைக்கு உள்ளாகின.

நானாஜி மீண்டும் தலைமறைவானார். தலைமறைவாக இருந்தபடியே பல்வேறு செய்தி இதழ்களை வெளியிட்டு ஜனநாயகத்தைக் காக்க போராடிக்கொண்டுதான் இருந்தார். இப்படி வெளியாகும் எல்லா பத்திரிக்கைளின் எல்லா இதழ்களும் பிரதமர் இந்திராவுக்கு தவறாமல் அனுப்பப் பட்டது. எந்த விதமான அடுக்குமுறையையும் எதிர்த்து நிற்கும் பாரம்பரியம் அப்போதும் தொடர்ந்தது.

நெருக்கடிநிலையை இந்திரா விலக்கிக்கொள்ள, அடுத்த தேர்தலில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. உத்திரப்பிரதேசத்தின் பைராம்பூர் தொகுதியில் இருந்து நானாஜி வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அன்றய பிரதமர் மொரார்ஜி நானாஜி அவர்களுக்கு மந்திரி பதவி அளிக்க முன்வந்தார். ஆனால் நானாஜி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

எண்பதுகளில் நேரடி அரசியலை விட்டு விலகி சமுதாய சேவையில் முழுவதும் ஈடுபடலானார். நமது திட்டங்கள் தலைகீழாக உள்ளது. பாரதத்தின் வளம் என்பது கிராமங்களில் உள்ளது. அதனைப் புறக்கணித்து விட்டு அரசு நகரங்களுக்கும், அதிகமான நுகர்வு கலாச்சாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது என்பது நானாஜியின் கருத்து.  உத்திரப்பிரதேசம். மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏறத்தாழ 500 கிராமங்களுக்கு மேலாக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும், கல்விப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் நானாஜி.  இதனைத் தொடர்ந்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் சித்திரகூடப் பகுதியில் கிராமியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதன் முதல் வேந்தராக நானாஜி நியமிக்கப்பட்டார்.

1999ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு நானாஜியை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தது. அதே ஆண்டு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

தனது 93ஆம் வயதில் 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் நானாஜி பாரத தாயின் காலடியில் சரண் புகுந்தார். வாழும் நாளெல்லாம் மக்களுக்காகவே பாடுபட்ட அந்த தலைவரின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது நானாஜிக்கு வழங்கப்பட்டது.

எண்ணற்ற தியாகிகள் இந்த மண்ணில், அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கம். 

திங்கள், 10 பிப்ரவரி, 2020

மும்பை நகரின் பிதாமகன் ஜெகநாத் ஷங்கர்சேத் - பிப்ரவரி 10

இன்று மும்பை நகரம் பாரத நாட்டின் பொருளாதாரத் தலைநகர். ஆனால் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பூனாவும், சூரத்தும், ராய்கட் பகுதியும்தான் மராட்டிய மாநிலத்தின் முக்கிய நகரங்களாக இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் மும்பை மேற்கு கடற்கரையின் முக்கியமான நகரமாக உருவெடுத்தது. மும்பை நகரை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான திரு ஜெகநாத் ஷங்கர்சேத் அவர்களின் பிறந்ததினம் இன்று.


அரபிக்கடற்கரையின் ஓரத்தில் அமைந்த கொங்கன பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட தைவைத்நிய ப்ராமண சமூகத்தைச் சார்ந்தவர் ஜெகநாத்சேத். இறைத்தொண்டும், நகை தயாரிப்பும் இந்த சமுதாயத்தினரின் தொழிலாக இருந்தவை. 1803ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் நாள் பிறந்த ஜெகநாத்சேத் இவை இரண்டையும் விட்டு விட்டு வியாபாரத்தில் நுழைந்தார். தொழிலில் நாணயமானவர் என்று பெயர் எடுத்ததால், மிகச் சில காலத்திலேயே அன்றய மும்பை நகரின் முக்கியமான வணிகராக மாறினார். தொழில் சிறப்பாக நடைபெற்றதால், லாபமும் கணிசமாக வந்தது, நாளடைவில் பெரும்பணக்காரராக மாறினார்.

தனக்கு கிடைத்த செல்வதை மக்களின் சேவைக்கு ஜெகன்நாத்சேத் செலவிடத் தொடங்கினார். கல்வியின் முக்கியத்தை அறிந்த அவர் மும்பையில் கல்விச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் ஆண்களுக்கான பள்ளி, பெண்களுக்கான பள்ளி, சமிஸ்க்ரித பள்ளி, நூலகம் ஆகியவற்றைத் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் உருவானதுதான் இன்று மும்பை நகரின் புகழ்பெற்ற எல்பின்ஸ்டோன் கல்லூரி. தாதாபாய் நௌரோஜி, மஹாதேவ் கோவிந்த ரானடே, கோகுலே, திலகர் போன்ற பாரத நாட்டின் பெரும் தலைவர்களை உருவாக்கியது இந்தக் கல்லூரிதான்.

மாணவர்களுக்கு தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கவேண்டும் என்பது ஜெகநாத்சேத்தின் கருத்து. ஆங்கிலத்தில்தான் கல்வி இருக்கவேண்டும் என்பது அரசின் எண்ணம். தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின்னர் ஆரம்பக் கல்வி தாய்மொழியில் உயர்நிலைக் கல்வி ஆங்கிலத்திலும் இருக்கலாம் என்று முடிவு எட்டப்பட்டது.

ரயில் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த ஜெகநாத்சேத் ஜாம்ஷெட்ஜி ஜீஜீபாயுடன் இணைந்து இந்தியன் ரயில்வே அஸோசியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்மூலம் பாரத நாட்டுக்கு ரயில் போக்குவரத்தை அறிமுகம் செய்யவேண்டும் என்று ஆங்கில அரசை வலியுறுத்தினார். இந்த அமைப்புதான் பின்னர் கிரேட் இந்தியன் பெனின்சுலர் ரயில்வே என்று உருமாறி நாட்டின் ரயில் போக்குவரத்தை உருவாக்கியது. முதல் ரயில் மும்பை நகருக்கும் தானாவிற்கும் இடையே தொடங்கியது.

ஜெகநாத்சேத்தின் முக்கியத்துவத்தை அறிந்த ஆங்கில அரசு அவரை மும்பை சட்டசபைக்கு நியமித்தது. அந்த சபையின் முதல் பாரதிய அங்கத்தினர் ஜெகநாத்சேத்தான். தனது தொடர்புகளைப் பயன்படுத்தி சதியை தடைசெய்ய வைத்தார், விசாலமான சாலைகள், சாலையின் இருபுறமும் மரங்கள் என்று மும்பை நகரின் விரிவாக்கத்திற்கு சேத் பெரும்பணியாற்றினார். பம்பாய் அஸோஸியேஷன் என்ற பெயரில் மும்பையின் முதல் அரசியலமைப்பையும் இவர் தொடங்கினார். 1857ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரில் இவரது பங்கு இருக்கும் என்று ஆங்கில அரசு எண்ணியது. ஆனால் போதிய சாட்சியங்கள் இல்லாததால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

பல்வேறு நிறுவனங்களை உருவாக்க பணம் அளித்ததோடு மட்டுமல்லாமல், அதற்காக தனது சொந்த இடங்களையும் ஜெகநாத்சேத் வழங்கினார். இன்றய மும்பை நகரின் பிதாமகர் என்று அவரைச் சொன்னால் அது மிகையாகாது.

அறுபத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த ஜெகநாத் ஷங்கர்சேத் 1865ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் நாள் காலமானர். 

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

அபய சாதகன் பாபா ஆம்தே நினைவு நாள் - பிப்ரவரி 9

மதமாற்றத்தில் ஈடுபடாமல், விளிம்புநிலை மனிதர்களுக்கு சேவை செய்பவர்கள் பற்றி பொதுவாகவே நமது பத்திரிகைகள் மக்களுக்குச் சொல்லாது. ஆனாலும் அதனையும் மீறி வெளிச்சத்திற்கு வந்த சமூகசேவகர் பாபா ஆம்தே அவர்களின் நினைவு நாள் இன்று.


மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா பகுதியைச் சார்ந்த ப்ராஹ்மண சமூகத்தின் தேவதாஸ் ஆம்தே, ஆங்கில அரசின் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். பரம்பரை பணக்காரரான தேவதாஸ் ஆம்தேவிற்கு முதல் மகனாகப் பிறந்தவர் முரளிதர் தேவதாஸ் பாபா ஆம்தே. 1914ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்தவர் இவர். பொதுவாக சந்யாசிகள் அல்லது முதியவர்களை பாபா என்று அழைப்பது வட இந்தியர்களின் பழக்கம். ஆனால் சிறுவயதிலேயே தங்கள் மகனை பாபா என்று இவரின் பெற்றோர்கள் அழைக்கத் தொடங்கி அதுவே இவரின் பெயராக மாறிவிட்டது.

கிட்டத்தட்ட சித்தார்த்தன் புத்தனாக மாறிய கதைதான் பாபா ஆம்தேவின் கதையும். சிறுவயதிலேயே  தனக்கான காரின் இருக்கையில் சிறுத்தையின் தோலால் தயாரான உறையை மாட்டிக்கொண்டு சொந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு வேட்டையாடுவதில் காலம் கழித்துக்கொண்டு இருந்த முரளிதர் நாட்டின் முக்கியமான சமூகசேவகராக மாறியது மிகப் பெரும் அதிசயம்தான்.   செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும், மக்களிடையே நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வு அவரின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டுதான் இருந்தது.

காலனிய சக்தியான ஆங்கிலேய அரசிற்கு எதிராக விடுதலை போராட்டம் சூடு பிடித்திருந்த காலகட்டத்தில் முரளிதரும் அன்றைய வேறு பல இளைஞர்களைப் போல்,  ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க வன்முறை வழியை நம்பியவர்களுக்கு அவசியமான ஆயுதங்களை சேகரிப்பது முக்கியம் என நம்பினார். 1935ஆம் ஆண்டு பலூசிஸ்தான் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது, முரளிதர் சீரமைப்பு பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு க்வேட்டா சென்றார்.

பெரும்பாலான அன்றய இளைஞர்கள்போல ஆம்தேவும் சட்டம் பயின்றார், வார்தா நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். நாட்டு விடுதலைக்காக போராடி அதனால் ஆங்கில அரசால் கைதுசெய்யப்பட்ட விடுதலை வீரர்களுக்காக வாதாடத் தொடங்கினார். படிப்படியாக காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆம்தே காந்தி நிறுவிய சேவாகிராமத்தில் தங்கி கை ராட்டை சுற்றியும், கதர் துணியை நெய்தும் முழுமையான காந்தியவாதியாக மாறினார்.

ஆம்தே வரோரா நகராட்சியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியின் அறைகூவலை ஏற்று நாளொன்றுக்கு நாற்பது கழிப்பறைகளை அவர் சுத்தம் செய்யத் தொடங்கினார். எந்தத் தொழிலும் இழிவானதல்ல என்பதைக் காட்ட கழிப்பறை சுத்தம் செய்வதை காந்தி முன்னெடுத்தார். அதனை காந்தியின் சீடர்கள் பலர் பின்தொடர்ந்தனர்.

அப்படியொருநாள் தலைகூடையில் கழிவுகளை சுமந்துகொண்டு சென்ற மழைநாளில், நீர்தேங்கிய குட்டைக்கு அருகில் கோர முகத்துடன், விரல்களற்ற, புழுக்கள் மண்டி வலியில் துடித்த நிர்வாண மனிதர் ஒருவரைக் கண்டார். அந்தக் காட்சி அவரை உலுக்கியது. முரளிதர் அப்போதுதான் தொழு நோயாளியை முதன்முதலாக கண்டிருந்தார். அந்தக் காட்சியும், தனக்கும் நோய் பரவிவிடும் எனும் அச்சமும் அவரைப் பீடித்ததால் வீட்டிற்கு ஓடி வந்தார். அவர் மீது படிந்த அழுக்குகளை சுத்தப்படுத்திகொள்ள குளித்தார்.

ஆனாலும் மனதளவில் அந்த காட்சியின் உக்கிரத்திலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. “ஒருகால் தானோ, தன் மனைவி, பிள்ளைகளோ இந்நோயால் பீடிக்கப்பட்டால் எங்கு போவது?” எனும் கேள்வி அவருள் எழும்பியது. “எங்கு அச்சமிருக்கிறதோ அங்கு அன்பு இருக்க இயலாது, எங்கு அன்பு இல்லையோ அங்கு கடவுளும் இருக்க இயலாது. நான் இந்த அச்சத்தைப் போக்கியாக வேண்டும்” என்று தன்னையே தேற்றிக் கொண்டார். நோய்மையின் தனிமையில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை எப்படி அப்படியே விட்டுவர தன்னால் முடிந்தது என எண்ணி வெட்கினார்.

மீண்டும் அங்கு சென்று அந்த மனிதருக்கு உணவளித்து, அவருக்கு சிறு மூங்கில் குடிலமைத்துக் கொடுத்து பராமரித்தார். அவர் பெயர் துளசிராம், துளசிராம் பாபா ஆம்தேவின் பராமரிப்பில்தான் மரித்தார். ஆம், முரளிதரின் வாழ்க்கையையே மாற்றி, பாபா ஆம்தேவின் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக இருந்துவிட்டே மரித்தார்.

‘நான் எதற்குமே அஞ்சியதில்லை. ஆங்கிலேய இளைஞர்களை எதிர்த்து, இந்தியப் பெண்ணின் மானம் காக்க சண்டையிட்டிருக்கிறேன். காந்திஜி என்னை ‘அபய சாதகன்’, அதாவது ‘அச்சமற்று சத்தியத்தை தேடுபவன்’ என்றே அழைப்பார். வரோராவின் தோட்டிகள், 'கழிவறை சுத்தம் செய்திட முடியுமா?" என எங்களிடம் சவால்விட்டபோது, அதை ஏற்றுச் செய்தேன். குண்டர்களையும் கொள்ளைக்கார ஆங்கிலேயர்களையும் எதிர்த்து சண்டையிட்ட நானேதான் பிணம் போல் வாழ்ந்த துளசிராமைக் கண்டு அஞ்சி நடுங்கினேன். விரல்கள் இல்லை, துணிமணிகள் இல்லை, உடலெங்கும் புழுக்கள்.’

பாபா அவருடைய அச்சத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ள முடிவெடுத்தார். அதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால் அப்படி எதிர்கொள்வதன் வழியாகவே அவற்றை வென்று கடந்து செல்ல இயலும் என்பதை புரிந்துகொண்டார். 

காந்தி தன்னுடைய ஆக்கப்பூர்வ செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக தொழுநோய் பராமரிப்பையும் முன்னிலைப்படுத்தினார். வரோராவிற்கு அருகில் தத்தபுரத்தில் தொழுநோய் மருத்துவமனையும் வசிப்பிடமும் நிர்மாணிக்கப்பட்டது. அங்கு ஒரு சிறு குடிசை கட்டிக்கொண்டு அவர்களுடைய வாழ்வை நெருங்கி அவதானிக்கத் தொடங்கினார் முரளிதர். பின்னர் 1948ல் வரோராவில் சிறிய ஒரு தொழு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மையத்தை துவக்கினார். ஆனால் தொழுநோய் பற்றி பூரண அறிதல் அதை எதிர்கொள்ள அத்தியாவசியம் என உணர்ந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து கல்கத்தாவில் ட்ராபிக்கல் நோய் மையத்தில் சேர்ந்து தொழுநோய் தொடர்பான ஓராண்டு மருத்துவ பயிற்சி படிப்பில் சேர்ந்து கல்வி கற்றுத் தேர்ந்தார். வராரோவைச் சுற்றி ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவு பரப்பில் பதினோரு தொழுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்கினார். நான்காயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

1950 ஆம் ஆண்டு மகாரோக சேவா சமிதி என்றொரு அமைப்பை தொழுநோயாளிகளின் பராமரிப்பிற்காக ஏற்படுத்தினார். அவர்கள் குணமாகி, சமூகத்திற்கு பயனுள்ள, தற்சார்புடைய வாழ்வு வாழ அனைவரும் இணைந்து வசிப்பதற்குரிய இருப்பிடம் தேவை என உணர்ந்துகொண்டார். பொருளியல் தற்சார்பு வழியாகத்தான் ஒருவன் பூரணமாக நோயிலிருந்து விடுபட்டு மீண்டெழ முடியும் என்று அவர் கருதினார். “விரல்கள் இன்றிக்கூட மனிதன் வாழ்ந்துவிட முடியும், ஆனால் சுயமரியாதையின்றி வாழ முடியாது”.

1951ஆம் ஆண்டில் சந்திரபூர் வனப்பகுதியில் சிறிது நிலத்தை அரசாங்கம் அவருக்கு வழங்கியது. மனைவி மற்றும் இரு கைக்குழந்தைகளுடன். பையிலிருந்த பதினான்கு ரூபாயுடன் ஆறு தொழுநோயாளிகளை அழைத்துக் கொண்டு கொடிய வனப்பகுதி நிலத்தைத் திருத்தி குடியேறினார். மூங்கில் கழிகளைக் கொண்டு சிறு குடில்களமைத்துக் கொண்டார், கிணறு வெட்டினார், அங்கேயே வசிக்கத் துவங்கினார். அப்படித்தான் ‘ஆனந்தவனம்’ உருவானது. வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே ஆம்தேயின் கருத்தாக இருந்தது. தொழுநோயாளிகள் வாழ்வில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் துளிர்க்கச் செய்வதே தன் வாழ்நாள் பணியென உறுதிகொண்டிருந்தார் அவர்.

மிகச் சிறிய மருத்துவ மையமாகத் தொடங்கப்பட்டு இன்றொரு பிரம்மாண்டமான மருத்துவமனையாக வளர்ந்து உருமாறி இருக்கிறது ஆனந்தவன். நாளொன்றிற்கு ஐநூறு புறநோயாளிகள் வந்து செல்கிறார்கள், ஆயிரத்து ஐநூறு உள் நோயாளிகள் தங்குவதற்கான இட வசதிகள் உண்டு. தொழுநோய் ஆய்வு மையம் ஒன்றும் உண்டு.

1967 ஆம் ஆண்டு ஆனந்தவனத்தில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சோம்நாத்தில் மற்றுமொரு தொழுநோய் மையத்தை நிறுவ யத்தனித்தார் ஆம்தே. அங்கும் தொழுநோயாளிகளின் கூட்டு முயற்சியில் மருத்துவமனை உருவானது.

பாபா ஆம்தேவுடன் அவரது மனைவி, மகன்கள் மருமகள்கள் என்று மொத்த குடும்பமே தங்களை சேவைக்கு அர்பணித்துக்கொண்டு உள்ளனர். அவரது இரண்டு மகன்களும் இரு மருமகள்களும் மருத்துவம் படித்தவர்கள். இன்று அவரின் இரண்டு பேரன்களும் மருத்துவம் படித்துவிட்டு ஆனந்தவனத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

தன்னலம் கருதாது உழைத்தாலும், தகுதியானவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் வரத்தான் செய்யும். பாபா ஆம்தேவை நோக்கி பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், மாகஸே விருது, காந்தி அமைதிப் பரிசு ஆகியவை தேடி வந்தன.

அபய சாதகன் அதாவது பயமே இல்லாது சேவை புரிபவன் என்று காந்தியால் பாராட்டப்பட்ட பாபா ஆம்தே தனது தொண்ணூற்றி மூன்றாம் வயதில் 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் நாள் காலமானார்.

நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உழைப்பதே இதுபோன்ற மகத்தான மனிதர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதின் பயனாக இருக்கும்.